களப்பிரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களப்பிரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 அக்டோபர் 2012

தமிழர்கள் மறந்த களப்பிரர்கள்

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 09.09.2012 நாளிதழில் வெளிவந்த கட்டுரை]

உலகத் தமிழர்களுக்குத் திருக்குறளைக் கொடுத்தவர்கள். சீவக சிந்தாமணி, முதுமொழிக் காஞ்சியைக் கொடுத்தவர்கள். கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி அந்தாதி என்று எத்தனையோ காப்பியங்களைத் தந்தவர்கள். நாலாடியாரும் இவர்கள் காலத்தில் வந்தது தான். காரைக்கால் அம்மையாரின் நூல்களும், இவர்களின் காலத்து முதன்மை நூல்கள். முத்தொள்ளாயிரமும் திருமந்திரமும் இவர்கள் காலத்தில் வளர்ந்தவைதான். 


தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகளைத் தமிழ்க் கவிதைகளுக்கு கொடுத்துச் சென்றவர்கள். அதையும் தாண்டி ஒன்று உள்ளது. இப்போது நாம் எழுதுகிறோமே தமிழ் எழுத்துகள், இவை எல்லாம் சிந்துவெளி பாளி எழுத்துகளாக இருந்தவை. அவற்றை வட்ட எழுத்துகளாக மாற்றியதும் இவர்கள்தாம்.

அப்படிப்பட்ட மனிதர்களின் வரலாறு மறைந்து போய்க் கிடக்கிறது. தமிழர்களின் நினைவுச் சுவடுகளில் இருந்து அந்த மனிதர்கள், ஒட்டு மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர். வேதனையான ஆவணங்கள் கோவணங்களைக் கட்டி அழுகின்றன. தயவுசெய்து படியுங்கள். உண்மை புரியும்.

சோழர்களுக்கு புகழாரங்கள்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். இவர்களைத் தெரியும்தானே. அசைந்தால் அங்கே ஒன்று. இசைந்தால் இங்கே ஒன்று என்று தமிழகம் முழுமையும் கோயில்களைக் கட்டி அழகு பார்த்தவர்கள். இதில் கடைசியாக வந்த சோழர்களுக்கு மட்டும் பெரிய பெரிய புகழாரங்கள். ஆர்ப்பாட்டமான சுவர் ஓவியங்கள். உலகத்தின் உச்சிக்கே அவர்களை ஏற்றியும் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், பல்லவர்களைப் பற்றி அதிகம் இருக்காது. சாளுக்கிய மன்னன் புலிகேசியை நீயா நானா என்று பதம் பார்த்தவர்கள் இந்தப் பல்லவர்கள். வாதாபியை பாதாம் பருப்பாக வறுத்து எடுத்தவர்கள். பல்லவர்களைப் போல, களப்பிரர்களைப் பற்றியும் தமிழக வரலாற்றில் அதிகம் இருக்காது. உண்மையில் எல்லாருக்கும் சம நீதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

அதுதான் உண்மை. ஆனால், வழங்கப்படவில்லையே. ஏன்? அதுதான் இன்றைய வழக்கு. இப்போதைய வழக்கு. இன்று நாம் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு. சான்று: http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள்

இத்தனைக்கும் தமிழகத்தின் வடபகுதியைச் சோழர்களைவிட மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். அதையும் தாண்டி, தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள் களப்பிரர்கள். ஆனால், அப்படிப்பட்ட களப்பிரர்கள் ஏன் இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டனர் என்பதுதான் புரியவில்லை. கல்லூரியில் படித்த நினைவுகள். இப்போது உதவி செய்கின்றன. சரி. விசயத்திற்கு வருவோம்.

தமிழக வரலாற்றில் அதிகமான பாதிப்பை உண்டாக்கியவர்கள் சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான். பல்லவர்கள். மறுபடியும் சொல்கிறேன். பல்லவர்கள்தான். அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உலகத்தில் வாழும் அத்தனைத் தமிழர்களும் சாகும் வரை, பல்லவர்களை மறந்துவிடக் கூடாது.

பல்லவர்கள்தான் தமிழகத்தின் சிலை ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தவர்கள். மாமல்லபுரத்தைக் கட்டியவர்கள். மறைக்கப்பட்ட தமிழகக் குகைக் கோயில்களில், தெய்வீகமான ஓவியங்களை வார்த்துக் காட்டியவர்கள். சேரனும் இல்லை. சோழனும் இல்லை. பாண்டியனும் இல்லை. பல்லவர்கள்தான்.

மாமல்லபுரம் மகாபலிபுரம்

பல்லவர்கள் சிற்பக் கலையில் புரட்சி செய்தவர்கள். மகாபலிபுரத்தில் அழகு அழகான கருங்கல் சிலைகளை நீங்கள் பார்த்து இருக்கலாம். அத்தனையும் பல்லவர்களின் சித்தங்கள். காவேரியில் கல்லுக்கு அடியிலும் சிற்பங்களை வடித்தவர்கள் இந்தப் பல்லவர்கள். தங்களைப் பற்றி, நிறைய குறிப்புகளை விட்டுச் சென்றவர்கள். மாமல்லபுரம் என்பதும் மகாபலிபுரம் என்பதும் இரண்டும் ஒன்றுதான்.

ஆனால், தமிழக வரலாற்றைப் படித்துப் பாருங்கள். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களுடன் பல்லவர்களை இணைக்கும் குறிப்புகள் எப்போதுமே இருக்கா. பல்லவர்கள் தனியாகத்தான் இருப்பார்கள். ஏன்? அதே போல களப்பிரர்களைப் பற்றியும் அதிகமான வரலாறு இருக்காது.

களப்பிரர்களின் காலம், ஓர் இருண்ட காலம் என்று ஓரம் கட்டப்பட்டு இருக்கும். உண்மையிலேயே அதிகம் மறக்கப்பட்ட காலம் களப்பிரர் காலம்தான். களப்பிரர்கள் யார்? இவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். கொஞ்சம் அலசிப் பார்ப்போம். களப்பிரர்கள் 3-ஆம் நூற்றாண்டில் இருந்து 6-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். தமிழகத்தின் மீது களப்பிரர்கள் படை எடுத்த போது, முதுகுடுமிப் பேர்வழுதி பாண்டியன் என்பவர் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார். அத்துடன் தமிழின் கடைச் சங்கம் ஒரு முடிவுக்கு வந்தது என்று அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார் சொல்கின்றார்.

இது எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அப்போது கேரளா என்பதும் இல்லை, கர்நாடகா என்பதும் இல்லை. எல்லாமே தமிழகம்தான். ஆனால், இப்போது நடக்கிற கூத்தைப் பாருங்கள். முல்லைப் பெரியாறும் காவேரியும் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்த்தால், மறுபடியும் பல்லவர்களும் வல்லவர்களும் வர வேண்டும் என்கிற ஆசை, சுற்றிச் சுற்றி அடிக்கின்றது. மனசுக்கு ரொம்பவும் சங்கடமாக இருக்கிறது.

களப்பிரர் பற்றிய உண்மைகள் தெரிய வேண்டும் என்றால் தமிழ் நாவலர் சரிதை, யாப்பருங்கலக் காரிகை, பெரிய புராணம், காசாக்குடிச் செப்பேடுகள், திருப்புகலூர் கல்வெட்டு, வேள்விக்குடி சேப்பேடுகளைப் படியுங்கள். உண்மை தெரியும்.

ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னால், கேரளா எனும் ஒரு பகுதி இல்லை. 12 ஆம் நூற்றாண்டில்தான் கேரள மொழியும் உருவானது. அதுவரை கேரளாவில் பேசப்பட்ட மொழி தமிழ்மொழிதான். அந்தக் காலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியை சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர். [http://en.wikipedia.org/wiki/Kerala]

வரலாற்று ஆசிரியர்களால் ‘இருண்ட காலம்’ என்று வர்ணிக்கப்படும், அந்தக் காலத்தைப் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர். அதற்குக் காரணம் உண்டு. நீங்களே புரிந்து கொள்வீர்கள். அதைப் பற்றிய ஆய்வுகளைச் செய்து வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி எனும் வரலாற்று அறிஞர்.

களப்பிரர்கள் இந்து மதத்தை ஆதரித்தனர். இருந்தாலும் அவர்கள் புத்த, சமண மதங்களைச் சார்ந்தவர்கள். களப்பிரர்கள் செய்த ஒரு தவறு என்னவென்றால், ஆரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நில தானங்களைத் தடுத்து நிறுத்தியதுதான். அதனால் அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை எனும் கருத்து உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் அவர்கள் ஆரியர்களின் எதிரிகளாகவே அடையாளம் காணப்பட்டனர்.

தயவுசெய்து வாசகர்கள் மன்னிக்கவும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத்தான் சொல்ல வருகிறேன். மற்றபடி தமிழர்களின் சாதி சம்பிரதாயங்களைப் பற்றி சொல்லவில்லை. தமிழர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூத்த பிரிவில் தங்களை நிலைப்படுத்தியவர்கள் ஆரியர்கள்.

பாண்டிய மன்னர்களை நம்ப வைத்து, அவர்களைப் பதினாறு வகையான தானங்கள் செய்யச் சொல்லி ஆரியர்கள் நலம் பெற்றனர். [சான்று: தமிழ் மக்கள் வரலாறு. அயலவர் காலம்.க.ப.அறவாணன். மார்ச் 2006. பக்:59]
எடைக்கு எடை ஆரியர்களுக்குப் பொன் கொடுக்கும் பழக்கம் அக்காலத்திலேயே தொடங்கியது.

தமிழுக்கே உரிய எழுத்துகள் வழக்கில் இருந்த போதும் பிராமி எழுத்துகளையே கல்வெட்டுகளில் அமைத்தனர். ஆரியர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து கிடைத்த வருமானம் ஒட்டு மொத்தமாக ஆரியர்களுக்கே போய்ச் சேர்ந்தன. அதைத் தடுத்து நிறுத்தி, நிலங்களை மறுபடியும் ஏழைகளுக்கே திருப்பிக் கொடுத்தனர். அதுதான் களப்பிரர்கள் செய்த தவறு.

களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அவர்களைப் பற்றிய ஆவணங்கள் எல்லாமே அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. வரலாற்றில் கறுப்புப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

உண்மையிலேயே களப்பிரர்கள், கன்னட நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள். திப்பு சுல்தானைத் திராவிடத் தமிழனாக ஏற்றுக் கொள்ளும் தமிழகம் ஏன், களப்பிரர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. களப்பிரம் என்பது தமிழா, கன்னடமா என்பது முக்கியம் இல்லை. ஆனால், அவர்கள் தமிழகத்தில் நல்ல ஓர் அரசை உருவாக்கி நிர்வாகித்தனர் என்பதுதான் பாராட்டப்பட வேண்டிய விசயம்.

களப்பிரர்கள் காலத்தில்தான் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. புதிய பா வகைகள் உருவாக்கப்பட்டன. களப்பிரர்கள் வருவதற்கு முன், தமிழ் இலக்கியத்தின் இடைச் சங்கத்தில் ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைப் பாக்கள்தான் இருந்தன. அதற்குள்ளேயே தமிழ்ப்பாக்கள் முடங்கிக் கிடந்தன. ஆக, களப்பிரர்கள் வந்த பிறகுதான் தாழிகை, துறை, விருத்தம் எனப் புதிய பா வகைகள் வந்தன.

களப்பிரர்கள் காலத்தில் ஆட்சி மொழியாகத் தமிழ்மொழியாக இருந்தது. இவர்களின் காலத்தில்தான் தமிழ்மொழி நன்றாக வளர்ச்சி அடைந்து இருந்தது. அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள் தோன்றின. நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள் தோன்றின. விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூலும் உருவானது.

கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இறையனார் களவியல் உரை தோன்றியது. பிராமிய எழுத்தாக இருந்த தமிழ் எழுத்து, வட்டெழுத்தாக மாறியதும் களப்பிரர் காலத்தில்தான். ஆக, தமிழுக்கு இத்தனைத் தொண்டுகள் செய்தவர்களின் காலத்தை எப்படி இருண்ட காலம் என்று சொல்ல முடியும். சொல்லுங்கள்.

களப்பிரர் காலத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக ஒரு தமிழர் இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அதற்காக, களப்பிரர் அரசர்களுக்கு வக்காளத்து வாங்குகிறேன் என்று சொல்ல வேண்டாம். ஏன் களப்பிரர்கள் தமிழக வரலாற்றில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர் என்பதே என்னுடைய ஆதங்கம்.

களப்பிரர் மட்டும் அல்ல, ஆரிய ஆதிக்கம் தொடர்பாக கேள்விகளை எழுப்பிய பல்வேறு தத்துவ ஆவணங்கள், முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சோழர்கள் காலத்தில்தான் கட்டக் கலை வளர்ந்தது என்பது எல்லாம் சரியான கூற்று அல்ல. சோழர்கள் காலத்துக் கோயில்கள் மட்டும்தான் நமக்கு தெரிகின்றன. ஆனால், அவர்களுடைய கோட்டைக் கொத்தளங்கள், அரண்மனைகள் எங்கே போயின? சோழர்கள் காலத்தில் கட்டடக் கலை, பெரிதுபடுத்தப்பட்டது அல்லது விரிவு செய்யப்பட்டது என்று மட்டும் சொல்லலாம்.

சோழர்கள் அல்லது பல்லவர்களைப் போல களப்பிரர்கள் கோயில்களைக் கட்டவில்லை என்பது உண்மைதான். ஆனால், சோழர் காலத்தில் ஆயிரக்கணக்கான விவசாய மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

தஞ்சைப் பெரிய கோயில் எப்படிக் கட்டப்பட்டது. சொல்லுங்கள். போர்க் களத்தில் பிடிபட்ட அடிமைகள்; அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பு; எதிரிகள் நாட்டில் கிடைத்த செல்வங்கள்தான் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்படுவதற்குச் சாத்தியக் கூறுகளாக அமைந்தன.

விண்ணை முட்டும் தஞ்சைக் கோபுரத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நன்றாகப் பார்த்தவர்களுக்குத் தெரியும். சோழனின் கட்டிடக் கலையை விட, ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்புகள் அங்கே தெரிகின்றன. எதிரிகளின் நாடுகளில் சுரண்டி எடுத்து வரப்பட்ட செல்வங்கள் தெரிகின்றன. சோழர்களின் ஆதிக்கத்தினால் ஏற்பட்ட வேதனைகள் தெரிகின்றன. இவைதான் என் கண்களுக்கும் தெரிகின்றன.

மக்களுக்கு ஒரு பிரமிப்பு கலந்த பயம் வர வேண்டும். மன்னர் மீது மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால், அவர் மீது பயம் இருக்க வேண்டும். அதற்காகத்தான், அத்தகைய பிருமாண்டமான கட்டடிடங்களை அன்றைய அரசர்கள் கட்டினார்கள்.

அண்மைய காலமாக, பழைய சைவ ஆய்வாளர்கள் மறைந்து வருகின்றனர். புதிய தலைமுறை ஆய்வாளர்கள் உருவாகி வருகின்றனர். களப்பிரர் பற்றிய புதிய பார்வையும் உருவாகி வருகிறது.

இன்னும் ஒன்று. உலகப் பொதுமறை திருக்குறளும் களப்பிரர் காலத்தில் உருவானதுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அதற்கு முன்னரே முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால் திருக்குறள் உருவாக்கம் பெற்றது. எனினும், களப்பிரர் காலத்தில்தான், அதற்கு ஓர் உண்மையான வடிவம் கிடைக்கப் பெற்றது. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. நானும் தடுமாறுகின்றேன்.

களப்பிரர் காலத்தில் பல சமண குடைவரைக் கோயில்கள் தமிழ்நாட்டில் கட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, குமரிமாவட்டத்தில் இருக்கும் சிதறால் மலை, உளுந்தூர்ப் பேட்டையில் இருக்கும் அப்பாண்டநாதர் கோயில் ஆகியவற்றைச் சொல்லலாம். இவை களப்பிரர் காலத்தில் உருவாக்கப்பட்டவை. அவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு வர வேண்டும். களப்பிரர்களைப் பற்றிய புதிய வரலாறு விரிவாக எழுதப் படவேண்டும். களப்பிரர் காலத்தை இருண்ட காலமாக இரட்டடிப்பு செய்யக்கூடாது.

களப்பிரர்கள் காவேரிப்பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் தங்களைப் பற்றிய பட்டயங்கள், கல்வெட்டுகள் எதையும் விட்டுச் செல்லவில்லை. அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்லலாம்.

களப்பிரர்கள் வடமேற்கே கர்நாடகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி தமிழகம் வடமேற்கில் இருந்து வந்தவர்களால் ஆளப்பட்டதால், அதனை இருண்ட காலம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் கூற்றை ஒரு வலுவான கூற்றாக ஏற்கமுடியாது. ஏன் என்றால் களப்பிரர்கள் மொழி தமிழ் மொழியே ஆகும். கன்னடம் என்ற மொழி உருவானதே கிபி 10-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால், களப்பிரர்கள் தமிழகத்தை 3-ஆம் நூற்றாண்டிலேயே ஆட்சி செய்து இருக்கின்றனரே.

ஒரு குறிப்பிட்ட காலத்தை, பொற்காலம் என்று சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்தக் காலத்தில் போர் எதுவும் இல்லாமல், அரசியல் குழப்பங்கள் எதுவும் இல்லாமல் இருந்து இருக்க வேண்டும். மக்கள் அமைதியாக வாழ்ந்து இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில் கலை, சிற்பம், ஓவியம், மொழி போன்றவை நன்கு வளர்ந்து இருக்க வேண்டும். களப்பிரர்கள் காலத்தில் போர் நடைபெற்றதா, அரசியல் குழப்பங்கள் இருந்தனவா, மக்கள் அமைதியுடன் வாழ்ந்தனரா என்பதற்கு ஆதாரங்கள் எதுவுமே இல்லை.

களப்பிரர்கள், பல்லவர்களைப் போல சிற்பக்கலையையும், சோழர்களைப் போல கட்டடக் கலையையும் வளர்த்ததற்கு எந்தவித சான்றுகளும் இல்லை. ஆனால், அவர்கள் காலத்தில் சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் பதினென்கீழ்கணக்கு இயற்றப்பட்டன. இருந்தாலும் அதனைக் களப்பிரர் மன்னர்கள் ஆதரித்தனரா என்பதற்கும் சரியான ஆதாரங்கள் இல்லை. இத்தகைய காரணங்களினால், களப்பிரர்களின் காலத்தை ஓர் இருண்ட காலம் என்று அழைத்து இருக்கின்றனர்.

களப்பிரர்கள் முன்னூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தார்கள். பல மாற்றங்களைச் செய்து இருக்கின்றனர். இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. ஆக, களப்பிரர்கள் தமிழர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


கி.பி.7-ஆம் நூற்றாண்டில் கொடுங்கன் பாண்டியன், சிம்ஹவிஷ்ணு பல்லவன், மற்றும் சாளுக்கிய மன்னர்களால் களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை 8-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்ட முத்தரையர்கள், களப்பிரர்களின் சந்ததியினர் என்றும் சொல்லப்படுகிறது. களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். அதை நாம் மறந்துவிடக்கூடாது.


கடைசியாக ஒரு செய்தி. 1700 ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்ப் பெண்கள் நெற்றியில் குங்குமம் இட வேண்டும் என்று ஒரு சட்டத்தையே கொண்டு வந்தவர்கள் இந்தக் களப்பிரர்கள்தான்.