25 நவம்பர் 2023

கடாரம் கங்கா நகரம் - 1

தமிழ் மலர் - 02.05.2019

இராஜேந்திர சோழன் கி.பி. 1025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்தார். அந்தப் படையெடுப்பினால் தென்கிழக்காசியாவில் பல இந்துமத அரசுகள்; பௌத்தமத அரசுகள்; ஜாவானிய அரசுகள்; சுமத்திரா நாட்டு அரசுகள்; போர்னியோ சுதேசி அரசுகள் காணாமல் போயின. 

இன்றைய வரைக்கும் அந்த அரசுகள் தொலைந்து போன அவற்றின் அரிச்சுவடிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றன. அவற்றின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் அடையாளங்கள் காணாமல் போய் விட்டன.


இராஜேந்திர சோழனின் தென்கிழக்காசிய நாடுகள் மீதான படையெடுப்பு உலகத் தமிழர்களின் வரலாற்றில் புகழ்மிக்க ஒரு காலச் சுவடு. தாராளமாகச் சொல்லலாம். அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் வேதனைமிக்க காலப்பதிவு. அதையும் நாம் மறந்துவிட வேண்டாம்.

இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படை எடுத்ததைப் பற்றி நாம் எந்தவிதத்திலும் குறைவாக மதிப்பீடு செய்யவில்லை. ஒரு தவறான மதிப்பீடும் செய்யவில்லை. ஆனால் முக்கியமான ஒரு விசயத்தை நாம் மறந்து விடுகிறோம்.

ஒரு காலக் கட்டத்தில் உலகத்திலேயே மாபெரும் கடல் படையைக் கொண்ட வல்லரசு நாடாகச் சோழப் பேரரசு விளங்கியது. உண்மை. பல நாடுகளைத் தங்களின் வலிமை மிக்க கடல் படையினால் இறுக்கிப் பிடித்து ஆட்சி செய்தது. உண்மை.

ஆனால் அந்தப் படையெடுப்பு நிகழாமல் இருந்து இருக்குமானால் கடாரத்தில் ஒருக்கால்… மீண்டும் சொல்கிறேன்… ஒருக்கால்… இந்தியர்களின் ஆளுமை சற்றே நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம். அல்லது அந்த ஆளுமையின் இடையில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

மலேசியாவில் பேராக் மாநிலத்தில் புருவாஸ் கங்கா நகரம் அழிந்து போகாமல் நீடித்து இருக்கலாம். ஜொகூர் மாநிலத்தில் கோத்தா கெலாங்கி எனும் மாயிருண்டகம் நிலைத்து இருக்கலாம். 

இந்தோனேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு அழிந்து போகாமல் சற்றே நீண்ட காலம் உயிர் வாழ்ந்து இருக்கலாம். இது என்னுடைய கருத்து. இது என்னுடைய பார்வை. 

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்தியர்களின் ஆளுமை சில நூற்றாண்டுகளுக்கு மேலும் நீடித்து இருக்கலாம் என்பது ஒரு சின்ன நப்பாசை.

இத்தனை அரசுகள் அழிந்து போனதற்கு இராஜேந்திர சோழன் என்பவரை மட்டும் காரணம் சொல்ல இயலாது. அவர் மீது ஒட்டு மொத்தப் பழியையும் போடவும் முடியாது. அது மிகவும் தப்பு. 

அந்தப் படையெடுப்பு நடப்பதற்கு ஊதுபத்தி ஏற்றி சூடம் கொளுத்தி சாம்பிராணி போட்டதே ஸ்ரீ விஜய பேரரசு தான். அதை நாம் நினைவில் கொள்வோம்.

சோழப் பேரரசிற்கும் சீனப் பேரரசிற்கும் நீண்ட காலமாக இருந்த நட்புறவிற்கு தடைக் கல்லாக அமைந்தது ஸ்ரீ விஜய பேரரசு. அதனால் சினம் அடைந்த சோழப் பேரரசு ஸ்ரீ விஜய பேரரசின் மீது தாக்குதல் நடத்தியது. அதன் விளைவாகப் பற்பல அரசுகளும் அழிந்து போயின.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பைப் பெருமையாக நினைத்துக் கொள்ளலாம். தப்பு இல்லை. ஆனால் அதே சமயத்தில் மலாயாவில் சில பல இந்தியர்களின் அரசுகள் அழிந்து போனதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

அழிக்கப்பட்ட இந்தியர்கள் அரசுகள் பெரிதாகத் தெரிகிறனவா அல்லது இராஜேந்திர சோழனின் படையெடுப்பு மட்டும் நமக்குப் பெருமையாகத் தெரிகின்றதா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளில் மிகவும் புகழ் பெற்றது சைலேந்திரா பேரரசு. ஜாவா தீவில் கோலோச்சிய அந்தப் பேரரசை தரநீந்தரன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். 

அவருடைய காலத்தில் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இது கி.பி. 775-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கட்டத்தில் சுமத்திராவில் ஸ்ரீ விஜய பேரரசு. ஜாவாவில் சைலேந்திரா பேரரசு. இந்த இரண்டு பேரரசுகளும் ஒன்றாக இணைந்தன. ஒரே பேரரசாக மாறி ஒன்றாக ஆட்சி செய்தன. ஸ்ரீ விஜய எனும் பெயரில் அந்த ஆட்சி நடைபெற்றது.


அப்படி கூட்டாக இணைந்த ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் தான் கடாரம் எனும் பூஜாங் சமவெளி ஆட்சியும் நடைபெற்றது. 

கடாரத்தைக் ஆகக் கடைசியாக ஆட்சி செய்தவர் சங்கராமா விஜயதுங்கவர்மன். இவர் இந்தோனேசியாவில் இருந்து கடாரத்திற்கு வந்தவர். ஒரு ஸ்ரீ விஜய அரசர். இவர்தான் கடார மண்ணில் கடைசி கடைசியாகக் கால் பதித்து ஆட்சி செய்தவர். சுங்கை மெர்போக் ஆற்றில் கப்பல் ஓட்டியவர். 

சுங்கை மெர்போக் ஆறு என்பதைச் சின்ன ஆறாக நினைத்துவிட வேண்டாம். மலாக்கா நீரிணையில் அந்த ஆறு இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய ஆறு. தொடுவானத்தில் கடலும் ஆறும் ஒன்றாகக் கலந்து நிற்கும். கண்கொள்ளாக் காட்சி.

இந்த ஆற்றில் மூன்று முறை படகு பயணம் செய்த அனுபவம் உள்ளது. பயணம் செய்யும் போது கடாரத்து அரசர்களும் இராஜேந்திர சோழனும் நினைவில் வருவார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பயணம் செய்த அதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் எனும் பெருமையும் ஏற்படும். 



ஆசிய வரலாற்றைப் பாருங்கள். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் எப்போதுமே நல்ல ஓர் உறவுமுறை இருந்து வந்தது. கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டுகளில் நல்லவிதமான பண்டமாற்று வணிகங்கள் நடைபெற்று உள்ளன. இந்து சமயப் பண்பாட்டு மாற்றங்களும் பாரம்பரியக் கலாசாரப் பரிவர்த்தனைகளும் நன்றாகவே தடம் பதித்து உள்ளன. 

அந்தத் தடங்கள் அப்படியே கொடுக்கல் வாங்கல் வரை போய் இருக்கின்றன. கொடுக்கல் வாங்கல் என்றால் பெண் எடுத்துப் பெண் கொடுக்கும் முறையாகும். 

கொடுக்கல் வாங்கலில் பொன்னும் மணியும் கோடிக் கோடியாய்ப் புழங்கி இருக்கின்றன. அந்தக் காலத்து அரசர்கள் பொன்னும் மணியும் சேர்ப்பதில் கெட்டிக்காரர்கள். மலை மலையாய்ச் சேர்த்து அழகு பார்ப்பதிலும் வல்லவர்கள்.

இந்தியாவில் ஆட்சி செய்த இந்திய அரசர்களின் அத்தகைய பலகீனங்களைத் தெரிந்து கொண்ட பின்னர் தானே இந்தியாவின் மீது பற்பல அந்நியத் தாக்குதல்கள் நடந்து இருக்கின்றன. 


கிரேக்கர்கள்; அராபியர்கள்; துருக்கியர்கள்; ஈரானியர்கள்; ஆப்கானியர்கள்; மங்கோலியர்கள்; கில்ஜிகள்; துக்ளக்குகள்; லோடிகள் எனும் பட்டியல் இரயில்வண்டி பாதை போல நீண்டு கொண்டே போகும். இவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மீது படை எடுத்து வந்து இருக்கிறார்கள். 

யானைகள் மீது அம்பாரிகள் வைத்து இந்தியாவின் சொத்துக்களைக் கோடிக் கோடியாய்த் தூக்கிக் கொண்டு போய் இருக்கிறார்கள். கஜ்னி முகமது, கோரி முகமது; பாபர், நாடீர் ஷா, செர் ஷா போன்ற படையெடுப்பாளர்களை அதில் சேர்க்கலாம். சரி.

நல்ல உறவு முறையில் இருந்த சோழர்களுக்கும் ஸ்ரீ விஜய அரசர்களுக்கும் இடையே ஏன் பிரச்சினை வந்தது. அதனால் எப்பேர்ப்பட்ட இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

இராஜேந்திர சோழனின் படையெடுப்பிற்குச் சில பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. உண்மையிலேயே அந்தக் காரணங்களை வரலாற்று வேதனைகள் என்றுதான் சொல்ல வேண்டும். தப்பாக நினைக்க வேண்டாம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுப்பை நடத்தியது இராஜாராஜ சோழன் அல்ல. அவருடைய மகன் இராஜேந்திர சோழன். அந்தப் படையெடுப்பிற்குக் கட்டளை போட்டது இராஜாராஜ சோழன். படையெடுப்பை நடத்திக் காட்டியது அவருடைய மகன் இராஜேந்திர சோழன். 


இராஜாராஜ சோழன் என்பவர் இராஜேந்திர சோழனின் தந்தையார். 
இராஜேந்திர சோழன் என்பவர் இராஜாராஜ சோழனின் மகனார்.

தென்கிழக்கு ஆசியாவில் சோழப் பரம்பரைக்குப் போட்டியாக இருந்த அத்தனை அரசுகளையும்; அந்த அரசுகளுக்குக் கீழ் இருந்த சிற்றரசுகளையும் அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள். அந்தப் படையெடுப்பு ஓராண்டு காலமாக நடந்து இருக்கிறது. காயங்கள் இன்னும் ஆறவில்லை.

அந்த அவலத்தின் கோலங்களில் பல பேரரசுகள் சின்னா பின்னமாகிப் போயின. பல சிற்றரசுகள் நார் நாராய்க் கிழிந்து சின்னா பின்னமாகிப் போயின. இந்தியர்களின் அரசுகள் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜாவானியப் பூர்வீக அரசுகளும்; போர்னியோ பூர்வீக அரசுகளும் மாட்டிக் கொண்டன. 

தாய்லாந்திலும் பர்மாவிலும் சில அரசுகள் மாட்டிக் கொண்டன. அதைப் பற்றி பின்னர் விரிவாகச் சொல்கிறேன்.

சைலேந்திரா பரம்பரையினரின் வழி வந்தது ஸ்ரீவிஜய பேரரசு. அந்த அரசு இழந்து போன தன் முகவரியை இன்று வரையிலும் தேடிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

ஆசிய வரலாற்றில் அந்தப் படையெடுப்பு ஒரு பெரிய கரும்புள்ளி என்றே சொல்ல வேண்டும். ஏன் என்றால் அந்தப் படையெடுப்பினால் பல இலட்சம் பேர் பலியானார்கள். கடார மண்ணில் மட்டும் பல்லாயிரம் பேர் இறந்து போய் இருக்கிறார்கள். 

சண்டை போட்டு மறைந்து போன வீரர்களின் பட்டியல் ஒரு புறம் இருக்கட்டும். அமைதியாய் ஆனந்தமாய் அப்பாவித் தனமாய் வாழ்ந்த ஆயிரம் ஆயிரம் பொதுமக்கள் அநியாயமாக இறந்து போய் இருக்கிறார்களே. அந்தப் பட்டியலை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஸ்ரீ விஜய பேரரசின் அரசர் சங்கராமா விஜயதுங்கவர்மன் நடை பயின்ற இடங்கள் எல்லாம் இப்போது காடு மேடுகளாய்க் காட்சி அளிக்கின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளாகப் புழுதிப் படலங்கள் நிறைந்து உயர்ந்து மலை போல் நிற்கின்றன. 

கடாரத்தின் வரலாற்றில் உச்சம் பார்த்த மலைகளில் வானுயர்ந்து நிற்கும் வானகத்து நெடு மரங்கள் தெரிகின்றன. நெடும் காலமாய்க் கதிரொளியைக் காணாமல் கலங்கி நிற்கும் சின்னச் சின்னச் செடி கொடிகள் தெரிகின்றன. அந்தப் பச்சைத் தாவரங்களுக்கு அடியில் ஓராயிரம் கடாரத்து மர்மங்கள் விசும்புவதும் கேட்கின்றன. 

அந்த மர்மக் குவியல்களைப் பற்றி முறையான ஆய்வுகள் செய்து மீட்டு எடுப்பதற்கு தடங்கலாகப் பல வரலாற்றுச் சித்தர்கள் எங்கேயும் இருக்கிறார்கள். இதற்கு இடையில் கடாரத்து வரலாற்றை மீட்டு எடுப்போம் என்று கங்கணம் கட்டும் இந்தியப் பெருமக்கள் எங்கேயும் இருக்கவே செய்கிறார்கள். 

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
02.05.2019

சான்றுகள்

1. Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press. ISBN 0195606868.

2. Vasudevan, Geeta (2003). Royal Temple of Rajaraja: An Instrument of Imperial Chola Power. Abhinav Publications. ISBN 0-00-638784-5.

3. Zvelebil, Kamil (1974). A History of Indian literature Vol.10 (Tamil Literature). Otto Harrasowitz. ISBN 3-447-01582-9.

4. S. R. Balasubrahmanyam, B. Natarajan, Balasubrahmanyan Ramachandran. Later Chola Temples: Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280), Mudgala Trust, 1979.


15 செப்டம்பர் 2023

Tengku Razaleigh Hamzah

Malaysians either forget or choose to forget or led to forget by unscrupulous leaders or are just plain ignorant!

I am referring to the wealth that Malaysia was given that is now taken for granted: oil and gas. 
Mahathir once retorted, his biggest fear is a man who goes by the name of Tengku Razaleigh Hamzah. Why?

Mahathir went on to explain: When Our Father of Independence Tunku Abdul Rahman managed to persuade the British to give Persekutuan Tanah Melayu (PTM-Malaya) independence, Tunku also asked the British to give PTM-Malaya, the oil and the gas that was given to the major oil companies before, for as long as there are the moon and the stars. 

The British had to say no to Tunku's request as the oil and the gas no longer belong to the British but already owned by the oil companies. Tunku had to concede defeat on that.

Then came along Tengku Razaleigh who proposed the idea of getting oil for UMNO in order for the party to be self reliant and not depend on contributions from others. This idea was not agreed by Tun Razak who told Tengku Razaleigh, UMNO is best kept away from business. Tengku Razaleigh obeyed.

However, Tengku Razaleigh still felt that the oil and the gas rightfully should belong to Malaysia, that by then has been merged to be Malaysia even though Tunku had failed to do so.

Tengku Razaleigh went on to embark on a mission to get this oil and gas back. In all honesty, all the oil and gas could have been his if he were to succeed to get it back because of his own initiative and hard work, not otherwise: Not even Malaysia.

However, his nationalistic fervour prompted him to fight to get back the oil and gas for Malaysia and not for himself, to ensure Malaysia will survive any financial onslaught in the future instead of just relying on tin and rubber that are controlled in trade by others. He wanted Malaysia to be financially independent for her future generations.

Once his objective is set, he went full steam ahead with assistance and help from friends to get the oil and gas back. Notable friends were Abdul Rahman Ya'kub, Chief Minister of Sarawak, Manan Othman and more. 

When he succeeded in "raiding" and getting the oil and gas, he sincerely and honestly gave every drop of oil and every volume of gas to the people of Malaysia through a company he formed called Petronas and went about to legitimise it through the Petroleum Development Act 1974.

Now, that, all my fellow Malaysians, is why Mahathir considers Tengku Razaleigh as his biggest threat. Tengku Razaleigh is a more superior being than Mahathir. Wonder what else?

Therefore my fellow Malaysians, please spare a second and remember, Malaysia may have been bankrupt had it not been for Tengku Razaleigh, with the Grace of God, by getting the oil and the gas for PETRONAS. It is worth trillions of Ringgit, more than any foreign investment or income that anybody can bring for all of us Malaysians. 

Sadly because of evil intents of unscrupulous forces, this legacy and great deed of Tengku Razaleigh has been subdued and even tried to be wiped out of our history. What a devilish act!

Besides oil and gas, Tengku Razaleigh also got back for Malaysia other assets for Malaysia that others have shamelessly claimed to be their work. Shameless idiots!

Time Malaysia and Malaysians accord Tengku Razaleigh Hamzah the rightful honour as this man never seek glorification for the deeds he had done for Malaysia and for all of us Malaysians. He even refused to accept the Tunship twice and never stole a single cent from the country.

Long Live Tengku Razaleigh Hamzah. We Love You.

07 செப்டம்பர் 2023

ஜெங்கிஸ்கான் - 1

தமிழ் மலர் - 07.09.2023

உலக வரலாற்றில் அதிகமாக நினைத்துப் பார்க்கப்படும் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் மகா அலெக்சாண்டர். இன்னும் ஒருவர் ஜெங்கிஸ்கான் (Genghis Khan). இவர்களுக்கு இடையில் அசோகர் வரலாம். சந்திரகுப்தர் வரலாம். ஜூலியஸ் சீசர் வரலாம். பாபர் வரலாம். நெப்போலியன் எனும் மாவீரனின் பெயரும் வரலாம். இன்னும் பலர் இருக்கின்றார்கள். பட்டியல் நீளும்.

ஆனால் இங்கே ஒரே ஒரு விசயம். அலெக்சாண்டரை நினைத்துப் பார்ப்பதைப் போல ஜெங்கிஸ்கானை வரலாறு நினைப்பது இல்லை. பெரிதாகப் போற்றுவதும் இல்லை. அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்கிறது.


அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று வரலாறு போற்றுகிறது. அதே சமயத்தில் ஜெங்கிஸ்கானை மாபெரும் கொலைகாரத் தலைவன் என்று சொல்கிறது. ஆமாம். ஜெங்கிஸ்கானின் கொலைவெறி ஆட்டத்தில் ஏறக்குறைய முப்பது நாற்பது மில்லியன் பேர் படுகொலை செய்யப் பட்டனர். இலட்சம் இல்லீங்க. மில்லியன்கள். உலக மக்கள் தொகை 11 விழுக்காடு குறைக்கப் பட்டதாகப் புள்ளி விவரங்கள் வேறு சொல்கின்றன. 

http://www.history.com/news/history-lists/10-things-you-may-not-know-about-genghis-khan

ஜெங்கிஸ்கானைக் குறை சொல்ல மனசு வரவில்லை. வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட ஓர் அஞ்சா நெஞ்சனாகவே எனக்குப் படுகிறது. ஆனால் பற்பல இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்று போட்டது தான் மனசைப் பெரிசாக வருடிச் செல்கிறது. ரொம்பவுமே வருத்துகிறது. மற்றபடி அவரை ஒதுக்கி வைக்க முடியவில்லை.


கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அப்புறம் நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் துணையாசிரியர் மதன் இப்படி சொல்கிறார். நெப்போலியனின் அகராதியில் 'முடியாதது' என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். ஆனால் ஜெங்கிஸ்கானின் அகராதியில் 'இரக்கம்' என்கிற வார்த்தை கிடையவே கிடையாது என்று சொல்கிறார்.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் என்கிற இந்திய மன்னனை வெற்றி கொண்டார். அவரை அலெக்சாண்டர் நடத்திய விதம் இருக்கிறதே அதை இன்று வரை வரலாறு புகழ்ந்து பேசுகிறது. 

அலெக்சாண்டர் அவரைப் பெருந்தன்மையோடு நடத்தினார். இது நமக்கு தெரிந்த விசயம். சிறைப் பிடித்த பிறகும் போரஸ் மன்னன் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப் பட்டார்.


போரில் தோற்ற போரஸ் மன்னன் தன்னை ஒரு மன்னனுக்கு உரிய தகுதியுடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய போது அலெக்சாண்டர் அவனுடைய வீரத்தைப் பாராட்டி அவனைத் தன் நண்பனாகவே இணைத்துக் கொண்டார்.

அந்த மாதிரி மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் கையில் போரஸ் சிக்கி இருந்தால் என்னவாகி இருக்கும் சொல்லுங்கள். கதை வேறு மாதிரியாக மாறிப் போய் இருக்கும். வறுத்து எடுக்கப் பட்டு இருப்பார். 

ஆகவேதான் வரலாறு அலெக்சாண்டரை மாபெரும் வீரனாகப் புகழ்கின்றது. செங்கிஸ்கானைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கின்றது. அது ஒரு வகையில் உண்மையாகவும் தெரிகின்றது.

ஒரு காலக் கட்டத்தில் ஜெங்கிஸ்கானின் பெயரைக் கேட்டாலே இந்த உலகமே குலை நடுங்கிப் போனது. ஜெங்கிஸ்கான் பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தவன். உலகத்தின் 16 விழுக்காட்டு நிலப் பரப்பைக் கட்டி ஆண்ட ஒரு ஜெங்கிஸ்கானை அவன் இவன் என்று சொன்னதற்காக மன்னித்து விடுங்கள். 


இந்த உலகில் பற்பல மாபெரும் சாம்ராஜ்யங்கள் மனுக்குல வரலாற்றையே மாற்றிப் போட்டு இருக்கின்றன. அந்த வரலாற்றுக்கு நினைவு தெரிந்த வரையில் உலகின் முதல் மாபெரும் பேரரசு எகிப்திய பேரரசாகும். கி.மு. 1850-களில் தொடங்கியது. கடைசியாக வந்தது பிரிட்டிஷ் பேரரசு. இவை எல்லாமே வரலாற்றையே திருப்பிப் போட்ட பேரரசுகள்.

இந்தப் பேரரசுகளில் பெரிதும் மறக்கப்பட்ட பேரரசு ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் மங்கோலியப் பேரரசு (Mongol Empire). ஆனால் ஒன்று. இதுவரை அமைந்த பேரரசுகளில் பிரிட்டிஷ் பேரரசிற்கு அடுத்து இந்த உலகில் மிக அதிக நிலப்பரப்பைக் கொண்ட பேரரசுவும் இந்த மங்கோலியப் பேரரசு தான். 

மங்கோலியப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அது 24,000,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆண்டது. அதாவது இந்த உலகின் நிலப்பரப்பில் 16 விழுக்காடு ஆகும். நம்ப மலேசியாவைப் போல 200 மலேசியா நிலத்தை மங்கோலியர்கள் ஆண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரமிப்பாக இருக்கிறது இல்லையா. 


இந்தப் பக்கம் பார்த்தால் பிரிட்டிஷார் ஆட்சி செய்தது 33,000,000 சதுர கிலோ மீட்டர். அதாவது உலக நிலப்பரப்பில் 22 விழுக்காடு. இங்கே ஒரு முக்கியமான தகவல். 

ஜெங்கிஸ்கான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தலைவர். துப்பாக்கி பீரங்கிகள் இல்லாமலேயே நாடுகளைப் பிடித்தவர். வெறும் கத்தி, ஈட்டி, வீச்சு அரிவாள்களை மட்டுமே பயன்படுத்தினார். துணைக்கு வந்தவை மங்கோலியக் குதிரைகள். 

நவீன ஆயுதங்களைக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷார். இவர்கள் ஆட்சி செய்த உலகம் புதிய உலகம். மங்கோலியர்கள் ஆட்சி செய்த உலகம் பழைய உலகம். ஆயிரம் ஆண்டு கால வேறுபாடு.

1219-ஆம் ஆண்டு பாரசீகத்தின் குவாரேஸ்மிட் (Khwarazmian Empire) நாட்டின் மீது ஜெங்கிஸ்கான் படை எடுத்தார். பாரசீகம் என்றால் இன்றைய ஈரான் நாடு. 


ஜெங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் ஒட்டு மொத்தமாகக் கொன்ற மக்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா. 12 இலட்சம் பேர். அதாவது ஈரான் சமவெளியில் வாழ்ந்த மக்களில் முக்கால் பங்கு. 

இப்படி எங்கு படை எடுத்தாலும் பேரழிவுகள். மங்கோலியர்கள் ஆட்சி செய்த காலம் 270 ஆண்டுகள். அவ்வளவு காலத்தில் அவர்கள் கொன்று குவித்த மக்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 6 கோடி. எண்ணிக்கையைப் பாருங்கள். 6 கோடி. 

இவை எல்லாம் ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. அதை முதலில் நினைவில் வைத்துக் கொள்வோம்.


ஜெங்கிஸ்கான் அப்படி ஒரு வெறி கொண்ட காட்டுமிராண்டித் தலைவனாகவே பார்க்கப் பட்டார். ஒரு செருகல். ஜெங்கிஸ்கானின் வழி வந்த மொகலாயர்களே தங்களைச் ஜெங்கிஸ்கானின் வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லையே. ஏன். 

தங்களைத் துருக்கியத் தலைவனான தைமூரின் (Timur; Tamerlane) வழித் தோன்றல்கள் என்று தானே கூறிக் கொண்டார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். பாபர், அக்பர், ஷாஜகான், அவுரங்கசிப் எல்லாம் இந்த ஜெங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் தானே. அதை யாராவது மறுக்க முடியுமா. 

ஜெங்கிஸ்கான் மங்கோலியாவை ஆட்சி செய்த காலக் கட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் சுவாலைகள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. அதுதான் வரலாற்று உண்மை. ஆனந்த விகடன் மதன் அவர்களும் அப்படித் தான் சொல்கிறார்.


ஜெங்கிஸ்கான் அந்த மாதிரி கொடூரமாகிப் போனதற்கு சிறுவயதில் அவர் வளர்க்கப்பட்ட முறைதான் காரணம். வேறு ஒன்றும் இல்லை. 

உலக மகா அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில். அந்த மகா அறிஞரிடம் படித்தவர்தான் மகா அலெக்ஸாண்டர். ஆக அவரிடம் படித்த மனிதர் எப்படி வாழ்ந்தார். மனம் கல்லாகிப் போன ஜெங்கிஸ்கான் எப்படி வாழ்ந்தார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதை முதலில் நினைவு படுத்துகிறேன். சரிங்களா. ஜெங்கிஸ்கானின் கதைக்கு வருவோம்.

கி.பி 1162-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெங்கிஸ்கான். அவர் பிறந்த காலக் கட்டத்தில் மங்கோலியர்கள் ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் மங்கோலிய வீரர்கள் போர் முறைகளில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் ஒன்றுபட்டால் அப்புறம் அவர்களை அசைக்கவே முடியாது. 

இதை எல்லாம் அறிந்த ஜெங்கிஸ்கானின் தந்தையார் தனது சொந்த பந்தங்களை எல்லாம் ஒன்றாக இணைக்க முயற்சி செய்தார். ஜெங்கிஸ்கானின் தந்தையார் பெயர் ஏசுகி (Yesugei). தாயாரின் பெயர் கோலூன் (Hoelun). ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கானுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. 


அப்போது ஜெங்கிஸ்கானுக்கு வயது ஒன்பது. ஜெங்கிஸ்கானின் உண்மையான பெயர் தெமுஜின் (Temujin). பொதுவாகவே மங்கோலியர்கள் சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இருந்தாலும் பன்னிரண்டு வயது வரை மாமனார் வீட்டில் தங்கி சேவகம் செய்ய வேண்டும். 

பன்னிரண்டு வயது ஆன பிறகுதான் திருமணம் நடக்கும். ஆக அவரைக் கொண்டு போய் மாமனார் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வருகிறார் ஜெங்கிஸ்கானின் தந்தையார். 


வரும் வழியில் ஒரு தார்த்தார் நாடோடி கும்பலைச் சந்திக்கின்றார். தார்த்தார்கள் எப்போதுமே மங்கோலியர்களின் பரம எதிரிகள். இருந்தாலும் அவருடன் சமரசம் பேச அழைத்தனர். அவர்களை நம்பிப் போன ஜெங்கிஸ்கானின் தந்தையார் ஏசுகிக்கு அன்பின் அடையாளமாக உணவு கொடுக்கப் பட்டது. 

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் இறந்து போனார். உணவில் விசம் கலந்து இருந்ததே அதற்குக் காரணம். இதை அறிந்த ஜெங்கிஸ்கான் அவசரம் அவசரமாக வீடு திரும்பினார். தன் தந்தையாரின் நாடோடிக் குழுத் தலைவர் பதவியைத் தனக்குக் தரும்படி செங்கிஸ்கான் கேட்டார். 

ஒன்பது வயதில் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதோடு அவருடைய குடும்பத்தாரையும் புறக்கணித்து விட்டனர். அப்புறம் ஜெங்கிஸ்கானின் குடும்பமே அங்கு இருந்து விரட்டி அடிக்கப் பட்டது.


ஜெங்கிஸ்கான் பருவம் அடைந்ததும் அவர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா. தன் பெயரை மாற்றிக் கொண்டதுதான். தெமுஜின் எனும் பெயரை ஜெங்கிஸ்கான் (Genghis Khan) என்று மாற்றிக் கொண்டார். 

'ஜெங்கிஸ்கான்' என்றால், மங்கோலிய மொழியில் 'முழுமையான போர்வீரன்' என்று பொருள். தன்னுடைய 16-ஆவது வயதில் தன் தந்தையார்; முன்பு ஏற்பாடு செய்த அதே பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் போர்த்தே (Borte).

அதன் பின்னர் சிறுவன் ஜெங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கிச் சித்ரவதை செய்யப் பட்டான். அதே சிறுவன் வாலிப வயதை அடைகிறான். ஒரு கட்டத்தில், படைகளைத் திரட்டிக் கொண்டு தன் தந்தையின் எதிரிகளோடு மோதுகிறான். அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்கள் சிறை பிடிக்கப் படுகின்றனர். 


இனிமேல்தான் ஜெங்கிஸ்கானின் சீற்றங்கள் கொப்பளிக்கப் போகின்றன. நாளைய கட்டுரையில் மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்:

1. Atwood, Christopher P. (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. New York: Facts on File. ISBN 978-0-8160-4671-3.

2. May, Timothy (2012). The Mongol Conquests in World History. London: Reaktion Books. ISBN 978-1-86189-971-2.

3. Barthold, Vasily (1992) [1900]. Bosworth, Clifford E. (ed.). Turkestan Down To The Mongol Invasion (Third ed.). Munshiram Manoharlal. ISBN 978-81-215-0544-4.

4. Porter, Jonathan (2016). Imperial China, 1350–1900. Lanham: Rowman & Littlefield. ISBN 978-1-4422-2293-9.

5. Ratchnevsky, Paul (1991). Genghis Khan: His Life and Legacy. Translated by Thomas Haining. Oxford: Blackwell Publishing. ISBN 978-06-31-16785-3.

6. Biran, Michal (2012). Genghis Khan. Makers of the Muslim World. London: Oneworld Publications. ISBN 978-1-78074-204-5. 

30 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 2

கார்த்திகேசுவின் அசல் பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். கொலைக் குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர். மரணதண்டனை விதிக்கப்பட்டவர். கிட்டத்தட்ட தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். இருப்பினும் அந்தத் தூக்குக் கயிறே அவரை மறுத்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் கதைதான் சின்னக்கிளி ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையிலும் வந்து போகிறது.


1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய் இருக்கிறார்கள். அங்கே நிரந்தமாகத் தங்குவதற்கு ஒரு வீட்டையும் பார்த்து இருக்கிறார்கள். அதன் பிறகு கிள்ளானில் இருக்கும் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக கோலாலம்பூர் அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 


சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து கார்த்திகேசு இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பா இறந்துவிட்டார். 

அதற்கு முன்னர் நடந்தவை. ஏறக்குறைய இரவு மணி 11.30 இருக்கும். அப்போது மலேசிய விமானச் சேவையைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் வேலை முடிந்து அந்த வழியாகப் போய் இருக்கிறார்கள். தன்னந்தனியாக இருட்டில் ஒரு கார் நிறுத்தி வைக்கப் பட்டு இருப்பதைக் கண்டனர். 

காருக்குப் பின்னால் ஒருவர் தலைக் குப்புறக் கீழே கிடந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் போலீசாருக்குத் தெரியப் படுத்தினார்கள்.


ஓர் அரை மணி நேரம் கழித்து போலீசார் வந்தனர். கீழே மயக்கமாகக் கிடப்பது கார்த்திகேசு என்று கண்டுபிடிக்கப் பட்டது. காருக்குள் ஜீன் சின்னப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை.

ஜீன் சின்னப்பாவின் தோள் பட்டையில் வழக்கமான கார் பாதுகாப்பு வார்ப்பட்டை. அவர் அணிந்து இருந்த நகைகள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. அவரின் கைப்பையும் அங்கேதான் இருந்தது. பணம், மற்ற சில்லறை அழகுச் சாமான்கள் எல்லாம் கைப்பையின் உள்ளே அப்படியே பத்திரமாகத்தான் இருந்தன. எதுவும் திருடு போகவில்லை.

கார்த்திகேசு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அவருக்கு நினைவு திரும்பியதும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். தான் சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது, தலைக்குப் பின்னால் பலமான அடி விழுந்தது. மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டதாகச் சொன்னார். மயக்கம் அடைவதற்கு முன்னால், மூன்று பேரைப் பார்த்ததாகவும் சொன்னார்.

ஜீன் சின்னப்பாவின் சவப் பரிசோதனையில் அவருடைய தொண்டை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் ஆறு ஆழமான கத்திக் குத்துக் காயங்கள்; கைகளில் நான்கு கத்திக் குத்துக் காயங்கள். மொத்தம் பதினாறு கத்திக் குத்துகள். அதை ஒரு கொலை என்று போலீசார் அறிவித்தனர். 


தீவிர விசாரணை நடைபெற்றது. குற்றவாளியைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ; அந்தக் கொலையாளி யார் எவர் என்று தெரிந்து கொள்வதில் தான் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். 

இறந்து போனவர் ஒரு சாதாரண பெண் அல்ல. நெகிரி செம்பிலான் அழகி. சிலாங்கூர் அழகி. மலேசிய அழகி. அத்துடன் மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு பிரபலம்.

ஒரு மாதம் ஆனது. மே 9-ஆம் தேதி. ஜீன் சின்னப்பாவின் மைத்துனர் கார்த்திகேசுவின் வீட்டுக் கதவைப் போலீசார் தட்டினர். ‘புதுசா செய்தி கிடைச்சுதா’ என்று கார்த்திகேசு கேட்டார். அவரிடம் கைவிலங்கைக் காட்டிய போலீசார், அவரைப் பார்த்து புன்னகை செய்தார்கள். கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை. 

அப்போது கார்த்திகேசுவிற்கு 37 வயது. இறந்து போன ஜீன் சின்னப்பாவிற்கு 31 வயது. செய்தி கேட்டு மலேசிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் பூனையா பால் குடித்தது. என்ன செய்வது. பால் குடிக்கிற பூனை கருவாட்டையும் தின்று இருக்கிறது. எப்படி தின்றது என்பதில் ஆளாளுக்கு ஒரு வியூகம். 


கொலை நடந்து ஓர் ஆண்டு முடிந்தது. 1980 ஜூன் 16-ஆம் தேதி. வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. குற்றவாளிக் கூண்டில் கார்த்திகேசு நிறுத்தப் பட்டார். 

அந்தக் காலக் கட்டத்தில் எல்லாக் கொலை வழக்குகளும் ஜூரி முறையில் நடைபெற்றன. அந்த வகையில் ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கிலும் ஜூரி முறைதான். கார்த்திகேசுவின் தலைவிதியை நிர்ணயிக்க ஏழு பேர் ஜூரிகளாக நியமிக்கப் பட்டனர். அனைத்து ஜூரிகளும் ஆண்கள். 

இங்கே ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வேண்டும். ஜூரிகள் அனைவரும் ஆண்களாக இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆணாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஓர் ஆண் சாதகத் தன்மை ஏற்படலாம். அப்படி ஒரு கருத்து அப்போது நிலவி வந்தது. 

ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆண். பாதிக்கப் பட்டவர் ஒரு பெண். ஜூரிகளின் தீர்ப்பு ஓர் ஆணுக்குச் சாதகமாக அமையலாம் எனும் ஓர் அச்சமும் நிலவியது. இருந்தாலும், தீர்ப்பு வேறு மாதிரியாக முடிந்து போனது.


அரசு தரப்பு சூழ்நிலைச் சான்றுகள் (Circumstancial Evidences) மூலமாக தன் வாதத்தை முன்வைத்தது. தன் அண்ணி ஜீன் சின்னப்பாவின் மீது கார்த்திகேசுவிற்கு அதீதமான விருப்பம் இருந்து இருக்கிறது. 

அந்த வகையில் ஜீன் சின்னப்பாவைத் தன் சொந்த உடைமைப் பொருளாக நினைத்து இருக்கிறார். பழகி இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஜீன் சின்னப்பாவின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்து எடுக்க சம்மதமும் தெரிவித்து இருக்கிறார். 

இந்தக் கட்டத்தில் ஜீன் சின்னப்பா, வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். இதைக் கார்த்திகேசு கண்டுபிடித்து விட்டார். தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதி; ஆத்திரம் அடைந்து இருக்கிறார். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சரியான நேரத்திற்காகப் பொறுமையைக் கடைபிடித்து இருக்கிறார். 

ஆக, பொறாமையின் காரணமாகதான் ஜீன் சின்னப்பாவை; கார்த்திகேசு கொலை செய்து இருக்கிறார் என்று அரசு தரப்பு வழக்கு வாதங்களை முன் வைத்தது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றுகள்; ஜீன் சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிட்டவர் டாக்டர் நரதா வர்ணசூரியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு சிங்களவர். திருமணமானவர். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையார். 


ஜீன் சின்னப்பாவின் கணவர் சின்னப்பா உயிருடன் இருக்கும் போதே, 1978-ஆம் ஆண்டில், அவர்களின் இரகசியமான உறவுகள் தொடங்கி விட்டன என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. 

டாக்டர் நரதா வர்ணசூரியா, ஜீன் சின்னப்பாவிற்கு எழுதிய 19 காதல் கடிதங்கள் சாட்சிப் பொருட்களாக, நீதிமன்றத்தில் காட்சி படுத்தப் பட்டன. அந்தக் கடிதங்களில் காணப்படும் அந்தரங்கமான விசயங்களைத் தவிர்த்து விடுகிறேன். 

அது நமக்குத் தேவை இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் ஆசைப்பட்டு ஏதாவது எழுதி இருப்பார்கள். பேசி இருப்பார்கள். அவற்றை எல்லாம் அம்பலப் படுத்துவது நாகரிகமன்று. 

தவிர, இந்தக் கட்டுரையைச் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படிக்கலாம். அல்லது அந்தப் பிள்ளைகளிடமே போய்ச் சேரலாம். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. தணிந்து போன நெருப்பில் மறந்து போன நிகழ்விற்கு மறுபடியும் சூடம் காட்டுவது ஒரு பெரிய பாவச் செயல் ஆகும். 

ஜீன் சின்னப்பா அணிந்து இருந்த மேலாடையும் நீதிமன்றத்தில் காட்டப் பட்டது. முழுக்க முழுக்க இரத்தக் கறை படிந்த மஞ்சள் நிற ஆடை. ஆனால், கொலை செய்யப்படுவதற்குப் பயன்படுத்தப் பட்ட எந்த ஓர் ஆயுதமும் சாட்சியத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு 50-க்கு 50 எனும் நிலையில் இருந்தது. 

அந்தச் சமயத்தில்தான் அரசு தரப்பு, திடீரென்று ஒரு துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. ஜீன் சின்னப்பாவின் உறவினர் ஜெயதிலகா என்பவர்தான் அந்தத் துருப்புச் சீட்டு. 

கொலை நடந்த பத்தாவது நாள் அந்த உறவினர் கார்த்திகேசுவைப் போய்ப் பார்த்து இருக்கிறார். அப்போது கார்த்திகேசு அவரிடம் ‘நிலைமை மோசம் அடைந்தால், உள்ளே போகத் தயாராக இருக்கிறேன். உயிரோடு இருக்க அந்தப் பெட்டைக் கழுதைக்கு தகுதி இல்லை’ என்று சொல்லி இருக்கிறார். 

இந்தச் சொற்கள்தான் கார்த்திகேசுவின் தலையெழுத்தையே மாற்றிப் போட்டன. எதிர்தரப்பு எவ்வளவோ போராடிப் பார்த்தது. கார்த்திகேசு ஒரு நல்ல மனிதர். நாணயமானவர். மனோவியல் கல்வி கற்றவர் என்று சொல்லி பல சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கு 38 நாட்கள் நடைபெற்றது. 58 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். ஜூரிகள் ஒன்றுகூடி ஐந்து மணி நேரம் விவாதம் செய்தனர். கடைசியில் 5-க்கு 2 எனும் வாக்குப் பெரும்பான்மையில், கார்த்திகேசு குற்றவாளி என்று தீர்ப்பானது. சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

கார்த்திகேசுவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தார். பொதுவாகவே, மலேசிய ஜூரிகள் அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் தூக்குத் தண்டனையை வழங்க மாட்டார்கள். மலேசிய நீதிமன்ற வரலாறு சொல்கிறது. ஆனால், நடந்து விட்டது.

கார்த்திகேசு காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சிறை வாழ்க்கை. தூக்குத் தண்டனைக்கு காத்து இருந்தார். கார்த்திகேசுவிற்கு ஆயுள் கெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு வழக்கில் ஒரு பெரிய திருப்பம். 

அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்ன ஜெயதிலகா (Bandhulanda Jayathilake), தான் பொய்யாகச் சாட்சியம் சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 

மலேசியாவே கிடுகிடுத்துப் போனது. அது ஒரு பயங்கரமான திருப்பம். யாரும் எதிர்பார்க்காத திருப்பம். தவறுதலாகத் தெரியாமல் சொல்லி விட்டதாக ஜெயதிலகா சத்தியப் பிரமாணம் செய்தார். 

அப்புறம் என்ன. பொய்ச் சாட்சியம் சொன்னதற்காக, ஜெயதிலகாவிற்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை (Prison for Perjury). 1981 மே மாதம் 20-ஆம் தேதி, ஜெயதிலகா குற்றவாளியாக உள்ளே போனார். சுதந்திர மனிதனாகக் கார்த்திகேசு வெளியே வந்தார். ஜெயதிலகா சிறைக்குப் போய் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவரும் இறந்து போனார்.

வெளியே வந்த கார்த்திகேசு திருமணம் செய்து கொண்டார். ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினார். கிள்ளானில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கோலா சிலாங்கூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்துகேசு, ஜீன் சின்னப்பாவின் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் இப்போது நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். மூத்த மகள் வழக்கறிஞராகச் சேவை செய்கிறார். அவர் ஒரு மருத்துவர் என தவறுதலாக நேற்று பதிவு செய்து விட்டேன். ஜீன் சின்னப்பாவின் மூத்த மகளுக்கு இப்போது வயது 50-ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்த கார்த்திகேசு தன்னுடைய 81-ஆவது வயதில், 27.08.2023-ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  

ஜீன் சின்னப்பாவைப் பற்றி, ஆஸ்ட்ரோ ஒரு தொடர் ஆவணப் படத்தை 2008 டிசம்பர் 21-இல், ஒளிபரப்பு செய்தது. ஜீன் சின்னப்பாவின் சகோதரர் பிரியான் பிரேராவையும்; ஜீன் சின்னப்பாவின் மகளையும் பேட்டி எடுக்க ஆஸ்ட்ரோ, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. அவர்கள் இருவரும் மறுத்து விட்டனர். அலெக்ஸ் ஜோசி என்பவர் ‘தி மெர்டர் ஆப் எ பியூட்டி குயின்’ (The Murder Of A Beauty Queen) எனும் ஒரு நூலையும் எழுதி இருக்கிறார். 

ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்தது யார் என்று இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்தவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை அவரும் ஜீன் சின்னப்பா மாதிரி போய்ச் சேர்ந்து விட்டாரா. தெரியவில்லை.

இந்தக் கட்டுரையை ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்ப்போம். மறைந்து போன ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையைக் கிண்டி, சீண்டிப் பார்ப்பதாக நினைக்க வேண்டாம். ஜீன் சின்னப்பா இறக்கும் போது அவருக்கு வயது 31. நமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண்மகளைக் கெடுத்துக் கலைத்துவிடும் என்று ஏற்கனவே சொன்னேன். அதை விதி என்று சொல்வதா இல்லை கர்மவினை என்று சொல்வதா. 

அது எந்த அளவுக்கு உண்மை. கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஜீன் சின்னப்பா; கார்த்திகேசு இருவரின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டிக் கொள்வோம்.

29 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 1

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஓர் ஆண்மகனைத் தொலைத்துவிடும் என்பார்கள். அதே போலத்தான் ஒரு பெண்ணுக்கும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் அவளைக் கெடுத்துக் கலைத்துவிடும். இவை உலகம் பார்த்த உண்மைகள். 

இருந்தாலும் மலேசியர்கள் பார்த்த ஒரு பயங்கரமான சம்பவம் வருகிறது. சாமான்ய மனிதர்களை உலுக்கிப் போட்ட ஓர் உண்மையான நிகழ்ச்சி. 



அந்த நிகழ்ச்சிதான், இன்றைய சின்னக் கிளி ஜீன் சின்னப்பா கொலை வழக்கு. படியுங்கள். பணம் புகழ் வந்து சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். 

அதையும் தாண்டிய நிலையில், அதை விதி என்று சொல்வதா இல்லை இல்லை கர்மவினை என்று சொல்வதா. அதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மலேசியா எப்போதும் அதன் அழகிய கடற்கரைகள், அழகிய தீவுகள், அழகிய பாரம்பரியத் தளங்கள், அற்புதமான உணவுகள் மற்றும் ஒற்றுமை உணர்வுகளுக்காக நன்கு அறியப்பட்டது. ஆனாலும் மற்ற நாடுகளையும் மற்ற நகரங்களையும் போலவே, மலேசியாவும் அதன் சொந்த இருண்ட கதைகளைக் கொண்டது. சரி.


ஜீன் சின்னப்பா கொலை வழக்கில் முக்கியமான கதாபாத்திரமாகத் திகழ்ந்தவர் கார்த்திகேசு. ஆசிரியர்ப் பயிர்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் கொழுந்தனார். 

கார்த்திகேசு இரு நாள்களுக்கு (27.08.2023) முன்னால் கிள்ளான் தெலுக் பூலோய் புறநகர்ப் பகுதியில் காலமானார். அவருக்கு வயது 81. அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை... 

1970-களில் ஜீன் பிரேரா சின்னப்பா சிரம்பானில் ஓர் ஆசிரியை. ஆங்கிலமொழி கற்றுக் கொடுத்தார். பின்னர், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் பெண்கள் பள்ளி, பெட்டாலிங் ஜெயா சுல்தான் அப்துல் அசீஸ் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 


இவருடைய முழுப் பெயர் பிலோமினா ஜீன் பிரேரா. தகப்பனாரின் பெயர் வி. பிரேரா. 1972-இல் திருமணம் ஆனதும், சின்னப்பா எனும் தன்னுடைய கணவரின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். 

ஜீன் சின்னப்பா கொலை செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய கணவர் சின்னப்பாவும், ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

ஜீன் சின்னப்பாவும் அவருடைய கணவரும் பயணம் செய்த கார் ஒரு மரத்தில் மோதியது. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் இறந்து போனார். ஜீன் சின்னப்பா, காரில் இருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். 


இருந்தாலும் சொற்ப காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். ஜீன் சின்னப்பா விசயத்தில் விதி கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டது. 1978 வருடப் பிறப்பு தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் தனேந்திரன். வயது ஏழு. இரண்டாவது மகள் ரோகினி. வயது ஐந்து. மூன்றாவது மீலினி. வயது மூன்று. அவர்கள் சவப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, அங்கே என்னதான் நடக்கிறது என்று விவரம் தெரியாத வெள்ளந்தி பருவம். 

அம்மாவின் உயிரற்ற உடலைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்து நின்றார்கள். ஆனால், இப்போது அந்தப் பெண் பிள்ளைகளில் ஒருவர் மலேசியாவில் ஒரு பிரபலமான வழக்குரைஞர். யார் எவர் என்று கேட்க வேண்டாம். நானும் சொல்லப் போவது இல்லை.

1971-ஆம் ஆண்டு. ஜீன் சின்னப்பா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். மாநிலத்தின் நம்பர் ஒன் அழகியானார். பின்னர் சிலாங்கூர் மாநில அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். அதிலும் நம்பர் ஒன் அழகி; சிலாங்கூர் அழகியாக வாகை சூடினார். 


அதற்கு அப்புறம் மலேசியாவின் அழகிப் பட்டம். ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில், முதலாவது இடம் தவறிப் போனது. இரண்டாவது இடம் கிடைத்தது.

இருந்தாலும் அவர் எப்போதுமே ஊரார் மெச்சிய பைங்கிளியாகவே வாழ்ந்தார். புகழ் வானில் கொடி கட்டிப் பறந்தார். பார்த்தால் பற்றிக் கொள்ளும் காந்தர்வப் பார்வை. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சாமுத்திரிகா இலட்சணம். 

அந்தக் காலத்தில் அவரைப் பார்த்துக் கிரக்கம் அடையாத மண்ணின் மைந்தர்கள் இருந்து இருப்பார்களா என்று தெரியவில்லை. அவருடைய திருமணத்திற்கு முன்னால் நடந்ததைத்தான் சொல்கிறேன்.

என்ன செய்வது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒரு நல்ல நாள் பார்த்து, அழகு, ஆடம்பரம், புகழ் என்கிற இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் போட்டன. ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையில் கூட்டாஞ் சோறு ஆக்கிப் போட்டு நன்றாகவே படையல் செய்து விட்டன. 

44 வருடங்களுக்கு முன்னால், ஒரு நாள் நடுநிசி நேரம். அவர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். அந்த நிகழ்ச்சி மலேசியாவையே உலுக்கிப் போட்டது. அது மறக்க முடியாத ஒரு மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி. பார்க்கிறவர்கள் எல்லாரும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிதான் பேசிக் கொள்வார்கள்.


கணினி கைப்பேசிகள், பேஸ்புக், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்; எதுவுமே இல்லாத காலம். அதனால், பட்டித் தொட்டிகள், சந்து பொந்துகளில் எல்லாம் சாறு பிழியாத கசமுச பேச்சுகள். அப்போதைக்கு அது சூடான பட்டி அரங்கம் என்றுகூட சொல்லலாம். 

ஜீன் சின்னப்பா என்கிற அந்த அழகி, 1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் சுபாங் விமான நிலையத்திற்குப் போகிற பாதையில் பில்மோர் தோட்டத்திற்குப் பக்கத்தில் கொலை செய்யப்பட்டார். 

இந்த இடம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அப்போது சுபாங் விமான நிலையம் மட்டுமே இருந்தது. பெரிய பெரிய சாலைகள் எதுவுமே இல்லை. பெட்டாலிங் ஜெயா கிள்ளான் நெடுஞ்சாலை தான் பெரிய விரைவுச்சாலை. பத்து தீகாவில் இருந்து சுபாங் டாமன்சாரா ஆர்.ஆர்.ஐ. போன்ற இடங்களுக்குச் செல்வது வழக்கம். நினைவில் உள்ளது. சரி. 

அப்போது ஜீன் சின்னப்பாவுக்கு வயது 31. அவருடைய பிறந்த தேதி 26.10.1947. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு விரிவுரையாளர். பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். 



இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கார்த்திகேசு இருக்கிறாரே, இவர்தான் கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் மைத்துனர்; கணவர்வழி மைத்துனர். அதாவது ஜீன் சின்னப்பா கணவரின் கூடப் பிறந்த தம்பி. 

1980-ஆம் ஆண்டு, அழகி ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. டாக்டர் நரதா வர்ணசூர்யா என்பவருக்கு ஜீன் சின்னப்பா எழுதிய காதல் கடிதங்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. 

தொடர்ந்து பல நாட்கள் அந்தக் கடிதங்களைப் பற்றிய விவாதங்கள். நீதிமன்ற வழக்கைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அன்றாடம் ஒரு பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதும். பலருக்கு இடம் கிடைக்காமல் போகும். வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். 

இந்தக் கொலை வழக்கை, மற்ற மற்ற வழக்குகளைப் போல ஒரு சாதாரண வழக்கு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சம்பந்தப் பட்டவர்கள் நன்கு பிரபலமானவர்கள். இறந்து போனவர் ஒரு மலேசிய அழகி. கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டவர் ஒரு பிரபல விரிவுரையாளர். அதுவும் மனோதத்துவ நிபுணர். அடுத்து சொந்த அண்ணியையே கொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டு. 

இந்த இரண்டு மூன்று முக்கியமான காரணங்களினால் அந்த வழக்கு மலேசிய அளவில் மிகப் பிரபலம் அடைந்தது. இதைவிட படு மோசமான கொலைகள் எல்லாம் மலேசியா பார்த்து இருக்கிறது. சொல்லப் போனால் ஜீன் சின்னப்பா கொலை வழக்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய பயங்கரமான கொலை என்று சொல்லிவிடவும் முடியாது.

  • 1974-இல் மலேசியாவின் தலைமை போலீஸ் ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ரகுமான் ஆசிம் கொலை; 
  • 1992-இல் அரிபின் அகாசு  (Ariffin Agas) கொலை வழக்கு (ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட மிக மோசமான நிகழ்வு)
  • 1993-இல் பகாங், பத்து தாலாம் சட்டமன்ற உறுப்பினர் மசுலான் இட்ரிஸ் கொலை (மோனா பெண்டி கொலை வழக்கு); 
  • 2003-இல் கோலாலம்பூர் பங்சாரில் கென்னி ஓங் கொலை; 
  • 2003-இல் கோலாலம்பூர் ஸ்ரீ அர்த்தாமாஸ் நோரித்தா சம்சுடின் கொலை; 
  • 2004-இல் சபா மாநிலத் துணையமைச்சர் டத்தோ நோர்ஜான் கான் கொலை; 
  • 2006-இல் அல்தான்தூயா கொலை; 
  • 2007-இல் கோலாலம்பூர், வங்சா மாஜு நூருல் சாஸ்லின் ஜாசிமின் எனும் எட்டு வயதுச் சிறுமி கொலை; 
  • 2010-இல் பந்திங் டத்தோ சுசிலாவதி  கொலை; 
  • 2013-இல் அராப் மலேசிய வங்கி நிறுவனர் உசேன் அகமாட் நஜாடி கொலை. 
இன்னும் இருக்கின்றன. அவை அனைத்தும் மறக்க முடியாத துர்நிகழ்ச்சிகள். இதில் ஜொகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கிருஷ்ணசாமியின் கொலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆனால், அதற்கு முன்னரே ஜீன் சின்னப்பாவின் கொலை மிகப் பிரபலமாகிப் போனது. சரி. என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய்விட்டு, கிள்ளானில் இருக்கும் தங்கள் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 

சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பாவின் கதை முடிந்து விட்டது. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.