தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 6

தமிழ் மலர் - 13.10.2018 - சனிக்கிழமை

மொழி ஓர் இனத்தின் அடையாளம். ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும் என்று சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லைங்க. இனம் அழியாது. இருக்கவே செய்யும். ஆனால் அதன் அடையாளத்தை இழந்துவிடும். அதுதான் உண்மை. புரிந்து கொள்ளுங்கள். வெறும் வெற்று உடலில் பிறந்த மேனிக் கோலத்தில் மட்டுமே ஊர்க்கோலம் போக முடியும். அவ்வளவுதான். மொழி அழிந்தால் இனம் அழியாது.


இப்போதைக்கு இந்த மண்ணில் நம்முடைய தமிழ் மொழிக்கு இருக்கும் ஓர் உந்துச் சக்தி என்ன தெரியுங்களா. அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் அந்தத் தமிழர்களின் தன்னம்பிக்கை தான். அது தான் முக்கியமான உந்துச் சக்தி. மூல காரணம்.

எங்களின் தாய் மொழியை வாழ வைத்துக் காட்டுவோம் என்கிற நம்பிக்கை இருக்கும் வரையில் அந்த மொழி இந்த மண்ணில் வாழும். வாழ்ந்து கொண்டு இருக்கும். 

நம்பிக்கை என்பது ஒரு வகையான ஆதங்கம். எப்படியாவது; என்ன செய்தாவது எங்களின் தாய் மொழியை நிலைக்கச் செய்வோம் என்கிற ஆதங்கம் தான் தமிழை இன்னும் உயிர் வாழச் செய்கிறது.

இன்னும் ஒரு விசயம். இந்த மண்ணில் நம் எதிர்காலச் சந்தியினர் தான் நம்முடைய சொத்து. அதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்தப் சந்தியினரிடம் நாம் விட்டுச் செல்லும் இன மொழி கலாசாரப் பண்புகள் தான் நம்முடைய எதிர்காலச் சொத்து. 


நம்மிடம் இப்போது இருக்கும் பணம் காசு; மாட மாளிகைகள்; கூட கோபுரங்கள்; இவை எதுவுமே நம்முடைய சொத்துகள் அல்ல. நாம் போன பிறகு அவை எல்லாம் நம்மோடு கூடவே வரப் போவதும் இல்லை. நம்முடைய தலைமுறைகள் தான் நம் பெயரைச் சொல்லப் போகும் சீதனங்கள். ஆகவே அந்தச் சீதனங்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்துவிட்டுப் போக வேண்டும். இல்லை என்றால் நாம் இருந்தும் இல்லாத மரக் கட்டைகள். மறைந்ததும் மறக்கப்பட்ட மனிதச் சக்கைகள்.

அந்த வகையில் இரு நூற்றாண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளோடு உலா வந்து கொண்டு இருக்கிறோம். அது ஒரு சரித்திரம். இருப்பினும் சில வேளைகளில் அந்தச் சரித்திரத்தைச் சிலரும் பலரும் அசைத்துப் பார்க்கிறார்கள்.

சொந்த நலன்களுக்காக; சுற்றத்தார்களின் நலன்களுக்காக; சுற்றி இருக்கும் நண்பர்களுக்காக; வால்பிடித்து அலையும் எச்சில் கூளங்களுக்காக; புகழ்மாலை பாடும் பச்சோந்திகளுக்காக; நாலு காசு பார்க்க வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலை.

அந்தக் காசு நல்ல வழியில் இருந்து வந்தாலும் சரி; இல்லை கெட்ட வழியில் இருந்து வந்தாலும் சரி; அது முக்கியம் அல்ல; ஆனால் காசு வந்தால் சரி. அதுதான் முக்கியம். சத்தியமாக அது சுயநலப் பேராசைகள்.

பார்க்கப் போனால் அந்த மாதிரியான அடிமட்டச் சுயநலங்கள் தான் தமிழர் இனத்தையும் தமிழர் மொழியையும் அழிக்க முயற்சிகள் செய்து வருகின்றன. அழிப்பதற்கான சூடம் சாம்பிராணிகளைக் கொளுத்திப் போடுகின்றன. இதை எழுதும் போது வலியின் வேதனைகள் மனதிற்குள் சன்னமாய் ஊஞ்சலாடுகின்றன. முகாரிகள் பாடுகின்றன.


மலேசியத் தமிழ்க் கல்வியின் மீது முடிந்த வரையில் தாக்குதல் தொடுப்பது; மலேசியத் தமிழ்ப் பள்ளிகளைச் சிறுமைப் படுத்துவது; மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தைத் தூண்டி விடுவது. இவை எல்லாம் புதிய விசயம் அல்ல. காலம் காலமாக நடந்து வருகிறது.

அதைப் பார்த்து பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் சிலரும் சலித்துப் போய் விட்டார்கள். அவர்களுக்கே எரிச்சல் வந்து விட்டது. ஏதாவது பண்ணித் தொலைங்கடா என்று கைகழுவி விட்டு விட்டார்கள். எல்லோரும் அல்ல. சிலர் தான்.

இருந்தாலும் தமிழ்மொழிப் பற்றாளர்கள் விடுவதாக இல்லை. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் திணிக்கப் படுகிறது; இந்தியர்களின் அரசியலோடு திணிக்கப் படுகிறது என்று சொல்லிப் போராட்டம் செய்கிறார்கள். பிரச்சினை அங்கே தான் தொடங்குகிறது. புரியுதுங்களா.

கடந்த 200 ஆண்டுகளாகத் தமிழ்க் கல்வியை சுமந்து வந்த ஏழை எளிய தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவமானங்கள் ஏராளம்; அலட்சியங்கள் ஏராளம்; அவமதிப்புகள் ஏராளம்; ஏளனங்கள் ஏராளம்; அவை எல்லாம் மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத காலச் சுவடுகள். 


மலாயாத் தமிழர்களின் வரலாற்றில் பல காலக் கட்டங்களில் தமிழ்க் கல்வி பற்றி பல்வேறு கோணங்களில் பல்வேறான விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளை விமர்சிப்பதே ஒரு பொழுது போக்காக மாறிப் போனது. 

அப்படி விமர்சனம் செய்தவர்களின் அடிப்படை நோக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது நோக்கம். அதாவது அழுத்தம்: மலேசிய தேசிய அடையாள அரசியலைப் பெரிது படுத்தும் ஓர் அழுத்தம். அடுத்து தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும் பொருளாதார நோக்கத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அழுத்தம். அந்த வகையில் நேரடியாக இரு அழுத்தங்கள்.

ஆங்கிலேயக் காலனித்துவ காலத்திலேயே மேல் வர்க்க இந்தியர்கள் தமிழ்ப் பள்ளிகளை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஒரு வகையான ஏளனப் பார்வை. தமிழ்ப் பள்ளிகள் என்பது பால்மரம் வெட்டும் பாமரத் தமிழர்களின் கல்விக் கொட்டகைகள் எனும் ஒரு தாழ்வான பார்வை. ஆயாக் கொட்டகைக்கு அடுத்து வந்த கோழிக் கூண்டுகள் என்று ஒரு கல்வியாளர் சொல்லி இருக்கிறார். நினைவில் இருக்கிறது. பெயர் வேண்டாம்.

ஆனாலும் பாருங்கள். அப்படி குறை பார்த்துக் குறை சொன்ன மேல் வர்க்க இந்தியர்கள் தான் மலேசியத் தமிழ்க் கல்வியின் உயர் மட்ட வேலைகளில் அதிகமாக வேலை செய்து இருக்கிறார்கள். தமிழ்ப் பள்ளிகளின் பெயரைச் சொல்லி சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளை இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் அனுப்பிப் படிக்க வைத்து இருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது. படுத்துக் கொண்டே உமிழ்வது ஒரு கலை. அந்தக் கலையின் காட்சிகள் கண்ணுக்குள் தெரிகின்றன.

அவை எல்லாம் கித்தா மரத்துக் காடுகளில் செத்தும் சாகாமல் வாழ்ந்த தமிழர்களின் சாபக்கேடு. பாவம் அந்த வெள்ளந்திகள். போய்ச் சேர்ந்து விட்டார்கள். இப்போது அவர்களின் வாரிசுகள் தவிக்கிறார்கள். தமிழ் மொழியின் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அல்லும் பகலும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.  


1857-ஆம் ஆண்டு மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு சீன, தமிழ் மொழிப் பள்ளிகள்; ‘தேசிய மாதிரி’ பள்ளிகள் என்று வகைப் படுத்தப் பட்டன. மாதிரி எனும் அடைச்சொல் சேர்க்கப் பட்டது. சீன, தமிழ் மொழிப் பள்ளிகளில் பயின்றவர்கள் ஓராண்டு காலம் கூடுதலாகப் புகுமுக வகுப்பில் படிக்க வேண்டும் என்கிற கல்விச் சட்டத்தையும் கொண்டு வந்தது.

அதனால் தமிழ்ப் பள்ளிகள் மிக மோசமான நிலைக்குப் பின் தள்ளப் பட்டன. தமிழ் மாணவர்கள் பலர் பாதிக்கப் பட்டனர். அவ்வளவு காலமும் ஆங்கிலம் சரியாகத் தெரியாமல்; மலாய் மொழியும் சரியாகத் தெரியாமல் மாணவர்கள் தடுமாறிக் கொண்டு இருந்த காலக் கட்டம்.

எனக்கும் அதே அந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. அதை இங்கே சொல்ல வேண்டும். ஏன் என்றால் மலாக்கா டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளிக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில இடைநிலைப் பள்ளியில் ரிமூவ் வகுப்பு படிக்கப் போனேன்.

வகுப்பில் நான் மட்டுமே தமிழன். ஒரே இந்தியன். சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வரவில்லை. நாலைந்து ஆங்கில வார்த்தைகளை வைத்துக் கொண்டு மற்ற மாணவர்களுடன் போட்டிப் போட முடியவில்லை.

எத்தனை எத்தனை ஏளனங்கள். எத்தனை எத்தனை பரிகாசங்கள். வேதனை. வேதனை. மறுவருடம் ஆகக் கடைசியான வகுப்பில் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். பாரம் ஒன்று எப். அந்த வகுப்பில் பயங்கரமான போராட்டங்கள். மறுவருடம் பாரம் இரண்டு சி வகுப்பிற்குத் தாவிச் சென்றேன். அதற்கும் அடுத்த வருடம் பாரம் மூன்று பி வகுப்புக்கு உயர்த்தப் பட்டேன். 


இப்படியே தத்தித் தத்தி பாரம் ஐந்து ஏ அறிவியல் பாட வகுப்பில் சேர்ந்தேன். சொந்த உழைப்பு. சொந்த முயற்சி. ஒரு பொன்மொழி. முயற்சி என்னைக் கைவிட்டாலும் முயற்சியை நான் கைவிடுவது இல்லை. மற்ற மற்ற மாணவர்களுக்கு அறிவியல் விளக்கம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தேன்.

வகுப்பாசிரியரே என்னை அழைத்து மற்ற வகுப்புகளில் பாடம் நடத்தச் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு அறிவியல் பௌதீகப் பாடத்தில் அபார முன்னேற்றம் அடைந்தேன். அடுத்து ஆறாம் படிவத்திற்குப் போனேன், அப்பா அம்மாவால் படிக்க வைக்க முடியவில்லை. இங்கே தான் வீட்டில் அரை டசன் தம்பி தங்கைகள் இருக்கிறார்களே. அப்புறம் என்ன. அது ஒரு பெரிய கதைங்க. சொன்னால் அழுகை வரும்.

என் அப்பா அம்மா வேலை செய்த அதே தோட்டத்தில் கிராணி வேலை கிடைத்தது. அப்புறம் ஆசிரியர் வேலை. பத்திரிகையாளர் வேலை. ஆகக் கடைசியாக இப்போது கணினிக் கடலில் விழுந்து நீந்திக் கொண்டு இருக்கிறேன். இது ஒரு ரப்பர் தோட்டத்து ஏழைத் தொழிலாளி மகனின் போராட்டக் கதை. என் கதையைப் போல எத்தனையோ தமிழர்களின் கதைகள் வெளிச்சம் இல்லாமல் வரண்டு போய்க் கிடக்கின்றன. சரி.

சீன, தமிழ்ப் பள்ளிகளின் மீது காணப்படும் அரசியல் பார்வை நன்றாகவே புரிந்து கொள்ளக் கூடியது. வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியமே இல்லை. தாய்மொழிப் பள்ளிகள் தேசியப் பாட்டுக்குத்  தடையாக அமைகின்றன. அம்புட்டுத்தான். அந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள். புரிந்து கொள்ள முடியும்.

ஒரே மலேசியா தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் தாய்மொழிப் பள்ளிகள் நெருடலாக இருந்து வந்து உள்ளன. நான் சொல்லவில்லை. ஒரு தமிழ்ப் பேராசிரியர் சொல்லி இருக்கிறார். இதுவும் ஒரு மேலிடத்துப் பார்வை தான். இருந்தாலும் மலேசியாவில் தாய்மொழிக் கல்வி என்பது அரசியல் சட்டப்படி அதிகாரம் பெற்று இருக்கிறது. ஆக அங்கேதான் இடிக்கிறது.

இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்தால் தாய்மொழிக் கல்வித் திட்டத்தில் சறுக்கல்களை ஏற்படுத்தலாம் எனும் நகர்வுகள் அடிபட்டுப் போகின்றன. புரிகிறதா. புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பாருங்கள். தாய்மொழிக் கல்வி என்பது அரசியல் சட்டப்படி அதிகாரம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தேசியவாதத் தரப்புகளின் வாதங்களைத் தாண்டிச் செல்லும் வாய்ப்புகள் தாய்மொழிப் பள்ளிகளுக்கு அதிகமாக உள்ளன. மறந்துவிட வேண்டாம்.

மலேசியாவில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் படிக்கக் கூடிய அடிப்படை திட்டங்கள் அழகாக எழுதி வைக்கப்பட்டு விட்டன. இந்திய மொழிகளில் தமிழுக்கும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சரிங்களா.

நாம் சுதந்திரம் அடைந்த பின்னர் தாய்மொழி உரிமையை நிலைநாட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து உள்ளன. நமக்கு முன் இருந்த தமிழ் மகன்களும் சட்டப்படி செய்து கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல.

மலேசியாவின் தற்போதைய நவீன அரசியல் தன்மையும் கூட தமிழ்ப் பள்ளிகளை நேரடியாகத் தாக்குவது இல்லை. அதையும் நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆகவே தமிழ்ப் பள்ளிகளுக்கு எதிரான தேசிய அரசியல் போக்குகளைக் கண்டு நாம் அதிகமாக அஞ்ச வேண்டியது இல்லை. உடனடியாக பெரிய ஆபத்து ஒன்றும் வரப் போவது இல்லை.

இருமொழித் திட்டத்தில் அரசாங்கம் நேரடியாக அழுத்தம் கொடுக்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க நினைக்கும் எட்டப்பர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அந்த மாதிரி மனிதர்கள் இருக்கும் வரையில் நாமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அது நம்முடைய கடமை.

(தொடரும்)

சான்றுகள்:

1. Dual Language Programme might endanger vernacular schools - https://www.freemalaysiatoday.com/category/opinion/2016/12/30/dual-language-programme-might-endanger-vernacular-schools/

2. Dual Language Programme to continue, says ministry - https://www.themalaysianinsight.com/s/30793

3. English not only language of science; Persatuan Linguistik Malaysia (PLM) - http://plm.org.my/wrdp1/?p=2750

4. List of Schools Approved For Running DLP Programme In 2017 Cohort 2 - http://mumsgather.blogspot.com/2016/11/list-of-schools-approved-for-running.html

5. 126 more schools approved for Dual Language Programme -https://www.nst.com.my/news/nation/2018/01/321822/126-more-schools-approved-dual-language-programme