சசீந்திரன் முத்துவேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சசீந்திரன் முத்துவேல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 ஜூன் 2019

சசீந்திரன் முத்துவேல்


தமிழ்நாட்டில் பிறந்து வேலை தேடி பப்புவா நியூ கினி நாட்டிற்குச் சென்ற ஒரு தமிழர் இன்று (07.06.2019) அதே அந்த நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். உலகத் தமிழர்களுக்குப் பெருமை தரும் செய்தி.

சசீந்திரன் முத்துவேல் (Sasindran Muthuvel) இன்று பப்புவா நியூ கினி நாட்டின் பொது நிறுவனங்களின் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.



பப்புவா நியூ கினி நாட்டின் புதிய பிரதமர் ஜேம்ஸ் மாராப்பே (James Marape) இன்று சசீந்திரன் முத்துவேல் அவர்களை ஓர் அமைச்சராக நியமனம் செய்தார்.

பப்புவா நியூ கினி எனும் நாடு பசிபிக் பெருங்கடலில் நியூகினித் தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. மனிதர்களைச் சாப்பிடும் காட்டுவாசிகள் வாழும் நாடு என்று முன்பு காலத்தில் பெயர் பெற்றது. இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் குழுக்கள் உள்ளன.



தமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் முத்துவேல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.

மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், 1999-ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்றார். அங்கே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.

2000-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் மூடப் படவே, கடை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தினார். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து நல்ல நிலைக்கு வந்தார்.



அவர் சார்ந்த ஆதிக்குடிகள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். 2012-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில், மேற்கு நியூ பிரிட்டன் மாநில வேட்பாளராகப் போட்டியிட்டார். 

24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாடாளுமன்றம் சென்றார். நியூ பிரிட்டன் மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப் பட்டார். இன்று அவர் ஓர் அமைச்சர்.



சசீந்திரன் முத்துவேல் அவர்கள் நியூ கினி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட...

*முதலாவது தமிழர்*

*முதலாவது தமிழர் அமைச்சர்*


எனும் பெருமைகளைப் பெறுகிறார். உலகத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அவரை வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)