போர்னியோ கூத்தாய் முல்லைவர்மன் வாரிசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர்னியோ கூத்தாய் முல்லைவர்மன் வாரிசுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஜூலை 2020

போர்னியோ கூத்தாய் முல்லைவர்மன் வாரிசுகள்

தமிழ் மலர் - 21.07.2020 - செவ்வாய்

கூத்தாய் பேரரசு (Kutai Kingdom) போர்னியோ தீவின் களிமந்தான் காடுகளின் கிழக்குக் கரையில் கி.பி. 350-ஆம் ஆண்டுகளில் மையம் கொண்ட பேரரசு. 1670 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய அரசு.



இந்தப் பேரரசை ஆட்சி செய்தவர்களின் வாரிசுகள் இன்றும் போர்னியோ தீவில் உள்ளார்கள். தலைமுறை தலைமுறைகளாகத் தங்களை மன்னர் முல்லைவர்மனின் வாரிசுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் ஒரு முடிசூட்டு விழா நடைபெற்றது. மிக அண்மையில் என்று சொல்லலாம். 2020 ஜூன் மாதம் 6-ஆம் தேதி அந்த முடிசூட்டு விழா. கூத்தாய் முல்லைவர்மன் அரசாங்கம் (Kerajaan Mulawarman) என்று ஒரு புதிய அரசாங்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

முடிசூட்டிக் கொண்டவரின் பெயர் இயான்ஷா ரெக்‌ஷா (Iansyahrechza). தன்னை ராஜா லாபோக்; ராஜா கூத்தாய் முல்லைவர்மன் என்றும் பிரகடனம் செய்து கொண்டார். கூத்தாய் பேரசின்ர பாரம்பரிய கலாச்சார பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று இயான்ஷா ரெக்‌ஷா சொல்கிறார்.

(Iansyahrechza atau disapa Raja Labok, Raja Kutai Mulawarman, di Muara Kaman, Kabupaten Kutai Kertanegara, Kalimantan Timur)



இந்த நிகழ்ச்சி சற்று வித்தியாசமான; சற்று முரண்பாடான நிகழ்ச்சியாகச் சில தரப்பினர் கருதுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கத்தின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியும்; இந்தக் குழுவினர் இருக்கும் இடத்தைப் பற்றியும் விசாரித்து வருவதாகக் காவல்துறை கூறி உள்ளது.

அது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும். போர்னியோ கூத்தாய் பேரரசைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கூத்தாய் பேரரசு என்பது இந்தோனேசிய வரலாற்றில் பண்டைய பேரரசுகளில் ஒன்றாகும். சரியாகச் சொன்னால் இந்தோனேசியாவில் உருவான இரண்டாவது இந்திய மயப் பேரரசு.



இந்தோனேசியாவில் உருவான முதலாவது பேரரசு சாலகநகரப் பேரரசு (Salakanagara Kingdom). மேற்கு ஜாவாவில் கி.பி. 130-ஆம் ஆண்டில் தோன்றிய பேரரசு.

அடுத்ததாகத் தோன்றியது கூத்தாய் பேரரசு. இதைக் கூத்தாய் மார்த்திபுரா (Kutai Martadipura) பேரரசு என்றும் அழைக்கிறார்கள்.

(Kutai Martadipura is a 4th-century or perhaps much earlier Hindu kingdom located in the Kutai area, East Kalimantan.)



1918-ஆம் ஆண்டு இந்தோனேசியா, கூத்தாய் மாநிலத்தில், மகாகம் நதி (Mahakam River) முகத்துவாரத்தில் ஒரு கல்தூணைக் கண்டுபிடித்தார்கள். அதற்கு ஏழு கல் தூண்கள் அல்லது யாபா (Yupa) என்று பெயர். அவை பல்லவ எழுத்துகளில், சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு இருந்தன. கூத்தாய் பேரரசை ஆட்சி செய்த முல்லைவர்மன் (Mulavarman) செய்த தியாகங்களை அந்தக் கல் தூண் நினைவு கூர்கின்றது.

தொல் எழுத்து முறை அடிப்படையில், அவை 4-ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை. இந்து மதம் 2-ஆம் மற்றும் 4-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர்கள் சுமத்திரா, ஜாவா மற்றும் சுலவேசி தீவுகளுக்கு இந்து மதத்தைக் கொண்டு வந்து இருக்கலாம்.

கூத்தாய் அரசின் முதல் ஆளுநர் குடுங்கன் (Kudungga). இவரின் இன்னொரு பெயர் நரேந்திரன். இவருடைய மகன் அஷ்வ வர்மன் (Aswawarman). இவர் கூத்தாய் அரசின் இரண்டாவது அரசர்.



மூன்றாவதாக வந்தவர் முல்லை வர்மன் (Mulavarman) எனும் இராஜேந்திரன். இவர் அஷ்வ வர்மனின் மகன் ஆகும்.

முல்லைவர்மன் உள்ளூர் டாயாக் வம்சாவளியினருக்குத் தலைவராக இருந்து உள்ளார். இவருடைய மகன் அஷ்வ வர்மன் தான் இந்து மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டார் என்று கருதப் படுகிறது.

இந்த கல்வெட்டுகளை உருவாக்கியவர் முல்லைவர்மன் தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அவரின் இரண்டு முன்னோடிகளான நரேந்திரன்; அஷ்வ வர்மன் படையெடுப்புகள் பற்றி எதுவும் தெரியவில்லை.

என்றாலும், "ராஜா" முல்லைவர்மன் தன் அண்டை நாடுகளைப் போரில் வென்றதாகக் கல்வெட்டில் கூறப் படுகிறது.



முன்பு காலத்தில் "அஸ்வரிஜ்வா" (Asvaredjwa) என்கிற ஓர் உள்ளூர் சடங்கு இருந்தது. அந்தச் சடங்கின் மூலமாக கூத்தாய் பேரரசின் நிலப்பரப்பை அதிகரித்ததாகவும் கூறப் படுகிறது.

அஸ்வரிஜ்வா என்றால் என்ன? ஒரு குதிரையை ஓட விடுவார்கள். சுதந்திரமாக சுற்றித் திரியும் குதிரையின் அடிச்சுவடுகள் எங்கு எல்லாம் தெரிகிறதோ அங்கு உள்ள நிலம் எல்லாம் கூத்தாய் அரசுக்கு சொந்தமாகிறது என்று பொருள். இந்தச் சடங்கின் மூலமாகத் தான் அவர்களின் நிலப்பரப்பை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அதன் பின்னர் இந்தக் கூத்தாய் பேரரசு என்ன ஆனது என்று தெரியவில்லை. அதைப் பற்றிய கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பேரரசின் வழித்தோன்றலில் மற்றொரு அரசு உருவாகி இருக்கிறது. அதன் பெயர் கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு (Kutai Kartanegara).



கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு 13-ஆம் நூற்றாண்டில் உருவாகி உள்ளது. களிமந்தான் காடுகளில் தெபியான் பத்து (Tepian Batu) எனும் பகுதியில் நிறுவப் பட்டது. கி.பி. 1300 முதல் கி.பி. 1325 வரை ஆட்சி நடைபெற்று உள்ளது. அதன் முதல் ஆட்சியாளர் அஜி பதாரா அகோங் தேவ சக்தி (Aji Batara Agung Dewa Sakti). கி.பி. 1650 வரையில் கூத்தாய் கர்த்தனகரப் பேரரசு ஆட்சி செய்து உள்ளது.

1667-ஆம் ஆண்டில் சுலவாசி தீவை ஆட்சி செய்த பூகிஸ் கோவா அரசை (Bugis Kingdom of Gowa) டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். பூகிஸ் கோவா அரசு வீழ்ச்சி அடைந்தது.

அங்கு இருந்த பூகிஸ் மக்களில் சிலர் அண்டை நாடான போர்னியோ களிமந்தான் கூத்தாய் நாட்டில் குடியேறினார்கள். அந்த இடம் அப்போது கம்போங் செலிலி (Kampung Selili) என்று அழைக்கப் பட்டது. இப்போது சமரிந்தா (Samarinda) எனும் நவீன நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது.



17-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியம் இந்தப் பகுதியில் பரவியது. பின்னர் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு வந்தது.

1942-ஆம் ஆண்டில் ஜப்பானியர்களின் படையெடுப்பு. கூத்தாய் அரசிற்கு ’கூட்டி அரசு’ என்று பெயர் வைத்தார்கள். 1945-ஆம் ஆண்டில் கூத்தாய் அரசு கிழக்கு களிமந்தான் கூட்டமைப்பில் சேர்ந்தது. 1949-ஆம் ஆண்டில் இந்தோனேசியா குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.

காரிங்கான் இந்து சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். போர்னியோ களிமந்தான் காடுகளில் வாழும் டயாக் மக்களைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.



அந்த டயாக் மக்களில் ஒரு பிரிவினர் இன்றைய காலத்தில் பின்பற்றி வரும் இந்து சமயத்திற்குப் பெயர்தான் காரிங்கான் (Kaharingan) இந்து சமயம்.

டயாக் மக்களை இந்து சமயத்திற்கு மாற்றியதே அந்தக் கூத்தாய் (Kutai) பேரரசு தான். டயாக் மக்களில் ஒரு தரப்பினர் கி.பி. 350-ஆம் ஆண்டில் இருந்து இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

இந்தோனேசியாவை மொத்தம் 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. கி.பி. 130 ஆம் ஆண்டு தொடங்கி கி.பி. 1500 ஆம் ஆண்டு வரை 1370 ஆண்டுகளுக்கு இந்தியப் பேரரசுகளின் ஆட்சிகள் நடைபெற்று உள்லன. இந்தோனேசியாவில் உருவான இந்திய மய அரசுகள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்? எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்? எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களைத் தருகிறேன்.



1. சாலகநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

மேலே காணும் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களையும் வழங்குகிறேன்.



•    கி.பி. 358 - பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 - ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 - கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 914 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - பாலி பேரரசு.
•    கி.பி. 915 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 - சஞ்சாயா - மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 - ராடன் விஜயா - மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 - ராஜாசா - சிங்காசாரி பேரரசு.

இந்தோனேசியர்கள் தங்களின் பண்டைய வரலாற்றைப் பெருமையாகப் புகழ்ந்து பேசுகிறார்கள். ஒரு தடவை ஓர் ஐரோப்பியர் கருடா விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார். விமானப் பணிப் பெண்ணாக ஓர் இந்தோனேசியப் பெண்மணி. ஏற்கனவே இதைப் பற்றி சொல்லி இருக்கிறேன்.



அந்தப் பெண்மணியைப் பார்த்து அந்த ஐரோப்பியர் ’ஏன் உங்கள் பெயருக்குப் பின்னால் இந்தியப் பெயர்களை இணைத்துக் கொள்கிறீர்கள்’ என்று கேட்டாராம். அதற்கு அந்தப் பெண்மணி ‘நாங்கள் மதம் மாறி இருக்கலாம். ஆனால் எங்கள் மூதாதையரின் பாரம்பரியத்தை மாற்ற மாட்டோம்’ என்று பதில் சொன்னாராம். நினைவுக்கு வருகிறது.

அங்கே இந்தியர்களின் கலையையும் கலாசாரத்தையும் தங்களின் கலாசாரமாக நினைத்துப் போற்றுகின்றார்கள். புகழ்கின்றார்கள். மற்ற சில இடங்களில் அப்படியா நடக்கிறது. கரை தாண்டிய கரையில் நிறையவே கறைகள்.

லுமேரியா கண்டம் தங்களின் மூதாதையர் கண்டம் என்று வாய்க் கூசாமல் சொல்கிறார்கள். உப்புச் சப்பு இல்லாத பொய்ச் சரக்குகள். எழுதவே வெட்கமாக இருக்கிறது.



தென்கிழக்காசியாவில் இந்தியர்களின் ஆளுமை வரலாறுகளைத் தோண்டி எடுத்துச் சான்றுகளுடன் முன் வைப்போம். அதை நம் கடமையாகக் கருதுவோம். எதிர்காலத்தில் நாம் மறைந்த பின்னர் அந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும். நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து நடக்கப் பேருதவியாக இருக்கலாம். சரி.

ஆக ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

மலையூர் மலாயாவில் வாழும் தமிழர்களை எவரும் வந்தேறிகள் என்று சொல்லவே முடியாது. வரலாற்றைப் பார்க்கப் போனால் அப்படிச் சொல்பவர்கள் தான் வந்தேறிகள்.

ஏன் என்றால் இந்த நாட்டில் வாழும் இந்தியர்களின் மூதாதையர்கள் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே மலையூரில் கால் பதித்து விட்டார்கள். தென்கிழக்கு ஆசியாவையே கட்டி ஆண்டு இருக்கிறார்கள்.

கூத்தாய் பேரரசைப் பற்றி இந்தோனேசியர்கள் பல காணொலிகளைத் தயாரித்து இருக்கிறார்கள். யூடியூப்பில் உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.07.2020

சான்றுகள்:

1. Hall, D.G.E. (1981). A History of South-East Asia, Fourth Edition. Hong Kong: Macmillan Education Ltd. p. 38. ISBN 0-333-24163-0.)

2. Drs. R. Soekmono, (1988) [First published in 1973]. Pengantar Sejarah Kebudayaan Indonesia 2, Yogyakarta: Penerbit Kanisius. p. 37.)

3. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans. Susan Brown Cowing. University of Hawaii Press. ISBN 978-0-8248-0368-1.

4. http://press-files.anu.edu.au/downloads/press/p69411/mobile/ch15s02.html