மலாயாவில் கங்காணி முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலாயாவில் கங்காணி முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஜூன் 2016

மலாயாவில் கங்காணி முறை

திருநெல்வேலியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கிராமம். அதன் பெயர் கீழத்திரு வேங்கடநாதபுரம். அந்த ஊரில் ஒரு கோயில். அதன் பெயர் செங்காணி. சிவப்பு நிலம் என்று பொருள். 

அங்கே இருந்துதான் முதன் முதலாகக் கங்காணி முறை தொடங்கியதாகச் சொல்லப் படுகிறது. அந்த இடத்தில் இருந்து தான் முதன் முதலாக ஆட்கள் மலாயாவுக்குக் கொண்டு வரப் பட்டதாகவும் ஒரு பேச்சு.

Balu Estate Kuala Lumpur 1912
இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியவில்லை. வரலாற்று நூல்களை அலசிப் பார்த்தாகி விட்டது. உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் மலாயா சரித்திரத்தில் கங்காணிகள் நல்ல ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். அது கசக்கிப் பிழியப்பட்ட சஞ்சிக்கூலிகளின் அவல வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதற்கு முன்னால் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களைப் பற்றிய தொடர்ச்சி. 



Batang Kali Estate Ulu Yam 1912
இலங்கையில் மிக அழகான, மிக அரிதான இயற்கை வன வளங்கள் இலங்கை மலையகத்தில் தான் உள்ளன. ஒரு நிமிடம் பிளீஸ்! இலங்கையின் மத்திய மலைப்பகுதியை மலையகம் என்று இலங்கையிலும் அழைகிறார்கள். நாமும் இங்கே தீபகற்ப மலேசியாவை மலையகம் என்றுதான் அழைக்கிறோம். 

ஆக, முரண்பாடுகள் வரலாம் இல்லையா. அதைத் தவிர்க்க இலங்கை மலையகம் எனும் சொல்லையே இங்கே பயன்படுத்துவோம். சரியாக இருக்கும்.  

உலகப் புகழ் பெற்ற சிலோன் டீ

இலங்கை மலையகத்தில் அழகான நீர்வீழ்ச்சிகள், அழகான ஆறுகள், அழகான ஏரிகள் இருக்கின்றன. ஏறி இறங்கும் மலைத்தொடர்கள், குனிந்து நிமிரும் குன்றுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இலங்கையின் மற்ற மற்ற இடங்களைக் காட்டிலும் மாறுபட்ட காலநிலை. வேறுபட்ட வானிலை. இந்த மலையகப் பகுதி ஒரு குளிர்ப் பிரதேசமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சொர்க்கபுரியாவும் விளங்குகின்றது. 


Batu Caves Estate 1912
சிலோன் டீ என்றால் உலகப் புகழ் பெற்றது. அது உங்களுக்கும் தெரியும். ஆக, அது பயிர் செய்யப்படும் இடத்தைப் பார்க்க எல்லோருக்குமே ஆசை வருமா வராதா. அதனால் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இலங்கை மலையகத்தை தேடிச் செல்வதில் நிச்சயமாக அர்த்தம் இருக்குமா இருக்காதா. கண்டிப்பாக இருக்கும்.

இலங்கைத் தீவின் நடு மையப் பகுதியில் இலங்கை மலையகம் அமைந்து இருக்கிறது. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசம். இந்தத் தேயிலைத் தோட்டங்கள் தான் இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு.

இதை எவராலும் மறுதலிக்க முடியாது. தேயிலை மூலமாகக் கிடைக்கும் அந்நிய செலாவணியே இலங்கையின் பிரதான மூலவளமாகவும் அமைகின்றது. ஏறக்குறைய 25 விழுக்காட்டு மூலதனம் அங்கே இருந்து தான் வருகிறது. அதை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இல்லாத ஆட்டங்களை ஆடி வருகிறது. 



Changkat Salak Estate 1912
அந்தக் காசை வைத்துக் கொண்டு தானே தங்களின் இராணுவத்திற்கு ஆயுதத் தளவாடங்களை வாங்குகிறார்கள். தமிழர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் காசை வைத்துக் கொண்டு தானே தமிழர்களையே அழித்து ஒழிக்கிறார்கள். என்னே புத்தி. விட்டால் பெண்டு பிள்ளைங்களையும் அடைமானம் வைத்து விடுவார்கள் போல இருக்கிறது. விடுங்கள்.

இலங்கை மலையகத்தில் இப்போது 842,323 தமிழர்கள் இருக்கிறார்கள். இது 2012 புள்ளிவிவரங்கள். இந்தியாவுக்குத் திரும்பிப் போனவர்கள் ஒரு எட்டு இலட்சம் பேர் இருப்பார்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் பத்துப் பதினைந்து இலட்சம் வரும். ஆக, இப்படி இலங்கையின் பொருளாதார மூலசக்தியாக விளங்கும் மலையகத் தமிழர்களை இலங்கை அரசாங்கம் பெரும்பாலும் புறக்கணித்தே வந்தது. இன்னும் புறக்கணித்து வருகிறது. அப்போது வெள்ளைக்காரர்கள் பிழிந்து எடுத்தார்கள். இப்போது சிங்களவர்கள் உறிஞ்சி எடுக்கிறார்கள். பெரிய வித்தியாசம் எதையும் பார்க்க முடியவில்லை.

லயம் என்கிற தகர டப்பாக்கள்

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், இலங்கை மலையகத் தமிழர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியேதான் இன்னமும் இருக்கிறார்கள். பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இங்கே நம்ப இடத்தில் கொஞ்சம் பரவாயில்லை. 



Damansara Estate Batu Tiga 1912
ஆக, இந்த இரண்டு சஞ்சிக்கூலிகளின் புலம்பெயர்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலச்சில உரிமைப் பிரச்சினைகளைத் தவிர… இங்கே எவ்வளவோ தேவலாம். அங்கே உணவு, உடை உறைவிடம் என்கிற அடிப்படை வசதிகளுக்கே அலைமோதுகிறார்கள். அந்த அடிப்படை வசதிகளையே நிவர்த்தி செய்து கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

“லயம்” என்கிற தகர டப்பாக்கள்தான் அவர்களின் குடியிருப்புகள். அதுவே அவர்களின் வாழ்விடங்களாகவும் அமைகின்றன. மிகவும் குறுகிய அறைகளில் மொத்தக் குடும்பமும் சுருண்டுக் கிடக்கும். அப்படி ஒரு பரிதாப நிலை. எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாதது. அந்த ராமாயணம் இன்னமும் அங்கே தொடர்ந்து காவியம் பேசுகிறது.

அதே சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழினத் தலைவர்களின் வாய்ச் சவடாலும் தொடர்கிறது. நான் எங்கே வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். கத்திக் கதறும் இலங்கை மலையகத் தமிழர்களைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். கரிசனை இல்லாத வெட்கக் கேடுகள்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

சரி நம்ப கங்காணிகளைப் பற்றிய விசயத்திற்கு வருவோம்.

19-ஆம் நூற்றாண்டில் 'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் மலாயா, சுமாத்ரா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளுக்குக் கொண்டு வரப் பட்டனர். செட்டி நாட்டில் இருந்து லேவாதேவித் தொழில் செய்வதற்காக நாட்டுக் கோட்டை நகரத்தார்களும் வந்தனர். 


Kalumpang Estate Bagan Serai 1912


தமிழகக் கரையோரப் பட்டினங்களில் இருந்து தமிழ் முஸ்லிம்கள் வந்தனர். இவர்கள் பினாங்கு, கிள்ளான், சிங்கப்பூர் நகரங்களில் சிறிய அளவில் வர்த்தகங்களைச் செய்தனர்.

தவிர யாழ்ப்பாணம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்தனர். ஆனால், குறைவான எண்ணிக்கை. சீக்கியர்களை மறந்துவிடக் கூடாது. இவர்கள் மலாயாவிற்கு வந்து போலீஸ், இராணுவம், காவல், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டனர். தமிழர்களைப் பொருத்த வரையில் அவர்களில் பெரும்பாலோர் ரப்பர், காபித் தோட்டங்களில் கூலிவேலைகள் செய்தனர்.

ஆங்கிலேயர்களின் கைப் பாவைகள்

இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப் படுத்தினர். ஆங்கிலேயர்களின் கைப் பாவைகளாகப் பிழைத்து வந்த இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு.

 
Kampsey Estate Selangor 2 1912
இவர்கள் இந்தியாவுக்குப் போய் ஆட்களைப் பிடித்து வருவதை, கங்காணி முறை என்று அழைத்தார்கள். அதை இப்படியும் சொல்லலாம். ஆசை வார்த்தைகளை மூலதனமாகப் போட்டு, சாணக்கியச் சாதுர்யமாக வெள்ளந்திகளைக் கவர்ந்து இழுத்து வரும் முறைதான் கங்காணி முறை.

ஆங்கிலேய முதலாளிகள் தங்கள் வேலைகளை எளிமையாக்குவதற்காக, இந்தக் கங்காணி முறையை அமல் படுத்தினார்கள். பணம் கொடுத்து கங்காணிகளைத் தென்னிந்தியாவிற்கு அனுப்பி ஆட்களைக் கொண்டு வருமாறு பணித்தனர். கங்காணிகள் கொண்டு வரும் ஆட்களின் எண்ணிக்கையைப் பொருத்து கங்காணிகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டது.

மழையை நம்பி விவசாயத்தில் ஈடுபட்ட கிராமங்களில் வறுமை நிலவிய காலக்கட்டம். அதுவே கங்காணிகளுக்குச் சாதகாக அமைந்தது. பலப்பல நம்பிக்கைகள். பலப்பல உறுதிகள். அடுக்கடுக்காய் அள்ளித் தெளித்து ஆட்களைப் பிடித்து இழுத்து வந்தனர். அந்த வேலைகளை கங்காணிகள் மிகச் சிறப்பாகவே செய்து வந்தனர்.


Damansara Estate Batu Tiga Selangor 1912

மலாயாவில் எளிதாக சம்பாதிக்கலாம். குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகிவிடலாம் என்கிற கங்காணிகள் ஆசை வார்த்தைகள். அவற்றை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக் கணக்கில் கொண்டு வரப்பட்டனர். இதில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று பாகுபாடுகள் இல்லை.

தமிழர்கள் வரலாற்றில் ரஜுலா கப்பல்

எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த தென் இந்திய மக்களும், சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு கொண்டு வரப்பட்டனர். அப்படி வரும் போது சாதி என்கிற சடங்குச் சம்பிரதாயமும் இறக்குமதி ஆனது.

அப்போது தலை விரித்து ஆடியது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருகிறது. இப்படியும் சொல்லலாஅம். கழுத்து அறுக்கப்பட்டு கசாப்புக் கடைகளில் விற்பனை ஆகிறதாம். ஒரு கிலோ ஒன்றரை வெள்ளியாம். கேள்விப் பட்டேன்.

கங்காணிகளை முழுக்க முழுக்க நம்பிய கிராம மக்கள் கடல் கடந்து பயணம் செய்தார்கள். கப்பலில் பலர் நோய்வாய்ப்பட்டு கப்பலிலேயே இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களின் உடல்களைக் கடலிலேயே வீசி விடுவார்கள். வேறு வழி.

ரஜுலா கப்பலைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. அந்தக் கப்பல் மறைந்து போனாலும், அது விட்டுச் சென்ற சில மந்திரப் புன்னகைகள் மட்டும் இன்னும் நம் வரலாற்றில் இருந்து மறையவில்லை. தமிழர்கள் வரலாற்றில் அது ஒரு ஜீவநாடி. சமயங்களில் ரஜுலா கப்பலைச் சிங்காரச் சிறுக்கியே வித்தாரக் கள்ளியே என்று அழகாகவும் வர்ணனை செய்வார்கள். கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.

கங்காணிகளைக் குறை காண்பது நமது நோக்கம் அல்ல. அவர்களின் அணுகுமுறைகளினால் ஏற்பட்ட சமூகத் தாக்கங்களைப் பார்க்கிறோம். மனிதாபிமான உணர்வுகளைத் தாண்டிய வஞ்சனைகளில் குறை காண்கிறோம். அவர்களின் அதிகாரக் கோப்புகளில் நியாயங்களைத் தேடுகிறோம்.