கொரோனா வைரஸ்: வௌவால் வேட்டை… உலகளாவிய சர்ச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ்: வௌவால் வேட்டை… உலகளாவிய சர்ச்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: வௌவால் வேட்டை… உலகளாவிய சர்ச்சை

தமிழ் மலர் - 06.04.2020

சீனா ஹூபே மாநிலத்தில் நிறையவே காடுகள். நிறையவே மலைக்காட்டு வௌவால்கள். நிறையவே குகை மேட்டு வௌவால்கள்; கற்பாறை வௌவால்கள்; நெடுமரத்து வௌவால்கள். இப்படி விதம் விதமான வௌவால்கள். வித்தியாசமான வௌவால்கள். ஊழியூழிக் காலமாக ஊர்க்கோலம் போன வௌவால்கள். 




அந்த வௌவால்களைப் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார் ஓர் இளம் சீன ஆய்வாளர். சீனாவில் வைரஸ் கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். பத்து ஆண்டுகளாக வௌவால் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.

பொதுவாக வௌவால்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவை கூச்சமான விலங்குகள். ஆனால் பயங்கரமான வைரஸ்களைத் தம் உடல்களில் தேக்கி வைத்து இருக்கும் மகா ஜீவன்கள். பெரிய திரவத் தேக்கம் என்று சொல்ல முடியாது.

வைரஸ் தேக்கம் என்று தாராளமாகப் புதிய ஒரு  வாழ்த்துச் சொல்லையும் கொடுக்கலாம். அந்த வைரஸ்களைப் பற்றித் தான் அந்தச் சீன ஆய்வாளர் ஆய்வு செய்து இருக்கிறார்.

அந்த வைரஸ்களில் பெரும்பாலானவை மனிதர்களைக் கொன்று குவிக்கும் வைரஸ்கள். ஆனால் அந்த வைரஸ்கள் வௌவால்களை மட்டும் பாதிப்பது இல்லை. பெரிய அதிசயம். ஏன் எதனால் எப்படி என்று உலகம் முழுமைக்கும் பெரிய அளவில் வௌவால் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. 




ஏற்கனவே 2003-ஆம் ஆண்டுகளில் வௌவால்களினால் சார்ஸ் தொற்று நோய் ஏற்பட்டது. பல ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்தனர். பல ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். அதனால் உலகளாவிய நிலையில் வௌவால்கள் பற்றிய ஆய்வுகள் தீவிரம் அடைந்தன.

உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் வௌவால்களைத் தேடிப் பிடித்து அவற்றிடம் தொற்றி இருக்கும் வைரஸ்களின் விவரங்களைத் தொகுத்துப் பகுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சீனாவில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்த காட்டு வெளவால்களைப் பிடிப்பதைக் காட்டும் ஓர் ஆவணப் படம் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  




அந்த வௌவால்களைப் பிடித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வாளர் பல குகைகளுக்குள் போய் இருக்கிறார். பல நூற்றுக் கணக்கான வௌவால்களைப் பிடித்து இருக்கிறார்.

அவற்றின் உடலமைப்பு; உடல் உறுப்புகள் பற்றி ஆய்வு செய்து இருக்கிறார். அந்த ஆய்வாளரின் பெயர் தியான் ஜுன் ஹுவா (Tian Junhua).

அந்தக் காணொலி ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய அந்தக் காணொலி, 'யூத் இன் தி வைல்ட்: இன்விசிபிள் டிபென்டர்' (Youth in the Wild: Invisible Defender) எனும் தலைப்பு கொண்ட ஒரு தொடரின் ஒரு பகுதியாகும்.

அந்தத் தொடர் சீன இளம் விஞ்ஞானிகளின் படைப்புகளை அறிமுகப் படுத்துகிறது.




வுஹான் கொரோனா வெடிப்பு தோன்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அதாவது 2020 டிசம்பரில் அந்தக் காணொலி வெளியிடப்பட்டது.

ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவாவின் வாழ்க்கையையும் அந்தக் காணொலி சித்தரிக்கிறது. அவர் வெளவால் ஆராய்ச்சிப் பணிகளுக்காக ஈரமான இருண்ட குகைகளில் நீண்ட நாட்கள் செலவழித்து இருக்கிறார்.

40 வயதான இவருக்கு இரு குழந்தைகள். வுஹான் முனிசிபல் நோய் மையத்தில் ஓர் அதிகாரியாகப் பணி புரிகிறார்.

அவர் அந்தக் காணொலியில் சொல்கிறார்: ’நான் வைரஸ் மாதிரிகளைச் சேகரிக்கும் துறையில் பணிபுரிகிறேன். கண்ணுக்கு தெரியாத வைரஸ்கள். அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து. முடிந்த வரையில் மனுக்குலத்தின் பாதுகாவலனாக இருக்க விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக வௌவால்களைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறேன்’ என்றார்.




அந்த வௌவால்களிடம் 300-க்கும் மேற்பட்ட பல்வகையான வைரஸ் கிருமிகள் இருந்ததாக அந்த ஆய்வாளர் கூறி இருக்கிறார். ஏழு நிமிடக் காணொலியில் அந்த ஆராய்ச்சியாளரின் வௌவால் வேட்டை காண்பிக்கப் படுகிறது. அதனால் பலத்த சர்ச்சைகள்.

கொரோனா வைரஸ் எங்கே தோன்றி இருக்கலாம் என்பதற்கான சர்ச்சை மேலும் உச்சம் அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் அந்தக் காணொலி ஒரு சந்தேகத்திற்கு உரிய பார்வையையும் தூண்டி உள்ளது.

அதே சமயத்தில் கொரோனா கோவிட் கிருமிகள் மனிதனால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனும் சர்ச்சையையும் கிளறி விடுகிறது.

வுஹான் நகராட்சி நோய் கட்டுப்பாடுத் தடுப்பு மையம் (Wuhan Municipal Center for Disease Control and Prevention), இப்போது அந்தச் சர்ச்சையின் மையத்தில் சிக்கி உள்ளது. கொரோனா வைரஸ் SARS-CoV-2 அங்கு இருந்து வந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. ஆனாலும் அது ஒரு வதந்தியாக இருக்கலாம்.




இங்கிலாந்தில் புகழ்பெற்ற நாளிதழ் டெய்லி மெயில் அந்தக் காணொலிச் செய்தியை வெளியிட்டு உள்ளது. அப்படியே ஒரு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

சான்று: https://www.dailymail.co.uk/news/article-8172891/Documentary-Wuhan-virologist-catching-wild-bats-fuels-conspiracy-theory.html

இந்தக் காணொலி யூடியூப்பில் உள்ளது. அதன் முகவரி. போய்ப் பாருங்கள்.: https://youtu.be/ovnUyTRMERI?t=440

அந்தச் சீன ஆய்வாளர் ஆய்வுகள் செய்யும் போது வௌவால்களின் சிறுநீர் அவர் மீது தற்செயலாகப் பட்டு இருக்கிறது. அவரே சொல்லி இருக்கிறார். அதன் பின்னர் 14 நாட்களுக்கு அவர் சுயமாகத் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார். அதைப் பற்றி 2017 -ஆம் ஆண்டில் சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இது மேலும் சந்தேகத்தைத் தூண்டியது.




அதுவே வுஹான் உயிரியல் ஆய்வு நிலையத்தின் (Wuhan Institute of Virology) மீதும் உலகளாவிய சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளன. கொரோனா வைரஸ் என்பது சீனா அல்லது அமெரிக்காவால் வடிவம் அமைக்கப்பட்ட உயிரியல் ஆயுதமாக இருக்கலாம் என்றும் பல தரப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இருந்தாலும் உலக வல்லுநர்கள் அத்தகைய கருத்துகளை நிராகரித்து வருகின்றனர். அவற்றில் நம்பகத் தன்மை இல்லை; அதனால் பதட்டத்தைத் தான் உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

SARS-CoV-2 என அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் தோன்றிய இடம் எதுவென்று இதுவரையிலும் சரியாகத் தெரியவில்லை.




வெளவால்கள், பாம்புகள், எறும்புத்தின்னிகள் அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்குகளில் இருந்து தோன்றி இருக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் சந்தேகப் படுகின்றனர்.

வுஹானில் உள்ள ஒரு சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து கொரோனா கிருமிகள் மனிதர்களிடம் தொற்றி இருக்கலாம் என்று சீனச் சுகாதார அதிகாரிகள் முன்பு இருந்தே கூறி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சிலர் வுஹான் உயிரியல் ஆய்வு நிலையத்தின் மீது குறை காண்கின்றனர். சிலர் அமெரிக்க இராணுவத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவா தன் சக ஆய்வாளர்களுடன் குகைகளில் இரவு நேரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர்கள் முழு உடல் பாதுகாப்பு அணிகலன்களை அணிந்து கொண்டு ஆய்வு செய்து இருக்கிறார்கள்.




உலகில் வாழும் உயிரினங்களில், வெளவால்கள் தான் பல்வேறு வைரஸ்களைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அந்த வைரஸ் கிருமிகளில் மனித நோய்களுக்குக் காரணமாக இருக்கும் வைரஸ்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

நீண்ட நாட்கள் நீடிக்கும் குகைப் பயணங்களின் போது, ஆய்வாளர் தியான் ஜுன் ஹுவா அடிக்கடி பயந்ததாகவும் அவரே ஒப்புக் கொண்டார்.

’என்னால் பயத்தை உணர முடிந்தது. ஒரு பக்கம் தொற்று நோய்களின் பயம். இன்னொரு பக்கம் காட்டுக்குள் தொலைந்து போகக் கூடிய பயம். அந்தப் பயங்களின் காரணமாகவே நான் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனமாக, மிகவும் எச்சரிக்கையாக மிகவும் நிதானமாக எடுத்து வைத்தேன்.

வௌவால்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்யும் போது வைரஸ் கிருமிகள் நம்மை எந்த நேரத்திலும் தாக்கலாம். உண்மையிலேயே வௌவால்களுக்கு நான் பயப்படவில்லை. வௌவால்களிடம் இருக்கும் வைரஸ்களுக்குத் தான் நாங்கள் பயந்தோம். பயப்படுகிறோம்.




சேகரிக்கப்பட்டு இருக்கும் வைரஸ் மாதிரிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மனிதர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் செயல்களுக்கு அந்த வைரஸ் மாதிரிகளை ஒரு போதும் பயன்படுத்தப் படாது என்று தியான் ஜுன் ஹுவா சொல்லி இருக்கிறார். சரி.

வௌவால்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.

நாம் வாழும் இந்த உலகில் 1,200 வகையான வௌவால்களும் வாழ்கின்றன. ஆனால் 1,100 வகையைத் தான் நம்மால் அடையாளம் காண முடிந்தது. அவற்றுக்குப் பெயர் கொடுக்க முடிந்தது. மேலும் ஆயிரம் வௌவால்களை விரட்டிப் பிடிக்க முடியவில்லை. அவை காடுகளில் கண்ணாமூச்சி காட்டும் வௌவால்கள்.

அமேசான் காட்டு வௌவால்கள் ரொம்பவும் கில்லாடித் தனமான வௌவால்கள் என்று சொல்கிறார்கள். சில வௌவால்கள் பகலிலும் வேட்டைக்குப் போய் விடுகின்றனவாம். அமேசான் காட்டில் வாழும் பூர்வீக குடிமக்கள் பழம் தின்னி வௌவால்களை அதிகமாக வேட்டையாடுகிறார்கள்.

வௌவால் (Bat) முதுகெலும்பு உள்ள பாலூட்டி. முதுகெலும்பி என்றும் சொல்வார்கள். பாலூட்டிகளில் பறக்கக் கூடிய ஒரே ஒரு விலங்கு வௌவால்தான். மனிதர்களும் பாலூட்டிகள் தான்.

ஆனால் என்ன வௌவால்களைப் போல பறக்க முடியாது. பறக்க முடிந்தால் அம்புட்டுத்தான். என்ன செய்வார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

வௌவாலை ’வவ்வால்’ என்றும் ’வாவல்’ என்றும் அழைப்பார்கள்.

வௌவால்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பெரிய வௌவால்கள் (Mega bats); சிறிய வௌவால்கள் (Micro bats).

அவற்றை குறும் கைச்சிறகிகள் (microchiroptera) என்றும், பெரும் கைச்சிறகிகள் (megachiroptera) என்றும் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.

குறும் கைச்சிறகி வௌவால்களில் சில வகை மற்ற விலங்குகளின் இரத்தத்தை உறிஞ்சி குடிப்பவை. அதே சமயத்தில் மனித இரத்தத்தைக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. அவை ‘வெம்பயர்’ வௌவால்கள்.

பெரும் கைச்சிறகி வௌவால்கள் பெரும்பாலும் பழம் தின்னிகள். அவற்றில் பறக்கும் நரி (Flying fox) என்று ஒருவகை உள்ளது. நரியைப் போல முகம் கொண்டது.

பழந்தின்னி வௌவால்கள் இரவு நேரங்களில் 48 கி.மீ. தூரம் வரை பயணிக்கக் கூடியவை. இந்த வௌவால்கள் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும், பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும்.

வாழைப் பழங்களை முழுதாகவே தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. மலர்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சிக் குடிக்கும் வௌவால்களும் இருக்கின்றன. சுத்த சைவமான வௌவால்கள்.

அவற்றில் கூட்டம் கூட்டமாக வந்து பயிர் பச்சைகளைத் தின்று தீர்க்கும் வௌவால்களும் இருக்கின்றன. இவை சாப்பாட்டு ராமன் வௌவால்கள். அதனால் விவசாயிகளின் நம்பர் 2 எதிரியாகக் கருதப் படுகின்றன.

உலகில் பல நாடுகளில் வௌவால் ஓர் உணவாகப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள்; பாப்புவா நியூகினி, சாலமான் தீவு; பிஜி; போரா போரா; மிண்டானோ; லூசோன்; போன்ற இடங்களில் வௌவால் முக்கியமான உணவுப் பொருள்.

இதை எல்லாம் தாண்டிய நிலையில் இன்னும் ஒரு நாடு இருக்கிறது. மனுசனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சாப்பிடும் மக்கள் வாழும் நாடு. பெயரைச் சொன்னால் பொல்லாப்பு. வேண்டாமே.

இன்னும் ஒரு விசயம். ஆச்சரியமான விசயம். வௌவால் தன் வாய் வழியாக உணவு உட்கொள்கிறது. தெரிந்த விசயம். அந்த உணவு அதன் வயிற்றில் செரிக்கிறது. அதுவும் தெரிந்த விசயம்.

ஆனால் அந்த உணவு செரித்த பின் அந்தக் கழிவை, வௌவால் தன் வாயின் அடிப்பாகத்தின் வழியாக அகற்றுகிறது என்பது தான் பலருக்கும் தெரியாத விசயம்.

(https://www.quora.com/Bats-pass-stool-through-their-mouth-How-did-this-strange-and-rare-diversification-happen-during-evolution)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


M R Tanasegaran Rengasamy அந்தக் காலத்தில் தோட்ட வீடுகளின் கூரைகளில் வௌவால்கள் வந்து அடைந்தால் உடனே மூட்டம் போட்டு விரட்டுவார்கள். வௌவால் தங்கினால் வீடுகளில் மூட்டைப் பூச்சிகள் பரவும் என்றும் கூறுவார்கள். வௌவால்களின் பின்னணி பயங்கரமானதாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் vampire எனும் ஆங்கில படம் வந்தது நினைவிருக்கலாம். திகிலூட்டுகிறது வௌவால்களும் உங்கள் கட்டுரைகளும். வாழ்த்துகள் சார்.

Muthukrishnan Ipoh உலகின் பல்வேறு உலகளாவிய நோய்களுக்கு வௌவால்கள் தான் காரணம் என்பது அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்து. எனினும் சின்னப் பிள்ளையாக இருந்த போது தோட்ட வீடுகளில் வௌவால்கள் நிறையவே வந்து போகும்.

அவற்றைப் பிடித்து விளையாடுவது உண்டு. அப்போது எல்லாம் இந்த மாதிரி நோய்கள் எதுவும் இல்லையே. இப்போது அந்த வௌவால்களை நினைத்தால் பயமாக இருக்கிறது தனா... கருத்துகளுக்கு மிக்க நன்றி...

Jeya Balan சிறப்பான பதிவு கக்குவான் என்கிற நோய்க்கு வௌவால் சுட்டு தின்றதாக ஞாபகம்.

Muthukrishnan Ipoh தோட்டத்தில் வாழ்ந்த போது வௌவால் ஒரு அருந்துப் பொருளாக விளங்கியது... உண்மைதான் ஐயா..

Maana Mackeen மிகப் பிரமாதமான ஆய்வுத் தொகுப்பு. இத்தகவல்களின் உண்மைத் தன்மை எதிர்காலத்தில் ஊர்ஜிதமாகலாம். உங்களால் எனக்கு விருப்பமான "தமிழ் மலர்" கமகம...

Muthukrishnan Ipoh மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh நன்றியும் வாழ்த்துகளும்...

Jaya Brakash முற்றிலும் உண்மை sir