30 செப்டம்பர் 2020

மலேசியா இ-சென்சஸ் என்றால் என்ன?

இ-சென்சஸ் இணைய தளத்தில் பதிவு செய்யவில்லை என்றால்; அரசாங்கத்திடம் இருந்து மலேசிய இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் இழக்கப் படலாம் எனும் ஊடகப் பதிவுகள் பரவலாகி வருகின்றன. இது உண்மையா?

இல்லீங்க. இவை தவறான பதிவுகள் ஆகும். இ-சென்சஸ் (e-Census) பற்றி சிலர் சரியாகவே புரிந்து கொள்ளவில்லை. சரியாகவே தெரிந்து கொள்ளவில்லை. தவறான புரிதலுடன் ஊடகங்களில் தவறாகப் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தத் தவறான பதிவுகளினால், பொதுவாகவே ஒரு தவறான பார்வையும் ஏற்பட்டு வருகிறது. சுருங்கச் சொன்னால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறைகள் பற்றி தெரியாத நபர்களின் விவேகமற்ற பார்வை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தவறான தகவல் பரிமாற்றம்.

முதலில் இ-சென்சஸ் என்றால் என்ன? முதலில் அதைத் தெரிந்து கொள்வோம்.

உலகில் எல்லா நாடுகளிலுமே இ-சென்சஸ் நடைபெற்று வருகிறது. மலேசியாவில் இ-சென்சஸ் முதன்முறையாக அறிமுகம் செய்கிறார்கள். இ-சென்சஸ் என்றால் மக்கள் தொகை; மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு (Population and Housing Census of Malaysia). அவ்வளவுதான்.

மலேசியா முழுவதும் உள்ள வீடுகள்; குடியிருப்பு பகுதிகள். இவற்றில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இ-சென்சஸ் (e-Census) 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு கணக்கெடுப்பு. அதாவது வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பு.

நம் நாட்டில் 1963-ஆம் ஆண்டில் முதல் கணக்கெடுப்பு நடந்தது. ஆகக் கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2010-ஆம் ஆண்டில் நடந்தது. இப்போது 2020-ஆண்டில் மறுபடியும் நடைபெறுகிறது. இது ஆறாவது கணக்கெடுப்பு.

மக்கள்தொகை கணக்கெடுப்பு நோக்கம் என்ன? மலேசியாவில் மக்கள் தொகை எவ்வளவு? ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள். வீடுகள் எத்தனை? எத்தனை அறைகள்? வாகனங்கள், வருமானம் போன்ற மொத்த விவரங்களைத் தொகுப்பது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் ஆகும்.

எதிர்காலத்தில் தேசிய அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிப்பதற்கும் இந்தக் கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் மூலமாகப் புள்ளிவிவரங்கள் மட்டுமே திரட்டப் படுகின்றன. அவை எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காகவும்; மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.

முதல் கட்டமாக இ-சென்சஸ் இணைய பக்கம் வாயிலாகக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

(https://www.mycensus.gov.my/).

இந்த இணையத் தளம் வாயிலாக 2020 ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி; 2020 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது இணைய வாயிலான கணக்கெடுப்பு.

அதே சமயத்தில் இணையம் மூலமாகப் பதிவு செய்யவில்லை என்றால் கவலை வேண்டாம். கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு தேடி வருவார்கள். அவர்கள் நேரடியாக உங்களை நேர்காணல் செய்வார்கள். கணக்கெடுப்பு செய்வார்கள். இது இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு. 2020 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறும்.

Phase 1 - 7 July - 30 September, 2020 (e-Census)
Phase 2 - 7 October - 24 October , 2020 (face-to-face interviews)

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் 115,685 பணியாளர்கள்; 99,356 தணிக்கையாளர்கள்; 14,581 மேற்பார்வையாளர்கள்; 1,385 கமிஷனர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள்.

இன்னும் ஒரு விசயம். BSH, PRIHATIN மற்றும் PENJANA போன்ற அரசாங்க உதவித் திட்டங்களுக்கும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் சம்பந்தமே இல்லை.

BSH, PRIHATIN, PENJANA போன்றவை; வருமான வரி அலுவலகத்தில் (LHDN) பதிவு செய்யப்பட்ட வருமான தரவுகளுடன் தொடர்பு உடையவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மலேசிய புள்ளி விவர இலாகாவுடன் தொடர்பு உடையது. இரண்டும் வேறு வேறு கோணத்தில் பயணிக்கின்றன.

ஆக BSH, PRIHATIN, PENJANA ஆகியவற்றுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

புள்ளிவிவரத் துறையால் ஆண்டுதோறும் வீட்டு வருமான கணக்கெடுப்பு என்று தனிப்பட்ட வகையில் ஒரு கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அது வேறு ஒரு கணக்கெடுப்பு. மற்றபடி இப்போது நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் வீட்டு வருமான கணக்கெடுப்பிற்கும் தொடர்பு இல்லை.

(Government assistance like BSH, PRIHATIN and PENJANA are related to income data recorded with the income tax office (LHDN) and nothing to do with the population census.
Infact population census got nothing to do with income. Its more relevant to Household Income Survey done annually by Department of Statistics.)

இன்னும் ஒரு விசயம். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலமாக அரசாங்கம் பண உதவி எதையும் செய்யப் போவது இல்லை. ஏனெனில் மக்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் கூறி ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வேறு. வீட்டு வருமான கணக்கெடுப்பு என்பது வேறு. BSH, PRIHATIN, PENJANA நிதி உதவி என்பது வேறு.

(Government don't use the Household Income Survey to provide government assistance because people can cheat on their income.)

முழுமையாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புள்ளிவிவரச் சேகரிப்புத் திட்டம். ஆக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக அரசாங்கம் மக்களுக்கு நிதியுதவி வழங்கப் போவது இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.09.2020


29 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்களின் அடையாளம்: மலேசியத் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 29.09.2020

1800-ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்குத் தமிழர்கள்  அலை அலையாய்க் கொண்டு வரப்பட்டார்கள். அப்படிக் கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; தமிழர்களை அறிவாளிகளாக மாற்ற வேண்டும்; அறிவு ஜீவிகளாக உயர்த்த வேண்டும்; அப்படிப்பட்ட மண்ணாங்கட்டி ஆசை எல்லாம் ஆங்கிலேயர்களிடம் அறவே இல்லை.

வெள்ளைத் தோலுக்கு மலாயா கறுப்புத் தோலின் மீது ஆசா பாசம் எதுவும் கிடையாதுங்க. கறுப்புத் தோலை வைத்து நல்லா நாலு காசு பார்க்கணும். கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலர்னு சொல்லி கல்லா கட்டணும். நல்லபடியா வீடு போய்ச் சேரணும். கிடைக்கிற கமிசன் கொமிசனில் பொஞ்சாதி புள்ளைங்க கூட சொகுசா சுகபோகமா வாழணும். எவன் செத்தா எனக்கு என்ன. அம்புட்டுத்தான்.

அதுதான் அப்போதைக்கு அவர்களின் எழுதப்படாத மலாயா சாஸ்திரம். அதாவது அல்லாக்கா தூக்கி மல்லாக்கா போடும் அப்போதைய ஆங்கிலேயத் தத்துவம். ஆங்கிலேயப் பிசாசம் என்றுகூட சொல்லலாம். தப்பு இல்லை. சண்டைக்கு வர மாட்டார்கள்.

தமிழர்கள் கொஞ்சம் படித்து இருந்தால் போதும். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அதுவே பெரிய விசயம். அப்புறம் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. ரொம்பவும் சிரமம். ரொம்பவும் சிக்கல். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். தமிழர்களை அடக்கி வைத்து அழகு பார்த்தார்கள்.


ஆக தமிழர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.

வெளியே போனால் கறுப்புத் தோலின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும். அப்புறம் போர்க் கொடி தூக்குவார்கள். இந்த நான்சென்ஸ் நியூசன்ஸ் எல்லாம் வேண்டாம். எகதாளக் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் சரி. அவர்களும் வெளியே போகாமல் இருந்தால் சரி. ஆறாம் வகுப்பு வரை படிப்பு அறிவு இருந்தால் சரி. அப்புறம் அதற்கு மேல் படிப்பு தேவை இல்லை. கறுப்புத் தோல் அதிகம் படித்து இருந்தால் ஆபத்து. ஆபத்து. தோட்டத்துக் கல்லாக; தோட்டத்து ஓரமாக வெறும் வேட்டியை விரித்துப் படுத்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள். அழகாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள்.


வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதுவே அவர்களின் தலையாய நோக்கம். முதலில் சொன்ன மாதிரி நாலு காசு பார்க்க வேண்டும். அதை நாற்பது காசாக மாற்ற வேண்டும். கை வலிக்காமல் கல்லா கட்ட வேண்டும்.

நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலை. தெரியும் தானே. அதைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும். வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதாங்க வெள்ளை. மற்றபடி மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய்க் கறுப்பு கலருங்க. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு. அது அப்போது.

அதே அந்தக் கலரை வைத்துக் கொண்டு இப்போது மலேசியாவில் சின்னச் சின்ன சில்மிசங்கள். மதிப்பு மிக்க நாடாளுமன்றத்தில் முட்டிக்க மோதிக்க சீண்டல்கள். ஒரு கறுப்பு ஆட்டுக்குக் கண்ணாடி போட்டும் பார்வைக் கோளாறு போலும். தன் இனத்தையே கேவலப் படுத்தி இருக்கிறது.

இடையில் சிவப் பிரகாசம் என்கிற ஓர் இட்லி சாம்பாரின் குண்டக்க மண்டக்க சொதப்பல். அடிப்பது பட்டை. இடிப்பது கோயில். நித்தியானந்தா டயலாக்கில் நோ சூடு. நோ சொரணை.

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை. அடித்தளமான உரிமை. விட்டுக் கொடுக்க இயலாத உரிமை. மறுக்க முடியாத உரிமை. இனம், மதம், சாதி, சமயம்; உயர்வு தாழ்வு; கறுப்புத் தோல் சாக்லெட் தோல்; மஞ்சள் தோல் சிகப்புத் தோல்; இப்படி இவை எல்லாவற்றையும் தாண்டிய ஓர் அடிப்படை உரிமை


அந்த வகையில் அவர்களுக்கும் பிறப்பு உரிமை உள்ளது. அந்தப் பிறப்பு உரிமைதான் அவர்களின் தாய்மொழி. ஆக தமிழர்களின் உயிர் உரிமை என்பது அவர்களின் தாய்மொழி தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை.

அந்தச் சிறப்பு உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை உலகத் தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற பிரதான பெரிய மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

2020-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 251 நாடுகள் இருக்கின்றன. ஆனால் 165 நாடுகள் மட்டுமே ஐ.நா. சபையில் இடம்பெற்று உள்ளன. அந்த 165நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2020-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.

https://blog.busuu.com/most-spoken-languages-in-the-world/

ஆனால் இந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 6485 மொழிகளாகக் குறைந்து விட்டது. அதாவது ஒரே வருடத்தில் பதினைந்து மொழிகள் காணாமல் போய் விட்டன. 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 6000 மொழிகள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் இரண்டு வாரங்களில் ஒரு மொழி அழிகிறது.

கிரேக்க மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகப் பழைமையான மொழி. ஆனால் அந்த மொழியைப் பேச ஓர் இனம் இல்லாது போனதால் தான் அந்த மொழி இப்போது இருந்தும் இல்லாமல் மறைந்து போய் கிடக்கிறது. அதே போலத் தான் சமஸ்கிருத மொழி. ஓர் இறந்த மொழியாக மாறிப் போய் இருக்கிறது. ஆக ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அதற்கு ஓர் இனம் தேவை.

உலகில் 6485 மொழிகள் இருந்தும் பெரும்பான்மையான மொழிகள் சிறுபான்மை இனத்தவரின் மொழிகள். 2010-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.


அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது, அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது. அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் (Dato Sir Roland St. John Braddell) என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்றார். அதை நினைவு படுத்துகிறேன். மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் இந்த மண் ஏற்றம் பெற்றது.

Comments on Sir Roland Braddell's Studies of Ancient Times in the Malay Peninsula.
Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. Vol. 28, No. 1 (169) (March, 1955), pp. 78-98

இந்தக் கட்டத்தில் முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah) எனும் இலக்கியவாதி வருகிறார். இவர் 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர். 1843-ஆம் ஆண்டு தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா (Hikayat Abdullah). தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் தமிழ்மொழியை மணலில் எழுதிப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் தேயிலை, கரும்புத் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள். உயிராக நினைத்துப் போற்றி போற்றி வளர்த்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல் (Penang Free School). அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதுவே இந்த நாட்டில் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும்.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. சிங்கப்பூர் பிரீ ஸ்கூல் (Singapore Free School) எனும் பள்ளியில் அந்த வகுப்பு. அதற்கும் ஆதரவு கிடைக்கவில்லை. 1839-ஆம் ஆண்டு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கு; மலாக்கா; சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1859-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலபார் பள்ளி (St Francis Xavier Malabar School) தொடங்கப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி (Anglo-Tamil School Kuala Lumpur) உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது.

1900-ஆம் ஆண்டில் பேராக் பகான் செராய் நகரில் ஆங்கிலேய அரசாங்கம் முதல் தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும். ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்கலாம் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என்கிற ஒரு சட்டம்.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள்.

படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்து இருக்கும். ஒரு தேக்க நிலை. இதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆக மலேசியத் தமிழர்களின் அடையாளம் என்பது மலேசியத் தமிழ்ப் பள்ளிகள். உயிரே போனாலும் தங்களின் அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இழக்கவிட மாட்டார்கள். இது சத்தியம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.09.2020



27 செப்டம்பர் 2020

மலேசியத் தமிழர்களின் மலைநாட்டுச் சோதனைகள்

தமிழ் மலர் - 27.09.2020

மலேசியத் தமிழர்கள்... மலையூர் மலைநாட்டைப் புதுமண்ணாய்ப் போற்றிப் பாடியவர்கள். முதல் மரியாதை. மழைக்காட்டுக் கித்தா தோப்புகளைச் செல்வக் கோபுரங்களாய் மாற்றிக் காட்டியவர்கள். முதல் வணக்கம். மலைக்காட்டு மண்வாசனையை அலைகடலுக்கு அப்பால் மணக்கச் செய்தவர்கள். முதல் காணிக்கை. உயிர் கொடுத்து; உடல் கொடுத்து; இந்த உலகில் எங்களை வாழவைக்கும் அந்தத் தெய்வங்களுக்கு இதுவே எங்களின் இதயம் தாழ்ந்த மூத்த காணிக்கை.

அமெரிக்காவில் அமேசான் மழைக் காடுகள். ஆசியாவில் களிமந்தான் மழைக் காடுகள். மலேசியாவில் மத்தியமலை மழைக்காடுகள். மூன்றுமே பழமை வாய்ந்த பச்சைக் காடுகள். மூன்றுமே  ஈரம் பாய்ந்த பச்சைப் பழம் காடுகள். எவரும் எளிதாய் நுழைந்து போக முடியாத அளவிற்கு அடர்த்தியான காடுகள். நெருக்கம் பெருக்கமாய் நெட்டை மரங்கள் நிறைந்த செழுமைக் காடுகள்.

வருசம் முழுவதும் மழை கொட்டிக் கொண்டே இருக்கும். வருசம் முழுவதும் வெயில் அடித்துக் கொண்டே இருக்கும். எந்த நேரத்தில் மழை கொட்டும்; எந்த நேரத்தில் வெயில் அடிக்கும் என்று இறைவனுக்கும் தெரியாது போலும். அப்படிப்பட்ட வனாந்திரப் பச்சைப் போர்வைகள்.

மேலே இருந்து பார்த்தால், பார்ப்பது எல்லாம் பச்சையாகத் தெரியும். கீழே இருந்து பார்த்தால், பார்ப்பது எல்லாம் கறுப்பாகத் தெரியும். அதுதான் மலைநாட்டுப் பச்சைக் காடுகள். கொஞ்சம் அமைதி. விசயத்திற்கு நான் இன்னும் வரவில்லை. இடையில் ஒரு செருகல்.

மேடையில் பேசுவதற்கு முன்னர் அறிஞர் அண்ணா ஒரு சிட்டிகை பொடி போட்டுக் கொள்வாராம். இங்கிலாந்து அரசி எலிசபெத் ஒரு மொடக்கு சூஸ் குடித்துக் கொள்வாராம். சர்ச்சில் ஒரு தம் சுருட்டு இழுத்துக் கொள்வாராம். இடி அமீனைப் பற்றி சொல்ல வேண்டாம். சண்டைக்கு வருவீர்கள். பரவாயில்லை. சொல்கிறேன். கூட்டத்தில் எவன் பெண்டாட்டியாவது ஏமாந்து போய் நிற்கிறாளா என்று ஓரக் கண்ணால் பார்ப்பாராம்.

அதாவது நம்ப நாட்டில் ஏமாந்து போன ஓர் இளிச்சவாயக் கூட்டமாக இருக்கிறோமே அந்த மாதிரி தான். கூட்டிக் கழித்துப் பாருங்கள். எல்லாம் சரியாக வரும். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

மலேசியக் காடுகளை மத்தியமலைத் தொடர் பிரிக்கிறது. இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கத்திற்கு அப்படி ஒன்றும் தாவிக் குதித்துப் போய்விட முடியாது. அதே போல அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கத்திற்கு இறக்கை கட்டிப் பறந்து வந்து விடவும் முடியாது. லேசு பட்ட காரியம் இல்லை. அவ்வளவு அடர்த்தியான காடுகள்.

இந்தப் பச்சைக் காடுகளில் கோடிக் கோடியான உயிரினங்கள் கோடிக் கோடியான ஆண்டுகளாய்க் கூடிக் கூடி கும்மாளம் போட்டு இருக்கின்றன. கோடிக் கோடியாய் இனப்பெருக்கம் செய்து இருக்கின்றன. மன்னிக்கவும். கோடிக் கணக்கில் கொள்ளு பேரன் கொள்ளு பேத்திகள் எடுத்து இருக்கின்றன. ஆக அவற்றுக்கு அங்கே ஏக போக வாழ்க்கை.

அப்படிப்பட்ட இந்த மலையூர் பச்சைக் காடுகளில் தான் மலேசியத் தமிழர்கள் பேர் போட்டு இருக்கிறார்கள். காட்டுப் பன்றிகள் கடிக்க வரும். கறுப்புக் கரடிகள் கரண்ட வரும். காண்டா மிருகங்கள் பிரண்ட வரும். மலைப்பாம்புகள் முழுங்க வரும். இப்படி ஆகப்பட்ட காட்டு ஜீவன்கள் காட்டுத் தர்பார் செய்த கரடு முரடான காடுகளில் தான் மலேசியத் தமிழர்களும் வரலாறு படைத்து இருக்கிறார்கள்.

ஒரு சில வருடங்கள் அல்ல. ஒரு சில மாமாங்கங்கள் அல்ல. இஅர்னடு மூன்று நூற்றாண்டுகள். மறுபடியும் சொல்கிறேன். முன்னூறு வருடங்கள். இன்னும் கூட்டிச் சொன்னாலும் தப்பு இல்லை. வெள்ளைக்காரன் அப்படியே ஓடி வந்து தப்பு என்று சொல்லித் தட்டிக் கேட்கப் போவதும் இல்லை.

எப்படியாவது பிழைச்சு போங்க என்று என்றைக்கு வெள்ளை துரைகள் கழற்றி விட்டுப் போனார்களோ; அன்றைக்கே மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும் கிழித்து மலாக்கா கடலில் வீசி விட்டார்கள். யார் என்று கேட்க வேண்டாம். மலேசியத் தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று கூப்பாடு போடுகிறார்களே அவர்கள் தான். இன்னும் ஒரு விசயம்.

மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வதற்கு முன்னாலேயே அவர்களின் வரலாற்றையும் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சக்கையாக்கி விட்டார்கள். அதையும் சொல்லி விடுகிறேன்.

மேலே கடாரத்தைக் கடாசி விட்டார்கள். கங்கா நகரத்தைக் கடைந்து விட்டார்கள். கீழே பலமேசுலாவை மலாக்கா ஆற்றில் மூழ்கடித்து விட்டார்கள். ஒன்னும் தெரியாத பாப்பா; போட்டு கிட்டாளாம் தாப்பா என்கிற மாதிரி கோத்தா கெலாங்கி என்றால் என்ன என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

இருக்கிற எல்லா சுவடுகளையும் ஒரு வழி பண்ணிய பிறகு தான் வந்தேறிகள் என்கிற வெறித் தனமான கீர்த்தனங்களுக்கு அடிக்கடி அனுபல்லவி சேர்க்கிறார்கள். மெட்ராஸ் பேச்சு வழக்கில் பஞ்ச் டயலாக்குகள். வயிற்றெரிச்சலில் கொட்டித் தீர்க்கிறேன். விடுங்கள். நியாயமான வயிற்றெரிச்சல். இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் இருக்கவே செய்கிறது. நல்ல பேர் வாங்க விரும்பும் நயவஞ்சகர்கள் வாழும் காலத்தில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். காட்டிக் கொடுக்க ஒரு சிலர் தயாராக இருப்பார்கள்.

ஒரு காலத்தில் இந்த நாடு பச்சைக் காடாய்க் கிடந்தது. திரும்பிய இடம் எல்லாம் காடுகள். தடுக்கி விழுந்தாலும் காடுகள். சொல்லி இருக்கிறேன்.  

ஆக இந்த நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலேசியத் தமிழர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலேசியத் தமிழர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா. சொல்லுங்கள்.

அப்படிப்பட்ட மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்பதே நம்முடைய தாழ்மையான கருத்து.

பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த மண்ணில் மலேசியத் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் மீதான நிந்தனைப் பேச்சுகள் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகின்றது.

மலேசியத் தமிழர்களின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்தப் பூர்வீகத்தையே மறந்து விட்ட அசல் மலேசியர்களாக அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மலேசியத் தமிழர்களின் வேர்களும் விழுதுகளும் கடல் தாண்டிய மண்ணில் இருந்தது. உண்மை. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த வேர்களையும் விழுதுகளையும் எப்போதோ இந்த மண்ணிற்குக் கொண்டு வந்து கரை சேர்த்து விட்டார்களே.

அவர்கள் ஏறி வந்த பாய்மரக் கப்பல்கள்; நீராவிக் கப்பல்கள்; டீசல் இஞ்சின் கப்பல்கள்; இந்தக் கப்பல்களிடம் போய் மலேசியத் தமிழர்களைப் பற்றி கேட்டுப் பாருங்கள். கண்ணீர் விட்டுக் கதைகள் சொல்லும்.

அப்படி கரை தாண்டி வந்தவர்களுக்கு பழைய இடத்தில் வேர்களும் இல்லை. விழுதுகளும் இல்லை. பிடித்து நிற்க ஒரு முழக் குச்சியும் இல்லை. ஆறாவது ஏழாவது எட்டாவது தலைமுறைகளில் இப்போது இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் முக்கால்வாசி பேர் தங்களின் பூர்வீக மண்ணைத் தொட்டுக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

மலேசியத் தமிழர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் மலேசியா. அந்த வகையில் மலேசியத் தமிழர்களுக்குத் தெரிந்த ஒரே நாடு மலேசியா.

இந்த நாட்டிற்காக அவர்களின் உயிர் உடல் பொருள் ஆவி இரத்தம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மலேசியத் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்லி நிந்திப்பது நியாயமா. தர்மமா. மலையக மண்ணுக்கே அடுக்குமா.

வந்தேறிகள் எனும் பேச்சு இந்த நாட்டின் மத, இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்குமா விளைவிக்காதா? சொல்லுங்கள். சீனர் இந்தியர்ச் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் என்பது அனைத்து மலேசியர்கள் மீதான தாக்குதல் என்பதை மலேசியர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

இந்த நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போன மலேசிய இந்திய இனத்தின் அர்ப்பணிப்பு உணர்வுகளை நிந்திக்கலாமா?

18-ஆம் நூற்றாண்டு, 19-ஆம் நூற்றாண்டு கால இடைவெளி என்பது மலாயா வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய காலச் சுவடு.

அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவில் குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர்கள் தான் மலேசியாவில் நிரந்தரமாக ஓர் இந்தியர் சமூகம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்துக் காட்டியவர்கள். மலேசிய இந்தியர்கள் என்கிற வித்துகளை விட்டுச் சென்றவர்கள்.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

அந்த வாயில்லா பூச்சிகளைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லலாமா. சொல்ல ஒரு மனசு வேண்டாமா. சொல்ல ஒரு விவஸ்தை வேண்டாமா. சொல்லும் போது ஒரு வெட்கம் வர வேண்டாமா. இவை என் வேதனையின் விசும்பல்கள்.

மலேசியாவில் இப்போது வாழும் தமிழர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மீண்டும் சொல்ல வேண்டி வருகிறது.

மலாயா பாசா காடுகளில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சு காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு யாருக்கும் தெரியாது. வாங்க வாங்க… வந்து பொறுக்கி எடுங்க... அதான் உங்க வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த பைரவிகள். வேறு எப்படித்தான் சொல்வதாம்.

கிராமத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே கழுவி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. அப்போது அங்கே கிடைத்த சீயக்காய் சீமந்துச் சவர்க்காரத்தை எல்லாம் தடவி நன்றாகவே குளிப்பாட்டி நன்றாகவே காயப் போட்டு இருக்கிறார்கள்.

கற்பனை உலகில் மிதந்து கொண்டு இருந்த அந்தச் சாமானிய மக்களை அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது தமிழகத்தில் பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை. இன்னும் நடுங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்போது இருந்த நடுக்கம் வேறு.

அதன் பின்னர் மலாயாவில் இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்போது வந்தேறிகள் என்கிற நிந்தனைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களினால் ஒவ்வொரு நாளும் காய்ச்சல். முன்பு மலேரியா காய்ச்சல். டிங்கி காய்ச்சல். இப்போது கோவிட் 19. அதனால் சின்னச் சின்ன நடுக்கங்கள்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே சுனாமி நாயக்; பினாமி விநோத் போன்றவர்களின் நன்றி கெட்ட ஆலாபனைகள். இரண்டு பேருக்கும் நல்ல கம்பினேசன். வயிற்றெரிச்சல் வாழ்த்துகள்.

எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. சமாளிக்க முடியுமா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். எதிர்காலச் சந்ததியினர் சமாளிக்க வேண்டுமே. நினைத்தால் பயமாக இருக்கிறது.

மலேசியத் தமிழர்களின் வரலாறு என்பது சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் வேதனைகள் பார்த்த மலேசியத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

மலேசியாவில் வாழும் தமிழர்கள் என்றைக்கும் சோம்பேறிகளாய் வாழ்ந்ததே இல்லை. இரண்டு மரவள்ளிக் கிழங்கை அவித்துத் தின்று விட்டு சுருண்டு கிடக்கும் சோம்பேறிகளாய் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆற்றில் கிடைத்த இரண்டு மூன்று மீன்களைப் பொசுக்கித் தின்று விட்டு தொங்கு மூஞ்சி தூங்குமூஞ்சியாய் வாழ்ந்ததாக வரலாறும் இல்லை.

சோம்பேறிகளாய் வாழாமல் எறும்பு போல உழைத்தவர்கள். சன்னம் சன்னமாய் இந்த நாட்டைச் செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியவர்கள். அவர்கள் வந்தேறிகள் அல்லர் என்பதை நிரூபிக்கவே வரலாற்றைப் புரட்டிப் போடுகிறேன். வேறு வழி இல்லை. காலத்தின் கட்டாயம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.09.2020



மலேசியத் தமிழர்களின் உரிமை மீறல்கள்

அகோரிகள். கேள்விப்பட்டு இருப்பீர்கள். வட இந்தியாவைச் சேர்ந்த சாதுக்கள். கங்கை ஆற்றின் கரைகளில் வாழ்பவர்கள். மனித மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள். மனித வாழ்கைக்கு முற்றிலும் அப்பால் பட்ட பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.  

மனித கபால ஓட்டில் உணவு உண்பது. அந்த ஓட்டிலேயே தண்ணீர் ஊற்றிக் குடிப்பது. ஆடை எதுவும் அணியாமல் சுற்றித் திரிவது. சுத்தமான நிர்வாணக் கோலத்தில் உருண்டு புரள்வது. மனித எலும்புகளால் மாலையைப் போட்டுக் கொள்வது. இடது கையில் ஒரு மண்டை ஓட்டை வைத்துக் கொள்வது. அப்படியே ஊர் ஊராய் ஊர்க்கோலம் போவது.

அகோரிகள்

இவர்கள் தான் அகோரிகள். இந்த அகோரிகளின் பங்காளிகளைப் போல ஒரு சிலர் இங்கேயும் எங்கேயும் வாழ்கிறார்கள்.

அகோரிகள் ஆடும் தாண்டவம் இருக்கிறதே அது ஒரு மாதிரியான அகோரத் தாண்டவம். ஆக்ரோஷமான தாண்டவம். ருத்ர தாண்டவத்தையும் தாண்டி நிற்கும் காளிகா தாண்டவம். அதற்குப் பஞ்ச சகார ஊர்த்துவத் தாண்டவம் என்று மற்றொரு பெயரும் உள்ளது.

அந்த அகோரிகள் தாண்டவம் அப்போது கரை தாண்டி நின்ற ஓர் அகோரத் தாண்டவம். ஆனால் இப்போது இங்கே அந்த மாதிரி எல்லாம் இல்லீங்க. நினைத்த நேரத்திற்கு எல்லாம் நினைத்த இடங்களில் ருத்ர தாண்டவங்கள். மன்னிக்கவும். வந்தேறிகள் என்கிற வக்கரத் தாண்டவங்கள்.

அப்படிச் சொன்னால் தான் சரியாக இருக்கும். சற்று அழுத்தமான உண்மையாகவும் இருக்கும். அப்புறம் அதையும் தாண்டிய நிலையில் நேற்று முளைத்த காளான்களின் ஆணவம் முற்றிய ஆனந்தச் சம்ஹார நவ தாண்டவம் என்று ஒரு தாண்டவம் இருக்கிறது.

அதாவது தருகாணவனத்து முனிவர்கள் மாதிரி கஜ சம்ஹாரத் தாண்டவம். அந்த மாதிரியும் வாய்க்கு வாக்கரிசி போடாமல் ஆடுகிற ஆட்டம்.

ஒரு முக்கியமான விசயம். நல்லது பேசுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன. நாட்டை நல்லபடியாகக் கொண்டு வருவதற்கு என்னென்னவோ செய்யலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்.

எதைப் பேசக் கூடாதோ அதைத்தான் பேசுவார்கள். எப்படி பேசினால் எதைப் பேசினால் மற்றவர்கள் காயப் படுவார்கள் என்று நினைக்கிறார்களோ அதைத் தான் பேசுவார்கள். அத்தனையும் அர்த்தம் இல்லாத செருக்குச் சரணங்கள். உப்பு சப்பு இல்லாத அவதூறுகள்.

இந்தக் களேபரத்தில் ஊரை விட்டு ஓடி வந்த ஒரு திடீர் நாடோடி. அந்த மனுசனாலும் சும்மா இருக்க முடியவில்லை. காலா காலமாக இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்தியர்களையும் சீனர்களையும் சீண்டிப் பார்க்கும் ஒரு கறுப்புத் தோல் வாரிசு.

இன்னும் ஒரு விநோதமான ஜென்மம். இங்கேயே பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் ஒரு கேவலமான பிறவி. மார்கழி மாதத்தில் மதம் மாறி ஐப்பசி மாதத்தில் பிறப்பு மதத்தையே இழிவு படுத்தும் ஓர் இழி பிறவி.

தமிழகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. அப்படியே சன்னமாய் அடங்கிப் போனது. ஆனால் இங்கே அதே மாதிரியான புயல்காற்று அடிக்கடி ஆழிப் பேரலையாய் விஸ்வரூபம் எடுத்து வாட்டி வதைக்கிறது. விஷயத்திற்கு வருகிறேன்.

மலேசியாவில் கொஞ்ச காலமாகவே வந்தேறிகள் எனும் சொல் வக்கரச் சொல்லாக மாறி வருகிறது. அப்படியே முரட்டுத் தனமாக வரட்டுத் தனமாய் தாண்டவமும் ஆடி வருகிறது. ஒரு மினிட் பிளீஸ்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பார்கள். அந்த மாதிரி சில நாடுகளில் குறுக்குப் புத்திக் குதிரைகள் குறுக்கு வழியில் விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

வந்தேறிகள் எனும் சொல் பயன்பாடு இருக்கிறதே அது ஒரு வகையில் திசைத் திருப்புதல் பாவனையைச் சேர்ந்தது. அந்தச் சொல் இப்போது ஒரு குரூரமான உச்சத்தைத் தொட்டுக் கொண்டு போகிறது. அந்த வேகத்தில் தாறுமாறாய் உற்சாகம் காண்கிறது. அது ஓர் உல்டா கலாசாரம். தாராளமாகச் சொல்லலாம். தப்பே இல்லை.

ஆச்சு பூச்சு என்றால் வந்தேண்டா பால்காரன் என்று சொல்லி வந்தேறிகள் வந்தேறிகள் என்கிறார்கள். அந்தச் சொல்லை நாம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடலாம்.

ஆனாலும் அந்தச் சொல்லை தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தப் படுவதால் செம கட்டு தேவைப் படுகிறது. ஆக சரியான விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

ஒரு நாட்டின் பெரும்பான்மை இனத்தவர் மத்தியில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் அரசியல் ஆதிக்கம் செய்வதற்கு வியூகம் வகுப்பார்கள். அதாவது அரசியல் ஆதிக்கம் கிடைத்தால் நாட்டின் பொருளாதாரம் கைக்கு வரும் என்கிற வியூகம்.

நாட்டின் பொருளாதாரம் கைக்கு வந்தால் அந்தக் குறிப்பிட்ட தரப்பினரின் குடும்பம், மாமன் மச்சான், உற்றார் உறவினர், சொந்த பந்தங்கள் எல்லாம் பல தலைமுறைகளுக்கு வக்கணையாக உட்கார்ந்து சாப்பிடலாம்.

அதே பெரும்பான்மை இனத்தில் இருக்கும் மற்ற மற்ற சாமானிய மக்களைப் பற்றி எல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லை. இந்தா எடுத்துக்கோ என்று இரண்டு மூன்று சப்பைகளைத் தூக்கிப் போட்டால் எல்லாம் சரியாக வரும். சாமானியர்கள் அடங்கிப் போய் விடுவார்கள். சத்தம் வராது. அதுதான் அவர்களின் திட்டம்.

ஆனால் சமயங்களில் சத்தம் வரும். அப்படி வந்தால் மேலும் இரண்டு மூன்று துண்டுச் சப்பைகள்.

அதற்கும் மேலும் சத்தம் வந்தால் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளைத் திசைத் திருப்ப வேண்டிய கட்டாய நிலை. இந்தக் கட்டத்தில் தான் சிறுபான்மை இனத்தவர் பலிக்கடா ஆகிறார்கள்.

சில பல நூறாண்டுகளாக வாழ்ந்து கரைந்து போனவர்கள் மலேசியத் தமிழர்கள். அவர்களைப் பார்த்து ’நீங்கள் வந்தேறிகள்... திரும்பிப் போங்கள்’ என்றால் அதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் அப்படிச் சொல்ல முடியுமா?

யார் யாரைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது. சொல்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா? வெட்கமாக நினைக்க வேண்டாமா. மலேசிய இந்தியர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்லும் போது வேதனை வரவில்லை. சிரிப்பு தான் வருகிறது.

மலாயாவிற்கு அழைத்து வரப்பட்ட முன்னோடித் தமிழர்களின் ஒப்பற்ற உழைப்பு; அதில் அப்பழுக்கற்ற விசுவாசம். வரலாறு வேதனைப்படும் அளவிற்கு அவர்களின் அர்ப்பணிப்பு செய்து இருக்கிறார்கள். இப்படி நான் சொல்லவில்லை. பலரும் சொல்கிறார்கள்.

நம் மலேசியத் தமிழர்களின் வரலாற்றைப் பின் நோக்கி பாருங்கள். பெரும்பாலும் கண்ணீரும், காயங்களும் தான் மிஞ்சிப் போய் நிற்கும். அவைதான் அவர்களுக்குக் கிடைத்த தியாகத்தின் திருவோடுகள்.

அன்றைய மலாயா இன்று மலேசியாவாக இப்படி இந்த அளவிற்கு மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு காரணம் யார். இன்று இந்த நாட்டில் திரும்புகிற இடங்களில் எல்லாம் நிரம்பி வழியும் வங்களாதேசிகள் அல்ல. இந்தோனேசியர்கள் அல்ல. மியான்மார் வாசிகள் அல்ல. நேபாளிகள் அல்ல.

நியாயமான உரிமைகள் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து; விட்டுக் கொடுத்து; கடைசியில் ஏமாந்து போனது தான் மிச்சம். ஒரே வார்த்தையில் சொன்னால் அந்நியத் தொழிலாளர்களை விட சிறுபான்மை இனமாக மலேசிய இந்திய இனம் மாறி வருகிறது.

மற்ற இனத்தவர் மத்தியில் இப்போது இளிச்சவாயர்களாக ஏமாந்து நிற்க வேண்டிய நிலை. ஏமாந்த சோணகிரிகளாக குனிந்து போக வேண்டிய நிலை. சும்மா சொல்லவில்லை. வேதனைகளின் உச்சத்தில் சத்தியமான உண்மைகள். வழிந்து ஓடும் குருதிப் புனலில் கொப்பளிக்கும் வேதனைக் குமிழிகள்.

பிழைக்க வந்த மற்ற மற்ற நாட்டுக்காரர்களைவிட இந்த நாட்டுத் தமிழர்களின் கண்களுக்கு இன்னமும் சுண்ணாம்புகளே பூசப் பட்டு வருகிறது. அதை மறுக்க முடியாது. நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்த போதிலும் இந்த நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான அடிமை விலங்கு முற்றிலுமாய் அகற்றப் பட்டதா? இல்லவே இல்லை.

நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கெஞ்சாமல் கிடைக்கிறதா. இல்லவே இல்லை. குனுகிக் குறுகி இடுப்பு வளையாமல் கிடைக்கிறதா. இல்லவே இல்லை. அழுது புலம்பி ஆத்திரம் வந்து ஆர்ப்பரிக்காமல் கிடைக்கிறதா? இல்லவே இல்லை.

இந்த நாட்டை வளப்படுத்திய ஓர் இனத்தை வஞ்சிக்கக் கூடாது என்கிற எண்ணம் தான் வருகிறதா? உண்மையான உழைப்புக்கு இன்னொரு பெயர் இந்தியர் என்கிற நன்றி உணர்வு கொஞ்சமாவது இருக்கிறதா?

ஆபிரகாம் லிங்கன்; நெல்சன் மண்டேலா; சுபாஷ் சந்திர போஸ்; செகுவாரா; மார்டின் லூதர் கிங்; வில்லியம் வாலாஸ்; இவர்கள் மீண்டும் பிறந்து வந்துதான் உண்மையான சுதந்திர காற்றையும், சுபிட்ச நிலையையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டுமா என்ன?

விதைகள் கீழ் நோக்கி விதைத்தாலும்,
விருச்சமாய் மேல் நோக்கி தான் வளரும்.
விழுந்தால் விதை. வளர்ந்தால் விருச்சம்.


புரட்சியாளன் வெற்றி பெற்றால் அவன் போராளி. அதே போல் தான் இந்த நாட்டில் சராசரி தேவைகளுக்குகூட போராடியே கேட்டு பெற வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

பரவாயில்லை. வழக்கம் போல் அடுத்தவருக்காகத் தொடர்ந்து விளக்கை ஏற்றி வைப்போம். அப்படி ஏற்றி வைக்கும் போது நம்முடைய பாதையும் வெளிச்சமாகும். அந்த நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்.

நாடு சுதந்திரம் அடைந்தது 63 ஆண்டுகள். ஆனாலும் உன்மையான சுதந்திரத்தை ஓர் இனம் சார்ந்த மக்கள் மட்டும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்பது ஒரு பொதுவான பார்வை.

எப்போது இந்த நாட்டுத் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கப் படுகிறதோ அப்போது தான் இந்த நாட்டிற்கும் உண்மையான சுதந்திரம். ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலேசியத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது தப்பு. மலேசியா வாழ் தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்வது மிக மிக தப்பு.

கடைசியாக ஒரு வார்த்தை. மலேசியத் தமிழர்கள் இந்த மண்ணில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். அதை எவராலும் மறுக்க முடியாது. அது ஒரு வரலாற்று உண்மை.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலேசியத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலா காலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.09.2020


பேஸ்புக் பதிவுகள்

Rajendran Pakirisamy: நன்றி வாழ்த்துகள்...

Parameswari Doraisamy: வணக்கம் ஐயா... மறுக்க முடியாத நிதர்சனமான உண்மைகள். நம்மை வார்த்தைகளால் குத்திக் கிழித்துக் கூறு போட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நன்றி மறந்த கேடு கெட்ட துரோகிகள்.

Sheila Mohan:
மிக அருமையாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள் சார்... இது தங்களது ஆதங்கம் மட்டும் அல்லாமல் எல்லோருடைய மனதிலும் வந்தேறிகள் என்ற சொல் மிகவும் வலி கொடுக்கிறது.

Raja Rajan: வணக்கம் ஐயா ஆணவமும் அதிகாரமும் இருக்கும் உச்சத்தில் இருக்கும் அவர்களுக்கு இந்தச் செய்தி போய் சேருமா? வருங்காலத்தில் தமிழர்களின் எதிர்காலம் இருண்ட காலமாக மாறுமா?

Mageswary Muthiah: உண்மையை அப்பட்டமாக எழுதி உள்ளீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பற்றாது. இது அனைத்து மலேசிய இந்தியர்களின் மனக் குமுறல்கள்.

Kumar Murugiah Kumar's: உண்மையின் சாசனம் ஐயா !

Maha Lingam:
நல்லது... வாழ்த்துகள்... ஐயா

Thanabaal Varmen: 🙏🙏

Selvi Sugumaran: 🙏🙏

Prema Kanniappan:
🙏🙏

Muthukrishnan Ipoh: இனிய வணக்கம். கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகள். அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னர் பதில் வழங்கப்படும். காலை நேரத்தில் கூடுதலான எழுத்து வேலைகள். நன்றி. நன்றி. 🙏🙏

Ahmad Ridwa: உரிமைக்காக தமிழன் தவம் இருக்கிறான் என்பது வெட்கபட வேண்டிய விஷயம். இங்கே அனைத்தும் வலியவனுக்கே உண்மையில் திராணி இருக்குமேயானால் தமிழர்கள் அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Selvaa Yathamaniam: நமது இந்தியர்களின் உண்மையான வரலாறு இதுவே

Robert Bert: 🙏🙏






26 செப்டம்பர் 2020

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் தன்மானம்

தமிழ் மலர் - 23.09.2020

தமிழ்ப் பள்ளிகளை இழுத்து மூடுங்கள். தமிழ்ப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுங்கள்; தமிழ்ப் பள்ளிகளை அழித்துப் போடுங்கள்; தமிழ்ப் பள்ளிகளை நிறுத்தி விடுங்கள். என்னங்க இது. பசார் மாலாமில் பக்குதே சூப் விற்கிற மாதிரி மாதிரி கூவிக் கூவி வியாபாரம் செய்கிறார்கள். இந்த மாதிரியான கூக்குரல்களைக் கேட்டுக் கேட்டு நமக்கும் புளித்துப் போய் விட்டது.

அந்தக் காலத்துக் கித்தா தோட்டங்களில் ‘புலி வருது புலி வருது’ என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள். இராத்திரி நேரத்தில் வீட்டுக்கு வெளியே போனால் காத்துக் கருப்பு சேட்டைகள் தொல்லைகள் இருக்கும். போகக் கூடாது என்று பயமுறுத்துவார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அந்தப் புலிக் கதை புளித்துப் போகும். அப்புறம் ’பேய் வருது பேய் வருது’ என்று பயமுறுத்துவார்கள். அதுவும் புளித்துப் போகும்.

அது அப்போதைய பெரிசுகளின் எச்சரிக்கை மணி. ஆனாலும் அதே மாதிரி இப்போது மலேசியத் தமிழர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணி வந்து போகிறது.   

புலி வருகிறதோ இல்லை பேய் வருகிறதோ அது முக்கியம் இல்லை. ஏமாந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து புலி வந்தாலும் வரலாம். ஆக அந்தப் புலி வருவதற்கு முன்னால் நாமும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புலி வந்த பிறகு கத்தி கப்படாவைத் தேடுவதில் அர்த்தம் இல்லை. புரியும் என்று நினைக்கிறேன்.

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள். மலேசிய அரசியலில் தூவானம் விட்டாலும் தீவானம் விடாது போலும். ஆச்சு பூச்சு என்றால் அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பாவாக மாற்றி விடுவது வழக்கமாகி வருகிறது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிப்பதும் பழக்கமாகி வருகிறது. இன்றைக்கு நேற்றைக்கு அல்ல. காலம் காலமாகக் கடந்து வரும் காம்போதி ராகத்தின் இனவாதக் கச்சேரிகள்.

’பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் குழந்தைகளிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க தொடக்கப் பள்ளி முறையைச் செயல்படுத்த வேண்டும்’ என்று பெர்லிஸ் மாநிலத்தின் முப்தி மொஹட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின் (Mohd Asri Zainul Abidin) சொல்லி இருக்கிறார்.

இதற்கு முன்னர் பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அமாட் பைஸால் மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் படிப்படியாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இது ஒன்றும் பெரிய பரபரப்பு செய்தி அல்ல. இருந்தாலும் கரும் புகைச்சலை ஏற்படுத்திவிட்ட காட்டுச் செய்தி.

முன்னாள் துணைக் கல்வியமைச்சர் தியோ நீ சிங் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த இன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாதிக், தாய்மொழிப் பள்ளிகளின் கல்வி முறையை அரசாங்கம் மாற்றாது. தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து நிலைத்து இருக்கும் என்றார்.

இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் கொசுக்கடி மாதிரி வான் அமாட் பைஸால் அவர்களின் அறிவிப்பு வருகிறது. யார் இந்த வான் அமாட் பைஸால் (Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal)?

இவர் 2018 முதல் 2020 வரை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சையட் சாதிக்கிற்கு (Syed Saddiq) சிறப்பு அதிகாரியாக இருந்தவர். 2020 மார்ச் 10-ஆம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினின் புதிய அமைச்சரவையின் கீழ் இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சராக நியமிக்கப் பட்டார். அதே தினத்தில் செனட்டராகவும் நியமிக்கப் பட்டார்.

வான் அமாட் பைஸால் பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. மலேசிய அரசியல் ஜாம்பவான்கள் மத்தியில் புதிதாய்த் தோன்றிய சின்ன ஒரு மின்மினிப் பூச்சி. பெரிதாகச் சொல்ல வேறு எதுவும் இல்லை.

நாட்டில் விசுவாசமான மாணவர்களை உருவாக்குவதில் இருந்து தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்டன; படிப்படியாக மூட வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பது தான் பெரிய ஒரு  புகைச்சலைக் கிளப்பி உள்ளது.

அரசியல் லாபத்திற்காக உளறிக் கொட்டி இருக்கலாம். சொல்ல முடியாது. ஆக தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னவர்களில் இவர் முதல் ஆள் அல்ல. அதே சமயத்தில் இவர் நிச்சயமாக்க கடைசி ஆளாகவும் இருக்க மாட்டார். இன்னும் வருவார்கள். கூத்துக் கும்மாளங்கள் தொடரும். நம்புங்கள்.

எப்போது எல்லாம் தேர்தல் காய்ச்சல் வாசல் கதவைத் தட்டுகிகிறதோ, அப்போது எல்லாம் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் எனும் வாசகத்தை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகி விட்டது.

அந்த வழக்கம் தாய்மொழிப் பள்ளிகள் வாங்கி வந்த வரமா; இல்லை எழுதிச் சென்ற விதியின் சாசனமா தெரியவில்லை. ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்கள் போல தெரிகிறது.

சென்ற 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இதே போல ஒரு சர்ச்சை. தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவது அரசியல் அமைப்புப்படி சரியா என்று கேள்வி எழுப்புவதற்கு அனுமதி கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கல்வி தொடர்பான சட்டத்தை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இருக்கிறது என்று மலாயா தலைமை நீதிபதி தீர்ப்பு அளித்து இருந்தார். உடனே பூமிபுத்ரா பெர்காசா மலேசியா கட்சியின் அப்போதைய தலைவர்களில் ஒருவர்; இப்ராகிம் அலி ஓர் அறிக்கை வெளியிட்டார்.

தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத் தான் வேண்டுமா? நீதிமன்றங்கள் முடிவு செய்ய வேண்டும் என்கிற அறிக்கை. மலேசிய ஒற்றுமைக்குத் தடையாக உள்ள தாய்மொழிப் பள்ளிகள் தொடர்பான சர்ச்சைக்கு நீதிமன்றங்கள் தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன் என்கிறார்.

மேலும் இப்ராகிம் அலி சொன்னார். தாமொழிப் பள்ளிகள் தொடர்ந்து இருப்பது; அவற்றில் தாய்மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பது; தேசிய நலனுக்கு ஏற்றது அல்ல. அவை எல்லா இனங்களையும் சேர்ந்த பிள்ளைகள் ஒன்று படுவதற்குத் தடங்கலாக உள்ளன என்றும் கூறி இருந்தார்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அது அவரின் கருத்து.

இவ்வளவு நாளும் இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நல்லபடியாகத் தானே போய்க் கொண்டு இருந்தன. ஏன் திடீரென்று இந்த மாதிரி எதிர்மறையான கேள்விகளைக் கேட்கிறார்கள்.

தாய்மொழிப் பள்ளிகளால் நாட்டின் ஒற்றுமையில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அதனால் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்ட வேண்டும் எனும் ஆலோசனைகள் தேவை தானா?

’மலேசிய இன்று’ ஊடகத்தில் அன்பர் இராகவன் கருப்பையா ஒரு கருத்து சொல்லி இருந்தார். பதிவு செய்கிறேன்.

’மற்ற இனத்தவரின் மொழிகளைச் சீண்டினால் தான் ஆதரவாளர்கள் தங்களைத் தலை மீது வைத்துத் துதி பாடுவார்கள் என்ற கீழ்த் தரமான எண்ணத்தில் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் போலும்.’

’தமிழ், சீனப் பள்ளிகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என அறிக்கை விடுவது தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று எண்ணி பிற இனத்தவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் உளறும் இத்தகைய சாக்கடை ஜந்துகளுக்கு நாம் பாடம் புகட்டத் தான் வேண்டும்’. அன்பர் இராகவன் கருப்பையா அவர்களின் உள்ளக் குமுறல்கள்.

இந்தத் தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினை இன்று நேற்று தொடங்கிய பிரச்சினை இல்லை. நீண்ட காலமாகவே தொடர்கின்றது. அண்மைய காலங்களில் போர்னியோ காட்டுத் தீ போல அடிக்கடி கொளுந்து விட்டும் எரிகின்றது. அதுவும் தேர்தல் நேரம் வந்து விட்டால் சும்மா சொல்லக் கூடாது. அமேசான் காட்டுத் தீ பிச்சை எடுக்க வேண்டும். சூடம் சாம்பிராணி தேவை இல்லை. நல்லவே பற்ற வைத்து விடுகிறார்கள்.

யாராவது பின்னால் இருந்து கொண்டு, சாவி கொடுக்கலாம். சொல்ல முடியாது. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1971-ஆம் ஆண்டு. 49 ஆண்டுகளுக்கு முன்பே இதே மாதிரி ஒரு பெரிய சர்ச்சை. சீனத் தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்று உத்துசான் மலேசியா மலாய் நாளிதழின் ஆசிரியர் மெலான் அப்துல்லா சொன்னார். அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. அபராதமும் விதிக்கப் பட்டது. இது சிலருக்குத் தெரியும். பலருக்குத் தெரியாது.

(Melan bin Abdullah & Anor v. P.P. [1971] 2 MLJ 280)

பின்னர் மற்றும் ஒரு பிரச்சினை. 1978 அக்டோபர் 11-ஆம் தேதி. மார்க் கோடிங் (Mark Koding) என்கிற சபா நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் சீனத் தாய்மொழிப் பள்ளிகளை மூடுங்கள் என்று சொன்னார். அப்போது உசேன் ஓன் பிரதமராக இருந்தார்.

நாடாளுமன்றத்தில் பேசும் போது அதன் உறுப்பினர்களுக்குச் சட்ட விலக்களிப்பு (immunity) இருக்கும். இருந்தும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு அவர் இழுக்கப் பட்டார்.

(Public Prosecutor v Mark Koding ([1983] 1 MLJ 111)); (s 4(1)(b) of the Sedition Act 1948 (Revised 1969); (Section 3(1)(f) in the Sedition Act 1948);

மேலே சொன்ன அந்தச் சட்டத்தின் கீழ் குற்றப் பதிவு. 1982-இல் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப் பட்டது. பின்னர் ஈராண்டு நன்னடத்தை ஜாமீன். தற்காலிக விடுதலை. சரி.

அண்மைய காலங்களில் அதிகமான புகைச்சல். ஓர் எடுத்துக்காட்டு. 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம். பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor).

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். இந்த மாதிரி அடிக்கடி டிங்கி காய்ச்சலின் பிசுபிசுப்புகள் வரவே செய்கின்றன.

ஒரு முக்கியமான விசயம். இந்த நாட்டில் வாழும் தமிழர்களே தமிழ்ப் பள்ளிகள் வேண்டாம் என்று சொன்னாலும் அது நடக்காத காரியம். முடியும் ஆனால் முடியாது. நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும். சட்டமாக்க வேண்டும். அந்தச் சட்டத்தை மேலவை ஏற்க வேண்டும். இன்னும் பெரிய பெரிய வேலைகள் எல்லாம் இருக்கின்றன.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுவது என்பது எல்லாம் அப்படி ஒன்றும் அல்வா பால்கோவா கிண்டும் சமாசாரம் அல்ல. சட்டம், சடங்கு, சம்பிரதாயம், சனாதனம், சான்று என்று எவ்வளவோ இருக்கின்றன.

பொதுவாகவே ஒன்று சொல்லலாம். மலேசிய அரசியல் கட்சிகளின் சிந்தனையில் இனம்; மதம் போன்ற வாதங்கள் ஆதிக்கம் செலுத்தும் வரையில், தாய்மொழிப் பள்ளிகள் சொக்கட்டான் காய்களாகவே குறி வைக்கப்படும்.

தாய்மொழிப் பள்ளிகளின் நிலைப்பாட்டில் கேள்வி எழுப்புவது தேசத் துரோகமான செயல்பாடு. அரசியலமைப்பிற்கு விரோதமான செயல்பாடு. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அரசியல் ஜிங்கு ஜிக்கான்கள் விசயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? ஒன் மில்லியன் டாலர் கேள்வி.

மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே தமிழ்மொழிப் பள்ளிகள் இந்த நாட்டின் நீரோட்டத்தில் நிலைத்து தடம் பதித்து விட்டன. இன்று வரை நல்லபடியாகத்தான் போய்க் கொண்டு இருக்கின்றன. அரசாங்கம் கொடுத்ததில் பாதி; அரசியல்வாதிகள் சிலரின் பாக்கெட்டுக்குள் போனது மீதி; இதில் கிடைத்ததைக் கொண்டு தமிழ்மொழிப் பள்ளிகள் போராடிக் கொண்டு தான் இருந்தன. இருந்தும் வருகின்றன.

அரசியல் பந்தயத்தில் ஒரு சில அரசியல்வாதிகள், சாம்பியன்களாகத் திகழ ஆசைப் படலாம். தவறு இல்லை. ஆனால் நிதர்சனமான உண்மைகளைத் தவறாக மட்டும் எடைபோட்டு விடக்கூடாது. தாய்மொழிப் பள்ளிகளை அழிப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையின் உச்சத்தை அடைந்துவிட முடியும் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சாடி இருக்கிறார்.

மலேசியர்கள் இடையே ஒற்றுமை இல்லாமையை ஏற்படுத்துவது தாய்மொழிப் பள்ளிகள் அல்ல. மக்கள் பணத்தில் பில்லியன் கணக்கில் சுருட்டிக் கொண்டு ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் தான் காரணம். இனவாதத்தையும் மதவாதத்தையும் இடுப்பில் செருகிக் கொண்டு அலையும் இளம் அரசியல்வாதிகள் தான் காரணம்.

இந்த நாட்டில் ஒற்றுமை நிலைத்தன்மை நசிந்து வருகிறது என்றால் அதற்கு தாய்மொழிப் பள்ளிகள் காரணம் அல்ல. ஆகவே தாய்மொழிப் பள்ளிகள் மீது பழி சுமத்துவது கண்டிக்கத் தக்கது. நாட்டில் இன மதச் “சாம்பியன்கள்” என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் அதற்குக் காரணமாக அமையலாம் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் கூறுகிறார்.

தாய்மொழிப் பள்ளிகளை அகற்றினாலும், தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தேசியவாதம் முழுமையான உருவகம் பெறாது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் சொல்கிறார்.

மலேசிய அரசியலமைப்பை அனைவரும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் அரசியல் சாணக்கியம் சமரசம் பேசும். குறுகிய எண்ணம் கொண்டவர்கள்; தூர நோக்கு இல்லாதவர்கள்; இவர்களிடம் தேசிய ஒற்றுமை ஞானத்தை எதிர்பார்க்க முடியாது.

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் தாய் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.09.2020