ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 7

1972 செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் ஒரு வெடிகுண்டு வெடிக்கிறது. போலீசாரின் மீது பிரபாகரன் வீசிய குண்டு என பின்னர் தெரிய வருகிறது. 


அடுத்த சில நாட்களில் பிரபாகரனின் வீட்டுக் கதவைப் போலீஸார் தட்டுகிறார்கள். வீட்டின் பின்பக்கமாகத் தப்பித்துப் போன பிரபாகரனுக்குப் பற்பல நெருக்கடிக்கள். அடர்ந்த காடுகளுக்குள் படரும் தலைமறைவு வாழ்க்கை வேதனையின் விளிம்புகளில் தொடர்கின்றது.

போலீஸாரால் பிரபாகரன் மிகத் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். பிரபாகரனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்து நின்றது. அதைத் தவிர்க்க ஒரே வழி தமிழகத்திற்குச் செல்வது.

அங்கே கொஞ்ச காலம் தலைமறைவாக வாழ்வது. நிலைமை அமைதியானதும் ஈழத்திற்குத் திரும்பி வருவது என பிரபாகரன் முடிவு செய்தார். தமிழக மண் தங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினார்.



குட்டிமணி, தங்கதுரை, பிரபாகரன், மேலும் சிலரும் ஒரு படகின் மூலமாகத் தமிழகத்தின் வேதாரண்யம் வந்து சேர்ந்தார்கள். அங்கு இருந்து சிலர் சேலம் பகுதிக்குச் சென்றார்கள் பிரபாகரனும் அவருடைய நண்பர்கள் இருவரும் வேதாரண்யத்திலேயே தங்கி விடுகிறார்கள். வேதாரண்யம் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினப் பகுதியில் இருக்கிறது.

வேதாரண்யம் என்பது வடமொழிப் பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக் காடு. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தால் அது தான் தமிழகத்தின் முதல் கடற்கரைத் துறைமுகம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் போது சென்னைக்குப் போய்ச் சேர்வதே எல்லோருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் எவரிடமும் காசு இல்லை. யாழ்ப்பாணக் காடுகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிட்டு வயிற்றுப் பசியைப் போக்கியவர்கள். அப்புறம் காசு இல்லாமல் சென்னைக்கு எப்படி போவதாம்.

இந்தக் கட்டத்தில் வேதாரண்யம் மறைக்காட்டுநாதர் கோயிலில் கிடைத்த பொங்கல்; தயிர்சாதம்தான் பிரபாகரனுக்கு மூன்று நேரச் சாப்பாடுகள். கையில் காசு இல்லை. எவரிடமும் கேட்க முடியாத நிலை.



வேதாராண்யத்தில் பிரபாகரனை இறக்கிவிட்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டு இருந்த படகிற்கும் ஆபத்து. அந்தப் படகில் ஆயுதம் இருந்ததாகச் சொல்லி இலங்கை இராணுவம் அந்தப் படகைத் தடுத்து வைத்தது. இதைக் கேட்டு இந்திய அரசு எச்சரிகையானது.

அதன் விளைவாக 1973 நவம்பர் 18-ஆம் தேதி, சேலத்திற்குச் சென்று கொண்டு இருந்த குட்டிமணியைத் தமிழகப் போலீஸார் கைது செய்தார்கள். அவரை அப்படியே இலங்கைக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைத்தார்கள். அப்போதைய கலைஞர் கருணாநிதியின் தமிழக அரசு எடுத்த முடிவு.

குட்டிமணியைப் பற்றி சற்றே விளக்கம். இவரின் இயல் பெயர் செல்வராஜா யோகச்சந்திரன். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். குட்டிமணியைக் கொழும்பிற்குக் கொண்டு சென்ற இலங்கை அரசு அவரை உயிர் போகும் அளவிற்கு அடித்துச் சித்திரவதை செய்தது.

குட்டிமணிக்காக ஈழ மக்கள் செய்த போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். பின்னர் மீண்டும் பிடிபட்டார். 1983-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இனக் கலவரத்தில் குண்டுமணி பிடிபட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். 



அந்தச் சிறைச்சாலையில் அவரும் மேலும் 51 தமிழ்ப் போராட்டவாதிகளும் படுகொலை செய்யப் பட்டார்கள். இதைப் பற்றி பின்னர் விளக்கமாகச் சொல்கிறேன்.

வேதாரண்யத்தில் பிரபாகரனுடன் இருந்த மற்ற இரு நண்பர்கள் சின்னஜோதி; ஜனார்த்தன். மூவரும் வேதாரண்யத்தில் இருந்து சென்னைக்குச் சென்றார்கள். அங்கு ரா. ஜனார்த்தனன் என்கிற ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தார்கள்.

அவரின் உதவியோடு சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார்கள். மாத வாடகை 175 ரூபாய். அங்கு கொஞ்ச காலம் தங்கி இருந்தார்கள்,

இரவும் பகலும் சொந்தச் சமையல். பணப் பற்றாக்குறை வேறு. சின்னச் சின்ன வேலைகள். வேலை செய்த இடங்களில் கடன் வாங்கிக் காலத்தைக் கழித்து வந்தார்கள். தாங்கள் யார்; தங்களின் கொள்கை என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் ஓர் அடக்கமான வாழ்க்கை.



ஆனால் பிரபாகரனுக்கு அந்த மாதிரியான வாழ்க்கை கொஞ்சமும் பிடிக்கவில்லை. இலங்கைக்குச் சீக்கிரமாகத் திரும்பிப் போக வேண்டும். அங்கே தன்னுடைய கடமைகள் நிறையவே காத்து நிற்கின்றன என அழுத்தமான உறுத்தல்கள். அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகத் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சிகளை வளப்படுத்தும் உலக மாநாடு. முதல் மாநாடு கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 முதல் 23-ஆம் தேதிகளில் நடந்தது.

நான்காவது மாநாடு இலங்கையில் 1974 ஜனவரி 3 முதல் 7-ஆம் தேதி வரை நடக்க இருந்தது. கொழும்பில் மிகவும் சிறப்பாக நடத்துவதற்குத் தமிழறிஞர்கள் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள அரசு பற்பல தடைகளைப் போட்டது. தமிழகத்துத் தமிழ் அறிஞர்களுக்கும் விசா வழங்க மறுத்தது.

மேலும் பல சிக்கல்களையும் கொடுத்தது. இருந்தாலும் அந்தத் தடைகளையும் மீறி விழாவை நடத்த ஈழத் தமிழர்கள் முடிவு செய்தார்கள். இறுதியில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விழா சிறப்புற நடந்தது. 



வீரசிங்கம் மண்டபம் என்பது விசுவலிங்கம் வீரசிங்கம் என்பவரின் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம். வீரசிங்கம் ஓர் இலங்கைத் தமிழ் ஆசிரியர்; ஓர் அரசியல்வாதி; ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்; கூட்டுறவாளர்;  யாழ் மாவட்டக் கூட்டுறவு சங்கத்தின் முதலாவது தலைவர்.  

வீரசிங்கம் மண்டபம் சிறிய மண்டபம். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப் பட்டார்கள். ஆகையால் அந்த வீரசிங்கம் மண்டபம் போதுமானதாக அமையவில்லை

ஆகவே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் நிறைவு நாள் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டார்கள். அதற்காக அனுமதி பெற சென்ற போது போலீஸார் மறுத்து விட்டார்கள்.

மேயர் துரையப்பா என்னும் தமிழர் தான் தடைக் கல்லாக இருந்தார். சும்மா சொல்லக் கூடாது. சிங்கள அரசிற்கு நல்ல விசுவாசமான ஒரு தமிழர்.

இருந்தாலும் விழாவை எப்படியும் நடத்தியாக வேண்டும். துரையப்பாவிடம் கேட்டு அனுமதி பெறலாம் என இளைஞர்கள் அவரைத் தேடிச் சென்ற போது மனிதர் தலைமறைவாகி விட்டார். 



தமிழனுக்குத் தமிழனே எதிரியா என இளைஞர்கள் வேதனைப் பட்டார்கள். வேறு வழி இல்லாமல் வீரசிங்கம் மண்டபத்திலேயே நடத்த ஏற்பாடுகள். மண்டபத்திற்கு வெளியே வாழைமரங்கள் கட்டி பந்தல் தோரணங்கள் போட்டு நடத்தினார்கள். அதுதான் மாநாட்டின் இறுதி நாள்.

அமைதியாக நடந்து கொண்டு இருந்த விழாவில் போலீஸ் அதிகாரி சந்திரசேகரா திடீரென்று நுழைந்தார். அடுத்த நிமிடம் கண்ணீர் குண்டுகள் ஆங்காங்கே வீசப் படுகின்றன. போலீஸார் வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

கண்ணீர்க் குண்டுகள் பட்டு மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுகின்றன. அந்த இடத்திலேயே ஒன்பது தமிழர்கள் உயிர் விடுகின்றார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.

மதம் பிடித்த ஆட்டத்திற்கு அரசியல் பின்னணியில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் அல்பிரட் துரையப்பா; இன்னொருவர் அமைச்சர் குமரசூரியன்.



முடிவில் போலீஸ்தான் தமிழர்களை முதலில் தாக்கியது என விசாரணையில் தெரிய வருகிறது. ஆனாலும் போலீசுக்கு எதிராக ஒரு துளி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாகக் களேபரம் செய்த போலீஸ் அதிகாரிக்குத் தான் பதவி உயர்வு கிடைத்தது.

யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்கள் கோபத்தின் உச்சத்திற்கே போகிறார்கள். பழிக்குப்பழி வாங்க வேண்டும் என துடிக்கிறார்கள். 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்குக் காரணமானவர்கள் மூவர் என பட்டியல் போடுகிறார்கள்.

1. போலீஸ் அதிகாரி சந்திரசேகரா
2. யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா
3. தமிழ் அமைச்சர் குமரசூரியன்


இந்த மூன்று பேரையும் பழி வாங்க வேண்டும் என சிவக்குமரன் முடிவு எடுக்கிறார். இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரின் முதல் இலக்கு போலீஸ் அதிகாரி சந்திரசேகரா.

யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோயிலைத் தாண்டித் தான் சந்திரசேகரா, தன்னுடைய போலீஸ் நிலையத்திற்குப் போக வேண்டும். இதை அறிந்த சிவக்குமரனும் அவரின் நண்பர்களும் கோயிலுக்கு அருகில் ஒருநாள் காத்து இருந்தார்கள். எதிர்பார்த்தது போல சந்திரசேகரா வருகிறார். அவருடைய போலீஸ் வண்டியை வழி மறிக்கிறார்கள். 



சிவக்குமரன் தன் துப்பாக்கியால் சந்திரசேகராவைச் சுடுகிறார். ஆனால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட அந்தத் துப்பாக்கி வெடிக்க வில்லை. பலமுறை சுட்டும் வெடிக்கவே இல்லை. துப்பாக்கியால் சுட்டுப் பயன் இல்லை என கத்தியை எடுத்து சந்திரசேகராவைக் குத்த முயற்சி செய்கிறார் சிவக்குமரன்.

அதற்குள் மக்கள் கூடி விட்டார்கள். சிவக்குமரன் அங்கு இருந்து தப்பிக்கிறார். போகும் வழியில் அல்பிரட் துரையப்பாவின் கார் வருகிறது. அவரையும் சிவக்குமரன் சுடுகிறார்.  துப்பாக்கி வெடிக்கவில்லை.

சிவக்குமரனின் தலைக்கு 1 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப் படுகிறது. அதன் பின்னர் சிவக்குமரன் தலைமறைவாக வாழ்கிறார். முடியவில்லை. தமிழகத்திற்குத் தப்பிச் சென்று கொஞ்ச காலம் தலைமறைவாக இருக்கும்படி நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் கையில் நயா பைசா இல்லை. கடைசியில் ஒரு வங்கியைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறார். சிங்கள அரசிற்குச் சொந்தமான வங்கி. திட்டமிட்டபடி வங்கிக்குள் சென்று கொள்ளை அடிக்க முயற்சி செய்யும் போது போலீஸ்காரர்கள் வங்கியைச் சுற்றி வளைத்துக் கொள்கிறார்கள். சிவக்குமரன் ஒரு வழியாகத் தப்பி ஓடுகிறார். 



போலீஸ்காரர்களும் விடாமல் துரத்துகிறார்கள். சிவக்குமரன் புகையிலைத் தோட்டத்திற்குள் ஓடுகிறார். கால்களில் முட்கள் குத்திக் கிழிக்கின்றன. மேலும் ஓட முடியவில்லை. ஓடவும் ஆற்றல் இல்லை.

என்ன இருந்தாலும் சிங்களப் போலீஸ்காரர்களிடம் பிடிபட்டுச் சாவதை விட வீரத் தமிழனாய் இறப்பதே மேல் என நினைக்கிறார். கழுத்தில் இருந்த சயனைட் நச்சுக் குப்பியைக் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார். அதுதான் தமிழீழ வரலாற்றில் நடந்த முதல் தற்கொலை.

யாழ்ப்பாணமே அழுதது. தமிழர்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடிக்கிறார் சிவக்குமரன். போராடும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் புது வேகத்தையும் புது இலட்சியத்தையும் உருவாக்கி விட்டுச் சென்றவர் சிவக்குமரன். அப்போது அந்த இளைஞருக்கு வயது 17.

1974 ஜுன் 6-ஆம் தேதி நடந்த சிவக்குமரனின் இறுதி ஊர்வலம் யாழ்ப்பாணத்தையே அதிர வைத்தது.

சென்னையில் இருந்த பிரபாகரனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனியும் கோழைகள் போல பதுங்கி இருந்து பிரயோசனம் இல்லை. தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்று பிரபாகரன் முடிவு எடுக்கிறார்.



சரியான நேரம் அமையவில்லை என நண்பர்கள் சின்னஜோதி; ஜனார்த்தன் தடுத்தார்கள். தடுத்தும் கேட்காமல் பிரபாகரன் இலங்கைக்கு வந்தார். கூடவே செட்டி எனும் நண்பரையும் அழைத்து வந்தார். இலங்கை வந்த பிரபாகரன் மறைந்து மறைந்து வாழ வேண்டிய இக்கட்டான நிலை.

அந்தச் சமயத்தில் பிரபாகரன் உருவாக்கிய புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தார்கள். இருந்தாலும் போராட்டம் செய்வதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் பிரபாகரனே செய்கிறார்.

இந்தக் கட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றைத் திறந்து வைக்க வருகிறார். பிரபாகரனுக்குச் செய்தி கிடைக்கிறது. அவர் வேறு மாதிரியாக யோசிக்கிறார்.

(தொடரும்)