உலகில் பெரிய விஷ்ணு சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகில் பெரிய விஷ்ணு சிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜூன் 2020

உலகில் பெரிய விஷ்ணு சிலை

இந்தோனேசியா, பாலி தீவில் உலகின் மூன்றாவது உயரமான சிலை கட்டப்பட்டு உள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவிற்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னம். 


அதன் பெயர் கருடா விஷ்ணு காஞ்சனா சிலை (Garuda Wisnu Kencana Statue). 42 கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. இதைக் கட்டுவதற்கு 28 ஆண்டுகள் பிடித்தன. உலகத்திலேயே ஆகப் பெரிய விஷ்ணு சில இதுவே ஆகும்.

அமெரிக்காவில் உள்ள லிபர்ட்டி சிலையை (Statue of Liberty) விட சுமார் 30 மீ (98 அடி) கூடுதலான உயரத்தில் உள்ளது.

அதே நேரத்தில் ’கருடா விஷ்ணு காஞ்சனா சிலை’ உயரமாகவும்; அகலமாகவும் இருக்கிறது. கருடனின் இறக்கைகள் மட்டும் 64 மீ (210 அடி) அகலம் கொண்டவை.



இந்த நினைவுச் சின்னம் 21 மாடி உயரம் கொண்டது. இதன் எடை 4000 டன். இந்தச் சிலையின் மேற்பரப்பில் உள்ள கலை ஓவியப் படைப்புகள் செம்பு பித்தளைகளால் ஆனவை. அவற்றுக்கு 21,000 எஃகு கம்பிகள்; அவற்றை இணைப்பதற்கு 170,000 இரும்பு நட்டுகள் உள்ளன.

இந்தச் சிலை 3000 டன் தாமிரம், வெண்கல உலோகங்களால் ஆனது. இந்த நினைவுச் சின்னத்தின் மொத்த உயரம் 122 மீ (400 அடி). அடிப்படை பீடத்தின் உயரம் 46 மீட்டர். இதுவே இந்தோனேசியாவின் மிகப் பெரிய சிலையாகும்.

விஷ்ணுவின் கிரீடம் தங்கப் பாளங்களாலும் பளிங்குக் கற்களாலும் மூடப்பட்டு உள்ளது. தவிர சிலைக்கு பிரத்தியேகமாக வண்ண ஒளி அமைப்பை ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். 20 கி.மீ. தொலைவில் இருந்து ஒளி மாயஜாலங்களைக் காண முடியும்.



இந்தோனேசியச் சிற்பியான நியோமன் நுவார்டா (Nyoman Nuarta) என்பவரால் 1990-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2018 செப்டம்பர் மாதம் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப் பட்டது.

இந்தச் சிலை இந்தோனேசியாவிலேயே மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் வடிவம் அமைக்கப்பட்டது. 2018 ஜுலை 31-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவால் (President Joko Widodo) 2018 செப்டம்பர் 22-ஆம் தேதி திறக்கப்பட்டது

பயங்கரமான புயல்கள்; பூகம்பங்களைத் தாங்கும் வகையில் வடிவம் அமைக்கப்பட்டு உள்ளது. தவிர அடுத்த 100 ஆண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.



இந்தச் சிலை கட்டி முடிக்கப்படுவதற்கு மூன்று இந்தோனேசிய அமைச்சர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர். அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜூப் அவே (Tourism Minister Joop Ave); எரிசக்தி அமைச்சர் ஐடா பாகஸ் சுட்ஜனா (Energy Minister Ida Bagus Sudjana); பாலி தீவின் கவர்னர் ஐடா பாகஸ் ஓகா (Governor of Bali Ida Bagus Oka).

சிலையின் கட்டுமான வேலைகள் 1997-ஆம் ஆண்டில் தொடங்கின. இருந்தாலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்தத் திட்டம் திடீரென நிறுத்தப் பட்டது.

பதினாறு வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் போது சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. பாலித் தீவின் ஆன்மீக சமநிலையைச் சீர்குலைக்கலாம் என்று பாலித் தீவின் மத அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் பாலித் தீவின் இந்துப் பொதுமக்களின் ஆதரவு இருந்ததால் திட்டம் தொடர்ந்தது.



இந்தச் சிற்பம் ஒரு கட்டிட தளத்தின் மேல் அமர்ந்து உள்ளது. அதற்கு கீழே ஓர் உணவகம்; ஓர் அருங்காட்சியகம்; ஓர் ஓவியக் கூடம் உள்ளன.

சிலையின் மாபெரும் உருவத்தை விமான பயணிகள் கூட எளிதாகக் காண முடிகிறது.

இந்தச் சிலையைக் கட்டி முடிக்க 42 கோடி ரிங்கிட் செலவானது. கடைசி கட்டக் கட்டுமானத்தில் 1000 பேர் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறார்கள்.

ஒரு சிலர் 28 ஆண்டுகளாகவும் வேலை செய்து இருக்கிறார்கள். கட்டுமானத்தின் போது எந்தவிதமான விபத்து; ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் ஓர் ஆச்சரியமான செய்தியே.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.06.2020

சான்றுகள்:

1. President Joko Widodo unveils Indonesia's tallest statue". The Straits Times. Retrieved 28 November 2018.

2. Meet the Designer of Garuda Wisnu Kencana : Nyoman Nuarta - NOW! Bali". NOW! Bali. 1 September 2018.

3. Garuda Wisnu Kencana: Precious gift for Independence Day". The Jakarta Post. 28 November 2018.

4. Bali statue of Hindu god Wisnu to be world's largest". ABC. 28 November 2018.