இலங்கை இறுதிப் போரில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை இறுதிப் போரில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே 2019

இலங்கை இறுதிப் போரில்

இலங்கை இறுதிப் போரில் பிரபாகரனையும் புலிகளையும் தி.மு.க. காப்பாற்றி இருக்க முடியுமா?

என். ராம் பேட்டி : பி.பி.சி. தமிழ், 10 ஆகஸ்ட் 2018

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் - விடுதலைப் புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
 
என். ராம்

என். ராம்:  விடுதலைப் புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர். ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் கொலை செய்யப் பட்டதில் இருந்து அவருக்கு விடுதலைப் புலிகள் மீது இருந்த மரியாதை தகர்ந்தது .

ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறி இருந்தார் கருணாநிதி. அவர் முதல்வராக இருந்த போது ஆக்கப் பூர்வமாகவே செயல்பட்டார்.

இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அப்போது கூட அவர் விடுதலைப் புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு கருணாநிதி மீதே வசவுகள் விழுந்தன''.
 

இலங்கை விசயத்தைப் பொருத்த வரையில், அவருடன் நான் பலமுறை பேசி இருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப் பூர்வமான அணுகுமுறையைக் கொண்டவர்.

அவர் வெளியில் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருவது போல சொல்லி வந்தாலும் அவருடைய நிலை என்னவெனில், இலங்கைக்குள் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும்.

தங்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் நிலை உருவாக வேண்டும். வேறு வழி இல்லை என்றால், ஈழம் மலர வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. சிலர் பிடிவாதமாவே தமிழ் ஈழம் மட்டுமே வேண்டும் எனச் சொல்வது போன்றதோர் நிலை எடுப்பவராக அவர் இருந்தது இல்லை.''

"இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி மேற்கொள்ளும் வாய்ப்பு அமைய வேண்டும் என்பதே அவரது உண்மையான கோரிக்கையாக இருந்தது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என தெரியும் போது தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற வெளிப்படையான நிலையை எடுக்கும் போது அவர் பிடிவாதமாகவோ திடமாகவோ அந்த முடிவை எடுக்கவில்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். அவர் விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை ஆதரிக்கவில்லை".

''ஒருமுறை நான் அவரிடம் பேசும் போது, 'ஒரு முட்டாள்தனமான தவறு, குற்றத்தை விட மோசமானது' என ஒருவரின் மேற்கோளைக் காட்டி ராஜிவ் காந்தி கொலை குறித்துச் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

விடுதலைப் புலிகளின் முட்டாள்தனமான தவறுகள் குறித்து நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம்.

ஒன்று, இந்திய அமைதி காப்புப் படையுடன் விடுதலைப் புலிகள் வெறித் தனமாக போர் நடத்தியது.

இரண்டு, ராஜீவ் காந்தி படுகொலையைக் கட்டாயமாகப் பிரபாகரனே திட்டமிட்டது. அது ஒரு மிகப் பெரிய குற்றம். மேலும் முட்டாள் தனமான தவறு" என்றேன்.

''மூன்றாவதாக, ராஜபக்சவைத் தேர்ந்து எடுத்தது என்றேன்''. எப்படி எனக் கேட்டார்.
ரணில் விக்ரமசிங்க Vs ராஜபக்சே மோதிய அந்த அதிபர் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருந்து இருக்கும். ஆனால் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி தமிழர்களிடம் கூறியது விடுதலைப் புலிகள். இதனால் கணிசமாக ரணிலுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு வீணாய்ப் போனது என்றேன்.''

''அவர்கள் இன்னொரு தவறு செய்தார்கள் அது என்ன தெரியுமா?'' என்று கருணாநிதி என்னிடம் கேட்டார்.

''ஸ்ரீ சபாரத்தினம் என்னுடைய சகோதரர் மாதிரி. அவரைக் கைது செய்து கொல்லப் போகிறார்கள் எனக் கேள்விப் பட்டேன். அதைச் செய்யக் கூடாது என நான் சொல்வதாய் பிரபாகரனிடம் சொல்லுங்கள் என பேபி சுப்ரமணியத்திடம் பேசினேன்.

ஆனால் சபாரத்தினத்தைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். இதனால் விடுதலைப் புலிகள் மீது பெரும் ஏமாற்றம் உண்டானது'' என்று சொல்லி கருணாநிதி என்னிடம் கவலைப் பட்டார்.

''ஆகவே கருணாநிதிக்கு கண்மூடித்தனமான விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை இருந்தது இல்லை. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து அவர் குழப்பிக் கொள்ளவில்லை.''

''ஈழத் தமிழர் நலன், உரிமைகள் மற்றும் அவர்களது அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதுதான் கருணாநிதியின் நோக்கம்''.

''ஈழத் தமிழர்கள் குறித்து நாங்கள்தான் ஒரே பிரதிநிதிகள் என விடுதலைப் புலிகள் எடுத்த நிலையை அவர் ஒப்புக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை.''

''இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் யாரும் விடுதலை புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்ற முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், பிரபாகரன் அசட்டையாக ஓர் நிலையை எடுத்து விட்டார்.''

''அந்த நேரத்தில் பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றி இருக்க முடியாது என்பதே உண்மை. அந்த நேரத்தில் இந்தியா தலையிடும் என பிரபாகரனுக்கு யாரோ நம்பிக்கை அளித்ததாக கேள்விப் பட்டோம். ஆனால் ஆதாரம் இல்லை. இந்த நிலையில், தி.மு.க.வால் மட்டும் காப்பாற்றி இருக்க முடியுமா என்ற கேள்வியே தேவையற்றது.''