ஸ்ரீ விஜய பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீ விஜய பேரரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 மே 2016

ஸ்ரீ விஜய பேரரசு


இந்தோனேசியக் கல்வியாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதாவது இந்தோனேசியாவிற்கு ஒரு தேசிய அடையாளம் வேண்டும். அது ஒரு வரலாற்று அடையாளமாக இருக்க வேண்டும் எனும் விவாதம்.


அப்படி என்றால் ஸ்ரீ விஜய பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா அல்லது மஜாபாகித் பேரரசின் அடையாளத்தை வைக்கலாமா… எந்த அடையாளம் இந்தோனேசியாவிற்குச் சரியாகப் பொருந்தி வரும் என்று இன்றைக்கு வரைக்கும் இந்தோனேசியக் கல்வியாளர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.

ஸ்ரீ விஜயா; மஜாபாகித் இந்த இரண்டுமே இந்தோனேசியாவின் அடையாளமாக இருக்கட்டும் என்று இந்தோனேசியத் தேசியவாதிகள் பலர் முன்மொழிகின்றனர். ஸ்ரீ விஜயா - மஜாபாகித் எனும் அந்த இரு பெயர்களுமே தங்களின் பழைமையான மகத்துவத்திற்கும் பழமையான மேன்மைக்கும் பெருமை சேர்ப்பதாகப் பெரும ுகின்றர்.
           

இருந்தாலும் பொதுவாக ஸ்ரீ விஜயா எனும் பெயரே தேசியப் பெருமையின் அடையாளமாகக் கருதப் படுகிறது. பலேம்பாங் வாழ் மக்கள் ஸ்ரீ விஜயா எனும் பெயர் தான் தேசிய அடையாளம் என்று போராடி வருகின்றனர்.

அந்தத் தாக்கத்தில் கெண்டிங் ஸ்ரீ விஜயா (Gending Sriwijaya) எனும் பாடலை உருவாக்கி அதனை இந்தோனேசியப் பாரம்பரிய நடனங்களுக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

பலேம்பாங்கில் ஸ்ரீ விஜயா விளையாட்டரங்கம்

இந்தோனேசியாவில் பல நகரங்களில் பல சாலைகளுக்கு ஸ்ரீ விஜயா சாலை என்று பெயர் வைத்து பெருமைப் படுகிறார்கள். 1960இல் பலேம்பாங்கில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஸ்ரீ விஜயா பல்கலைக்கழகம் (Srivijaya University) என்று பெயர் வைக்கப்பட்டது.


இந்தோனேசிய இராணுவத்தின் கமாண்டோ பிரிவிற்கு கோடாம் ஸ்ரீ விஜயா (Kodam Sriwijaya) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். தாவரங்களுக்கு உரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் பெயர் பூப்புக் ஸ்ரீ விஜயா (PT Pupuk Sriwijaya). பலேம்பாங் நாளிதழுக்கு ஸ்ரீ விஜயா போஸ்ட் (Sriwijaya Post) என்று பெயர். 

ஸ்ரீ விஜய பல்கலைக்கழகம் - பலேம்பாங்

ஓர் இந்தோனேசிய விமான நிறுவனம். அதற்குப் பெயர் ஸ்ரீ விஜயா ஏர் (Sriwijaya Air). ஒரு விளையாட்டரங்கத்திற்கு கெலோரா ஸ்ரீ விஜயா (Gelora Sriwijaya Stadium) என்று பெயர். பலேம்பாங்கில் ஒரு காற்பந்து குழுவின் பெயர் ஸ்ரீ விஜயா (Sriwijaya F.C.). 

2011 நவம்பர் 11 ஆம் தேதி தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பலேம்பாங்கில் உள்ள கெலோரா ஸ்ரீ விஜயா அரங்கில் நடைபெற்றது. அந்தத் தொடக்க விழாவில் மாபெரும் நடன நிகழ்ச்சி. அந்த நடனத்தின் பெயர் என்ன தெரியுமா. தங்கத் தீபகற்பமாக ஸ்ரீ விஜயா (Srivijaya the Golden Peninsula). 
 

அந்தப் பாரம்பரிய நடனத்தில் அந்தக் காலத்துக் கப்பல் ஒன்றைத் தவழச் செய்து ஸ்ரீ விஜயா பேரரசிற்கே பெருமை செய்தார்கள். ஸ்ரீ விஜயா என்கிற பேரரசு வரலாற்றின் பெருமைகளை அப்படி எல்லாம் அழகு செய்தார்கள். சொல்லும் போது உடல் புல்லரிக்கிறது. 

Srivijaya - The Golden Peninsula
அந்த நடனம் யூடியூப்பில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். நீங்களும் பார்த்து பெருமை படுங்கள். அதன் இணைய முகவரி:


ஆக இப்படி பல்வேறு வகையில் ஸ்ரீ விஜயா எனும் பெயருக்குப் பெருமை சேர்த்து பெருமை படுகிறார்கள். யார் பெருமை படுகிறார்கள். சொல்லுங்கள். பக்கத்து நாட்டில் இருக்கும் இந்தோனேசியர்கள்.

அங்கே வரலாற்றை வரலாறாக மதித்து கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். ஆனால் இங்கே அப்படியா நடக்கிறது. இந்தியர்கள் சார்ந்த அடையாளங்களை அடித்துத் துவைத்து மிதித்து அரிச்சுவடி இல்லாமல் சிதைத்து வருகிறார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எதைக் கடிக்கக் கூடாதோ அதையும் கடித்து வருகிறார்கள்.

மனிதர்களில் முன்பு பரமேஸ்வரா காணாமல் போனார். முன்ஷி அப்துல்லா காணாமல் போனார். ஹங்துவா காணாமல் போனார். கோத்தா கெலாங்கி காணாமல் போனது. இப்போது பூஜாங் சமவெளியும் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

எது எப்படியோ பத்துமலையை எங்கள் தாத்தா பாட்டிகள் தான் உருவாக்கினார்கள் என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி. அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம் இல்லை இல்லை… பெரும் புண்ணியம்.

இந்தோனேசியாவில் பற்பல காலக் கட்டங்களில் பற்பல பேரரசுகள் ஆட்சிகள் செய்துள்ளன.

பெரும்பாலானவை இந்தியப் பேரரசுகள். இந்தோனேசிய வரலாற்றின் தொடக்கக் காலங்களில் இந்தியப் பேரரசுகள் தான் மிகையான தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

ஆங்காங்கே சின்னச் சின்ன அரசுகளும் இருந்தன. அவை உள்ளூர் மக்களால் உருவாக்கப் பட்டவை. பின்னர் வந்த பெரும் அரசுகளை அந்தச் சின்ன அரசுகளால் எதிர்த்து நிற்க முடியவில்லை. கால ஓட்டத்தில் கரைந்து போயின.

இந்தப் பெரும் பேரரசுகள் எப்படி உருவாகின என்பதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். துள்ளியமான விவரங்கள் சரிவரக் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இதுவரையிலும் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள், சிற்பச் சிலைகள், சமயச் சின்னங்கள், அகழாய்வு மண்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் போன்றவை அவர்களின் ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவி வருகின்றன.

  • கி.பி. 358 இல் பூரணவர்மன்  உருவாக்கிய தர்மநகரப் பேரரசு.
  • கி.பி. 650 இல் ஸ்ரீ ஜெயாசேனா உருவாக்கிய ஸ்ரீ விஜய பேரரசு.
  • கி.பி. 650 இல் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு.
  • கி.பி. 915 இல் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு.
  • கி.பி. 732 இல் சஞ்சாயா உருவாக்கிய மத்தாராம் பேரரசு.
  • கி.பி. 1293 இல் ராடன் விஜயா உருவாக்கிய மஜபாகித் பேரரசு.
  • கி.பி. 1222 இல் ராஜாசா உருவாக்கிய சிங்காசாரி பேரரசு.
இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. முதலில் ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள். அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

இவை மிக முக்கியமான பேரரசுகள். இவற்றுள் பெரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்ரீ விஜய பேரரசாகும். ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்கிழக்காசியவையே ஆட்சி செய்த மாபெரும் ஓர் அரசு. சுமத்திராவை மையமாகக் கொண்டு செயல் பட்டது. 

13ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து திடீரென்று மறைந்து போனது. சிங்காசாரி பேரரசு; மஜாபாகித் பேரரசு இந்த இரு பேரரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டு இருக்கலாம்.

அல்லது ஓர் இயற்கைப் பேரிடரினால் அழிந்து போய் இருக்கலாம். இயற்கைப் பேரிடர் என்று சொல்லும் போது சுனாமி அல்லது நிலநடுக்கம் போன்றவற்றை நினைவு படுத்துகிறேன்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்துவிட்டது. ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசிய மக்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.  

1918ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் இந்தோனேசியாவிற்கு வந்தார். ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி ஆய்வுகள் செய்தார். இரு ஆய்வு நூல்களை எழுதினார்.

ஒரு நூலின் பெயர் ’தென்கிழக்காசியாவில் இந்திய மயமான நாடுகள்’ (The Indianized States of Southeast Asia). இந்த நூல் 1948 இல்(Les etats hindouises d Indochine et d Indonesie) என்று பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது.

அடுத்து ’தென்கிழக்காசிய உருவாக்கம்’ (The Making of South East Asia) எனும் நூலை எழுதினார். இந்த நூல் Le Royaume de Crivijaya எனும் பெயரில் பிரான்ஸ் நாட்டில் வெளியானது. இரு நூல்களுமே 1910, 1918 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. பின்னர் இந்தோனேசியாவின் டச்சு மொழி, இந்தோனேசிய மொழி நாளிதழ்களில் பிரசுரிக்கப் பட்டன.

அதன் பின்னர் தான் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தன. இப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. தென்கிழக்காசியாவைத் திரும்பிப் பார்த்தது.

முதலில் அதிர்ச்சி அடைந்தது வேறு யாரும் இல்லை. சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள். ஸ்ரீ விஜய பேரரசர்கள் நடமாடிய மண்ணில் தானே இவர்களும் இவ்வளவு காலமும் நடமாடிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். ஆச்சரியப் படாமல் இருக்க முடியுமா?

ஸ்ரீ விஜய பேரரசின் குறிப்புகள் கற்களில் பொறிக்கப்பட்டு இருந்தன. அதாவது கல்வெட்டுகள். சமஸ்கிருத மொழியிலும் பழமையான மலாய் மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. இப்போது உள்ள மலாய் மொழியில் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பழைய மலாய் மொழியில். இதை Old Malay என்று சொல்வார்கள்.

பழைய மலாய் மொழி பல்லவர்களின் எழுத்து வடிவத்தையும், நாகரி எழுத்து வடிவத்தையும், இந்தோ சுமத்திரா எழுத்து வடிவத்தையும் கொண்டு இயங்கியது. கி.பி.4 ஆம் நூற்றாண்டில் இருந்து  கி.பி.14 ஆம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. சான்று: http://glottolog.org/resource/languoid/id/oldm1243

அதன் பின்னர் மரபு சார்ந்த மலாய் மொழி (Classical Malay) வந்தது. அடுத்து 19ஆம் நூற்றாண்டில் முன்நவீன மலாய் மொழி (Pre-Modern Malay) வந்தது. 20ஆம் நூற்றாண்டில் நவீன மலாய் மொழி (Modern Malay) புழக்கத்திற்கு வந்தது. 1888இல் ஜொகூர் மாநிலத்தில் இயங்கிய Pakatan Bahasa Melayu dan Persuratan Buku Diraja Johor எனும் மலாய் இயக்கம் தான் இப்போதைய நவீன மலாய் மொழிக்கு அடித்தளம் அமைத்தது.

சரி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் மலாய் மொழி என்பது வேறு. பழைய மலாய் மொழி என்பது வேறு. குழப்பிக் கொள்ள வேண்டாம். பழைய மலாய் மொழியின் பயன்பாடு 14 ஆம் நூற்றாண்டு வரை தான் இருந்தது.

ஆக ஸ்ரீ விஜய பேரரசு தொடர்பான கல்வெட்டுகளில் சமஸ்கிருத மொழி எழுத்துகளும்  பழைய மலாய் மொழி எழுத்துகளும் இந்தோ சுமத்திரா மொழி எழுத்துகளும் தான் இருந்தன என்பதை நினைவு படுத்துகிறேன்.

அந்தக் கல்வெட்டுகள் சுமத்திராவின் கெடுக்கான் புக்கிட், தாலாங் டூவா, தெலாகா பத்து, கோத்தா காப்பூர் எனும் இடங்களில் அகழ்வாய்வுகள் மூலமாகக் கிடைக்கப் பெற்றன.

சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு பலம் வாய்ந்த அரசாகக் கோலோச்சிய போது ஜாவாவில் மஜாபாகித் அரசும் உச்சத்தில் இருந்தது. இரண்டுமே சரி சமமான திறனில் நிர்வாகம் செய்து வந்தன. 


1984ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தவிர கை வேலைப் பாட்டுப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன. (சான்று: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet. பக்கம்: 171.)

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றிய உருவகச் சான்றுகள் மிகக் குறைவு. உருவகச் சான்றுகள் என்றால் கோயில், குளம், தளவாடப் பொருட்கள், சின்னங்கள், கட்டடங்கள். 

இருந்தாலும் கெடுக்கான் புக்கிட் எனும் இடத்தில் ஸ்ரீ ஜெயாசேனாவைப் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. கி.பி. 683 ஆம் ஆண்டு கிடைத்த கல்வெட்டுகள். அவற்றில் ஸ்ரீ விஜய பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ ஜெயாசேனா என்று பொறிக்கப்பட்டு உள்ளது.

’ஸ்ரீ ஜெயாசேனா எனும் மகா அரசர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து பலேம்பாங்கிற்குப் புனிதச் சித்த யாத்திரை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் 20,000 போர் வீரர்கள் கலந்து கொண்டனர்’ எனும் வாசகம் இருக்கிறது.

இப்போதைய சுமத்திரா பலேம்பாங்கில் தான் ஸ்ரீ விஜய பேரரசு முதன்முதலாகக் கால் பதித்தது. அது வரலாற்றுப் பூர்வமான உண்மை. என்றாலும் ஸ்ரீ ஜெயாசேனா அரசர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து வந்தார் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன.

ஆக இந்த மினாங்கா தாம்வான் எனும் இடம் இப்போது எங்கே இருக்கிறது? இது தான் இப்போதைக்கு வரலாற்று அறிஞர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும் சிதம்பர ரகசியம். இன்னும் ஒரு கணிப்பு இருக்கிறது. அதாவது ஸ்ரீ ஜெயாசேனா அரசர் தென் தாய்லாந்தில் உள்ள சுராட் தானி எனும் இடத்தில் இருந்து வந்து இருக்கலாம் எனும் கணிப்பு.

ஸ்ரீ ஜெயாசேனா என்பவர் தான் ஸ்ரீ விஜய பேரரசை உருவாக்கியவர். சரி. சுமத்திரா பலேம்பாங்கில் முதன்முதலாகக் கால் பதித்தார். சரி. தன் நிர்வாகத் தலைமையகத்தை அங்கே நிலைக்கச் செய்தார். சரி.

அவர் மினாங்கா தாம்வான் எனும் இடத்தில் இருந்து வந்தார் என்றால் அந்த மினாங்கா தாம்வான் இப்போது எங்கே இருக்கிறது. மினாங்கா தாம்வான் எனும் இடம் தாய்லாந்தில் இருந்ததா. இல்லை மலாயாவில் இருந்ததா. இல்லை இந்தியாவில் இருந்ததா. இல்லை இலங்கையில் இருந்ததா. தெரியவில்லை.

ஆனால் ஸ்ரீ ஜெயாசேனா இந்து மதத்தைப் பின்பற்றி இருக்கிறார். இந்து மதத்தைப் பரப்பி இருக்கிறார். இந்து மதத்திற்கு ஆதரவு வழங்கி இருக்கிறார். இந்துவாகவே இறந்தும் போய் இருக்கிறார். (சான்று: Coedes, George (1968). Walter F. Vella. The Indianized States of Southeast Asia.)

அடுத்து ஒரு தாழ்மையான வேண்டுகோள். இது ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரை. இந்தியப் பாரம்பரியத்தைச் சார்ந்தது. மிகவும் சிரமப்பட்டு தகவல்களையும் சான்றுகளையும் சேகரிக்க வேண்டி வந்தது. இதுவரை எங்கேயும் எழுதப் படாதது. ஆக பத்திரப்படுத்தி வையுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் படிக்கக் கொடுங்கள். அடுத்த தலைமுறையினருக்கும் போய்ச் சேர வேண்டும். அதுவே கட்டுரையாளரின் சமூகப் பார்வை.