மலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட் 2016

மலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள்

மலேசியச் சீனர்களைப் போல சிந்தியுங்கள்...

மலேசியா பல்லினத்தவர்கள் வாழும் நாடு. மலாயர், சீனர், தமிழர் (இந்தியர்) பெரிய இனத்தவர்கள். ஒவ்வோர் இனத்தாருக்கும் இந்த நாட்டில் தனிப்பட்ட அரசு உரிமைகள் உள்ளன. அந்த அரசு உரிமைகளை முறையாகப் பெற்றுக் கொள்ள... மலாய், சீன இனங்களைச் சார்ந்தவர்கள் மிகக் கவனமாகவும்... விழிப்பாகவும்... துணிவாகவும்... துடிப்பாகவும்... தொலைநோக்காகவும் செயல் படுகின்றனர்.

மலாயரும் சீனரும் அவர்களின் தாய்மொழியை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் இனத்தை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் பள்ளிகளை விட்டுக் கொடுப்பது இல்லை...
மலாயரும் சீனரும் அவர்களின் எந்தவொரு உரிமைகளையும் விட்டுக் கொடுப்பது இல்லை...


ஆனால் நம் தமிழர்கள் மட்டும்...
தாய்மொழி
தமிழ் இனம்
கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகள்
தமிழ்ப்பள்ளிகள்
தமிழ்க்கல்வி
இந்த உரிமைகளில்...

எதையும் தற்காப்பது இல்லை... பேணுவதும் இல்லை...
இவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதும் இல்லை...

இவற்றின் தனித் தன்மைகளைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணுவதும் இல்லை...

எடுத்துக்காட்டுகள்

1) அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்க மலாயரும் சீனரும் முடிவெடுத்து முனைப்புக் காட்டுகின்றனர்... ஆனால் தமிழன் மட்டும் தாய்மொழிக் கல்வியையே தட்டிக் கழிக்கிறான்...

2) மலாயரும், சீனரும் தங்களின் மொழிவழிப் பள்ளிகளுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள்... ஆனால் தமிழன் மட்டும் தமிழ்ப்பள்ளியைத் தட்டிக் கழித்து தேசியப் பள்ளியையும் சீனப் பள்ளியையும் நாடி ஓடுகிறான்...

3) மலாயரும் சீனரும் தங்களின் மரபுவழி கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்குப் அரும் பங்காற்றுகிறார்கள்... மலேசியத் தமிழன் மட்டும் தன்னுடைய இந்த மண்ணின் கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிகளைக் கண்டுகொள்வதே இல்லை... பறந்து வரும் கூத்தாடிகளைக் கை எடுத்து கும்பிடுகிறான்...

4) மலாயரும் சீனரும் தங்களுடைய பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்து இருப்பதற்கு மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல் படுகின்றனர். ஆனால், தமிழன் மட்டும் தன்னுடைய சொந்தத் தமிழ்ப் பள்ளியை இணைக்கலாமா வேண்டாமா... வாவாசான் பள்ளியாக மாற்றலாமா... ஏன் அந்த வம்பு ஒரேயடியாக மூடியே விடலாமா என்று ரூம் போட்டு யோசிக்கிறான்...

5) மலாயரும் சீனரும் அரசு சார்பற்ற அமைப்புகள் வழி தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பற்றி ஆழமான ஆய்வுகளை நடத்துகின்றனர். முறையாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சொல்கின்றனர்... ஏற்ற தீர்வுகளைக் காண்கின்றனர். தமிழருக்கோ உருப்படியாக எந்த ஓர் அமைப்பும் இல்லை. அப்படியே எதாவது ஓர் தமிழ் அமைப்பு ஆய்வு நடத்தி அறிவிப்பு செய்தால்... அம்புட்டுதான்... மொழிவெறி இனவெறி எனத் தமிழனே தமிழனைக் குற்றம் சாற்றுகிறான்..

தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த இழிந்த குணம்...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி முட்டாள்தனம்...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தன்னம்பிக்கையின்மை...
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தொலைநோக்கின்மை...

இந்த நாட்டில் இனிவரும் காலத்தில் மலேசியத் தமிழ் மக்கள் நலமாகவும் நன்றாகவும் வாழ வேண்டும் என்றால்... சீனர்களைப் போல சிந்திக்க வேண்டும் செயலாற்ற வேண்டும்...

ஏன் என்றால்... சீனர்களும் தமிழர்களும் பூமிபுத்திராக்கள் அல்லர்... சீனர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள். அதனால் தமிழர்கள் பூமிபுத்திராக்களைப் போல சிந்திப்பதைவிட சீனர்களைப் போல சிந்திப்பதே நல்லது... நலமானது... பாதுகாப்பானது...

சீனர்கள் தங்களின் குடியுரிமையையும்... அரசியலமைப்பு உரிமைகளையும் தற்காத்துக் கொள்ள எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்... செயல்படுகிறார்கள் என்று பார்த்தாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்...

உரிமைகளைப் பாதுகாக்க சீனர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்... ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள்... உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள்... மலேசியத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்... முத்தண்ணா

1) சீனப்பள்ளிகள் நிலைத்து இருக்க வேண்டும். (தமிழ்ப்பள்ளி நிலைத்து இருக்க வேண்டும் எனும் அக்கறை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை)

2) மூடப்படும் சீனப்பள்ளிகளின் உரிமத்தைப் (லைசன்சு) பயன்படுத்தி வேறோர் இடத்தில் புதிய பள்ளியைத் திறக்க வேண்டும்.

3) சீனப்பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடால்) பள்ளிகளாகவே இருந்துவிட வேண்டும். (தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளாக மாறவேண்டும் என்று தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்)

4) தொலைநோக்குப் பள்ளியை (வாவாசான் பள்ளி) சீனர்கள் வரவேற்கவில்லை. (தமிழ்ப்பள்ளிகள் தொலைநோக்குப் பள்ளிகளாக இணைக்கப்பட வேண்டும் என தமிழர்கள் ஆசைப் படுகிறார்கள்)

5) அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலம் சீனம் ஆகிய இருமொழிகளில் கற்பிக்க சீனர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டனர். (தமிழர்கள் இன்னும் கூட்டம் போட்டு... ரூம் போட்டு சிந்தியோ சிந்தி என்று மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறார்கள்)

6) சீனர்களின் மளிகைக் கடை தொடங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் சீனமொழிக்கு முதலிடம் தருகின்றன. (தமிழர்கள் மலாயையும் ஆங்கிலத்தையும் மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்)

7) எவ்வளவு வசதி வந்தாலும் எந்த ஒரு சீனரும் தன்னுடைய தாய்மொழியையும் பள்ளியையும் மட்டும் விட்டுக் கொடுப்பதே இல்லை. (தமிழனுக்குக் கொஞ்சம் காசு பணம் சேர்ந்து விட்டால் அவன் முதலில் ஒதுக்கித் தள்ளுவது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் தான்)

8) ஒரு துண்டு அறிக்கை எழுதுவதாக இருந்தாலும் சீனர்கள் தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். (தமிழன் ஒரு மாநாடே நடத்தினால் மேடையில் நாலைந்து தமிழ் எழுத்துகள் மட்டும் இருக்கும்)

மலேசியத் தமிழர்களின் இத்தனைக் கோளாறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் தான் என்ன...

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழ் முத்துகள்... தமிழ் பூக்கள் அன்பர்களிடம் விட்டு விடுகின்றேன். அன்பர்களே.. தவறாமல் மறுமொழி கூறுங்கள். -முத்தண்ணா