தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2

தமிழ்மலர் - 08.10.2018 - திங்கள் கிழமை

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் உயிர் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்கு உயிர்க்காற்று கொடுக்க மலேசியத் தமிழர்கள் சட்டச் சடங்குகள் வழியாகப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.
 
 
மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பிரிவில் (Article 152 Federal Constitution) தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். ஆகவே அந்த மொழியைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு தனி உரிமை உண்டு. மறுபடியும்... மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.
 

அந்த உரிமைப் போராட்டம் தான் இப்போது இங்கே வேறு கோணத்தில் பயணிக்கின்றது. தாய்மொழியும் வேண்டும். அந்தத் தாய்மொழிக்குத் துணையாக வேறு ஒரு தனி மொழியும் வேண்டும். அந்தத் தனிமொழி ஆங்கில மொழியாக இருக்கலாம். அல்லது மலாய் மொழியாகவும் இருக்கலாம்.

அந்த மொழிச் சாரல்களின் தூரல்களில் தான் இப்போது இரு மொழித் திட்டம் இரு பரிவட்டங்களுடன் நர்த்தனம் ஆடுகின்றது. ஆனால் இன்னும் ஒரு முழுமையான அரங்கேற்றத்தைப் பார்க்க முடியவில்லை. தொட்ட குறை விட்ட குறையாகத் தடுமாறிக் கொண்டு நிற்கிறது.

டி.எல்.பி. எனும் இரு மொழித் திட்டம் வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. வேண்டாம் என்கிறது இன்னொரு தரப்பு. இதில் எந்தத் தரப்பினரின் வாதம் நிலைக்கப் போகிறது. தெரியவில்லை. உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. இது ஒரு கயிறு இழுக்கும் போட்டியாகவே தெரிகிறது.

ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை உரு தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் ’ஆட்டோமெட்டிக்காக’ அழிந்துவிடும்.
 

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து போய் விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகளும் அழிக்கப்பட்டு விட்டன.

2016-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 196 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2016-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 7102 மொழிகள் பேசப் பட்டன. ஆனால் இந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 7097 மொழிகளாகக் குறைந்து விட்டது. அதாவது ஒரே வருடத்தில் மட்டும் ஐந்து மொழிகள் காணாமல் போய் விட்டன.

அந்த வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்ள வேண்டும். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

மலேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. இரு மொழித் திட்டம் 2003-ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இடையிடையே தலைதூக்கித் தகை கவிழ்ந்து கடைசியில் மீண்டும் 2016-ஆம் ஆண்டில் வலை பின்னியது.
 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் கற்பிக்கப் படுகின்றன.

2016 டிசம்பர் 27-ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி ஒரே ஒரு சீனப்பள்ளி; 49 தமிழ்ப் பள்ளிகள்; 572 தேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. அமலாக்கம் செய்யப்பட்டது.

கணிதப் பாடமும் அறிவியல் பாடமும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப் படுத்தப்படும். இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவத்தில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் பலவிதமான எதிர்ப்புகள். 2017 மே மாதம் 20-ஆம் தேதி புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் ஓர் அமைதிப் பேரணி.

இருமொழித் திட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தினார்கள். அமைதியாக அழகாக நெஞ்சக் கிடக்கைகளை அள்ளிக் கொட்டினார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. ஒரு மொழியை அழித்தால் ஓர் இனத்தை அழிக்கலாம். ஆனால் அந்த இனத்திலேயே வன்முறைகளைத் தூண்டிவிட்டு தெரியாமல் மாதிரி இருந்து விட்டால் என்ன நடக்கும். அந்த இனம் தன்னைத் தானெ அழித்துக் கொள்ளும். இது உலகார்ந்த பார்வை.

புத்ரா ஜெயா அமைதிப் பேரணிக்கு முன்னர் நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டனக் கூட்டங்கள். 2016 டிசம்பர் 31-ஆம் தேதி கிள்ளான் லிட்டல் இந்தியா வளாகத்தில் இருமொழித் திட்டத்திற்கு எதிராக ஆட்சேபப் பேரணி.
 

இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்வதற்குச் சில வரையறைகள் சில வரைமுறைகள் உள்ளன. முதலாவதாக அந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். சரிங்களா.

அப்புறம் அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டும் தான் ரொம்ப முக்கியம்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிக்க முடியும். இப்படி ஒரு பரிசோதனை முறைக்கு முதலில் 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.

தேசியப் பள்ளிகளில் மட்டுமே முதலில் அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும் பாருங்கள். தமிழ்ப் பள்ளிகளில் தான் அதன் தாக்கங்கள் வேகமாகப் பரவத் தொடங்கின. ஏன் என்று தெரியவில்லை. உலக மொழியான ஆங்கில மொழியின் மீதுள்ள ஆர்வம் அல்லது நம்பிக்கை. அவை காரணங்களாக இருக்கலாம். சொல்ல முடியாது.

இருமொழித் திட்டத்தைப் பற்றி சீனப் பள்ளிகள் கொஞ்சம்கூட கவலைப் படவில்லை. ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஒரே ஒரு பள்ளிதான் முதலில் தஞ்சாவூர் பொம்மையாக நின்றது. அதுவும் 2017-ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்தில் இருந்து பின் வாங்கியது.
 

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே நன்றாகவே தெரியும். அதன் காரணமாகத் தான் முதலில் தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்தில் இணைப்பதற்கு முயற்சி செய்தார்கள். இருந்தாலும் மலாய் சமூகத்தில் இருந்தும் பல்வேறு வகையிலான பல்வேறு எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில மொழிப் பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.

அப்படி இல்லாமல் மற்ற மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறான மாற்றுக் கருத்துகளை முன்வைத்தார்கள்.

நம்முடைய தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் இன்று வரை தொடர்கின்றன. அவை என்ன கருத்துகள் என்பதைப் பார்ப்போம்.

செல்லியல் செய்தி ஊடகத்தில் தேனீ என்பவர் தன்னுடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார். (சான்று: செல்லியல் 28.12.2016)

தமிழ்ப் பள்ளியில் இருமொழி திட்டம் வேண்டுவோருக்கு தமிழ் மொழி என்பது ஊறுகாய். ஆனால் நமக்கோ தமிழ் மொழி சோறு போன்றது. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. தமிழை ஊறுகாய் போன்று தொட்டுக் கொண்டு ஆங்கிலத்தைச் சோறு போன்று சாப்பிடுவார்கள். தமிழ் பற்று இல்லாத தமிழர் தத்தம் பிள்ளைகளை மற்ற மொழி பள்ளிகளில் சேர்த்துச் செம்மை அடைவதை நாங்கள் தடுக்கவில்லை. தேர்வு உங்களுடையது.
 

#மெல்லத் தமிழ் இனிச் சாகும்# என்று பாரதி சொன்னார். சரிதானே. அதை நாம் நம் கண் முன்னே பார்க்கப் போகிறோம். அதுவும் சரிதானே.

கோவிந்தசாமி அண்ணாமலை என்பவர் தன் கருத்தை இப்படிச் சொல்கிறார். தாய் மொழிக் கல்வியே சிறந்தது என்பது குறித்து கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தமிழ் மேல் பற்று வைத்து இருக்கிறார்கள்.

அதே சமயம் இரு மொழி திட்டம் என்று வரும் பொழுது அதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் இடை நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களிடம் ஆங்கில மொழி வளத்தில் தோற்று விடக் கூடாது என்ற காரணத்தினால் தான். (சான்று: செல்லியல் 31.12.2016)

தாய் மொழி பயன்பாட்டுத் திட்டத்தில் நம் மலேசியத் தமிழர்கள் அவசரப் பட்டு கண்மூடித் தனமாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது என்று டி. பழனிச்சாமி என்பவர் கருத்து கூறுகிறார். (சான்று: செல்லியல் 05.01.2017)

இதற்கிடையில் 2017 ஜூலை மாதம் 28-ஆம் தேதி தாய்மொழி வழிக்கல்வி எனும் கலந்துரையாடல் கூடிய கருத்தரங்கம் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் நியூப் மண்டபத்தில் நடைபெற்றது. இது தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி.

தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதை நிலைநிறுத்துவது; இருமொழி பாடத் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறை படுத்துவதை மறுப்பது; இவையே அந்த நிகழ்ச்சியின் தலையாய அம்சங்களாக இருந்தன.

இருமொழி பாடத்திட்டம் தமிழ் பள்ளிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்; மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்து வந்து உள்ள தமிழ்வழிக் கல்வியை வலுப்படுத்த வேண்டும். தொடர்ந்து நிலைக்கச் செய்ய வேண்டும் எனும் கருத்துகளை வலியுறுத்தும் சிந்தனைக் களமாகவும் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

இருமொழித் திட்டத்தில் மலேசியத் தமிழர்களிடம் இரு வெவ்வேறான கருத்துகள் நிலவி வருகின்றன.

முதல் கருத்து: இருமொழித் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள். அவற்றையும் பார்க்க வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதை இருமொழித் திட்டத்தின் மூலம் சரி செய்யலாம்; எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இந்த மலேசிய நாட்டில் நிலைத்து நீடிக்க வேண்டும்; அப்படி நீடிக்க வேண்டும் என்றால் இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

மற்ற இன மாணவர்களுடன் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் போட்டியிட வேண்டி இருக்கிறது. போட்டி போட்டால் தான் முன்னேற முடியும். இதுவும் ஒரு முன்னிலை அணுகுமுறை;

அந்த வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால் அவர்கள் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பதே நல்லது. சிறப்பாக அமையும்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப் பள்ளிகள் பக்கமே தலைவைத்துப் படுக்காத தமிழர்களும் மலேசியாவில் இருக்கவே செய்கிறார்கள். நீங்களே பார்க்கலாம். அவர்களை நாம் குறை சொல்லவில்லை. பொருளாதார வகையிலும் சமூகத் தகுதி வகையிலும் பார்த்தால் அவர்களை மேல் தட்டுத் தமிழர்கள் என்று சொல்லலாம்.

ஆக இந்தத் திட்டத்தின் வழி அவர்களையும் ஒரு கணிசமான அளவுக்குத் தமிழ்ப் பள்ளிகளின் பக்கம் ஈர்க்க முடியும். இந்தத் தரப்புக்கு பேராசிரியர் என் .எஸ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இருமொழித் திட்டத்தில் அந்தத் திட்ட ஆதரவாளர்களின் நகர்வுகளில் அரசியல்வாதிகள் சிலர் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் கேள்வி. விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

மேல்நிலைக் கல்விமான்கள் சிலர் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களை அணுகி உள்ளனர். அந்தக் கல்விமான்கள் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தங்களின் கருத்துகளைத் தனிப்பட்ட வகையில் முன்நிலைப் படுத்தி வந்தனர்.

அந்தத் தலைமை ஆசிரியர்களிடம் இருமொழித் திட்டத்தில் தங்களின் பள்ளிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சிடம் விண்ணப்பம் செய்யுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். சில கட்டங்களில் நெருக்குதலும் கொடுத்து இருக்கின்றனர்.

பேராக், கெடா, சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர்கள் சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.

ஒரு நடுநிலையில் இருந்து இருமொழித் திட்டப் பிரச்சினையைப் பார்க்கிறோம். அவ்வளவு தான். இங்கே நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எனும் பாகுபாடு இல்லை.

(தொடரும்)

மேற்கோள்கள்:

1. Malaya Labour Ordinance in 1912 - FMS government introduced the Labor Code of 1923 with new provisions to make it made mandatory for each plantation having ten or more resident children of school-going-age to provide Tamil schools.

2. Tamil schools were nevertheless few until 1912 when the Labor Code Ordinance required an estate with ten children of school age (defined as between 6 and 12 years) to provide schooling facilities. Planters were obliged to open Tamil schools on estates, but most of the schools in the rubber estates were of poor standards.