05 மார்ச் 2019

கண்ணீர் மழையில் காஷ்மீர் - 1


நீல நயனங்களில் இமயத்து அமராவதிகள். பச்சை நளினங்களில் இமயத்துப் புல்வெளிகள். மஞ்சள் வனப்புகளில் இமயத்து மலர்க் காடுகள். வெள்ளை வார்ப்புகளில் இமயத்து விண்முகடுகள். வானவில்லின் வர்ண ஜாலங்களில் இமயத்து மலைச் சாரல்கள். 
 

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மனித நெஞ்சங்களைத் துவைத்துப் பிழியும் மழை மேகச் சல்லித் தூரல்கள். இவை எல்லாம் அழகிய காஷ்மீரின் அற்புதமான அடையாளங்கள். இயற்கை அன்னை ஆசைப்பட்ட ஓர் அழகு பிருந்தாவனம். மொத்தத்தில் பூலோகத்தின் சொர்க்கவாசல்.

சத்தியமாகச் சொல்கிறேன். பூமாதேவி இன்றைக்கும் என்றைக்கும் கொஞ்சி அணைக்கும் அழகு அழகான நந்தவனப் பூஞ்சோலை தான் காஷ்மீர்.

ஆனால் இப்போது அப்படி இல்லைங்க. மனித இரத்தம் அங்கே மழையாய்க் கொட்டி ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோலிக் குண்டுகளைப் பார்த்துப் பழகிப் போன பச்சைக் குழந்தைகள் பீரங்கிக் குண்டுகளால் சிறகு ஒடிந்து மரிக்கின்றார்கள். அழிவின் ஆராதனைகள் அங்கே அசிங்கமாய் ஆலாபனைகள் தெரிகின்றன. 


அங்கே வாழ்ந்த ஒரு நல்ல மனித நாகரிகம் அநியாயமாய் வெட்டிச் சாய்க்கப் படுகின்றது. வேறு எப்படித்தான் சொல்லச் சொல்கிறீர்கள். மனிதநேயங்கள் மாரைக் கிழித்துப் பாலைக் குடிக்கின்றன என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா. ஒரே வரியில் சொல்கிறேன். காஷ்மீர் இப்போது கம்பரை இழந்த ஒரு இராம காவியம். போதுங்களா.

இயற்கையே விரும்பிய அந்த அழகிய பச்சை மண்ணில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் தவிப்பும் காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கொப்பரையாய் கொப்பளிகின்றன. அழகான காஷ்மீரில் இப்போது அமைதி இல்லை. ஒழுங்கு இல்லை. மகிழ்ச்சி இல்லை. நிம்மதி இல்லை. 


இப்படி எத்தனையோ ‘இல்லை’கள். காஷ்மீர் மக்களுக்கு ஒரு நல்ல நாளும் இல்லை. நல்ல ஒரு பெருநாளும் இல்லை. எல்லா நாட்களும் அவர்களுக்கு முகாரி ராகங்களைப் பாடும் பொல்லாத நாட்கள்தான்.

ஒரு செருகல். அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்ற நிலை. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஜெய்ஸ்-இ-முகமது இயக்கம் என்பது ஒரு தீவிரவாத இயக்கம். பாகிஸ்தானைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த இயக்கம் கடந்த 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமா எனும் இடத்தில் ஒரு தாக்குதலை நடத்தியது. அதில் 40 இந்தியப் போர் வீரர்கள் பலியானார்கள். 


அதற்குப் பதிலடியாக 2019 பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப் படையின் 12 மிராஜ் போர் விமானங்கள் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கின.

இந்தத் தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் 300 பேர் வரை பலியானதாக ஊடகங்கள் கூறுகின்றன. இப்படித்தான் போராட்டங்கள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்தப் போராட்டங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு காஷ்மீர் பிரச்சினையின் உண்மையான பின்னணியை அலசிப் பார்ப்போம். அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


சரி. நேராக விசயத்திற்கு வருகிறேன். காஷ்மீரைப் பங்கு போட இப்போது மூன்று நாடுகள் துடியாய்த் துடித்துக் கொண்டு நிற்கின்றன. அந்தத் துடிப்புகளில் ஒரு விளைவுதான் அண்மையில் நடந்து முடிந்த பாலகோட் வான் தாக்குதல்.

காஷ்மீரைப் பங்கு போட நினைக்கும் நாடுகளின் இராணுவ அணிவகுப்புகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். என்னையும் பார் என் அழகையும் பார் என்று ஆளாளுக்குப் பீரங்கிகளை வரிசை வரிசையாய் அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றன. அதனால் பாதிக்கப் படுபவர்கள் எல்லாம் காஷ்மீர் பாமர மக்கள் தான்.

கிழக்கே சீனா. மேற்கே பாகிஸ்தான். தெற்கே இந்தியா. ஆக மொத்தம் முப்பது முக்கோடி பதுங்கல்கள். பாய்ச்சல்கள். அதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று உலகமே முகத்தை மூடிக் கொண்டு சிரிக்கிறது. பாவம் காஷ்மீர் மக்கள்.


அதற்கு முன் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். அப்போதுதான் உங்களுக்கும் ஓர் உண்மையான விசயம் தெரியும். அசோகர் காலத்தில் இருந்து 1200-களில் மார்க்கோ போலோ இந்தியாவிற்கு வந்த காலம் வரையில்… காஷ்மீர் சுத்தமான சுதந்திரமான ஓர் அழகுப் பூங்காவாகத்தான் மலர்ந்து மணம் பரப்பி வந்தது.

வருகிறவர் போகிறவர்களுக்கு எல்லாம் மனசு கோணாமல் மாமியார் வீட்டு உபசரணைகளைச் செய்தும் வந்தது. மகா அலெக்ஸாண்டர்கூட போய்ப் பார்க்க ஆசைப்பட்ட ஒரு புண்ணிய பூமியாகவும் விளங்கியது. சொன்னால் நம்புங்கள்.

1580-ஆம் ஆண்டுகளில் காஷ்மீரின் அழகில் மயங்கிப் போன அக்பர் மகாராஜா அதைத் தன் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அது வேறு கதை. அதன் பின்னர் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக மொகலாய அரசர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தார்கள். தாஜ்மகாலைக் கட்டுவதற்கு முன் ஷாஜகான் கூட தன் மனைவி மும்தாஜை அழைத்துக் கொண்டு காஷ்மீருக்குப் போய் தங்கி வருவது வழக்கம். 


கி.பி. 1757-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைந்த காலக் கட்டம். ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாகக் காஷ்மீர் அறிவிக்கப்பட்டது. காஷ்மீருக்கு அகமது ஷா துரானி (Ahmad Shah Durrani) என்பவர் அரசர் ஆனார்.

அதன் பின்னர் 1819-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய போர் நடந்தது. அதை ஆப்கான் போர் என்று சொல்வார்கள். அந்தப் போரில் ரஞ்சித் சிங் என்கிற சீக்கிய மன்னர் வெற்றி பெற்றார். காஷ்மீர் அவருடைய ஆட்சியின் கீழ் வந்தது.

சீக்கியர்களின் கைக்கு காஷ்மீர் வந்துவிட்ட காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்து விட்டார்கள். சூடம் கொளுத்தி சாம்பிராணி போட்டு சாமிவிளக்கை எல்லாம் ஏற்றி வைத்து நல்லபடியாகச் சுரண்டல் வேலைகளைத் தொடங்கி விட்டார்கள்.

இந்தியாவின் செல்வங்களை இங்கிலாந்திற்குக் கப்பல் கப்பலாக அனுப்பிக் கொண்டும் இருந்தார்கள். தீபம் அணைவதற்குள் அவர்களின் பார்வை பஞ்சாப் பக்கம் திரும்பியது. 


வட இந்தியாவை ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருவதைப் பார்த்த சீக்கியர்கள் அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். பல இடங்களில் சண்டைகள் கலகங்கள். பின்னர் சின்னச் சின்னப் படைகளாக இருந்த சீக்கியர்கள் ஒன்றாகத் திரண்டு ஒரு பெரிய படையை உருவாக்கிக் கொண்டார்கள்.

அந்தச் சீக்கியப் படைகள் உயிர் கொடுத்துப் போராடின. ஆனால் ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு முன்னால் சீக்கியர்களின் கத்திமுனைகள் எடுபடவில்லை. சீக்கியப் படைகள் தோல்வி அடைந்தன. அத்துடன் சீக்கியர்களின் காஷ்மீர் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. 

ஆங்கிலேயர்கள் பீரங்கிகளைப் பயன்படுத்தப்படாமல் இருந்து இருந்தால் இந்தியாவின் பெரும்பகுதி சீக்கியர்களின் ஆளுமையின் கீழ் வந்து இருக்கலாம். இந்தியாவின் வரலாறும் வேறு மாதிரி பயணித்து இருக்கலாம்.



இப்போது பாகிஸ்தான் என்று அழைக்கிறார்களே அந்த நாட்டின் பெரும்பகுதிகள் அப்போது சீக்கியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தவை. சீக்கியர்களின் தோல்வியினால் அந்தப் பாகிஸ்தானிய நிலம் அப்படியே ஆங்கிலேயர்களிடம் போய்ச் சேர்ந்தது. பற்றாக்குறைக்குக் காஷ்மீரும் ஆங்கிலேயர்களின் பார்வையின் கீழ் வந்தது.

சீக்கியப் படைகள் தோல்வி அடைந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சீக்கியர்கள் மீது ஆங்கிலேயர்களுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கவே செய்தது. அதனால் முன்பு சீக்கியர்களின் அமைச்சரவையில் பழைய அமைச்சராக இருந்த குலாப் சிங் (Gulab Singh) என்பவரையே ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக ஆங்கிலேயர்கள் நியமித்தார்கள். அதற்கும் இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது.

வட இந்தியாவில் சீண்ட முடியாத சிங்கமாக இருந்தவர்தான் ரஞ்சித் சிங்  (Maharaja Ranjit Singh). இவரைத் தோற்கடிக்க குலாப் சிங்தான் ஆங்கிலேயர்களுக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தார். அதற்கு நன்றிக் கடனாகத்தான் குலாப் சிங்கிற்குக் காஷ்மீர் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டது. ஆக இப்படித் தான் காஷ்மீர் பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் கொண்டு வரப்பட்டது.




அதன் பின்னர் நடந்தது எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம். ஆங்கிலேயர்களிடம் குலாப் சிங் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டார். அது ஒரு வகையான விசுவாசத்தனம் என்றுகூட சொல்லலாம்.

அந்தக் குழைவுத்தனம் ஆங்கிலேயர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. குலாப் சிங் பற்றி சில சுவராசியமான செய்திகள். பதிவு செய்யாவிட்டால் தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஊறுகாய் இல்லாமல் போனது மாதிரி ஆகிவிடும்.

குலாப் சிங் என்ன செய்தார் தெரியுமா. யானைகளை வைத்து புலிகளைப் பிடித்து வருவது. பிடித்து வந்த புலிகளைக் கூண்டுக்குள் போட்டு அடைத்து வைப்பது. சாப்பாடு கொடுக்காமல் பல நாட்களுக்குப் பட்டினி போடுவது.

அப்புறம் வெள்ளைக்காரர்களைப் புலி வேட்டைக்கு அழைப்பது. செத்தும் சாகாமல் விழி பிதுங்கிப் போன அந்தப் புலிகளைக் கூண்டுக்குள் இருந்து வெளியே திறந்து விடுவது. அப்புறம் அவற்றைச் சுட்டு வீழ்த்துவது. 




ராஜா ஐந்து புலிகளைச் சுட்டுச் சாய்த்து விட்டதாகச் செய்திகள் அந்தர்புரத்திற்குப் பறக்கும். ராஜாவின் அழகைப் பார்க்க அந்தர்புரத்து அழகுராணிகள் ஏங்கித் தவிப்பார்கள்.

அப்புறம் அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளை வெள்ளைக்காரர்கள் படம் பிடித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்து வீரவசனம் பேசுவார்கள். இதுதான் குலாப் சிங் செய்து வந்த அரிய பெரிய சாகசக் காரியங்களில் ஒன்று.

தீராத விளையாட்டுப் பிள்ளையின் வீராதி வீரச் செயல். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷமான ஆவணங்கள்.

அது எல்லாம் பெரிசு இல்லீங்க. இன்னும் ஒரு விசயம் இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆங்கிலேயப் பெரிசுகளுக்கு வேண்டும் போது எல்லாம் காஷ்மீரில் கிடைக்கும் இளம் பெண்களைக் கடத்தி வந்து அந்தப் பெரிசுகளுக்குக் கன்னிகாதானம் செய்வது. 




பெரிசு என்றால் நாற்பது ஐம்பது வயசு என்று நினைக்க வேண்டாம். எண்பதைத் தாண்டிப் போய் இங்கிலாந்தில் இருந்து கப்பல் ஏறி வந்த பழசிலும் பழசுகள். இருந்தாலும் அவர்கள் காஷ்மீரில் பற்கள் கொட்டிப் போன இளசுகள். எழுதவே மனசு கொஞ்சம் கஷ்டப் படுகிறது. இதைச் செய்ததும் நம்ப குலாப் சிங்தான்.

இங்கே கதைக்குள் இன்னும் ஒரு கதையும் வருகிறது. குலாப் சிங்கிற்கு எத்தனை மனைவிகள் என்று அவருக்கே தெரியாதாம். அந்தர்புரத்தில் சமயங்களில் எண்ணிப் பார்க்கும் போது அவருடைய கணக்கு தவறிப் போகுமாம். ஒருமுறை ராணிகளின் தலைமைராணி கணக்குப் போட்டு 348 என்று கணக்குச் சொன்னாராம். 




அப்படி என்றால் இன்னும் 17 பேர் எங்கே போனார்கள் என்று குலாப் சிங் தாவிக் குதித்துச் சண்டை போட்டதாகவும் கேள்வி. அப்போது மனைவிகள் குளித்துக் கொண்டு இருந்ததாகச் செய்தி வந்ததும் குலாப் சிங் அடங்கிப் போனாராம்.

“ஏங்க தெரியாமல் தான் கேட்கிறேன். ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் பேர் போட எவ்வளவோ சிரமப் படுகிறார். சமயங்களில் முடியாமல் ததிங்கினத்தோம் தாளம் போட வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது. ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். ஆனால் இந்த குலாப் சிங் என்னடா என்றால் 365 மனைவிகளில் ஒன்று இரண்டு குறைந்ததும் தகராறு பண்ணி இருக்கிறாரே. தலை சுற்றிப் போகிறது.

சரி. நமக்கும் அந்த மாதிரி பெரிய இடத்து விசயம் எதுவும் வேண்டாங்க. நம்ப கதைக்கு வருவோம். 




பர்மா, நேப்பாளத் நாடுகளில் இருந்து நவரத்தினங்கள் கொண்டு வரப்பட்டன. அவை ஆங்கிலேய மேல்தட்டுப் பெண்களுக்கு அன்பளிப்புகள் செய்யப்பட்டன. தவிர பொன்னும் பொருளும் அந்தப் பெண்களுக்கு வாரி இறைக்கப் பட்டன. இப்படியே தானம் செய்து குலாப் சிங் வெள்ளைகாரர்களை ஒரு வழி பண்ணிவிட்டார். அதன் பிறகு நடந்ததைப் பாருங்கள்.

குலாப் சிங்கிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் 1846 மார்ச் 15-இல் ஓர் உடன்படிக்கை எழுதப்பட்டது. அதன்படி குலாப் சிங் 75 இலட்சம் ரூபாய்க்கு காஷ்மீரை அப்படியே மொத்தமாக ஆங்கிலேயர்களிடம் இருந்து ஒரு விலைக்கு வாங்கிக் கொண்டார்.

பிரான்ஸில் நெப்போலியன் முடிசூட்டிக் கொண்டது தெரியும் தானே. அந்த மாதிரி ஒரு நல்ல நாள் பார்த்து குலாப் சிங்கும் தன்னைக் காஷ்மீர் அரசராகப் பிரகடனம் செய்து கொண்டார். அப்புறம் தனக்குத் தானே முடி சூட்டியும் கொண்டார். அந்த வகையில் காஷ்மீர் கடைசியில் டோக் ரா எனும் சீக்கிய இனத்தவர்களின் கைகளுக்குள் வீழ்ந்தது.

காஷ்மீர் வரலாற்றுத் தொடர்ச்சி நாளை இடம் பெறும். 

(தொடரும்)




சான்றுகள்

1. Bamzai, P. N. K (1994), Culture And Political History of Kashmir, M.D. Publications, ISBN 978-81-85880-31-0

2. Rao, Aparna, The Valley of Kashmir: The Making and Unmaking of a Composite Culture? pp. 1–36, ISBN 978-81-7304-751-0

3. Pal, Pratapaditya (1989), Indian Sculpture: 700–1800, University of California Press, ISBN 978-0-520-06477-5

4. Rai, Mridu (2004), Hindu Rulers, Muslim Subjects: Islam, Rights, and the History of Kashmir, Princeton University Press, ISBN 978-1-85065-661-6

5. Schofield, Victoria (2010), Kashmir in conflict: India, Pakistan and the unending war, I. B. Tauris., ISBN 978-1-84885-105-4

பத்துமலை முருகன் மலைக் கோவில்

பத்துமலை முருகன் மலைக் கோவிலும் தமிழர்களும்
(நன்றி: மதியழகன் முனியாண்டி)

1. பத்துமலை முருகன் மலைக் கோவிலின் பொதுவான வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. அதாவது தம்புசாமி பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி; மலையின் உச்சியில் உள்ள குகையில் தாம் குடிக் கொண்டிருப்பதாகவும், அங்கே தன்னை வந்து மக்கள் தரிசிக்க வேண்டும் எனவும் கனவில் கூறவும்; தம்புசாமி பிள்ளையும் பத்துமலையில் முருகன் கோவில் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது தல வரலாறு



2. இது தவிர மேலும் சில வரலாற்று குறிப்புகள் உண்டு. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தம்புசாமி பிள்ளை கோலாலம்பூரில் நீதிமன்ற மொழிப் பெயர்ப்பாளராக ஜே.ஜி. டேவிட்சன் என்கிற ஆங்கிலேயருக்கு உதவியாக 1870-களில் கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.

3. இங்கு குடியிருந்த இந்திய மக்களுக்கு வழிப்பாட்டு தலம் ஒன்றை அமைக்க முயற்சிகள் எடுத்தார். ஆரம்ப காலத்தில் கோலாலம்பூர் கிள்ளான் ஆற்றாங்கரை ஓரத்தில் (செண்ட்ரல் மார்கெட் பின்புறம்) ஒரு சிறிய மாரியம்மன் கோவிலைக் கட்டிக் கொண்டார்கள்.

4. பிறகு 1875-ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தான் அனுமதி கொடுக்க, ஜாலான் பண்டாரில் (Jalan Bandar) கோவில் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு கோலாலம்பூர் ரயில்வே ஆணையம் நிலம் ஒதுக்கி கொடுத்தது. கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலை அந்த நிலத்தில் தம்புசாமி பிள்ளை கட்டி எழுப்பினார். அந்த கோவிலையும், கோவில் சார்ந்த நிலங்களையும் இந்தியர் குடியிருப்பு நிலம் என சிலாங்கூர் சுல்தானால் பிரகடனம் செய்யப்பட்டது.

5. கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதற்கு தம்புசாமி பிள்ளையின் தலைமையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் உருவானது.

6. தம்புசாமி பிள்ளையின் தலைமையில் செயல்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் பெரும் முயற்சியில் பத்துமலையில் முருகன் கோவில் 1890-ஆம் ஆண்டில் எழுப்பப் பட்டது. முதல் தைபூசத் திருவிழா 1891-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

7. 1902-ஆம் ஆண்டு தம்புசாமி பிள்ளை இறந்த பிறகு, அபோதைய ம.இ.கா. தலைவர் ஜான் திவி தலைமையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் இயங்கியது. இந்த தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் மூன்று கோவில்கள் இருந்தன.

* கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்,

* பத்துமலை முருகன் மலைக் கோவில்,

* கோர்ட் மலை புள்ளையார் கோவில்.

8. இதற்கிடையில் 1928-ஆம் ஆண்டில் நிர்வாகத்தினரின் சிக்கலைத் தீர்ப்பதற்கு 5 செப்டம்பர் 1928-ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு, சிலாங்கூர் சுப்ரிம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

9. இரண்டு வருட வழக்குக்கு பின், 28 நவம்பர் 1930-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் ஆலயம், பத்துமலை முருகன் கோவில், கோர்ட் மலை புள்ளையார் கோவில் மூன்றும் கோலாலம்பூர் மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் கீழ் செயலபடும் என்றும், இது நீதிமன்ற நேரடி பார்வையின் கீழ் இருக்கும் என்று முடிவானது.

10. அதன் பிறகு 1930 முதல் இன்றுவரை இந்த தேவஸ்தானம் நீதிமன்ற பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, AGM நடத்தி, தேர்தல் வைத்து, கணக்கு அறிக்கைகளை Attorney General அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் ஏதும் முறைகேடுகள் நடந்து உள்ளதாக அறிந்தால் தலைமை நீதிபதி அலுவலகத்தில் முறையிடலாம்.

11. மாரியம்மன் தேவஸ்தானம் ROS என்கிற சங்க பதிவிலாகவில் பதிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சங்க பதிவிலாகவுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து கணக்கறிக்களை, ஆண்டு பொதுக்கூட்ட மினிட்ஸ்கள், தேர்தல் விபரம், செயலவை உறுப்பினர் விபரம் அனைத்தையும் Attorney General அலுவலகத்தில் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சட்டம்.

12. இதில் முறைகேடுகள் இருப்பதாக யார் புகார் கொடுக்கலாம்? தேவஸ்தான உறுப்பினர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். தேவஸ்தான உறுப்பினர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? தேர்தல் எப்படி நடத்தப்பட்டு தலைவர் மற்றும் ஏனைய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்?

13. இந்தப் பகுதியை நீங்கள் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் படிக்க வேண்டும். சில பெயர்களையும் அமைப்புகளையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தேவஸ்தானத்தின் நிர்வாக அமைப்பு முறை புரியும்.

14. மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் உபயக்காரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு உபயக்காரர்கள் கமிட்டியில் இருந்து மூன்று பேர்களை தேர்தெடுத்து தேவஸ்தான உறுப்பினர்கள் குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள். அந்த மூவரில் தலைவராக இருப்பவர்களை நாட்டாமை என்பார்கள்.

15. 1970-ஆம் ஆண்டுகளில் 21 உயக்காரர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு உபயக்காரர்கள் கமிட்டியில் இருந்து மூவர் விதமாக 63 பேர்கள் தேவஸ்தானத்தில் உறுப்பினர்களாக இருப்பாரகள். தேவஸ்தானத்தின் மொத்த உறுப்பினர்கள் 63 பேர்கள்தான். முன்பு இவர்களை 63 நாயன்மார்கள் என்றும் அழைத்தார்கள்.

16. தற்போது 24 உபயக்காரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் 72 உறுப்பினர்கள். இந்த 72 பேரில் ஒருவர்தான் தலைவராக வர முடியும். இந்த 72 பேர்கள் ஓட்டு போட்டு செயலவைக் குழுவினரையும் அறங்காவலர்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.

17. இந்த உபயக்காரர்கள் கமிட்டியில் நிறைய உறுப்பினர்கள் இருப்பார்கள். தேவஸ்தானத்தில் இவர்களுக்கு ஒரு AGM நடத்தி மூன்று உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள். முன்னம் சொன்னது போல், அந்த மூன்று உறுப்பினர்களுக்கு தலைவராக ஒரு நாட்டாமை இருப்பார்.

18. யார் இந்த உபயக்காரர்கள்? முன்பு காலத்தில் பத்துமலை கோவிலுக்கும்; மாரியம்மன் கோவிலுக்கும் திருவிழா சமயங்களில் கோவிலில் உபயம் எடுத்து செய்கிறவர்கள் உபயக்காரர்கள். இவர்கள் பொது மக்களிடமிருந்து பணத்தை திரட்டி உபயம் செய்வார்கள். மீதம் உள்ள பணத்தை கோவிலிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

19. அந்தக் காலத்தில் டெலிகோம், டி.என்.பி, வாட்டர் வொர்க்ஸ் (Syabas-Air Selangor), ரயில்வே யூனியன் போன்ற பெரும் நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் அவர்களின் நிருவனங்களில் பெயரில் உயபம் வழங்கினார்கள்.

20. டி.என்.பி போன்ற நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்களின் சேமிப்பு நிதியில் கட்டிடம் வாங்கி; அதில் இருந்து வரும் வாடகைப் பணத்தை இப்போது வரை கோவிலுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்று சில தகவல்கள் சொல்லப்படுகிறது. அதே போல் சபாஷ் நிருவனத்தில் வேலை செய்த இந்தியர்களின் சேமிப்பு நிதியிலிருந்து வரும் வட்டி பணத்தை கோவிலுக்கு கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காலத்தில் ஆரம்பித்த சில உபயக்காரர்களின் நிதிகள் இன்றும் தொடர்ந்து கோவிலுக்கு போய் கொண்டிருப்பதாக மேலும் தகவல்கள் சொல்கிறது.

21. தற்போது 24 உபயக்காரர்கள் இருக்கிறார்கள். பொறுமையாக இந்த உபயக்கார்களின் பெயர்களை படித்து பார்க்கவும்.

• சித்திரா பருவ உபயம்(தட்சிணத்தார்கள்)


• வைகாசி விசாக உபயம்(தேசிய மிசார தென்னிந்திய இந்துக்கள்)


• ஆனித் திருமஞ்சன உபயம்(பொது மராமத்து இந்துக்கள்)


• \ஸ்ரீ விநாகர சதுர்த்தி(டெலிகோம் இந்துத் தொழிலாளர்கள்)


• ஆவணி மூல உபயம்


• ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உபயம்


• ரயில்வே எஞ்சின்செட் காரேஜ்செட் உபயம்


• பால்காரர்கள் உபயம்

• ஆசாரிமார்கள் உபயம்


• எஞ்சினியரிங் புகைரதப் பகுதி தொழிலாளர்கள் உபயம்


• எண்ணை வியாபாரிகள் உபயம்


• வியாபாரிகள் உபயம்


• நகரவாழ்வு மக்கள் உபயம்


• ரைட்டர்கள் சரஸ்வதி உபயம்


• காடிக்காரர்கள் அம்பு போடும் உபயம்


• மேசன்மார்கள் உபயம்


• சுண்ணாம்புக் காளவாயிலுள்ளவர்கள் ஊஞ்சல் உபயம்


• கோவில் அலுவலர்கள் விடையாத்தி உபயம்


• சந்த சஷ்டி உபயம்


• திருக்கார்த்திகை உபயம்


• திருவாதிரை உபயம்


• மாசி மகம் உபயம்


• ஸ்ரீ ராம நவமி உபயம்


• பங்குனி உத்திர உபயம்

22. இதில் தேவஸ்தானத்தின் தலைவர் நடராஜா மாசி மக உபய நாட்டாமையாக இருக்கிறார். முன்பு இவர் சபாஷ் (Selangor Water works-Syabas) நிருவனத்தில் வேலை செய்த போது; அந்த நிருவனத்தின் சார்பில் நடந்த உபயக் கமிட்டியில் மூவரில் ஒருவராகத் தேவஸ்தானத்தில் உறுப்பினராக இணைந்தார்.

23. வள்லல் சிதம்பரம், வள்ளல் கோடிவேல், ராஜா பி.பி.டி, சுப்பையா போன்றவர்களும் தேவஸ்தான தலைவராக இருந்து உள்ளார்கள். தற்போதைய தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜா எப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற விபரம் சரிவர தெரியவில்லை.

24. பல ஆண்டு காலமாக தேவஸ்தானத்தின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ நடராஜா பதவி விலக வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பத்துமலை கோவில் சமூதாய சொத்து. அது சமூதாயத்தின் அடையாளம். அது பொது மக்களால் பொதுமக்களுக்கு உருவாக்கப்பட்டு, பொதுமக்காளால் நிருவாகிக்கப்பட்டு வந்தது. பத்துமலை தொடர்ந்து பொதுமக்களின் சொத்தாக இருக்க வேண்டும். அந்த கோவிலின் கணக்கறிக்கையைப் பொது மக்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று பல காலமாகப் பலரும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் வருகிறார்கள்.

25. டான்ஸ்ரீ நடராஜாவைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உபயக்காரர்கள் ஒன்றுகூடி முயற்சி எடுக்க வேண்டும். இல்லை என்றால் உபயக்காரர் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்கள் Attorney General அலுவலகத்தில் முறையிடலாம்.

26. தற்போதைய நிலவரப்படி 72 உறுப்பினர்கள் கோவில் தேவஸ்தானத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் ஓட்டு போட்டு கோவில் தேவஸ்தான தலைவரைத் தேர்தெடுக்கிறார்கள். இந்த உபயக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்களிடம் முறையிட வேண்டும்.

27. எப்படி உபயக்காரர்கள் கமிட்டியில் உறுப்பினர்கள் ஆவது? உபயம் நடக்கும் போது, அந்த உபயத்திற்கு 50 ரிங்கிட் அல்லது அதற்கும் மேல் கொடுத்து ரசிது வாங்கினால் நீங்கள் உறுப்பினர்கள். பிறகு அந்த கமிட்டி உறுப்பினர் என்கிற அடிப்படையில் நீங்கள் தேவஸ்தானத்தின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்கள். நீங்கள் கேள்விகள் எழுப்பலாம். உங்கள் கமிட்டியில் புகார் கொடுக்கலாம். அந்த கமிட்டி மற்றும் நாட்டாமை Attorney General அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம்.

28. டி.என்.பி, டெலிகோம், ரயில்வே, சபாஷ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள் தாராளமாக உபயத்துக்கு பணம் கட்டி உறுப்பினர்கள் ஆகலாம். யாரும் தடுக்க முடியாது.

29. நகரவாழ் மக்கள் உபயத்திற்கு செந்தூல், பத்துகேவ்ஸ் பகுதிகளில் வாழும் மக்கள் பணம் செலுத்தி உபய உறுப்பினர்கள் ஆகலாம். இந்த உபயத்தில்தான் தற்போது நடராஜா, ஏ.டி.குமாரராஜா போன்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

30. டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் வண்டிக்காரர்கள் உபயத்தில் பணம் செலுத்தி உறுப்பினர்கள் ஆகலாம்.

31. பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முதலில் அதிகமாக பொது மக்கள் இந்த உபயத்தில் உறுப்பினர்களாக இணைந்துக் கொள்ள வேண்டும். பொது மக்கள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும். பிறகு உபய கமிட்டிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

32. இல்லை என்றால் பொது மக்கள், பொது மக்களால் தொடங்கப்பட்ட உபய கமிட்டிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் டெலிகோம், டி.என்.பி., சபாஷ், ரயில்வே, நகர மக்கள் உபயம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது.

33. இப்படி சாலையில் நின்று கத்திக் கொண்டிருப்பதாலும்; கூட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பதாலும் எதுவும் நடக்காது. அரசு சார்புள்ள டி.என்.பி., டெலிகோம், சபாஷ், ரயில்வே போன்ற நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் ஓட்டு போட்டு பாரிசான் ஆட்சியை மாற்றி; பக்காத்தான் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். மக்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள்.

34. மக்கள் உபயக்காரர்கள் குழுவில் உறுப்பினர்கள் ஆவதை யாரும் தடுக்க முடியாது. தடுக்கும் அதிகாரமும் கிடையாது. உறுப்பினர்களாக விரும்பி உபயப் பணம் செலுத்துவதை யாரும் முடியாது என தடுக்க முடியாது. அப்படி தடுத்தால் அது குற்றம். தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். கேள்விகள் கேட்கலாம்.

34. தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கீழ் இருக்கிறது. அதனால் கோவிலைப் பற்றியும், கோவில் நிர்வாகத்தைப் பற்றியும் எழுதும் எழுதக் கூடாது; பேசக் கூடாது என்று சிலர் சொல்வதையும் பேசுவதையும் கேட்க முடிகிறது.

35. இது ஜனநாயக நாடு. யாரையும் யாரும் கேள்விகள் கேட்கலாம். கேள்விகள் எழுப்பலாம். விமர்சிக்கலாம். தவறு கிடையாது. தகவல்கள் குறித்து கேள்விகள் எழுப்புவதையும் விமர்ச்சிப்பதையும் சட்டம் தடுக்காது. சட்டம் தண்டிக்காது. ஆனால் நேரடி குற்றசாட்டு வைக்க கூடாது.

36. லெபோ அம்பாங், பெட்டாலிங் ஸ்ரிட் சாலைகளில் கோவிலுக்கு சொந்தமான கட்டடங்கள்; கடைகளை விற்று, அந்த பணத்தை நடராஜா முறைக்கேடாக பயன்படுத்துகிறார் என்று எழுதுவதோ பேசுவதோ தவறு. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி. நடராஜா வழக்கு தொடுக்கலாம். எழுதியவர்கள் தண்டிக்கப்படலாம்.

37. கோவிலுக்குச் சொந்தமான சில சொத்துக்கள் லெபோ அம்பாங்; பெட்டாலிங் ஸ்ரிட் பகுதியில் இருந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. அந்த சொத்துக்கள் என்ன ஆயின என்று கேள்விகள் எழுப்பலாம்.

38. ஆண்டுக்கு 1 மில்லியனுக்கும் மேல் தேவஸ்தானத்திற்கு வருமானம் வருகிறது. தேவஸ்தானத்தின் சொத்துகளின் வாடகை பணம் மட்டும் பல லட்சம் வருகிறது. அந்தப் பணத்தை நடராஜா முறைகேடாகப் பயன்படுத்துகிறார் என்று எழுதக் கூடாது. சட்டம் உங்கள் மீது பாயும்.

39. தேவஸ்தானத்திற்கு 1 மில்லியனுக்கும் மேல் வருமானம் வருவதாக தகவல்கள் சொல்கின்றன. உண்மையா என்று உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள கேள்விகள் எழுப்பலாம். சட்டம் தண்டிக்காது.

40. தேவஸ்தானத்திற்கு 1 பில்லியன் (20,000 லட்சம்) சொத்துகள் இருப்பதாக The malaysian insider, The Edge business போன்ற இணைய ஊடகங்கள் முன்பு செய்திகள் வெளியிட்டிருந்தன. அந்தச் சொத்துகளை நடராஜா அபகரித்துக் கொண்டார் என்று எழுதக் கூடாது. தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு என்ன என்று கேள்விகள் எழுப்பலாம். அதன் நிலைப்பாட்டை விமர்சிக்கலாம்.

41. தேவஸ்தானத்தைப் பற்றி யாரும் பேசக் கூடாது; விமர்ச்சிக்கக் கூடாது என்பது எல்லாம் மக்களைப் பயமுறுத்தும் செயல். இது சட்டப்படி குற்றம். யாரும் யாரையும் பயமுறுத்த முடியாது. கேள்விகள் எழுப்புவதை யாரும் தடுக்க முடியாது. விமர்சனங்கள் வைக்கலாம். சட்டப்படி குற்றம் கிடையாது.

43. பூச்சோங் முரளி மற்றும் தமிழ் மலர் மீது வழக்கு தொடரப்பட்டது என்பது நேரடி தாக்குதல்களுக்கான வழக்கு. நடராஜா என்கிற தேவஸ்தானத்தின் தலைவரை நேரடியாக குற்றம் சாட்டினார்கள். முகநூலிலும் பொது மக்கள் மத்தியிலும் அவதூறு பரப்புவதற்கு காரணமாக இருந்தார்கள். இதனால் அந்த வழக்கில் நடராஜா வெற்றி பெற்றார். ஆனால் கேள்விகள் கேட்கலாம். விமர்சனம் வைக்கலாம். யாரும் நம்மீது வழக்கு போட்டு தண்டிக்க முடியாது.

43. அதர்மம் பலமாக இருக்கிறது என்றால் தர்மம் அதைவிட பலமாக இருக்கும். தர்மத்தின் மரணப் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இந்த உலகம் எத்தனையோ மாற்றங்களைப் பார்த்துள்ளது. தேவஸ்தானத்தின் மாற்றத்தையும் பார்க்க முடியும். மாற்றங்கள் நடக்கவில்லை என்றால் இந்த உலகம் இயங்கவில்லை என்று பொருள். உலகத்தின் இயக்கத்தை யாராலும் நிறுத்த முடியாது. இதை உணராமல் பலரும் பல தவறுகளைச்ச் செய்து வருகிறார்கள். கடைசியில் அந்த குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.

04 மார்ச் 2019

உலகின் மிகச்சிறிய குழந்தை

ஏறக்குறைய கால் கிலோ அளவில் எடை. அதாவது 268 கிராம். அப்படி பிறந்த ஒரு குழந்தை உயிர் பிழைத்தது ஓர் உலக அதிசயம். உலகின் மிகச்சிறிய குழந்தை. ஆண் குழந்தை. ஜப்பானில் பிறந்த குழந்தை.


Tokyo's Keio University Hospital மருத்துவமனையில் 2018 ஆகஸ்ட் மாதம் அவசர பிரிவில் சிசேரியன் மூலம் பிறந்த அந்தக் குழந்தை மிக மிகச் சிறியதாக இருந்தது.

கைக்குள் ஒரு பிடியில் அடங்கிவிடும். அந்த அளவுக்குத் தான் குழந்தை இருந்தது. உலக அதிசயம் அல்லவா. அதனால் பத்திரமாகப் பாதுகாத்து வந்தார்கள்.


பிறந்தது முதல் கடந்த 2019 பிப்ரவரி மாதம் வரை அந்தக் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தது. 24 வார கருவாக இருந்த போது பிரசவிக்கப் பட்டது.

இப்போது ஐந்து மாதங்களுக்கு பின்னர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை மூலம் தேறி விட்டது. தற்போது அந்தக் குழந்தை 3.2 கிலோ எடையுடன் உள்ளது. உணவும் ஊட்டப் படுகிறது.


முன்பு 274 கிராம் அளவில் ஜெர்மனியில் பிறந்த குழந்தை ஒன்றுதான் மிகச் சிறியதாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெர்மனியில் மேலும் ஒரு  பெண் குழந்தை. 252 கிராம் எடையுடன் பிறந்து உயிர் பிழைத்தது.


பொதுவாக ஒரு கிலோ எடைக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில் 90% உயிர் பிழைத்துவிடும். ஆனால் 300 கிராமுக்கும் கீழ் பிறக்கும் குழந்தைகளில் 50% மட்டுமே உயிர் பிழைக்கின்றன. எடையைக் கவனியுங்கள். 300 கிராம். கால் கிலோ. நம் கைக்குள் அடக்கி விடலாம்.


இந்த மாதிரி மிகவும் சின்னதாகப் பிறக்கும் குழந்தைகளைப் பொருத்த வரை பெண் குழந்தைகள் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால் ஆண் குழந்தைகள் பிழைக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கு மருத்துவ நிபுணர்களால் சரியான விளக்கம் கூற முடியவில்லை. 


ஆண் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சி மெதுவாக இருக்கும். பலம் குறைவு. நோய்களை எதிர்க்கும் ஆற்றலும் குறைவு. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளுக்குச் சக்தி குறைவு. பெண் குழந்தைகளுக்கு சற்று அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் தமிழர்கள் வந்தேறிகள்

கோவையில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவை மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த தனமணி வெங்கட் என்ற பெண் உறுப்பினர்
 
தனமணி வெங்கட்
தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள்; தமிழர்கள் லெமூரியா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என தமிழர்களை இழிவாகப் பேசி இருக்கிறார்.

அதற்குப் பதிலடி கொடுத்த கவிஞர் தாமரை இது தமிழர் மண்... ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறி இருக்கிறார். 


கவிஞர் தாமரை
இது தமிழர் மண்; தமிழே இங்கு மொழி; தமிழ்த் தேசியமே எங்கள் அரசியல்; *தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம்*. இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என கவிஞர் தாமரை ஆவேசம் காட்டியுள்ளார்.


நெடுநாட்களாக திரைப்படத் துறையில் ஆண் கவிஞர்களே கோலோச்சி வந்த சூழலில், ஆபாசம் – அயல்மொழி கலப்பின்றி பெண்ணிய உணர்வுப் பாடல்களை எழுதி தேர்ந்தவர் கவிஞர் தாமரை.  தமிழ்த் தேசிய சித்தாந்தத்தின் மீது பற்று கொண்டவர். அத்தகைய தாமரை, காட்டமான எதிர்வினை ஆற்றி இருக்கிறார்.


“தமிழகத்திலேயே தமிழர்களை வந்தேறிகள் என்றும், தெலுங்கர்கள் தான் மண்ணின் மைந்தர்கள் என்றும் ஓர் அரசியல்வாதியால் பேச முடிகிறது என்றால் திராவிட தேசியம் தனக்கான கடைசி ஆப்பையும் வைத்துக் கொண்டது என்று பொருள்.

தஞ்சை அரண்மனை நாயக்கர்கள்

தஞ்சை அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப் பட்டது. நாயக்க மன்னர் சேவப்ப நாயக்கரால் தொடங்கப் பட்டது. இறுதியில் விஜயராகவ நாயக்கரால் முடிக்கப் பட்டது.


தஞ்சை நாயக்கர்கள் என்பவர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ மண்டலத்தை ஆட்சி செய்து வந்தவர்கள். முதல் மன்னர் சேவப்ப நாயக்கர். இவர் விஜயநகரப் பேரரசராக இருந்த கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய நண்பர்.


சோழர்களின் ஆட்சி முடிவு அடைந்த பின்னர் தான் நாயக்கர்களின் ஆட்சி வந்தது. 12-ஆம் நுாற்றாண்டில் விஜயநகரப் பேரரசசு உருவான போது விஜயநகரப் பேரரசர்கள் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளுக்கு தங்களின் தளபதிகளை அரசப் பிரதிநிதிகளாய் அமர்த்தி ஆட்சி செய்தனர்.

விஜயநகரப் பேரரசு பலம் இழந்ததும் நாயக்கர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு விஜயநகரப் பேரரசில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். 



செஞ்சி, காளஹஸ்தி, தஞ்சாவூர், மதுரை ஆகிய நகரங்களைத் தலைநகர்களாகக் கொண்டு நாயக்கர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தார்கள். இவர்களின் தாய்மொழி தெலுங்கு.

*தஞ்சை நாயக்க அரசர்கள்*

1532 - 1560 சேவப்ப நாயக்கர்
1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
1600 - 1632 இரகுநாத நாயக்கர்
1633 - 1673 விஜயராகவ நாயக்கர்



பின்னர் 1674-ஆம் ஆண்டில் இருந்து 1855-ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் தஞ்சையை ஆட்சி செய்தார்கள்.