01 செப்டம்பர் 2010

பில் கேட்ஸ் பிசினஸ் இரகசியங்கள்

(இந்தக் கட்டுரை மலேசிய நண்பன் நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது)

உலகின் மிக மிகப் பெரிய பணக்காரர் யார்? சின்ன குழந்தை கூட ‘பில் கேட்ஸ்’ என்று சொல்லி விடும். அந்த அளவிற்கு புகழ் பெற்றவர். தேங்கி நிற்கும் திசை எல்லாம் பில்கேட்ஸ். இறவாப் புகழின் அடையாளங்கள். வான விதானத்தில் ஊழியூழிக் காலத்திற்கும் வர்ணஜாலம் காட்டும் மந்திரச் சொல்.

கடந்த 13 ஆண்டுகளாக உலகப் பணக்காரப் பட்டியலில் முதல் இடம். பாரிஜாத நினைவுகளான அற்புத வாழ்க்கை. சென்ற வருடம் Slim Helu எனும் மெக்சிகோ நாட்டுக்காரர் அந்தப் பதவியைப் பறித்துக் கொண்டார். சென்ற வருடம் என்றால் 2009ஆம் ஆண்டின் கணக்கு. அதுவும் ஒரு சில கோடிகள் வித்தியாசத்தில் பதவி பறிபோனது.

சில கோடிகள் என்று சொன்னால், அவர்களுடைய Billionaires மொழியில் 900 கோடி டாலர்கள். இருவருக்கும் அவ்வளவுதான் வித்தியாசம். அது ஒன்றும் பெரிய காசு இல்லை. ஒரு கோடி, இரண்டு கோடி என்பதெல்லாம் அவர்கள் விஷயத்தில் ஒன்றுமே இல்லை. அரைக் கிலோ மாவு வாங்கி அரைத்து மசாலா தோசை சுட்டுச் சாப்பிட்ட கதைதான்.

கோடிக் கோடியாக பணம்


பில்கேட்ஸ் கீழே கிடக்கும் பத்து காசைக் குனிந்து எடுப்பதற்குள், அவருடைய வங்கிக் கணக்கில் 3250 ரிங்கிட் சேர்ந்து விடுகிறது. அவர் கணக்கில் எப்போதும் 20,000 கோடி ரிங்கிட் இருந்து கொண்டே இருக்கும். அவ்வளவு பணம். ம்ம்ம்… என்ன செய்வது. கொடுத்து வைத்த மகாராசன்.
Man of the Year from Time magazine

இருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி. தெரியவில்லை! பில்கேட்ஸ், சிலிம் ஹேலு அல்லது லட்சுமி மிட்டல் போன்றவர்களிடம் உள்ள பணத்தில் ஒரே ஒருவரிடம் உள்ள பணத்தை மட்டும் நம்முடைய மலேசியாவிற்குக் கொண்டு வருகிறோம்.

அட… சும்மா ஒரு பேச்சுக்குத்தான். அவர்கள் என்ன ‘இந்தா எடுத்துக்கோ’ என்று கொட்டியா கொடுத்துவிடப் போகிறார்கள்.

கிடைக்காத ஒன்றை கற்பனை செய்து பார்ப்பதில் என்னய்யா தப்பு. அந்தப் பணத்தை அப்படியே நம்முடைய ஒரு ஒரு ரிங்கிட்டாக மாற்றி வரிசையாக அடுக்கி வைக்கிறோம்.

கோலாலம்பூரிலிருந்து லண்டன் வரை அடுக்கி வைத்துவிடலாம். அப்புறம் இன்னொருவருடைய பணத்தை அடுக்கினால், உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்து விடலாம்.

அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல்


அந்த அளவிற்குப் பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். கணக்கு போடுங்கள் அவர்களில் ஒருவர், அவருடைய பணத்தை அவரே எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். யாரையும் துணைக்குச் சேர்க்காமல், அன்ன ஆகாரம் எதுவும் இல்லாமல் ஆசை ஆசையாக எண்ணுகிறார்.

எவ்வளவு காலம் பிடிக்கும். ஈரப்பசைக்கு இறைவன் கொடுத்த நாக்கு இருக்கவே இருக்கிறது. சும்மா ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

அதெல்லாம் சரி. அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு இந்த மனிதர்கள் என்னதான் செய்கிறார்கள். என்னதான் செய்யப் போகிறார்கள் என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

அவர்களுடைய பணத்தை நிர்வாகம் செய்ய அவரவர்களுக்கு தனிப்பட்ட நிதி அமைச்சர், இரண்டு மூன்று துணையமைச்சர்கள், நூற்றுக் கணக்கான பொருளாதார நிபுணர்கள் என்று ஒரு பெரிய கணித மேதைகள் பட்டாளமே இருக்கிறது. இந்தப் பண முதலாளிகள் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல தான தர்மமும் செய்தும் வருகிறார்கள். அதைப்பற்றி பிறகு பார்ப்போம்.

மலேசிய அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் Budget எனும் வரவுசெலவு கணக்குப் போடுகிறது. தெரிந்த விஷயம். இந்த ஒரு நாட்டின் வரவுசெலவு பணத்தை இரண்டு உலகப் பணக்காரர்கள் கைவசம் வைத்திருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும்;

அவர்கள் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பில்கேட்ஸ், சிலிம் ஹேலு, லட்சுமி மிட்டல், Warren Buffet ஆகிய இந்த நால்வர்தான் அந்த ஜாம்பவான்கள்.

இவர்கள் மனசு வைத்தால்

இந்த நால்வரும் மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நான்கு நாடுகளின் ஓராண்டு வரவுசெலவு பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மனசு வைத்தால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப் போட்டு விடலாம்.
Bill Gates as a boy

தந்திரங்கள் நசுக்கல்கள் சரி, விஷயத்திற்கு வருவோம். உலகின் ‘நம்பர் ஒன்’ பணக்காரர் ஆவதற்கு பில் கேட்ஸ் என்னென்ன தந்திரங்களைக் கையாண்டார், என்னென்ன நசுக்கல் வேலைகளைச் செய்தார், என்னென்ன கீழறுப்பு வேலைகளைச் செய்தார் என்பதைப் பற்றி ஒரு பெரிய பில்கேட்ஸ் இராமாயணத்தையே எழுதி வைத்திருக்கிறார்கள்.

பல மொழிகளில் பல புத்தகங்களும் வெளிவந்துள்ளன. அவற்றுள் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது மட்டும் அரிச்சந்திர ரகசியம். உலகின் பல நாடுகள் அவர் மீது வழக்குகள் போட்டன. கொரியா, தைவான், ஜப்பான், பிரான்ஸ், நார்வே போன்ற நாடுகள் அந்த வழக்குகளில் வெற்றியும் பெற்றன. கோடிக் கோடியாக நஷ்டயீடும் கொடுக்கப்பட்டது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து

ஆகக் கடைசியாக, Auto Desk எனும் மென்பொருள் உரிமையாளர்களின் வழக்கு. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுஷனையே கடித்துவிட்டதாக செய்தி. எல்லாம் அதே அமெரிக்காவில் தான்!

பில்கேட்ஸ் பிறந்த அதே தாய்மண்ணில்தான் அவருக்கு அத்தனை ஆலாபனைகள். கணினினியை இயங்க வைக்கும் செயல்பாட்டை operating system எனும் செயலம் என்கிறோம்.

ஆக, அவருடைய Windows Operating System எனும் செயலத்தையே ஒன்று இல்லை பார்த்துவிட, ஒரு சில கணினி மண்டைகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன.

அவர் பிறந்த அமெரிக்காவிலேயே பலமான எதிர்ப்புகள். பில் கேட்ஸ”ம் சமாளித்து வருகிறார். இப்போது தொட்டதற்கு எல்லாம் virus வந்துவிட்டது. இந்த வைரஸ்களை உருவாக்கித் தயாரித்து உலா விடுபவர்கள் பெரும்பாலும் பில் கேட்ஸை எதிர்ப்பவர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எதிர்ப்பவர்கள். விண்டோஸ் செயலத்தை எதிர்ப்பவர்கள்.

வைரஸ் என்பது ஒரு சின்ன மென்பொருள். இணையத்தின் வழியாக உங்கள் கணினிக்குள் நுழைகிறது. குட்டி போடுகிறது. பேரன் பேத்திகள் எடுத்து பல தலைமுறைகளை உருவாக்கிக் கொள்கிறது. கடைசியில் கணினியைச் செயலிழக்கச் செய்து சமாதி கட்டுகிறது. அவ்வளவுதான்! அதற்கு மேல் உங்கள் கணினியை Format எனும் சுத்திகரிப்புச் செய்தால்தான் மறுபடியும் இயங்கச் செய்ய முடியும்.

வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன

இந்த வைரஸ்கள் பெரும்பாலும் விண்டோஸ் செயலத்தை மட்டுமே தாக்குகின்றன. Linux செயலத்தைத் தாக்குவதில்லை. இந்த விஷயம் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் லினாக்ஸ் ஓர் இலவசமான செயலம்.

செல்லப் பிள்ளை. உலகமெங்கும் பரவியுள்ள கணினி நிபுணர்கள் இதற்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள். நிறைய மென்பொருட்களை எழுதிக் கொடுக்கிறார்கள்.

சின்னப் பிரச்னை என்றாலும் உடனடியாகத் தீர்த்து வைக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்தக் கட்டுரையாளரும் ஒரு லினாக்ஸ் ஆர்வலர்தான். Linux Ubuntu செயலத்தைப் பயன்படுத்துகிறேன்.

ஆக, உலகமே கணினி மயமாக மாறிவிட்டது. மாறி வரும் இந்தக் கணினி உலகில் அதிகம் விரும்பப்படுகிற அதே சமயத்தில் அதிகம் வெறுக்கப்படுகிற மனிதர் யார் என்று கேட்டால், அவர்தான் இந்த பில்கேட்ஸ்.



உலகில் எண்பது விழுக்காட்டுக் கணினிகள் இவருடைய விண்டோஸ் செயல்பாட்டினால்தான் இயங்குகின்றன. எஞ்சியவை லினாக்ஸ், Macintosh முறையில் இயங்குகின்றன. காலத்தைக் கலைத்த கணிணினிக் கலை தெய்வத்திற்கு இணையான ஒரு நிலைக்கு கணினி வந்துவிட்டது. இப்படி சொல்வதற்காக மன்னிக்கவும்.

இருந்தாலும், உண்மை அதுதானே. எல்லாமே கடந்த 25 ஆண்டுகளில் நடந்து முடிந்தவை. கணினியைத் தெய்வமாக நினைத்துப் கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு வளர்ந்து அஃது எங்கேயோ போய்விட்டது.

கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தில் போய் உட்கார்ந்தும் விட்டது. காலத்தைக் கலைத்து நிற்கிறது கணிணினிக் கலை. ‘அதுவன்றி அணுவும் அசையாது’ என்பார்கள்.
Bill Gates Daughter

அதுபோல தெய்வத்திற்கு இணையாகப் பேசும் அளவிற்கு கணினியின் முக்கியத்துவம் வளர்ந்துவிட்டது. கணினி இல்லை என்றால் உலகமே நின்று போகும் அளவிற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலைக்கு கணினியைக் கொண்டு வந்ததில் பில்கேட்ஸூக்கு முக்கிய பங்கு உண்டு. அதை நாம் மறுக்கவில்லை.

பேராசை கலந்த வெறியுணர்வு

இருந்தாலும் பாருங்கள், உலகிலுள்ள அத்தனை பேரும் தன்னுடைய விண்டோஸ் செயல்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்; அத்தனை பேரும் Microsoft நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் எனும் பேராசை கலந்த வெறியுணர்வுதான் அவர் மீது பலத்த பாதகத்தை ஏற்படுத்தி வருகின்றது.

வேறொன்றுமில்லை. இப்பேர்ப்பட்ட வளர்ச்சியை அவர் ஒரு கால் நூற்றாண்டுக்குள் சாதித்தார் என்பதுதான் இன்னொரு பெரிய விஷயம். உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்திய பில்கேட்ஸ், ‘நம்பர் ஒன்’ பணக்காரரானது நியாயமான விஷயம்.


மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். 1970களில் கணினித் தொழில்நுட்பம் பிரபலமாகி வந்தக் காலக்கட்டம். பில்கேட்ஸ் தன்னுடைய பள்ளியிலேயே இலவசமாக கணினியைப் பயன்படுத்த முடிந்தது. அந்தச் சமயத்தில் கணினி பற்றி முழுமையாக விஷயம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.

பெரிய மேதைகள் என்று பீற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இருக்கிற புத்தகங்களை வைத்துக் கொண்டு உலப்பியவர்கள். ஒரே சேற்றில் ஊறிய மட்டைகள்.

அந்தச் சமயத்தில் பில் கேட்ஸ், நண்பர்கள் சிலரைத் துணைக்கு வைத்துக் கொண்டு சின்னச் சின்ன Programs எனும் மென் பொருள்களை எழுதி வந்தார். அவர் பிறந்தது 1955ல். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பம்.

பதினாறு வயதில்

பதின்மூன்று வயதிலேயே கணினி ஆர்வம் வந்துவிட்டது. பள்ளிக்கூட கணினிகளின் முன் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்கு. பதினாறு வயதில் தன் நண்பருடன் சேர்ந்து Traf-O-Data என்ற ஒரு சின்னக் கம்பெனியைத் தொடங்கினார்.


அவர்கள் பகுதியிலிருந்த நிறுவனங்களுக்கு மென் பொருள்களை எழுதித் தந்து சின்னது சின்னதாகச் சம்பாதித்தார்கள். இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.

ஒருமுறை உள்ளூர் கம்பெனி ஒன்று சம்பள பட்டுவாடாவுக்கு ஒரு மென்பொருள் எழுதிக் கொடுக்கச் சொன்னது. அதில் ஒரு பிரச்னை. கிடைக்கும் பணத்தைப் பிரித்தால் குழுவில் இருக்கும் அனைவருக்கும் போதுமானதாக இல்லை. யாராவது ஒருவர் குழுவிலிருந்து வெளியேற வேண்டும்.

சரி! யாரை வெளியே தள்ளுவது. கடைசியில் பில்கேட்ஸை ஓரங்கட்ட முடிவு செய்தார்கள். என்னையும் என் முடிவையும் மாற்ற முடியாது உலக நாயகன் பில்கேட்ஸ் கோபப்படவில்லை.

சர்வ சாதாரணமாகச் சொன்னாராம். ‘நான் இப்போது வெளியே போகிறேன். என் தேவை ஏற்படும் போது என்னை மறுபடியும் அழைப்பீர்கள். சும்மா வரமாட்டேன். இந்தக் குழுவுக்குத் தலைவனாகத்தான் வருவேன். அதிலும் கொஞ்சம் பிரச்னை.

Bill Gates family

நான் ஒரு முறை தலைவனானால் அதன் பின்னர் நானேதான் தலைவனாக இருப்பேன். என்னையும் மாற்ற முடியாது. என் முடிவையும் மாற்ற முடியாது’. பில்கேட்ஸின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட நண்பர்கள் அவரை வெளியே அனுப்பாமலேயே சமாளித்துக் கொண்டார்கள்.

உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக

பில்கேட்ஸின் தன்னம்பிக்கையான வார்த்தைகள் இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி வைத்திருக்கிறது. இப்படித் தொடங்கிய பில்கேட்ஸின் வாழ்க்கை கணினி கணினி என்றே கழிந்தது. மனம் வேறு எங்கும் அலை பாயவில்லை.

கணினி, அதன் மென் பொருள், அதில் கிடைக்கும் பணம். இவற்றில் மட்டுமே மனம் ஈர்ந்து நின்றது. நாமும் அவரைப் போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தை முடித்தே தீர வேண்டும் எனும் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.

திடீரென அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் படித்த அதே பள்ளிக் கூடத்திற்கு ஒரு சம்பளப் பட்டியல் தயாரித்துக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் அவரைக் கேட்டுக் கொண்டது. அவர்கள் அப்படி ஒன்றும் பெரிய கெட்டிக்காரர்கள் இல்லை. இருந்தாலும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. உல்லாசமாகத் தொடங்கிய வேலை உற்சாகமாக முடிந்தது. அதன்பின்னர் பல புதிய வேலைகள் அவர்களைத் தேடி வந்தன. அதிஷ்ட தேவதை அவர்களைப் பார்த்து சிரித்தாள்.


பணப் பசியும் தீர்ந்தது. அறிவுப் பசியும் தீர்ந்தது. பின்னர் சிறிய அளவில் கணினிகளைச் செய்தார்கள். அவற்றிற்கு தேவையான மென்பொருள்களையும் அவர்களே எழுதினார்கள். விற்றார்கள். நன்றாகப் பணம் சம்பாதித்தார்கள். 1973ல் பில்கேட்ஸுக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.

பணம் சம்பாதிக்க வேண்டும்

படித்து பெரிய பதவிக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கொஞ்சம்கூட இல்லை. நன்றாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. 1975ஆம் ஆண்டு தங்களுக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்று மைக்ரோசாப்ட் எனும் நிறுவனத்தை உருவாக்கினார்கள்.

Micro Computer Software என்பதே Microsoft ஆனது. அப்போது மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். பிலகேட்ஸின் திறமையினால், அவர்களுடைய தயாரிப்புகள் சந்தையில் பற்றிக் கொண்டு விற்றன.

அந்த இளைஞர்கள் அனைவருமே இப்போதைக்கு உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலின் முதல் பத்து இடங்களில் இருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.


பட்டி தொட்டிகள் கணிணினிப் பெட்டிகள் அப்புறம் ஏகப்பட்ட திறமைசாலிகள் புதிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்தனர். 1980 ஆம் ஆண்டுகளில் கணினி உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது.

BM நிறுவனம் Personal Computer எனும் நவீனக் கணினிகளை உருவாக்கியது. பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே கணினியைப் பயன்படுத்தி வந்த காலம் மாறிப் போனது. பட்டி தொட்டி எல்லாம் கணினிகள் போய்ச் சேர்ந்தன.

வியாபாரத் தந்திரங்கள்

International Business Machines எனும் நிறுவனத்தின் சுருக்கமே IBM ஆகும். அந்தக் காலத்தில் உலகத்திலேயே அதிகமான கணினிகளைத் தயாரித்த நிறுவனமாகும். அந்த நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் கைகோத்தது. அப்பொழுதே வியாபாரத் தந்திரங்கள்  தொடங்கிவிட்டன. எழுதிய மென்பாருள்களை முழுமையாக ஒப்படைப்பதில்லை.

100க்கு 80 விழுக்காடு கொடுப்பது. மீதியைப் பிடித்துக் கொண்டு இழுத்தடிப்பது. அசல் மென்பொருளுக்குப் பதிலாக நகலைக் கொடுப்பது. தங்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது. இப்படி பலப்பல சாக்கு போக்குகள். பலருக்கு பில்கேட்ஸ் மீது பொறாமை. வயிற்றெரிச்சல் என்றுகூட சொல்லலாம்.


Xerox நிறுவனத்தின் மென்பொருளையும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருளையும் திருடி ‘காப்பி’ அடித்து, அதன் மூலம் தனது விண்டோஸ் மென்பொருளை விற்பதாகக் குற்றச்சாட்டு. அவருடைய நடவடிக்கைகள் உலகம் பூராவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

பில்கேட்ஸ் தன் பண பலத்தைப் பயன்படுத்தி மற்ற சின்ன போட்டியாளர்களை நசுக்கிவிடுவதாகக் குற்றச்சாட்டு வேறு. அந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு உண்மை இருப்பதாகவே தெரிய வருகிறது. ஏனென்றால், இப்போதைய கணினி உலகில் மைக்ரோசாப்ட் வைத்ததுதான் சட்டம்.

பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை

பலவிதமான வியாபாரத் தந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. ‘விண்டோஸ்’ பயன்பத்துபவர்கள் அதன் பிசினஸ் வலையிலிருந்து தப்பிக்க முடியாத நிலைமையும் வந்துவிட்டது. அவர் உருவாக்கிய Bill Gates Melinda Foundation நிறுவனத்தின் செயல்பாடுகளும் முழுமையான சேவை நோக்கம் கொண்டவை அல்ல என்றும் வாதம் செய்கிறார்கள்.


பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளை 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை 7 பில்லியன் டாலர்களுக்கு அறப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், இவை அனைத்தும் சேவை நோக்கத்தில் செய்யப்படுகிற உதவிகள் இல்லை.

பல பிசினஸ் தில்லுமுல்லுகள் பின்னிப் பிணைந்துள்ளன என்று பில்கேட்ஸின் எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். பில்கேட்ஸின் தயாரிப்புகள் எந்த எந்த நாடுகளில் அதிகம் விற்பனையாகிறது என்பதைப் பொருத்தே அந்த அறக்கட்டளையின் கவனமும் ஈடுபாடும் அமைகிறது என்று வாதிடுகிறார்கள்.

இந்த வகையில் அந்த நாடுகளின் பெரும்புள்ளிகளை பில்கேட்ஸ் தன் வசப்படுத்திக் கொள்கிறார். அப்புறம் தன் பிசினஸ் விரிவாக்கத்திற்கு அவர்களை உச்சி முகர்ந்து கொள்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

குறிப்பாக, ஆப்ரிக்காவைச் சொல்லலாம். அஃது எந்த வகையில் உண்மை என்பது கேள்விக்குறியே! அகலப்பணி செயல் தொழில் பில்கேட்ஸுக்கு வேகமாக கார் ஓட்டுவதென்றால் கொள்ளை ஆசை.

With Queen Elizabeth

படிக்கும் காலத்தில் அளவுக்கு மீறிய வேகத்தில் கார்களை ஓட்டி, பலமுறை பிடிபட்டு சிறைக்குப் போய் கம்பியும் எண்ணியிருக்கிறார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில், அந்தக் கட்டத்தின் எல்லாப் பகுதிகளும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று இருக்குமாம்.

ஒரே ஒர் இடத்தைத் தவிர! அந்த இடம் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவரான பில்கேட்ஸ’ன் கார் நிற்குமிடம். அந்தப் பகுதியை மட்டும் பணியாளர்களால் எப்போதுமே சுத்தம் செய்ய முடிந்ததில்லை.

கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது
பில்கேட்ஸ் எப்போது வருகிறார் எப்போது போகிறார் என்று யாருக்குமே தெரியாதாம். இருபத்து நான்கு மணி நேரமும் அலுவலகத்தில்தான் இருப்பாராம். அவருடைய கார் நிறுத்துமிடம் எப்போதுமே காலியாகவே இருக்காது. ஆகவே, அந்த இடத்தைச் சுத்தப் படுத்தவே முடியாதாம்.

Mrs.Ambiga - The First Woman to become the President of Malaysian Bar Council

வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடுகளுக்குப் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரமெல்லாம் பில்கேட்ஸ், அலுவலகத்தில் அவருடைய கம்பியூட்டர் முன் இருப்பார். அவருடைய அலுவலக அறை எப்ப்டி இருக்கும்? அதை அவரே சொல்கிறார். கேளுங்கள். ‘என்னுடைய அறையில் பேப்பர்கள் நிறைய இருக்காது. என் வேலைகள் எல்லாம் கம்பியூட்டர் மூலம்தான்.

என் மேசையில் மூன்று கம்பியூட்டர்கள் இருக்கும். இடப்பக்கம் உள்ள திரையில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள். நடுத்திரையில் நான் படித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள். வலதுபக்கத் திரையில் இண்டர்நெட் சமாச்சாரங்கள்.

எங்கள் அலுவலகம் மின்னஞ்சல் மூலமாகத்தான் இயங்குகிறது. எனக்கு தினம் நூறு மின்னஞ்சல்கள் வரும். செய்தித் தாள்களைக்கூட இணையத்தில்தான் படிப்பேன். கூட்டங்களுக்குச் செல்லும் போது சின்ன கணினியை எடுத்துச் செல்வேன். அதில்தான் குறிப்புகளை எழுதிக் கொள்வேன்’ என்கிறார் பில்கேட்ஸ்.

நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை

அவருடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 52000 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 28000 பேர் இந்தியாவிலிருந்து போனவர்கள். அவர்களில் 26000 பேர் தமிழர்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

PC Fair at Ipoh, Malaysia

தமிழர்களின் கணினித் திறமையைப் புரிந்து வைத்திருக்கும் பில்கேட்சுக்கு ஒரு சபாஷ்! நமக்கும் சகோதரர் பில்கேட்ஸூக்கும் எந்தவிதமான மனத்தாக்கமும் இல்லை. என்ன அவருடைய Windows XP அல்லது Vista மென்பொருள்களை, சில சமயங்களில் காசு போட்டு வாங்கிப் பயன்படுத்துகிறோம். சில சமயங்களில் காசு போடாமல் திருட்டுத்தனமாக அர்ச்சனை செய்கிறோம்.

பிடிபட்டால் சில நாட்களுக்கு கம்பி எண்ண வேண்டியிருக்கும். அவ்வளவுதான்! பணமே வா படிப்பே போ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பத்துப் பதினந்து தலைமுறைகளுக்கு சம்பாதித்தும் விட்டார். சம்பாதித்ததில் தானம் செய்கிறார்.

தர்மம் செய்வதில் வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாகுபாடு மட்டும் இல்லாமல் இருந்தால் நல்லது. The Road Ahead, Business @ The Speed of Thought என இரண்டு புத்தகங்களை பில்கேட்ஸ் எழுதியிருக்கிறார். இதுவரை தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதவில்லை.

கடந்த காலத்தைப் பற்றி எழுதுவதில் என்ன இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி எழுதத்தான் எனக்கு ஆசை’ என்கிறார். இருந்தாலும் அவரைப்பற்றி மற்றவர்கள் 6000 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார்கள்.

அவரைப்பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நூறு பேர் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். அப்படி பட்டம் வாங்கியவர்களுக்கு அமெரிக்காவில் விருந்து வைத்திருக்கிறார். பணம் பரிசு என்றும் கொடுத்திருக்கிறார். அவரைப்பற்றி யாராவது புத்தகம் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தால் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க! முடிந்தால் நீங்களும் ஒரு புத்தகம் எழுதி அனுப்பிப் பாருங்கள். அவருக்குத் தமிழ்மொழி தெரியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று. ஒரு புத்தகம் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான். ஆயிரம் புத்தகங்கள் எழுதி அனுப்பினாலும் ஆயிரம் டாலர்கள்தான்.

Tamil girl playing with computer in Malaysia

எப்படி உங்கள் வசதி. பில்கேட்ஸ் – மெலிண்டா திருமணம் 1.1.1994ல் நடைபெற்றது. ஹவாய்த் தீவு ஒன்றை மொத்தமாக வாடகைக்கு எடுத்து பல மில்லியன் டாலர் செலவில் ‘சிக்கனமாக’ நடை பெற்ற கல்யாணம். இவர்களுக்கு இப்போது ஜெனிபர், ரோரி, அட்லே என் மூன்று குழந்தைகள்.

கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள்

இருந்தாலும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான லட்சுமி மிட்டல் வீட்டில் நடந்த கல்யாணத்தை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், அவருடைய பிள்ளை கல்யாணத்திற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவு செய்ததாக தகவல்!

உலகில் இதுவரையில் யாரும் இவ்வளவு பணம் செலவு செய்து கல்யாணத்தை நடத்தவில்லையாம். வளருட்டும் லட்சுமி மிட்டல் இரும்பு வியாபாரம்

பில்கேட்ஸ் சம்பாதித்த பணத்தை எய்ட்ஸ் நிவாரணம், மலேரியா ஒழிப்பு, கல்வி போன்ற நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கிறார். ‘கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ எனும் நன்கொடை நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

இதுவரையில் 850 கோடி ரிங்கிட்டை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பண உதவி கேட்கிறார்கள். பலருக்கு கிடைத்திருக்கிறது.

பில் கேட்ஸின் மின்னஞ்சல் முகவரி: bgates@microsoft.com நாமும் கேட்டுப் பார்க்கலாம். கேட்பதில் தப்பில்லை. ஆனால், கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை. நியாயமான கோரிக்கையாக இருந்தால் கிடைக்கலாம். கிடைத்தால் பில் கேட்ஸ’ன் மின்னஞ்சல் முகவரி தந்த என்னை மறந்து விடாதீர்கள்.

Blogger KSMuthukrishnan's
grand children using I Pod for calculation 

சரி! 20,000 கோடி ரிங்கிட்டை ஒவ்வொரு ரிங்கிட்டாக எண்ணினால் எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற விஷயத்திற்கு வருவோம். விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா.

நானும் கணக்குப் போட்டுப் பார்த்தேன். மூளை குழம்பிப் போனது. வீட்டிலுள்ள கணினியைப் போட்டுத் தட்டிப் பார்த்தேன். 6341 வருடங்கள் என்று பதில் வருகிறது. ஒரு விநாடிக்கு ஒரு ரிங்கிட் என்று எண்ணினால் ஒரு மணி நேரத்தில் 3600 ரிங்கிட்டுகள் எண்ண முடியும்.

ஒரு நாளைக்கு 86400 ரிங்கிட்டுகள். ஒரு வருடத்தில் 31536000 ரிங்கிட்டுகள். ஆக இருபதாயிரம் கோடி ரிங்கிட்டை எண்ணுவதற்கு 6341 வருடங்கள் வருகின்றன.

இந்தக் கணக்கு தேவைதானா என்று கேட்பது தெரிகிறது. இருந்தாலும் பாருங்கள். ஒரு காரியத்தில் இறங்கியாகிவிட்டது. பில்கேட்ஸைப் போல நாமும் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் அல்லவா?

29 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 70


31.08.2010 - மலேசியாவின் 53-ஆவது சுதந்திர தினம்

(இந்தக் கேள்வி-பதில் 29.08.2010 மலேசிய நண்பன் நாளிதழ் - ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது)


மாரியாயி <maari79@yahoo.com>
கே: சில பேராங்காடிகளில், புகழ் பெற்ற துணிக் கடைகளில் இரகசிய காமிரக்கள் நமக்குத் தெரியாமல் இருக்குமாம். நாம் உடை மாற்றும் போது நம்மைப் படம் பிடித்து வைத்துக் கொள்ளும் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: எல்லாக் கடைகளிலும் இல்லை. ஆயிரத்தில் இலட்சத்தில் ஒன்று இரண்டு  இருக்கலாம். அதற்காக எல்லாரையும் ஒட்டு மொத்தமாகக் குறை சொல்லக் கூடாது. நம்முடைய இந்தியர்களின் கடைகளில் பெரும்பாலும் நல்ல நாணயமான ஊழியர்கள் பணி புரிகிறார்கள். வக்கிரப் புத்தி படைத்த சில சில்லறைகள் அங்கே இங்கே இருக்கத்தான் செய்கின்றன.

ஆடைகளை மாற்றிப் பார்க்கிறேன் என்று பெண்கள் சிலர் விலை உயர்ந்த உள்ளாடைகளை மாற்றிக் கொள்வது உண்டு. பணம் கட்டாமல் கம்பி நீட்டுவதும் உண்டு. அதைத் தவிர்க்க சில நிறுவனங்கள் இரகசியக் காமிராக்களைப் பொருத்தி வைத்து இருக்கின்றன.

பெண்கள் உடைகள் மாற்றுவதைக் காமிராவில் கவனிக்க வேண்டியது சில பெண் ஊழியர்களின் வேலை. காமிராவில் பதிவானது கணினியிலும் பதிவாகும் அல்லவா.

சரி. கணினியில் பதிவானதை அங்கே வேலை செய்யும் மற்ற ஆண்களும் அவர்களுடைய வசதியைப் போல பார்க்கலாம் இல்லையா.  

நீங்கள் ஆடை மாற்றும் அறைக்குள் நுழைய கதவைத் திறந்ததும் இரகசியக் காமிரா வேலை செய்ய ஆரம்பித்து விடும். நீங்கள் உடை மாற்றுவதை வீடியோ படம் எடுக்கும்.

அதன் பிறகு அந்த வீடியோ படங்கள் இணையத்தில் உலா வரலாம். உலகம் பூராவும் உள்ள கைப்பேசிகளுக்குள் தஞ்சம் போகலாம். அந்தக் கயவன் உங்களையே மிரட்டிப் பிணைப் பணம் கேட்டாலும் கேட்கலாம். சரி.

இரகசியக் காமிரா இருப்பதை கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கிறது. உடை மாற்றும் அறைக்குள் நுழைந்ததும் உங்கள் கைப்பேசியைக் கொண்டு யாரையாவது சும்மா அழைத்துப் பாருங்கள். அழைக்க முடிந்தால் சரி. அந்த அறையில் இரகசியக் காமிரா இல்லை என்று அர்த்தம்.

அழைக்க முடியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள் காமிரா இருக்கிறது என்று. இந்த இரகசியக் காமிராவில் Fiber Optic எனும் ஒலி ஒளி நுண்ணிழைகள் உள்ளன. இவை கைப்பேசியின் ஒலி அலைகளை வெளியே போக விடாமல் தடுத்து விடும்.

நம்முடைய மனைவி, பிள்ளைகள், அக்கா, தங்கை, உற்றார் உறவினர் அனைவரிடமும் இந்த வழியைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண்மையைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்தக் காமிராக்கள் ரிங்கிட் 320 லிருந்து 1200 வரை சந்தையில் கிடைக்கின்றன.

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப: கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன.

வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை.

ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது.

வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா.

அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது.

முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன.

அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும்.

அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும்.

மா. இளவேணன், சிரம்பான் ஜெயா
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?

ப:
நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள்.

http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது
http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar

எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.

பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும்.

இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம்.

பிரச்னை இருந்தால் 012-5838171 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.

திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?

ப:
முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை.

இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன.

இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது.

பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும்.

ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது.

அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும்.

அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன.

இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது.

இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.

இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது.

ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

24 ஆகஸ்ட் 2010

உலகம் அழிவை நோக்கி - கட்டுரை (22.08.2010)


 (இந்தக் கட்டுரை 22.08.2010 மலேசிய நண்பன் நாளிதழ் - ஞாயிறு மலரில் பிரசுரிக்கப் பட்டது)


மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை இருப்பதால் தான் மனிதன் மனிதனாக பேர் போட்டுக் கொண்டு இருக்கிறான். அந்த ஆசைகள் இல்லை என்றால் மனித இனம் எப்போதோ அழிந்து போய் இருக்கும்.

அந்தக் காலத்தில் வாளை ஏந்தியவனுக்கு அரசபதவி கிடைத்தது. பார்த்ததை கேட்டதை அள்ளிக் கொண்டு ஓட முடிந்தது. கிடைக்காத போது வரட்டுத் தனமான வக்கிரப் புத்தியைப் பயன்படுத்த முடிந்தது. இந்தக் காலக் கட்டங்களில் பெண்கள் பகடைக் காய்களாகப் பேரம் பேசப் பட்டார்கள். இருந்தாலும் இவை எல்லாம் படிப்பறிவு நிறைவு பெறாத காலத்தில் நடந்த கோளாறுகள்.


இப்போது இந்தக் கணினி யுகத்தில் இந்த மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்பதற்கு வேறு மாதிரியான அடையாளம் காணப் படுகிறது. மண்ணைத் திருடுவது. மணலைத் திருடுவது. மலைகளை இடிப்பது. காடுகளை அழிப்பது. கண்டதைத் தின்று கக்கல் கழிசல்களை மலை மலையாகக் குவித்து வைப்பது. கடைசியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் மனித இனத்தையே அழித்துக் கொல்வது.

இந்த இடத்தில்தான் இப்போதைய மனிதன் வந்து நிற்கிறான். இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? ஆசைகள்! ஆசைகள்! மண்ணாசை! பெண்ணாசை! பொன்னாசை! எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லாத ஆசைகள்.

நாம் வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போதும் ஒன்றையும் எடுத்துக் கொண்டு போவதும் இல்லை. ஆனால், இன்று இருக்கிறதை அள்ளிக் கொண்டு போவதைப் பற்றியே நினைக்கிறார்கள். பேசுகிறார்கள். தர்க்க வாதம் புரிகிறார்கள்.

பொருளாதாரம் தேடும் வெறித்தனத்தால் காடுகள் அழிக்கப் படுகின்றன. மலைகளும் மடுக்களும் இடித்துத் தள்ளப்படுகின்றன. அதனால் சுவாசிக்கும் காற்று தூய்மை அற்றுப் போய் விட்டது. குடிக்கும் நீர் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லும் விஷமாகிப் போய் விட்டது. மனிதன் தன்னுடைய உடல் நலத்தை அநியாயமாக விலை கொடுத்து வாங்க வேண்டிய ஓர் அவல நிலையும் வந்து விட்டது.


இப்போது பாருங்கள். மனிதனுக்குப் பதிலாக நாடுகளுக்கு இடையில் சண்டைச் சச்சரவுகள். அந்த அரிச்சுவடியில் அழுக்கும் அசுத்தமும் அலை அலையாய் வந்து மோதுகின்றன. மனித மனம் வெதும்பிப் போகும் அளவுக்கு அழுக்காறுகள் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. மாசுத் தன்மைகள் மலை மலையாய்க் குவிகின்றன.

அடுத்து, உலகத்தை நவீன மயமாக்குகிறோம் என்று சொல்லிச் சொல்லியே தாய் மண்ணை அசிங்கப் படுத்தி வருகிறார்கள்.

உலகளாவிய உஷ்ண நிலை உயர்ந்து போனதற்கு காரணங்கள் என்ன? மலேசியாவை எடுத்துக் கொள்ளுங்கள். கார்கள் இல்லாத வீடுகளே இல்லை. வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு இரண்டு கார்கள். சில வீடுகளில் ஆளுக்கு ஒரு கார். வளர்ந்து வரும் மலேசியாவிலேயே இப்படி என்றால் வளர்ந்து விட்ட நாடுகளில் எப்படி. இந்தக் கார்கள் தான் மூலகாரணம். இவை வெளியிடும் Carbon Dioxide எனும் கெட்ட காற்றுதான் பூமியின் நல்ல காற்றை மாசு படுத்துகின்றன.


மலைகள் குன்றுகளை வெட்டி மண்ணை நிரப்பும் போது அங்கே இருந்து Methane எனும் நச்சுக்காற்று வெளியாகிறது. விவசாயம் செய்யப் பயன்படுத்தும் உர வகைகளில் இருந்து Nitrous Oxide எனும் மிக மிக மோசமான நச்சுக்காற்று நல்ல காற்றுடன் கலக்கிறது.

உலகம் முழுமையும் பரந்து கிடக்கும் தொழிற்சாலைகள் கோடிக்கணக்கான டன்கள் புகையை பூமியின் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றன. இந்த வகையான காற்றுகளை Greenhouse Gases (GHGs) என்று அழைக்கிறார்கள்.

பொதுவாகத் தாவரங்கள் கரியமில காற்றைக் கிரகித்து Oxygen எனும் உயிர்க்காற்றை வெளியிடுகின்றன. உயிரினங்கள் அதற்கு மாறாக உயிர்க்காற்றைக் கிரகித்து கரியமில காற்றை வெளியிடுகின்றன. இதுதான் இந்த இரண்டு இனங்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கித் தருகிறது.


இந்த நிலைமையில் விவசாயம் எனும் போர்வையில்  பெரும் அளவில் அமேசான் காடுகள், போர்னியோ காடுகள் அழிக்கப் படுகின்றன அல்லது எரிக்கப் படுகின்றன. அதனால் பூமியின் காற்றுச் சமநிலைத் தன்மையில் முரண்பாடு ஏற்படுகிறது. பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.

குளிர்சாதனப் பெட்டிகளுக்கு Chlorofluorocarbon எனும் வாயுவைப் பயன் படுத்துகின்றார்கள். இந்த வாயு பூமியின் வளி மண்டலத்தில் வெற்றிடத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. அதாவது பூமியின் Ozone Layerல் ஓட்டை போட்டு விடுகின்றன. ஆக பூமியின் தட்ப வெப்ப நிலையில் சீர்குலைவு ஏற்படுகிறது.


இப்போது வரும் நவீன வகையான குளிர்சாதனப் பெட்டிகளில் இதற்குப் பதிலாக Tetrafluoroethane எனும் வாயுவைப் பயன் படுத்துகிறார்கள். இந்த வாயு இயற்கைக்கு சேதம் விளைவிப்பதில்லை. இதே போல தொழில்சாலைகளில் பயன்படுத்தப் படும் குளிர்சாதனங்களும் நிறைய நச்சுக் காற்றுகளை வெளியிடுகின்றன. இவையும் தவறான மனிதப் பயன் பாடுகள். அதனால் ஒவ்வோர் ஆண்டும் 6 பில்லியன் டன் கரியமிலக் காற்று உள் மண்டலத்தில் கலக்கின்றது. இயற்கைத் தன்மையைச் சீர்குலைக்கின்றது.

உஷ்ண நிலை உயர உயரப் போவதால் பூமிக்கு கணக்கு வழக்கு இல்லாத தீமைகள். வட துருவம், தென் துருவம், கிரீன்லாந்து போன்ற துருவப் பிரதேசங்களில் பனிமலைகள் உருகத் தொடங்கி விட்டன. இமய மலை உச்சியில் கசிவு. சைபீரியப் பனிக் காடுகள் உருகி நிற்கின்றன. எந்த நேரமும் உடைத்துக் கொண்டு வெளியே வரலாம்.
ஆக, இந்த நூற்றாண்டின் கடைசியில் கடல் அளவு 18 செண்டிமீட்டரில் இருந்து 59 செண்டிமீட்டருக்கு உயரப் போகிறது என்று கணக்குப் போட்டுச் சொல்லி விட்டார்கள்.

இதில் முழுகப் போகும் முதல் நாடு மாலைத் தீவுகள், அந்தமான், நிக்காபார் தீவுகள். இன்னும் ஓர் ஆச்சரியான செய்தி. இந்தியத் துணைக் கண்டத்தில் முதலில் முழுகப் போகும் நகரங்கள் எவை தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்களே. சென்னையும் பம்பாயும். போதுமா.

உலகம் இந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ரோமாபுரி எரிகிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அந்த மாதிரி அங்கே என்னடா என்றால் அரசியல் தாக்கத்தில் சகோதரச் சண்டை சர்வ லோகச் சண்டையாக மாறி வருகிறது.


லீசா, பவ்லா, ரீத்தா, ஹன்னா, பலோமா, ஜூலியா என்பவை எல்லாம் பெண்களின் பெயர்கள். இந்தப் பெயர்களில்தான் உலகத்தைச் சிதைக்கும் சூறாவளிப் புயல் காற்றுகளுக்கும் பெயர் வைத்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவற்றின் சீற்றம் அதிகரிக்கும். பயங்கரமான சேதங்களை விளைவிக்கும் என்றும் ஆருடம் சொல்கிறார்கள்.

உலகத் தட்ப வெப்ப மாற்றத்தால் அடிக்கடி பேய் மழைகள் வரும். திடீர் வெள்ளங்கள் வரும். உயிர் உடமைகளுக்குச் சேதங்கள் சிதைவுகள் ஏற்படும். ஊழி ஊழி காலமாக வானம் பார்த்த பூமியாக இருப்பது எதியோப்பியா நாடு. அந்த நாட்டில் எதிர்காலத்தில் ஒரு புல்லும் இருக்காது ஒரு பூச்சியும் இருக்காது என்று வேறு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார்கள்.

Fresh Water என்று சொல்லப்படும் சுத்தமான நீர் கிடைப்பது அரிதாகி விடும். தென் அமெரிக்காவில் பெரு எனும் நாடு இருக்கிறது. அங்கே Quelccaya எனும் பனிமலை இருக்கிறது. போகிற போக்கில் இந்த மலை 2100 ஆண்டுக்குள் உருகி அடையாளமே தெரியாமல் போய் விடும் என்கிறார்கள்.

இந்த நிலைமை அப்படியே நீடித்தால் அமுங்கிப் போய் கிடக்கும் பல நோய்கள் மேல் எழுந்து வரலாம். எடுத்துக் காட்டாக மலேரியா நோய். அம்மை நோய்க்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம். புனர் ஜென்மம் எடுக்கும் இந்த நோய்கள் மனித இனத்திற்கே சவால் விடுக்கும் ஓர் இக்கட்டான நிலைமையைக் கொண்டு வரலாம். மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

மத்திய ரேகை நாடுகளில் காணப்படும் உயிரினங்கள் வடக்கு திசை நாடுகளுக்குப் புலம் பெயரலாம். அப்படி போக முடியாதவை மண்ணோடு மண்ணாகிவிடும். அந்த இனங்கள் உயிரினப் பட்டியலில் இருந்து காணாமல் போய்விடும்.

வட துருவம் கரைகிறது என்று சொன்னேன் அல்லவா. அந்தத் தாக்கத்தால் அங்கே வாழும் துருவக் கரடிகள் முற்றாக அழிந்து போகும். இப்போதே துருவக் கரடிகளின் உருவ அமைப்பு மெலிவு பெற்று வருவதாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 4 பாகை செல்சியஸ் வரை உயர்ந்து விட்டது. அதாவது நம்முடைய மலேசியாவின் சராசரி வெப்பநிலை 28 பாகை என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அதன் வெப்பநிலை 24 பாகையாக இருந்தது என்பதை நினைவில் கொள்வோம்.

சரி. இமயமலை பக்கம் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் மனசு ரொம்பவும் சங்கடப் படுகிறது. ஏன் தெரியுமா. இப்போதே இமயமலை உருத் தொடங்கி விட்டதாம். திபெத்திய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றங்கள்தான் அதற்கு காரணம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

உலகளாவிய வெப்பநிலையின் உயர்வால் இந்தியாவின் அசாம் மாநிலம்தான் மிக மிக மோசமாகப் பாதிப்பு அடையும் என்று ஐ.நா சொல்கிறது.

அதைப் பற்றி அங்கே யாரும் அதிகமாக அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. சுற்றுச் சூழல் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை. அதற்கு காரணம் பொதுவான கல்வியறிவு குறைவே. ஆனால் அரசியலைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

அந்தமான், இலட்சத்தீவுகளில் காணப்படும் பவளமணித் திட்டுகளில் 70 விழுக்காடு அப்படியே முற்றாக அழிந்தும் விட்டன. இது ஓர் அதிச்சியான தகவல். Indira Gandhi Institute of Development Research எனும் இந்திராகாந்தி மேம்பாட்டு வளர்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஒரு கணிப்பு பெரும் அதிர்ச்சி தரக் கூடியது.

இந்தியாவின் வெப்ப அளவு இரண்டே இரண்டு செல்சியஸ் கூடினால் போதும். அதன் மொத்த உற்பத்தித் திறன் 40 விழுக்காடு குறையும். அது மட்டுமா. 70 இலட்சம் மக்கள் இடம் பெயறக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும். மும்பை நகரமும் சென்னை நகரமும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அடுத்து வங்காளதேசம். இந்த நாடும் மிக மிக மோசமாகப் பாதிக்கப் படும்.

நம்முடைய தாய்க்குச் சமமானது இந்தப் பூமி. மண்ணும் மலைகளும், செடிகளும் கொடிகளும், ஆறுகளும் அருவிகளும், காடுகளும் கடல்களும் அனைத்தும் இந்தப் பூமியில் வாழும் எல்லா உயினங்களுக்கும் சொந்தம். ஆனால் மனித இனம் மட்டும் தான் அவற்றை எல்லாம் அழித்துக் கொண்டு வருகிறது.

மற்ற இனங்களைப் பாது காக்க வேண்டிய அதீதப் பொறுப்பு மனித இனத்திற்கு உள்ளது. முதலில் மனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்.

மரங்களை நடுவோம். மழையை வர வைப்போம். சுற்றுச் சூழலைச் சுகமாக வைத்து இருப்போம். சுத்தமான சமுதாயத்தை உருவாக்குவோம். புதிய பூமியை விண்ணில் தேட வேண்டாம். நாம் வாழும் இந்தத் தாய் மண்ணைச் சுத்தமாக வைத்து இருந்தாலே போதும். அதுவே பெரிய புண்ணியம். மாசு மறுவு இல்லாத உலகத்தைச் செய்வோம்.  மண்ணின் மைந்தர்களுக்கு மரியாதை கொடுப்போம்.

21 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 69 (22.08.2010)



(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)


மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்
கே: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?

ப:
இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.

இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய  பாவத்தைச் சுமக்கக் கூடாது.

கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன.

இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.


இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.

பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட  செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.

ம்அல்எ‘‘ச்இய்அ  ந் அண்ப்அன் - இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் மலேசிய நண்பன் என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பெயர் வேண்டாம், ஜொகூர் பாரு (குறும் செய்தி)
கே: சார், இது மிகவும் அவசரமான தேவை. என் நண்பன் தன்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல்லை மறந்து விட்டான். மின்னஞ்சலை எப்படியாவது திறக்க வேண்டும். அதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அவனுடைய மின்னஞ்சல் இது தான் subashini_xxxxx@gmail.com. உடனடியாகக் கடவுச் சொல்லைக் கண்டுபிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நான் அவனிடம் கொடுத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.


ப: மின்னஞ்சல் கடவுச் சொல்லை மீட்கச் சொல்லிக் கேட்டவர்களிடம் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்து இருக்கிறது. உங்கள் பெயரை வெளியிட வில்லை. நான் ஒன்று கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த வீட்டுக்காரனுக்கு வயிற்றுவலி என்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அப்படி  என்ன அய்யா அவசரம். தேனும் பாலும் கலந்து தெருவெல்லாம் ஓடுகிறது. சொல்லுங்கள்.

அதில் அவன் இவன் என்று ஏக வசனம் வேறு. ஆனால், மின்னஞ்சல் முகவரி யாரோ ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை. யாரோ ஒரு பெண்ணின் கடவுச் சொல்லைக் கேட்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. உங்க மாதிரி எத்தனை பேரை நான் பார்த்து இருப்பேன். தேவையா? அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

திருமதி. கல்பனா, மலாக்கா
கே: என்னுடைய மின்னஞ்சல்களை என் கணவர் எனக்குத் தெரியாமல் படிக்கிறார் என்று நினைக்கிறேன். என் அலுவலக ஊழியர்கள் அலுவல் சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். மறைமுகமாகப் பட்டும் படாமலும் அடிக்கடி குத்தலாக குதர்க்கமாகப் பேசுவார். அவர் பேச்சில் இருந்து சந்தேகம் வருகிறது. அந்தச் சொற்கள் மனதை வேதனைப் படுத்துகின்றன. அவரைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தால் சாந்தமாகி விடுவார்.


ப: உங்களுடைய நலன் கருதி ஊர் பெயரை மாற்றி இருக்கிறேன். வேலை செய்யும் மனைவியைப் பார்த்து ஆதங்கப் படுவது கணவர்கள் பலரிடம் உள்ள ஒரு ஜனரஞ்சகமான ஒற்றுமை. உங்கள் வீட்டில் மட்டும் இல்லை. உலகம் பூராவும் உலா வரும் ஒரு நவீனமான அரிச்சுவடி. அது ஓர் ஆதங்கமான உணர்வு. அவ்வளவுதான். பெரிது படுத்த வேண்டாம். இந்த இடத்தில் ஆதங்கம் என்பதை வயிற்றெரிச்சல், தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்.பட்டும் படாமலும் குதர்க்கமாகப் பேசுகிறார் என்பதற்காக அவர் உங்கள் மின்னஞ்சலைப் படிக்கின்றார் என்று அர்த்தம் ஆகி விடாது.

மனைவியை அளவுக்கு மீறி நேசிப்பதால் சிலருக்கு அந்த மாதிரியான கோளாறுகள் வரலாம். மனைவியின் மீது உள்ள அதீதமான அன்பின் காரணமாகவும் சிலர் அப்படி நடந்து கொள்வதும் உண்டு. அவர் மீது சந்தேகப் படுவதை முதலில் விடுங்கள்.

இனிமேல் உங்கள் மின்னஞ்சலைப் படிப்பதற்கு முன்னால் அவரையும் அழையுங்கள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லுங்கள். அஞ்சலை அவருக்கு முன்னால் சத்தம் போட்டு படியுங்கள்.

ஒரு சிலவற்றை அவரே படிக்கட்டும். இந்த மாதிரி ஒரு சில தடவை செய்து பாருங்கள். அப்புறம் அவரே அம்மா தாயே ஆளை விடுமா என்று ஓடி விடுவார்.

இந்த இடத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தவர் மின்னஞ்சலைப் படிப்பது இருக்கிறதே அது ஒரு பெரிய அசிங்கத் தனமான செயல். அதுவும் சொந்த மனைவியின் மின்னஞ்சலைத் திருட்டுத் தனமாய்ப் படிப்பது சில்லறைத் தனமான செயல்.

மனைவி சம்மதம் கொடுத்து இருந்தாலும் அவளுக்கு வரும் கடிதங்களைப் படிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகு. அப்போதுதான் கணவன் மீது மனைவிக்கு உயர்வான மரியாதை உண்டாகும். பயம் கலந்த பக்தியும் உண்டாகும்.

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும்?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.


உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன்.

http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன. முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம்.

பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள். எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன. வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை. ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது. வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா. அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது. முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன. அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.

அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும். அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும். 

மா. இளவேணன், சிரம்பான் ஜெயா
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?

ப:
நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள். http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.


பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும்.

இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம். பிரச்னை இருந்தால் 012-5838171 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.

திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?

ப:
முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை. இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன.


இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது. பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும்.

ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது.

அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும்.

அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன. இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.


இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

15 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 68 (15.08.2010)

(மலேசிய நண்பன் 15-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும். )

குடும்ப மாது, ஊர் பெயர் வெளியிடப் படவில்லை.

கே: எனக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்கள் வீட்டில் மூன்று கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். வீட்டின் கீழ் மாடியில் உள்ள கணினியைப் பயன் படுத்துவார்கள். அண்மையில் நாங்கள் குடும்பத்துடன் லங்காவி தீவிற்கு மூன்று நாள்கள் சுற்றுலா போய் இருந்தோம். வீடு திரும்பினோம். ஒரு பெரிய  அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னஞ்சல் படிக்க கணினியைத் திறந்தேன். ஆபாச அகப் பக்கங்கள் அடுத்து அடுத்து வருகின்றன. யார் அப்படி செய்தது என்று தெரியவில்லை. அந்தப் பக்கங்கள் வருவதை எப்படி நிறுத்துவது?  போலீசில் புகார் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.
(இவர் கைப்பேசியில் அழுது கொண்டே தன் வேதனைகளைச் சொல்கிறார்.)

ப:
அழுகை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அழுகையின் பின்னால் ஓர் உறுதியான உண்மை இருக்கிறது. அங்கேதான் இந்தப் பெண்மணி ஓர் அழகான அற்புதமான குடும்பப் பெண்ணாக நிற்கிறார். இது ஓர் உணர்வு சார்ந்த பிரச்னை. ஓர் உறுதியான தீர்வு காணும் தேடல் முயற்சி.

உங்களின் மன ஆதங்கத்தைக் கொட்ட ஒரு நல்ல இடத்தைத் தேடினீர்கள். சரியான இடத்திற்கு வந்தும் இருக்கிறீர்கள்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள். சரியா. பாத்திரம் எப்படிப் பட்டது என்பது இங்கே அர்த்தம் இல்லை. பாத்திரம் ஏந்தி இருப்பவர் இருக்கிறாரே அவர் ஒரு கதாபாத்திரம். அந்தப் பாத்திரம் சுயமாக ஜீவனம் செய்யக் கூடியவரா.  வயதானவரா. உடல் ஊனம் உள்ளவரா.

மனநிலை பாதிக்கப் பட்டவரா. இல்லை மனைவி மக்களைப் பிரிந்தவரா. இப்படிப் பார்க்கச் சொல்லிதான் அந்தப் பழமொழி வந்தது.

பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா. ஓட்டை ஒடிசல் இருக்கிறதா என்று பார்த்து பிச்சை போடச் சொல்லவில்லை. அலுமினியமா, தகரமா, தண்டவாளத்து இரும்பா என்று பார்க்கச் சொல்லவும் இல்லை.

யாரையும் வீட்டில் குடி வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பது ரொம்பவும் தப்பு. ஒன்று தெரியுமா.

அன்னம் இட்ட வீட்டில் கன்னக் கோல் சாத்துவது இருக்கிறதே அது பாவத்திலும் பெரிய பாவம். சரி. அந்தப் படங்களை வர வைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதன்படி செய்யுங்கள்.

வீட்டுக்கு உள்ளேதான் ஓநாய் ஓலம் போடுகிறது. அதைப் பிடிக்க வீட்டுக்கு வெளியே கோலம் போட அவசியம் இல்லை.

போலீசில் புகார் செய்யலாம். தப்பு இல்லை. ஆனால் அதன் பின்னால் வரும் பிரச்னை இருக்கிறதே அது தீர்ந்து விடுமா. அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா. உங்கள் கணவருக்குத் தெரிந்தால் அடுத்த கப்பலைப் பிடித்து வருவார். கூடவே சிவகாசி அரிவாள், வீச்சு கத்திகள் என்று வந்து குவியும். தேவையா. அப்புறம் என்ன? தமிழ் சினிமாவுக்கு ஓர் அருமையான கரு கிடைத்த மாதிரியாகவும்  இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உடனடியாக இணையச் சேவையை நிறுத்தி விடுங்கள். அல்லது  கணினியை எடுத்து உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயன் படுத்த அனுமதிக்க வேண்டாம். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை.

மூன்று பேரில் யாருக்கு வக்கிரப் புத்தி என்று ஆராய்வதை நிறுத்துங்கள். சின்ன வயசுப் பையன்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள். அவ்வளவுதான்.

பருவக் கோளாறுகள் பேசும் சில்லறைத் தனமான ஆசைகள். அவர்கள் பந்த பாசங்களைத் தாண்டிப் போகும் நவீனக் காலத்தில் வாழ்கிறார்கள். அந்தப் பையன்களை உங்கள் மகன்களாக நினைத்து மன்னித்து விடுங்கள்.

உடனடியாக வீட்டை விட்டுப் போகச் சொல்ல வேண்டாம். அவர்களுடைய படிப்பு பாதிக்கும். வீட்டை விற்கப் போவதாகச் சொல்லி மெதுவாக அப்புறப் படுத்தி விடுங்கள்.

எதிர்காலத்தில் மூன்று இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் ஐக்கியமான பாவம் நம்மை வந்து சேரக் கூடாது. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்.


சுப்ரீம் சூரியா, செலாயாங், சிலாங்கூர்
கே: சென்ற வாரம் Facebook என்பதை முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருந்தீர்கள். அது தவறு. பேஸ்புக் என்பது ஒரு நிறுவனம். ஒரு வாணிகச் சின்னம். அதை மாற்ற முடியாது. நோக்கியா என்பது நோக்கியா தான். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் என்றால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான். முகநூல் என்பது நேரடியான மொழியாக்கமே. அர்த்தத்தை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும். வார்த்தையை நேரடியாக மொழி பெயர்க்கக் கூடாது. இது என்னுடைய பணிவான கருத்து. சரியான கருத்தும் கூட.

ப:
மொழி பெயர்ப்பு என்பது வேறு. மொழியாக்கம் என்பது வேறு. இந்த இரண்டுக்கும் இடையில் நடை முறைத் தாக்கம் வருகிறது. ஆக, காலத்திற்கு ஏற்றவாறு நாம் புதியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். Facebook என்பதை முகநூல் என்று அழைப்பது ஒரு நடைமுறைக்கு வந்துவிட்டது.

நேரடியாக முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறோம். முகநூல் என்பது ஒரு செம்மையான தமிழ்ச் சொல்லாக மாறிவிட்டது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Facebook நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்யவில்லை. உங்கள் பணிவான கருத்துக்கு மிக்க நன்றி.

திருமதி வர்ஷா, கோலாலம்பூர்
கே: நான் இண்டல் கோர்2 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்துகிறேன். முன்பு எல்லாம் ஒரு நிமிடத்தில் ஒரு பாடலைப் பதிவு இறக்கம் செய்து விடுவேன். இப்போது 20 நிமிடங்கள் பிடிக்கின்றன. ஆனால், இணையத்தின் வேகம் குறையவில்லை. பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது. என்ன பிரச்னை?

ப:
இணையத்தில் அகப் பக்கங்கள் வேகமாகத் திறக்கப் படுகின்றன. ஆனால் Download எனும் பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது என்று சொல்கிறீர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இணையச் சேவையை வழங்கும் டி.எம்.நெட் பதிவிறக்க வேகத்தைக் குறைத்து இருக்கலாம். இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் இந்தப் பதிவிறக்க வேகம் கூடும் அல்லது குறையும். இது வழக்கமான ஒன்று.

எதற்கும் நீங்கள் 100 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசுங்கள். உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். நிச்சயம் உதவி செய்வார்கள். தற்சமயத்திற்கு பதிவிறக்க நிரலி ஒன்றை வழங்குகிறேன். எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய 012-5838171 எனும் கைப்பேசி

எண்களுக்கு அழையுங்கள். அந்த நிரலி கீழ்காணும் தளத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://rapidshare.com/files/235451291/Internet_Download_Manager_5.17_Build_4_Full.zip

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும். உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.

உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன். http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன.

முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம். பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள்.

எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க.

இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.

இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச்

சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.