காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 அக்டோபர் 2015

காமராஜர்

உலக அரசியலை அலசிப் பாருங்கள். நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக, சில பல தலைவர்கள் தங்கள் சொந்த வீட்டை மட்டுமே வழிநடத்தி வந்த அல்லது வருகின்ற அவலங்கள் தெரிய வரும். 


சுயநலத்துக்காகவும் பதவிப் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அந்த மாதிரியான தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற் போல, ஒரு சில வைரங்களும் தோன்றுகின்றன. பொதுநலத்தை உயிராகப் போற்றி உச்சி முகர்ந்தும் பார்க்கின்றன.

அரசியலில் லஞ்சம், அதிகாரத்தில் ஊழல், சுயநலப் போர்வையில் அவலங்கள்... அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இப்படியும் ஒரு மாமனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்பதே பெரிய ஆச்சயரியம். சாமான்ய நான்காம் வகுப்பு வரை கல்வி கற்ற ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டு இருக்கிறீர்களா!


அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர். மூத்தத் தலைவர்கள் அரசியலில்  பதவி வகிக்கக் கூடாது என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்து, அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதிவியையே துறந்து சென்றவர்.


கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும் என்று கூறி... பட்டித் தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களைக் கட்டியவர். ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்று புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர்.

தான் முதலமைச்சராக இருந்த போதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் தராதவர். சினிமாவில்தான் இதுபோன்ற கதாபாத்திரங்களைப் பார்க்க முடியும்.

ஆனால் தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாச்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத மனிதர் தான் காமராஜர்.



காமராசரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து இருந்து இருந்தால்... தரணிப் போற்றும் அளவுக்கு மனிதநேயம் அங்கே உயர்ந்து போய் சிகரம் தொட்டு இருக்கும் என்பது என் கருத்து.

கர்ம வீரர் காமராஜர்... அந்த மனிதர் சாமான்ய ஆசாபாசங்களைக் கடந்து போனவர்... கடைசி காலத்தில் இரண்டே இரண்டு வேட்டிகள் மட்டுமே அவரிடம் இருந்தனவாம்... அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.... என்னே மனிதம்... என்னே இலட்சியம்...

கிங் மேக்கர் என்று அழைக்கப்படும் காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜீலை 15ஆம் தேதி தமிழ்நாட்டின் விருதுநகரில், குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

ஏழ்மையான குடும்பம். ஏழ்மையின் காரணமாகவும் படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.

1930ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வேதாரண்யத்தில் காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை.

அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் அவர் சிறையில் கழித்து இருக்கிறார்.

1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

கர்ம வீரர் காமராஜர்... இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை.

ஆனால் ஆங்கிலம் தெரியாமல் போனாலும், தலை சிறந்த தலைமைத்துவத்தைத் தமிழகத்திற்கு வழங்கினார். அவருடைய காலக் கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது தமிழ்நாடு மாநிலம் ஆகும். இப்போது பாருங்கள்.

கர்ம வீரர் காமராஜர்... காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் எம்.பக்தவத்சலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா....

“பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள். அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. அதனைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள் என்பதுதான்”

அவருடைய நல்லாட்சியில் கல்வித் துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளைக் கட்ட உத்தரவிட்டார்.

பழைய பள்ளிகள் சீர் செய்யப் பட்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி.. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார்.

எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப் படுத்தினார்.

ஏழைச் சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

ஜாதி வகுப்பு... ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பினார். எல்லாப் பள்ளி பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார்.

அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கினார். அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார்.

அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்களை அறிமுகம் செய்தார். நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.

அவரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை மணிமுத்தாறு; அணை கீழ்பவானி அணை பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப் பட்டன.

 தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி; சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை; சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழில்கள் தமிழகத்தில் உருவாயின.

அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு, இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்

கர்ம வீரர் காமராஜர்... இப்படிப் பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால் தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவ்வளவும் செய்த அவர், அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது.

காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர், எல்லா மூத்தக் காங்கிரஸ் தலைவர்களும் தங்களின் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு... 

நாட்டு நலனுக்காக கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கினார். பிரதமர் நேருவிடம் பரிந்துரையும் செய்தார்.

அவரைத் தொடர்ந்து, லால் பகதூர் சாஸ்திரி; ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய்; எஸ்.கே. பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர்.

அதே ஆண்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பைக் காமராஜருக்கு ஜவகர்லால் நேரு வழங்கினார்.
அதற்கு அடுத்த ஆண்டே, நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவினார். அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திரா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர்.

அந்த இரண்டு தலைமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால்... காமராஜரை  “கிங்மேக்கர்” என்று பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும் அழைத்தனர்.  இப்படி தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியைத் தந்த காமராஜர், தனது கடைசி மூச்சு வரை சமூகத் தொண்டிலேயே குறியாக இருந்தார்.

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தனது 72 ம் வயதில காலமானார்.

அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு இந்தியாவின் மிக உயரிய “பாரத ரத்னா” விருதை இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர்.

ஆம். அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. மேலும் சிறு வயதிலேயே கல்வியைக் கைவிட்டதை நினைத்து வருந்திய அவர், தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்கலை வாசிக்க கற்றுக் கொண்டார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!

தன் குடும்பம் என்பதற்காக, தன் தாய்க்குக் கூட எந்தச் சலுகையும் வழங்கியது இல்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா...

சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தககளும்தான். பதவிக்குரிய பந்தா அவரிடம் இருந்ததே இல்லை.

எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும் கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு.

அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனைத் தமிழக வரலாறு மட்டும் அல்ல... உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?

முறையான கல்வி இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறியாக கொண்ட ஒருவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வளவு செய்து இருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்”. 

நல்லாட்சி என்ற அவருடைய சமதர்ம சிந்தனையும்... நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும்... சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம்

1990களில், சிங்கை வானொலியில், என் நண்பர் அழகிய பாண்டியன் பணியாற்றிய காலத்தில் வானம் வசப்படும் எனும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் இருந்து தொகுப்பட்டதே அந்தப் படிக்காத மேதையின் கட்டுரை. வானம் வசப்படும்...

அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடம் என்ன? முத்தண்ணா... என்று கவிஞர் அருள் கேட்கிறார்... இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும் கண்கள் குளமாகின்றன... அதுதான் அவர் நமக்கு விட்டுச் சென்ற ஒரு பாடம்...