மலேசியா 1MBD மோசடி - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 7 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 7

 தமிழ் மலர் - 23.11.2018 - வெள்ளிக்கிழமை

1எம்.டி.பி. நிறுவனத்தின் பல நூறு கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் எங்கேயோ ஓர் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம். 1எம்.டி.பி. நிறுவனத்தின் முக்கியப் புள்ளிகள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம். அப்போது அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

அந்த இரகசியம் தெரிந்தவர்களில் ஜோலோ ஒருவராக இருக்கலாம். அவர் மலேசியாவிற்கு வந்தால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
 

அதனால் அவர் ஓடி ஓடி ஒளிந்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு முயற்சி செய்யலாம். இப்படித் தான் சிலரும் பலரும் நினைக்கின்றார்கள். பட்டும் படாமலும் சொல்லிக் கொண்டும் வருகிறார்கள். 1800 கோடி ரிங்கிட்டைச் சுழித்து வழித்து எடுத்தவர்கள் சில கோடிகளை எங்கேயாவது மறைத்து வைத்து இருக்கலாம் அல்லவா. அப்படியும் ஒரு பார்வை பரவலாகவே தேங்கி நிற்கிறது.

2018 மே மாதம் 9-ஆம் தேதி தேர்தலுக்குப் பின்னர் ஒரு வாரம் கழித்து நஜீப் வீடுகளில் அதிரடிச் சோதனைகள் நடந்தன. அனைவருக்கும் தெரியும். பல நாடுகளின் நோட்டுக் கத்தைகள் இலட்சக் கணக்கில் கைப்பற்றப் பட்டன. அந்த நோட்டுக் கத்தைகளில் எந்த நாட்டுப் பணம் அதிகமாக உள்ளது எனும் கோணத்திலும் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.

1எம்.டி.பி. நிறுவனத்தின் சுரண்டலுக்கு மூலகாரணமாக இருந்தவர் ஜோலோ. அவர் மூலமாகத் தான் எல்லாச் சுரண்டல்களும் நடந்து இருக்கின்றன. ஏறக்குறைய ஒன்பது வருடங்களாக இந்தச் சுரண்டல் வேலைகள் நடந்து இருக்கின்றன. ஆனால் முன்னாள் பிரதமர் நஜீப், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லி வருகிறார். 




மேலும் அவர் சொல்வதைக் கேளுங்கள். ’1எம்.டி.பி. பணத்தைப் பயன்படுத்தி விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப் பட்டது எனக்குத் தெரியவே தெரியாது. எனக்குத் தெரியாமல் எல்லாம் நடந்து இருக்கிறது.

இந்தப் பொருட்களை வாங்குவதற்கு நான் எவருக்கும் அதிகாரம் வழங்கவில்லை. அரசாங்கத்தில் நான் நீண்ட காலம் சேவை செய்தவன். அதனால் எது சரி எது தவறு என்று எனக்குத் தெரியும்.

என் மனைவிக்கு கிடைத்த இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் ஓர் அன்பளிப்பு. சவூதி அரபிய இளவரசர் அன்பளிப்பாக வழங்கியது. அதோடு 1எம்.டி.பி. நிறுவனத்தில் ஜோலோவை நான் சேர்க்கவில்லை. ஜோலோ செய்த காரியங்களுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவர் என்னுடைய கட்டுப்பாட்டில் இயங்கவில்லை.

1எம்.டி.பி. தொடர்பாக ஜோலோவிற்கு நான் எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் அவரே தன்னார்வத்தில் சில காரியங்களைச் சொந்தமாகச் செய்து இருக்கிறார். அவர் என்ன செய்தாரோ அதற்கு 1எம்.டி.பி. நிறுவனத்தின் நிர்வாகம் தான் பொறுப்பு. நான் அல்ல. ஜோலோவுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. 




என்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 260 கோடி ரிங்கிட் சவூதி அரபிய மன்னர் அப்துல்லா அப்துல் அஜீஸ் அல் சாவுட் அன்பளிப்பாக வழங்கியது. மன்னர் அப்துல்லாவின் முகத்துக்காக ஏற்றுக் கொண்டேன். அது 1எம்.டி.பி. நிறுவனத்தின் பணம் அல்ல’ என்கிறார் முன்னாள் பிரதமர் நஜீப்.

(அன்பளிப்பாகக் கிடைத்ததாகச் சொல்லப்படும் இளம்சிவப்பு வைர நெக்லஸ் விலை: 11 கோடி 37 இலட்சம் ரிங்கிட். அதாவது 113.7 மில்லியன் ரிங்கிட்)

ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அண்மையில் நஜீப்பைப் பேட்டி கண்டது. அதில் சில விவரங்கள்:

எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் நிறுவனம் என்பது 1எம்.டி.பி. நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தத் துணை நிறுவனத்திடம் இருந்து தான் நஜீப்பின் வங்கிக் கணக்கில் 42 மில்லியன் ரிங்கிட் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பணம் எப்படி வந்தது என்று கேட்கப் பட்டது.




எப்படி தன் கணக்கிற்கு வந்தது என்பது தனக்குத் தெரியவில்லை என்று நஜீப் சொல்லி இருக்கிறார். எஸ்.ஆர்.சி. நிறுவனம் தொடர்பான எல்லா கணக்கு வழக்குகளையும் நிக் பைசால் அரிப் கமில் என்பவர் பார்த்துக் கொள்கிறார். அவரிடம் தான் பொறுப்புகள் ஒப்படைக்கப் பட்டன என்று நஜீப் சொல்கிறார்.

நஜீப்பின் கருத்துகளுக்கு மலேசிய லஞ்சத் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமட் சுக்ரி அப்துல் மறுப்பு சொல்கிறார். 60 கோடி ரிங்கிட், சவூதி அரபிய மன்னரின் அன்பளிப்பு என்று சொல்வதற்கு சரியான சான்றுகள் இல்லை.

இதற்கு இடையில் நிக் பைசால் அரிப் கமிலை மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனம் தேடி வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் இந்தோனேசியாவில் தலைமறைவாக இருப்பதாக ஆருடங்கள். விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இவரையும் (நிக் பைசால்) ஜோலோவையும் கைது செய்தால் தான் 1எம்.டி.பி. நிறுவனத்தில் நடந்த ஊழல் வழக்குகளைச் சரியான வழியில் வழிநடத்த முடியும். சரி.

நஜீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. சுருங்கச் சொன்னால் அவரைச் சுற்றிலும் நிறையவே பட்டாசு வெடிகள். அதாவது குற்றச்சாட்டுகள்.




மங்கோலிய அழகி அல்தான்தூயா கொலை வழக்கு;

1எம்.டி.பி. நிறுவனத்தின் நிதி மோசடிகள்;

வெளிநாடுகளுடன் சந்தேகத்திற்கு உரிய மெகா திட்டங்கள் (சீனாவின் கிழக்குக் கரை இரயில் பாதை திட்டம்);

அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களின் திட்டங்கள் (ஜி.எல்.சி);

அரசாங்கத் திட்டங்களை ஏற்று நடத்தும் நிறுவனங்களிடம் நேரடியாகப் பேரம் பேசப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள்.

2015 ஜூலை 29-ஆம் தேதி 1எம்.டி.பி. புலன் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது கோலாலம்பூர் புக்கிட் அமான் தலைமையகக் கட்டடத்தில் 10-ஆவது மாடியில் தீப்பற்றிக் கொண்டது. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

அதே காலக் கட்டத்தில் கோலாலம்பூர் ஜாலான் இம்பி லோயாட் பிளாசாவில் தேவையற்ற இனக்கலவரப் புகைச்சல். இதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். 1எம்.டி.பி. புலன் விசாரணையைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு புகைச்சலைத் தூண்டிவிட்டு இருக்கலாம் எனும் கோணத்திலும் ஆராய்ந்து வருகிறார்கள். 




அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கங்கள்; அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்; மேலும் பல வகையான மாக்கியவலி அரசியல் நகர்வுகளும் நஜீப்பைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றன.

1எம்.டி.பி.யின் கோடிக் கணக்கான பண மோசடிகள் அனைத்துமே ஒரே ஒரு மனிதரையே சுட்டிக் காட்டுகின்றன. 1எம்.டி.பி.யின் அனைத்துப் பணப் பரிவர்த்தனை ஆவணங்களிலும் நஜீப் தான் கையொப்பம் போட்டு இருக்கிறார். அந்த நிறுவனத்தை உருவாக்கியதே அவர் தான்.

1எம்.டி.பி.க்கு நஜீப் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இல்லை என்று அவர் மறுக்க முடியாது. அவருடைய கையொப்பம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. 1எம்.டி.பி.யின் எல்லா வர்த்தக உடன்படிக்கையிலும் நஜீப்பின் கையொப்பங்கள் உள்ளன. ஆகவே 1எம்.டி.பி.க்கு நஜீப் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரதமர் துன் மகாதீர் கூறுகிறார். 




ரோஸ்மாவிடமும் 1எம்.டி.பி. பணம் நிறையவே போய் இருக்கிறது. ஆனால் 1எம்.டி.பி. ஆவணங்களைக் கொண்டு அவர் மீது குற்றம் சாட்டுவது சற்று சிரமமே. ஏன் என்றால் ரோஸ்மா எந்தப் பத்திரத்திலும் கையொப்பம் வைக்கவில்லை. எல்லாப் பத்திரங்களிலும் நஜீப் தான் கையொப்பம் வைத்து இருக்கிறார். சரி.

நஜீப்பின் மனைவி ரோஸ்மா. இவரின் ஆடம்பர வாழ்க்கையில் அழகு ஆடம்பர மருத்துவச் சிகிச்சைகள் வருகின்றன. என்றைக்குமே அவர் அழகாக இருக்க வேண்டும்; இளமையாக இருக்க வேண்டும்; புருணை சுல்தானின் மனைவி போல வாழ வேண்டும் என்று ஆசைப் பட்டவர்.

மலேசிய மக்கள் ஜி.எஸ்.டி. வரிப் பணத்தில் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் போது ரோஸ்மாவின் சிகை அலங்காரத்திற்கு 1200 ரிங்கிட் செலவானது என்று அவரே வருத்தப்பட்டுக் கொண்டார். 2015 பிப்ரவரி 25-ஆம் தேதி ஸ்டார் பத்திரிகையில் வெளிவந்த செய்தி. 




அவர் சொல்கிறார்: நாம் எல்லாம் வருமானம் இல்லாத குடும்ப மாதுகள். என் தலைமுடிக்கு கறுப்பு மை அடிக்க ஒரு சிகை அலங்காரியைக் கூப்பிட்டேன். வழக்கத்திற்கு மாறாக 1200 ரிங்கிட் கேட்டாள். என்ன செய்வது. வேறு வழி இல்லாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து அனுப்பினேன் என்றார். இது எப்படி இருக்கு.

எந்த இடத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல் பேசி அவரே மாட்டிக் கொண்டார். சமூக ஊடகங்களில் கிண்டல் அடிக்கப்பட்ட செய்தி.  பலரும் அறிந்த செய்தி.  

பொதுத் தேர்தலுக்கு முன்னர் கிடப்பில் கிடந்த ரோஸ்மாவின் கோப்புகளை எல்லாம் இப்போது தூசு தட்டி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பைலைத் திறந்ததும் ஒரு பூதம் கிளம்புகிறது. 




’நான்தான் ஜீபூம்பா. பல வருசமா இந்த அறையிலே அடைஞ்சி கிடக்கேன். இதைத் திறந்து என்னை வெளிய விட்டதுக்கு நன்றி. என்ன வேணும்னு கேளுங்க. செஞ்சிட்டு போயிடறேன்’. அதைக் கேட்டு மற்ற மற்ற அறைகளில் உள்ள ஜீபூம்பா பூதங்களும் கர்ஜிக்கத் தொடங்கி விட்டன.

ரோசாப்பூ ரோஸ்மாவின் கதைக்கு வருவோம். வைர நகைளின் மீது ஈர்ப்பு ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பைகளின் மீது ஈர்ப்பு; லண்டன் ஹரோட்ஸ் அலங்கார மாளிகையில் ஈர்ப்பு; ஹவாய் சானல் ஆடைகளில் ஈர்ப்பு; ஹாங்காங் நகைக் கடைகளில் ஈர்ப்பு; நியூயார்க் கறுப்புக் கண்ணாடிகளில் மீது ஈர்ப்பு; பாரிஸ் காலணிகளில் ஈர்ப்பு; இப்படி எக்கச்சக்கமான ஈர்ப்புகள்.

2008-ஆம் ஆண்டில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரையில் ஆடை ஆபரணங்களுக்காக உலகம் பூராவும் சுற்றி சுற்றி வந்து இருக்கிறார். இவருடைய பயணங்களுக்குத் தனியாக விமானங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. அந்த விமானங்களை வாடகைக்குப் பேசி விட்டது நம்ப மன்மத ராசா ஜோலோ தான். 




ஜோலோ எங்கோ ஒரு கடலில் இக்குனிமிட்டி சொகுசுக் கப்பலில் சொப்பனம் கண்டு கொண்டு இருப்பார். அப்படியே கைப்பேசியில் பேசுவார். ரோஸ்மாவை ஏற்றிச் செல்ல ஒரு விமானம் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்குப் பறந்து வரும். அதில் ஏறும் ராசாத்தி பாரிஸ் நகரில் போய் இறங்குவார். அங்கே அவருக்காக நாலைந்து சொகுசுக் கார்கள் காத்து நிற்கும்.

இப்படித்தான் உலகம் பூராவும் சுற்றி வந்து இருக்கிறார். இப்போது வீட்டுக்கு உள்ளேயே பொம்மை விமானங்களைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறார். பாவம் அவர். நாட்டை விட்டுத் தான் வெளியே போக முடியாதே. அப்புறம் என்னதான் செய்வது? 




மலேசிய மக்களின் பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள் நிறைய பேர். அவர்களுக்கு பார்ப்பது எல்லாமே ஜுஜுபி. ’ஒன்றும் தெரியாத பாப்பா போட்டு கிட்டாளாம் தாப்பா’ என்று சொல்வார்கள். இப்போது பாருங்கள் ஒன்றுமே தெரியாதது மாதிரி நடிப்பிலே நவரசங்கள். ம்ம்ம்… அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். இது அப்போதைய பழமொழி. இனிவரும் காலங்களில் தெய்வம் நிறகாமலேயே கொல்லும். பாருங்களேன்.

வெறும் ஆடை அணிகலன்களுக்கு மட்டும் ரோஸ்மா 25 மில்லியன் ரிங்கிட் செலவு செய்து இருக்கிறார். அவர் செய்த செலவுகளுக்குச் சான்றாக ஆவணங்கள் கிடைத்து உள்ளன. வெறும் ஆடை அணிகலன்களுக்கு மட்டும் தான் 25 மில்லியன் ரிங்கிட். நகை நட்டுகளை இதில் சேர்க்கவில்லை.

இந்தச் செய்திகள் எல்லாம் உலகம் முழுமைக்கும் தெரிந்துவிட்ட செய்தி. உள்நாட்டு ஆங்கில மலாய் சீனப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள். எல்லாரும் படித்த செய்திகள். அதனால் அவற்றைப் பற்றி எழுதுவதற்கு நமக்கு அச்சம் இல்லை.


முதிர்ச்சி எதிர்ப்பு மாத்திரைகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. ஆங்கிலத்தில் எண்டி ஏஜிங் என்று சொல்வார்கள். அதாவது இந்த முதிர்ச்சி எதிர்ப்பு மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால் உடல் முதிர்ச்சி குறையுமாம். பண வசதி உள்ளவர்கள் அந்த மாத்திரைகளுக்குப் பணத்தை பணம் என்று பார்க்காமல் இறைக்கிறார்களாம்.

ஆனால் உண்மையில் அப்படி எல்லாம் இல்லை. அது எல்லாம் வணிகத் தந்திரம் என்று மருத்துவர்களே சொல்கிறார்கள். அதோடு அந்த மாத்திரைகளை அமெரிக்காவில தடை செய்து விட்டார்கள். இருந்தாலும் நம்ப ரோஸ்மா அண்ட் கோ வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறார்கள். 1590 பாட்டில்கள் கணக்கில் வருகின்றன.

எப்போதுமே இரண்டு செட் மாத்திரைகள் வாங்கி இருக்கிறார்கள். ஒரு செட் ரோஸ்மாவிற்கு இன்னொரு செட் முன்னாள் பிக் பாஸ் தலைவருக்கு. புள்ளி விவரங்கள் கிடைத்து உள்ளன. அவற்றின் விலை 12 இலட்சம் ரிங்கிட். அமெரிக்காவில் இருந்து வாங்கப் பட்டவை. மருந்தின் பெயர்

External Plant Serum Food Application based softgel GH-9 Honey and Honey Food GH-9 Soft Gel


ரோசாப்பூ கதைகள் நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. THE Malaysian First Lady’s $6 billion shopping spree is over, with police seizing 72 suitcases with jewellery, cash and handbags as a corruption probe begins - https://www.news.com.au/news/partys-over-for-malaysias-diamond-obsessed-first-lady/news-story/66165ae2488e0cc7678bea7f992090f0

2. Datin Seri Rosmah Mansor, wife of former prime minister Datuk Seri Najib Razak, allegedly bought over RM1 million worth of anti-ageing products with funds linked to 1MDB - https://www.nst.com.my/news/exclusive/2018/09/412383/exclusive-rosmah-be-charged-soon

3. 1MDB scandal: A timeline - https://www.channelnewsasia.com/news/asia/1mdb-scandal-a-timeline-10254406

4. US to seize £32 million Belgravia townhouse in Malaysian fraud probe - https://www.standard.co.uk/news/crime/us-to-seize-32-million-belgravia-townhouse-in-malaysian-fraud-probe-a3301256.html

5. Rosmah hired Emirate’s Executive Airbus A319 private jet RM86.4 million - http://www.financetwitter.com/2016/06/take-a-tour-inside-emirates-airbus-a319-that-rosmah-took-for-her-cheap-award.html