கோலார் தங்கவயல் தமிழர்கள் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோலார் தங்கவயல் தமிழர்கள் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர் 2019

கோலார் தங்கவயல் தமிழர்கள் - 3

கோலார் தங்கச் சுரங்கத்தின் அடிப் பாகத்தில் மிகக் கடுமையான, மிகக் கொடுமையான வெப்பமாக இருக்கும். 12,000 அடி ஆழத்தில் 72 பாகை செல்சியஸ் வெப்பம். பூமியின் மேலே பொதுவாக வெப்பநிலை 30 பாகை. மலேசியாவில் பொதுவான வெப்பநிலை 32 பாகை செல்சியஸ்.


இங்கே ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். 0 பாகை செல்சியஸ் வெப்பத்தில் நீர் உறைந்து கட்டியாகிறது. அதே நீர் 100 பாகை செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் வெப்பநிலை 72 பாகை செல்சியஸ். அப்படி என்றால் சுரங்கத்திற்குள் உள்ளே எப்பேர்ப்பட்ட சூடாக இருக்க வேண்டும். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நம்முடைய உடலை ஒரு சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் உறுப்பு எது தெரியுங்களா. நம்முடைய காதுகள் தான். நாம் கீழே விழாமல் நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கும்; நடப்பதற்கும்; ஓடுவதற்கும் தேவையான சம்நிலையை இந்தக் காதுகள் வழங்குகின்றன. 



பூமிக்கு அடியில் வெகு ஆழத்தில் இருக்கும் போது இந்தக் காதுகள் ‘மக்கார்’ செய்ய ஆரம்பித்து விடும். புவி அழுத்தமும் வெப்பமும் ஒன்று சேர்ந்து உடலின் சமநிலையைத் தடுமாற வைத்துவிடும். எப்போதும் ஒருவிதமான குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்.

காதுகளின் உள்ளே மூன்று  வகையான குருத்து எலும்புகள் உள்ளன. மேலஸ் (malleus), இன்கஸ் (incus), டேபஸ் (stapes) என்கிற  எலும்புகள். எல்லாம் சுண்டைக்காய் அளவுதான் இருக்கும். இந்த எலும்புகளில் இருந்து தான் மூளைக்குத் தகவல்கள் அனுப்பப் படுகின்றன. அந்தத் தகவல்களில் இருந்து தான் உடல் சமநிலை படுத்தப் படுகிறது. ஆங்கிலத்தில் ‘பேலன்சிங்’ என்று சொல்வார்கள் (Equilibrioception).

சுரங்கத்தின் உள்ளே நிலவும் சூழலுக்கு ஏற்றவாறு இந்தக் குருத்து எலும்புகள் அந்தச் சூழலைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த எலும்புகள் தவறான தகவல்களை மூளைக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கும். மூளையும் குழம்பிப் போகும். அதனால் மூளைக்குள் பாதிப்புகள் ஏற்படலாம். உடலின் சமநிலைப் பாட்டிலும் தொல்லைகள். உடல் சமநிலை இல்லாமல் தடுமாறும்.

முன்பு சுரங்கத்தில் வேலை செய்தவர்களுக்கு அந்தத் தாக்கங்கள் இருக்கின்றன. அவர்களில் பலர் இன்றும் சித்தம் கலங்கிய நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆயிரத்தில் 120 பேர் அப்படிப் பாதிக்கப் படுகிறார்கள். ஏன் என்றால் சுரங்கத்திற்குள் நீண்ட நேரம்; நீண்ட நாட்கள் இருந்ததால் அவர்களின் மூளை பாதிக்கப்பட்டு விட்டது. 



யாரோ ஒருவருக்காக பூமிக்கு அடியில் தங்கத்தை எடுக்கப் போய் அவர்கள் பெற்றுக் கொண்ட அழகிய பரிசு. மனசிற்குக் கஷ்டமாக இருக்கிறது.

நாடி நரம்புகள் ஓய்ந்து இரத்தம் சுண்டிப் போன பிறகு அவர்கள் அந்த வேதனையை அனுபவிப்பது இல்லை. அவர்களின் இறுதி நாட்களில் மட்டும் அல்ல. இளமைக் காலத்திலேயே நரகத்தின் வாசல் கதவுகளைத் தட்டிப் பார்க்கிறார்கள்.

வெடிமருந்துகளின் சிதறல்கள் உண்டாக்கும் புகை மண்டலம்; வெடித்துத் தகர்க்கப்பட்ட பாறைகளில் உறைந்து இருக்கும் மணல் போன்ற சிலிக்கான் துகள் தூசு மண்டலம்; சுரங்கப் பாதைகளின் நுனிப் பகுதிகளில் மண்டிக் கிடக்கும் புகை.

இந்தத் தூசு மண்டலங்களை எல்லாம் கடந்து சென்று தான் தொழிலாளர்கள் தங்கப் படிமங்கள் உறைந்த பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். அது ஒரு வகையில் அமிலக் குட்டைக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேலை.



சுரங்கத்தில் உள்ள பாறைகளைத் தகர்ப்பதற்கு ஜெலட்டின் (Ballistic gelatin) குச்சிகளைப் பயன்படுத்துவார்கள். இந்தக் குச்சிகள் பயங்கரமான புகை மண்டலத்தை ஏற்படுத்தும். அந்தச் சமயத்தில் அங்கே காற்றில் பரவி இருக்கும் வெப்பம். பற்றாக்குறைக்குப் பல்வேறான உலோகங்களின் தூசு துகடுகள். ஏற்கனவே வெப்பத்தில் வறுத்து எடுக்கப்பட்ட அவர்களின் உடல்களில் எரிச்சல். இதை எல்லாம் எப்படி எழுதிப் புரிய வைப்பது என்று எனக்கும் தெரியவில்லை.

சொர்க்க லோகம்; நரகலோகம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நரக லோகத்தில் எப்போதும் எண்ணெய்க் கொப்பரைப் பாகு கொதித்துக் கொண்டே இருக்குமாம். பாட்டிமார்கள் சொல்வார்கள். ஏன் என்று சொல்ல வேண்டுமா.

யார் யார் இங்கே பாவங்களைச் செய்கிறார்களோ அவர்கள் நரகத்திற்குப் போனதும் முதலில் இந்தக் கொதிக்கும் கொப்பரைத் தோம்புகளில் தான் தூக்கிப் போடப் படுவார்களாம். நன்றாக வழற்றி துவைத்துப் பிழிந்து எடுத்த பின்னர் ஆணிகள் அடித்த மெத்தைகளில் காயப் போடப் படுப்பார்களாம். ஆக அந்தக் கொப்பரைத் தோம்புகளைக் கற்பனை செய்து கொள்வோம். அப்புறம் பாவங்கள் செய்வது கனவிலும் வராது.

சுரங்கப் பாதைகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன நீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அவற்றில் உள்ள நீரைக் குடிக்கலாம். உடலின் மேல் தெளித்துக் கொள்ளலாம்.



ஒன்றை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். 12,000 அடி ஆழத்தில் 72 டிகிரி செல்சியஸ் வெப்பம். அந்த வெப்பத்தின் அனலில் தொட்டியில் இருக்கும் நீரும் கொப்பளித்துக் கொண்டு இருக்கும். இருந்தாலும் வேறு வழி இல்லை.

உடலின் மேல் நீரைத் தெளித்துக் கொள்வதும்; தொண்டைக் குழியை ஈரப் படுத்திக் கொள்வதும் அங்கே தவிர்க்க இயலாத சடங்குகள். அது மட்டும் அல்ல. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் கொப்பளித்துக் கொண்டு இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டியது சூழ்நிலையின் கட்டாயம். வேறு வழி இல்லை.

சுரங்கத்தின் உள்ளே பாதைகள் எங்கே முடிவு அடைகிறதோ அங்கே தான் தொழிலாளர்களும் இருப்பார்கள். அங்கே இருந்து பூமியைக் குடைந்து போய்க் கொண்டே இருப்பார்கள். சமயங்களில் பெரும் பாறைகள் பாதையை மறைத்துக் கொண்டு இருக்கும். இந்தப் பாறைகளை நிலத்தடி மலைகள் என்று அழைக்கிறார்கள். சாதாரண கருவிகளால் துளைகள் போட முடியாது.

கோலார் தங்க வயல் உலகின் ஆழமான சுரங்கங்களில் ஒன்று. சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் தக்காண பீட பூமியில் அமைந்து இருக்கிறது. அதன் நிலத்தடி மேல்தட்டு (continental crust) எனும் கடும் பாறைகளைக் கொண்டது.

இந்தப் பாறைகளைத் தொழிலாளர்கள் தங்கள் வழக்கில் நிலத்தடி மலைகள் என்கிறார்கள். உண்மைதான். ஏன் என்றால் சுரங்கப் பாதைகளில் எதிர்படும் பாறைகள், மலைகளைப் போன்ற பரிமாணம் கொண்டவை.



அந்தப் பாறை மலைகளை வெடி வைத்துத் தகர்க்கும் போது பூமி அதிரும். அந்த அதிர்ச்சியில் சமயங்களில் சுரங்கத்தின் கூரைகள் சரிந்து விழும். அதில் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். அத்தனைப் பேரும் அங்கேயே இறக்க வேண்டி வரும்.

ஆக கோலாரில் சுரங்கம் தோண்டிச் செல்வதை ஏதோ கிணறு தோண்டும் வேலையாக நினைக்க வேண்டாம். மண்ணைக் கிண்டி விண்ணுக்குச் செல்லும் சில்லறைச் சமாசாரம் இல்லை.

பாறைகள் குறைந்த இடங்களில் துளையிட வேண்டும்; பாறைகள் மிகுந்த பகுதிகளில் வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். தகர்த்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் சுரங்கத்தின் எல்லையில் இருக்கும் போது இடைப் பகுதிகளில்; நடுப் பகுதிகளில் கூரைகள் சரிந்து விழும் வாய்ப்புகள் உள்ளன. அந்த இடிபாடுகளை மீண்டும் வெடி வைத்துத் தகர்க்க வேண்டி வரலாம். இருந்தாலும் அது சுரங்கப் பாதையின் தாங்கும் திறனைப் பொருத்த விஷயமாகும்.

சில நேரங்களில் மீண்டும் ஒரு இரண்டாவது வெடிப்பிற்குச் சுரங்கம் தாங்காது என்கிற ஒரு நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதோடு நிறுத்திக் கொண்டு வேறு பக்கமாகக் குடைந்து செல்வார்கள். சமயங்களில் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்படலாம்.



சுரங்கத்தின் கூரைகள் இடிந்து விழுந்தால் காற்றுக் குழாய்கள் சேதம் அடைந்து இருக்கும். அதனால் ஆக்சிஜன் உயிர்க்காற்று வெட்டுப்பட்டுப் போகும். உயிர்க்காற்று இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணம் நிச்சயம் என்பதும் அவர்களுக்குத் தெரிந்து விடும். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் மனசு எப்படி இருக்கும். என்ன நினைப்பார்கள். என்ன செய்வார்கள். நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

உயிருடன் மீண்டு வந்த தொழிலாளர்கள் சிலரிடம் பேசி இருக்கிறார்கள். அப்படி உயிர் பிழைத்து வந்த ஒருவரின் பெயர் சதாசிவம். அவர் என்ன சொல்கிறார். கேளுங்கள்.

’சுரங்கப் பாதை மொத்தமா அடைச்சிக்கிட்டு இருக்கும்... அந்தப் பக்கம் மாட்டிக்கிட்டு இருக்கிறவங்க சத்தம் போடுவாங்க... அந்தச் சத்தம் லேசு லேசா கேட்கும்... இந்தப் பக்கம் இருக்கிறவங்க பேரை எல்லாம் சொல்லி கூப்பிடுவாங்க...

உதவி செய்யுங்கனு அவங்க போடுகிற சத்தம் மெதுவா மெதுவா கேட்கும்... ஒரு நாளைக்கு முழுசா சத்தம் போடுவாங்க... அப்புறம் அவங்க குரல் கொஞ்சம் கொஞ்சமா அடங்கிப் போய்... அப்புறம் கடைசியில் நின்னு போயிடும்...’ சொல்லிவிட்டு சன்னமாய்த் தேம்புகிறார்.

தங்களின் தோழர்கள் உயிருடன் புதைந்து போனதை நினைத்து நினைத்து... தங்களுக்கும் அந்தச் சாவு நெருங்கி வருவதை உணர்ந்து கொள்வார்கள். மனசை கல்லாக்கிக் கொள்வார்கள். வேறு ஒன்றும் செய்ய முடியாது.



சமயங்களில் இந்தப் பக்கம் உயிர் பிழைத்தவர்களுக்கும் உடனடியாக உதவிகள் வந்து சேராது. அப்போது அவர்களுக்கும் அங்கேயே மரண சாசனம் எழுதி வைக்கப் படுகிறது.

காற்றுக் குழாய்களில் காற்று வராமல் தடைப்பட்டுப் போகும். மீட்புப் பணியாட்கள் உடனடியாக வந்து சேர்ந்து இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்தப் பக்கம் உள்ளவர்களும் இரண்டு மூன்று நாட்களில் இறந்து விடுவார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கு நாட்கள் வரை தான் தாக்குப் பிடிக்க முடியும்.

ஆனால் தங்கத்தைத் தேடும் அவர்களின் பயண அலைகள் மட்டும் ஓய்வது இல்லை. இறப்பை மிஞ்சியவர்கள் அந்த இறப்பிற்கே பேரம் பேசி தங்களின் பயணங்களைத் தொடர்வார்கள்.

தங்கள் மனைவி மக்களுக்குச் சோறு போட வேண்டும். வயது முதிர்ந்த அப்பா அம்மாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும். பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பெண் பிள்ளைகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். மாதா மாதம் கிடைக்கப் போகும் அந்தச் சொற்பச் சம்பளக் காசுக்காகப் பயணத்தைத் தொடர்வார்கள்.

சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வது இல்லை. இருந்தாலும் விபத்து நடந்து விட்டால் தப்பித்து வருவது பெரிய விஷயம். சுரங்க விபத்துகளில் மீட்கப்பட்ட உடல்களை விட மீட்கப் படாமல் போன உடல்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

கோலார் தங்கச் சுரங்கத்திற்குள் நூற்றுக் கணக்கான மனித உடல்கள் மீட்கப் படாமல் அனாதையாய்க் கிடக்கின்றன.

வெடித்துச் சிதறிய பாறைத் துண்டுகளைச் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரின் வேலை நேரத்திற்குள் அவர் அடைய வேண்டிய இலக்கு முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அந்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருப்பார்கள்.

வெடிமருந்துகள் வைத்து வெடித்த பின்னர் பாறைகளின் சிதறல்களில் வெடிக்காத வெடிமருந்துகளும் சிக்கி இருக்கும். சமயங்களில் தாமதமாக வெடிக்கும். அந்த மாதிரியான வெடி விபத்துகளில் இறந்தவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தங்கம் என்கிற உலோகத்தை நீங்கள் தொடும் போதும் சரி; அதைக் கழுத்திலும் காதிலும் மாட்டிக் கொண்டு போகும் போதும் சரி; அந்தத் தங்கத்தைத் தோண்டி எடுத்த அந்த மனிதர்களில் பலர்; உலகின் எங்கோ ஒரு சுரங்கத்தினுள் காணாமல் போன பிணமாக இன்னும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அவர்களை நினைத்துப் பார்த்தாலே பெரிய விஷயம். அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் முதல் மரியாதை.

(தொடரும்)