ராம்லி இப்ராஹிம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராம்லி இப்ராஹிம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 அக்டோபர் 2011

மலேசியப் புகழ் ராம்லி இப்ராஹிம்

இந்தக் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கிறேன். அங்கேயும் போய் நீங்கள் படிக்கலாம். அதன் முகவரி:
http://ta.wikipedia.org/wiki/ராம்லி_இப்ராஹிம்

ராம்லி இப்ராஹிம், மலேசியாவில் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர். இவர் ஒரு மலாய்க்காரர், இஸ்லாமிய சமயத்தவர். ஆனால், இவர் சமயம், மொழி, கலாசாரங்களைத் தாண்டிப் பயணிக்கும் கலைஞர். மலேசிய பரத நாட்டியக் கலை உலகில் ஒரு சகாப்தமாகப் பவனி வருகின்றார்.


இவருக்கு வயது 58. இவர் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கலைச் சேவைகளில் ஈடுபட்டு மலேசியாவில் நூற்றுக்கணக்கான பரதநாட்டிய நடன மணிகளை உருவாக்கியுள்ளார்.

சமய அடிப்படையில் இவருக்கு பல்வேறு கெடுபிடிகள் ஏற்பட்டன. அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்குதல்கள் கொடுக்கப் பட்டன.


சின்ன வயதில் ராம்லி
அவற்றை அனைத்தையும் தாண்டிச் சமாளித்து வருகின்றார். தற்சமயம், யுனெஸ்கோ என்று அழைக்கப் படும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் கலைத் தூதுவராகச் சேவை செய்து வருகின்றார். காசு பணத்திற்கு ஆசைப்படாத பரத நாட்டிய ஆர்வலர்.

ராம்லி இப்ராஹிம் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி, மலேசியா, சிலாங்கூர், காஜாங்கில் பிறந்தார். அவருடைய தகப்பனார் சுமத்திராவின் ராவா எனும் இடத்தில் இருந்து மலேசியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்.

கெர்லிங் பாடல் போட்டி

அவருடைய தாயார் மலாக்காவில் உள்ள கிளேமாக் எனும் இடத்தைச் சேர்ந்த உள்ளூர்வாசி. அவரது குடும்பம் காஜாங்கில் இருந்து கோலாலம்பூருக்கு மாறி வந்தது. கோலாலம்பூர் மாநகரத்தில் இருக்கும் ஜாலான் துன் ரசாக்கில் ராம்லி இப்ராஹிம் வளர்ந்தார்.

பின்னர் பசார் சாலை மலாய்ப் பள்ளியிலும் கோக்ரேன் சாலை பள்ளியிலும் தொடக்க, இடைநிலைப் பள்ளிப் படிப்புகளைப் படித்து முடித்தார். பின்னர் அவர் 1969 ஆம் ஆண்டு அரச மலேசிய இராணுவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப் பட்டார். அங்கு தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார்.



இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மலேசிய அரசாங்கம் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தது. அங்கு அவர் இயந்திரவியல் துறையில் மேற்கல்வி பயின்றார்.

1975-இல் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய பெல்லே நடனக் கல்லூரியில் இணைந்து ‘பெல்லே’ நடனத்தையும் கற்றுக் கொண்டார்.



இயந்திரம் தொடர்பான இயந்திரவியல் துறையில் படித்துப் பட்டம் வாங்கிய அவருக்கு நாட்டியத் துறையில் தான் அதிகமான ஈர்ப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டன. அந்த ஈர்ப்பு தான் இறுதியில் அவருடைய வாழ்க்கைப் பயணத்தை மாற்றி அமைத்தது.

ஆஸ்திரேலிய பெல்லே நடனக் கல்லூரியில் பட்டம் பெற்றதும், அவரை உடனே சிட்னி நடன நிறுவனம் மேலும் பயிற்சி பெற தங்கள் கல்லூரிக்கு அழைத்தது.



சிட்னி நடனக் கழக வளாகத்தில் தான் ராம்லி இப்ராஹிம், இந்தியா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ ஆடையார் கே.லக்சுமண் எனும் நாட்டிய வித்துவானைச் சந்தித்தார்.

அதன் பின்னர், ராம்லி இப்ராஹிம் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. பரத நாட்டியத்தைத் தீவிரமாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.



1980 ஆம் ஆண்டு இந்தியா, ஒரிசாவில் உள்ள பூரி எனும் இடத்திற்குச் சென்று ஒடிசி நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். ஒடிசி நாட்டியத்தில் ராம்லி இப்ராஹிமிற்கு அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது.

இந்தக் கட்டத்தில் அவர், ஒடிசி நாட்டியப் பேரொளி பத்மஸ்ரீ இந்திராணி ரகுமானை அமெரிக்கா, நியூயார்க்கில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒடிசி நாட்டியத்தில் மேலும் கவர்ந்து இழுக்கப் பட்டார்.



இந்திராணி ரகுமான் 1952 ஆம் ஆண்டு இந்திய அழகியாகத் தேர்வு செய்யப் பட்டவர். இவர் மேற்கத்திய நாடுகளில் பரத நாட்டியம், குச்சிப்புடி, கதக்கலி, ஒடிசி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களைப் பிரபலப் படுத்தியவர்.

மலேசியாவிற்குத் திரும்பியதும் ராம்லி இப்ராஹிமிற்கு மேலும் ஓர் அதிர்ஷ்டம் காத்து இருந்தது. மலேசியாவில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரகத்தின் நுண்கலையகம் அவருக்கு படிப்பு உதவித் தொகை வழங்கியது. ஒடிசி நாட்டியத்தை மேலும் கற்றுக் கொண்டு தேர்ச்சி பெற ஆர்வமூட்டியது.



ஆஸ்திரேலியத் தூதரகம் பல வகைகளில் தூதரக வகையிலான உதவிகளையும் செய்தது. அப்போது ஒரிசாவில் தேப பிரசாத் டாஸ்  எனும் நாட்டிய குரு ஒடிசி நடனப் பள்ளியை நடத்தி வந்தார்.

அங்கு சென்ற ராம்லி இப்ராஹிம் மேலும் கூடுதலாக ஒடிசி நடனத்தின் நுண்புலமைகளைத் தெரிந்து கொண்டார். அவரிடம் இருந்த இயற்கையான நாட்டிய ஆர்வம் மேலும் அவருடைய திறமைகளுக்கு மெருகூட்டியது. ஒடிசி நடனத்தில் பக்குவம் அடையச் செய்தது.



1983-இல் ராம்லி இப்ராஹிம் மலேசியாவிற்கு திரும்பினார். கோலாலம்பூரில் சுத்ரா நாட்டிய அரங்கத்தை உருவாக்கினார். தனது முதல் நாட்டிய படைப்பான Gerhana and Pandanglah! Lihatlah! எனும் நடன நிகழ்ச்சியைக் கோலாலம்பூரில் அரங்கேற்றம் செய்தார். அதன் பின்னர் அவருக்கு தொட்டது எல்லாம் ஏறுமுகம் தான். அவருடைய படைப்புகள்:

  •      சுத்ரா ராசா கனவுச் சாயல் நாட்டிய விழா (1984)
  •     குசுமஞ்சாலி (1987)
  •     சுத்ரா பெருவிழா (1990)
  •     அன்பு எனும் பெயரிலே (1991)
  •     ஹாரும் (Harum) சுத்ரா விழா (1993)
  •     ரெஸ்து (Restu) சுத்ரா விழா (1995)
  •     அன்னை இந்தியா (Mother India) சுத்ரா இந்தியப் பயணம் (1995)
  •     கெராக் ஆங்கின் (Gerak Angin) சுத்ரா விழா (2001)
  •     சுத்ரா பெருவிழா (2003)
  •     மேலும் பல வெளிநாட்டு விழாக்கள்

தொடர்ந்து வந்த காலக் கட்டங்களில் ராம்லி இப்ராஹிம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். இந்தத் தருணத்தில் அவர் சில நடன வகுப்புகளையும் கோலாலம்பூர், சிங்கப்பூரில் நடத்தி வந்தார்.

1992 ஆம் ஆண்டு மலேசியப் புகழ் நாட்டியமணி சிவராஜா நடராஜன், சுத்ரா நாட்டிய அரங்கத்தின் அர்ப்பணிப்புகளில்
தன்னையும் ஐக்கியப் படுத்திக் கொண்டார்.

அடுத்த ஆண்டு, அதாவது 1993-இல் ஹாரும் திருவிழா எனும் நாட்டியத் திருவிழா கோலாலம்பூரில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் சுத்ரா நாட்டிய அரங்கம் துரிதமான வளர்ச்சி கண்டு வந்தது.

1997 ஆம் ஆண்டு வாக்கில் ஆசிய நாடுகளின் சமரச உடன்படிக்கை மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளுமாறு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ராம்லி இப்ராஹிமிற்கு அழைப்பு விடுத்தார்.

அந்த மாநாட்டில் ராம்லி இப்ராஹிம் கலந்து கொண்டு ஒடிசி நடனங்களைப் படைத்துச் சிறப்பு செய்தார்.


அதே ஆண்டு கோலாலம்பூர் சுத்ரா நாட்டிய அரங்கத்தின் பயிற்றுநர்கள் இந்தியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். ’அன்னை இந்தியா’ எனும் அடைமொழி வாசகங்களில் அந்த வட இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் பட்டது. பல இடங்களில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல இளம் வயதினர் பரதநாட்டியக் கலையில் ஈடுபட ஊக்குவிக்கப் பட்டனர்.

கால வரிசை
  •  2003 – உலகப் புகழ் கேமரன் மலை ‘போ’ தேயிலை நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  •  2003 – இந்திய சினிமா இயக்குநர் சுனில் மேஹ்ரா Sutra in India எனும் ஆவணப் படத்தைத் தயாரித்தார்.
  •  2004 – Ramli! Heart of Sutra எனும் ஒலி, ஒளி நாடா வெளியானது
  •  2005 – மலேசியக் கலாசார மாளிகையில் ஒடிசி நடன விழா.
  •  2006 – கனடா/ஐரோப்பிய ஒடிசி நடனச் சுற்றுலா. ஒரிசா மாநில அங்காராக் வாழ்நாள் சாதனையாளர் விருது.
  •  2007 – சுத்ரா அறநிறுவனம் தோற்றுவிக்கப் பட்டது
  •  2007 – மலேசிய ஆஸ்ட்ரோ ஒளிபரப்பு நிறுவனத்தின் நடனக் கலைவிழா
  •  2008– மலேசிய ஒடிசி நடனப் பெருவிழா/ நியூயார்க கார்னகி மண்டபத்தில் நடனவிழா.
  • 2009 – இந்தியா, சென்னை நாட்டியாஞ்சலி மன்றத்தின் நார்ட்டாகா விருது
  • 2010 – இந்தியா, புதுடெல்லியில் அனைத்துலக நடன விழா. இந்தியாவில் ஆறு வாரங்கள் நடனச் சுற்றுலா.

ராம்லி இப்ராஹிம் சாதனைகள்

  •     புல்பிரைட் புகழ்பெற்ற கலைஞர் (1999) விருது. (Fulbright Distinguished Artist Award)
  •   போ கேமரோனியன் வாழ்நாள் சாதனையாளர் (2003) விருது. (BOH Cameronian Malaysia 2003 Lifetime Achievement Award)
  •     ஜோஹான் செத்தியா மக்கோத்தா தேசிய அரச விருது (J.S.M.)
  •   ஒரிசா மாநில அங்காராக் வாழ்நாள் சாதனையாளர் (2006) விருது. (ANGARAG Orissa 2006 Lifetime Achievement Award)
  •    அனைத்துலக கலாசார வளர்ச்சிக் கழ்கங்களின் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் (2009) விருது.
  •    சென்னை நாட்டியாஞ்சலி நார்ட்டாகா (2009) விருது. Natyanjali Trust/Purush Award, Chennai 2009
  •   அரச மலேசிய இராணுவக் கல்லூரி வாழ்நாள் சாதனையாளர் (2009) விருது. Putera Lifetime Achievement Award 2009 (RMC)

சுத்ரா ஒடிசி பயிற்றுநர்கள்

  •     தலைவர்: ராம்லி இப்ராஹிம்
  •     தலைமைப் பொறுப்பாளர்: சிவராஜா நடராஜன்

ஆசிரியர்கள்:

  •     குணா,
  •     ரதிமலர் கோவிந்தராஜு
  •     தான் மேய் மேய்
  •     நிஷா தேவி
  •     திவ்யா நாயர்
  •     கீத்திகா ஸ்ரீ
  •     கிவாஷினி
  •     நளினா நாயர்
  •     மிச்சல் சோங்
  •     திரிஷெர்னா
  •     செலஸ்டி தியுனிசான்