கண்ணீர் மழையில் காஷ்மீர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணீர் மழையில் காஷ்மீர் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 3

1947 ஜூலை மாதம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளுக்கு அருகே கிளர்ச்சி. அதாவது கிளர்ச்சி நடந்த அந்த எல்லைப் பகுதி காஷ்மீரின் பூஞ்ச் (Poonch) பகுதியில் இருந்தது. அங்கேதான் முதன் முதலான காஷ்மீர் கிளர்ச்சி. சொல்லப் போனால் மன்னர் ஹரி சிங்கிற்கு எதிரான கலகம் என்று தான் சொல்ல வேண்டும். 


அந்தக் கலகத்தை ஒடுக்க மன்னர் ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியப் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. இந்தியாவின் ஊடுருவல் ஒரு பெரிய ஆபத்தைக் கொண்டு வரும் என பாகிஸ்தான் கருதியது. இந்தக் கிளர்ச்சி தான் பின்னர் ஒரு பெரிய போருக்கும் வழி வகுத்தது.

இந்தியத் துணைக் கண்டம் சுதந்திரம் பெற்று இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் அங்கே ஓர் அரசியல் பூகம்பம். எப்படி வந்தது என்பதைப் பாருங்கள். 



1947 அக்டோபர் 22-ஆம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் கிளர்ச்சிக்கார்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த பத்தான்களின் உதவியைப் நாடிச் சென்றார்கள்.

இந்தப் பத்தான்கள் இருக்கிறார்களே இவர்கள் முரட்டுத் தனம் கலந்த வரட்டுச் சுபாவம் கொண்டவர்கள். ஜெங்கிஸ்கான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப் படுவதும் உண்டு.

பாகிஸ்தானுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. அதுதான் சமயம் என்று பாகிஸ்தானின் உளவுத்துறை பத்தான்களுக்கு நிதி உதவிகளையும் பொருள் உதவிகளையும் செய்தது.



பெரும் ஆயுதங்களுடன் பூஞ்ச் பகுதிக்குள் பத்தானியர்கள் நுழைந்தார்கள். பயங்கரமாகப் போரிட்டார்கள். வெகு வேகமாக முன்னேறிய பத்தான்கள் இரண்டே நாள்களில் ஸ்ரீநகர் வரை வந்து விட்டனர்.

இடைப்பட்ட நிலப் பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டனர். எந்த நேரத்திலும் பத்தான்கள் ஸ்ரீநகரைக் கைப்பற்றலாம் என்ற நிலையும் ஏற்பட்டது. மன்னர் ஹரி சிங் நடுங்கிப் போனார்.

அவசரம் அவசரமாக மன்னர் ஹரி சிங் இந்தியாவிற்குத் தூது அனுப்பி அவர்களின் உதவியைக் கேட்டார். அப்போது இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தார். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுண்ட்பாட்டன் பிரபு. இருந்தாலும் காஷ்மீருக்குள் இராணுவத்தை அனுப்ப இந்தியா தயக்கம் காட்டியது. 



அதற்கும் காரணங்கள் இருந்தன. அப்போது காஷ்மீர் என்பது ஒரு தனிப்பட்ட நாடு. அதுவும் இந்தியாவுக்கு அண்டை நாடு. ஆக ஓர் அண்டை நாட்டுக்குள் மற்ற நாட்டின் இராணுவம் நுழைந்தால் அது அனைத்துலகச் சர்ச்சையாகி விடுமே என இந்தியா கொஞ்சம் பயந்து நின்றது.

1947 அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி. இந்தியப் பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டம். காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் அவசர வேண்டுகோள் பற்றி விவாதித்தது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பதற்கு ஹரி சிங் சம்மதம் தெரிவித்தார் என்றால் இந்தியா தன் இராணுவத்தைக் காஷ்மீருக்குள் அனுப்பி வைக்கும் என்று ஹரி சிங்கிடம் தெரிவிக்கப் பட்டது.

அந்தச் சமயத்தில் தலைநகர் ஸ்ரீநகருக்கு 35 கிலோ மீட்டர் தூரத்திற்குள் பத்தானியர்கள் வந்து விட்டார்கள். அந்த இக்கட்டான நிலையில் காஷ்மீர் மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கும் ஹரி சிங்கிற்கு நேரம் இல்லை. 



இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உண்மையிலேயே ஹரி சிங்கிற்கு ஒரு திரிசங்கு நிலை. தன்னுடைய பதவியும் முக்கியம். அதே சமயத்தில் தன்னுடைய உயிரும் முக்கியம். உடனடியாக முடிவு செய்தாக வேண்டும் என்பதும் முக்கியம். என்ன செய்வது.

வேறு வழி இல்லாமல் காஷ்மீரை இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் 1947 அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கையெழுத்திட்டார்.

அடுத்த நாள் காஷ்மீர், இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கும் அடுத்த நாள் அதாவது 28-ஆம் தேதி இந்திய இராணுவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தரை இறங்கியது.

காஷ்மீருக்குள் களம் இறங்கிய இந்தியப் படைகள் பத்தான்களை விரட்டி அடித்தன. முரட்டுத் தனமான பத்தானியர்களின் கொடுமைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் காஷ்மீர் மக்கள் முன்பு தவித்துப் போய்க் கிடந்தார்கள். 



இந்தியப் படைகளைப் பார்த்ததும் அவர்களுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் பத்தானியர்களுக்கு எதிராகவே நின்று ஆயுதங்களை ஏந்தினார்கள். அதுவும் இந்திய இராணுவத்திற்கு மிகப் பெரிய ’பிளஸ் பாயிண்ட்’.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சி. காஷ்மீருக்குள் களம் இறங்கிய இந்தியப் படைகளை எதிர்த்துப் பாகிஸ்தான் இராணுவமும் களம் இறங்கியது. அதாவது பத்தானியர்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. அதைப் பார்த்த உலகம் அதிர்ச்சியால் உறைந்து போனது. இது தான் இந்தியா – பாகிஸ்தான் உறவுச் சிதைவின் முதல் கட்டம்.

1948-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முதலாவது போர் தொடங்கியது. அந்தப் போர் எட்டு மாதங்கள் நீடித்தது. அதனால் அந்த இரு நாடுகளுக்கும் பலத்த சேதங்கள்.  ஒரு வழியாக ஐக்கிய நாட்டு சபை தலையிட்டு 1949 ஜனவரி 1-ஆம் தேதி சமாதானம் செய்து வைத்தது.

பின்னர் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப் பட்டது. கில்கிட், பூஞ்ச், பல்சிஸ்தான், முசாபராபாத் ஆகியவை ஆசாத் காஷ்மீர் (பாகிஸ்தான் காஷ்மீர்) என்று பெயர் சூட்டப்பட்டது. ஜம்மு, லடாக் பகுதிகள் இந்தியாவின் காஷ்மீர் என்றும் பெயர் சூட்டப்பட்டது. இப்படித்தான் காஷ்மீர் இரண்டாகத் துண்டாடப் பட்டது.



பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஆசாத் காஷ்மீருக்கு முசாபராபாத் தலைநகரம் ஆனது. இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீருக்கு ஸ்ரீநகர் தலைநகரம் ஆனது. ஆக ஒரு நாட்டிற்கு இரண்டு தலைநகரங்கள்.

நிலைமை இப்படிப் போய்க் கொண்டு இருக்கும் போது பாகிஸ்தான், சீனாவின் நண்பரானது. சீனாவில் ஆயுத உதவிகளைப் பெற்றது. அந்த உதவிக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம். அரசருக்கு மட்டும் அல்ல. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. ஆக அந்தச் சாணக்கியத்திற்குச் சாங்கியம் செய்வது போல காஷ்மீரின் ஒரு பகுதியை ‘இந்தா எடுத்துக்கோ’ என்று சீனாவுக்கு பாகிஸ்தான் அன்பளிப்பாகக் கொடுத்தது. 



‘தேங்க்ஸ்’ என்று சீனாவும் வந்தனம் சொல்லி வாங்கிக் கொண்டது. அந்த நிலத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? நம் மலேசியாவில் கெடா மாநில அளவுக்குப் பெரியது. அது காதலிக்கு காதலன் கொடுத்த வைர நெக்லஸ் மாதிரி. பாகிஸ்தான் சும்மாதான் சீனாவுக்குக் கொடுத்தது. சீனாவும் ரொக்கமாகக் காசு பணம் எதையும் கேட்கவில்லை.

இருந்தாலும் சீனாவிடம் இருந்து நிறைய பீரங்கிகளையும் விமானங்களையும் பாகிஸ்தான் வாங்கிக் கொண்டது. என்ன செய்வது. தெருவில் சும்மா கிடைத்த தேங்காய் தானே. அதை எங்கே போட்டு உடைத்தால்தான் என்ன? வீட்டிலும் உடைக்கலாம் ரோட்டிலும் உடைக்கலாம். தலையிலும் போட்டு உடைத்துக் கொள்ளலாம். யார் என்ன கேட்பது.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தலையில் அடித்து தேங்காய் உடைக்கிறார்களே. நினைவுக்கு வருகிறது. இந்து சமய நம்பிக்கைகள் இப்படிப் போய்க் கொண்டு இருக்கின்றனவே. வேதனையாக இருக்கிறது. 



ஒரு காலத்தில் ஒன்றுபட்ட காஷ்மீர் என்று காஷ்மீர் பெருமைபட்டுக் கொண்டது. ஆனால் இப்போது பாருங்கள். இந்தியக் காஷ்மீர், பாகிஸ்தான் காஷ்மீர், சீனக் காஷ்மீர் என காஷ்மீர் மூன்றாகப் பிரிந்து வெந்து நொந்து நூலாய்ப் போய்க் கிடக்கிறது.

காஷ்மீர் யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா இல்லை பாகிஸ்தானுக்கா? இல்லை சீனாவுக்கா?

A Mission in Kashmir (Andrew Whitehead)

எனும் நூலை ஆண்டிரு வொயிட்ஹெட் என்பவர் எழுதி இருக்கிறார். கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கும் காஷ்மீர் பிரச்னையின் தொடக்க கால நிகழ்ச்சிகளை அவர் விரிவாக எழுதி இருக்கிறார். 



அண்மையில் அந்த நூலை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து படித்தேன். அதில் கிடைத்த தகவல்களைத் தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போதைக்கு மட்டும் ஒட்டு மொத்தமாக

ஐந்து இலட்சம் இராணுவத் துருப்புகள்.

பல ஆயிரம் துணை இராணுவப் படைகள்.

ஆயிரக் கணக்கான பீரங்கிகள்.

ஆயிரக்கணக்கான டாங்கிகள்.

நூற்றுக் கணக்கான ராக்கெட்டுகள்.

கோடிக் கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் 



குவிந்து போய்க் கிடக்கின்றன. இயற்கை அன்னை அள்ளித் தெளித்த காஷ்மீர் ஓவியத்தில் பார்க்கும் இடம் எல்லாம் இராணுவம். இராணுவம்.

கோடை காலம் வருகிறது. காஷ்மீர் சிம்லா போவோம் என்று சொன்ன மக்கள் பலரும் இப்போது வேண்டாம் சாமி என்கிறார்கள். காலம் மாறிப் போச்சு.

’எங்களுக்கு யாருடைய உதவியும் வேண்டாம். எங்களுடைய காஷ்மீரை எங்களிடம் கொடுத்தால் போதும்’ என்று காஷ்மீர் மக்கள் போராட்டம் செய்கின்றனர். 



காஷ்மீர் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையே மூன்று முறை போர்கள் நடந்து உள்ளன. இதைத் தவிர்த்து ராணுவ மோதல்களும் நிகழ்ந்து உள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப் புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். பற்றாக்குறைக்குச் சீனா ஒரு பக்கத்தில் புகை மூட்டம் போட்டு வருகிறது. எப்போதுமே அங்கே ஓர் அமைதியற்ற சூழல்.

காஷ்மீர் பிரச்சினை தொடங்கி இந்த வாரத்துடன் 72 வருடங்கள், 11 மாதங்கள் ஒரு வாரம் ஆகிவிட்டது.

என் மனதில் பட்டதைச் சொகிறேன். இந்தியாவின் கால்கொலுசு கன்னியாகுமரி என்றால் அதன் அரச கிரீடம் காஷ்மீர். அதை யாராலும் மறுக்க முடியாது. அதை மறக்காமல் இருந்தால் சரி.

ஒரே ஓர் இந்தியாவாக இருந்த இந்தியாவிற்கு இப்போது எல்லாப் பக்கங்களிலும் பிரச்சனைகள். எல்லாத் திசைகளிலும் அதன் சிறகுகள் முடக்கப் பட்டு வருகின்றன. 



எந்த இனம் என் அம்மாவைக் கொன்றதோ அந்த இனத்தை அழித்தே தீருவோம் என்று காங்கிரஸ் கட்சிதான் கங்கணம் கட்டியது. காலம் காலமாக சீக்கிய இனத்தின் ஒருவரைப் பிரதமராக்கி அழகு பார்த்தது. காங்கிரஸ் காலத்தில் தானே காஷ்மீர் இரண்டாக உடைக்கப் பட்டது.

ஒரு கட்டத்தில் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டார்கள் என்று சொல்லி ஈழத்தில் இருந்த இரண்டு இலட்சம் தமிழ் மக்களையும் அழித்துப் போட சீனாவுக்குத் துணை போனதும் அதே அந்தக் காங்கிரஸ் கட்சி தானே. அந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்லுவது. சொல்லுங்கள். எங்கே தர்மம். எங்கே நியாயம். 

ரொம்ப வேண்டாம் காவேரியைத் திறந்துவிடச் சொல்லி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மேல் தீர்ப்பு வழங்கிக் கொண்டு இருக்கிறது. கர்நாடகா கொஞ்சமாவது அசைந்து கொடுக்கிறதா. சொல்லுங்கள்.

காவேரி ஆற்றுக்காகச் சிரித்து சிரித்து சிருங்காரம் பேசிய சிதம்பரம் சார் இப்போது நீதிமன்றங்களையே சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் மோகன ராகம் பாடிய மோகன்ஜி இப்போது இங்கிலாந்தில் இடம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். 



இரண்டு இலட்சம் ஈழத் தமிழர்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஓர் இட்லி சாம்பார் இட்லிக்குச் சட்னி செய்ய இத்தாலிக்குப் போய் இருக்கிறாராம். இந்திய மக்கள் இப்படித் தான் புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். சந்தேகம் இருந்தால் நீங்களே போய் கேட்டுப் பாருங்கள்.

சிக்குபுக்கு மோடிக்கு உலகம் சுற்றும் வாலிபர் எனும் புதுப் பட்டம் கொடுத்து இருக்கிறார்கள். நல்ல தலைகள். நல்ல ‘கம்பினேஷன்’ போங்கள்.

காஷ்மீர் என்றால் ஈரத்தை உலர்த்தும் மண் என்று சொல்லுவார்கள். ஆனால், இப்போது என்ன அங்கே ஈரத்தையா உலர்த்துகிறார்கள். அது எல்லாம் இல்லைங்க. முகவரிகளைத் தொலைத்து நிற்கும் மனிதர்களின் ஈரம் தோய்ந்த மனக் காயங்களுக்கு மருந்து போட்டு ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இரத்தம் பாய்ந்த காடு மேடுகளில் செத்துப் போன மனித ஜீவன்களைத் தேடிக் கொண்டும் அலைகிறார்கள். நம்பவில்லை என்றால் போய்ப் பாருங்கள். சொர்க்கத்தில் இருந்தும் கடிதங்கள் வரலாம். போனவர்கள் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

(தொடரும்)

சான்றுகள்


1. Gupta, Jyoti Bhusan Das (2012), Jammu and Kashmir, Springer, ISBN 978-94-011-9231-6

2. Jaffrelot, Christophe (1996), The Hindu Nationalist Movement and Indian Politics, C. Hurst & Co. Publishers, ISBN 978-1850653011

3. Puri, Luv (2013), Across the Line of Control: Inside Azad Kashmir, Columbia University Press, ISBN 978-0-231-80084-6

4. https://en.wikipedia.org/wiki/Kashmir_conflict#Early_history

5. http://www.telegraph.co.uk/news/1399992/A-brief-history-of-the-Kashmir-conflict.html

6. The Indian troop which were air lifted in the early hours of 28 October, secured the Srinagar airport.http://news.bbc.co.uk/2/hi/south_asia/7057694.stm