07 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 6




இலங்கையில் ஜே.வி.பி. இயக்கம் என்பது இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஒரு சிங்கள இயக்கம். ஆங்கிலத்தில் ஜனதா விமுக்தி பெராமுனா. (Janatha Vimukthi Peramuna). இந்தக் கட்சியைத் தான் சுருக்கமாக JVP என அழைக்கிறார்கள். 1970 - 80-களில் தேசிய வாதத்தை முன்னெடுத்த ஒரு தீவிரவாத இயக்கம். இந்த இயக்கத்தினால் இலங்கையில் நிறையவே உயிரிழப்புகள்.

இன்றைய நிலையில் மக்கள் விடுதலை முன்னணி (People's Liberation Front) என்று பெயர் மாற்றம் கண்டு உள்ளது. இலங்கை அரசியலில் மூன்றாவது பெரிய சக்தியாக விளங்கி வருகிறது. 1965-ஆம் ஆண்டு ரோகண் விஜயவீரா என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட கட்சி.



ரோகண் விஜயவீரா
சிங்கள மக்களுக்கு இடையே முதன்முதலாக ஓர் ஆயுதக் கிளர்ச்சி நடந்தது. அதை ஜே.வி.பி. முதல் கிளர்ச்சி அல்லது ஜே.வி.பி. முதல் கலவரம் என்று சொல்வார்கள். 1971-ஆம் ஆண்டு நடந்தது. அந்தக் கிளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தவர் ரோகண் விஜயவீரா.

உலகப் புகழ் புரட்சியாளர் சே குவேரா. தெரியும் தானே. அவரின் வழிமுறைகளை ரோகண் விஜயவீரா தீவிரமாகப் பின்பற்றினார். இலங்கையின் அப்போதைய ஏழை  இளைஞர்களை ரோகண் விஜயவீராவின் கம்யூனிசக் கொள்கைகள்  பெரிதும் கவர்ந்தன.

ரோகண் விஜயவீரா, ரஷ்யாவிற்கு மருத்துவம் படிக்கப் போனவர். ஆனால் அங்கே போனவர் ரஷ்யாவின் கம்யூனிசக் கொள்கைகளையே எதிர்ப் பேசியவர். இவரின் அந்த மாறுபட்ட கொள்கையினால் அங்கு இருந்து வெளியேற்றப் பட்டார்.

ரோகண் விஜயவீரா தலைமையில் இரு முறை புரட்சிகள் நடந்து உள்ளன. முதல் புரட்சி 1971-ஆம் ஆண்டு;  இரண்டாவது புரட்சி 1986-ஆம் ஆண்டு.




1989-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது புரட்சியின் இறுதிக் காலக் கட்டத்தில் இராணுவத்தினரால் ரோகண் விஜயவீரா சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போது அவருக்கு வயது 46. ஒன்று மட்டும் உண்மை. இலங்கையின் வடக்கே பிரபாகரனின் தமிழீழப் போராட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது கீழே தெற்கே ரோகண் விஜயவீராவின் சோசலிசப் போராட்டங்களும் உச்சம் பார்த்தன. இருவருமே பெரும் போராட்டவாதிகள்.

ரோகண் விஜயவீராவின் சோசலிசப் போராட்டங்களினால் இலங்கையிலே பல்லாயிரம் சிங்கள உயிர்கள் பலியாகி உள்ளன. ஏறக்குறைய 35,000 பேர் இறந்து இருக்கலாம் என்று சொல்லப் படுகிறது.


இரண்டாவது புரட்சியின் இறுதிக் கட்டத்தில் பெரும்பாலான ஜே.வி.பி. போராட்டவாதிகள் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து சில வடகொரியா ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.

அவற்றின் மூலம் ஜே.வி.பி. போராட்டவாதிகளுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கி வந்ததாக இலங்கை அரசிற்குச் சந்தேகம். அதனால் வடகொரியாவுடன் கொண்டு இருந்த அனைத்து தொடர்புகளையும் இலங்கை துண்டித்துக் கொண்டது. 




இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடித் தூதரக உறவுகள் இதுவரையிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் சீனத் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வழியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மிக அண்மையில் 2017-ஆம் ஆண்டில் நான்கு வட கொரியர்களை இலங்கைக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது.

1970-ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பி. போராட்டங்களுக்கு வட கொரியா உதவி செய்ததாகக் குற்றம் சாட்டிய அதே இலங்கை; 1990-களில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது.

இந்த முறை தமிழீழப் போராளிகளுக்கு ராக்கெட்டுகள்; நீர்மூழ்கிக் கப்பல்கள்; ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதத் தளவாடங்களை வழங்கியதாகக் குற்றச்சாட்டு. அதுவும் பெரிய வரலாறு. இப்போது வேண்டாமே.

சிங்கள ஜே.வி.பி.யினரின் கிளர்ச்சிகள் பிரபாகரனுக்கும் குட்டிமணி தங்கதுரைக்கும் புதிய பார்வையைத் திரட்டிக் கொடுத்தன.

முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் தான் ஜே.வி,பி. தோல்வி கண்டது என்பதே அவர்களின் பார்வை. ஆனாலும் சிங்கள அரசை ஆட்டம் காண வைத்து விட்டார்கள் என்பதும் வேறு ஒரு பார்வை. 

 

ஆக ஒழுங்கான திட்டமிடல் செய்து இருந்தால்; முறையான உரிமைப் போராட்டம் செய்து இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பது பிரபாகரன் கணக்கு. அதை எழுதியும் வைத்து இருக்கிறார்.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிகளுக்குப் பின்னர் தான் ஈழத் தமிழர்களின் மத்தியில் மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்கிற கொள்கையும் தீவிரம் அடைந்தது.

அதன் பின்னர் தங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளை ஓரளவிற்குப் பிரபாகரன் தயாரித்துக் கொண்டார். குண்டுகளையும் சிறிது சிறிதாகத் தயாரிக்கத் தொடங்கினார். ஒரு முக்கியமான விசயம். இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு வரலாற்றுப் பார்வை.

வரலாற்றில் என்ன இருக்கிறதோ அதை மீட்டு எடுத்துப் போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். யாரையும் அல்லது எந்த ஓர் அமைப்பையும் அல்லது எந்த ஒரு நிர்வாகத்தையும் சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் எழுதவில்லை. 




வரலாற்றை வரலாறாகப் பார்ப்போம். வரலாற்றில் உள்ள நல்ல விசயங்களை ஏற்றுக் கொள்வோம். கெட்ட விசயங்களைத் தவிர்த்து விடுவோம்.

ஒருநாள் பிரபாகரனின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. ஓர் அடர்ந்த காட்டில் வெடிமருந்துகளைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தார். அவரின் நண்பர்கள் தங்கதுரையும் சின்னஜோதியும் உடன் இருந்தார்கள்.

அப்போது திடீரென ஒரு குண்டு வெடித்து விடுகிறது. பிரபாகரன் சத்தம் போடுகிறார். அவருடைய காலில் ஒரு பகுதி கருகி விடுகிறது. கொஞ்ச நேரம் வலியால் துடிக்கிறார். நண்பர்களுக்குப் பயம். பிரபாகரனுக்கு என்ன நடந்தது என பதைபதைத்துப் போகிறார்கள். ஆனால் பிரபாகரன் கொஞ்ச நேரத்தில் தரையில் இருந்து எழுகிறார். தன்னுடைய காலை உயர்த்திக் காட்டி சத்தமாகப் பேசுகிறார்.

“பாருங்கள். இனி என் பெயர் கரிகாலன். அப்படியே கூப்பிடுங்கள். என் கால் கருமையாகி விட்டது. இனி நானும் ஒரு கரிகாலன் தான் என்று சொல்கிறார்.

கரிகாலன் என்பவர் மாபெரும் சோழ மன்னன். பிரபாகரனுக்கு கரிகாலன் மீதும் சோழர்கள் மிகுந்த பற்றுதல். அதற்குக் காரணம் சாண்டில்யனின் கடல்புறா எனும் வரலாற்று நூல்தான். அது மட்டும் அல்ல. பகவத்கீதை, மகாபாரத கதைகளின் மீதும் பிரபாகரனுக்கு மிகுந்த ஆர்வம்.

மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரம் தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்; நட்புக்கு இலக்கணமானவர் கர்ணன் என்று பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம். சரி.


இந்தக் கட்டத்தில் தான் இந்தியா பாகிஸ்தான் போர் நடக்கிறது. வங்காள தேசம் எனும் நாடு உருவாகிறது. அந்த வகையில் இந்தியா தங்களுக்கு உதவி செய்யும்; வங்காள தேசத்தைப் போலவே தமிழீழத்தையும் மீட்டுக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பினார்கள்.

இந்தியாவிற்கு ஆதரவாக சில ஊர்வலங்களையும் ஈழத் தமிழர்கள் நடத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவைத் தமிழ் இளைஞர்கள் பெரிதும் நம்பினார்கள். அதற்கும் காரணம் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு இலங்கை அரசு மறைமுகமாக உதவி செய்து வந்தது.

இந்தியா பாகிஸ்தான் போர் நடக்கும் போது பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் வான் எல்லையில் பறக்க இயலாது. அதனால் இந்தியாவைச் சுற்றிக் கொண்டு இலங்கைக்குப் போய் அங்கே எண்ணெய் நிரப்பிக் கொண்டு வங்காள தேசத்திற்குப் போய் இருக்கின்றன. இந்திரா காந்திக்கு அப்போதே இலங்கையின் மீது கோபம் இருந்தது.

ஆக அந்த வகையில் இந்திய அரசு தங்களுக்கு உதவி செய்யும் என ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என நம்பி இருந்தார்கள்.

ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது வேறு. ஈழத் தமிழர்களின் தலையில் அடுத்து ஒரு பயங்கரமான அடி விழுந்தது. இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாற்றம். அதுவே தமிழர்களுக்குப் பயங்கர அடி.




சிலோன் என்னும் பெயர் ஸ்ரீலங்கா என மாற்றம் பெற்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு எதிராகப் பற்பல புதிய அம்சங்கள். அதனால் தமிழர்களின் பிரதிநியாக இருந்த தமிழரசுக் கட்சி பொறுமையை இழந்தது.

தமிழர்கள் இனியும் பிரிந்து இருக்கக் கூடாது; ஒன்றாகச் செயல்பட வேண்டும் என அந்தக் கட்சி முடிவு எடுத்தது. இலங்கையில் இருந்த சின்னச் சின்னத் தமிழ்க் கட்சிகள்; தமிழர் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தன. தமிழ் கூட்டணி எனும் ஓர் இயக்கத்தை உருவாக்கின. இலங்கை அரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தன.

ஆனால் ஒரு வேடிக்கை. இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்த ஐந்து தமிழர்த் தலைவர்கள் அந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இது தமிழர்களைப் பெரும் அளவில் பாதித்தது. தமிழனே தமிழனுக்கு துரோகியா என்று கோபம் அடைந்தார்கள். பழி வாங்க வேண்டும் எனும் எண்ணம் வந்தது.

முதலில் அருளம்பலம் என்பவரைத் தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டார்கள். ஆனால் அவர் அப்போது கொழும்பில் இருந்தார். சற்றே கடினம். அதனால் அடுத்த இலக்கு குமரகுலசிங்கம் என்பவர் மீது பாய்ந்தது. இவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். முதன் முதலாக இவர்தான் கொலை செய்யப் பட்டார். 




இது அரசாங்கத்தின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தமிழர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல்கள்; பழி வாங்கும் படலத்தில் வன்முறைகளும் அதிகரித்தன. கோபம் அடைந்த தமிழ் இளைஞர்கள் இன்னும் கொடூரமாகப் புரட்சியில் இறங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து ஈழத் தமிழர்களிடையே ஆங்காங்கே சில பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அதில் ஒன்று தான் பிரபாகரனால் 1972-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட புதிய தமிழ்ப்புலிகள் எனும் அமைப்பு.

சில தமிழ் இளைஞர்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பு உருவாக்கப் பட்டது. கொஞ்சம் ஆயுதங்களையும் தயாரித்து வைத்துக் கொண்டார்கள்.

முதல் தாகுதல் 1972 செப் 17-ஆம் தேதி யாழ்ப்பாணம் விளையாட்டு அரங்கில் நடந்தது. சக்தி வாய்ந்த குண்டு ஒன்றைப் பிரபாகரன் போலீசாரின் மீது வீசினார். அந்தக் குண்டை வீசியது பிரபாகரன் என்பது அவரின் நண்பர்களுக்குக் கூட அப்போது தெரியாது. இருப்பினும் பாதிப்புகள் குறைவு.

இருந்தாலும் பிரதமர் ஸ்ரீமாவோ சும்மா இல்லை. போலீஸ் மூலமாகத் தமிழர்களை அடக்க முயற்சி செய்தார். இராணுவமும் களம் இறங்கியது. ஈழத் தமிழர்களும் விடவில்லை. தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்தார்கள்.

1973 மார்ச் 5-ஆம் தேகதி பிரபாகரனைப் பற்றி போலீஸுக்குத் தெரிய வருகிறது. அப்போது பிரபாகரனுக்கு வயதுப் 18. 




நள்ளிரவு நேரம். பிரபாகரனின் வீட்டுக் கதவைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பலமாகத் தட்டுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்து விட்டது.

உடனே வீட்டின் பின்புறமாக வேலியைத் தாண்டி ஓடுகிறார். அவர் உடலை முள் கம்பிகள் கிழிக்கின்றன. சட்டை சிலுவார் எல்லாம் இரத்தம். கைகளிலும் கால்களிலும் இரத்தம். பக்கத்தில் இருந்த மாமா வீட்டிற்குத் தப்பிச் செல்கிறார். அங்கே மாற்றுச் சட்டையை எடுத்துக் கொள்கிறார். ஓட்டம் தொடர்கிறது.

இங்கே பிரபாகரனின் தந்தையார் வீட்டுக் கதவைத் திறக்கிறார், போலீசார் பிரபாகரனைப் பற்றி கேட்கிறார்கள். அவனைச் சுட்டுத் தள்ளுவோம் என எச்சரிக்கை செய்கிறார்கள். பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளைக்கும்; தாயார் பார்வதி அம்மாவுக்கும்; அக்காள்மார்களுக்கும் பிரபாகரனின் போராட்டங்கள் அப்போதுதான் தெரிய வருகின்றன.

நடந்தை அறிந்து தபார்வதி அம்மாவின் கண்கள் குளமாகின்றன. அக்காள்மார்கள் இருவரும் அம்மாவைச் சமாதானம் செய்கிறார்கள். இன்ஸ்பெக்டர் பாஸ்தியம் பிள்ளை பிரபாகரனின் அக்கா ஜெகதீஸ்வரியை பார்த்துச் சொல்கிறார். “உன் தம்பி சீக்கிரம் என் கிட்ட மாட்டுவான், அப்பதான் அவனுக்கு போலீசைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு விருட்டென கிளம்புகிறார். 




பிரபாகரன் குடும்பத்தில் ஒரே அதிர்ச்சி. அக்கா இருவரும் அம்மாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் விரைத்துப் போய் நிற்கிறார்கள். ஆனால் மகனைப் பற்றி நன்றாக அறிந்து வைத்து இருந்த அப்பா வேலுப்பிள்ளை அனைவரையும் சமாதானம் செய்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரனுக்கு அந்தச் சின்னப் பால்ய வயதில் தலைமறைவு வாழ்க்கை தொடர்கிறது. பகல் நேரங்களில் காட்டு வாழ்க்கை. இரவு நேரங்களில் ஏதோ ஒரு வீட்டின் மூலை முடுக்கில் ஒண்டு வாழ்க்கை.  ஒவ்வோர் இடமாக மாறி மாறி ஓட்டங்கள் தொடர்கின்றன.

இறுதியில் ஒரு காட்டில் பிரபாகரனைக் கண்டு பிடிக்கிறார் தந்தையார் வேலுப்பிள்ளை. தந்தையும் மகனும் சந்திக்கிறார்கள். தந்தையார் மகனிடம் சொல்கிறார். நீ தவறுகள் செய்து இருக்கலாம். ஆனால் உனக்கு என்று அப்பா அம்மா அக்கா அண்ணன் இருக்கிறார்கள். வீட்டிற்கு வா என அழைக்கிறார். ஒரு நிமிடம் ஆழ்ந்த அமைதி. பின்னர் பிரபாகரன் பதில் சொல்கிறார்.

“அப்பா இனிமேல் என்னால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. என்னை என் போக்கில் விட்டு விடுங்கள். எனக்கு நிறைய கடமைகள் இருக்கு. அப்பா நீங்கள் இனிமேல் என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். தேடி வர வேண்டாம்.” என சொல்லிவிட்டு தந்தையிடம் இருந்து விடை பெறுகிறார் பிரபாகரன்,

அதன் பின்னர் தந்தையும் மகனும் நீண்ட காலம் சந்திக்கவே இல்லை. இரு துருவங்களில் இரு கோணங்கள். அந்த இரு கோணங்களும் தனித்தனியாய்ப் பிரிந்து பயணிக்கத் தொடங்குகின்றன.

(தொடரும்)

04 ஜூன் 2019

ரோம் சாசனம்

ரோம் சாசனம் என்பது உலக நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஓரு பொதுவான அனைத்துலக ஒப்பந்தம். இந்தச் சாசனம் தான் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை வழிநடத்திச் செல்கிறது. ஆங்கிலத்தில் Rome Statute என்று அழைக்கிறார்கள். 


1998 ஜூலை மாதம் 17-ஆம் தேதி இத்தாலியின் ரோம் நகரில் இந்தச் சாசனம் உருவாக்கப் பட்டது. ரோம் சாசனத்தில் கையெழுத்திட்ட எந்த ஒரு நாடும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மதித்து நடப்பதாகப் பொருள் படுகிறது.

இந்தச் சாசனத்தை அடிப்படையாகச் கொண்டுதான் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) செயல் படுகின்றது.

ரோம் சாசனம் கையெழுத்தான பிறகே அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. நினைவில் கொள்வோம்.

இனப் படுகொலைகள்; இன அழிப்புகள்; போர்க் குற்றங்கள்; ஆக்கிரமிப்புக் குற்றங்கள்; அனைத்துலகக் குற்றங்கள்; மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; மனிதத் தன்மைகளுக்கு எதிரான குற்றங்கள்; போன்ற குற்றங்களை இந்த அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்ய முடியும். ரோம் சாசனத்தின் மூலமாக அதற்கு அந்த அதிகாரம் உள்ளது.


இந்தச் சாசனத்தின் மூலமாக ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு தலைவரின் மீதும் எவரும் வழக்கு தொடர முடியும். எந்த ஓர் அரசாங்கத்தின் மீதும் வழக்கு தொடர முடியும். அந்த மாதிரியான வழக்குகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யும்.

இந்தச் சாசனம் 2002-ஆம் ஆண்டு ஜுலை 1-ஆம் தேதி அனைத்துலக அளவில் நடைமுறைக்கு வந்தது. 2018 மார்ச் மாதம் வரையில் 122 நாடுகள் சாசனத்தில் கையெழுத்து வைத்து உள்ளன.

உலகில் உள்ள அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மனிதர்கள் மீதும் இந்த சாசனத்தின் மூலமாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அனைத்துலகக் குற்றங்களுக்கு எதிராக எவரும் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். ஒரு சாமான்ய மனிதர் அவருடைய நாட்டின் அதிபரின் மீது வழக்கு தொடரலாம். அந்த நாட்டின் பிரதமரின் மீதும் வழக்கு தொடரலாம்.

இப்படித் தான் ரோம் சாசனம் சொல்கின்றது. இதைத் தான் ரோம் சாசனம் என்று அழைக்கிறோம்.

உலகின் பல பாகங்களில் இன அழிப்பு குற்றங்கள் நடந்து உள்ளன. அதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் ரோம் சாசனம் தோற்றுவிக்கப் பட்டது.

1940-ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நாஜி அரசை முன் எடுத்த ஹிட்லர் ஆயிரக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தார். ஓர் இன அழிப்பைச் செய்தார். அத்துடன் அவர் பல நாடுகளின் மீது போர் தொடுத்துப் பல்வேறான போர் குற்றங்களைச் செய்தார்.

அந்த மாதிரி இனி நடக்கக் கூடாது என்பதற்காகவும் ரோம் சாசனம் தோற்றுவிக்கப் பட்டது. 


நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் நகரத்தில் அமைந்து உள்ள அனைத்துலக நீதி மன்றம் ரோம் சாசனத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது.

ரோம் சாசனத்தில் ஒரு நாடு கையெழுத்து போடவில்லை என்றால் அந்த நாட்டின் மீது அனைத்துலக நீதி மன்றத்தின் மூலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் அதற்கும் மாற்றுவழி இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

அனைத்துலக அளவில் பெரும் குற்றங்களைப் புரிந்தவர்களை விசாரித்துத் தண்டனை வழங்குவதே அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலையாய நோக்கமாகும்.

அதற்காக, சௌக்கிட் சாலையில் மாங்காய் திருடிய ஒருவனைப் பிடித்துக் கொண்டு போய் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. அதை உள்நாட்டு நீதிமன்றங்கள் பார்த்துக் கொள்ளும்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்களுக்கு வேலை இல்லை. அந்த மாதிரி பெரிய பெரிய மோடி மஸ்தான்கள் முட்டிப் பார்க்க வேண்டிய அனைத்துலக நீதிமன்றத்தில் சூசூபி கேஸ்களுக்கு எல்லாம் இடம் இல்லை. 


ரோம் சாசனத்தின் ஐந்தாவது விதி.

(Article 5 of the Rome Statute)

சற்று ஆழமாகப் பார்ப்போம். கீழே சொல்லப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அந்தச் சாசனம் தகுதி பெறுகின்றது.

1. இனவழிப்பு: ஒரு குறிப்பிட்ட இனம்; ஒரு குறிப்பிட்ட நாட்டினத்தவர்; ஒரு குறிப்பிட்ட சமயக் குழுவினரை அழிக்க முயற்சி செய்தல்;

2. மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்:  ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது மட்டும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள். எ.கா: அடிமைப் படுத்தல்; இன ஒதுக்கல்; கொலை; பாலியல் வன்முறைகள்;

3. போர்க் குற்றங்கள்: போர்க் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய மனிதாபிமான விதி முறைகளை மீறிச் செல்லும் செயல்கள். அதாவது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீது வெடிகுண்டுகளைப் போடுவது; போர்க் கைதிகளைச் சித்ரவதை செய்வது; உயிர்க்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்துவது (biological weapons);

4. வலிய தாக்குதல்: அதாவது வலிந்து போய் ஒரு போரைத் தொடங்குவது;

ஆக இந்த நான்கு குற்றங்களைத் தான் ரோம் சாசனத்தின் வழி விசாரணை செய்ய முடியும். விசாரணை செய்வதற்கு அந்தச் சாசனத்திற்கு அதிகாரம் உள்ளது.

நம் நாட்டில் அரசு வழக்குரைஞர்கள் இருப்பது போல அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலும் அனைத்துலக வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களை Office of The Prosecutor (OTP) என்று அழைக்கிறார்கள். 


இங்கே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் ஒரு பாக்கெட் மெகி மீ திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கோர்ட்டிற்கு இழுத்துக் கொண்டு போகலாம். அவர் மீது குற்றப் பதிவு செய்யலாம். அவர் குற்றவாளி என நிரூபிக்க நீதிமன்றத்தில் வழக்காடலாம்.

நாலைந்து நாட்களுக்குச் சிறையில் போட்டு அடைத்து வைக்கலாம். திருடியது என்னவோ இரண்டு வெள்ளி பாக்கெட் மீயாக இருக்கும். ஆனால் ஒரு நாளைக்கு நாற்பது வெள்ளி செல்வு செய்ய வேண்டி இருக்குமே. சும்மா ஒரு கணக்கு. சரி.

ஆனால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஒரு நாட்டை கோர்ட்டிற்கு இழுத்துக் கொண்டு போய் கேஸ் போட முடியாது. நாட்டின் தலைவர்கள் மீது வழக்கு பதியலாம். ஆனால் நாட்டின் மீது வழக்கு பதிய முடியாது. சில இடக்கு முடக்குகள் இருக்கின்றன.

ரோம் சாசனத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகளில் உள்ள மக்களை மட்டுமே அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும். கையெழுத்துப் போடாத நாடுகளில் உள்ள மக்களை ஒன்றும் செய்ய முடியாது.

சில நாடுகலில் சிலர் வைத்தது சட்டமாக இருக்கலாம். இருந்தாலும் ரொம்பவும் ஓவராகப் போக முடியாது. அதற்கும் செக் பாயிண்ட் வைத்து இருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டுச் சபையில் பாதுகாப்புச் சபை எனும் ஒரு சபை இருக்கிறது. (United Nations Security Council) தெரியும் தானே.

அதில் இருக்கும் நாடுகளில் பெரும்பாலானவை சம்மதம் தெரிவித்தால், எந்த ஒரு நாட்டையும் அனைத்துலக நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் வல்லரசு நாடுகள் அவற்றின் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

உண்மையிலேயே ஒரு நாட்டில் ஒரு பெரிய அநியாயம் நடக்கிறது; ஒரு பெரிய இனவழிப்பு நடக்கிறது என்றால் ரோம் சாசனம் தன்னிச்சையாகச் செயல் படலாம். யாருடைய அனுமதியும் தேவை இல்லை. அந்த அதிகாரம் அனைத்துலக நீதிமன்றத்திற்கு இருக்கிறது. 

அது எல்லாம் சரி. 2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அழிக்கப் பட்டார்களே அப்போது இந்த ரோம் சாசனம் எங்கே போனதாம். இந்தியாவில் மாடு மேய்க்கப் போனதா இல்லை இத்தாலியில் இட்லி தோசைக்கு, மாவு அரைக்கப் போனதா? ரோம் சாசனத்திலும் குளறுபடிகள் இருக்கவே செய்கின்றன. மாமியார் உடைத்தால் மண்சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டியா. நன்றாக வருகிறது.

ரோம் சாசனத்தில் கையொப்பம் போட்ட நாடுகள் மீது தான் வழக்குத் தொடர முடியும் என்பது அந்தச் சாசனத்தின் பொதுவான விதி. சொல்லி இருக்கிறேன். சரி.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் இரு வகையான தண்டனைகளை வழங்க முடியும். ரோம் சாசனத்தின் 77-ஆவது விதியின்படி,

(Article 77 of the Rome Statute)

தனிநபர் மீது குற்றம் உறுதிப் படுத்தப் பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். அதே சமயத்தில் ஆயுள் தண்டனையையும் வழங்க முடியும்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப் பட்டவர்களை எங்கே கொண்டு போய் அடைத்து வைப்பதாம். அதற்கும் ஒரு சிறைச்சாலையை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.

சுங்கை பூலோ சிறைச்சாலை போல அல்ல. அது ஒரு பழங்காலத்து மாளிகை. நெதர்லாந்து நாட்டில் இருக்கிறது. அதன் பெயர் சிவெனிஞ்சன்.

(Scheveningen Prison in Netherlands)

அழகான மாளிகை. உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கடந்த 2019 மே மாதம் 16-ஆம் தேதி ரோம் சாசனத்தின் பட்டியலில் இருந்து மலேசியாவின் பெயர் அதிகாரப் பூர்வமாக நீக்கப் பட்டது.

மலேசிய அரசாங்கம் 2019 ஏப்ரல் 5-ஆம் தேதி ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார். அரசியல் அழுத்தம் மற்றும் சில தரப்பினர் ரோம் சாசனம் பற்றி குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்த முடிவை அறிவிக்க வேண்டி வந்தது என்று அவர் சொன்னார்.

இருப்பினும் படுகொலைகள், மனிதாபிமானமற்ற குற்றங்கள், போர்க் குற்றங்கள், குற்றவியல் ஆக்கிரமிப்புகள் போன்ற சட்ட விதிகளுக்கு மலேசியா உட்பட்டு இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

ரோம் சாசனத்தில் மலேசியாவின் செயல்பாடுகள்

17.07.1998 - ஐ.நா. பிரதிநிதிகள் மாநாட்டின் ரோம் சாசன அமைப்பில் மலேசியா முதன்முறையாகக் கையெழுத்து போட்டது.

27.05.2010 - அனைத்துலக நீதிமன்றத்தில் அங்கம் வகிக்க சம்மதம் தெரிவித்தது.

11.06.2010 - பிரதமர் நஜீப் மலேசியாவின் கொள்கைப் பாட்டை தெளிவு படுத்தினார்.

18.03.2011 - ரோம் சாசனத்தில் இணைவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

05.08.2015 - மலேசிய விமானம் எம்.எச். 17 சுட்டு வீழ்த்தப் பட்டதை அனைத்துலக நீதிமன்றத்திற்கு மலேசியா கொண்டு சென்றது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

12.12.2018 - புதிய பக்கத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை ரோம் சாசனத்தில் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்தது.

26.12.2018 - இடைக்கால மாமன்னரிடம் அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப் பட்டது.

15.02.2019 - ரோம் சாசனத்தில் மலேசியா இணைவதைப் பற்றி மாமன்னரிடம் தெரிவிக்கப் பட்டது.

04.03.2019 - ரோம் சாசனத்தில் மலேசியா கையெழுத்து போட்டது.

05.04.2019 - ரோம் சாசனத்தில் இருந்து பின்வாங்கிக் கொள்வதாக மலேசியா அறிவித்தது.

கடைசியாக ஒரு முக்கியமான செய்தி. 18 வயதிற்கும் மேற்பட்டவர் எவரையும் ரோம் சாசனத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கலாம். எவரும் விதிவிலக்கு அல்ல. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும் சரி; ஒரு நாட்டின் அரசராக இருந்தாலும் சரி. ரோம் சாசனம் பாதிப்பை ஏற்படுத்தும். புரியும் என்று நினைக்கிறேன்.

தவிர 2002-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த அனைத்துலகக் குற்றங்களின் மீது வழக்கு தொடர முடியாது. அதனால் எத்தனையோ இடி அமீன்களும் இட்லர்களும் முசோலினிகளும் தப்பிச் சென்று விட்டார்கள்.

2000 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ரோம் சாசனத்தில் கையொப்பம் வைக்காத நாடுகள்:

சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், லெபனான், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், துருக்கி. அதனால் இந்த நாடுகள் எப்போது வேண்டும் என்றாலும் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அண்மையில் அறிவித்து உள்ள நாடுகள் இஸ்ரேல், சூடான், அமெரிக்கா, ரஷ்யா.

கடைசியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது பலரின் பார்வை திரும்பியது.  இருந்தாலும் இரு மாதங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாடும் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொண்டது.

ஓரு நாட்டின் அரசரையும் விசாரிக்கலாம் என்பது ரோம் சாசனத்தின் ஒரு கோட்பாடு. அதனால் பல நாடுகள் அந்தச் சாசனத்தில் கையொப்பம் போடாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளைப் போல தடுமாறிக் கொண்டு நிற்கின்றன. உலகளாவிய நிலையில் ஏறக்குறைய 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலானவை ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் தொடர்பானவை.

எது எப்படி இருந்தாலும் தமிழீழ மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வரையில் ரோம் சாசனத்தின் மீது எனக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படப் போவது இல்லை. 

சான்றுகள்:

1. Rome Statute of the International Criminal Court website
https://www.icc-cpi.int/Pages/Main.aspx

2. Text of the Rome Statute as amended in 2010 and 2015 — Human Rights & International Criminal Law Online Forum

3. United Nations Treaty Database entry regarding the Rome Statute of the International Criminal Court.

30 மே 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 3

இலங்கைச் சிங்களர்களின் தமிழ் மொழி  எதிர்ப்புத் தனமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதைப் பார்த்த தமிழர்கள் தங்களின் மொழி உரிமை மறுக்கப் படுவதை நன்றாகவே உணர்ந்து வந்தார்கள். இந்தக் கட்டத்தில் தமிழர்களும் ஒரு முடிவிற்கு வர வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்ட

இனி எதிர்வரும் காலங்களில் கல்வியால் மட்டுமே  முன்னேற்றம் காண முடியும்; தமிழர்கள் தங்களின் கல்விப் பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்; கல்வியை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற முடிவிற்கு வந்தார்கள்.

அதுவே பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளையின் தாரக மந்திரம். தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கல்வியின் பக்கம் சன்னம் சன்னமாய் ஈர்த்து வந்தார். அந்த வகையில் அவருடைய பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டினார்கள். அந்தப் பாவனையில் ஒரு நல்ல நிலைக்கும் வந்தார்கள்.

பிரபாகரனின் அண்ணன் மனோகரன். கால ஓட்டத்தில் இவரும் ஓர் அரசு வேலையில் அமர்ந்தார். மற்ற இரு சகோதரிகளும் நன்றாகப் படித்தார்கள். நல்ல வரன்கள் கிடைத்தன. திருமணமாகிப் புக்ககம் புகுந்தார்கள்.

ஆனாலும் கடைக்குட்டி பிரபாகரனின் மீது தான் தந்தையாருக்கு ரொம்பவும் கவலை. பிரபாகரனின் புரட்சிகரமான சிந்தனை; தீவிரமான போராட்டப் போக்கு; அவருக்குச் சரியாகப் படவில்லை. பிரபாகரனை எப்படியாவது சிலோன் சிவில் சேவையில்  சேர்த்துவிட வேண்டும் என்பது தந்தையாரின் நெடுங் கணக்கு.


ஆனால் பிரபாகரனுக்கு அப்படி இல்லையே. எல்லாமே எதிர்மறையான சிந்தனைகள் தானே. எல்லாமே சோசலிசச் சிந்தனைகள் தானே. எல்லாமே கொரிலா போராளிகளின் சிந்தனைகள் தானே.

சிலோன் சிவில் சேவைக்குப் பதிலாக அந்தச் சிலோனையே எதிர்க்க வேண்டும்; தமிழீழச் சிவில் சேவை என்று மாற்ற வேண்டும் என்கிற வேறுபட்ட சிந்தனையில் தானே பிரபாகரன் பித்துப் பிடித்துக் காய்களை நகர்த்திக் கொண்டு இருந்தார்.

சிலோன் சிவில் சேவை என்பது இலங்கையின் பொது நிர்வாகச் சேவையாகும். 1833-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அப்போது இலங்கை பொதுச் சேவை (Ceylon Civil Service-CCS) என்று பெயர்.

1963-ஆம் ஆண்டு இலங்கை பொதுச் சேவை என (Ceylon Administrative Service-CAS) வேறு வடிவத்தில் அறிமுகமானது. 1972-ஆம் ஆண்டு இலங்கை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனம் செய்யப் பட்டது. அந்தச் சேவைக்கு இலங்கை நிர்வாக சேவை என (Sri Lanka Administrative Service-SLAS) பெயர் மாற்றம் கண்டது. அந்தச் சேவையே தற்சமயம் அந்த நாட்டில் முதன்மையான சிவில் சேவையாகும். சரி.


காலப் போக்கில் வல்வெட்டித் துறையிலும் சிங்கள இராணுவம் வெறித் தனமாய் தலைவிரித்துத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. வயது வரைமுறை பார்க்காமல் பெண்களிடம் வன்முறைகள்; போகிற வருகிற இளைஞர்களைத் தாக்கிக் காயப் படுத்துதல்; கண்ணுக்குத் தெரியும் இந்துக் கோவில்களை உடைத்து எறிதல்; இப்படி நிறையவே கண்மூடித்தனமான வன்மைகள். பிரபாகரனின் கிராமத்திலேயே சில துயரமான சம்பவங்களும் நடந்தன.

மட்டக்களப்பில் தான் பிரபாகரன் தன் தொடக்கக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் ஆலடி சிவகுரு பள்ளியில் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் ஊரிக்காட்டு சிதம்பரம் கல்லூரில் 10 வகுப்பு வரை மேல்படிப்பு. அதற்கு மேல் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

பள்ளிப் படிப்பில் பிரபாகரன் சற்றே மந்தம். அவருடைய எண்ணம் சிந்தனைகள் எல்லாமே அரசியல். இங்கேதான் புரட்சி எண்ணங்களில் புதுப் புனல்கள் அலைமோதுகின்றனவே... அப்புறம் எப்படி படிப்பில் பச்சைக் கலரைப் பார்க்க முடியும். 


அரசியலுக்கு அடுத்து அரசியலைச் சார்ந்த போராட்டங்கள். அதைப் பார்த்து தந்தையார் ரொம்பவுமே மனம் வெதும்பிப் போனார். இவனை இப்படியே விட்டால் சரிபட்டு வர மாட்டான் என்று சொல்லி மாலை வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார். மாலை 6 முதல் இரவு 9 வரை வகுப்பு. அங்கேயாவது பையன் கொஞ்சம் புத்தி தெளிவு பெறுவான் என்று நினைத்தார்.

ஆனால் நடந்ததே வேறு. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாம். அந்த மாதிரி தான். பையன் திருந்துவான் என்று மாலை வகுப்பிற்குக் கொண்டு போனால் பையன் சோசலிசக் கிணற்றுக்குள் விழுந்து அங்கேயே நீச்சல் அடித்துக் கொண்டு இருந்தான். முதலுக்கே மோசமாகிப் போனது. கதையைக் கேளுங்கள்.

மாலை வகுப்பின் ஆசிரியர் ஓர் இளைஞர். வயது 24. பெயர் வேணுகோபால் சாஸ்திரி. புரட்சிப் போராட்டங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தனித்த தமிழீழம் தான் இலங்கைத் தமிழர்களுக்கு விடியலைத் தரும் விடிவெள்ளி எனும் கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

அப்புறம் என்ன. பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி பிரபாகரனுக்கு உலக புரட்சிகள் பற்றி ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொடுத்தார். தமிழர்களுக்கு என்று தனி ஒரு நாடுதான் நிரந்தத் தீர்வு என அடிமேல் அடி. நன்றாகவே மூளைச் சலவை. அப்போது பிரபாகரனுக்கு வயது 14.

அந்தச் சின்ன வயதிலேயே பிரபாகரனுக்குள் சோசலிசச் சித்தாந்தங்கள் சிறகடிக்கத் தொடங்கின. கீதா உபதேசங்களுக்குப் பதிலாக சோசலிச உபநியாசங்கள். மாலை வகுப்பு வாத்தியார் மூலமாகச் சிங்களத்திற்கு ஏழரை நாட்டுச்சனி பிடித்துக் கொண்டது என்று நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். 


அப்படி நான் சொல்ல மாட்டேன். சிங்களப் பேரினவாதத்தின் கதவுகளை ஏழரை நாட்டு மணி லொட்டு லொட்டு என்று தட்டியது என்று தான் சொல்வேன். இது கொஞ்சம் நல்லா இருக்கு இல்லீங்களா. சரி. விட்டால் கிளாப்பா சாவிட் மெசினைக் கொண்டு வந்து அறுத்து எடுத்து விடுவான் என்று சொல்வது காதில் விழுகிறது. நம்ப கதைக்கு வருவோம்.

அது மட்டும் அல்ல. இந்தியப் போராளிகள் சிவாஜி; திப்பு சுல்தான்; நேதாஜி; பகத் சிங்; திருப்பூர் குமரன்; கட்ட பொம்மு போன்றவர்களைப் பற்றியும் மாலை வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்.

உலகப் போராளிகள்:

நெப்போலியன் (1769–1821);

மெக்சிகோ எமிலியானோ (Emiliano Zapata 1879–1919);

சைமன் போலிவார் (Simon Bolivar 1783–1830);

செகுவாரா (1928–1967);

லெனின் (1870–1924);

ரோசா லக்சம்பர்க் (Rosa Luxemburg);

பீடல் காஸ்ட்ரோ (1926–2016);

நெல்சன் மண்டேலா (1918–2013);

ஹோசி மின் (1890–1969);

போன்றவர்களைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தார். அந்தப் போராட்ட உணர்வுகளே பின்னர் காலத்தில் பிரபாகரனிடம் நிலைத்துப் போய் பைரவி ராகங்களைப் பாட ஆரம்பித்தன.



அந்தப் பக்கம் பார்த்தால் பிரபாகரனின் தந்தையார் அப்பழுக்கற்ற அகிம்சாவாதி. நேருவையும் காந்தியையும் ரொம்பவே நேசித்தவர். ஆனால் பிரபாகரனுக்கு அப்படி இல்லை. நேரு, காந்தி இருவர் மீதும் நாட்டம் அறவே இல்லை. சுட்டுப் போட்டாலும் வரவே இல்லை.

மாறாக இந்தியச் சுதந்திரத்திற்குப் போராடியவர்கள்: தீரன் சின்னாமலை; வீரமங்கை வேலு நாச்சியார்; மருது பாண்டியர்; புலித்தேவன்; கட்ட பொம்மு; வஞ்சிநாதன்; கப்பலோட்டிய தமிழர்; சுப்பிரமணிய சிவா; நேதாஜி; பகத் சிங். இவர்கள் மட்டுமே பிரபாகரனின் மனதில் ஆழமாய்ப் பதிந்து போனார்கள்.

நேதாஜி என்கிற ஒரு சொல் பிரபாகரனை மிகவும் பாதித்து விட்டது. அன்றில் இருந்து நேதாஜியை விரும்பிப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவில் இருந்து வந்த பத்திரிக்கைகளில் வெளிவந்த நேதாஜியின் படங்களையும் கதைகளையும் எல்லாம் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டார்

நேதாஜி என்றால் வீரம். வீரம் என்றால் நேதாஜி. அந்தச் சொல்தான் பிரபாகரனின் உயிர்மூச்சு. நேதாஜியைப் போலவே இலங்கை அரசை எதிர்த்துப் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

நேதாஜியை தலைவராக ஏற்றுக் கொண்டார் என்று சொல்வதை விட அவரை மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


போராடுவதற்கு முன் முதலில் மனத்தையும் உடலையும் பக்குவப் படுத்தி நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தான் இலங்கை இராணுவத்தை எதிர்க்க வேண்டும் என உறுதி கொண்டார்.

இலங்கை இராணுவத்தை எதிர்க்கலாம். எல்லாம் சரி. கத்தி கம்புகளால் இராணுவத்தை எதிர்க்க முடியுமா. முடியாதே. நிச்சயமாக ஆயுதம் கொண்டுதானே எதிர்க்க வேண்டும். ஆனால் ஆயுதங்களுகு எங்கே போவதாம். அப்போது பிரபாகரனுக்கு 14 வயது. யாரைத் தேடிப் போய் உதவி கேட்பதாம்?

பிரபாகரனுக்கு அப்போதைக்கு நல்ல ஒரு துப்பாக்கி தேவை.ப் பட்டது எப்படியாவது வாங்கி விட வேண்டும் எனும் எண்ணத்தில் வேணுகோபால் ஆசிரியரிடமே போய் ஐடியா கேட்டார். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

“எனக்கு ஒரு துப்பாக்கி வேணும் சார். வாங்கித் தருவீங்களா சார்” என்கிறார் பிரபாகரன். ஆசிரியர் நிலைகுத்திப் போனார். அங்கே கொஞ்ச நேரம் அமைதி. அதன் பின்னர் துவக்கு துப்பாக்கி எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’

முதலில் போய் கம்புச்சண்டை பழகிக் கொள் என்று பிரபாகரனிடம் சொல்லி அனுப்புகிறார். பிரபாகரனுக்குப் பெரிய ஏமாற்றம். ஆசிரியரே இப்படிச் சொல்லி விட்டாரே என நினைத்து வருந்தினார். ஆனாலும் துப்பாகி மீது இருந்த வெறி மட்டும் அடங்கவில்லை

தன்னைப் போல ஆயுதப் போராட்டம் மீது துடிப்பு கொண்ட ஏழெட்டுப் பேரைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார். சிங்களவனைத் தாக்க வேண்டும் என்றால் நாம் பயிற்சிகள் எடுக்க வேண்டும். அதற்கு நமக்கு கண்டிப்பாக ஒரு துப்பாக்கி வேண்டும் என்கிறார் பிரபாகரன்.


அதற்கு பணம் வேண்டும். என்ன செய்வதாம். சரி கையில் கிடைக்கிற காசை எல்லாம் சேமித்து வைப்போம். சிறுக சிறுகச் சேர்த்து ஒரு துப்பாக்கியை வாங்கி விட வேண்டும் என பிரபாகரனும் நண்பர்களும் முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு செருகல். இந்தக் கட்டுரைத் தொடர் பிரபாகரன் வேலுப்பிள்ளை 2011 எனும் நூலின் தகவல்களையும் சான்றுகளையும் முன் வைத்து தயாரிக்கப் படுகிறது. அவர்களின் அனுமதியுடன் தகவல்கள் தொகுக்கப் படுகின்றன.

நன்றாக நினைவில் கொள்ளுங்கள். அப்போது பிரபாகரனுக்கு வயது 14. அந்தச் சின்ன வயதிலேயே அப்பேர்ப்பட்ட போராட்ட வெறி. அந்த உணர்வு தானே உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பிரபாகரன் சேமித்து வைத்து இருந்தது 110 ரூபாய். துப்பாக்கியின் விலை 150 ரூபாய். காசு பற்றாமல் எப்படி துப்பாக்கியை வாங்கி இருப்பார். அங்கே தான் பிரபாகரன் வந்து நிற்கிறார். மனதைத் தொடும் ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

29 மே 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 2

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் பொன்னாலை எனும் ஊர். யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரை நகருக்கு அருகாமையில் அமைந்து உள்ளது. அங்கே தான் ஆல்பிரட் துரையப்பா என்பவர் சுட்டுக் கொல்லப் பட்டார். 


ஆல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தின் நகர மேயராக இருந்தவர். இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர். தமிழ் இன உணர்வுகளைக் கசக்கி நசுக்கிப் பிழிந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழர்களை மட்டம் தட்டியே பேசி வந்தவர். இலங்கைத் தமிழர்கள் பொதுவாகவே அவரை ஒரு தமிழ்த் துரோகி என வர்ணித்தார்கள்.

1975-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி ஆல்பிரட் துரையப்பா தன் மகள் ஈசாவுடன் பொன்னாலையில் இருந்த வரத ராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் இருக்கிறார். அப்போது முகமூடி அணிந்த ஒருவர் ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்று விட்டார்.

ஆல்பிரட் துரையப்பாவின் அரசியல் எதிரியான செல்லையா குமார சூரியார் தான் அந்தக் கொலையைச் செய்து இருக்கலாம் என்று பலரும் நினைத்தார்கள். அரசாங்கமும் நினைத்தது. இருந்தாலும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரன் மீது ஒரு குற்றப் பார்வை இருக்கவே செய்தது.


ஆல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்றது யார் எவர் என்று தெரியாத நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து, 1978 ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலை இயக்கத்தினர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தாங்கள் தான் துரையப்பாவையும் மற்றும் பதினொரு பேரையும் கொன்றதாக வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர்.

அதுதான் விடுதலை இயக்கத்தினர் சிங்களருக்கு விதித்த முதல் மரண தண்டனை. 

துரையப்பாவைச் சுட்டுக் கொன்ற அதே சமயத்தில் புத்தூர் வங்கிக்குள் தனது தோழர்களுடன் நுழைந்த பிராபகரன், ஐந்து லட்சம் ரூபாய், இரண்டு லட்சம் ரூபாய் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றார். அப்போது அது பெரிய காசு. சிங்களப் போலீசாருக்குப் பெரிய தலைவலிக் குடைச்சல்.

அந்த வகையில் புதிதாகத் தோன்றிய தமிழ்ப் புலிகளை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று தீவிரம் காட்டத் தொடங்கினார்கள். 



1976 மே 5-ஆம் நாள். தமிழ்ப் புலிகள் இயக்கம் என்பது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாற்றம் கண்டது.

அவர்களின் நோக்கம்:

இலங்கை உளவுப் படையினரை அழிப்பது;

போலீஸ் வன்முறைகளை அடக்கி வைப்பது;

தமிழர்களுக்கு எதிரான இராணுவத்தினர் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துவது;


இந்த மூன்று அம்சங்களும் புலிகளின் முன் எடுப்புகளாக முன் வைக்கப் பட்டன.

கொஞ்சம் பின்னோக்கி 1958-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சிகளையும் திரும்பிப் பார்க்க வேண்டி வருகிறது. அதற்கு முன் ஒரு விசயம். பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு, அவர் இல்லாமல் யாருமே தமிழீழ வரலாற்றை எழுதிவிட முடியாது. 



உலகத் தமிழர்களுக்குப் பிராபகரன் என்பவர் ஒரு ஹீரோ. அதே சமயத்தில் தமிழீழ மக்களுக்கு ஒரு தெய்வம். பிரபாகரனை முன் வைத்து தான் தமிழீழ வரலாற்றை எழுத முடியும். சரிங்களா. கொழும்பு கலவரத்திற்கு வருகிறேன்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் கலவரம். 1958-ஆண்டு நிகழ்ச்சி. கலவரத்தின் போது பிரபாகரனின் சொந்த அத்தையின் வீட்டுக்குள் சிங்களர்கள் நுழைந்தார்கள்.

வீட்டின் குளியறையில் மறைந்து இருந்த பிரபாகரனின் அத்தையையும் அவருடைய கணவரையும் அடித்துச் சித்திரவதை செய்தார்கள். அப்புறம் பிரபாகரனின் மாமாவை எரித்தே கொன்றார்கள்.

தீக்காயங்கள்; வெட்டுக் காயங்களுடன் பிரபாகரனின் அத்தை உயிர் தப்பினார். அப்போது அங்கு இருந்த சில நல்ல மனிதர்களின் உதவியால் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தீக்காயங்கள் ஆறுவதற்கு ஓராண்டு காலம் பிடித்து இருக்கிறது.

அதன் பின்னர் பிரபாகரனின் அத்தை வல்வெட்டித்துறைக்கு வந்து சேர்ந்தார். கொழும்புவில் நடந்ததைச் சொல்லி முடிக்கும் போது பிரபாகரனின் சகோதரிகள் ஜெகதீஸ்வரி, வினோதினி இருவரும் காதைப் பொத்திக் கொண்டு கத்தி இருக்கிறார்கள்.

அதைக் கேட்டு என்ன செய்வது என்று புரியாமல் பிரபாகரன் கண்ணீர்விட்டு அழுதார். அப்போது பிரபாகரனுக்கு நான்கு வயது. அந்த நிகழ்ச்சி பிரபாகரனின் மனதில் மிக ஆழமாய்ப் பதிந்து விட்டது. அதன் பின்னர் பிரபாகரனின் அத்தை வல்வெட்டித் துறையிலேயே தங்கி விட்டார்.

1960-ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராக ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வந்தார். தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் திறந்துவிட்டுத் தீவிரப் படுத்தினார். 



ஸ்ரீ மாவோவை உலகின் முதல் பெண் பிரதமர் என்று பெருமையாகச் சொல்லலாம். ஆனால் இந்தப் பெண்மணிதான் 1960-ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தூபம் ஏற்றியவர். தமிழ்மொழி நசித்தலுக்குத் தீப்பந்தங்கள் ஏற்றி  கொளுந்துவிட்டு எரியச் செய்தவர். அவர் செய்த பாவங்களுக்கு உடல் பருத்து பெருத்து நடக்க முடியாமல் செத்துப் போனது வேறு கதை.

அதற்குமுன் இலங்கைப் பிரதமர்களின் பட்டியல் வருகிறது. அதையும் தெரிந்து கொள்வோம்.

1. டொன் ஸ்டீபன் சேனாநாயக்கா - 1947

2. டட்லி சேனாநாயக்கா - 1952

3. சர் ஜோன் கொத்தலாவலை - 1953

4. பண்டாரநாயக்கா - 1956

5. விஜயானந்த தகநாயக்கா - 1959

6. டட்லி சேனாநாயக்கா - 1960

7. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1960

8. டட்லி சேனாநாயக்கா - 1965

9. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1970

10. ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - 1977

11. ரணசிங்க பிரேமதாசா - 1978

12. டிங்கிரி பண்டா விஜயதுங்கா - 1989

13. ரணில் விக்கிரமசிங்க - 1993

14. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க - 1994

15. ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா - 1994

16. இரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்க - 2000

17. ரணில் விக்கிரமசிங்க - 2001

18. மகிந்த ராசபக்ச - 2004

19. இரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்க - 2005

20. திசாநாயக்க முதியன் சேலாகே ஜயரத்ன - 2010

21. ரணில் விக்கிரமசிங்க - 2015

22. ரணில் விக்கிரமசிங்க - 2016 (இன்று வரையில்)

1961 ஜனவரி 1-ஆம் திகதி தொடங்கி இலங்கை முழுவதும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக அமல் செய்யப் பட்டது. நீதிமன்றங்களில் சிங்கள மொழி பலவந்தமாகத் திணிக்கப் பட்டது. தமிழ் மொழி தவிர்க்கப் பட்டது.

தமிழ் ஆட்சி மொழியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர் வாழும் பகுதிகளில் உள்ள அரசாங்க அலுவலகங்களிலும் நீதிமன்றங்களிலும் தமிழ் மொழி இருக்கட்டும் என தமிழரசுக் கட்சி ஒரு கோரிக்கையை முன்வைத்தது .

ஆனாலும் பெரும்பான்மை சிங்களக் கட்சிகளால் நாடாளுமன்றத்தில் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. இலங்கைத் தமிழர்கள் கொதித்துப் போனார்கள். 



1961 பிப்ரவரி 20-ஆம் தேதி. தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் காந்திய அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினார். அந்தப் போராட்டம் இலங்கை முழுவதும் காட்டுத் தீ போல பரவியது.

ஐயா செல்வநாயகம் வைத்த இரு கோரிக்கைகள்

1. வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் அலுவலக மொழியாக இருக்க வேண்டும்

2. தமிழர் பகுதிகளில் இருக்கும் நீதி மன்றங்கள் தமிழில் இயங்க வேண்டும்

இந்த இரு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை முழுவதும் போராட்டங்களைத் தொடக்கினார்.

ஆனால் சிங்கள அரசு கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. 1961-ஆம் ஆண்டு திருகோணமலையில் நடந்த அகிம்சா போராட்டத்தை அடக்க சிங்களப் போலீசார் களம் இறங்கினார்கள். போராட்டம் தடியடிகள் மூலம் அடக்கப் பட்டது.

அந்த தடியடியில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஏகாம்பரம் கொல்லப் பட்டார். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களும் திகைத்து மலைத்துப் போய் நின்றார்கள். அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்கள அரசு வன்முறைகளை கட்டவிழுத்து விட்டது.

எல்லா தமிழ்த் தலைவர்களையும் கைது செய்தது. பலரைச் சிறையில் போட்டு அடைத்து வைத்து கொலையும் செய்தது. வானம் வெளிச்சமாகத் தான் இருந்தது. ஆனால் கீழே தமிழர்களின் பூமிதான் இருட்டாகத் தெரிந்தது.

தமிழர் ஏகாம்பரம் திருகோணமலையில் கொல்லப் பட்ட விசயம் இலங்கைத் தமிழர்களைப் பெரிதும் பாதித்தது. காந்திய அகிம்சை அழிக்கப்பட்டு விட்டது என்று பலரும் வேதனைப் பட்டார்கள். 

அதன் பின்னர் சிங்கள அரசு தன் கோரமான முகத்தை கொடூரமாகக் காட்டத் தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சிங்கள மயமாக்கப் பட்டது. 



தமிழ்க் கல்விப் பாடத் திட்டத்தில் சிங்கள மண்ணின் மைந்தர்களின் பெருமைகளுக்குப் பட்டம் கட்டிப் பறக்கவிடப் பட்டன. சட்டை சிலுவார் போடாமல் எலி ஓடத் தொடங்கியது. என்னையும் பாருங்கள் என் அழகையும் பாருங்கள் என்பதில் கோர வர்த்தனங்கள்.

புத்த மத மாண்புகளும் புத்தரின் சிந்தனைகளும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டன. அரச அலுவலங்கள் எல்லாவற்றிலும்  சிங்களவர்கள் புகுத்தப் பட்டனர். வேலை வேண்டும் எனில் சிங்களம் படிக்க வேண்டும் என நிலை உருவானது. இந்தப் பக்கம் நடக்கிறதே அதே ஜிங்கு ஜிக்கான் கூத்துதான்.

தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை. கல்வி கற்ற தமிழர்கள் பலர் தங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள்.

பெரும்பாலோர்  மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கானா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள்.

தமிழர்கள் உச்சகட்ட விரக்தியில் துடித்து நின்றனர். அந்தக் கட்டத்தில் தான் அடக்குமுறை என்பதை அடக்குமுறையால் அடக்க வேண்டும் எனும் கொள்கை முன்வைக்கப்பட்டது.

இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புலிப்படை என்கிற இயக்கத்தை உருவாக்கினார்கள். அதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. நவரத்தினம் பெரும் பொறுப்பு வகித்தார்.

இருந்தாலும் அந்த புலிப்படை அமைப்பினால் தீவிரமாக இயங்க முடியவில்லை. சிம்க்கள அரசினால் நெருக்குதல்கள். அந்தப் படை தொடங்கிய கொஞ்ச காலத்திலயே நிறுத்தப்பட்டு விட்டது.



அதன் பின்னர் தமிழர்கள் மீதான தாக்குதல்களும் அடக்கு வன்முறைகளும் தெறிக்கத் தொடங்கின. சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் செய்து வந்த தமிழரசுக் கட்சி இலங்கை அரசுடன் இணைந்து தொடர்ந்து பயணித்தது. அங்கே பலவீனம் தலைதூக்கியது.

தமிழரசுக் கட்சி இலங்கை வட பகுதிகலில் ஒரு கூட்டு ஆட்சி முறையை முன்மொழிந்தது. இது தமிழ் இளைஞர்களிடம் பெரும் கோபத்தை உண்டுபண்ணியது.

ஆனாலும் சி.நவரத்தினம் எனும் தமிழ்த் தலைவரும் சுந்தரலிங்கம் எனும் தலைவரும் தனி ஈழம்தான் தமிழர்களுக்கான ஒரே தீர்வு எனும் கோரிக்கையை முன்வைத்தார்கள். அதாவது தமிழர்களுக்கு என தனி ஓர் ஈழம் எனும் கோரிக்கை. தனித்தமிழ் ஈழம் இங்கே இருந்து தான் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

(தொடரும்)

சான்றுகள்;

1. https://en.wikipedia.org/wiki/Origins_of_the_Sri_Lankan_civil_war

2. Spencer. J: Sri Lankan history and roots of conflict.

3. R. Cheran (April 2009) Roots of Sri Lankan conflict at The Real News

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

பரமேஸ்வரா சிங்கப்பூரில் ஆட்சி

சிங்கப்பூரின் முதல் *ராஜா நீல உத்தமன்*. இவர் 1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார். 


இரண்டாவதாக வந்தவர் *ஸ்ரீ விக்கிரம வீரா*. இவர் 1347-ஆம் ஆண்டில் இருந்து 1362-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

மூன்றாவதாக வந்தவர் *ஸ்ரீ ராணா விக்கிரமா*. இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

நான்காவதாக வந்தவர் *ஸ்ரீ மகாராஜா*. இவர் 1375-ஆம் ஆண்டில் இருந்து 1389-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

ஐந்தாவதாக வந்தவர் *பரமேஸ்வரா*. இவர் 1389-ஆம் ஆண்டில் இருந்து 1398-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 



பரமேஸ்வரா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்தாவது ராஜா. கடைசி ராஜா. இவர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா என்று அழைக்கப் பட்டார்.   

பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

செஜாரா மலாயு (Sejarah Melayu) எனும் மலாய் வரலாற்றுக் குறிப்புகள் பரமேஸ்வரா எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஸ்ரீ மகாராஜா எனும் பெயரையே பயன்படுத்தி இருக்கிறது.

மஜாபாகித் அரசு சிங்கப்பூரின் மீது தாக்குதல்கள் நடத்தியதற்கு வேறு ஒரு காரணமும் சொல்லப் படுகிறது. 



பரமேஸ்வராவின் அந்தர்ப்புரத்தில் நிறைய சேவகப் பெண்கள்; வேலைக்காரப் பெண்கள்; மனைவிமார்கள் இருந்தார்கள். சேவகப் பெண்களில் ஒருவருக்கும் வேறு ஓர் ஆடவருக்கும் நெருக்கமான  பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

பரமேஸ்வராவின் மூத்த அமைச்சர்களில் ஒருவர் அதைப் பற்றி பரமேஸ்வராவிடம் சொல்லி இருக்கிறார். அமைச்சரின் வார்த்தைகளைத் தெய்வ வாக்காக நினைப்பவர் பரமேஸ்வரா. அமைச்சர் சொன்னது உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முழுமையாக நம்பவில்லை.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று சொல்வார்களே. உண்மை தான். அந்தப் பெண்ணைப் பற்றி அமைச்சர் தொடர்ந்து புகார் செய்து வந்தார்.

ஒருநாள் பரமேஸ்வராவிற்கு கோபம் எல்லை மீறிப் போனது. அந்தப் பெண்ணை வரவழைத்துக் கடும் தண்டனையை வழங்கி இருக்கிறார். என்ன தண்டனை தெரியுமா.

அரண்மனை வளாகப் பொதுச் சபையில் நிர்வாணக் கோலம் போடும் தண்டனை. அதாவது நிர்வாணமாக நின்று சபையோர் பார்க்கும் படியான தண்டனை. அது கடும் தண்டனை அல்ல. கொடும் தண்டனை. இப்படிப்பட்ட ஒரு தண்டனையைப் பரமேஸ்வரா வழங்கி இருக்கிறார். 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். தன்னுடைய மூத்த அமைச்சரின் ஆலோசனையின் பேரில் தான் பரமேஸ்வரா அந்தத் தண்டனையை வழங்கி இருக்கிறார்.

தண்டனை வழங்கப்படும் போது பரமேஸ்வரா அரண்மனை வளாகத்தில் இல்லை. வேறு எங்கோ இருந்து இருக்கிறார். சான்றுகள் உள்ளன.

அதனால் அந்தப் பெண்ணின் தகப்பனார் ராஜுனா தாப்பா (Rajuna Tapa) என்பவருக்கு பரமேஸ்வராவின் மீது அளவு கடந்த கோபம் ஏற்பட்டது.

பரமேஸ்வராவின் அமைச்சர்களில் ராஜுனா தாப்பாவும் ஒருவராக இருந்தவர். அமைச்சர்களில் இவர் நிதியமைச்சர்.

ஒரு மகளுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுக்கப் பட்டால் எந்தத் தகப்பனுக்குத் தான் கோபம் வராது. எப்படியாவது பரமேஸ்வராவைப் பழி வாங்க வேண்டும் என்று வஞ்சம் வளர்த்துக் கொண்டார். (F2)

அப்போது சுமத்திராவில் ஆட்சி புரிந்த மஜபாகித் பேரரசின் அரசராக விக்கிரமா வர்த்தனா (Wikramawardhana) என்பவர் இருந்தார். இந்த விக்கிரமா வர்த்தனாவிற்கு அந்தப் பெண்ணின் தகப்பனார் ரகசியமாக ஒரு செய்தி அனுப்பினார். 



சிங்கப்பூரின் மீது படை எடுக்க இதுதான் மிகச் சரியான நேரம். அப்படி நீங்கள் படை எடுத்து வந்தால் உங்களின் மஜபாகித் அரசிற்கு முழு ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன். இதுதான் அமைச்சர் ராஜுனா தாப்பா அனுப்பிய அந்தச் செய்தி.

காலம் காலமாகக் காத்துக் கொண்டு இருந்த விக்கிரமா வர்த்தனா சும்மா இருப்பாரா. உடனடியாகக் களம் இறங்கினார். 300 போர்க் கப்பல்கள், பல நூறு சிறு கப்பல்கள் பலேம்பாங் துறைமுகத்திற்கு வரவழைக்கப் பட்டன.

அந்தக் கப்பல்களில் 200,000 மஜபாகித் போர் வீரர்கள் பயணித்தனர். சிங்கப்பூர் கடல் பகுதியைத் தாண்டிய மஜபாகித் வீரர்கள் சிங்கப்பூரைத் தாக்கினார்கள்.

இருந்தாலும் பரமேஸ்வராவின் கோட்டையைத் அவ்வளவு எளிதாகத் தாக்கிச் சிதைக்க முடியவில்லை. அத்துடன் கோட்டையின் உள்ளே செல்லவும் முடியவில்லை.

பரமேஸ்வராவின் கோட்டை பலம் வாய்ந்த கோட்டையாக இருந்து இருக்கிறது. கருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை. இது 1398-ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி.

(1. Tsang, Susan; Perera, Audrey - 2011)

மஜபாகித் படையினர் கோட்டையின் வெளிப்புறத்தில் முற்றுகையிட்டு தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அதனால் கோட்டையின் உள்ளே இருந்த போர் வீரர்களும் பொது மக்களும் வெளியே போக முடியவில்லை. 



அந்த வகையில் அவர்களுக்குச் சரியாக உணவும் குடிநீரும் கிடைக்கவில்லை. பசி பட்டினியால் வாட வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமை.

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கோட்டையின் சேமிப்புக் கிடங்கில் நிறையவே உணவு தானியப் பொருட்களைச் சேகரித்து வைத்து இருந்தார்கள்.

வெளியே இருந்து உணவுப் பொருட்கள் வருவதற்குத் தடை ஏற்பட்டதும் பரமேஸ்வராவின் படை வீரர்களுக்குள் கலகம் மூண்டது. பரமேஸ்வராவிற்கு எதிராகவே வெறுப்பு உணர்வுகள் தோன்றின.

நிலைமை மோசமாகி வருவதைக் கண்ட பரமேஸ்வரா ஒரு கட்டளை பிறப்பித்தார். கோட்டையின் உள்ளே தற்காப்புப் போரில் ஈடுபட்டு இருக்கும் போர் வீரர்களுக்கு உணவுப் பொருட்களைச் வழங்கும்படி அரச கட்டளை.

(2. Sabrizain, Sejarah Melayu)

சமயம் காத்து இருந்த ராஜுனா தாப்பா உணவு எதுவும் இல்லை என்று சொல்லி கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டார். மஜபாகித் படையினர் கோட்டைக்குள் நுழைந்தனர். தயவு தாட்சண்யம் இல்லாமல் எல்லோரையும் வெட்டிக் கொன்றார்கள். 



சிங்கப்பூர் ஆற்றில் இரத்தப் பிரளயமே கரை புரண்டு ஓடி இருக்கிறது. இனியும் அங்கே இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று எண்ணிய பரமேஸ்வரா அரண்மனையில் தப்பிச் சென்றார்.

(3. A. Samad, Ahmad, Sulalatus Salatin)

இந்த நிகழ்விற்குப் பின்னர் தான் *மலாக்கா* எனும் பெயரே மலாயா வரலாற்றில் இடம் பெறுகிறது.

-நூல்: பரமேஸ்வரா, பக்: 45 - 48
-நூலாசிரியர்: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்