பத்து வயது தேவதாசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்து வயது தேவதாசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 அக்டோபர் 2014

பத்து வயது பால்ய தேவதாசிகள்

[மலேசியா தினக்குரல் 20.06.2014-இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை. கடந்த 18 மாதங்களில் 326 கட்டுரைகளை ஒவ்வொரு நாளும் பிரசுரித்து உதவிய ஆசிரியர் பி.ஆர். ராஜன் அவர் தம் ஆசிரியர் குழுவினருக்கு நன்றிகள்.]

தேவதாசி முறையை இந்தியாவில் இருந்து அழித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இன்னும் இருக்கிறது. இன்னும் மஞ்சள் பூவோடு நன்றாகவே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. காதும் காதும் வைத்த மாதிரி, அந்தச் சடங்கு ரொம்ப ரொம்ப ரகசியமாகவும் நடந்து வருகிறது. 



தேவதாசி முறையை 1947-ஆம் ஆண்டே இந்தியா தடை செய்து விட்டது. இருந்தாலும், எங்கேயாவது அது ஓர் இடத்தில், எப்படியாவது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில்லறை ஆண்களுக்குத் தீனி போடும், பாவம் இரண்டு கால் ஜீவன்களும் வாழவே செய்கிறார்கள். மக்களும் தெரிந்தும் தெரியாதது மாதிரி போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். வருகிறார்கள் போகிறார்கள். வாழ்த்திவிட்டுச் செத்தும் போகிறார்கள்.

எட்டு பத்து வயதுச் சிறுமிகள்


இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் தார்வாட் என்கிற ஒரு கிராமப்புற நகரம். அந்த நகரத்தின் எல்லையில் சாவுந்தாடி என்கிற ஒரு புறநகர்க் கிராமம். இங்கு ஜெல்லம்மா என்கிற ஒரு தெய்வம். அதற்கு ஒரு சின்னக் கோயில். இந்தக் கோயிலில் இன்றும் தேவதாசி முறை உயிரோடு  இருக்கின்றது. 




ஜெல்லம்மா குலதெய்வத்துக்கு சிறுமிகள் தாரை வார்த்துக் கொடுக்கப் படுவது, அங்கே அனைவருக்கும் தெரிந்த விஷயம். தாரை வார்க்கப் படுவது பெரிய பெண்கள் இல்லை. எல்லாம் எட்டு பத்து வயதுச் சிறுமிகள். இந்தச் சிறுமிகள், பெரிய மனுஷிகள் ஆவதற்கு முன்னாலேயே கோயிலுக்கு தானம் செய்யப் படுகிறார்கள். அவர்கள் பெரிய மனுஷியானதும் ஒரு பெரிய அணுகுண்டு ரெடியாக இருக்கும். அவர்கள் யாரையும் திருமணம் செய்யக் கூடாது. தங்களின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எவருடனும் தொடர்புகள் வைத்துக் கொள்ளக் கூடாது.


தேவதாசி முறை என்பது பெண்கள் மீது திணிக்கப்பட்ட சுரண்டல்

ஆனால், ஆலய குருக்கள், கிராமத் தலைவர்கள், பணக்கார பெரிய மனிதர்களுக்கு, இந்தச் சிறுமிகள் சேவை செய்ய வேண்டும். என்ன சேவை தெரியுமா. அவர்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும். அதாவது பாலியல் சேவை செய்ய வேண்டும். இது தெய்வத்துக்கு செய்கின்ற ஒரு பெரிய திருத் தொண்டு என்று கிராம மக்கள் நம்புகின்றனர். நம்ப வைக்கப் படுகின்றனர். ஆலயமே கதி என்று வாழ்நாள் முழுவதும், அந்தச் சின்னஞ் சிறுசுகள் அங்கேயே இருக்கிறார்கள். தப்பிச் செல்ல முடியாமல் அங்கேயே செத்தும் போகிறார்கள்.




அப்படியே தப்பிச் செல்ல முயற்சி செய்தால், அவர்களைச் சமுதாயம் மன்னிக்காது. அது ஒரு தெய்வக் குற்றம். அப்படி ஒரு பயமுறுத்தல். ஆக, தேவதாசி முறை என்பது பெண்கள் மீது திணிக்கப்படும் ஒரு வகையானச் சுரண்டல். அப்படித்தான் சொல்ல வேண்டும்.

பெரிய மனுஷன்களின் வைப்பாட்டி

சமூக ரீதியாக, பின் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமிகள், கடவுளின் பெயரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப் படுகின்றார்கள். அதுதான் சத்தியமான உண்மை. இந்தியாவில் இந்தத் தேவதாசி முறை இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனையான வேதனை. 




வேண்டும் என்றால் அன்றைக்கு அவர்கள் தேவதாசிகளாக இருந்து இருக்கலாம். கோயில் குளத்துக்கு வரும் பெரிய மனுஷன்களுக்கு வைப்பாட்டியாக இருந்து இருக்கலாம். அப்படித் தானே இருந்தது. இப்போதைக்கு நம் பார்வையில் இவர்கள் அப்படி தெரியவில்லை. விவரம் தெரியாத அந்தச் சின்னப் பிள்ளைகளை ஒரு விலைமாதாக, ஒரு பொது மகளிராகப் பார்க்க என் மனசு இடம் கொடுக்கவில்லை.

அடிமட்டத்திற்கு அடிமையாகும் ஏழை மக்கள்


பாவம் இந்தச் சிறுமிகள். பெரும்பாலும், தலித் என்று சொல்லப்படும், ஒரு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவதாசி முறை என்பது ஒரு பட்டவர்த்தனமான விபச்சாரமாகத் தெரிகின்றது. இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா. 




தேவதாசி முறை இன்னும் உயிர் வாழ்வதற்கு, கிராம மக்களின் அறியாமைதான் மூலகாரணம். அதனால் அவர்களுக்கு நல்லது நடக்கலாம் என்கிற ஓர் அதீத நம்பிக்கை. வறுமையில் வாடுகின்ற பெற்றோர்களுக்கு அது ஒரு மாற்று வழியாகவும் தெரிகின்றது.

ஜடப் பொருள்களாகும் சின்னஞ் சிறுமிகள்


அதனால், பிள்ளைகளைக் கோயில் சாமிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடுகின்றார்கள். கண்ணுக்குத் தெரிந்தே இப்படி என்றால், கண்ணுக்குத் தெரியாமல் என்ன என்ன நடக்கும்? சொல்லுங்கள். வசதி படைத்தவர்கள், ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி, அவர்களை அடிமட்டத்திற்கு அடிமைப் படுத்தி விடுகிறார்கள். அந்த ஏழைகளின் பத்து வயது ஜீவன்களைத் தங்களின் உடல்பசிக்குத் தீவனங்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.




உண்மையான நிலையை இப்படித் தான் சொல்ல வேண்டி இருக்கிறது. பதின்ம வயதுச் சிறுமிகள், வசதி படைத்த வயசான பிண்டங்களுக்கு  பலிகடா ஆக்கப் படுகின்றனர். அவர்களின் உடல் ஆசைகளை நிவர்த்தி செய்யும் ஜடப் பொருள்களாக அந்தச் சிறுமிகள் பயன்படுத்தப் படுகின்றனர்.  அவ்வலவுதான். அதற்கு மறுபேச்சே இல்லை.

தேவதாசிகளாகச் சேவை செய்யும் போது, அந்தச் சிறுமிகளுக்கு ஓரளவுக்கு பணம் கிடைக்கிறது. கோயிலும் கொஞ்சம் பணம் கொடுக்கிறது. தற்காலிகப் புருசர்களாக வந்து போகிறவர்களும் காசு கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.

நிரந்தர மனைவியாக முடியாத அவலநிலை

அதைவிட அவளுக்குத் தாலி கட்டி, நிரந்தரமாக மனைவியாக ஆக்கிவிட்டுப் போகலாமே. பிரச்னையே இல்லை என்று சொல்லலாம். அதுதான் நடக்காத காரியம். ஏன் என்றால், அந்தச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் போதே, அவர்களுக்குப் பொட்டுக் கட்டி விடுகிறார்கள். 




அதனால் அப்போதே அவர்கள் கோயில் சொத்து என கணக்கில் எழுதப் படுகிறார்கள். இதை எழுத என் ம் கஷ்டமாக இருக்கிறது. வெண்கலம், வெள்ளிச் சாமான்களைத்தான் கோயில் கணக்கில் எழுதி வைப்பார்கள். ஆனால், ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக, ஒரு மகளாக, ஒரு பேத்தியாக அழகு பார்க்க வேண்டியவள் ஒரு பெண். ஆனால், அவளைத் தட்டுமுட்டுச் சாமான்களின் கணக்கில் எழுதி வைப்பதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. இந்த மாதிரியான ஓர் அக்கப்போர் நம்முடைய பூர்வீக மண்ணைத் தவிர வேறு எங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. நானும் கேல்விப்படவுல் இல்லை.

தொலைதூரங்களுக்கு ஓடிப் போன சிறுமிகள்


கோயிலின் முக்கியப் புள்ளி ஒரு நாளைக்குப் புருசனாக இருந்தால், மறுநாளைக்கு இன்னொருவர் புருசன் தகுதிக்கு வருகிறார். அடுத்த நாளைக்கு இன்னும் ஒரு பெரிய மனுஷருக்கு ‘டிக்கெட்’ கிடைக்கிறது. கோயிலில் இப்படி ஒரு பெரிய பட்டியலையே வைத்து இருப்பார்கள். அதன்படிதான் எல்லாமே நடக்கும். 




பொட்டுக் கட்டிய ஒரு பெண்ணை யாரும் நிரந்தரமாக மனைவியாக ஆக்கிக் கொள்ள முடியாது. அப்படி ஓர் எழுதப் படாத சட்டம் இருக்கிறது. யாராவது ஒருவர் அந்தப் பெண்ணை மனைவியாக ஆக்கிக் கொள்ள ஆசைப் பட்டால், விடவும் மாட்டார்கள். அதையும் மீறி தொலைதூரங்களுக்கு ஓடிப் போன சிறுமிகளும் இருக்கிறார்கள். ஆனால் என்ன. கண்ணில் படாமல் இருக்க வேண்டும். கண்டுபிடித்து விட்டால், தோலை உருத்துத் தொங்கப் போடுவார்கள். தவிர, பத்து நாளைக்கு அடைத்துப் பட்டினி போடுவார்கள்.

தேவதாசி என்றால் தேவர் அடியார்

சிறுமிகள் சம்பாதிக்கும் சம்பளம், அவர்களின் பெற்றோர்களைச் சென்று சேர்கிறது.  ஒரு வகையில் பார்த்தால், பெற்றோர்களே தங்கள் மகள்களைக் கூட்டிக் கொடுப்பவர்களாகத்தான் எனக்குப் படுகிறது. இப்படி எழுத மனசு வரவில்லை. இருந்தாலும் என்ன செய்வது. இதற்கு வேறு ஒரு பொருத்தமான சொல் இருப்பதாகவும் தெரியவில்லை.




தேவதாசி என்பது ஒரு வடமொழி சொல். தமிழில் தேவர் அடியார். இந்தச் சொல்தான், பின்னாளில் தேவடியாள் எனும் வழக்குச் சொல் வருவதற்கு காரணமாகவும் அமைந்தது. 

ஒரு காலத்தில், கிராமப் புறங்களிலும் மலேசியத் தோட்டப் புறங்களிலும், தமிழர்களிடையே தேவடியாள் எனும் அந்தச் சொல் ஓர் இழிவுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரொம்பவும் குறைவு.

ஏழை எளியவர்களைப் பலி கொடுக்கும் பலிக்கூடம்

உண்மையில் பார்க்கப் போனால், நடனக் கலைகளின் வழியாக ஆலயத்திற்குச் சேவை செய்யும் உயர்ந்த நிலைப் பெண்களே தேவதாசிகள் ஆகும். ஆனால், அதே அந்தப் பெண்கள், அப்போதும் இப்போதும்  பண பலம் படைத்தவர்களுக்குப் பாலியல் பொருட்களாக மாற்றப் பட்டனர் என்பது தான் உண்மையிலும் உண்மை.  அதை நினைத்தால்  காலா காலத்திற்கும், வேதனைதான் மிஞ்சிப் போய் நிற்கும்.




தேவதாசி முறை என்பது குறிப்பிட்ட ஒரு மதம் நடத்திய பாலியல் பலாத்காரம் என்று சிலர் சொல்கிறார்கள். வசதி படைத்தவர்கள், ஏழை எளியவர்களைப் பலி கொடுக்கும் ஒரு பலிக்கூடம் என்றும் வேறு சிலர் சொல்கிறார்கள்.
   
உஷா எனும் வைகறைத் தெய்வம்


தேவதாசி முறை என்பது இந்தியாவில் மட்டும் இல்லை, உலகம் முழுமையும் பரவலாக இருந்து இருக்கிறது. பழம்பெரும் நாகரீகங்களில் இறை பணிகளுக்காகத் தங்களை அர்பணித்துக் கொண்ட ஒரு கலைஞர் கூட்டமே இருந்து இருக்கிறது.  




இந்துக்களின் ரிக் வேதத்தில், வைகறைத் தெய்வம் என்று அழைக்கப்படுபவள் உஷா. அவள் ஓர் ஆடல் அரசியாக வர்ணிக்கப் படுகிறாள். மற்ற இதிகாசப் புராணங்கள், உஷாவை நல்ல ஒரு நடனப் பெண்மணியாகவே காட்டுகின்றன.

சுமேரிய, பாபிலோனிய நாகரீகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே இருந்த வழிபாட்டுக் கூடங்களில், நாட்டியப் பெண்கள்  நல்ல சுத்தமான கலைச் சேவைகளுக்காக தங்களை அர்ப்பணித்து உள்ளனர். அதற்கு ஆதாரங்கள் உள்ளன. 

1947-ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்புச் சட்டம்


தேவதாசி என்ற சொல், இந்தியாவின் பல இடங்களில் பலவிதமாக அழைக்கப் படுகிறது. ஆந்திரப் பகுதியில் மாதங்கி அல்லது விலாசினி. மராட்டியத்தில் பாசவி. கர்நாடகாவில் சூலி அல்லது சானி. ஒரிசாவில் மக. உத்திர பிரதேசத்தில் பாமினி. சங்ககால தமிழ் நூல்கள் இவர்களைப் பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி பெண்டுகள் என்று அழைக்கின்றன.




பொட்டு கட்டிவிடுதல் எனும் தேவதாசி முறைக்கு 1947-ஆம் ஆண்டே தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகாவிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஓய்ந்த பாடில்லை.

தில்லானா மோகனம்பாள் படத்தைப் பாருங்கள்

19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகளைப் பற்றியோ அல்லது அந்த சமூகத்தைப் பற்றியோ பேசக்கூடாது. அப்படிப் பேசினால், “பேசியவன் நாக்கு எரிந்துவிடும்” என்று எச்சரிக்கை செய்தார்கள். அந்த அளவுக்கு தேவதாசி முறைக்கு மதிப்பு கொடுத்து வந்தார்கள். ஆனால் போகப் போக மன்னர்களும், நிலப்பிரபுக்களும், முக்கியப் பிரமுகர்களும் தேவதாசிகளைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

தில்லானா மோகனம்பாள் படத்தைப் பாருங்கள். ஓரளவுக்கு உண்மை தெரிய வரும். அதன் பிறகு தேவதாசி என்பது பொதுமகளிர் என்பதாகப் பொருள் கொள்ளப்பட்டு விட்டது.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் படித்தவர்கள், பக்தர்கள் இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். பருவம் வராத குழந்தைகளைக் கோயிலுக்கு அர்ப்பணம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கும் சட்டம் வழி செய்கிறது. அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த தாதாபாய், 1912 செப்டம்பர் 18-இல் “பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம்” எனும் பெயரில் ஒரு சட்டத்தையே அறிமுகம் செய்து வைத்தார்.

விராலிமலையில் தேவதாசிகள் இன்றும் உள்ளனர்


1947-இல் சென்னை மாநிலத்தின் முதல்வராக ஒ.பி.ராமசாமி இருந்தார். அந்தச் சமயத்தில் தான், சென்னை தேவதாசி தடுப்பு மசோதா ஒரு சட்டமாக்கப் பட்டது. சட்டமும் நிறைவேறி விட்டது. இருந்தாலும் சம்பிரதாய ரீதியாக தேவதாசி முறையை ஒழிக்க முடியவில்லை. தொட்ட குறை விட்ட குறையாக, இன்று வரை தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறது.

காரைக்குடி பகுதியில் உள்ள சில சமூகத்தவர்கள் இன்றும் தேவதாசி முறையை விடாப்பிடியாகப் பிடித்து வருகின்றனர். விராலிமலையில் தேவதாசிகள் இன்றும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தப் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. அழிக்க முடியவில்லை. உலகம் அழிந்தாலும் தேவதாசி முறையை அழிக்க முடியாது போலத் தெரிகிறது.

கணவன்-மனைவி அங்கீகாரம் மட்டும் கிடைக்காது

இன்னும் சில தகவல்கள். தேவதாசியை யார் வேண்டுமானாலும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம். மனைவியைப் போல் நடத்தலாம். ஆனால், கணவன்-மனைவி அங்கீகாரம் மட்டும் கிடைக்காது. ஒர் எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் நடந்தது. பழனியம்மாள் என்பவர் பொட்டுக் கட்டப் பட்டவர். 14 ஆண்டுகள், ராஜன் என்பவருடன் வாழ்ந்தார். குடும்பம் நடத்தினார்கள். ஒரு நாள் ‘உன்னை விட்டு விலகிக் கொள்கிறேன்’ என்று ராஜன் பிரிந்து போய் விட்டான்.

பழனியம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எந்த உரிமையும் கொண்டாட முடியவில்லை. இப்போது தவிக்கிறார். விவசாயக் கூலியாக வேலை செய்து வருகிறார். அவர் பிழைப்பு அப்படி ஓடுகிறது. இது விராலிமலையில் நடந்த நிகழ்ச்சி.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் தேவதாசி முறை, இன்றும் மறைமுகமாகப் பின்பற்றப்படுகிறது. சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. சியோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபா. இப்போது அவருக்கு 25 வயது. பத்து வயது சிறுமியாக இருக்கும் போது அவருக்கு இருதய நோய். அவருடைய பெற்றோர்கள் தீபாவைக் சாமிக்குக் காணிக்கையாகத் தானம் செய்து விட்டனர். தீபா தேவதாசியாகி விட்டார். இனி சாகும் வரையில் அவர் ஒரு தேவதாசி.

நித்தியச் சுமங்கலி சடங்கு செய்வதில் பெற்றோர்கள் உறுதி

அந்திலி கிராமத்தில் ராஜவேணி என்ற ஓர் எட்டு வயதுச் சிறுமி. குலதெய்வம் மாரியம்மனுக்கு நேர்ந்து விடப்பட்டார். மூன்றாம் வகுப்பு படித்து வரும் ராஜவேணிக்கு விரைவில் பொட்டுக் கட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். அவளுக்கு, நித்தியச் சுமங்கலி சடங்கு செய்து வைப்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருக்கின்றனர். தெய்வம் கண்ணைக் குத்திவிடும் என்று சிறுமியைப் பயமுறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

ராஜவேணிக்கு துளியும் விருப்பம் இல்லை. ராஜவேணிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆசை.  இந்த மாதிரியான பெற்றோர்களை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். ராஜவேணிக்குப் பொட்டுக் கட்டினால், அவள் கோயில் சொத்தாகிப் போவாள். வயதான ஜொல்லு ’பார்ட்டி’களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அந்தச் சிறுமி நம்ப பக்கத்து ஊரில் இருந்தால் பரவாயில்லை. எப்படியாவது உதவி செய்யலாம்.

பொட்டுக் கட்டி விட்டால் குடும்பத்துக்கு விடியல்


கிருஷ்ணவேணி எனும் இன்னும் ஒரு 15 வயதுப் பெண். உளுந்தூர் பேட்டையில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் - அஞ்சலி தம்பதியினருக்கு இரண்டாவது மகள். இவர்களுக்கு மூத்தமகள் ராஜலட்சுமி. இந்த ராஜலட்சுமியின் கணவர் கொஞ்ச நாளைக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து குடும்பம் இன்னும் மீளவில்லை. ஆக, இரண்டாவது மகள் கிருஷ்ணவேணிக்கு பொட்டுக் கட்டி விட்டால்தான் குடும்பத்துக்கு விடியல் என்று ஒரு பெரிசு பற்ற வைத்து விட்டது. இப்பொழுது நெருப்பு  கூரையைப் பொத்துக் கொண்டு எரிகிறது.

கிருஷ்ணவேணியை நித்திய கல்யாணியாக்குவது என்று அம்மா அப்பா முடிவு செய்து விட்டனர். இந்த நிலையில் சமூகநல ஆர்வலர்கள் சிலர், இந்தப் பிரச்சிசனையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இப்போது கிருஷ்ணவேணி அரசு நடத்தி வரும் தங்கும் விடுதியில் இருந்து படித்து வருகிறார். ஓர் உயிர் தப்பியது.

மூத்தப் பெண் குழந்தை தேவதாசியாக அர்ப்பணம்

செங்கல் பட்டு மாவட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு உள்ள நெசவாளர்கள் தங்களுடைய மூத்தப் பெண் குழந்தையைத் தேவதாசியாக அர்ப்பணம் செய்வது ஒரு வழக்கம். சில கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு நல்ல சுகப் பிரசவம் வேண்டும் என்பதற்காக, மூத்தப் பெண் குழந்தையைக் சாமிக்கு அர்ப்பணம் செய்வதாக வேண்டிக் கொள்வார்களாம். அப்படியே கோயிலுக்குத் தானமும் செய்து விடுவார்களாம். நல்ல வேண்டுதல். திருந்தாத ஜென்மங்கள்.

முன்பு தேவதாசியாக அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள், கோயில் நிர்வாகிகளின் தேவைகளை நிறைவு செய்து வந்தனர். பெண்பிள்ளைகள் ஆறு வயது முதல் எட்டு வயதிற்குள் இருக்க வேண்டும். கோயில் பூசாரி திருமணச் சடங்குகளைச் செய்வார். தெய்வத்தின் பெயரைச் சொல்லி, அவரே அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். அதன் பின்னர் நட்டுவன் அல்லது நடன ஆசிரியர் வந்து அந்தப் பெண்ணுக்கு இசை, நாட்டியம் கற்றுக் கொடுப்பார். அப்புறம் அந்தச் சிறுமி, வயசிற்கு வருவதற்கு முன்னாலேயே அர்ச்சனை நடக்கும். புரியும் என்று நினைக்கிறேன். பெருமூச்சு வருகிறது.


ஆயிரம் பெரியார்கள் ஆயிரம் அம்பேத்கார்கள் வந்தாலும் முடியாது

கடவுளுக்குச் சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று சொல்லி, பெண்களில் சிலருக்குப் பொட்டுக் கட்டி, தெய்வங்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர். தேவதாசிகளின் தனிமை வாழ்க்கையை சில ஆண்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அது அப்போது. தேவதாசிகள் என்றால் விலைமாதர் என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்துவிட்டனர். இது இப்போது. அதையே நடைமுறைப் படுத்தியும் விட்டனர்.

பால்ய விவாகம், சதிக் கொடுமை, சாதிக் கொடுமை போலவே தேவதாசிக் கொடுமையும் ஒன்று. அந்தக் கொடுமை, நான் சார்ந்த சமயத்தில் இன்னும் தாண்டவம் ஆடிச் சிரிக்கின்றது. இன்னும் ஆயிரம் பெரியார்கள் வரலாம். இன்னும் ஆயிரம் அம்பேத்கார்கள் வரலாம்.

ஆனால், காலாவதியான ஒரு சில தமிழர்களின் மூடநம்பிக்கைகளை மட்டும் மாற்றவே முடியாது. கட்டையில் வேகும் போதுகூட, மாரைத் தட்டிக் கொண்டு எழுந்து நின்று வீரவசனம் பேசுவார்கள். திருந்தாத ஜென்மங்களுக்கு வாழ்த்துகள்.

(இந்தக் கட்டுரை போதுமான வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதப் பட்டது.)