20 பிப்ரவரி 2013

கிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள்

இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 17.02.2013 நாளிதழில் எழுதப்பட்டது.

இந்த உலகில் மனுக்குலம் இருக்கும் வரையில் மறக்க முடியாத ஒரு கலா ஓவியம் கிளியோபாட்ரா. அந்த உயிர் ஓவியத்தை அவர் என்று அழைக்கலாமா இல்லை அவள் என்று அழைக்கலாமா. கொஞ்ச நேரம் தடுமாறித்தான்  போகின்றேன். அவள் என்று அழைக்கும் போது உரிமை தடுமாறிப் போகின்றது.


கிளியோபாட்ரா பல கோடி உயிர்களைத் தன் பக்கம் கவர்ந்து இழுத்த ஒரு மகா தேவதை அல்லவா. ஆக, அவர் என்றே அழைப்போம். அந்தப் பெண்மைக்கு பெருமை சேர்ப்போம்.

கிளியோபாட்ரா பெண்மையின் நளினத்திற்கு வல்லினம் வாசித்தவர். ரோமாபுரி நாயகர்களின் ஆளுமைகளைத் துகில் உரித்து மெல்லினம் பார்த்தவர். அவர் இறந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.


அவரைப்பற்றி இன்றும் சலசலப்புகள். புதிய தகவல்கள். புதிய இரகசியங்கள். அண்மைய காலங்களில் புதிய கசிவுகள் வேறு. சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிளியோபாட்ரா ஒவ்வொரு நாளும் கழுதைப் பாலில் குளித்ததாகச் சொல்வார்கள். உண்மைதான். அதற்குச் சான்றுகளும் இருக்கின்றன. அவருடைய உடல் செம்மண்ணில் பூத்த நீலமலர்களைப் போன்றது. சாக்லேட் நிறம் என்று சொல்கிறார்களே. அந்த மாதிரி. உடல் நிறத்தை வெண்மையாக மாற்ற வித்தியாசமான குளியலைத் தேடினார். 





அவர் தேடிப் பிடித்த சித்தவகைக் குளியல்தான் இந்தக் கழுதைப்பால் குளியல். ஆக, கழுதைப்பாலில் குளித்தால் உடல் மினுமினுக்கும், தோல் ஜொலி ஜொலிக்கும் என்று அவர் நம்பினார். அதற்காக நீங்கள் அந்த மாதிரிப் போய்க் குளிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

அப்படியே ஆசைப்பட்டால்… ம்ம்ம்… அதற்கு நான் பொறுப்பு ஆக முடியாது. முதலில் காட்டில் திரியும் கழுதையை விரட்டிப் பிடியுங்கள். அப்புறம் மற்ற கதையைப் பேசுவோம்.


கழுதைப்பாலில் குளிக்க வேண்டும் என்பதற்காக,  கிளியோபாட்ரா தன்னுடைய அரண்மனைக்கு அருகில் ஒரு பெரிய கழுதைப் பண்ணையே வைத்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது மட்டும் இல்லை. அந்தப் பாலில் குங்குமப் பூவும் கலக்கப்பட்டது.

குங்குமப் பூவும் தமிழர்களும் ஒன்றிணைந்து போனது என்பது வரலாறு. ஆனால், குங்குமப் பூவை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழர்கள் அல்ல. பாரசீகத்தைச் சேர்ந்த ஈரானியர்கள்தான். அதை நாம் மறந்துவிடக்கூடாது. அடுத்து வருபவர்கள் எகிப்தியர்கள். இவர்கள்தான் குங்குமப்பூவை அன்றாட வாழ்க்கையில் முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டவர்கள்.


குங்குமப்பூவைக் கழுதைப்பாலில் கலந்து குளித்ததால் கிளியோபாட்ரா வெள்ளை நிறத்திற்கு மாறினாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜூலியஸ் சீசரை மணந்து

கொண்டு,  கிளியோபாட்ரா ரோமாபுரிக்குச் சென்றார். அப்போது அவருடைய உடலின் வெண்மஞ்சள் நிறத்தைப் பார்த்து ரோமாபுரி மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. இதை ஆங்கிலத்தில் Argument from Silence என்று சொல்கிறார்கள்.



இங்கே ஒரு கொசுறுச் செய்தி. கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூவைக் பாலில் கலந்து குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை சிகப்பாகப் பிறக்கும் என்பது தமிழர்களின் ஒரு பரவலான நம்பிக்கை. 

ஆனால், அறிவியல் அந்த மாதிரி இல்லை என்று சொல்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு குங்குமப்பூ உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குழந்தை பிறப்பதில் இலகுவை ஏற்படுத்தும். ஆனால், குழந்தை சிகப்பாகப் பிறக்காது என்று சொல்கிறது.

வானத்தில் இருந்து வன தேவதை கீழே குதித்து வந்தாள். உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைகூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று யாராவது சொன்னால், அதை நம்ப முடியாது. அது எல்லாம் சும்மா கதை.

ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். நீங்கள் கோடிக் கோடியாகக் கொட்டிக் குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...

இல்லை லோரி லோரியாக ஆட்டுப்பால் போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா மாதிரிதான் பிறக்கும். இல்லை அம்மா மாதிரிதான் பிறக்கும். புரிகிறதா.

ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற பனி மனுஷன் மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருக்கின்ற உத்தாண்டா மாதிரியோ பிறக்கப் போவது இல்லை. அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் வனவாசம் போய்விடுவதே மேல். சரி. நம் கதைக்கு வருவோம்.

அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிக மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்து இருக்கலாம்; பலர் பார்த்து இருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையைத் தாண்டி நிற்கிறது. ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். ஒரு புரோட்டோன் காரின் விலை. 

சில சமயங்களில் ஓர் இலட்சத்தையும் தாண்டிப் போய் நிற்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் கிட்டத்தட்ட அவ்வளவுதானே.

ஈரான், ஈராக், காஷ்மீர் பகுதிகளில் குங்குமப்பூ மிகுதியாகக் கிடைக்கிறது. ஆக, உண்மையான, அசலான குங்குமப்பூவைத் தான் நாம் வாங்குகிறோமா என்பது, அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

கிளியோபாட்ரா எனும் பெயரில் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இந்தக் கட்டுரையின் கதாநாயகி இருக்கிறாரே, இவர் எகிப்திய மகாராணிகளில் ஏழாவது கிளியோபாட்ரா (Cleopatra VII).

அந்தக் காலத்தில் உடன்பிறந்த சகோதரர்களையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் எகிப்திய அரச பாரம்பரியத்தில் இருந்தது. அண்ணன், தம்பி அக்காள், தங்கை உறவு முறைகளில் திருமணம் செய்து கொண்டார்கள்.  அரச குடும்பத்தின் இரத்த வழித்தோன்றல் அரச இரத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உடன்பிறப்புத் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. 

அதனால், எகிப்திய அரச குடும்பத்தில் அங்கவீனமானக் குழந்தைகள் பலர் பிறந்தனர் என்பது வேறு கதை. இப்போதைய நம்முடைய சமூகப் பார்வையில் அது வேறு மாதிரியாகத் தெரியலாம். ஆனால், அப்போதைய எகிப்திய அரச முறை என்பது வேறு. வாழ்க்கை முறை என்பது வேறு. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

கி.மு. 51இல் பதினெட்டாவது வயதில் கிளியோபாட்ரா தன்னுடைய பத்து வயது Ptolemy XIII எனும் தம்பியைத் திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணம் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. எகிப்தின் மீது படையெடுத்து வந்த ஜூலியஸ் சீசரின் படைகளினால் பொத்தெலாமி கொல்லப்பட்டார்.
[சான்று: http://www.thejohnsongalleries.com/093.htm]

ஜூலியஸ் சீசரை எதிர்ப்பது என்பது முடியாத காரியம் என்பதை கிளியோபாட்ரா உணர்ந்தார். ஜூலியஸ் சீசர் அப்போது அலெக்சாண்டிரியாவில் போர் வீரர்களுடன் கூடாரம் போட்டு இருந்தார். அந்தச் சமயத்தில் கிளியோபாட்ரா ஒரு தந்திரம் செய்தார். தன் வேலைக்காரியிடம் தன்னுடைய உடலை ஒரு பட்டுக் கமபளத்தில் சுருட்டி வைக்கச் சொன்னார்.

ஜூலியஸ் சீசரின் முன்னால் அந்தக் கம்பளம் விரிக்கப்பட்டது. உள்ளே இருந்த கிளியோபாட்ராவைப் பார்த்த சீசருக்கு அப்போதே ஓர் இனம் தெரியாத கிரக்கம். சும்மா சொல்லக் கூடாது. கண்டதும் காதல் என்று சொல்வார்களே. அந்த மாதிரியான மயக்கம். விரைவில் இருவரும் காதலர்கள் ஆனார்கள்.

அப்புறம் கிளியோபாட்ராவின் இன்னொரு தம்பி Ptolemy XIV நாட்டின் மன்னர் ஆக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கிளியோபாட்ராவிற்கு இரண்டாவது கணவராக மணமுடிக்கப்பட்டவர் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

கிளியோபாட்ரா ஓர் அழகி என்று சொல்வதைவிட, அவர் மிகச் சிறந்த ஓர் அறிவாளி என்று சொல்வதே சரியாக இருக்கும். அவருக்கு ஒன்பது மொழிகள் தெரியும்.

வானவியல், தாவரவியல் என்று பல துறைகளில் அவர் சிறந்து விளங்கினார். இவருடைய உடலில் கொஞ்சம் மகா அலெக்சாந்தரின் கிரேக்க இரத்தமும் கலந்து ஓடியது. மகா அலெக்சாந்தர் ஒரு காலத்தில் எகிப்தை ஆட்சி செய்தவர்தானே.

கிளியோபாட்ராவிற்கும் சீசருக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பொத்தெலாமி சீசர் என்று பெயர் சூட்டினார்கள். ஜூலியஸ் சீசர் ரோமாபுரிக்கு திரும்பியதும் அவருடன் கிளியோபாட்ராவும் சென்றார். அவரை அங்குள்ள மக்கள் விநோதமாகப் பார்த்தனர். கிளியோபாட்ராவின் நீலநிறக்கண்கள் அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

உள்நாட்டைக் கவனிக்காமல் எகிப்தின் மீதும்,  கிளியோபாட்ராவின் மீதும் அதிக நேரம் செலவிடுகிறார் என்பது கிரேக்க மக்களின் ஆதங்கம். கிளியோபாட்ரா ரோமாபுரிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே சீசரும் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், வேறு வழி இல்லாமல் எகிப்திற்கே கிளியோபாட்ரா திரும்பி போக வேண்டிய கட்டாய நிலைமை.

அப்போது கிளியோபாட்ராவின் இரண்டாவது கணவரும் இரண்டாவது தம்பியுமான Ptolemy XIV என்பவர் எகிப்தை ஆட்சி செய்து வந்தார். கிளியோபாட்ரா எகிப்திற்கு திரும்பிய கொஞ்ச நாளில் அவரும் மர்மமான முறையில் இறந்து போனார்.

கிளியோபாட்ராதான் அவரை விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சீசருக்குப் பிறந்த மகனையே எகிப்து நாட்டின் மன்னராக பிரகடனம் செய்தார்.

ஜூலியஸ் சீசரின் இறப்பிற்குப் பின்னர் ரோமாபுரியில் உள்நாட்டுக் கலவரம். ரோமானியப் பேரரசு இரண்டாகப் பிரிந்தது. ஒரு பகுதி மார்க் அந்தோனிக்கும் இன்னொரு பகுதி ஒக்டேவியாவிற்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.  அதன் பின்னர்தான் ரோமாபுரியில் பெரும் பெரும் அதிர்ச்சிகள்.

தங்களின் எதிரியான ஜூலியஸ் சீசருக்கு உடந்தையாக இருந்த கிளியோபாட்ராவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் வரலாறு வேறு பக்கமாகப் பயணிக்கத் தொடங்கியது. கிளியோபாட்ராவைப் பார்த்த அந்தோனிக்கும், அவள் மீது மயக்கம் கிரக்கம் ஏற்பட, அதுவே ஒரு பெரிய வரலாற்றுக் காதலாகவும் மாறியது.

உண்மையில், கிளியோபாட்ராவிற்கு சகோதர உறவுகளின் மூலமாக இரு கணவர்கள் இருந்தார்கள் என்றாலும், அது ஒரு சம்பிரதாயச் சடங்கு உறவு முறைதான். மற்றபடி வேறு எதுவுமே இல்லை. தாம்பத்தியம் என்ற பேச்சிற்கே அங்கே இடமில்லாமல் போய்விட்டது.

ஏற்கனவே இருந்த ராணிகளுக்கு தங்கள் அண்னன் தம்பிகளைத் திருமணம் செயது குழந்தைகள் பிரந்தனர் என்பது ஊனமைதான். அந்தக் குழந்தைகளில் சிலர் உடல் குறையுடன் பிறந்தார்கள் என்பதும் உண்மைதான். இருந்தாலும் நம்முடைய கிளியோபாட்ரா விஷயத்தில் தம்பி உறவு முறையில் தாம்பத்தியம் அடிபட்டுப் போனது என்பதுதான் உண்மை.

கொஞ்ச நாள்களுக்குப் பிறகு, மார்க் அந்தோனியும் கிளியோபாட்ராவும் திருமணம் செய்து கொண்டார்கள். இதை அறிந்த ஒக்டேவியா சினம் அடைந்தான். 

ஏன் என்றால் ஒக்டேவியாவின் தங்கையைத்தான் மார்க் அந்தோனி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தார். அதனால், தங்கைக்கு துரோகம் செய்த மார்க் அந்தோனியைப் பழி வாங்க எகிப்தின் மீது ஒக்டேவியா படை எடுத்து வந்தான். ஒரு பெரிய போரே நிகழ்ந்தது.

அந்தப் போரில் மார்க் அந்தோனிக்கும் கிளியோபாட்ராவுக்கும் படுதோல்வி ஏற்பட்டது. அதை ஒரு வரலாற்றுப் போர் என்று சொல்வார்கள். Battle of Actium  என்று பெயர். கி.மு.31இல் நடந்தது.

அந்தப் போரில் கிளியோபாட்ரா இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும், மனம் உடைந்து போன மார்க் அந்தோனி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டார்.  அதாவது தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார்.

கிளியோபாட்ரா இன்னும் இறக்கவில்லை என்று இன்னொரு செய்தி வந்தது. அப்போது அந்தோனி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார். இருந்தாலும் கிளியோபாட்ராவைத் தேடிப் போய் அவரின் காலடிகளிலேயே விழுந்து இறந்தும் போனார்.

காதல் என்றால் இதுதான்யா காதல். அந்தோனி ஒரு நாட்டின் அரசன். ஒருத்தி இல்லை என்றால் ஓராயிரம் பேரை அந்தரப்புரத்திற்கு இழுத்து வர முடியும். ஆனால், அந்தோனி அப்படிச் செய்யவில்லையே. காதலித்தவளையே கடைசி வரை நினைத்துப் பார்த்தவன் இந்த அந்தோனி. தாஜ்மகால் கதாநாயகன் ஷாஜகான் நினைவிற்கு வருகிறார்.

அந்தோனியின் இறப்பிற்குப் பின் கிளியோபாட்ராவும் மனம் உடைந்து போனார். அவரும் அந்தோனியைப் போல தற்கொலை செய்து கொண்டார். அந்தத் தற்கொலையிலும் ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. தெரியாத இரகசியமும் இருக்கிறது.

ஓர் அழகிய பூஞ்சட்டியில் கொடிய விஷம் உள்ள ASP எனும் எகிப்திய நல்ல பாம்பு வைக்கப்பட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்டு, அதில் கையைவிட்டார் கிளியோபாட்ரா.

பாம்பின் விஷப் பற்கள் பாய்ந்து ஒரு சில நிமிடங்களில் இறந்து போனார். பாம்பை மார்பில் கடிக்க வைத்து இறந்து போனார் எனும் செய்தியும் இருக்கிறது. ஆனால், அது தவறு என்று வரலாற்று அறிஞர்கள் இப்போது கண்டுபிடித்துச் சொல்கின்றார்கள். இதுவும் நமக்குத் தெரியாத ஒரு இரகசியமே.

கிளியோபாட்ராவின் ராசி கன்னி ராசியாகும். வைரமுத்து சொல்வது போல அவர் ஐம்பது கிலோ இருக்க முடியாது. கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்க வேண்டும். ஏன் என்றால் எகிப்திய பெண்கள் தடித்த உடலைக் கொண்டவர்கள்.

எது எப்படியோ, இந்த மனுஷி உலகின் அறுநூறு கோடி பேரையும் திரும்பிப் பார்க்கச் செய்து விட்டாரே, அது ஒரு பெரிய சாதனை தானே. அவர் வரலாற்றுச் சுவடுகளில் மறக்க முடியாத வசந்தமாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

மனுக்குலத்திற்கு மாபெரும் வரலாற்றுத் தடயங்களை விட்டுச் சென்று இருக்கிறார். சிங்காரத்தின் புன்னகைக்கு பல கலைச்சுவடிகளையும் எழுதிச் சென்று இருக்கிறார்.

கிளியோபாட்ராவைவிட பெரிய பெரிய அழகிகள் எல்லாம் வந்து போய் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும்  கிளியோபாட்ரா எனும் கிளி மட்டும் இன்னும் மனித மனங்களில் வீணை வாசித்துக் கொண்டு இருக்கிறது. 

மனித வரலாற்றில் கிளியோபாட்ராவைப் போல அழகான ஆழமான வடுக்களை விட்டுச் சென்றவர்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் இருக்கும் வரையில் அந்தக் கிளி, தேன் கலந்த தெம்மாங்கு பாடல்களைப் பாடிக் கொண்டுதான் இருக்கும்.

17 பிப்ரவரி 2013

மலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள்

[இந்தக் கட்டுரை 17.09.2012 மலேசியா தினக்குரல் நாளிதழில் பிரசுரமானது.]


முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்து நரிக்குறவர்கள் கப்பலேறி மலேசியாவுக்கு வருவார்கள். கோலாலம்பூர்தான் அவர்களின் தலைவாசல். ஜாலான் மஸ்ஜீத் இந்தியா, பிரிக்பீட்ஸ், பத்துமலைப் பகுதிகளில் அவர்களைப் பார்க்கலாம். பாசிமணி, ஊசிகளை விற்பார்கள். பச்சைக் குத்துவார்கள். நாடி பார்த்து நோய்க் குறிகளைச் சொல்வார்கள்.

பின்னர் பேராக், மலாக்கா, கெடா பகுதிகளுக்குப் போவார்கள். மலேசியத் தோட்டப்புறங்களில் அவர்களின் நடமாட்டங்கள் அதிகமாகத் தெரிந்தன. மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு மூன்று மாதங்கள், மலேசியாவில் தங்கி இருப்பார்கள். நாலு காசு பார்த்ததும் நாகரிகமாக, நாடு கடந்து தாயகம் போய்விடுவார்கள். இப்போது எல்லாம் அந்த அப்பழுக்கற்ற ஜீவன்களைப் பார்க்க முடிவது இல்லை. அவர்களும் அரசியல் அரிச்சுவடிகளில் சகாப்தமாகி விட்டார்கள்.

நரிக்குறவர்கள் என்று சொன்னதும் அவர்கள் விற்கும் நரிக்கொம்பு ஞாபகத்திற்கு வருகிறது. உண்மையிலேயே நரிக்கொம்பு என்ற ஒன்று இருக்கிறதா. தெரியவில்லை. மலேசியாவில் நரிகள் இருக்கின்றன. அவை மலைப் பிரதேசங்களில் வாழ்கின்றன. அங்கு வாழும் நரிகளுக்கு கொம்புகள் இருக்கின்றன என்று நண்பர்கள் சொன்னார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்ய வேண்டி இருக்கும்.

நரிகளில் ராஜநரி என்று ஒரு வகை உண்டு. அவற்றுக்கு கொம்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், அவை உண்மையிலேயே கொம்புகள் இல்லை. தலையில் கொஞ்சமாகத் தசை வளர்ந்து இருக்கும். அதுதான் நரிக்கொம்பு. நடுநிசி அல்லது விடியல்காலையில் புடைத்துக் கொள்ளுமாம். காண்டாமிருகத்திற்கு கொம்பு இருப்பதைப் பார்த்து இருக்கலாம். உண்மையில் அது கொம்பு இல்லை. அது இறுகிப் போன தசை.

நரிக்கொம்பின் மூலமாக சிலருடைய வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகிறது. நல்லது நடக்கும் என்கிற பிடிப்பும் உண்டாகிறது. நடக்கிறதோ இல்லையோ அது முக்கியம் இல்லை. நடக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறதே அதுதான் முக்கியம். அது ஒரு நேர்மறைத் தாக்கம். அதுவே நல்லதைச் செய்கின்றது.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிரிங்கேரி, தர்மசாலா புனித ஆலயங்களுக்கு போகின்ற வழியில் பெரிய பெரிய காடுகள் இருக்கும். சும்மா சொல்லக்கூடாது. நக்கசல்பாரிகள் உலாவுகின்ற மலைப் பிரதேசம். காட்டுப் பாதைகளின் ஓரங்களில்  நரிக்குறவர்கள் பரண்கள் அமைத்து இருப்பார்கள். வருகிறவர்கள் போகிறவர்களிடம், அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த பாசி மணிகளை விற்பார்கள். 2006, 2010ஆம் ஆண்டுகளில் நானும் என் மனைவியும் அங்கு போய் இருக்கிறோம். அவர்களைப் பார்த்துப் பேசியும் இருக்கிறோம். 

சரி. நரிக்குறவர்கள் யார்? தமிழ்மொழியைப் பேசும் அவர்கள் தமிழர்களா? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள்? இவர்களைப் பற்றி "நரிக்குறவர் இனவரைவியல்" எனும் நூலை கரசூர் பத்மபாரதி என்பவர் எழுதி இருக்கிறார். 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. மரக்காணம் பாலா என்பவரும் ஓர் ஆவண நூலை எழுதி இருக்கிறார்.

இணையவசதி உள்ளவர்கள் http://ta.wikipedia.org/wiki/நரிக்குறவர் எனும் முகவரியில், மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று எல்லா வகையான ஊடகங்களிலும் நரிக்குறவர்களைப் பற்றித் தவறாகவே சொல்லி இருப்பார்கள். நரிக்குறவர்கள் என்னவோ வேற்று உலகத்தில் இருந்து வந்த மாதிரியும், அவர்கள் என்னவோ நம்ப வீட்டு ஐஸ்பெட்டியில் இருந்த அல்வாவைத் திருடித் தின்ற மாதிரியும் கதை கட்டி காவியம் பேசுவார்கள்.

அவர்களைத் திருடர்களாகவும், சபலபுத்தி உள்ளவர்களாகவும் சித்தரிப்பது மிகவும் தவறு. அவர்களும் நம்மைப் போல மனிதர்கள். அவர்களுக்கும் நம்மைப் போல ஆசாபாசங்கள் இருக்கும். அவர்களைப் பற்றிய சில நடைமுறை உண்மைகளைச் சொல்கிறேன்.

நரிக்குறவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். நரிக்குறவர்களின் சமுக அமைப்பும், சமூகக் கட்டுபாடும் மற்றச் சமூகங்களில் இருந்து அவர்களைத் தனியாகப் பிரித்து வைத்து இருக்கின்றன. அவ்வளவுதான். அவர்களும் தனித்துப் போய்விட்டனர். மற்ற சமூகங்களுடன் அவர்கள் இணைவது இல்லை. ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்.

தேர்தல் சமயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் இவர்களைத் தேடி வருவார்கள். இடுப்பில் தூக்கி வைத்து ஆடுவார்கள். மதிப்பும் மரியாதையும் மூட்டை மூட்டையாக வரும். சில நாட்களுக்கு ராஜ உபசரணைகள். வடிவேலு கணக்கில் குவார்ட்டர் வரும். புல்லு வரும். அவிச்ச முட்டை, அவிக்காத முட்டை எல்லாம் வரும். ஓட்டுப் போட்டதும் அவர்கள் மறக்கப்பட்ட மனிதர்கள். மாட்டு வண்டியில் விரட்டப்பட்ட நாடோடிகள்.

இங்கே மட்டும் என்னவாம். தேர்தல் வந்ததும் அரிசி, மாவு, சீனி, ரொட்டி, கிடைக்கிறதே என்று வரிசை பிடிக்கும் கலாசாரம் இருக்கத்தானே செய்கிறது. அந்த மாதிரிதான். அதில் அந்த 500 வெள்ளி பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் வரிசையில் நின்று வாங்கி இருக்கிறேன். சும்மா ஒன்றும் இல்லை. பிள்ளையாய்ப் பிறந்து எத்தனையோ இலட்சம் வரியாய்க் கட்டி இருக்கிறேன். அதில் கொஞ்சம் திரும்பி வருகிறது. நாங்களும் வாங்குவோம் இல்ல. கதை எங்கேயோ போய்விட்டது. மன்னிக்கவும்.

நரிக்குறவர்களின் பூர்வீகம் வட இந்தியாவின் குஜாராத் மாநிலம். மராட்டிய மாவீரன் சிவாஜியின் படைப்பிரிவில் நரிக்குறவர்கள் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். மொகலாயர்களின் படையெடுப்புகளினால் சிவாஜிக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. அதனால், சிவாஜியின் படையில் இருந்த அத்தனை வீரர்களும் மொகலாயர்களின் அடிமைகளாக்கப்பட்டனர். கடும் கொடுமைகள் தொடர்ந்தன.

மொகலாய மன்னன் அவுரங்கசிப், அவனுக்குப் பின் வந்த சிற்றசர்கள் மராட்டிய அடிமைகளுக்கு கடும் தண்டனைகளைக் கொடுத்தனர். அதில் இருந்து தப்பிக்க நரிக்குறவர்கள் காடுகளில் தஞ்சம் அடைந்தனர். அதற்கு முன் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல. நல்ல போர்வீரர்கள். வெளியே நடமாடும் போது, எப்போதும் அடிமைகளுக்கான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். ஆக, அவர்கள் அணிந்து இருந்த உடைகள் அவர்களை அடிமைகளாக அடையாளம் காட்டின.

அதனால், அந்த உடைகளை அணியாமல் இலைத் தழைகளை உடுத்திக் கொண்டனர். காடுகளிலேயே வாழ்ந்தனர். இதில் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா. மொகலாய சாம்ராஜ்யம் மறைந்து போனதுகூட தெரியாமல், அந்த இலைத்தழை அடிமைகள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தமிழ்நாட்டில் வந்து குடியேறினார்கள். இப்போது மராத்தி கலந்த தமிழ் மொழியில் பேசுகிறார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது, அவர்கள் காடுகளுக்கு வேட்டையாடச் செல்வது வழக்கம். அது அவர்களின் மேல்மட்ட பொழுதுபோக்கு. ஆங்கிலேயர்களுக்கு நரிக்குறவர்கள் உதவியாக இருந்து இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் நரிக்குறவர்களின் வேட்டையாடும் திறமையைப் பார்த்து, ஆங்கிலேயத் துரைமார்கள் வியந்து போனார்கள்.

அவர்களுக்குத் துப்பாக்கிகளைக் கொடுத்து வேட்டையாடிப் பிழைக்கும் வழிகளையும் சொல்லித் தந்தார்கள். அதனால்தான் இன்றுவரை நரிக்குறவர்கள் துப்பாக்கியும் கையுமாக அலைவதைப் பார்க்க முடிகிறது. ஒரு சின்னச் செருகல். அந்தத் துப்பாக்கிகளும் இப்போது அரிசி பருப்புக்கு அரசியல்வாதிகளிடம் அடைக்கலம் போய் விட்டன. அது மட்டும் இல்லை. துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதிலும் அரசாங்கம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துவிட்டது. இவ்வளவு காலமும் நரிகளை வேட்டையாடிப் பிழைத்து வந்த நரிக்குறவர்கள் இப்போது அரிசிக்கும் பருப்புக்கும் ஆலாய்ப் பறக்கின்றார்கள்.

தமிழகத்தில் வாழும் நரிக்குறவர்கள் நரியின் மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களுக்குப் பிடித்தமான உணவு. நாட்டுக் கோழியைவிட நரி மாமிசம் எவ்வளவோ பரவாயில்லையாம். சண்டைக்கு வரவேண்டாம். நரிக்குறவர்கள் சொல்கிறார்கள். இரண்டுமே சுத்தமான அசைவங்கள். இதில் எது சுத்தமான அசைவம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நரியின் இறைச்சியை அவர்கள் விரும்பியதாலும், நரிக்கொம்புகளை விற்று வந்ததாலும் அவர்களுக்கு நரிக்குறவர் எனும் பெயர் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

நரிக்குறவர்கள் பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வருகின்றார்கள். இவர்களின் திருமண முறை சற்றே வித்தியாசமானது. இவர்களின் திருமணத்தின் போது, சாராயம் தண்ணீராக ஓடும். அதனால் சண்டைகள், சச்சரவுகள் வரும். அதில் ஏகப்பட்ட அமர்க்களங்கள். அப்போதுதான் அது ஒரு முழுமையான திருமணமாகக் கருதப்படுகிறது. நரிக்குறவர்களின் சமூகத்தில் திருமணம் என்று வந்தால் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவருக்கும் துணிமணிகள் வாங்கித்தர வேண்டும். கல்யாணச் செலவுகளை மொத்தமாக  மணமகன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் அதை ஓர் அதிர்ஷ்டமாகக் கொண்டாடுகிறார்கள். பெண் குழந்தையைக் குலத்தைக் காக்க வந்த குலக் கொழுந்தாகப் போற்றுகிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரை உபரியாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை பெரும்பாலும் கிடையாது. நன்றாக உழைக்க வேண்டும். நன்றாக மது அருந்த வேண்டும். இதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. முடிந்தவரை உல்லாசம் நிறைந்த கொண்டாட்டமான வாழ்க்கை நடத்த வேண்டும். உணவிற்கும் உறைவிடத்திற்குமான கவலைகள் அவர்களிடம் இல்லை. அவர்களுக்கான மாபெரும் கேளிக்கை தமிழ்ச்சினிமா. மூன்று காட்சிகளையும் படம் பார்க்கச் சொன்னால் சந்தோஷமாகப் பார்ப்பார்கள். அதிலும் எம்.ஜி.ஆர் படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.

நரிக்குறவர்களிடம் சாதி என்பதே இல்லை. ஆனால், இரண்டே  இரண்டு பிரிவுகள் மட்டும் இருக்கின்றன. ஒன்று ஆடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு. இன்னொன்று மாடு சாப்பிடுகிறவர்கள் பிரிவு.

ஆடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்தவர் சகோதரர் முறை வரும். அதேபோல மாடு சாப்பிடுகிற பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு மாடு சாப்பிடும் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் சகோதரர் முறை வரும்.

ஆகவே, ஒரே பிரிவிற்குள் இருப்பவர்கள் பெண் எடுப்பதும் இல்லை. பெண் கொடுப்பதும் இல்லை. எதிர் எதிர்ப் பிரிவுகளில்தான் மண உறவுமுறைகள். இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லலாம். ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும். அதே போல, மாடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஓர் ஆணைத்தான் திருமணம் செய்ய வேண்டும்.  ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த ஆண், இன்னோர் ஆடு சாப்பிடும் பிரிவைச் சேர்ந்த பெண்ணோடு பாலியல் உறவு வைத்துக் கொள்வது இல்லை. அதை அண்ணன் தங்கை உறவாக நினைக்கிறார்கள்.

இவர்களிடம் திருமண உறவுகளைத் தாண்டிய சுதந்திரமான பாலுறவுகள் பரவலாக உள்ளன. ஒருவருடைய மனைவியை மற்ற ஆண்கள் பகிர்ந்து கொள்ள முடியும். அதை அந்தப் பெண்ணின் கணவன் தவறாக எடுத்துக் கொள்வது இல்லை. ஏன் என்றால் அதே கணவன் வேறு திருமணமான பெண்களையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அதனால், இங்கே விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மை இருக்கிறது.

இந்த மாதிரியான பழக்கவழக்கத்தை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால், அது அவர்களுக்கு சமூக வழக்கமாகிவிட்டது. இன்னும் ஒரு விசயம். மாலை ஆறுமணிக்கு மேல் வீட்டிற்குத் திரும்பி வரும் பெண்ணை, சமூகத்தில் இருந்து விலக்கி வைத்துவிடுவார்கள். மற்ற பழங்குடிச் சமூகங்களைப் போல நரிக்குறவர்களும் இனத் தூய்மையைக் கட்டிக் காக்கின்றனர்.

குறவர் பெண்களுக்கு 13 அல்லது 14 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. ஆண்களுக்கு அதிகபட்ச வயது 16 அல்லது 18. பெரும்பாலும் பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்வதும் உண்டு. சரியான உறவுக்குள் காதலித்து இருந்தால் சமூகத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து கொண்டால் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

முன்பு எல்லாம் குழந்தைகள் பிறக்கும் போதே திருமணத்தை நிச்சயித்துவிடுவது வழக்கம். பெண்ணுக்கு மூன்று வயதானதும் திருமணத்தை முடித்து, அந்தப் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடந்த அது போன்ற பால்யத் திருமணங்கள் இப்போது இல்லை. குறைந்து விட்டது.

பெண் பார்க்கப் போகும் போது ’வெற்றிலைப் பாக்கு இருக்கா இல்லையா’ என்று கேட்க மாட்டார்கள். ’பிராந்தி இருக்கா’ என்றுதான் கேட்பார்கள். பிராந்தி அல்லது விஸ்கி கண்டிப்பாக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன் எல்லாரும் நன்றாக சாப்பிட வேண்டும். அப்புறம்தான் கல்யாணப் பேச்சு.  மது அருந்துவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை. அவர்களைப் பொருத்த வரையில் நல்ல ஒரு கலாசாரம். இந்த இடத்தில் சமத்துவம் சம்மட்டியால் அடித்து தத்துவம் பேசுகின்றது.

பெண்ணுக்கு அழகு இருக்க வேண்டும். பாசிமணி கோர்க்கும் திறமை இருக்க வேண்டும். அதை விற்றுப் பணம் சேர்க்கும் அறிவும் இருக்க வேண்டும். அதேமாதிரி மாப்பிள்ளைக்கு வெள்ளி வெண்கலச் சாமான்கள் இருக்க வேண்டும். நன்றாக வேட்டையாடத் தெரிய வேண்டும். குறிப்பாக ஆண்கள் குடுமி வைத்து இருக்க வேண்டும். குடுமி இல்லாத ஆண்களுக்கு மவுசு இல்லை. என்ன செய்வது. இதை எல்லாம் பார்க்கும் போது நாமும் குடுமி வைத்துக் கொண்டு, கொஞ்சம் வெண்கலச் சாமான்களை இடுப்பில் கட்டிக் கொண்டு அந்தப் பக்கம் போகலாமே என்கிற ஆசை வருகிறது. ஆனால், முடியாது சாமி. பேரன் பேத்திகள் சும்மா விடுவார்களா?

பொதுவாக நரிக்குறவர்களிடம் பாலியல் பிரச்னைகள் இல்லை. அதற்குக் காரணம், போதுமான பாலுறவு இணக்கங்கள் அவர்களுக்குள் கிடைத்து விடுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது எல்லாம் காலாவதியான அத்தியாயங்கள். அதே போல அவர்கள் இடத்தில் விவாகரத்தும் குறைவு.

நரிக்குறவர் பெண்கள் நல்ல அழகிகளாக இருப்பார்கள். அவர்கள் மட்டும் கொஞ்சம் நல்ல நாகரீகமாக ஆடைகளை அணிந்து வெளியே நடமாடினால் போதும். சினிமா சீரியல் நாயகிகளுக்கும் பிரச்னை. குடும்பப் பெண்களுக்கும் பிரச்னை. மூன்றாம் உலகப்போர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுத வேண்டியும் வரலாம்.

இன்னும் ஒரு விசயம். எந்த ஒரு குறவர் பெண்ணையும் அத்தனைச் சுலபத்தில் பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது, ஏன் என்றால் ஓர் ஆணுக்கு உள்ள பலம் ஒரு பெண்ணுக்கும் இருக்கிறது. ஒரு குறவர் பெண்ணையும் ஒரு குறவர் ஆணையும் சண்டை போட வைத்தால், ஒரு பெண் தான் ஜெயிப்பாள். அந்த அளவுக்கு பெண்களுக்கு பலம் இருக்கிறது. ஆக, கொஞ்சம் யோசித்துத்தான் அந்தப் பக்கம் தலையைக் காட்ட வேண்டும்.

அந்த அழகிகளைக் கல்யாணம் செய்து கொள்ள குறவர் அல்லாத ஆண்களுக்கும் ஆசைதான். வெளி ஆண்கள் குறத்திகளைக் கல்யாணம் செய்து கொள்ளவதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. அந்தப் பெண்கள் வெளியே நகர்ப்புறங்களுக்கு வருவது இல்லை. கல்யாணமான பெண்கள்தான் வெளியே வருவார்கள். அதுவும் ஆறுமணிக்குள் வீட்டிற்குத் திரும்பிப் போய்விட வேண்டும்.

நரிக்குறவர் பெண்ணைப் பிற சமூகத்தவர் திருமணம் செய்ய முடியும். அதில் தடை எதுவும் இல்லை. ஆனால் திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களுடைய சமூகத்திற்குள் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

இவர்களைப் பற்றிய ஒரு சுவராசியமான செய்தி. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் (1981-1983) பிற்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தங்களைப் பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்று ஊர்வலம் நடத்தி கோட்டைக்குச் சென்றார்கள். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களான இவர்கள், அவரைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சியில், தங்கள் கோரிக்கைகளை மறந்துவிட்டு, அப்படியே ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள். குறவர்களின் விசுவாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன எம்.ஜி.ஆர். குறவர் சமுதாயத்திற்கு நிறைய பொருள் உதவிகளைச் செய்தார். நிறைய பேர்களுக்கு கல்வி வசதிகளைச் செய்து கொடுத்தார். இன்றுவரை எம்.ஜி.ஆர். சின்னத்திற்குத்தான் நரிக்குறவர்களின் வாக்குகள் என்பது எழுதப்படாத சாசனமாக இருந்து வருகிறது.

12 பிப்ரவரி 2013

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள்


மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம். அதன் பிடியில் இருந்து என்னால் கழற்றிக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே இரண்டு முறை. பிடித்துக் கொண்டு போனார்கள்.


அப்போதே (1998) கல்லூரி விரிவுரையாளர் பணி பறி போனது. அப்புறம், எவ்வளவுதான் நல்லவனாக வாழ்ந்து பார்த்தாலும் மறுபடியும் அந்த மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இருக்கிறதே, அதன் அரக்கப் பிடி என்னை மறுபடியும் மறுபடியும் கட்டிப் பிடிக்கின்றது. சுகமாகத் தெரியவில்லை. சொர்க்கமாகத் தெரிகின்றது.

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சகல கலா வல்ல மகா மகா காக்கா, மலேசியாவில் செய்த இந்திய இன அழிப்பைப் பற்றி அல்-ஜசீராவிற்குப் பேட்டிக் கொடுத்தது உண்மை. பத்து நிமிட பேட்டி. இத்தனைக்கும் அந்தக் காக்கா ஓர் இந்தியன் என்று சொல்லித்தான் சிங்கப்பூரில் டாக்டர் படிப்பிற்குப் படிக்கப் போனது. படித்தும் வந்தது.

காக்காவின் ரகசியம் கையில் இருக்கிறது. சொன்னது தப்பா. அவனைப் பற்றிய உணமையான இந்திய பாரம்பரிய உண்மைகளைச் சொன்னதற்காகப் பிடித்துக் கொண்டு போனார்கள். என்னய்யா நியாயம்.

விடுங்கள். அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் கமுந்திங் சிறையில் செய்த மன, உடல் உலைச்சல்கள்தான் வேதனை. அழ மாட்டேன். இல்லாத போதுதான் இருந்த பொருள்களைப் பற்றி நினைக்கின்றோம். சிறைக்குள்ளே இருக்கும் போது சின்ன சின்ன வாசனைகள். வெளியே இருக்கும் போது பெரிய பெரியநினைவுகள். சிந்திக்கின்றேன்.

புதிதாக எதையும் எழுதவில்லை. கடைசி காலம் வரை விக்கிப்பீடியாவிற்கு எழுதுவோம் எனும் முடிவு. விக்கிப்பீடியாவிற்கு எழுதுங்கள். நாளைய பரம்பரை நம்மை நினைத்துப் பார்க்கட்டும். மறுபடியும் சந்திக்கின்றேன். நல்லதே நடக்கட்டும்.

31 ஜனவரி 2013

வல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு)

எச்சரிக்கை: வன்முறைப் படங்கள் உள்ளன.

மலேசியப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும்

பாலினச் சமநிலைச் செயல் கழகம் (ஜாக்)
Joint Action Group for Gender Equality (JAG)  


இந்தக் கழகத்தை, மலேசியாவின் ஒன்பது மகளிர் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயல்படுத்துகின்றன. மலேசியப் பெண்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்திடம் நெருக்குதல் கொடுக்கும் ஆற்றல் கொண்ட கூட்டு அமைப்பு. இந்தக் கூட்டுக் கழகத்திற்கு, என்னால் இயன்ற சேவைகளைச் செய்வதில் பெருமை அடைகிறேன். அவர்களின் அண்மைய ஊடகச் செய்தி அறிக்கையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப் படுத்தினேன். அதனை உங்களுக்கும் வழங்குகிறேன். மனித இனத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒரு துளி. தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய ஒவ்வொருவரின் கடப்பாடு ஆகும். அனைத்துலக மலேசிய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மலேசிய ஆங்கில நாளிதழான ‘தி ஸ்டார்’:

http://thestar.com.my/news/story.asp?file=/2013/1/16/focus/12579846&sec=focus


பாலினச் சமநிலைச் செயல் கழகத்ில் உள்ள தேசிய மகளிர் அமைப்புகள்:

1. அனைத்து மகளிர் செயல் கழகம் (அவாம்)
All Women's Action Society (AWAM)
2. பேராக் மகளிருக்கான மகளிர்க் கழகம்
Perak Women for Women Society (PWW)
3. சிலாங்கூர் சமூக விழிப்புணர்வு கழகம் (எம்பவர்)
Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER)
4. சிலாங்கூர் மகளிர் நட்புக் கழகம்
Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
5. சபா மகளிர் செயல்வளக் குழு
Sabah Women Action Resource Group (SAWO)
6. இஸ்லாமியச் சகோதரிகள்
Sisters in Islam (SIS)
7. தெனாகாநித்தா
Tenaganita
8. மகளிர் உதவி அமைப்பு
Women’s Aid Organisation (WAO)
9. மகளிர் மாற்று மையம்
Women’s Centre for Change (WCC)



வல்லுறவுக் கொடுமைகள்

வல்லுறவுக் கொடுமைகளில் இருந்து நாம் வேறுபட்டுப் போக முடியாது. அதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

’அச்சமின்மை’ எனும் ஒரு நிர்பயத்தை நாம் இன்று நினைத்துப் பார்க்கிறோம். புதுடில்லியில் 2012 டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற ஒரு மிருகத்தனமான கற்பழிப்புக் கொடூரம். அதனால் ஏற்பட்ட வன்மையான காயங்கள். அந்தக் காயங்களினால் இரண்டு வாரங்களுக்கு உயிருக்குப் போராடிய ஒரு தைரியமான இளம் பெண். அவரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.


7200 children raped a year in India

சினிமாவுக்குப் போய்விட்டு தன்னுடைய தோழருடன் வீட்டிற்குச் சீக்கிரமாகச் செல்ல ஒரு பேருந்தில் ஏறினார். வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இருவரும்  அந்தப் பேருந்திலேயே மிகக் கொடுமையாகத் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசி எறியப்பட்டனர். அங்கிருந்த ஆடவர்களினால், அந்த இளம்பெண் மிக மிக மோசமான வல்லுறவுகளுக்கு பலிக்கடா ஆகிறாள். அவளுடைய ஆண் தோழர் அங்கேயே அடித்து நொறுக்கப்பட்டார்.

நிர்பயாவும் அவளுடைய தோழரும் ஒரு தெரு ஓரத்தில் அனாதையாகத் தூக்கி வீசப்படுகின்றனர். யாருமே அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு மணி நேரம் கழித்து போலீஸ் வந்து எட்டிப் பார்க்கிறது.

Rape and murder incident at Ampang's Waterfront KL. 
May Her Soul Rest In Eternal Peace
மேலே காணும் படத்தை வெளியிட்டமைக்கு மன்னிக்கவும். அந்த மாதிரியான கொடூரமான படங்களை வெளியிடவும் மனம் வேண்டும். அதைப் போல, மலேசியாவிலும் பல கொடூரமான வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  அவற்றில் சாதாரண மக்களாகிய நமக்கும் பெரிய பங்கு உண்டு.  நம்முடைய ஒட்டு மொத்த உணர்வுகளையும் அந்தச் சம்பவங்கள் ஓரங்கட்டிப் பார்க்கின்றன.

24 வயது கணினிப் பொறியியலாளர் நூர் சூசாலி மொக்தார். அவர் நம் நினைவுகளை விட்டு இன்னும் அகலவில்லை. ஒரு பேருந்து ஓட்டுநரினால் கழித்து நெரிக்கப்பட்டு வல்லுறவின் போர்வையில் பிணமாகிப் போனவர்.  

Noor Suzaily Mukhtar
Noor Suzaily Mukhtar Parents
On Oct 7, 2000, computer engineer Noor Suzaily Mukhtar, 24, boarded a Metro bus from Kuala Lumpur to her workplace in Klang. It was like any other day during her two-week attachment at a medical centre in Port Klang.


After the bus driver, Hanafi Mat Hassan, 38, dropped off the last remaining passenger at the Klang bus stand, he changed routes towards Banting and pulled over at the Bukit Tinggi project site. Noor Suzaily tried to escape but the doors were locked. The windows were heavily tinted so she could not draw attention. Hanafi raped her and used her headscarf to strangle her before tossing her naked body out of the bus. His wife had just given birth three days ago. Noor Suzaily was dressed in a long skirt and tudung. Yet police said the murderer claimed he tak tahan (unable to control his lust). 
Ref: http://thestar.com.my/lifestyle/story.asp?file=/2008/8/3/lifefocus/1710462&sec=lifefocus

அடுத்து 28 வயது கென்னி ஓங் எனும் ஒரு கணினி நிபுணர். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.  

Canny Ong
Canny Ong
Charred remains of Canny Ong
Charred remains of Canny Ong
[Canny Ong, who would have turned 29 on July 18, was abducted from the car park at the Bangsar Shopping Complex at about 10.45pm on June 13 before being raped, stabbed and strangled. Her body was dumped in a manhole in Old Klang Road and set on fire. Her charred remains were recovered on June 17. Three days later, police arrested Ahmad Najib at his house in Pantai Dalam.]
Ref: http://thestar.com.my/news/story.asp?file=/2003/7/4/courts/04canny&sec=courts

16 வயது நூருல் ஹானிஸ் காமில். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது மிருகத்தனமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  

Nurul Hanis Kamil's Killer
Nurul Hanis Kamil's Killer

[Nurul Hanis Kamil, a 16 year old who was brutally raped and murdered on the way home from school.]

10 வயது நூருல் ஹுடா கனி. ஒரு பாதுகாவலரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

Nurul Huda Ghani
Nurul Huda Ghani
ohd Abbas Danus Baksan
Mohd Abbas Danus Baksan the Rapist

[A 10-year-old girl who was cycling to the grocery shop was raped and left in a toilet of a guardhouse, some 50m from her house in Kampung Perkajang in Gelang Patah. Nurulhuda’s parents rushed her to a nearby clinic but she died on arrival at 1.30pm. Police have detained a 46-year-old guard of a Tenaga Nasional sub-station, who had eight previous convictions, including robbery since 1970, an unemployed man and are looking for a third suspect.]
Ref: http://thestar.com.my/news/story.asp?file=/2004/1/18/nation/7136066&sec=nation


எட்டு வயது நூரின் ஜாஸ்லின் ஜாஸ்மீன்.  ஒருபால் புணர்ச்சிக்கு பலியாகிக் கொலை செய்யப்பட்டாள். 

Nurin Jazlin Jazimin
Nurin Jazlin Jazimin

The perished little girl
The perished little girl
அனைத்தும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். நெஞ்சத்தைக் கிள்ளும் வேதனைக் காயங்கள்.

2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், மலேசியவில் பாலியல் வல்லுறவுகள் 1217லிருந்து 3301ஆக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன என்று காவல் துறையினர் வெளியிட்ட புள்ளி விவரங்கள் சொல்கின்றன.


இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பெரிய பனிப்பாறையில் ஒரே ஒரு சின்ன நுனிக்கட்டி. அவ்வளவுதான். பொதுவாக, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தாங்கள் களங்கப்படுவதைத் தவிர்க்க விரும்புகின்றார்கள். தாங்கள் குறை கூறப்பட்டு வார்த்தைகளால் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்க, மறைந்து ஒதுங்கிப் போகிறார்கள். உண்மையான அசல் உண்மைகள் சாகடிக்கப் படுவதைத் தவிர்க்க மாற்றுவழி தேடுகிறார்கள்.

அதனால்தான், பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.



 
இன்றைய நாளில், நாம் நிர்பயாவின் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து மரியாதை செய்கிறோம். அதே சமயத்தில், 2003ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு தொடர்பான ஒரு நினைவுப் பத்திரத்தை நாம் மலேசிய அரசாங்கத்திடம் தாக்கல் செய்ததை நினைவு படுத்த வேண்டும்.

நம்முடைய தாக்கல் பாத்திரத்தை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம். அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தாலும், இப்போதைக்கு மேலும் பல உடனடித் தீர்வுகள் அவசியமாகத் தேவைப் படுகின்றன.  வல்லுறவின் போது ஏதாவது ஒரு பொருளைப் பயன்படுத்துவதில் உள்ள குற்றவியல் நடைமுறை சட்ட வரையறைகளை கண்டிப்பாக விரிவுபடுத்தியாக வேண்டும்.


   
பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டில் மலேசியா உறுப்பியம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டை Convention on the Elimination of All Forms of Discrimination Against Women என்று அழைக்கிறார்கள்.


 ஆகவே, அந்த மாநாட்டின்  சட்டங்களையும் அதன் கொள்கைகளையும் பின்பற்றிச் செல்வதில் மலேசியாவுக்கும் கடமை உணர்வு உள்ளது என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது. 

பாலியல் வல்லுறவு (violence against women) என்று சொல்லப்படுவதும்  பெண்களுக்கு எதிராக அமையும் ஒரு வகையான வேறுபாடு காட்டும் பாரபட்சத் தன்மைதான். ஆகவே, பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாகுபாடுகளின் புறக்கணிப்பு மாநாட்டின் சட்டக் கூறுகளில் 5வது விதியின்படி (Under article 5 of CEDAW), ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே தீங்குகளை விளைவிக்கும்  பாரபட்சங்களைக் கலைவதில் அரசாங்கத்திற்கு ஒரு நடுநிலையான கடப்பாடு இருக்கிறது என்பதை நாம் இங்கே நினைவு கூருகிறோம்.


இரு பாலரிடமும் உயர்வு தாழ்வு எனும் வேறுபாட்டுக் கருத்துகளுக்கு இடம் இல்லை. சட்டத்திலும் சரி உண்மையான வாழ்வியல் நிலையிலும் சரி, ஆண் பெண் இரு பாலருக்கும் இடையே சரிசமமான சமத்துவம் நிலவ வேண்டும். முன்பைக் காட்டிலும் இன்றையக் காலக் கட்டத்தில் பெண்கள், பொது வாழ்க்கையிலும், அரசியல்  வாழ்க்கையிலும்  பாலியல் துன்புறுத்தல்களினால் அனுதினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நிர்பயாவுக்கு ஏற்பட்ட வல்லுறவுக் கொடுமை என்பது, பெண் வெறுப்பினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளுக்கு நம் கவனங்களை ஈர்த்துச் செல்கிறது.   உறவு முறை இல்லாத ஓர் ஆண் தோழருடன், நிர்பயா தைரியமாக பொது இடத்தில் சுற்றித் திரிந்தது அந்தக் கொடுமையான நிகழ்வுக்கு ஒரு காரணம் என்று குற்றம் புரிந்தவர்களில் ஒருவர் சொல்லி இருக்கிறார்.


அத்துடன் அவர்களை எதிர்த்து நிர்பயா போராடியதால்தான் அவர் அந்த மோசமான நிலைக்கு உள்ளானார் என்றும் சொல்லப்படுகிறது. நம்முடைய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (Penal Code) பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சட்டத்தைத் தாண்டிய ஒரு நிலைமையும் அவசியமான தேவையாக இங்கே அமைகின்றது.  ஆகவே, மனித மனப்போக்குகளில் மாற்றங்கள் தேவை.  மனித எண்ணங்களில் மாற்றங்கள் தேவை.


சுருங்கச் சொன்னால், வன்முறை, அதிகாரம் ஆகிய இரண்டின்  குற்றப் பார்வையே இந்த வல்லுறவு ஆகும். ஒரு சமுதாய அணுகுமுறையில் இருந்து பார்த்தால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் பிரச்னை இருக்கிறதே, அது எப்போதுமே முதன்மைப் படுத்தப்பட வேண்டும் என்பது தெரிய வருகிறது. வல்லுறவு என்பதைப் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட ஒரு பிரச்னை என்று நாம் பார்க்கக் கூடாது. அதை ஒரு மனித உரிமை மீறல் செயலாகத்தான் பார்க்க வேண்டும்.

திறமையற்ற விசாரணைகளும் வலு குறைந்த வழக்குகளும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தவிர, பாலியல் வன்முறைகளைப் பற்றிய கொடூரங்களுக்குக் குறைவான புகார்கள் கிடைப்பது பெரும் கவலையைத் தரும் விசயமாகும்.


சமுதாயத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, அவர்களுக்கு உள்ள சமூக நிலை தொடர்பான பழைய எண்ணங்கள், காலாவதியான கருத்துகள் மாற்றப்பட வேண்டும். தெளிவான சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.

கற்பழிப்புச் சம்பவங்களைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லித் தருவதை நிறுத்த வேண்டிய ஒரு காலக்கட்டம் வந்துவிட்டது. அதற்குப் பதிலாக யாரையும் யாரையும் கற்பழிக்கக்கூடாது; கற்பழிக்க முடியாது என்று ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சொல்லித் தர வேண்டிய காலக் கட்டத்திற்கு வந்துவிட்டோம்.


தன்னைத் தாக்கியவரை எதிர்த்துப் போராடிய நிர்பயாவின் துணிச்சலை நாம் நினைத்துப் பார்க்கிறோம். உயிருடன் வாழ்ந்து காட்டுவோம் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை; இறப்பிலும் ஒரு துணிச்சலான போராட்டம்; உலக மாந்தர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நம் குழந்தைகளுக்கு நியாயங்களைச் சொல்லித் தருவதில் இருந்து நாம் என்றைக்குமே தோல்வி அடைந்துவிடக் கூடாது. பாலியல் வன்முறை என்பது சகித்துக் கொள்ள முடியாதது என்பதை நாம் ஒரு தீர்க்கமான முடிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அந்தப் பாலியல் வன்முறை என்பது மகா பெரிய அநியாயம், மகா பெரிய பாவம் என்பதில் நமக்கு மாறுபட்ட கருத்துகள் எப்போதுமே  இருக்கக் கூடாது.