03 பிப்ரவரி 2022

கோலா கிள்ளான் வரலாறு

முன்னர் காலத்தில், குதிரை அல்லது எருமை மாடுகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் தான், கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து ஊடகங்களாக இருந்தன.

கிள்ளான் ஆற்றின் வழியாக டாமன்சாரா வரையில் படகு சவாரிகள் இருந்தன. அங்கு இருந்து கிள்ளான் நகருக்கு மீண்டும் குதிரை, எருமை மாட்டு வண்டிகளில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.


அந்த நேரத்தில் சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய ஆளுநராக வில்லியம் புளூம்பீல்ட் டக்ளஸ் (William Bloomfield Douglas) என்பவர் இருந்தார். துணை ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Frank Swettenham) இருந்தார்.

கிள்ளான் - கோலாலம்பூருக்கு இடையிலான போக்குவரத்து முறை; மிக நீண்டது, மிக சலிப்பானது; சீர் செய்யப்பட வேண்டும் என்று பிராங்க் சுவெட்டன்ஹாம் கருத்து தெரிவித்தார்.

அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூர் பகுதிகளில் நிறையவே ஈயம் உற்பத்தி செய்யப்பட்டது. அவற்றைப் பத்து துறைமுகத்திற்கு (Pelabuhan Batu) எடுத்துச் செல்ல வேண்டும்.

கிள்ளான் துறைமுகம், அப்போதைய காலக் கட்டத்தில் பத்து துறைமுகம் என்று அழைக்கப்பட்டது. இரயில் பாதை போடும் வேலைகள் தொடங்கின.

1886-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், கோலாலம்பூரில் இருந்து புக்கிட் குடு (Bukit Kudu) வரையிலான 19 மைல் இரயில் பாதை திறக்கப்பட்டது.

1890-ஆம் ஆண்டில் அந்த இரயில் பாதை மேலும் 3 மைல் வரை நீட்டிக்கப்பட்டு, கிள்ளான் நகரத்துடன் இணைக்கப் பட்டது.

கிள்ளான் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகிய இரண்டு பகுதிகளும் ஏற்கனவே மலேரியா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாக இருந்தன.

கிள்ளான் துறைமுகம் சதுப்பு நில காட்டுப் பகுதியில் இருந்ததால் மிகையான மலேரியா தொற்றலுக்கு உள்ளாகி இருந்தது.

கிள்ளான் துறைமுகம் திறக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மலேரியாவின் கடும் தாக்கத்தால் துறைமுகமே மூடப்பட்டது.

கிள்ளான் துறைமுகத்தில் மலேரியா தாக்கம் ஏற்படுவற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான், அதாவது 1897-ஆம் ஆண்டில், மலேரியா கொசுக்களால் தான், மலேரியா நோய பரவுகிறது என்பதைப் பிரித்தானிய மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ் கண்டுபிடித்தார்.

அந்த வகையில் அந்தக் கண்டுபிடிப்பில் இருந்து பயன் அடைந்த முதல் காலனித்துவ நாடு மலாயா. தவிர கிள்ளான் துறைமுகமும் மலேரியா தாக்கத்தில் இருந்து விடுபட்டது.

புதர்க் காடுகள் அழிக்கப் பட்டன. சதுப்பு நிலங்கள் நிரப்பப் பட்டன. கொசுக்கள் பெருகும் இடங்களை அழிக்கவும்; துறைமுக நடவடிக்கைகளுக்கு மேலும் இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும்; பல துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் சதுப்பு நிலக் காடுகளில் தேங்கி நின்ற மேற்பரப்பு நீர் திசை திருப்பப் பட்டது. மலேரியாவின் அச்சுறுத்தல், கிள்ளான் துறைமுகத்தில் இருந்து முற்றாகத் துடைத்து ஒழிக்கப் பட்டது.

அதன் பின்னர் கிள்ளான் துறைமுகத்தில் வணிகம் வேகமாக வளர்ந்தது. 1914-ஆம் ஆண்டில் பல்வேறு துறைமுக வசதிகளுடன் இரண்டு புதிய அணைக்கரைகள் உருவாக்கப் பட்டன.

அதற்கு முன்னர் 1902-இல், கிள்ளான் துறைமுகத்தில் சிலாங்கூர் போலோ விளையாட்டு மன்றம் (Selangor Polo Club) நிறுவப்பட்டது. எனினும் அந்த மன்றம் 1911-இல் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.

முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கிள்ளான் துறைமுகம் அதிக வளர்ச்சியும்; அதிக விரிவாக்கமும் அடைந்தது. 1940-ஆம் ஆண்டில், அதன் பண்ட பரிமாற்றம் 550,000 டன்னாக உயர்ந்த போது உச்சத்தையும் தொட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது அரச போர் விமானங்களைப் (Royal Air Force) பராமரிக்க, கிள்ளான் துறைமுகத்தில் இருந்த விமானத் திடல்கள் பயன்படுத்தபட்டன. போரின் போது சேதம் அடைந்த துறைமுகத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள் புனரமைப்பு செய்யப்பட்டன.

அப்போதைய மலாயாவின் முக்கியமான இரண்டு ஏற்றுமதி பொருட்களான ரப்பர்; பனை எண்ணைய். இவற்றின் ஏற்றுமதி பெருகியது. அதைக் கையாளும் வகையில் துறைமுகத்தின் தெற்குப் பகுதி விரிவு செய்யப்பட்டது. இறக்குமதியும் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றது.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சாத்தியம் அல்ல என்று எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே இறக்குமதிப் போக்குவரத்து அமைந்தது.

தற்சமயம் கிள்ளான் துறைமுகம், கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கிள்ளான் துறைமுகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சாண்டியாகோ பிரதிநிதிக்கின்றார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.02.2022

கிள்ளான் துறைமுகம் பற்றி ஒரு கட்டுரை தயாரித்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்து உள்ளேன். அதன இணைய முகவரி:

https://ta.wikipedia.org/s/axgo



 

பாலி தீவு கூத்தா நகரில்...

இந்தோனேசியா பாலி தீவில், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்கள் 35 இலட்சம் பேர் உள்ளார்கள். அவர்கள் தீபாவளியை ஒரு பண்டிகையாகக் கொண்டாடுவது இல்லை. சமயம் சார்ந்த ஒரு திருவிழாவாகப் பார்க்கிறார்கள். இந்து மதம் சார்ந்த ஒரு திருவிழா என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.


தீபாவளி என்று அவர்கள் சொல்வது இல்லை. தீபாளி என்கிறார்கள். ’வ’ எனும் எழுத்து இல்லாமல் உச்சரிக்கிறார்கள். அவர்களின் சொல் வழக்கில் தீபவளி என்பது தீபாளி.

பாலி தீவின் தீபாவளி; இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மற்ற உலக நாடுகளில் கொண்டாடப்படும் தீபாவளியைப் போல இருந்தாலும், வேறு ஒரு கோணத்தில்; வேறு ஒரு வடிவத்தில். வேறு ஒரு பரிமாணத்தில் பயணிக்கின்றது. கொஞ்சம் அல்ல. ரொம்பவுமே மாறுபட்டுப் போகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பாலி தீவிற்குப் போய் இருந்தேன். கூத்தா இரவு கேளிக்கை மையம் ஒன்றில் இரவு 10 மணி அளவில் தனியாக அமர்ந்து குளிர்பானம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன்.

கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன். அவருடைய பெயர் சதுரங்கா. பெயர் கொஞ்சம் புதுமை. கொஞ்சும் தமிழின் கிறுகிறுப்பு. எனக்குள் வியப்பு. சதுரங்கம் என்றால் செஸ் விளையாட்டுப் போட்டி தொடர்பானது. ’நான் மலேசியாவில் இருந்து வந்து இருக்கிறேன். நீங்கள் என்ன மதம். ஏன் உங்கள் பெயர் சதுரங்கா. புதுமையாக இருக்கிறது’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் நான் ஓர் இந்து. எனக்குத் தெரிந்த வரையில் எங்களுடைய வம்சாவளியினர் எல்லாரும் ‘ஓராங் இந்து’ என்றார். பேச்சு வாக்கில் நான் கேட்டேன்.

‘இந்தோனேசியாவில் எப்படி மற்ற மதத்தைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்? பிரச்சினைகள் வராதா’. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை நிலைகுலைய வைத்தது.

‘எங்கள் நாடு மதச் சார்பற்ற நாடு. ஆறு முக்கியமான மதங்களை அங்கீகரித்து உள்ளது. அதில் இந்து மதம் ஒரு மதம். இந்து மதம் தொடர்பான கலை கலாசாரங்களை ஆதரிக்கிறது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த நூற்றுக் கணக்கான இந்து ஆலயங்களை மீட்டு எடுத்து வருகிறது. அவற்றைப் பார்க்க பல இலட்சம் பல மில்லியன் பேர் வருகிறார்கள் போகிறார்கள். பாலி ஒரு பசிபிக் சுற்றுலா மையமாக மாறி வருகிறது.’

’பல கோடிக் கோடி ரூபியாக்கள் கிடைக்கின்றன. பல ஆயிரம் பாலி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன’ என்றார். அவரை உற்றுப் பார்த்தேன்.

என்னால் பதில் சொல்ல இயலவில்லை. இந்தப் பக்கம் இந்தக் கரையில் இனவாதத் தாண்டவங்கள் நடிகர் ஆர்யாவின் ’நான் மகான் அல்ல’ படத்தை நினவுபடுத்தின.

கடைசியாக அவர் சொன்ன வார்த்தை. அப்படியே பதிவு செய்கிறேன். ’முன்பு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களை வழி நடத்திய வம்சாவழியினரை; எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் மூதாதையர்களை; இப்போது வந்த 500 ஆண்டு கால மத மாற்றத்தினால் எங்களால் மறக்க முடியாது.

எங்களின் பூர்வீக மதத்தையும் மறக்க முடியாது’ என்றார். நிறைய விசயங்களைச் சொன்னார். இங்கே பதிவு செய்ய இயலாது. மன்னிக்கவும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.02.2022


 

09 ஜனவரி 2022

சோழர்களின் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி

தமிழ் மலர் - 09.01.2022

சோழர் காலத்துச் செப்பேடுகளில் கோத்தா கெலாங்கி என்பது மாயிருண்டகம் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆழ்க்கடல் பகுதியில் அகழிகள் நிறைந்த இருண்ட கருங்கல் கோட்டையை இராஜேந்திர சோழனின் படைகள் கைப்பற்றின என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.


சோழர் செப்பேடுகளின் சிகரமாய் விளங்குவது திருவலங்காடு செப்பேடு. இந்தச் செப்பேடு தென்கிழக்காசிய நாடுகள் மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு நடத்தியதை விளக்கமாகக் கூறுகின்றது. லெய்டன் செப்பேடு (Leyden grant); இராஜேந்திர சோழன் செப்பேடு ஆகியவையும் இராஜேந்திர சோழனின் படை எடுப்புகளை உறுதி செய்கின்றன. இராஜேந்திர சோழன் செப்பேடு என்பது தஞ்சாவூர் செப்பேடு என்றும் அழைக்கப் படுகிறது. (Sastri, K. A. Nilakanta 1935; p 211).

ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்


எனும் சொற்கள் அந்தச் செப்பேடுகளில் வருகின்றன. இங்கே ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

’ஆழ்கடல் அகழ்சூழ் மாயிருண்டகமும்’ எனும் வாசகத்தில் ’மாயிருண்டகம்’ எனும் சொல் வருகிறது. கவனியுங்கள். மாயிருண்டகம் எனும் சொல் கோத்தா கெலாங்கியைக் குறிப்பதாகும். ஆழ்கடலில் அகழிகள் சூழ்ந்த மா இருண்டகம் என்று அந்தச் சோழர் செப்பேடுகள் சொல்கின்றன.

கோத்தா கெலாங்கி கோட்டை கரும்கற்களால் கட்டப் பட்டது. அதனால் அது கறுப்பு நிற கோலத்தில் காட்சி அளித்து இருக்கிறது. அதனால் சோழர் படையினர் அந்தக் கோட்டையை ’மா இருண்ட அகம்’ என்று அழைத்து இருக்கிறார்கள். மா என்றால் பெரிய... இருண்ட என்றால் கருமையான... அகம் என்றால் கோட்டை.

கோத்தா கெலாங்கியில் மாயிருண்டகம் கோட்டையைக் கட்டும் போது அதைச் சுற்றிலும் அகழிகளைத் தோண்டி வைத்து இருக்கிறார்கள். அரண்மனை அல்லது கோட்டைகளின் வெளிப்புறத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக அகழ்ந்து அமைக்கப்படும், நீர் நிரம்பிய அரண் அல்லது கொடும் பள்ளத்தை அகழி என்பார்கள்.

அந்த அகழிகளில் முதலைகளை வளர்த்து இருக்கிறார்கள். ஆக அந்த அகழிகளைத் தாண்டித்தான் சோழப் படையினர் கோட்டைக்குள் நுழைந்து கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மனை எதிர்கொண்டார்கள்.


ஆனால் ‘செஜாரா மெலாயு’ (Sejarah Melayu) காலக் குறிப்பு வேறு மாதிரியாகப் பதிவு செய்கிறது. கோத்தா கெலாங்கி அரசர் சூளவர்மன், சோழர்களின் படைகளை கோட்டைக்கு அப்பால், பத்து மைல்களுக்கு அப்பால், நேருக்கு நேர் மோதினார் என்று ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகளில், ஸ்ரீ லானாங் பதிவு செய்து இருக்கிறார். ‘செஜாரா மெலாயு’ காலக் குறிப்புகள் நம்பகத் தன்மையைத் தாண்டிப் போகின்றன என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கருத்து.

மேலும் ஒரு கூடுதலான தகவல். தஞ்சைப் பெரிய கோயிலின் தெற்கு விமானச் சுவரில் முதலாம் இராஜேந்திர சோழனின் ஸ்ரீ விஜயம் மலாயா படையெடுப்புகள் பற்றிய செய்திகள் பொறிக்கப்பட்டு உள்ளன. கி.பி. 1030 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டவை.

கோத்தா கெலாங்கி பற்றி இப்படி எல்லாம் வலுவான, இறுக்கமான சான்றுகள் இருக்கும் போது; கோத்தா கெலாங்கி எனும் அரசு இருந்ததற்கான சான்றுகள் இல்லவே இல்லை என்று ஒரு சிலர் அடம் பிடிக்கிறார்கள். கோத்தா கெலாங்கி என்பது பகாங் ஜெராண்டுட் காடுகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகளைக் குறிக்கின்றது என்றும் சொல்கிறார்கள்.

’இருக்கு ஆனால் இல்லை’ என்பதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கோத்தா கெலாங்கி காடுகளைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட வேண்டும். அரசு சாரா பொது இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அகழாய்வுகள்; புவிசார் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.


இன்னும் ஒரு விசயம். அந்த ஆய்வுகள் நடுநிலையான ஆய்வுகளாக இருக்க வேண்டும். நடக்குமா? என்றைக்கு நடக்கும்? இது 20-ஆம் நூற்றாண்டின் மலாயா வரலாற்றில் மற்றும் ஒரு பில்லியன் டாலர் கேள்வி. ஒரு செருகல்.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘காணாமல் போன கோத்தா கெலாங்கி’ எனும் வரலாற்று நூலில் இந்த விவரங்கள் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளன. கோத்தா கெலாங்கி வரலாற்றை அந்த நூல் ஒட்டு மொத்தமாய் அலசிப் பார்க்கின்றது.
தமிழகத்தில் குறிப்பாக தமிழகக் கோயில்களில் கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக் கணக்கான செப்பேடுகள்; கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மிகப் பழைய செப்பேடு கி.பி 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

Sastri, K.A. Nilakanta (1949). "Takuapa and its Tamil Inscription Part I.". Malayan Branch of the Royal Asiatic Society. 22.

பெரும்பாலான தமிழ் நாட்டுச் செப்பேடுகள் தமிழிலேயே எழுதப்பட்டு உள்ளன. ஆனாலும் 6-ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் கிடைத்து உள்ளன. சில கல்வெட்டுக்கள் இரு மொழிகளிலும் உள்ளன.


தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கியமான செப்பேடுகள்: லேடன் செப்பேடுகள்; முதலாம் இராஜேந்திர சோழனின் திருவலங்காட்டுச் செப்பேடு; சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு; வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு.

இராஜேந்திர சோழனைப் பற்றி ஐந்து செப்பேடுகள் கிடைத்து உள்ளன. இவற்றை மெய்க்கீர்த்திகள் என்றும் சொல்லலாம். அவற்றில் திருவலங்காட்டுச் செப்பேடு, இராஜேந்திர சோழன் கங்கையை நோக்கி படை எடுத்ததைப் பற்றிச் சொல்கின்றன. வட நாட்டு தர்மபாலா மன்னரை வெற்றி கொண்ட செய்தியைத் திருவலங்காட்டுச் செப்பேடுகளில் காணலாம்.

கோத்தா கெலாங்கி பற்றி சோழர் செப்பேடு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்தச் செப்பேட்டை தஞ்சாவூர் செப்பேடு (Tanjore Inscription) என்றும் சொல்கிறார்கள். 1030-ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. (Arokiaswamy, Celine W.M. 2000; pp. 37, 38, & 41)

இராஜேந்திர சோழன் கோத்தா கெலாங்கி மீது 1025-ஆம் ஆண்டில் படை எடுத்தார். ஆனால் தஞ்சாவூர் செப்பேட்டில் 1030-ஆம் ஆண்டு என்று பொறிக்கப்பட்டு உள்ளது. ஆக படையெடுப்பிற்குப் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்தச் செப்பேடு எழுதப்பட்டு இருக்கலாம். 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள்.

1. ஸ்ரீ விஜயம் (சுமத்திரா) - Sriwijaya (Palembang)
2. பண்ணை (சுமத்திரா) – Pannai
3. மலையூர் (சுமத்திரா) – Malaiyur Jambi
4. மாயிருண்டகம் (ஜொகூர்) - Maa Yirudingam
5. இலங்காசுகம் (வட மலாயா) – Ilangaasokam
6. மாப்பாளம் (பர்மா) - Maa Pappaalam
7. மேவிலி பங்கம் (பங்கா தீவு, பிலிப்பைன்ஸ்) - Mevili Bangkam, Mavimbangam
8. வலைப்பந்தூர் (கிளந்தான்) – Valaipanthur
9. இலமுரி தேசம் (ஆச்சே) – Ilaamurithesam
10. தலை தக்கோலம் தக்கூவாபா (தாய்லாந்து) - Takuapa Thailand
11. மாதமாலிங்கம் (தாம்பரலிங்கா மலாயா - தாய்லாந்து) - Madalingam; Maa Thamaalingam
12. மா நக்காவரம் (நிக்கோபார்) - Maa - Nakkavaaram
13. கடாரம் - Kadaaram


மேலும் சில பகுதிகள் உள்ளன. இராஜேந்திர சோழனின் படைகள் கடாரத்தில் படையெடுத்த பின்னர் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு படை தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போய் இருக்கிறது.

The third unit of Chola forces reached Thalai-Thakkolam (Takua-pa) approximately covering the present Krabi, Phangnga and Surat Thani states of upper south Thailand.


ஒரு படை இலங்காசுகம் போய் இருக்கிறது. ஒரு படை கங்கா நகரம் பகுதிக்குப் போய் இருக்கிறது. கங்கா நகரத்திற்குப் போன படைதான் கோத்தா கெலாங்கிக்குப் போய் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். தாய்லாந்து கிளந்தான் பகுதிக்குப் போன படை கோத்தா கெலங்கிக்கு போய் இருக்க முடியாது என்பது என் கருத்து.

ஒவ்வோர் ஆண்டும், இறுதி வாக்கில் பகாங், கிளந்தான், திரங்கானு பகுதிகளில் அடர்ந்த மழை பெய்யும். பகாங் ஆறு கரை புரண்டு ஓடும். எளிதில் கடந்து வந்து கோத்தா கெலாங்கி கோட்டைக்குப் போய் இருக்க முடியுமா? ஒரு சந்தேகம். இது என் கணிப்பு. சரி.

சோழர் செப்பேடுகளில் பொறிக்கப் பட்டவை அனைத்தும் தமிழ் எழுத்துகள். அந்த எழுத்துகளில் கிரந்த எழுத்துகளும் உள்ளன. ஜ, ஸ, ஷ, ஹ போன்ற கிரந்த எழுத்துகள். சோழர்களின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் காணப் படுகின்றன. திருவலங்காட்டுச் செப்பேடுகளில் இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய வாசகங்கள்:

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
சங்கிராம விஜய துங்க வர்மன்
ஆகிய கடாரத்து அரசனை வாகயம்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து

உரிமையில் பிறக்கிய பெருநிதி பிறக்கமும்
ஆர்த்தவன் அகநகர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சா தரதோ ரணமும் முத்தொளிர்
புனைமணி புதவமும் கனமணிக் கதவமும்

நிறை சீர் விஜயமும் துறைநீர்ப் பண்ணையும்
நன்மலை யூரெயில் தொன் மலையூரும்
ஆழ்கடல் அகழ்சூழ் மாயிரு டிங்கமும்
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்
காவல் புரிசை மேவிலிம் பங்கமும்
விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்
கலாமுதிர் கடுந்திறல் இலாமுரி தேசமும்

கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
தீதமர் வல்வினை மாதமா லிங்கமும்
தேனக் கலர்பொழில் மாநக்க வாரமும்
தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும்

மாப்பொரு தண்டாற் கொண்ட
கோப் பரகேசரி பன்மரான
உடயார் ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்கு யாண்டு


என பொறிக்கப்பட்ட வாசகங்கள். இராஜேந்திர சோழன் கைப்பற்றிய தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பற்றி இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தி பட்டியலிடுகிறது. அதில் ஒரு பகுதியில் அவ்வாறு செதுக்கப்பட்டு உள்ளது. (Rajendra Chola, Vol 1, Inscription: 66, p. 98)

பொதுவாகவே சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அகவல் பாவில் அமைந்து உள்ளன. முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்து எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் (கி.பி. 993), அவை காணப் படுகின்றன. இந்த மெய்க் கீர்த்திகளைக் கொண்டு எந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இராஜேந்திர சோழனைப் பற்றிய மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் நூல் வடிவில் கோர்த்துத் தொகுப்புகளாக வைத்து இருக்கிறார்கள். அந்த நூல் கோர்வையின் பெயர் இராஜேந்திர சோழனின் மெய்கீர்த்திகள். அந்த வகையில் பார்க்கும் போது, கடாரத்தைக் கைப்பற்றிய இராஜேந்திர சோழனின் படைகளில் ஒரு பிரிவு, கடாரத்தில் இருந்து கிழக்குத் திசையில் இலங்காசுகம் (Lankasuka) நோக்கி நகர்ந்தன.

இலங்காசுகம் என்பது தோராயமாக தற்போதைய தெற்கு தாய்லாந்தின் சோங்கலா (Songkhla), பட்டாணி (Pattani), யாலா (Yala) மற்றும் நாரதிவாட் (Narathiwa) மாநிலங்களை உள்ளடக்கியவை என்று சொல்லப் படுகிறது. சோழப் படைகள் இலங்காசுகத்தைக் கைப்பற்றிய பின்னர் அந்த இலங்காசுகத்தில் ஓர் இளவரசரை அந்த இராச்சியத்தின் துணை அரசராக நியமித்தது. சரி.

திருவாலங்காட்டு கல்வெட்டுகளில் எழுதப்பட்டு உள்ள வாசகங்கள்:

’கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்’
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி
கலங்கா வல்வினை இலங்கா அசோகமும்

(Rajendra Chola, SII, V1, pp. 66 - 98)

இலங்காசுகத்தில் இருந்து சோழர்ப் படைகள், மேலும் தென்கிழக்குத் திசையை நோக்கிச் சென்றன. தற்போதைய மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் உள்ள வலைப்பந்தூர் (Valaipanthur - Valai Penjuru) வரை சென்றன. வலைப்பந்தூர் அரசையும் கைப்பற்றின. சோழர்ப் படைகளின் அடுத்த நகர்வு கோத்தா கெலாங்கி படையெடுப்பு. (Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja 2009; p. 1)

கோத்தா கெலாங்கியை லெங்குய் (Lenggui) என்று சீன நாட்டவர் அழைத்து இருக்கிறார்கள். இந்தச் சொல் தான் கிளாங்குய் (Glong Gui) எனும் சொல்லாக மருவியது. இன்றைய காலத்தில் இந்தியர்களைக் கிளேங் என்று அழைப்பதற்கான மூலச் சொல்லாக அமைந்து இருக்கலாம். இது என்னுடைய கணிப்பு.

இந்தக் கருத்தை ஜொகூர் தமிழர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் அவர்களும் உறுதியாகச் சொல்கிறார். ஏன் என்றால் இவர் கடந்த பல ஆண்டுகளாக கோத்தா கெலாங்கியைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறார். பல்வகையான வரலாற்றுச் சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளார். இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி நாளையும் இடம்பெறும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.01.2022

குறிப்புகள்; NOTES

1. Jan Wisseman Christie, "The Medieval Tamil-language Inscriptions in Southeast Asia and China", Journal of Southeast Asian Studies, Vol. 29, No. 02, September 1998, pp 239-268

2. Munoz, Paul Michel (2006). Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula.

3. Hermann Kulke; K. Kesavapany; Vijay Sakhuja (2009). Nagapattinam to Suvarnadwipa: Reflections on Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian, 2009. p. 1. ISBN 9789812309372.

4. Karnjanatawe, Karnjana (30 May 2019). "Tales from the Southern Seas". Bangkok Post. Retrieved 30 May 2019.

5. Inscription of Virarajendra Chola at Bahawathi Amman shrine at Agatheseswarem temple in Kanyakumari district, Tamil Nadu, India. Travancore Archeological Series vol 111, Part 1, No 41

 

08 ஜனவரி 2022

கூலிம் டப்ளின் தோட்டத்தில் ஏழு டிவிசன்கள் ஏழு தமிழ்ப்பள்ளிகள்

தமிழ் மலர் -  08.01.2022

மலையூர் மலைநாட்டில் கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டாங்கள்.

தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் தடுக்கப் படுவதற்கு பற்பல திட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.


இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த மலாயா தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி வந்தது. 1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர் ஜே. டிரைவர். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை இருப்பதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 
இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர்.


இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர் இனம் தடுமாறிப் போனது.

இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டமே அவர்களுக்கு எதிராகத் திசை திரும்பியது.

அந்தக் காலத்தில் மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட ஒரு சட்டம் இருந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance). இந்தச் சட்டம் தான், தக்க தருணத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது. சரி.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். அந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி, மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.


ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டம். அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

எடுத்துக்காட்டாக பேராக், தெலுகான்சன் நோவா ஸ்கோஷியா தோட்டம். ஐந்து டிவிசன்கள் இருந்தன. ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு தமிழ்ப்பள்ளி. ஐந்து டிவிசன்கள். ஐந்து தமிழ்ப்பள்ளிகள்.


கெடா கூலிம் டப்ளின் ரப்பர் தோட்டம். ஏழு டிவிசன்கள் இருந்தன. ஏழு டிவிசன்கள் ஏழு தமிழ்ப்பள்ளிகள். ஒவ்வொரு டிவிசனிலும் ஒரு தமிழ்ப்பள்ளி. அதே போல சிகாமட் சா ஆ ரப்பர் தோட்டம். ஏழு டிவிசன்கள் இருந்தன. ஏழு தமிழ்ப்பள்ளிகள்.

அந்தத் தொழிலாளர்ச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

உலகின் எந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி.


தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் மொழியின் ஆணி வேர் தமிழ்ப் பள்ளிகளின் சன்னிதானத்தில் தான் வேர் ஊன்றி உள்ளன. இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால் 1925-ஆம் ஆண்டு வரை மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள்.


காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர்  சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார். 1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 535 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.


இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இதனிடையே 1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும் இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.


பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது.

அந்தக் குழுவில் ம.இ. கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்வி குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக இந்திய சமூகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். இவர்தான் மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர். அவருடைய பெயரே அந்தக் கல்வி அறிக்கைக்கு வைக்கப் பட்டது.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். அங்கே இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக இருந்து வருகிறது.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

இன்னும் ஒரு விசயம். எதிர்காலத்தில் இந்த மலைநாட்டில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் பயன்பாட்டு உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லக் காணாமல் போகும்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே. அதே போல மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை அந்த இனம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

அந்த வகையில் மொழியும் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை.  

எல்லா பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெற வேண்டும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற வேண்டும். பகுதி உதவி பெற்ற பள்ளிகள் என்பது முழு உதவி பெற்ற பள்ளிகள் என்று மாற வேண்டும். அதுவே என்னுடைய எதிர்ப்பார்ப்பு.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.01.2022

சான்றுகள்:

1. A Short History of Tamil Schools in Malaya/ Malaysia - https://grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671


 

07 ஜனவரி 2022

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2)

தமிழ் மலர் - 07.01.20220

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் (Sir Roland Braddell) என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்று உள்ளார். அதை நினைவு படுத்துகிறேன்.

’மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.’ இதைக் கேட்டதும் சிலருக்குப் பற்றிக் கொண்டு வரலாம். பிரச்சினை இல்லை. கொட்டாங்கச்சிக்கு அடியில் நெருப்பு பற்றாது.

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை.

அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் அங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.


ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் காலப் போக்கில் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற மேலாண்மை மொழிகளின் அதிகார ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.

2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.


2020-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன.

ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

454-ஆம் ஆண்டு இந்தோனேசியா போர்னியோவில் மகாராஜா குதுங்க அனுமார்த்த தேவவர்மன் (Maharaja Kudungga Anumerta Devavarman) என்பவர் ஆட்சி செய்தார்.

அவர் காலத்தில் இருந்து இந்தியர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன. 1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது சுமத்திரா தீவில் வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.


தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும்.

1850-ஆம் ஆண்டு மலாக்காவில் முதல் ஆங்கிலேயத் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது (Malacca Anglo-Tamil School). அதுவே நமது மலேசிய நாட்டின் முதல் முழுநேரத் தமிழ்ப்பள்ளி ஆகும். ஏற்கனவே 1816-ஆம் ஆண்டு பினாங்கில் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது (Penang Free School Tamil class 1816). அதை நினைவில் கொள்வோம்.


1900-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் முதல் முயற்சியாகப் பேராக், பாகான் செராயில் முதல் அரசினர் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. இதற்கு பிரேங்க் சுவெட்டன்காம் பொறுப்பு வகித்தார். 1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப் பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியை ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.

1906-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளும் ஒரு கிறிஸ்துவத் தமிழ்ப் பள்ளியும் இயங்கி வந்தன.

1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. நிறுவியர் தம்புசாமி பிள்ளை.


1924-ஆம் ஆண்டு செந்தூல் கத்தோலிக்க திருச்சபை, செயிண்ட் ஜோசப் பெண்கள் தமிழ்ப் பள்ளியை நிறுவியது. 1925-ஆம் ஆண்டில் மலாயாவில் 235 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன.

1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப் பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது.  

1937-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில தமிழ்ப் பள்ளிகளைக் கட்டிக் கொடுத்தது.

1913-ஆம் ஆண்டில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி;

1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி;

1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி;

1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

1938-ஆம் ஆண்டில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேவையை நிவர்த்தி செய்ய தமிழ்ப் போதானா முறை வகுப்புகள் தொடங்கப் பட்டன.

1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர். மலாயாவில் பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1946-ஆம் ஆண்டு தமிழ் ஏழாம் வகுப்பு தொடங்கப் பட்டது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழாசிரியர்களாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் ஏழாம் வகுப்பு நிறுத்தப் பட்டது.

1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த போது புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் சட்டவிதி 3-இன் படி எல்லா இனங்களின் மொழியும் பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் அதன்படி நடைமுறையில் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே. மலாய்ப் பள்ளிகள் மட்டுமே இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கொண்டு வர முடியும் என்பது சிலரின் எண்ணமாகும்.

மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2). இந்தச் சட்டவிதி ஒரு வகையில் தமிழ் சீனப் பள்ளிகளுக்கு ஒரு மருட்டலாக இருந்தது. மன்னிக்கவும். உண்மையே அதுதான். கொஞ்ச காலம் அப்படி ஒரு நிலைமை இருந்தது. அதாவது அந்தச் சட்டவிதி 21 (2)-யின் கீழ் கல்வியமைச்சருக்குச் சில கூடுதலான அதிகாரங்கள் வழங்கப் பட்டு இருந்தன. அவர் விரும்பினால் ஒரு சீனம் அல்லது ஒரு தமிழ்மொழிப் பள்ளியைத் தேசிய மொழிப் பள்ளியாக மாற்றம் செய்ய முடியும்.

இந்தச் சட்டவிதி சற்றே சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் 1996-ஆம் ஆண்டு அந்தச் சட்டவிதியில் திருத்தம் செய்யப் பட்டது. இந்த விசயம் ரொம்ப பேருக்குத் தெரியாது.

ஓர் அரசியல்வாதி அந்த மலேசியக் கல்விச் சட்டவிதி 21 (2) பற்றி பேசி இருக்கிறார். இந்த நாட்டில் உள்ள தமிழ் சீனப் பள்ளிகளைச் சட்டவிதி 21 (2)-யின் படி மூடிவிட வேண்டும் என பேசி இருக்கிறார். பெரும் சர்ச்சையை உருவாக்கிய செய்தி. ஏன் தெரியுங்களா? டத்தோ நஜீப் ரசாக் பிரதமர் பதவியில் இருந்த போது கல்விச் சட்டத்தின் சட்டவிதி 21 (2)-யிலும் திருத்தம் செய்யப் பட்டு விட்டது.


அந்த வகையில் கல்விச் சட்டம் 1966-இன் கீழ் சீன தமிழ்ப் பள்ளிகளின் நிகழ்நிலை உறுதி செய்யப்பட்டது. அதாவது அப்பள்ளிகளின் தகுதி மறு உறுதி செய்யப் பட்டது.

(Education Act 1961 amended during the era of Datuk Seri Najib Razak, whereby Section 21 (2) was abolished and the status of SJKC and SJKT were guaranteed under the Education Act 1996)

அப்படி இருக்கும் போது தமிழ் சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என  அரசியல்வாதிகள் சிலர் சொல்வது சரியன்று. அரசியல் பிரசாரத்தில் தமிழ் சீனப் பள்ளிகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது தவறு. அதாவது சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும்  தமிழ் சீனப் பள்ளிகளைப் பிரசார ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறு என்பதே பொதுவான கருத்து.

(https://www.thestar.com.my/news/nation/2019/03/03/barisans-fate-to-be-discussed-this-week/)

நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி தேசியக் கல்வி அமைப்பின் கீழ் இயங்கும் எல்லாப் பள்ளிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்பதே வேதனையான செய்தி. வேறுபாடுகள் நிலவுகின்றன. அதனால் தமிழ் சீனப் பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன.

இதில் தமிழ்ப்பள்ளிகள் அனுபவிக்கும் வேதனைகள் சொல்லில் வடிக்க முடியா. சீனப் பள்ளிகள் பரவாயில்லை. வசதிமிக்க சீனர்கள் நிதியுதவி செய்து வருகின்றார்கள். தமிழ்ப்பள்ளிகளின் இந்த வேதனையான நிலையைச் சீர் செய்வதற்கு 2010-ஆம் ஆண்டுகளில் தமிழ் அறவாரியம் களம் இறங்கியது. தேசியக் கல்வி ஆலோசனை மன்றத்தின் கவனத்திற்கு சில முன்மொழிதல்களைக் கொண்டு போனது.

அந்த முன்மொழிதல்கள் வருமாறு:

1. தேசியக் கல்விக் கொள்கையில் உட்பட்ட சீன தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் சமமாக நடத்தப்பட வேண்டும்.

2. அரசாங்கம் தாய்மொழிப் பள்ளிகளுக்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் வேறுபாடுகள் இருக்கக் கூடாது.

3. தாய்மொழிப் பள்ளிகளுக்குத் தேவைப்படும் தகுதி பெற்ற ஆசிரியர்கள்; கட்டடங்கள்; ஆய்வுக்கூடங்கள்; நூலகங்கள்; வசதியான வகுப்பறைகள்; திடல்கள்; போன்றவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

4. எல்லா தமிழ்ப் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்

5. தாய்மொழிப் பள்ளிகள் கட்டுவதற்கான நிலம்; கட்டடம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும்

6. இடைநிலைப் படிப்பை முடித்த பின்னர் பட்டப்படிப்பு செல்வதற்கான மெட்ரிகுலேசன், எஸ்.டி.பி.எம். தொடர்பான பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும்.

7. தகுதி பெற்ற மாணவர்களுக்கு வேறுபாடு இல்லாமல் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இடம் அளிக்க வேண்டும்.

8. உபகாரச் சம்பளம் வழங்குவதில் வேறுபாடு இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

9. மாணவர்களைச் சிறுமைப் படுத்தும் நோக்கம் இருக்கக் கூடாது. இனவாதத்தைத் தூண்டி விடுவதாக அமையக் கூடாது.

10. ஆரம்பத் தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகள் என்று இருப்பதை தேசியப் பள்ளிகள் என மாற்றம் செய்ய வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் ஏட்டளவில் அப்படியே நிலுவையில் உள்ளன. எப்போது இந்தப் பரிந்துரைகளுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியே. மலேசிய நாடு பல்லினப் பண்பாட்டைக் கொண்டது. ஆகவே தமிழ்க் கல்வி வழியாகத் தமிழரின் பண்பாடு பேணப் படுவது அவசியமாகும். இது நியாயமான கோரிக்கை. தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழுமையான உதவி கிடைப்பது இல்லை. இந்தக் குறையை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி மலேசியத் தமிழர்கள் மலேசிய நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்ற குடிமக்கள். அந்த வகையில் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழிக் கல்வி பெறுவதற்குச் சட்டபூர்வமான உரிமை பெற்று உள்ளார்கள் என்பதே என்னுடைய கருத்து.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.01.2022

சான்றுகளும் குறிப்புகளும்:

1. Formal Tamil education in Malaya was mainly by Christian missionaries.

2. The first Tamil class was held in Penang Free School.

3. After 1870, Christian missionaries began establishing Tamil schools in Penang, Province Wellesley and Perak, to cater for the children of Indian workers in the sugar and gambiar plantations.

4. In Bagan Serai in Perak, the Christian missions established schools where there were many Tamils.