நடுக்கடலில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுக்கடலில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்டம்பர் 2009

நடுக்கடலில் நடந்த நாடகம்

மனித வாடையே வீசாத  மாசில்லா கன்னித்தீவு


நீங்கள் எத்தனையோ விதமான புரட்சிகளைப் பற்றி படித்திருப்பீர்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்தப் புரட்சி இருக்கிறதே இது ஒரு மாதிரியான புரட்சி. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.

ஆழமான பசிபிக் மாக்கடலில், பிஜி தீவுக்கு அருகில் கப்பல் போய்க் கொண்டிருக்கிறது. அதில் வேலை செய்தவர்களில் ஒரு கும்பல், புரட்சி என்ற போர்வையில் கலகம் செய்து கப்பலைக் கைப்பற்றுகிறது.

கப்பல் தலைவனையும் அவனுக்கு வேண்டியவர்களையும் பிடித்து ஒரு படகில் ஏற்றி 'செத்தாலும் சரி, பிழைத்தாலும் சரி. போய்த் தொலையுங்கள்' என்று அனாதையாக விரட்டியும் விடுகிறது.

கப்பலைக் கைப்பற்றிய புரட்சிக் கும்பல் நேராக ஒரு தீவுக்கு போகிறது. அங்கே இருந்த பூர்வீகக் கன்னிப் பெண்களை வளைத்துப் பிடிக்கிறது. அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்டு ஒரு கண்காணா தீவுக்கு கொண்டு போகிறது.


மனித வாடையே வீசாத மாசில்லாக் கன்னித்தீவு. அதிலே இந்தச் சின்னச் சின்னப் பெண்களை ஓரங்கட்டி விடுகிறது. புரட்சிக் கும்பலில் பலர் பல காலம் பெண்களைப் பார்க்காமல் கருகிப் போன சருகுகள். சொர்க்கத்தின் வாசல்படிகள் திறந்துவிடப் படுவதாக கும்பலின் தலைவன் சொல்கிறான். ஆளாளுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறார்கள். அப்புறம் ஏறிவந்த கப்பலைச் சுவடு தெரியாமல் எரித்தும் விடுகிறார்கள். ஒரு சகாப்தம் உருவாகிவிட்டது.

கரும்புக் கொல்லையில்
காய்ந்த மாடுகள்

கரும்புக் கொல்லையில் காய்ந்த மாடுகள் குட்டிக்கதை நினைவிற்கு வருகிறது. அந்தக் கதையில் இதையும் போட்டுச் சமாளித்துக் கொள்ளலாம். தப்பில்லை. வக்கிரம் இருந்தாலும் சரி விவேகம் இருந்தாலும் சரி.

அந்தப் பரிதாபத்திற்குரிய புத்திசாலிகளின் அரிச்சுவடியில் அவதரித்ததுதான் இந்தக் கதை. நல்ல ஒரு வரலாற்றுக் கதை.

இதில் ஒரு முக்கிய விசயம். கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள். சிலர் கிரிமினல் குற்றவாளிகள். கப்பல் பயணத்திற்காக அவர்களின் சிறைத் தணடனை பேரம் பேசப்பட்டது. கடத்தப்பட்ட பெண்கள் எல்லோரும் Tahiti தீவில் வாழ்ந்த பாலினேசிய சுதேசிப் பெண்கள்.

அந்தக் குடியேற்றம்தான் உலக வரலாற்றில் Pitcairners எனும் ஒரு புதிய சந்ததியையே உருவாக்கிக் கொடுத்தது.

வெகு நாட்களுக்கு அந்தப் புதிய சகாப்தத்தைப் பற்றி வெளி உலகத்தில் யாருக்குமே தெரியாமலே இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வெட்டுக்குத்து கொலைகள் நடந்த பிறகுதான் அங்கே ஒரு புதிய சமுதாயம் புரட்சியுடன் தோன்றியிருப்பது தெரிய வந்தது.

புரட்சி என்ற சொல் இன்றைய காலத்தில் ஓர் இறுக்கத்தைக் கொடுக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அந்த வாசகம் பல இடங்களில் புரையோடிக் கிடப்பதைப் பார்க்கலாம்.

பாசி பிடித்துக் கிடக்கும்
புரட்சித் தழும்புகள் 

பிரெஞ்சுப் புரட்சி, Cultural Revolution எனும் சீனக் கலாசாரப் புரட்சி, Bolshevik Revolution எனும் ரஷ்ய அக்டோபர் புரட்சி, அதிபர் மார்க்கோஸுற்கு எதிரான புரட்சி, வங்காளப் புரட்சி, Glorious Revolution எனும் ஆங்கிலேயப் புரட்சி, அண்மையில் நடந்த புத்த பிக்குகளின் பர்மியப் புரட்சி, ஜனநாயகச் சுடர் பெனாசிர் புட்டோ மறைவதற்கு முன்னால் பாகிஸ்தானில் நடந்த இராணுவப் புரட்சி என்று ஏகப்பட்ட புரட்சித் தழும்புகள் பாசி பிடித்துக் கிடக்கினறன.

புரட்சி என்ற சொல்லுக்கு பூசை புனஷ்காரம் செய்தவர்கள் கிரேக்கர்கள். அந்த வகையில் அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்கள் மூத்த முன்னோடிகள். இந்தப் புரட்சிகள் எல்லாவற்றிற்கும் மணி கட்டும் தாதா புரட்சியைப் பற்றியதுதான் நம்முடைய இந்தப் புரட்சி.

மேற்கிந்திய தீவுகளில் ஒன்று ஜமாய்க்கா. 1700 ஆம் ஆண்டுகளில் கறுப்பர்கள் நிறைய பேர் அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்தனர்.

முதலாளிகள் எல்லாம் வெள்ளைக்காரர்கள். இந்த அடிமைகளுக்குச் சாப்பாடு போடுவது என்பது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது.

கடுமையான உடல் உழைப்பு. அதனால், ரொம்பவும் சாப்பிட்டார்கள். இந்தச் சாப்பாட்டுத் தகராற்றில் பல அடிமைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதிலுக்கு முதலாளிகளும் செத்துப் போயிருக்கிறார்கள். கட்டுபடியாகவில்லை. மாற்றுவழி தேடினார்கள்.

பார்த்தீர்களா. மாடு மாதிரி ஒருவன் உழைக்க வேண்டும். தசைகள் பிழிந்த வியர்வையைக் கடலாக மாற்ற வேண்டும்.

இரத்தம் ஆவியாக மாற வேண்டும். எலும்புகளின் சுண்ணாம்பு எரிந்து போக வேண்டும். உடல் செல்லரித்துப் போக வேண்டும்.

ஆனால், சாப்பாடு மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் கேட்கக்கூடாது. பணமா கேட்டார்கள். சாப்பாடு தானே கேட்டார்கள்.

கொடுத்தால் என்ன குற்றம். இது என்னய்யா நியாயம். கொத்தடிமை எனும் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்கு வந்த நம்முடைய தாத்தா பாட்டிகளும் இப்படித்தானே கஷ்டப் பட்டிருக்க வேண்டும். நினைக்கையில்...

அய்யா மனம் வலிக்கிறது.

ஈரப்பலாக்காய் சொல்லிய
கீதாசசார உபதேசம்

நம் கதைக்கு வருவோம். அந்தச் சமயத்தில் உலகம் சுற்றி வந்த கடலோடி ஜேம்ஸ் குக், பசிபிக் தீவுகளில் Bread Fruit எனும் ஈரப்பலாக்காய் இருப்பதாகச் சொன்னார். அந்தக் காய் கறுப்பர்களின் சாப்பாட்டுத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம் என்றும் அவர் கீதாச்சார உபதேசம் செய்தார்.

இந்த ஈரப் பலாக்காய் நம் மலேசியாவிலும் இருக்கிறது. மலேசிய மொழியில் சுக்குன் என்று அழைக்கிறார்கள்.

தெரியும்தானே. துண்டு துண்டுகளாக வெட்டி கோதுமை மாவில் போட்டு பலகாரம் செய்வார்கள். இதன் அறிவியல் பெயர் Artocarpus Communis. இந்த ஈரப்பலாக்காயின் கன்றுகளைக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்து அரசாங்கம், William Bligh எனும் கடலோடியை பசிபிக் கடலுக்கு அனுப்பியது.

இந்த ஆய்வுப் பயணத்திற்கு Bounty எனும் பாய்மரக் கப்பல் பிரத்தியேகமாகக் கட்டப் பட்டது. 215 டன் எடை கொண்ட கப்பல்.

1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி கப்பல் பயணமானது. பசிபிக் மாக்கடலில் இருக்கும் Tahiti - தாஹித்தி தீவை நோக்கிப் பயணம். 46 பேர் கொண்ட குழுவிற்கு வில்லியம் பிளை என்பவர் தலைமை வகித்தார்.

துணைத் தளபதியாக பிளெட்சர் கிரிஸ்டியன் என்பவர் இருந்தார். இந்த பிளெட்சர் கிரிஸ்டியன்தான் கலகத்திற்கும் காரணம். கன்னியர்கள் கடத்தலுக்கும் காரணம். பக்கா கில்லாடி.

இந்தக் கப்பல் கலகத்தைப் பற்றி இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று Mutiny on the Bounty.

1962ல் தயாரிக்கப்பட்டது. டிரெவர் ஹாவர்ட் நடித்திருந்தார். இவர்தான் 1982ல் வெளியான காந்தி படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணம் 306 நாட்கள் பிடித்தது. இங்கிலாந்தில் புறப்பட்டு, தென் அமெரிக்கா வந்தனர். அப்படியே மேற்குத் திசையில் பசிபிக் மாக்கடல் வழியாகப் போகத் திட்டம். இருந்தாலும் புயல் காற்று பலமாக வீசியதால் பயணத்தைத் திசை
திருப்பினர்.

தென் ஆப்ரிக்கா வந்து நன்னம்பிக்கை முனை வழியாகத் திரும்பி இந்து மாக்கடலுக்குள் சென்றனர்.

பின்னர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து வழியாக தாஹித்தி தீவை அடைந்தனர். பயணம் செய்த தூரம் 27,086 மைல்கள். ஒரு நாளைக்கு 108 மைல்கள். வரும்வழியில் பார்த்த தீவுகளில் ஏறக்குறைய 50 நாட்கள் தங்கி இளைப்பாறி விட்டு வந்திருக்கின்றனர்.

தாஹித்தி தீவுக்குச் சற்றுத் தொலைவில் கப்பல் நங்கூரம் இட்டது. கிராமத்துக்காரன் மிட்டாய் கடையை முறைத்துப் பார்த்த கதை. உள்ளூர் சுதேசிகள் படகுகளில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டனர்.

அப்புறம் கோலாகலமான வரவேற்பு. கேப்டன் ஜேம்ஸ் குக்கைப் பற்றி கேட்டார்கள். ஏற்கனவே, அவர் அந்தத் தீவிற்கு வந்திருக்கிறார். அவர் இறந்துவிட்ட செய்தி தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஹவாய் தீவில் பூர்வீகக் குடியினரால் கொல்லப்பட்ட செய்தி பாதுகாப்பு கருதி மறைக்கப்பட்டது என்பது வேறு செய்தி.

அதன்பின்னர், பூர்வீகக் குடியினர் அதாவது தாஹித்தி மக்கள் கப்பலுக்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளனர்.

பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கப்பல் சிப்பந்திகளும் தீவுக்குள் போய் சந்தோஷமாய் இருந்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை. 'நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்க... போங்க... வாங்க... பழகுங்க... உருளுங்க புரளுங்க... ஆனா... பெண்கள் பக்கம் மட்டும் போயிடாதீங்க. விவகாரமான விஷயம். கொலைதான் விழும்' என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

மன்மதன் பண்ணிய மரத்தடி கலாட்டா

அதையும் மீறி ஒரு மன்மதக்குஞ்சு போய் கலாட்டா பண்ணிவிட்டது. தென்னை மரத்திலிருந்து கள் வரும் என்பது அங்கே ஊறிப் போன விஷயம். பல நூறு ஆண்டுகளாக கள் இறக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் கள் சமாசாரம் உலகம் முழுமையும் பரவி இருந்திருக்கிறது என்பதற்கு இது சான்று.

தப்பாக நினைக்க வேண்டாம். 'கல் தோன்றி மண் தோன்றா ஞாலத்தே' என்பார்கள். அது எந்தக் கல் என்பதுதான் கொஞ்சம் பிரச்னையாக இருக்கிறது. அந்த ஓர் எழுத்து பண்ணுகின்ற வேலையைப் பாருங்கள்.

சரி. பானமும் வெள்ளை. மன்மதனின் மனசும் வெள்ளை. ஆக, அந்த வேகத்தில் போய் மொக்கை முடிச்சுத் தெரியாமல் குடித்துவிட்டு ஓர் இளம் பெண்ணின் கையைப் பிடித்து தடவிப் பார்த்திருக்கிறார். என்ன செய்வது. இயற்கை பானம் வஞ்சகமில்லாமல் வேலை செய்திருக்கிறது. அவரும் மனுஷன் தானே. அப்புறம் என்ன...

கிராமத்து மக்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு விரட்ட... இவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட... தப்பித்தது பெரிய விஷயம். பிறகு, ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.

(அந்த மன்மதன் வேறு. மலேசிய மன்மதன் வேறு. குழப்பம் வேண்டாம்)

இதில் ஒரு பெரிய வேடிக்கை. யாரை அடிக்க ஆள் வைத்தாளோ, அவளே அவனைக் கடைசியில் புருஷனாக ஏற்றுக் கொண்டாள். அதிசயம்தான். நிறைய குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள். விதி எப்படி விளையாடியது என்பதைப் பிறகு சொல்கிறேன்.

அந்த மன்மதனின் பெயர் குயிந்தால். கடத்தல் கும்பலில் ஆகச் சிறியவன். வயது 19. நல்ல முக இலட்சணம்.

ஓரளவுக்குப் படித்தவன். போதாதா. அதுவே பிளஸ் பாய்ண்ட். தொடர்ந்து படியுங்கள்.

தாஹித்தி தீவில் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களில் பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு தலைவன். அந்தத் தலைவன் ஒவ்வோர் ஆண்டும் தன் பெயரை மாற்றிக் கொள்வான். அதில் ஒருவன் தான் தீனா.

இவனுடைய பழைய பெயர் ஊட்டு. நங்கூரம் இட்டிருந்த கப்பலுக்கு வந்த பூர்வீகத் தலைவன் தீனா தன் மனைவியையும் கூட்டி வந்தான். அவள் பெயர் இடாயா. கப்பலுக்கு வந்த தலைவன் அங்கிருந்த கத்தரிக்கோல்தான் வேண்டும் என்று அடம் பிடித்தான்.

இருப்பதோ ஒன்றே ஒன்று. அதை வைத்துதான் எல்லாரும் தலைமுடியைத் திருத்திக் கொள்வார்கள். என்ன செய்வது. கொடுத்து விட்டார்கள். அப்புறம் அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியைப் பார்த்து சுடச் சொன்னான். சுட்டுக் காட்டியதும் பெரும் சந்தோஷம். அதன் பின்னர் கப்பலிலேயே விருந்து.

தாஹித்தி முறைப்படி ஆண்கள்தான் முதன்முதலில் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பெண்கள் காத்திருக்க வேண்டும். காலா காலத்திலும் பெண்களை ஆண்கள் அடிமைப் படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஒருநாள் கப்பல் சிப்பந்திகள் மூவர் காணாமல் போய்விட்டனர். தேடிப் பார்த்ததில் துப்பாக்கிகள் மருந்துகள் போன்றவற்றைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடிப் போனது தெரிய வந்தது.

மீண்டும் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். தாஹித்தியின் இயற்கையான சொர்க்கத் தன்மை மிகவும் பிடித்துப் போய்விட்டது. இருந்தாலும் சில நாட்களில் பிடிபட்டனர்.  ஆளாளுக்கு பத்தொன்பது கசையடிகள் கொடுக்கப்பட்டன.

கப்பல் சிப்பந்திகளில் சிலருக்கு மீண்டும் திரும்பிப் போக மனம் வரவில்லை. அதனால், ஓர் இரவு கப்பலின் நங்கூரக் கயிற்றையும் வெட்டி விட்டனர். அதுவும் சரி செய்யப்பட்டது.

இதற்கு எல்லாம் கப்பலின் தலைவன் வில்லியம் பிளை மசியவில்லை.
ஒவ்வொரு குளறுபடிக்கும் ஒவ்வொரு பாதுகாப்பான மழுப்பலைக் கைவசம் வைத்திருந்தார். தாயகம் திரும்புவதற்கான நாளும் வந்தது. 1015 ஈரப்பலாக் கன்றுகளுடன் இரவோடு இரவாகக் கிளம்பினார்கள்.

காணாமல் போன
கப்பல் தேங்காய்கள்

என்னென்ன சாமான்கள் வேண்டுமோ அவற்றை எல்லாம் ஏற்றிக் கொண்டு கப்பல் கிளம்பியது. தாஹித்தி மக்களுக்குத் தெரியாமல்தான் கிளம்பினார்கள். தெரிந்தால் அவர்கள் தாக்குதல் நடத்தி பயணத்தை தடை செய்யலாம் அல்லவா.

அதுமாதிரி ஏற்கனவே நடந்துள்ளது. எல்லாவற்றையும் முன் எச்சரிக்கையுடன் செய்திருக்கிறார்கள். கப்பல் கிளம்பி Tonga தோங்கா எனும் தீவிற்கு வரும்போது கலவரம் தொடங்கியது.

கப்பலில் வைக்கப்படிருந்த தேங்காய்கள் அடிக்கடி காணாமல் போயின. எரிச்சல் அடைந்த தளபதி தன்னுடைய துணைத்தளபதியை அழைத்து தாறுமாறாக ஏசியிருக்கிறார்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் துணைத் தளபதி பிளெட்சர் கிரிஸ்டியன். தனக்கு வேண்டிய ஆட்களைச் சேர்த்துக் கொண்டான். மற்றவர்களைக் கப்பலிலிருந்து இறங்கி கீழே மிதக்கும் படகில் ஏறச் சொன்னான்.

எல்லாம் வீச்சு அரிவாளுக்கு முன்னால் நடந்தது. பெரும் மாக்கடலில் ஒரு சின்னப் படகு. கொஞ்சம் உணவுப் பொருட்கள். குடிக்கக் கொஞ்சம் தண்நீர். பாதுகாப்புக்கு இரண்டு கத்திகள். அவ்வளவுதான்.

அவர்கள் பிழைப்பார்களா இல்லையா என்று பிளெட்சர் கிரிஸ்டியன் கவலைப் படவில்லை. இது நடப்பது எல்லாம் பசிபிக் மாக்கடலில். அத்துடன் ஒரு பிரிவு.

அவர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கி மேற்கு திசையில் பயணமானார்கள். இவர்கள் Austral ஆஸ்திரல் தீவை நோக்கி கிழக்குத் திசையில் பயணமானார்கள். படகில் 19 பேர். கப்பலில் 26 பேர்.

சரி! இங்கே ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி. கப்பலின் உண்மையான தளபதி வில்லியம் பிளையின் குழுவினர் என்ன ஆயினர். பிறகு தெரிந்து கொள்வோம்.

ஆஸ்திரல் தீவுக்கு வந்த துணைத்தளபதி பிளெட்சர் கிரிஸ்டியன் குழுவினரில் இருவருக்கு காய்ச்சல் வந்து இறந்து போயினர். மிச்சம் 16 பேர். சில நாட்கள் ஆஸ்திரல் தீவிலேயே இருந்தனர்.

அதன் பின்னர் தாஹித்தி தீவில் வந்து குடியேறுவதற்கு அனுமதி கேட்டார்கள். சில நிபந்தனைகளின் பேரில் அனுமதியும் வழங்கப்பட்டது. சில மாதங்கள் தாஹித்தி தீவில் தங்கினர்.

ஒரு கட்டத்தில் மன்மதன் குயிந்தால் சேட்டை செய்தாரே ஒரு பெண், அந்தப் பெண் இவனையே திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள். குயிந்தாலின் திருமணத்திற்குப் பிறகு கலகக்காரர்கள் சிலர் கண் காணாத இடத்திற்குப் போய்விடலாம் என்றும் திட்டம் போட்டனர்.

அதன் பிரகாரம் மேலும் ஒன்பது இளம்பெண்கள் பலாத்காரமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எப்படி? தப்பி ஓடும் கடைசி நாளன்று இந்தப் பெண்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டனர்.

கண் காணாத இடம் என்று சொன்னார்களே அந்த இடத்தின் பெயர் பிட்காயின் தீவு. தாஹித்தி தீவிலிருந்து ஏறக்குறைய 1350 மைலகளுக்கு அப்பால் உள்ளது.

பற்றாக்குறைக்கு வேலைகள் செய்ய அடிமைகளாக தாஹித்திய ஆண்கள் ஐவர். புரட்சிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒன்பது பேர். ஆக மொத்தம் ஆண்கள் 15 பேர். பெண்கள் பத்து பேர். பிரச்னை வருமா வராதா. கண்டிப்பாக வரும்.

கன்னிப் பெண்களுடன்
கம்பி நீட்டினார்கள்

ஒருநாள் இரவோடு இரவாக பிட்காயின் தீவுக்கு கம்பி நீட்டினர். இந்த நாடகம் தாஹித்தி மக்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிந்திருந்தால் என்ன.

பத்து ஆடுகளுக்குப் பதிலாக பத்து வெள்ளைத்தோல் மனிதர்களைப் பிடித்து கூறு போட்டு பலி கொடுத்திருப்பார்கள். பெரிய விஷேசமாக இருந்திருக்கும். அவை எல்லாம் அவர்களுக்குச் சாதாரண விஷயம்தானே.

பிட்காயின் தீவிற்கு வந்தவுடன் முன்னாள் துணைத் தளபதி பிளெட்சர் கிரிஸ்டியன் முதல் வேலையாக தனக்கு பிடித்தமான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவளுடைய பெயர் Mauatua. எஞ்சிய பெண்கள் எட்டு பேர்.

இந்தப் பெண்களுக்கு எந்த ஆணைப் பிடிக்குமோ அந்த ஆணைத் திருமணம் செய்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்கள்.

மற்றபடி எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்யக் கூடாது என்பதும் கட்டளை. அப்புறம் கப்பல் எரிக்கப்பட்டது. எப்படிப் பார்த்தாலும் ஐந்து ஆண்களுக்கு ஜோடி இல்லாமல் போனது. நாளடைவில் அதுவே பெரிய பிரச்னையாகவும் ஆனது.

ஆண்களுக்குள் அடிக்கடி சண்டை. சண்டையில் சிலர் இறந்தும் போனார்கள்.
இப்படியே காலம் ஓடியது. பிள்ளைகளும் பிறந்து கொண்டுதான் இருந்தார்கள்.

பெண்களுக்காகச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே குடியிருக்கச் சின்ன சின்ன வீடுகளைக் கட்டினார்கள். விவசாயம் செய்தார்கள். பிட்காயின் ஒரு பெரிய தீவு என்று சொல்ல முடியாது.

ஐந்து சதுர கி.மீ. பரப்பளவு. சுற்றிலும் கடல். எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட தீவு. பயிர் செய்வதற்கு பக்குவமான மண். அப்படியே ஒரு புதிய சமுதாயம் உருவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 1808ல் திமிங்கில வேட்டைக்குப் போன அமெரிக்கர்கள் பிட்காயின் தீவில் மனிதர்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயினர்.

விசாரித்துப் பார்த்ததில் பிளெட்சர் கிரிஸ்டியனின் குட்டு அம்பலமானது. அதுவரையில் வெளியுலகில் யாருக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் ஆங்கிலேயர்கள் அப்போதே வந்து அத்தனை பேரையும் தூக்கில் போட்டிருப்பார்கள்.

அமெரிக்கர்கள் வந்த போது பழைய ஆட்களில் ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவர் பெயர் ஜான் அடாம்ஸ். மற்றவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டனர்.

அவர்களுக்குள்ளே சண்டை வந்து அழிந்தும் போயினர். பழையவர்களின் வாரிசுகள் மட்டுமே இருந்தனர். பிளெட்சர் கிரிஸ்டியனும் இறந்து போய்விட்டார். சிபிலிஸ் அல்லது காசநோய் வந்து அழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

ஆனால், பிளெட்சர் கிரிஸ்டியன் அங்கிருந்து தப்பித்து இங்கிலாந்து சென்று வாழ்ந்ததாகவும் சொல்லப் படுகிறது.

1856ல் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார், பிட்காயின் தீவில் வாழ்ந்தவர்களுக்கு வேறு இடம் கொடுத்தார்.

நியூசிலாந்துக்கு அருகில் இருந்த நார்போல்க் தீவில் குடியேறலாம் என்றார். 193 பேர் போய் சில ஆண்டுகள் இருந்தனர்.

அதில் ஆறு குடும்பங்கள் மறுபடியும் பிட்காயினுக்கே திரும்பிவிட்டன. இந்தக் குடும்பங்கள்தான் இன்னமும் பிட்காயினுக்கு உயிர் கொடுத்து வருகின்றன. 1963ல் அதன் மக்கள் தொகை 86.

பின்னர் 1983ல் 45 ஆக குறைந்தது. இப்போது 52 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு சின்ன பள்ளிக்கூடம். ஒரு தேவாலயம். ஒரு சின்னத் தொலைபேசி சேவை. வெளியுலகத் தொடர்புகளுக்கு கம்பியில்லா தந்தி. வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகும் பிள்ளைகள் அங்கேயே தங்கிவிடுகிறார்கள்.

திரும்பி வருவதில்லை. மாதத்திற்கு ஒரு முறை நியூசிலாந்திலிருந்து விமானம் வருகிறது. அதில் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன. வரலாற்றுப் பின்னணியைத் தவிர வேறு சிறப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. சுற்றுப்பயணம் போகலாம். ஓர் ஆளுக்குப் போய்வர முப்பதாயிரம் ரிங்கிட் பிடிக்கும். எப்படி உங்கள் வசதி!

சரி! நடுக்கடலில் விடப்பட்டார்களே அவர்கள் என்ன ஆனார்கள். பயங்கரமான உயிர்ப் போராட்டத்திற்குப் பின்னர் எலும்பும் தோலுமாக, ஜாவாவிலுள்ள குப்பாங் எனும் இடத்தை அடைந்தனர். வரும் வழியில் மூன்று பேர் இறந்து போனார்கள். மூன்று மாதப் போராட்டம். அங்குள்ள டச்சுக்காரர்களின் உதவியால் இங்கிலாந்து சென்றடைந்தனர்.

விஷயம் தெரிந்து இங்கிலாந்தே கொதித்துப் போனது. மறுவருடம் ஒரு தனிப்படை பிளெட்சர் கிரிஸ்டியனைத் தேடிக் கொண்டு தாஹித்தி தீவுக்கு வந்தது. அங்கே அவர் இருந்தால்தானே.

ஆனால், கலகத்தில் ஈடுபட்ட சிலர் இருந்தனர். பிளெட்சர் கிரிஸ்டியனுடன் பிட்காயின் தீவுக்குப் போகவில்லை.

அதனால் தீவில் இருந்த பழைய கில்லாடிகளில் சிலர் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப் பட்டனர். அங்கே விசாரிக்கப்பட்டு தூக்குமேடைக்கும் அனுப்பப் பட்டார்கள். தளபதி வில்லியம் பிளை சேவைகளுக்காகப் பாராட்டப்பட்டார்.

அதற்காக அவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். அங்கேயும் பிரச்னைதான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டார். இறுதியில் இங்கிலாந்திற்குப் போய் இறந்தும் போனார்.

பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் புரட்சி செய்யும் போது பசிபிக் மாக்கடலிலும் இப்படி ஒரு புரட்சி நடந்திருக்கிறது.

மறக்க முடியாத நிகழ்ச்சி. நடுக்கடலில் நடந்த ஒரு கலவரத்தில் ஒரு சரித்திரமே உருவாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள். இந்தச் சரித்திரத்தை மறக்கலாமா!

படித்த பிறகு இரண்டு வார்த்தை கருத்து எழுதி அனுப்புங்களேன். எனக்கும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும் இல்லையா! அதை நீங்கள் மறக்கலாமா!