16 செப்டம்பர் 2022

துணிச்சல்மிக்க நாயகர் துன் சாமிவேலு

 (தமிழ் மலர் - 16.09.2022)

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய அரசியல் வானில் கம்பீரமாக வலம் வந்த மாபெரும் மனிதர். துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே எனும் வாசகத்திற்கு உந்துகோலாய் வாழ்ந்து காட்டியவர். தனிப்பட்ட வாழ்க்கையின் சோதனை வேதனைகளில் சாதனைகள் படைத்த நல்ல ஒரு தலைவர்.

இவரின் 31 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பற்பல இடர்பாடுகள். பற்பல இடையூறுகள். பற்பல இடைஞ்சல்கள். அவற்றை எல்லாம் கடந்து சென்றவர். வெற்றியே தன் இலட்சியம் என்று பீடு நடை போட்டு மனுக்குலக வரலாற்றில் தடம் பதித்த மற்றும் ஒரு வரலாற்று நாயகர். ஓர் அவதாரப் புருசர்.


மலேசிய வரலாற்றில் மலேசியாவின் மிக உயரிய விருதான துன் விருது பெற்ற தமிழர்களில் துன் சாமிவேலுவும் ஒருவர். 2017-ஆம் ஆண்டில் அந்த விருதைப் பெற்ரார். இவருக்கு முன்னர் துன் சம்பந்தன் அவர்கள் அந்த விருதைப் பெற்ற மற்றும் ஒரு மலேசியத் தமிழர்.

துன் சாமிவேலு சமுதாயம், பொதுச் சேவை, சமூக இயக்கங்கள், அரசியல் என மலேசிய இந்திய சமுதாயத்தோடு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இன்று வியாழக்கிழமை அதிகாலை தன்னுடைய 88-ஆவது வயதில் வயது மூப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அவருக்கு தமிழ் மலர் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும். இறைஞ்சுகின்றோம்.


இவரின் இயற்பெயர் சாமிவேலு சங்கிலிமுத்து (Samy Vellu Sangalimuthu). பிறப்பு: மார்ச் 8, 1936. இவர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ம.இ.கா.வின் தலைவர் பதவியில் சேவை ஆற்றினார். மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவர்.

மலேசிய அமைச்சரவையில்:

* மலேசியச் சக்தி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சு (Minister of Energy, Telecommunications and Posts) (ஜூன் 1989 - மே 1995);

* மலேசியப் பொதுப் பணித் துறை அமைச்சு (Minister of Works) (ஜூன் 1983 - ஜூன் 1989);  (1995 - மார்ச் 2008);  

* மலேசிய பொதுப் பணி பொதுவசதிகள் அமைச்சு (Minister of Works and Public Amenities) (ஜூன் 1989 - மே 1995);

போன்ற  முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர்.


1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.

2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜ் எனும் மலேசிய சமூகக் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் அவரின் அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது என்றும் சொல்லலாம்.

1960-களில் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனேசியாவை அதிபர் சுகர்ணோ ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனேசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். கான்யாங் மலேசியா (Ganyang Malaysia) எனும் வாசகங்களைப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார்.

அந்தக் கட்டத்தில் சாமிவேலு, கோலாலம்பூரில் இருந்த இந்தோனேசியத் தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார். அவரின் நாட்டுப் பற்றின் மூலம் அவரின் புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது. மலேசிய ஆங்கில, மலாய், சீன, தமிழ் நாளேடுகள் அவரைப் பெரிதும் புகழ்ந்தன.


சங்கிலிமுத்து, அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் பிறந்தார். தன் ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். தாய் தந்தையருக்கு பால் மரம் சீவும் வேலைகளில் உதவி செய்தார்.

பின்னர், இவருடைய குடும்பம் நிலக்கரிச் சுரங்க நகராக விளங்கும் பத்து ஆராங்கிற்கு குடி பெயர்ந்தது. பத்து ஆராங்கிற்கு குடி வந்த பின்னரும் அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலைமை. எந்தவித மாற்றமும் இல்லை. ஏழ்மை தொடர்ந்தது.

பத்து ஆராங்கிற்கு அருகில் ரவாங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமை; அவருடைய வாழ்க்கையைத் திசைத் திருப்பியது.

அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நில. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விலக வேண்டிய நிலைமை.

பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகப் படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.

சாமிவேலுவின் கடின உழைப்பு அந்த நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப் பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார்.

1950-ஆம் ஆண்டு நவம்பர் 7-இல் அவருடைய தாயார் அங்கம்மாள் காலமானார். தாயாரின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்தது. அதன் பின்னர், அவர் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. 1951-இல் பத்து ஆராங் நகரை விட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தார்.

1951-இல் கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகச் சிறிது காலம் வேலை பார்த்தார். அந்தக் காலக் கட்டத்தில் கோலாலம்பூரில் ஸ்ரீ ஜெயா பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதவிச் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார்.

அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.

வேலை நேரம் போக மற்ற ஓய்வு நேரங்களில் கோவிந்தசாமி என்பவரின் துணையுடன் கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக் கொண்டார்.

தந்தையார் சங்கிலிமுத்து 1957-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி மறைந்த போது சாமிவேலுவின் வயது 21. இக்கட்டத்தில் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு சாமிவேலுவின் தோளில் விழுந்தது.

1960-ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

1964-ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்தியச் செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார்.

பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட கால கட்டத்திலேயே சாமிவேலு தன் கல்வித் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். லண்டனுக்குச் சென்று  அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் (Royal Institute of British Architects) கட்டடக்கலைத் தேர்வு எழுதி தாயகம் திரும்பினார்.

அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் துன் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

அரசாங்கத்தின் தூதுக் குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார். 1979-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருது வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.

1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.

அப்போதைய பிரதமர் துன் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல்; 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது.

1989-ஆம் ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது. 2001-ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.

நாட்டின் மிக உயரிய விருதான “துன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்கிறார். மலேசிய வரலாற்றில் துன் விருது பெறும் இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார்.

இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். அண்மைய காலங்களில் உடல்நலம் பாதிப்பு.

டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (வயது: 57) எனும் ஒரு மகன் உள்ளார். சர்ச்சைக்குரிய மலேசிய இந்தியர்களின் மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர். சாமிவேலு தம்பதியினரின் மருமகள் ஷீலா நாயர், (வயது 46)

2000-ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன.

மலேசிய அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன.

மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்தியர்ப் பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர்.

நவம்பர் 25, 2007-இல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.

பின்னர், மார்ச் 8, 2008-இல் நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஜெயக்குமார் தேவராஜிடம்; சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார்.

இவர் தலைமையில் இயங்கிய ம.இ.கா. கட்சியும் அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த பாரிசான் நேசனல், மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி, ம.இ.கா. கட்சித் தலைவர் என பதவிகள் இல்லாத காலத்திலும் செல்வாக்குமிக்கத் தலைவராக துன் சாமிவேலு விளங்கி வருகிறார்.

தமிழகத்தில் இருந்து மலேசியாவிற்கு வருகை தந்த இலக்கியவாதிகள் பலருக்கு ஆதரவு அளிப்பதிலும், அவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்குவதிலும், அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் துன் சாமிவேலு பெரும் பங்காற்றினார்.

அதே சமயத்தில், உள்நாட்டு எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது. உள்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் நூல்களை வெளியிட்டு ஆதரவு அளித்து உள்ளார்.

2019-ஆம் ஆண்டு ஈப்போவில் எழுத்தாளர் அருள் ஆறுமுகத்தின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள துன் சாமிவேலு வந்து இருந்தார். அவரிடன் பேசினேன். அப்போது அவர் என்னிடம் சொன்ன வார்த்தை என்றும் என் நினைவுகளில் நிழலாடுகின்றன.

’உங்கள் எழுத்து என்றும் பதினாறு; நீங்க என்றைக்கும் பதினாறு’. அப்படிச் சொன்ன அந்த மனிதர் மறைந்து விட்டார்.

அவரின் அரசியல் பயணம் விமர்சனத்திற்கு உரியது. உண்மை. மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், அவர் இந்த நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பற்பல முயற்சிகளை மேற்கொண்டார்; செய்து இருக்கிறார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் புதிதாகக் கட்டப்படுவதற்காக அரசாங்கத்திடம் கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்று உதவி செய்து இருக்கிறார். அரசாங்கத்தின் பணம் தானே என்று சொல்லாலாம். ஆனால் எல்லோராலும்ம் வாங்கிவிட முடியுமா? அவர் தன்னுடைய அமைச்சர் அதிகாரத்தை அழுத்தமாகப் பயன்படுத்தினார். அதை மட்டும் நாம் மறுக்க இயலாது. நினைவில் கொள்வோம்.

ஆயிரம் விமர்சனங்கள் வரலாம். ஆனால் அந்த மனிதர் இப்போது இல்லை. கடந்து போய் நிம்மதி கொள்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
16.09.2022

11 ஆகஸ்ட் 2022

இந்தோனேசியா மகாராணியார் சீமா கலை அழகுப் போட்டி

ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia) எனும் கலை அழகுப் போட்டியை, இந்தோனேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறார்கள்.

(Solo International Performing Art (SIPA) போட்டியில் ரத்து சீமா புத்ரி இந்தோனேசியா, ஓர் அங்கமாகும். அடுத்த போட்டி 08.09.2022-இல் நடைபெற உள்ளது. கொரோனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.


ஆங்கிலத்தில் The Legend, History of World Culture di Studio Seven Touch என்று அழைக்கிறார்கள். ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் கலிங்கத்து ராணியார் சீமாவைப் பற்றிய நாடக அரங்கேற்றங்கள் முதல் பரிசுகளைப் பெற்றுள்ளன.

கலிங்கா எனும் பெயரில் பல்வேறான அழகுப் போட்டிகளையும் நடத்துகிறார்கள்.


மிஸ் கலிங்கா (Miss Kalingga);

வீரா கலிங்கா (Wira Kalingga);

ரதி கலிங்கா (Ratu Kalingga);

ஜோம் கலிங்கா (Jom Kalingga);

ராணி சீமா இந்தோனேசியா (Ratu Sima Putri Indonesia)

என்று பல அழகுப் போட்டிகளை நடத்துகிறார்கள். அந்தப் பட்டியலில் ஆண்களுக்கும் கலிங்கா ஆணழகன் கட்டழகுப் போட்டியும் உள்ளது.


இந்தோனேசியா, ஜாவா தீவு மக்கள் கலிங்கா எனும் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து மரியாதை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தங்களின் பிள்ளைகளுக்குக் கலிங்கா என்று பெயர் வைப்பதிலும் பெருமை கொள்கிறார்கள். கலிங்கா என்பது தங்களின் பூர்வீகத்து அடையாளம் என்று சொல்கிறார்கள்.

பள்ளிப் பாட நூல்களில் கலிங்கா; மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; தருமநகரம்; சைலேந்திரம்; சிங்காசாரி என அனைத்துப் பேரரசுகளின் வரலாறுகள் பாடமாகப் போதிக்கப் படுகின்றன.

இந்தோனேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தோனேசியா இந்திய வரலாற்றுக்கு என்று தனி ஆய்வுத் துறைகளை உருவாக்கி முனைவர் பட்டங்களை வழங்கி வருகிறார்கள். இருட்டடிப்புகள் இல்லை.


1400 ஆண்டுகளுக்கு முன்னால் மகாராணியார் சீமா ஜாவாவில் பிறந்து வளர்ந்தவர். கி.பி. 674-ஆம் ஆண்டில் இருந்து கி.பி 695-ஆம் ஆண்டு வரை கலிங்கா பேரரசின் மகாராணியார்.

கலிங்கா பேரரசு இந்தோனேசியா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்ட பேரரசு. சீமா மகாராணியின் ஆட்சி ஒரு பொற் காலம் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

ஆகக் கடைசியாக, இந்தப் போட்டி, 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தோனேசிய மக்களின் வரலாற்று உணர்வுகள் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவை. வாழ்த்துவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.08.2022

சான்றுகள்:

1. https://m.solopos.com/sipa-2013-finalis-putri-indonesia-jadi-maskot-418731

2. https://blog.tiket.com/en/sipa-solo-international-performing-arts/

3. https://authentic-indonesia.com/blog/solo-international-performing-arts-2019/

4. https://sipafestival.com/



 

10 ஆகஸ்ட் 2022

சங்லூன் ஜித்ரா போர்

மலாயாவில் நடந்த போர்கள்

_ஜப்பானியர் காலத்தில் மலாயாவில் நடந்த போர்கள்_

1. கோத்தா பாரு போர் - (8 டிசம்பர் 1941) - (Battle of Kota Bharu)

2. சங்லூன் ஜித்ரா போர் - (11 டிசம்பர் 1941) - (Battle of Jitra)

3. கம்பார் போர் - (30 டிசம்பர் 1941) - (Battle of Kampar)

4. சிலிம் ரிவர் போர் - (6 ஜனவரி 1942) - (Battle of Slim River)

5. கெமாஸ் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Gemas)

6. மூவார் போர் - (14 ஜனவரி 1942) - (Battle of Muar (1942)

7. எண்டாவ் போர் - (26 ஜனவரி 1942) - (Battle off Endau)

8. சிங்கப்பூர் போர் - (8 பிப்ரவரி 1942) - (Battle of Singapore)


1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 1942-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் மலாயா சிங்கப்பூர் நாடுகளை ஜப்பான்காரர்கள் கபளீகரம் செய்து விட்டார்கள்.

மலாயாவுக்கு ஜப்பான்காரர்கள் வரும் போது சைக்கிள், மோட்டார் சைக்கிள், மெர்சிடிஸ், ஹோண்டா, தொயோத்தா கார்களை எல்லாம் எடுத்து வரவில்லை. முதுகில் சும்மா ஒரு பெரிய பையை மாட்டிக் கொண்டு ஐலசா பாடிக் கொண்டுதான் வந்தார்கள்.

கையில் ஆளாளுக்கு ஒரு துப்பாக்கி. கூடவே உதவிக்கு ஜீப் வண்டிகள். பாதுகாப்புக்கு கவச வாகனங்கள். அம்புட்டுத்தான்.


69 நாட்கள். அதாவது 9 வாரங்கள். அதாவது 2 மாதங்கள் 2 வாரங்கள். இந்த 69 நாட்கள் கால இடைவெளியில் 2 நாடுகளைப் பிடிக்க முடியுமா. அதுவும் சைக்கிள் சவாரி செய்து பிடிக்க முடியுமா. சொல்லுங்கள். முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். சாதனை என்று சொல்ல முடியாது. சாமர்த்தியம் என்று சொல்லலாம்.

தீபகற்ப மலேசியாவில் இரண்டு இடங்களில் தரை இறங்கினார்கள். கோத்தா பாரு ஓர் இடம். அலோர் ஸ்டார் மற்றோர் இடம். முதலில் நடடா ராஜா கதைதான். பல மைல்கள் நடந்தே வந்து இருக்கிறார்கள். போகும் வழியில் யாராவது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அம்புட்டுத்தான்.

அவனை அங்கேயே மடக்கி அப்படியே அவனுடைய சைக்கிளைப் பிடுங்கிக் கொள்வது. இல்லை என்றால் போகிற வழியில் யார் வீட்டிலாவது அழையா விருந்தாளியாக நுழைய வேண்டியது. நல்ல ஒரு சைக்கிளாகப் பார்த்து உருட்டிக் கொண்டு போவது. பழைய சைக்கிளாக இருந்தால் சொந்தக்காரனுக்கு இரண்டு மூன்று உதைகள். ஜப்பான்காரனுக்கு அப்போது தெரிந்த நன்றி விசுவாசம்.

வெறும் காலங்களில் நடந்து வந்து, பின்னர் கண்ணில் பட்ட இளிச்சவாயர்களின் சைக்கிள்களில் பயணம் செய்து, இரண்டு நாடுகளை 69 நாட்களில் கைப்பற்றி இருக்கிறார்கள். இது மலாயாவில் ஜப்பான்காரன் காலத்தில் நடந்த ஜப்பான்காரன் சாதனை.


ஆக சைக்கிள் சவாரி செய்தே இரண்டு நாடுகளைப் பிடித்து இருக்கிறார்கள் என்றால் சும்மாவா? கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிய வேண்டிய சாதனை. இன்னும் யாரும் செய்யவில்லை. முடிந்தால் செய்து பார்க்கலாம். ஜப்பான்காரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்த மாதிரி ஜப்பான்காரகள் மலாயாவுக்குள் வரும் போது, தொடக்கத்தில் அதிகமான எதிர்ப்புகள் இல்லை. ஐலசா பாடிக் கொண்டே மலாயா எல்லையைக் கடந்து வந்து விட்டார்கள். கெடா மாநிலத்தில் இருக்கும் சங்லூன் ஜித்ரா நகரங்களில் தான் முதல் எதிர்ப்பு. பிரிட்டிஷ் கூட்டுப் படையினர் கொடுத்த எதிர்ப்பு.

இந்த இடத்தில் தான் ஜப்பானியருக்கும் பிரிட்டிஷாருக்கும் முதல் போர் நடந்தது. 1941 டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு சங்லூன் ஜித்ரா போர் நடந்தது. மலாயா போர்களில் முதல் போர்.

மலாயா போர்களைப் பற்றி முதலில் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். நேற்று சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு மீள் பார்வை.


அரைத்த மாவையே அரைப்பதாகச் சொல்ல வேண்டாம். இப்போதுதான் விற்காத மாவை கடைகளில் இருந்து எடுத்துக் கொண்டு போய், மெசினில் போட்டுக் காய வைத்து, புதிய பிலாஸ்டிக் பைகளில் போட்டுக் கட்டி, அதே கடையில் போட்டு விற்கிறார்களே... அதற்கு நான் எவ்வளவோ பரவாயில்லை.

அப்புறம்... நேற்றைக்குச் சாப்பிட்டது இன்றைக்கு மறந்து போகிறது. இன்றைக்குச் சாப்பிட்டது நாளைக்கு மறந்து போகிறது. அப்புறம் என்னங்க. பக்கத்தில் இருக்கிற பெண்டாட்டி பிள்ளைகளையே மறந்துவிடும் அலங்கோலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

ஆக அடிக்கடி நினைவு படுத்தினால் தான், இப்போதைய வாட்ஸ் அப் காலத்தில் புருசனுக்குப் பெண்டாட்டி நினைவு வரும். பெண்டாட்டிக்குப் பிள்ளைகள் நினைவு வரும். பிள்ளைகளுக்கு டிக் டாக் ஞாபகம் வரும். என்ன செய்வது. சீனாக்காரன் போட்ட ஊகான் கோலங்கள். சரி. விடுங்கள். நம்ப ஜப்பான்காரன் கதைக்கு வருவோம்.

ஜப்பான்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த போர்களை மலாயா போர்கள் (Battles of Malaya) என்று அழைக்கிறார்கள். 1941 டிசம்பர் 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நடந்த போர்கள்.

இட்லர் இடி அமின் வேகத்தில் இறங்கி வந்த ஜப்பானியர்களைத் தடுத்து நிறுத்த மலாயா பிரிட்டிஷ் இராணுவம் எவ்வளவோ போராடிப் பார்த்தது. முடியவில்லை.

மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தில் பிரிட்டன் இராணுவத்தினர்; இந்திய இராணுவத்தினர்; மலாயா யூனியன் இராணுவத்தினர்; ஆஸ்திரேலியா இராணுவத்தினர்; நியூசிலாந்து இராணுவத்தினர் என்று பல ஆயிரம் பேர் இருந்தனர்.

இருந்தாலும் ஜப்பானியர்களின் மின்னல் வேகப் படையெடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஜிவு ஜிவு என புற்றீசல் மாதிரி இறங்கி வந்து கொண்டு இருந்தார்கள். சங்லூன் ஜித்ராவில் முதல் ’செக்’ வைக்கப்பட்டது. இங்குதான் முதல் போர் நடந்தது.

சங்லூன் ஜித்ரா பகுதியில் மலாயா பிரிட்டிஷ் கூட்டு இராணுவத்தின் பாதுகாப்பு முழுமையாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஜப்பானியர்கள் இறங்கி வரும் பாதைகளில் முள்வேலிகள் அமைக்கப்பட்டன. சரி.

சில இடங்களில் கண்ணி வெடிகள் வைக்கப் பட்டன. சரி. அவற்றை எல்லாம் தூசு தட்டி தோளில் போட்டுக் கொண்டு ஜப்பானியர்கள் இறங்கி வந்து கொண்டே இருந்தார்கள்.

அப்போது பெர்லிஸ் கெடா பகுதிகளில் பயங்கரமான மழை. ஆழம் இல்லாத அகழிக் குழிகளில் வெள்ளம். தொடர்பு சாதனங்கள் நீரில் மூழ்கிப் போயின. வெளித் தொடர்புகள் அறுந்து போயின. அவையே ஜப்பானியர்களுக்கு சாதகமாகிப் போயின.

இந்த ஜித்ரா போரில் தான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்திய இராணுவம் களம் இறக்கப்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்த இந்திய இராணுவப் படையினர் ஜித்ராவிற்குக் கொண்டு வரப் பட்டார்கள்.


மேஜர் ஜெனரல் டேவிட் முரே லியோன் (Major General David Murray-Lyon) என்பவர் 11-ஆவது இரண்டு இந்தியப் படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தியப் படைகள் தான் முன் வரிசையில் நின்றன.

வலது புறத்தில் 15-ஆவது இந்தியக் காலாட்படை; பிரிட்டிஷ் லீசெஸ்டர்சைர் ரெஜிமென்ட் (Leicestershire Regiment); பஞ்சாப் ரெஜிமென்ட்; ஜாட் ரெஜிமென்ட் (Jat Regiment).

இடது புறத்தில் 6-ஆவது இந்திய காலாட்படை படை. மூன்று கூர்க்கா பட்டாளங்கள். 28-ஆவது இந்திய காலாட்படை தற்காப்புக்காக நின்றது.

இந்தியப் பிரிட்டிஷ் படையினர் முன் வரிசையில் 14 மைல் (23 கி.மீ) வரை அகன்று நீண்டு நின்றனர்.

அவர்கள் இருந்த இடத்தில் இரு சாலைகள். ஓர் இரயில் பாதை.  இருபுறமும் காடுகள் சூழ்ந்த மலைகள். வெள்ளம் பாய்ந்த நெல் வயல்கள். ரப்பர்  தோட்டங்கள். இவர்களைத் தாண்டித்தான் ஜப்பான்காரர்கள் அலோர் ஸ்டார் நகரத்திற்குள் வர முடியும்.


1941 டிசம்பர் 8-ஆம் தேதி தாய்லாந்தின் சிங்கோரா; பட்டாணி நகரங்களில் ஜப்பானியர்கள் தரை இறங்கி விட்டார்கள். அடுத்து அவர்களின் இலக்கு வடமேற்கு மலாயா.

ஜப்பானியர்கள் அலோர் ஸ்டாருக்கு நேராக வராமல் சங்லூன் (Changlun) நகரில் இருந்து அசூன் (Asun); ஜித்ரா (Jitra) நகரங்கள் வழியாக வந்தனர்.

சங்லூன் நகரம், கெடா மாநிலத்தின் குபாங் பாசு மாவட்டத்தில், தாய்லாந்து நாட்டிற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்லாந்து மொழியில் இருந்து சங்லூன் எனும் பெயர் உருவாகி இருக்கலாம்.


சங் (Chang) என்றால் யானை. லூன் (Lun) என்றால் விழுந்தது அல்லது வீழ்ச்சி. முன்பு காலத்தில் இந்தப் பகுதியில் யானைகள் மிகுதியாக வாழ்ந்தன. அவை இந்த இடத்திற்கு வந்ததும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்களில் தடுமாறி விழுவது வழக்கம்.

அதனால் அந்த இடத்திற்கு யானைகள் விழுந்து செல்லும் இடம் என்று பெயர் வந்து இருக்கலாம்.

சங்லூன் பகுதியில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் படை வீரர்கள் குறைவாக இருந்ததால் தோற்கடிக்கப் பட்டார்கள். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்து இந்திய வீரர்களை ஜப்பானியர்கள் தாக்கி இருக்கிறார்கள். எதிர்பாராத தாக்குதல். அதனால் பல உயிரிழப்புகள்.

ஜப்பானியர்கள் கவச வாகனங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த கூர்கா; பஞ்சாப் படை வீரர்களிடம் கவச வாகனங்கள் எதுவும் இல்லை. காட்டுக்குள் ஓடி மறையவும் முடியவில்லை. அந்த வகையில் ஜப்பானியர்களை வலுவாக எதிர்க்க முடியாமல் போய் விட்டது.

சங்லூன் - ஜித்ரா போர் 15 மணி நேரம் நடந்த ஒரு கசப்பான போர். ஜப்பானியர்களின் 5-ஆவது பிரிவு முதலில் சங் லூன் நகரைக் கைப்பற்றியது. பின்னர் ஜித்ரா நகரைக் கைப்பற்றியது.


இந்தப் போரில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 386 வீரர்கள் பலியானார்கள். பெரும்பாலும் கூர்கா; பஞ்சாப் படை வீரர்கள். ஜப்பானிய இழப்புகளின் விவரங்கள் தெரியவில்லை.

இதே நேரத்தில், ஜப்பானியக் கடற்படையின் விமானங்கள் பினாங்கு மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தின. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17-ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு ஜப்பானியர்களால் அனுதினமும் குண்டுகள் வீசப்பட்டன. 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப் பட்டார்கள்.

இதில் இருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் பல இடங்களில் இருந்து ஜப்பானியர்கள் ‘சாகடி’ தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். ஆக நல்லவே ’பிளேன்’ போட்டுச் செய்து இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியக் கூட்டுப் படையினர் ஜப்பானியர்களின் வியூகமான இராணுவத் தந்திரங்களைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. போர் வரும். சமாளித்து விடலாம் என்றுதான் கணக்குப் போட்டு இருந்தார்கள். வெள்ளைக்காரன் போட்ட கணக்கு வேறு. ஜப்பான்காரன் போட்ட கணக்கு வேறு.

’எங்களைக் கேட்டுத்தான் சூரியன் வரும் போகும்’ என்று வீரவசனம் பேசியவர்கள் வெள்ளைக்காரர்கள். ஆனால் சங்லூன் ஜித்ரா போரில் சூரியன் மறைந்து போய் மழை பெய்ததால் அவர்களின் வீர வசனமும் நனைந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஜப்பானியர்கள் மலாயாவின் இரு புறங்களில் ஒரே சமயத்தில் தரை இறங்கினார்கள் என்று  சொல்லி இருக்கிறேன்.

முதலாவது: கிளாந்தான் கோத்தா பாரு கடற்கரை.

இரண்டாவது தாய்லாந்து - மலாயா சங்லூன் எல்லைப் பகுதி. 1941 டிசம்பர் 8-ஆம் தேதி நடந்தவை.

அடுத்த கட்டுரையில் கம்பார் போர் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன. இந்தப் போரில் நூற்றுக் கணக்கான இந்தியப் படை வீரர்களும்; மலாயாக் கூட்டுப் படை வீரர்களும் இறந்து போனார்கள். அவர்களுக்காகக் கம்பார் நகரில் ஒரு நினைவாலயம் கட்டி இருக்கிறார்கள். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(10.08.2022)


மேற்கோள்கள்:

1. Falk, Stanley L. (1975). Seventy days to Singapore: The Malayan Campaign, 1941–1942. London: Hale. ISBN 978-0-7091-4928-6.

2. Shores, Christopher F; Cull, Brian; Izawa, Yasuho. Bloody Shambles, The First Comprehensive Account of the Air Operations over South-East Asia December 1941 – April 1942 Volume One: Drift to War to the Fall of Singapore. London: Grub Street Press. (1992)

3. Wigmore, Lionel (1957). "Chapter 8: Invasion of Malaya". Part II: South–East Asia Conquered. The Japanese Thrust. Australia in the War of 1939–1945.

4. Gurcharn Singh Sandhu, The Indian cavalry: history of the Indian Armoured Corps, Volume 2, Vision Books, 1978 ISBN 978-81-7094-004-3


 

01 ஜூலை 2022

சீதாபதி நடேசன் மலேசியக் கல்வியாளர்

நாடறிந்த கல்வியாளர். நடமாடும் கல்விக் களஞ்சியம். சமூகச் சேவையாளர். நேதாஜியின் இந்திய இராணுவத்தில் விடுதலைப் போராட்டவாதி. தோக்கோ குரு விருது பெற்ற கல்வியாளர். இவரின் சேவை மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரியது.


12.12.1926-ஆம் நாள் புக்கிட் ரோத்தானில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பின் தம்முடைய 17-ஆவது வயதில் சுபாஷ் சந்திர போஸ் நேதாஜி தொடங்கிய தேசிய இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.

தாய்லாந்து வழியாக மியன்மார் சென்றார். போர் முனையில் இரு ஆண்டுகள். பின்னர் 1946-ஆம் ஆண்டு, மணிப்பூர் வழியாக இந்தியா சென்றார்.

1948-ஆம் ஆண்டு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். ஆசிரியர்த் துறையில் பயிற்சி பெற்றார். அவர் படித்த புக்கிட் ரோத்தான் பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.

1951-ஆம் ஆண்டு சகுந்தலா அம்மையாரை மணம் புரிந்து கொண்டார். பதவி உயர்வு கிடைத்தது.

சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி; பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி; காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி; ஆகிய பள்ளிகளில் பணியாற்றிய பின்னர் 1981-ஆம் ஆண்டு பதவி ஓய்வு பெற்றார்.

சிலாங்கூர் சுல்தானிடம் இருந்து பி.ஜே.கே. விருது; பேரரசரிடம் இருந்து பி.பி.என். விருது.

பணி ஓய்வுக்குப் பிறகும் கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பாலர் பள்ளிகளில் கண்காணிப்பாளராகவும் சேவை செய்தார்.

ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். எஸ்.ஆர்.டி. 5 எனும் எங்களுடைய ஆசிரியர்ப் பயிற்சியில் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் இலக்கணக் கடல் என்று நாங்கள் பெருமைப் படுகிறோம். அன்னாரின் ஆத்மா உயர் பெற்று நிலை பெற இறைஞ்சுகின்றோம்.

இவர் பனிக்கும் பூக்களில் மணக்கும் வாழ்வியல் களஞ்சியம்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.07.2021




 

29 ஜூன் 2022

நீல உத்தமன்

ஸ்ரீ மகாராஜா உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா


நீல உத்தமன் அல்லது சாங் நீல உத்தமன் (Sang Nila Utama) என்பவர் ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசர். இவர் 1299-இல் சிங்கப்பூர் சிற்றரசைத் தோற்றுவித்தார். இவரை ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா என்றும் உயர் அரச மொழியில் அழைத்தார்கள்.

திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா உயர் விருதின் பொருள் ஆகும்.

இவர் சீனா நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார். இவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் 1372-இல் காலமானார். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் *பராக்கிரம வீரா* சிங்கப்பூர் அரசப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர்.

-ஸ்ரீ பராக்கிரம வீரா ராஜா (1372–1386)

-ஸ்ரீ ராணா வீரா கர்மா (1386–1399)

-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399–1401)

1399-ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய *பரமேசுவரா* அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய ஆட்சி நீடிக்கவில்லை.

1401-இல் மஜாபாகித் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்.

அந்த முதல் அமைச்சர் பரமேஸ்வராவுக்கு எதிராகவும் மஜாபாகித் அரசுக்கு உடந்தையாகவும் போனார். சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் பரமேஸ்வரா அங்கு இருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க மலாயாவின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார்.

பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா 1402-இல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.

(ஆக்கம்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.06.2022

சான்றுகள்:

1. Commonwealth Yearbook 2006|page=348|author=Commonwealth Secretariat|isbn=978-0-9549629-4-4|year= 2004

2. Pusat Rujukan Persuratan Melayu: Dewan Bahasa dan Pustaka

3. Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008

4. The History of Singapore -books.google.com/books?id=AHF59oExO80C - publisher  = ABC-CLIO;  isbn = 978-0-313-37743-3