கம்போங் கச்சான் பூத்தே - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்போங் கச்சான் பூத்தே - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜூன் 2020

கம்போங் கச்சான் பூத்தே - 1

தமிழ் மலர் - 28.06.2020

மலேசிய இந்தியர்களின் காலச் சுவடுகளில் கம்போங் கச்சான் பூத்தே ஒரு வரலாற்றுப் பதிவு. மலேசிய மக்களையும் உலக மக்களையும் ஈர்ந்து இழுக்கும் ஒரு மலேசிய உறவு. மலேசிய இந்தியர்களுக்குக் கிடைத்த அழகிய காலச் சுவடு.




1920-ஆம் ஆண்டுகளிலேயே ஈப்போவில் கடலை வணிகம் தொடங்கி விட்டது. தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மலாயாவுக்கு வந்த தமிழர்கள் தொடக்கி வைத்த வணிகம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரின் முன்னெடுப்பு என்றுகூட சொல்லலாம்.

கம்போங் கச்சான் பூத்தே என்பது மலாய்ச் சொல். தமிழில் சொன்னால் வேர்க் கடலைக் கிராமம். ஆனால் கம்போங் கச்சான் பூத்தே என்று நிரந்தரமாய் நிலைத்து விட்டது.

ஆக அந்த வேர்க் கடலைக்கு என்றே புந்தோங்கில் ஒரு கிராமம் இருக்கிறது. மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற கிராமம்.



இந்தக் கிராமம் தோன்றுவதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கின்றது. அந்த வரலாற்றில் பெரிய ஒரு சோகமும் அடங்கி இருக்கிறது.

சமூக ஆர்வலரும்; தொழில் அதிபருமான ஈப்போ புந்தோங் பி.கே.குமார் அதைப் பற்றி விளக்கம் கொடுக்கிறார். இடையில் ஒரு வார்த்தை. அண்மையில் இவர் ஒரு நூல் எழுதினார். அதன் பெயர் வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம். அந்த நூலில்கூட வேர்க் கடலை வியாபாரம் செய்வதைப் பற்றி எழுதி இருக்கிறார்.

தீபாவளி மற்றும் விழாக் காலங்களில் நாம் நிறைய உணவுப் பலகாரங்களைச் செய்கிறோம். மூவினத்தவரும் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். அவை தனித்தன்மை வாய்ந்தவை. சுவை நிறைந்தவை. தரம், உயிர்ச்சத்து, ஆரோக்கியம் தரும் சிறந்த பண்டைய உணவு வகைகள். தைப்பூசக் காலங்களில்கூட பற்பல பலகார வகைகள், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத்தீனி வகைகள் விற்பனையை நாம் பார்க்க முடியும்.




இத்தகைய பண்பாட்டு நொறுக்குத்தீனி, பலகார உணவு வகைகளை பிறகு ஓர் ஆண்டு காலத்திற்கு மறந்து விடுகிறோம். இது எவ்வளவு பெரிய குறை. கையிலே வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை என்பது இதற்குச் சாலப் பொருந்தும்.

நம்முடைய பலகார வகைகளை அன்றாடத் தேவைக்குரிய விற்பனைப் பொருளாகவும் மூவினமும் சாப்பிடும்படியாக உருவாக்குவதிலும் என்ன தடை? யார் தடுக்கிறார்கள்? நாம் முயன்று பார்ப்பது இல்லை.

வணிகம் செய்ய விருப்பம் எழுந்து விட்டால், அச்சம் சந்தேகங்களை விட்டு ஒழித்து விட வேண்டும். மனத் தடைகளை முதலில் அகற்றிவிட வேண்டும். வணிகம் செய்ய அடிப்படைத் தேவை துணிச்சல். நம்மால் முடியும் என்கிற துணிச்சல். மனத் தடைகளை நீக்குங்கள். தெளிவுடன் இருங்கள். எந்த வியாபாரம் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் விருப்பப் பட்டே செய்யுங்கள். 




விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முன்னேற்றம் தானாகவே வந்து சேரும்.

பி.கே.குமார் மேலும் சொல்கிறார்.

ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்தின் அடிவாரம் தான் கம்போங் கச்சான் பூத்தேயின் பூர்வீகம். ஈப்போவில் நிறையவே சுண்ணாம்புக் குன்றுகள்; சுண்ணாம்புப் பாறை மலைகள். அதில் ஒரு மலையின் பெயர் குனோங் சிரோ. அங்கே ஒரு மலைக் குகை. அதன் அடிவாரத்தில் தான் சுப்பிரமணியர் ஆலயம்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த குகைக் கோயிலுக்கு அருகில் தான் கடலை வணிகர்கள் நிறைய பேர் குடியேறினார்கள். சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார்கள். மலையின் அடிவாரத்தில் சின்னச் சின்ன வீடுகளைக் கட்டிக் கொண்டு கச்சான் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.




விடியல் காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து கச்சான் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு விடுவார்கள். இப்படி கச்சான் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் காளியப்பன். தன்னுடைய 13-ஆவது வயதில் மலாயாவுக்கு வந்தார். இப்போது ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கிறார்.

கொண்டைக் கடலையை அவித்ததும் அது வெள்ளை நிறத்திற்கு மாறும். பார்த்து இருப்பீர்கள். அந்த வெள்ளை நிறத்தைக் கொண்டு தான் கச்சான் பூத்தே எனும் பெயரே வந்தது. குனோங் சிரோ பகுதியை முன்பே கம்போங் கச்சான் பூத்தே என்று அழைத்து வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் அழைக்கிறார்கள்.

வீட்டில் இருக்கும் பெண்கள் கொண்டைக் கடலையை அவித்துக் கொடுப்பார்கள். வேர்க் கடலைகளைப் பொரித்துக் கொடுப்பார்கள். அவற்றை ஆண்கள் எடுத்துக் கொண்டு போய் ஈப்போ நகரில் விற்று வந்தார்கள். 




கச்சான்களைப் பொரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப் பட்டன. அதனால் கச்சானுக்குச் சுவை மிகுதி. குனோங் சிரோ பகுதியில் இரண்டு தலைமுறைகளாகக் கச்சான் வியாபாரம் நடைபெற்று வந்தது.

தொடக்கக் காலங்களில் தலையில் கச்சான் தட்டுகளைச் சுமந்தவாறு ‘கச்சான் பூத்தே, கச்சான் பூத்தே, ஒரு காசுக்கு ஒன்று’ என விற்று இருக்கிறார்கள். சினிமா அரங்குகள்; மருத்துவமனைகள்; பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களுக்குக் கால்நடையாக எடுத்துச் சென்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. 1960-ஆம் ஆண்டுகளில் பொது மக்கள் குனோங் சிரோவைத் தேடிச் சென்று கச்சான்களை வாங்கினார்கள். குனோங் சிரோ கச்சான்கள் மிக மிகச் சுவையானவை என்று புகழ்ந்தும் பேசினார்கள்.

அதனால் பேராக் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலேயே குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. திருவிழாக் காலங்களில் குனோங் சிரோ கச்சான்களுக்கு நல்ல கிராக்கியும் இருந்தது.




1973-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் திகதி தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன் குனோங் சிரோவில் திடீரென ஒரு மலைச் சரிவு. சுண்ணாம்புப் பாறைகள் சரிந்து விழுந்தன. அதில் பல வீடுகள் சிதைந்து போயின. 42 பேர் புதையுண்டு போயினர்.

அந்தப் புதை இடர்பாட்டில் இருந்து 12 உடல்கள் மட்டுமே மீட்கப் பட்டன. மீட்பு வேலைகள் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தன. மற்றவர்களின் உடல்களை மீட்டு எடுக்க முடியவில்லை. 30 குடும்பங்கள் மட்டும் அந்த இடர்பாட்டில் இருந்து தப்பித்தன.

குனோங் சிரோ கச்சான் பூத்தே என்கிற கிராமம் ஒரே நாளில் காணாமல் போய் விட்டது. அடுத்து ஒரு தடை உத்தரவு. குனோங் சிரோவைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது என்று பேராக் மாநில அரசாங்கம் தடை விதித்தது. 




அப்போது பேராக் மாநில முதல்வராக டத்தோ கமாருடின் ஈசா என்பவர் இருந்தார். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்கப் படும் என்று மாநில அரசாங்கம் உறுதி அளித்தது.

அந்த மாற்று இடம் தான் இப்போது புந்தோங்கில் இருக்கும் கம்போங் கச்சான் பூத்தே. 1974-ஆம் ஆண்டில் குனோங் சிரோவில் எஞ்சி இருந்த 30 குடும்பங்களும் கம்போங் கச்சான் பூத்தே கிராமத்திற்குப் புதுக் குடியேற்றம் செய்யப் பட்டன.  இந்தப் புது கம்போங் கச்சான் பூத்தே கிராமத்தின் அசல் பெயர் தெலுக் குரின்.

அந்தக் கட்டத்தில் ஈப்போ மாநகர் மன்றத்தின் தலைவராக அமரர் டத்தோ எஸ்.பி.சீனிவாசகம் இருந்தார். குனோங் சிரோவில் மரணம் அடைந்தவர்களுக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று வாக்கு அளித்தார்.

சொல்லி 47 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் நிறைவேற்றப் படவில்லை. மறந்து விட்டார்கள். இது பேராக மாநிலச் சுற்றுலாத் துறை கவனிக்க வேண்டிய ஒரு விசயம்.




புதிய குடியேற்றம் செய்யப் பட்டவர்கள் புதிய இடத்தில் இருந்து மறுபடியும் கச்சான் வியாபாரத்தைத் தொடர்ந்தனர். முன்பு போல் கச்சான் தட்டுகளைத் தலையில் சுமக்கவில்லை. அதற்குப் பதிலாக சைக்கிள், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தினார்கள்.

இவர்களில் சிலர் இப்போதும் ஈப்போ வட்டாரத்தில் உள்ள பேரங்காடிகளில் கச்சான் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் வியாபாரம் செய்கின்றனர். சிலர் மொத்த வியாபாரத்திலும் இறங்கி விட்டனர்.

இவர்கள் கச்சான் கடலைகளை மட்டும் விற்கவில்லை. முறுக்கு, அதிரசம், மரவெள்ளிக் கிழங்குச் சீவல்கள், ஓமப் பொடி, உருளைக் கிழங்குச் சீவல்கள், பகோடா, பூரி என 50-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களையும் விற்கின்றனர். 




கச்சான் வியாபாரிகளில் சிலர் தங்கள் தயாரிப்புகளை அரபு நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு 5000 கிலோ வியாபாரம் செய்யும் வணிகர்களும் இந்தக் கச்சான் பூத்தே கிராமத்தில் இருக்கின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்களுடைய பிள்ளைகளில் பலர் மேல்படிப்பு படித்து இப்போது விமானிகளாக, மருத்துவர்களாக, மேல்நிலை அதிகாரிகளாகப் பவனி வருகின்றனர். வாழ்த்துவோம்.

மீண்டும் சொல்கிறேன். தொடக்கக் காலத்தில் தலையில் சுமந்து கடலை வியாபாரம் செய்தார்கள். சைக்கிளில் மிதித்து வியாபாரம் செய்தார்கள். அப்போது இந்தக் கடலை வியாபாரம் 5 காசுக்கும் 10 காசுக்கும் நடைபெற்றது.

ஆனால் இன்று வாகனங்களில் வியாபாரம் செய்கின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வியாபாரம் வளர்ந்து விட்டது. பெரிய வளர்ச்சி. பெரிய முன்னேற்றம்.




இது ஒரு பாரம்பரியத் தொழில் முறை. மூன்றாவது தலைமுறையினர் ஈடுபட்டு புதுமைகள் செய்து வருகின்றனர். கம்போங் கச்சான் பூத்தே புதிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

இப்படிப்பட்ட மாற்றங்கள் மற்ற மற்ற இந்தியர்களுக்கும் போய்ச் சேர வேண்டும். புந்தோங் வட்டாரத்தில் புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. புந்தோங் என்பது மலேசிய இந்தியர்களின் வணிக நகரமாக மாற வேண்டும். ஒரு பொருளாதார மண்டலமாக உருமாற்றம் காண வேண்டும் என்று பி.கே.குமார் கூறுகிறார்.

பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் அமாட் பைசால் அஸ்மு; ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குலசேகரன்; புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவசுப்பிரமணியம்; முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்; ஆகியோரின் ஒருமித்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்று புந்தோங் மாறி வருகிறது. அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தொகுதியாகவும் மாறி வருகிறது.

புந்தோங் வாழ் மக்கள் மறுமலர்ச்சி பெறவும் புதிய திட்டங்கள் அமலாக்கம் பெறுவதற்கும் இதுவே சரியான தருணமாகக் கருதுகிறேன்; இதைவிட வேறு ஒரு சந்தர்ப்பம் நிச்சயம் அமையப் போவது இல்லை என பி.கே.குமார் கூறுகிறார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை இடம் பெறும்.

(தொடரும்)

சான்றுகள்

1. https://www.thestar.com.my/metro/community/2016/02/26/theyre-nuts-about-the-family-business-few-realise-the-famous-kampung-kacang-putih-is-built-around-me/

2. https://www.bharian.com.my/node/240010 - Muruku popular menjelang Tahun Baharu Cina

3. http://ctskacangputeh.com/ - Our history in Kacang Putih business turns back to the day when our Indian ancestors were brought in to Malaysia by British colony.

4. https://www.instagram.com/explore/locations/520170481/pkh-enterprise-kacang-putih-maruku?hl=en
;