மலேசிய இசை உலகில் எலிகேட்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இசை உலகில் எலிகேட்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 நவம்பர் 2019

மலேசிய இசை உலகில் எலிகேட்ஸ்

1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய இசை உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள். மலேசியாவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பூபாளம் பாடியவர்கள். அவர்களின் பாடல்கள் அனைத்துமே மலேசிய மண்ணில் சாகாவரம் பெற்றவை. ஊழியூழி காலத்திற்கும் உன்னதம் பேசும் உணர்ச்சிமிக்க பாடல்கள்.



Andainya Aku Pergi Dulu Sebelum Mu எனும் பாடலை உங்களால் மறக்க முடியுமா. Sampaikan Salam எனும் இந்தப் பாடலை உங்களால் மறக்க முடியுமா. அல்லது Sekuntum Mawar Merah எனும் பாடலையாவது மறக்க முடியுமா. மறக்க முடியாத பாடல்கள்.

மறக்கத் தான் மனம் வருமா. முடியவே முடியாதுங்க. நெஞ்சைப் பிழிந்து எடுக்கும் வரிகள். கண்களில் கண்ணீர் வர வழைக்கும் வரிகள். அந்தப் பாடல்களைப் பாடியவர் எலிகேட்ஸ் லோகா.

நம் மலேசிய மைந்தர்களை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டுவோம். எதிர்காலச் சந்ததியினர் இவர்களை எல்லாம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.




எலிகேட்ஸ் (Alleycats) 1969-ஆம் ஆண்டில் பினாங்கில் உருவான இசைக்குழு. 1970-ஆம் ஆண்டில் பிரபலமானது. மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த இசைக்குழு. இருந்தாலும் ஹாங்காங் நகரில் தான் இவர்களின் புகழ் உச்சம் பார்த்தது.

இசைக்குழு உறுப்பினர்களில் மூத்தவர் டேவிட் ஆறுமுகம். இவரின் தம்பி லோகநாதன் ஆறுமுகம். மற்றொரு தம்பி சண்முகம் ஆறுமுகம். இவர் கித்தார் கலைஞர். தவிர செஸ்டர் அந்தோனி பாசரெல்லா என்பவர் சாக்ஸபோன் கலைஞர். டான் சின் ஹாக் என்பவர் மேளம் வாசித்தார். எலிகேட்ஸின் பெரும்பாலான பாடல்களை எழுதியவர் மலேசியப் புகழ் கவிஞர் எம்.நாசிர்.

இவர்களின் முதல் இசைத்தட்டு ’தெரிமா காசே’ (Terima Kasih). சிங்கப்பூரில் வெளியானது. மொத்தம் 29 இசைத் தட்டுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அவற்றில் பல தங்கப் பரிசுகள் பெற்றவை. மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற பாடல்கள்.




மலேசிய இசைத் துறையின் வளர்ச்சிக்கு இவர்களின் பங்கு அளப்பரியது. இன்றும் சரி இனி என்றும் சரி; மலேசிய பாப் இசைக் குழுக்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக எலிகேட்ஸ் புகழ்பெற்று விளங்கும். இந்த இசைக்குழு பல விருதுகளையும் வென்று உள்ளது.

பேஸ்புக் ஊடகத்தில் எலிகேட்ஸ் இசைக் கலைஞர்களைப் பற்றி பலரும் கருத்துகள் தெரிவித்து உள்ளனர். அன்பர் தனசேகரன் ரெங்கசாமி சொல்கிறார்: ஒரு காலக் கட்டத்தில் மலாய்ப் பாடல் உலகத்தைத் தங்கள் கைவசம் வைத்து இருந்தனர்.

பெரும் மலாய் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இசைக் குழுவாகத் திகழ்ந்தனர். அந்த நாளில் லோகா அவர்கள் பாடிய "பசிக்கு சோறுமில்லை படுக்க பாயுமில்லை" எனும் தமிழ்ப் பாடலும் மிகவும் பிரசித்தம். எலிபூனை இசைக் குழுவினரின் புகழ் உச்சம் தொட்ட காலம் அது என்று சொல்கிறார்.

மலேசியாவில் எல்லா இனத்தவரும் விரும்பிய இசை. நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள். எலிகேட்ஸ் இசைக் கலைஞர்கள் தனித்துவம் பெற்று விளங்கினார்கள். ஒரு புதிய மலேசியத்தை தந்தவர்கள். யார்தான் அவர்களை மறக்க முடியும் என்கிறார் அன்பர் பெரியசாமி ராமசாமி.

மலேசிய வானொலி பிரிவில் பணியாற்றயவர் வரிசை ஒமார். அந்தக் காலத்து வானொலிப் பிரபலம். கணீர் குரல். அவர் எலிகேட்ஸ் பற்றி தன் அனுபவங்களைச் சொல்கிறார். நீங்களும் கேளுங்கள்.




என் பால்ய தோழன் எலிகேட்ஸ் டேவிட். அவரைப் பற்றிய பழைய நினைவுகள்.

1968-ஆம் ஆண்டு மலேசிய வானொலி பினாங்கு பிரிவில் இணைந்து பணியாற்றிய நேரம். அந்தக் கால கட்டத்தில் எலிகேட்ஸ் (சந்துப்பூனைகள்) இசைக்குழு மிகவும் புகழ் பெற்றது.  ஆறுமுகம் - மீனாம்பாள் அம்மையாரின் மூன்று குமாரர்களான டேவிட், லோகா மற்றும் இளவலுடன் இன்னும் இருவர்.

இவர்களின் தாயார் மீனாம்பாள் ஆறுமுகம் பினாங்கு ம.இ.கா. மாதர் பகுதி தலைவியாக இருந்தவர். கர்நாடகப் பாடல்களில் புலமை பெற்றவர். இவர்களின் தந்தையார் கெலாவி ம.இ.கா. கிளையின் தலைவராக இருந்தவர்.

எலிகேட்ஸ் ஐவர் கொண்ட குழு. நீண்ட காலம் இசையுலகில் கொடி கட்டிப் பறந்தது.

இவர்களை நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாகச் சந்தித்தது பினாங்கு புக்கிட் மேராவில். அங்கே ஒரு விடுதியில் எலிகேட்ஸ் டேவிட் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள்.

ஒரு நிகழ்ச்சியின் இடைவேளையில் என்னைக் கண்டதும் வந்து கட்டித் தழுவிக் கொண்டார் டேவிட்! இவரின் அடையாளமே ஆப்பிரிக்க முடிதான் (Afro Hair). பரந்த... விரிந்த முடி... மறக்க முடியுமா.

பினாங்கில் ஒருமுறை டேவிட் தலைமையில் நடந்த ஒரு நிகழ்வில் அறிவிப்பாளனாகப் பணியாற்றிய போது தான் எனக்கு டேவிட் ஆறுமுகம் அறிமுகமானார்.




அதன் பிறகு பல ஊர்களில் பற்பல நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்வோம். ஓர் இந்தியர் சார்ந்த ஆங்கில/ மலாய்/ தமிழ் இசைக்குழு தென்கிழக்காசியா முழுதும் புகழ் பெற்றது என்றால் அது எலிகேட்ஸ் மட்டுமே!

மற்றும் ஓர் இசைக்குழு ராஜாமோனி. (Rajamony Island Rythemics). இவர்களின் ஹவாய் கித்தார் இசை வட மலாயாவில் புகழ் பெற்று விளங்கியது. ஆனாலும் அவர்களால் எலிகேஸின் உயரத்தை எட்ட இயலவில்லை.

டேவிட் ஆறுமுகம் பற்றிய மற்றும் ஒரு சுவைத் தகவல். அவர் பாடி முடித்ததும் அவரது நன்றி சொல்லும் பாணியே அலாதியானது. ’தெரிமா காஸ்ஸ்ஸ்ஸே’ என்று அழுத்தத்துடன், சற்றே இழுத்து உயர்த் தொனியில் சொல்லுவார். அது அவரது தனித்துவமாகும். இவர்கள் எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாதவர்கள் என்று சொல்கிறார் வரிசை ஒமார்.

இவர்களைப் பற்றிய தகவல்களை ஆவணப் படுத்த வேண்டும். அந்த வரிசையில் இன்னும் நம் தமிழ் பிள்ளைகள் சிலரின் சாதனைகளை பட்டியலிடலாம்.

அந்த வரிசையில்:

பூப்பந்து... பஞ்ச் குணாளன் என்ற பஞ்சாட்சரம் குணாளன்.

ஹாக்கி: ஷண்முகநாதன்.

பெருநடை: சுப்ரமணியம்.

ஓட்டம்: வி. அங்கம்மா.

ஸ்குவாஷ்: நிக்கோல் டேவிட்; சிவ சங்கரி.

காற்பந்து: ஸ்பைடர் மேன் ஆறுமுகம்.

சைக்கிளிங்: குமரேசன்.

கலப்பு தற்காப்பு கலை: தானி.

பாடகர்களில் நமது நாட்டில் இசை தட்டில் பாடிய முதல் ஆண் பாடகர் டி.எம். ராமையா. (போகும் பாதை பொல்லாத பாதை). அடுத்து ரெ.ச. என்கிற ரெ. சண்முகம். இவர் ஒரு பாடகர், ஓர் இசையமைப்பாளர். ஒரு பாடலாசிரியர். ஒரு நடிகர்.

அடுத்து இசைத் தென்றல் என். மாரியப்பன். அவரின் மகன் துருவன். அடுத்து சந்திரா சண்முகம் (கதீஜா). அடுத்து வி. சாரங்கபாணி.

நமது தமிழ் பாடகர்களில் மலாய் இசை உலகில் புகழ் பெற்றவர்கள் வி. சாரங்கபாணி, மற்றும் டி.ஜே. டேவ் (டத்தோ). முன்னாள் தபால்காரரான இவர் மலாய் ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்திக் கொண்டவர்.

அது போலவே மலாய் பாடகிகளில் தமிழில் பாடி புகழ் பெற்றவர் குமாரி ஜைத்தூன். இவர் நம் தமிழ் பாடகர்களுடன் இணைந்து இரு குரலிசையும் பாடி இருப்பது சிறப்பு.

நமது உள் நாட்டு பாடகர்களில் சகல கலா வல்லவர் அண்ணன் ரெ.ச. இவரின் புகழ் பெற்ற பாடல் "செந்தாழம் பூவாய் செவ்வாழை மெருகாய்... வந்தாடும் பாவை எதிர் நின்றாள்!

கருத்துகளுக்கு நன்றிங்க வரிசை ஒமார்.




உண்மையிலேயே எலிகேட்ஸ் மலேசிய இசை உலகில் அனைவரையும் கவர்ந்தவர்கள். ஒரு வகையான காந்தர்வ இசையாற்றல் அவர்களிடம் இருந்தது. அவர்களின் பாடல்களை முணுமுணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.  பல்லாயிரம் மலேசிய நெஞங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மற்றும் ஓர் அன்பர் நாராயணன் கிருஷ்ணன். அவர் தன் அனுபவத்தைச் சொல்கிறார்.

2001 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஷா ஆலாம் ஹோலிடெ வில்லா எனு தங்கும் விடுதியில் கல்வி அமைச்சின் பணி நிமித்தம் ஒரு வார காலம் தங்கி இருந்தேன். ஒரு மாலைப் பொழுது. வெளியே அடைமழை.

நான் சென்று கொண்டு இருந்த லிப்டில் லோகா குடையுடன் நுழைந்தார். ’ஹாய்’ என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். அவ்வளவு மென்மையான கரங்களை இதுவரை நான் பார்த்தது கிடையாது. பூவிலும் மென்மையான கரங்கள்.

புகைப்படங்களில் நான் கண்ட எலிகேட்ஸ்சை விட உருவத்தில் அவர் சராசரியைவிட குள்ளமாகவே இருந்தார். ஒரு வேளை அவரின் ஆப்பிரிக்க முடி நமக்கு பெரிதாகக் காட்டி இருக்கலாம். விடுதியில் நாங்கள் தான் இசை வாசிக்கிறோம். அவசியம் வாருங்கள் என்றார்.

என்ன நடக்கிறது என்று பிடிபடுவதற்குள் அவரது தளத்தில் இறங்கி விட்டார். எங்களுக்கு இரவிலும் பயிற்சி இருந்ததால் இசை விடுதிக்குச் செல்ல இயலவில்லை. அன்னார் மரித்த பின் வந்த செய்திகள் அவரை இன்னும் பிருமாண்டமாகக் காண்பித்தன.




நான் ஏதும் பேசியதாக நினைவு இல்லை. அதிகப் பட்சம் ஒரு புன்னகை தான். ஒரு மின்னலைப் போல் அந்தத் தருணம் கடந்து போனது. ஆனால் ஓர் உலகத் தரம் வாய்ந்த ரோக் ஸ்டார் என் முன் தோன்றி மறைந்த உணர்வே ஏற்பட்டது. நன்றிங்க நாராயணன் கிருஷ்ணன்.

அடுத்து மேலும் ஓர் அன்பர் ராஜேந்திரன் அண்ணாமலை. ஓர் அரிய தகவலையும் கூறி இருக்கிறார். சுவாரா கெகாசே (Suara Kakasih) எனும் மலாய் பாடல் மலேசிய இசை உலகைத் திருப்பிப் போட்ட ஒரு பாடல். அந்த நாளில் இந்தப் பாடலைப் பாடிய அலிகேட்ஸ் குழுவினர் ஆசிய பாட்டு உலகின் சிகரத்தைத் தொட்டனர்.

மலாய் ரசிகர்கள் மனதை இசையால் வென்று எடுத்த பாடல். ஆனால் இந்தப் பாடலை எழுதி இசை அமைத்தவர் பதினாறு வயது நிரம்பாத ஓர் இந்திய சிறுவன் துளசி ஜெயராமன் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்.

கித்தார் கருவியில் வரும் இசையை மீட்டிக் கொண்டு இரவு முழுதும் கனவுகளில் மிதந்த வண்ணம் இருந்தார் அந்தச் சிறுவன். பள்ளிப் பாடத்தில் அவருக்கு ஆர்வம் குறைந்து போனது. தினமும் பள்ளி விட்டதும் கிதாரும் கையுமாக திரங்கானு, டுங்குன் கடற்கரையில் வீசும் காற்றுடன் கைகோர்த்து நடந்து கொண்டு இருந்தார்.

அச்சிறுவனின் கற்பனையில் கருத்தரித்த வரிகள் தான் சுவாரா கெகாசே.

ஓர் இசை நிறுவனத்தின் தொடர்பு அந்தச் சிறுவனுக்குக் கிடைத்தது. பாட்டு வரிகள் அழகாய் இருந்தது. மெட்டும் சூப்பராய் இருந்தது. இசை நிறுவனம் இந்தப் பாடலை வாங்கிக் கொள்ள சம்மதித்தது. ஒரு பத்திரத்தில் கையெழுத்துப் போடச் சொன்னது.

சின்னப் பையனுக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு வீடு திரும்பினான். சில மாதங்களில் அலிகேட்ஸ் குரலில் அப்பாடல் மலாய் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த ஆண்டு தென்கிழக்காசியாவின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப் பட்டது.

பாடலில் பையனின் பெயர் வந்து விட்டது. ஆனால் கைக்குப் பணம் வரவில்லையே. இசை நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டான். பத்திரத்தைக் காட்டினார்கள். இரண்டு வெள்ளி சன்மானத்திற்கு டுங்குன், துளசி ஜெயராமன் தன் பாடலை இசை நிறுவன உபயோகத்திற்கு விற்று விட்டார் என்று சின்ன எழுத்தில் எழுதப் பட்டு இருப்பதைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

ஒரே ஓர் ஒற்றை வரியில் அந்தச் சிறுவனுக்குச் சேர வேண்டிய புகழ், எதிர்காலம் அனைத்தும் சூறையாடப்பட்டு விட்டது. சின்னப் பையன். விபரம் அறியாத வயது. பெற்றோர் ஆதரவு வேறு இல்லை. பாவம் துளசி ஜெயராமன் என்று வேதனைப் படுகிறார் ராஜேந்திரன் அண்ணாமலை. எனக்கும் பெரிய வேதனைங்க.

எலிகேட்ஸின் மூத்த பாடகர் லோகநாதன் ஆறுமுகம். லோகா என்று அன்பாக அழைக்கப் பட்டவர். 2007 ஜூன் 4-ஆம் தேதி, பினாங்கு மவுண்ட் மிரியம் மருத்துவமனையில், தன் 53-ஆவது வயதில் காலமானார். நுரையீரல் புற்றுநோய். அதிகமாகச் சிகரெட் பிடித்தது ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது.

ஆரம்ப காலங்களில் லோகாவிற்குத் தொடர்ந்தால் போல இருமல். சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். பின்னர் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை செய்தார்கள். நிறைய செலவு செய்தார்கள். எட்டு மாதங்கள் போராட்டம். காப்பாற்ற முடியவில்லை.

மலேசிய இசை உலகிற்கு லோகா ஆற்றிய சேவைகளுக்காக, 2008-ஆம் ஆண்டு பகாங் சுல்தான் அவருக்கு டத்தோ விருது (Darjah Indera Mahkota Pahang (DIMP) வழங்கி சிறப்பு செய்தார். அந்த விருதை அவருடைய மனைவி சூசன் லோவி (Susan Lovie Boudville) பெற்றுக் கொண்டார்.

லோகாவிற்கு இரு பிள்ளைகள். மூத்தவர் மகன் விக்னேஸ்வரன். இளையவர் மகள் பிரியாதர்சினி.

ஒரு வேதனையான செய்தி. 2012-ஆம் ஆண்டில் பினாங்கு தஞ்சோங் பூஙாவில் இருந்த எலிகேட்ஸ் லோகாவின் இல்லம் தீப்பற்றி எரிந்து போனது. லோகாவின் பரிசுப் பொருட்கள் நிறையவே எரிந்து போயின.

எலிகேட்ஸ் லோகா பிறப்பு; 15 ஜுன் 1953. இறப்பு: 4 ஜுன் 2007

மலேசிய மண்ணில் மறக்க முடியாத மைந்தர்களில் ஒருவர் எலிகெட்ஸ் லோகா. நான் இவருடைய தீவிர ரசிகன். வாழ்க அவர் புகழ். வாழ்க அவர் பெருமை.