மலாயா தமிழர்கள் கறுப்புத் தோல் சமூகமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயா தமிழர்கள் கறுப்புத் தோல் சமூகமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 ஜனவரி 2020

மலாயா தமிழர்கள் கறுப்புத் தோல் சமூகமா?

பெர்லிஸ் பல்கலைக்கழகக் கேள்வித் தாள் சர்ச்சை - 1

தமிழ் மலர் - 01.01.2020

பல கலைகளைச் சொல்லித் தரும் கழகம் பல்கலைக்கழகம். பல இனங்களின் சுவடுகளை வடித்துத் தரும் கழகம் பல்கலைக்கழகம். பல மொழிகளை ஆய்வு செய்து தரும் கழகம் பல்கலைக்கழகம். பல இனங்களின் வரலாறுகளைத் தொகுத்துத் தரும் கழகம் பல்கலைக்கழகம். 



அந்த வகையில் பல்கலைக்கழகம் என்பது உன்னதமான ஒரு கல்விக் கலசம். உயர்வான ஒரு கல்விக் கோபுரம். உத்தமான கல்விப் பேரிகை.

அப்படிப்பட்ட கல்விக் கழகத்தில் ஆக்க பூர்வமான எண்ணங்களுக்கு முதலிடம் வழங்க வேண்டும். அறிவு சார்ந்த கேள்விகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும். அழிவிற்கும் அசிங்கத்திற்கும் அழைத்துச் செல்லும் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

ஓர் இனத்தையும் ஒரு மொழியையும்; உள் நோக்கதோடு கொச்சைப் படுத்தும் பதிவுகளுக்கு மரியாதை செய்யக் கூடாது. ஆனால் செய்கிறார்கள்; செய்து கொண்டும் வருகிறார்கள். இந்த மாதிரி மனிதர்களை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.  


தமிழ் மலர் - 01.01.2020

ஒரே வார்த்தையில் சொல்கிறேன். இவர்களைச் சனியிலும் சேர்க்க முடியாது. ராகு கேதுவிலும் சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த மாதிரி மனிதர்களைப் பார்த்ததும் சனி பகவானுக்கே உதறல் எடுத்துவிடும். என்னையும் மிஞ்சிய எண்ணங்களா... வேண்டாம் சாமி என்று துண்டைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடியே போய் விடுவார்.

பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் 29.12.2019-ஆம் தேதி மாணவர்களுக்கான சோதனை. அதில் ஒரு கேள்வித் தாள் UUW 235 - 12. அதில் ஒரு கேள்வி.

கறுப்புத் தோலைக் கொண்டவர்களை மலாயா, இந்தோனேசியா போன்ற ஆசிய வட்டாரங்களில் காணலாம். இவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கேள்வி. ஒரு பல்கலைkகழகத்தில் கேட்கப்படும் கேள்வி.

அதற்கு முன் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.



மலேசியாவில் மொத்தம் 64 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 20 அரசாங்கப் பல்கலைக்கழகங்கள். 37 தனியார் பல்கலைக்கழகங்கள். 7 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள். 500-க்கும் மேற்பட்ட உயர்க்கல்விக் கழகங்கள். இவற்றில் 1,270,000 மாணவர்கள் உயர்க்கல்வி பெற்று வருகிறார்கள். இது 2018 - 2019 புள்ளிவிவரங்கள்.

(சான்று: https://www.easyuni.my/en/malaysia/)

அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் பட்டியல். அவை எங்கே எப்போது உருவாக்கப் பட்டன எனும் விவரங்கள்:

1. மலாயா பல்கலைக்கழகம் (Universiti Malaya (UM); 01-01-1962      - கோலாலம்பூர்.

2. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia (USM)     1969 – பினாங்கு.

3. மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் (Universiti Kebangsaan Malaysia (UKM); 18-05-1970 – சிலாங்கூர்.

4. மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (Universiti Putra Malaysia (UPM); 04-10-1971- சிலாங்கூர்.

5. மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Universiti Teknologi Malaysia (UTM); 01-04-1975 – ஜொகூர்.

6. மாரா தொழிநுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA (UiTM);      26-08-1999 – சிலாங்கூர்.

7. மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (Universiti Islam Antarabangsa Malaysia (UIAM); 10-05-1983 – சிலாங்கூர்.

8. மலேசியா உத்தாரா பல்கலைக்கழகம் (Universiti Utara Malaysia (UUM); 16-02-1984 – கெடா.

9. மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Sarawak (UNIMAS); 24-12-1992 – சரவாக்.

10. மலேசிய சபா பல்கலைக்கழகம் (Universiti Malaysia Sabah (UMS); 24-11-1994 – சபா.

11. சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (Universiti Pendidikan Sultan Idris (UPSI); 24-02-1997 – பேராக்.

12. மலேசியா இஸ்லாம் அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Islam Malaysia (USIM); 13-03-1998 - நெகிரி செம்பிலான்.

13. மலேசியா திரங்கானு பல்கலைக்கழகம் (Universiti Malaysia Terengganu (UMT); 15-07-1999 – திரங்கானு.

14. மலேசியா துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (Universiti Tun Hussein Onn Malaysia (UTHM); 30-09-2000 – ஜொகூர்.

15. மலேசியா மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka (UTeM); 01-12-2000 – மலாக்கா.

16. மலேசியா பகாங் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Pahang (UMP); 16-02-2002 – பகாங்.

17. மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Perlis (UniMAP); 02-05-2002 – பெர்லிஸ்.

18. சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் (Sultan Zainal Abidin (UniSZA); 01-01-2006 – திரங்கானு.

19. மலேசியா கிளாந்தான் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Kelantan (UMK); 14-06-2006 – கிளாந்தான்.

20. மலேசிய தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகம் (Universiti Pertahanan Nasional Malaysia (UPNM); 10-11-2006 – கோலாலம்பூர்.

இந்தப் பட்டியலில் 17-ஆவதாக ஒரு பல்கலைக்கழகம் வருகிறது. கவனித்தீர்களா. இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் அண்மைய காலங்களில் சற்றே சர்ச்சைகள்.


இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சின்ன சர்ச்சை. ஸம்ரி விநோத் எனும் சமயப் பேச்சாளர் (Muhammad Zamri Vinoth Kalimuthu), பெர்லிஸ் மாநிலத்தில், மேடைப் பிரசாரங்களின் போது இந்து சமயத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை.

அதே சமயத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்து சமய மாணவர்களிடையே இந்து சமயத்தைப் பற்றி தவறாகக் கருத்துச் சொன்னதாகவும் சர்ச்சை. அது ஒரு வகையாக அப்படியே அமைதியாகிப் போனது.

இப்போது மிக அண்மையில் மற்றும் ஒரு சர்ச்சை. பல்கலைக்கழகக் கேள்வித் தாள் (Ethnic Relations Course - UUW 235 - 12). அதில் ஒரு கேள்வி இப்படி வருகிறது.

கறுப்புத் தோலைக் கொண்டவர்கள். இவர்களை மலாயா, இந்தோனேசியா போன்ற ஆசிய வட்டாரங்களில் காணலாம். இவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்?

A. நிக்ரோக்கள்
B. சிவப்பு இந்தியர்கள்
C. இந்தியர்கள்
D. புஷ்மென் (ஆஸ்திரேலியா)

கேள்வித் தாளின் படத்தில் மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளின் படத்தைப் போட்டு இருக்கிறார்கள். தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் உள் நோக்கதோடு அந்தப் படத்தைப் போட்டு இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். 



இது எல்லாம் ஒரு கேள்விங்களா. அதுவும் இப்படி ஒரு கேள்வியைத் தயாரித்து பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சோதனை வைக்கிறார்களே. என்ன சொல்ல? எதைச் சொல்ல?

இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டால் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு எப்படிங்க வளரப் போகுது. எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் விட்டு விட்டு இப்படிப் போய் கேட்கிறார்களே. சே!

இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் எப்படிப்பட்ட அறிவாளியாக இருப்பார்? ஒரு வேளை இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் ஜம்ரி வினோத் என்பவராக இருக்குமோ எனும் கேள்வியும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

தமிழர்கள் கறுப்புத் தோல் கொண்டவர்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காகக் கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்ல முடியுமா அல்லது இந்தியர்கள் என்று சொல்ல முடியுமா. ஏன் மஞ்சள் தோள் சாக்லேட் தோல் தமிழர்கள் இல்லையா.

கேள்வி தயாரித்தவர்களுக்குப் புத்தி எங்கே ஐயா போனது. நல்லா கேட்கலாம் போல இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் இனவாதக் கேள்வி தானே. ஓர் இனத்தைச் சீண்டிப் பார்க்கும் கேள்வி தானே.



புதிதாக அரசாங்கம் வந்ததில் இருந்து நம் இனத்தின் மீது ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலேசிய இந்தியர்களை நிம்மதியாக விட மாட்டார்கள் போல இருக்கிறது.

கல்வி அமைச்சர் எங்கே போய் விட்டார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். என்ன மாதிரியான கேள்வி கேட்டு இருக்கிறார்கள். நடவடிக்கை எடுப்பாரா.

மதபோதகர் ஸக்கீர் நாயக் குறித்து அதே பெர்லிஸ் பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் இடம் பெற்றது. மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஸக்கீர் நாயக் ஓர் உச்ச உருவகம் (icon) என்று அந்தக் கேள்வியில் இடம் பெற்ற வாசகங்கள். 



இதைப் பற்றி கல்வியமைச்சு கண்டு கொள்ளாது என்றும் இது அந்தப் பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட விசயம் என்றும் அறிக்கை விடுத்து அப்படியே  கழன்று கொண்டது. ஆக ஸக்கீர் நாயக் விசயத்தில் கண்டு கொள்ளாத காசுட் ஈத்தாம் புகழ் கல்வி அமைச்சர்; தமிழர்கள் கறுப்புத் தோல் கொண்டவர்கள் எனும் பிரச்சினையில் தலையிடுவார் எனும் நம்பிக்கை பலருக்கும் இல்லை.

நம் தமிழ்ப் பிள்ளைகளின் படத்தைப் போட்டு கறுப்புத் தோலைக் கொண்டவர்கள். எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு இருக்கிறார்கள்.

கறுப்பர்கள் என்பது முன்பு ஆப்பிரிக்க நீக்ரோ மக்களைக் குறிப்பிடும் சொல்லாக இருந்தது. இருந்தாலும் அந்தச் சொல்லை ஐக்கிய நாட்டுச் சபை தடை செய்துவிட்டது. தமிழர்களின் நிறம் தாமிரம் என்பதை மறந்துவிட்டு கேள்வி தயாரித்து இருக்கிறார்கள்.

சின்னபிள்ளைத் தனமான கேள்விகளைக் கேட்டு பல்கலைக்கழக மாணவர்களின் அறிவை மழுங்க அடிக்கிறார்கள். மாணவர்களின் உயர்க்கல்வி அறிவு எப்படிங்க வளரப் போகுது.

ஒரு செருகல். உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படித்து பி.எச்.டி. செய்த மண்ணின் மைந்தர் ஒருவரின் ஆங்கிலக் கட்டுரை ஒன்று அண்மையில் என் பார்வைக்கு வந்தது.

இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்கூட ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பிழை இல்லாமல் எழுதும் காலத்தில் இப்படி ஒரு முனைவரின் கட்டுரையா என்று மிகவும் வேதனைப் பட்டேன்.

அந்த முனைவரின் கட்டுரையில் நிறையவே எழுத்துப் பிழைகள். இலக்கணப் பிழைகள். சொல் தொடர் பிழைகள். வரி அமைப்புப் பிழைகள். ஒரு டாக்டர் எழுதிய கட்டுரையா என்று விக்கித்துப் போனேன்.

திருத்திக் கொடுக்கலாம் எனும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எங்கே திருத்துவது; எப்படி திருத்துவது; எதைத் திருத்துவது. அதற்குப் பதிலாக புதிதாக ஒரு கட்டுரையே எழுதிக் கொடுத்து விடலாம் போல தோன்றியது.

அப்போது என் மனதில் தோன்றிய முதல் நெருடல். இவர் ஒரு விரிவுரையாளர். இவர் எப்படி ஒரு விரிவுரையாளராகப் பணியாற்ற முடியும். அல்லது இவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி கல்வியில் சிறந்து விளங்க முடியும் எனும் நெருடல் தான்.

இப்படி இருந்தால் எப்படி நம் மலேசியப் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடமாக மாற்ற முடியும். இந்த நிலையில் ஆசிய ஐரோப்பிய தனியார் நிறுவனங்களில் எப்படி பேர் போட முடியும். எப்படி அவர்களின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள்.

இந்த நாட்டின் கல்வித் தரம் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதுதான் நிதர்சனமான உண்மை. ஒன்று மட்டும் உறுதி. என்றைக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் தவிர்க்கிறார்களோ அன்றைக்குத் தான் ஒரு நல்ல வழி காண முடியும்.

இல்லை என்றால் நம் நாட்டின் கல்வித் தரம் மிக மோசமாகி விடும். எதிர்காலத் தலைமுறையினர் வெளிநாடுகளில் பேர் போட முடியாத ஓர் அவல நிலையும் ஏற்படலாம்.

மலேசிய இந்தியர் இனம் எப்பேர்ப்பட்ட வேதனைகளையும்; எப்பேர்ப்பட்ட சோதனைகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது.

ஒன்று மட்டும் சொல்வேன். மற்ற ஓர் இனத்தின் ஆதிக்கத்தை நிலநாட்டுவதற்காகத் தமிழர்கள் எனும் சிறுபான்மை இனத்தைப் பகடைக் காயாக மாற்றி வருகிறார்கள். அவ்வளவு தான்.

அடுக்கடுக்கான சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் அவர்கள் தூக்கி வீசி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்.