தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள். குழந்தையைக் கருவில் சுமந்து பெற்று எடுப்பவர் தாயார். ஆனால் அதே அந்தக் குழந்தையை நெஞ்சில் சுமந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் ஒரு தந்தையார். ஒரு தாயின் அன்பிற்கு நிகரானது ஒரு தந்தையின் பாசம்.
தந்தையர்க்கு மரியாதையும் நன்றியும் சொல்லும் வகையில் தந்தையர் தினம் ஆண்டு தோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாகப் கொண்டாடப் படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைச் செய்யவும்; அதே சமயத்தில் தந்தையர்களுக்குத் தகுந்த மரியாதை செய்யவும் தந்தையர் தினம் தொடக்கி வைக்கப் பட்டது.
தந்தையர்களுக்கு மட்டும் அல்ல முன்னோர்களின் நினைவு விழாவாகவும் அந்த நாளைக் கொண்டாடலாம் எனும் முன்னெடுப்பும் முன் வைக்கப்பட்டது.
அதற்கு முன்னர்... மனதில் பட்டது. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துகிறார். அதே போல அந்தக் குழந்தையின் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைக்கிறார் தந்தை.
அன்னையிடம் அன்பை வாங்கலாம்; தந்தையிடம் அறிவை வாங்கலாம் எனும் பாடல் வரிகள் போதும். அந்த வரிகள் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
ஒளவையார் சொல்லாத விசயம் இல்லை. அவர் ஆத்திச்சுவடியில் சொன்னவை அனைத்தும் முத்து முத்தானவை. அனைத்தும் மண்ணில் பொதிந்த வைர மணிகள்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தையர் தினம் என்பது 1910-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப் படுகிறது. அதற்குக் காரணமாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் (Sonora Louise Smart Dodd) என்கிற பெண்மணி.
இந்தத் தந்தையர் தினம் அப்படி ஒன்றும் சுலபத்தில் கிடைக்கவில்லை. பற்பல போராட்டங்கள். 33 ஆண்டுகள் போராட்டங்கள் செய்து இருக்கிறார்கள்.
1882-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் (William Jackson Smart) என்பவருக்கு மகளாக பிறந்தவர் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட். ஒரே மகள். ஐந்து ஆண் பிள்ளைகள்.

இவர் 16 வயதை அடையும் போது அவரின் தாயார் எல்லன் என்பவர் தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணம் அடைந்தார். அவருடைய தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன் ஆறு பிள்ளைகளையும் தாயாகவும் தகப்பனாகவும் நின்று வளர்த்து எடுத்தார்.
தன் தந்தையின் அந்த அர்ப்பணிப்பு உணர்வுகளை மகள் சொனாரா மறக்கவில்லை. விழிப்பு அடையச் செய்தன. தன் தந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
இந்த நிலையில் 1909-ஆம் ஆண்டு அனைத்துல அன்னையர் தினக் கொண்டாட்டங்களுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப் பட்டது.
அதை அறிந்த சொனாரா தன் தந்தையின் தியாக உணர்வுகள் என்பது அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அவருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என வாதிட்டார்.

தன் தந்தையின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என தேவாலயத்தில் (Knox Presbyterian Church) முதன் முதலாக முன் மொழிந்தார்.
அனைத்துத் தந்தையர்களையும் கெளரவப் படுத்த வேண்டும் என்பது அவரின் விடாப்பிடியான இலட்சியம். தலியாய ஆசை.
1910 ஜூன் 19-ஆம் தேதி அதே அந்தத் தேவாலயத்தில் தன் தந்தைக்காக ஒரு புகழுரைக்கும் ஏற்பாடு செய்தார்.
பாதிரியார்கள் மறுத்து விட்டார்கள். ஏன் என்றால் அந்தக் கட்டத்தில் பாதிரியார்கள் தினம் எனும் புனிதநாள் புகழ்பெற்று விளங்கியது. விட்டால் பாதிரியார்கள் தினம் பாதிக்கப்படும் என்று நினைத்தார்கள்.

பல ஆண்டுகள் போராட்டம். சொனாராவும் விடவில்லை. Father's Day Council எனும் ஓர் அமைப்பை உருவாக்கி ஆதரவு திரட்டினார்.
தந்தையர் தினம் அதிகார்வப்பூர்வ நாளாக அறிவிக்கப் படுவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது. இருந்த போதும் YWCA-இன் ஆதரவினால் சிறிய அளவில் கொண்டாடப்பட்டது.
ஒரு பக்கம் நாடு தழுவிய நிலையில் அன்னையர் தினக் கொண்டாட்டம். இன்னொரு பக்கம் கிராமப்புற அளவில் தந்தையர் தினத்தின் குதூகலக் கொண்டாடட்டம். சரியான போட்டி.
இதில் இளம் பெண்கள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். வயது முதிர்ந்த பெண்கள் எட்டிப் பார்க்கவில்லை. பழசு பெரிசுகளைக் கிழவர்கள் என்று நினைத்து ஒதுக்கி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது.
இப்போது மட்டும் என்னவாம். அன்னைமார்கள் பாட்டிமார்களின் இன ஒதுக்கல் இருக்கத் தானே செய்கிறது. இருந்தாலும் சின்னப் பெண்களுக்கு உற்சாகம். அப்பாமார்களை விடுவார்களா.

அம்மாவுக்கு நிகரனாவர் அப்பா தான் என போர்க் கொடி தூக்கினார்கள். பொதுவாகவே பெண்பிள்ளைகளுக்கு அப்பா என்றால் உயிர். தெரிந்த விசயம். ஆக பெண்பிள்ளைகள் விடுவார்களா.
உள்ளூர் செய்தித் தாட்களில் தந்தையர் தினத்திற்கு எதிர்ப்புகள். அதோடு விட்டால் பரவாயில்லை. நகைச்சுவை, பழிப்பு, பகடி, ஏளனம் கொண்ட கார்டூன்கள் வெளிவந்தன.
1913-ஆம் ஆண்டில் தந்தைய தின மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் கால்வின் கூலிட்ஜ். இவர் 1924-ஆம் ஆண்டில் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தார்.
மேலும் இதன் விடுமுறையை சட்டமாக்குவதற்காக ஒரு தேசியச் செயற்குழு 1930-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அது அப்படியே கிடப்பில் கிடந்தது.
அந்தச் சமயத்தில் சொனாரா படிக்கப் போய் விட்டார். அதனால் தந்தையர் தின முன்னெடுப்பு மங்கிப் போனது. அவர் படித்து வந்ததும் மறுபடியும் தந்தையர் தினப் போராட்டத்தில் களம் இறங்கினார்.
1966-ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினப் பொது விடுமுறைக்கான ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். இருந்தாலும் தூங்கி வழிந்தது.
பின்னர் 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன் தான் முழுமையாகக் களம் இறங்கினார். தந்தையர் தினத்தைப் பொது விடுமுறையாக அங்கீகரித்தார். 33 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தந்தையர் தினம் அதிகாரப் பூர்வமானது.
தந்தையர் தினத்தன்று அமெரிக்க கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடவும் கட்டளை போடப் பட்டது.
1909-ஆம் ஆண்டு சொனாரா எடுத்த முயற்சி இன்று நம் தந்தைகளை நினைவு கூர வழி செய்து உள்ளது. அன்றில் இருந்து அனைத்துலகத் தந்தையர் தினம் பீடுநடை போடுகிறது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப் படுகிறது.
1974-ஆம் ஆண்டு சொனாரா அமெரிக்க உலக வணிக மையத்தினால் (Expo ’74, the World’s Fair) சிறப்பு செய்யப் பட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து தன்னுடைய 96-ஆவது வயதில் சொனாரா காலமானார். உலகத் தந்தையார்களைக் கௌரவிக்கப் போராடிய அவரை வாழ்த்துவோம். நினைவு கூர்வோம்.
இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக் கொண்டு இருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களையும் மறக்க வேண்டாம்.
அப்பா என்பவர் ஒரு பெண்ணின் முதல் காதலர். கடைசி வரையில் அவரே தான் முதல் காவலர்.
உலகில் உள்ள அனைத்துத் தந்தையர்களுக்கும் இந்தக் கட்டுரை என்னுடைய காணிக்கை.
-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
சான்றுகள்:
1. https://en.wikipedia.org/wiki/Sonora_Smart_Dodd -
Sonora Smart Dodd (February 18, 1882 – March 22, 1978) was the daughter of American Civil War veteran William Jackson Smart and was responsible for the founding of Father's Day.
2. https://www.freemalaysiatoday.com/category/leisure/2019/06/16/fathers-day-more-than-60-years-in-the-making/
Mothers are where fathers come from, but where does Father’s Day come from?
3. Emily, Jan (June 20, 2015). "For Father's Day. National Geographic.
கனகரத்தினம் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரபலமான அரசியல்வாதி. தமிழர்களின் துரோகி என யாழ்ப்பாணத்துத் தமிழர்களால் பட்டயம் கட்டப் பட்டவர். அவரே புலிகளின் அடுத்த இலக்கு.

அந்த வகையில் கொள்ளுப்பிட்டியா எனும் இடத்தில் கனகரத்தினம் சுடப் படுகிறார். மூன்று குண்டுகள் பாய்கின்றன. அவருக்கு நல்ல நேரம். காலன் கதவைத் தட்டவில்லை. மயங்கிய நிலையில் சாலையில் சரிந்து போகிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
அவசர சிகிச்சை மூலமாகக் துப்பாக்கி ரவைகள் அகற்றப் பட்டன. கனகரத்தினம் உயிர் பிழைத்துக் கொண்டார்.
தன்னைச் சுட்டது ஒரு கட்டைப் பையன். பக்கத்தில் ஒரு நெட்டைப் பையன் இருந்தான் என போலீஸ் வாக்குமூலத்தில் கனகரத்தினம் சொல்கிறார். யார் இந்தக் கட்டைப் பையன். யார் இந்த நெட்டைப் பையன். சிங்களத்து மேலிடம் கொழும்பு மருத்துவமனைச் சுவர்களில் மண்டையைப் போட்டு முட்டி மோதிக் கொள்கிறது.
இங்கே கட்டைப் பையன் என்றால் பிரபாகரன். நெட்டைப் பையன் என்றால் உமா மகேஸ்வரன். புரியுதுங்களா.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கனகரத்தினம் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தார். பழைய தெம்பு இல்லை. அவரால் அதிக காலம் உயிர் வாழ முடியவில்லை. மூன்று மாதங்கள் கழித்து இறந்து போனார். அப்புறம் என்ன. தமிழர்களுக்குச் செஞ்ச துரோகம் சும்மா விடுமா.
இந்த நிகழ்ச்சி சிங்கள அரசைக் கொதிப்பு அடையச் செய்தது. கோபம் கண்களை மறைத்தது. இதற்கு முன்னர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப் பட்டார். இப்போது கனகரத்தினம்.
இந்த இருவருமே சிங்களவர்களின் ஆத்ம நண்பர்கள். ஆதரவான யாழ்ப்பாணத்துத் தோழர்கள். இந்த இரு இறப்புகளும் சிங்கள அரசை சற்றே ஆட்டம் காணச் செய்தது.

கனகரத்தினத்தைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தால் சுட்டுக் கொல்லுங்கள் என சிங்கள அரசு அதிரடியான கட்டளை போட்டது.
அதற்காக ஒரு தனிப்படையே யாழ்ப்பாணத்தில் உருவாக்கப் பட்டது. கட்டைப் பையனையும் நெட்டைப் பையனையும் விட்டு வைக்கக் கூடாது. ஆபத்து என்று தண்டோரா போட்டது.
அந்தத் தனிப்படைக்குத் தலைமை அதிகாரி பாஸ்தியம் பிள்ளை. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா வழக்கில் பிரபாகரனை மோப்பம் பிடித்து அலைந்த அதே பாஸ்தியம் பிள்ளை தான்.
இவர் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறார் என்று விடுதலைப் புலிகள் அவர் மீது ஏற்கனவே கொலை வெறியில் இருந்தார்கள். மாட்டினாய் மவனே மாறு கை மாறு கால் தான் என்று சீறிக் கொண்டு இருந்தார்கள்.
மீண்டும் அவரா... என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும். கட்டைப் பையனும் நெட்டைப் பையனும் மன்னார் காட்டில் இருப்பதாகப் பாஸ்தியம் பிள்ளைக்குச் செய்தி வருகிறது. உடனடியாகக் களம் இறங்குகிறார்.
1978 ஏப்ரல் 7-ஆம் திகதி. தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரிகள் பாஸ்தியம் பிள்ளை; பாலசிங்கம்; பேரம்பலம். இவர்களுடன் ஜீப் வண்டி ஓட்டுநர். நால்வரும் மன்னார் நோக்கிப் பயணிக்கிறார்கள்.
மன்னார் காட்டை அடைந்ததும் ஜீப் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு காட்டுக்குள் போகிறார்கள்.
அந்தச் சமயத்தில் செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், நாகராஜா ஆகிய மூவரும் அந்த மன்னார் காட்டுக்குள் தான் இருந்தார்கள். அப்போது பிரபாகரன் அங்கு இல்லை. வவுனியா காட்டில் இருந்தார்.

விடுதலைப் புள்ளிகள் பெரும்பாலும் காட்டுக்குள் ஓர் உயரமான மரத்தில் ஒரு சிறிய கண்காணிப்புக் கோபுரத்தைக் கட்டி இருப்பார்கள். அன்றைக்கும் அப்படித்தான். ஒரு மரத்தின் மீது சிறியதாகக் கட்டப்பட்டு இருந்த கண்கானிப்புக் கோபுரத்தில் உமா மகேஸ்வரனும் நாகராஜாவும் இருந்தனர்.
இவர்கள் பாஸ்தியம் பிள்ளையையும் இதர போலீஸ்காரர்களையும் பார்த்து விட்டார்கள். உடனே காட்டு முகாமில் இருந்த செல்லக்கிளிக்குச் செய்தி போகிறது.
செய்தி கேட்டுச் செல்லக்கிளி பதற்றம் அடையவில்லை. சரி வருகிறவர்கள் வரட்டும் என பேசாமல் காத்து நிற்கிறார்.
போலீஸ்காரர்கள் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் செல்லக்கிளியும் தயாராகி விட்டார். அப்போது தன்னோடு இருந்த இரு மெய்க்காவலர்களை அழைத்தார்.
’இந்தா பாருங்க... போலீஸ்காரர்கள் வருகிறார்கள். நீங்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் வரும் பாதையிலேயே போங்கள். நிச்சயம் அவர்கள் உங்களை மறித்து ஏதாவது கேட்பார்கள். பயப்பட வேண்டாம். நான் இருக்கும் இடத்திற்கே கூட்டி வாருங்கள்’ என்று செல்லக்கிளி சொல்கிறார்.
செல்லக்கிளி சொன்னது மாதிரியே மெய்க்காவலர்கள் இருவரும் நடந்து போகிறார்கள். அவர்களை வழி மறிக்கிறார் பாஸ்தியம் பிள்ளை. இரண்டு மூன்று கேள்விகள் கேட்கிறார். தூரத்தில் ஒரு குடிசை. அந்தக் குடிசையைப் போய்ப் பார்க்கலாம் என அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறார்.
அங்கே செல்லக்கிளி அமைதியின் வடிவமாய் நின்று கொண்டு இருந்தார். குடிசையைச் சல்லடை போட்டுச் சோதிக்கிறார்கள். அப்போது அங்கே ஆறு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து உங்களில் யார் பிரபாகரன் என்று உருட்டி மிரட்டிக் கேட்கிறார். சரியான பதில் கிடைக்கவில்லை.
பின்னர் கொஞ்ச நேரம் கழித்து “சரி சரி பிரச்சினை ஒன்னும் இல்ல. சும்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து வச்சிட்டு போங்க” என சொல்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் எப்படிப்பட்ட விருந்தோம்பல் கிடைக்கும்; எப்படிப்பட்ட ராஜ மரியாதை நடக்கும் என்பது எல்லாம் செல்லக்கிளிக்கு நன்றாகவே தெரியும்.

சற்று சுதாகரித்துக் கொண்ட செல்லக்கிளி, அதற்கு என்னங்க தலைவரே. நல்லா போகலாமே... போறதுக்கு முன்னாடி சூடா ஒரு காபி குடிச்சிட்டு போகலாம் தலைவரே என்கிறார்.
பாஸ்தியம் பிள்ளையும் சரி சரி கொண்டு வாங்கோ... குடிச்சிட்டே கிளம்பலாம் என சொல்லி காபி வரும் வரை காத்து இருக்கிறார்,
ஐந்து நிமிடத்தில் காப்பி தயார். மிகுந்த மரியாதையுடன் பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு கோப்பையில் காப்பியை வழங்குகிறார் செல்லக்கிளி. பாஸ்தியம் பிள்ளையும் கையில் இருந்த இயந்திரத் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு காப்பியை வாங்குகிறார். அம்புட்டுத் தான்.
கண் இமைக்கும் நேரம் தான். பாஸ்தியம் பிள்ளை காப்பியை வாங்கி வாயில் வைக்கவில்லை. அதற்குள் கீழே வைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கியைப் பாய்ந்து எடுக்கிறார் செல்லக்கிளி.
அடுத்த சில விநாடிகளில் இரண்டு குண்டுகள் பாஸ்தியம் பிள்ளையின் மார்பில் பாய்கின்றன. மற்ற போலீஸ்காரர்கள் தடுக்க வருகிறார்கள். அவர்களையும் போட்டுத் தள்ளுகிறார் செல்லக்கிளி.
பாஸ்தியம் பிள்ளை, பாலசிங்கம், பேரம்பலம், ஜீப் டிரைவர் நால்வரும் அதே இடத்தில் உயிரை விடுகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரையும் அருகில் இருந்த கிணற்றில் வீசி விடுகிறார்கள்.
அதன் பின்னர் போராளிகள் அனைவரும் போலீஸ்காரர்கள் கொண்டு வந்த ஜீப் வண்டியிலேயே ஏறி கிளிநொச்சி நோக்கிச் செல்கிறார்கள். கிளிநொச்சியை அடைந்ததும் போலீஸ்காரர்களின் ஜீப் வண்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார்கள். அப்புறம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாகப் பிரிந்து போய் விடுகிறார்கள்.
அதன் பின்னர் இலங்கை முழுவதும் போலீஸ்காரர்கள் கொலைகளைப் பற்றிய பேச்சு தான்.
ல நாட்களில் உமா மகேஸ்வரன்; செல்லக்கிளி இருவரும் பிரபாகரனை வவுனியா காட்டுக்குள் சந்திக்கிறார்கள். செல்லக்கிளியைப் பார்த்ததும் பிரபாகரன் ஓடோடி வந்து கட்டி அணைத்துக் கொள்கிறார்.
“தமிழர்களின் வரலாற்றில் காலா காலத்திற்கும் நினைவில் நிற்கும் ஒரு வேலையை செய்து இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். இத்தனைக் காலமும் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பயிற்சிகள் எடுத்த புலிகளுக்குப் புதிய இயந்திரத் துப்பாக்கிகள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
அப்போது உமா மகேஸ்வரன் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.
“இறந்து போன துரோகிகளைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்கிறார்.

பிரபாகரனுக்கும் சரி என படுகிறது. இதன் படியே துரோகிகளின் பெயர்களைப் பட்டியலாகத் தயாரித்து கொழும்புவிற்குக் கொண்டு செல்கிறார் உமா மகேஸ்வரன். அப்போது தான் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார் உமா மகேஸ்வரன். திருமணமாகி விவாகரத்தான ஊர்மிளா எனும் பெண். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தியது இந்தப் பெண்மணிதான். பின்னர் தெரிந்து கொள்வோம்.
தாங்கள் வஞ்சம் தீர்த்த பதினொரு பேரின் பெயர்களையும் தட்டச்சு செய்து அதன் கீழே புலிகள் என பெரிய எழுத்தில் எழுதுமாறு கேட்டார். அதன் படியே துரோகிகள் என ஒரு கடிதம் உருவானது. அந்த கடிதம் பின்வருமாறு இருந்தது.
“யாழ் நகர் மேயர் ஆல்பிரட் துரையப்பா தொடங்கி பாஸ்தியம் பிள்ளை வரை மொத்தம் 11 பேரை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் தான் கொன்றோம். புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள், இப்போது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இயங்கி வருகிறோம்.
இந்தக் கொலைகளுக்கு எந்த ஒரு தனி நபரோ வேறு எந்த ஓர் இயக்கமோ பொறுப்பு ஏற்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படி ஓர் அதிகாரப் பூர்வமான கடிதம் அச்சிடப்பட்டு இலங்கை அதிபர்; இலங்கைப் பிரதமர்; அனைத்து இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது.
இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் இடி விழுந்தது போல கிறுகிறுப்பு. அதைத் தொடர்ந்து இலங்கையின் தெற்கு பகுதிகள் முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. இலங்கை அரசுக்குப் பல இடங்களில் இருந்தும் அழுத்தங்கள்.
விழித்துக் கொண்ட இலங்கை அரசாங்கம் தேடப் படுவோர் பட்டியலை வெளியிட்டது. அதில் 38 பெயர்கள். தலைவர் பிரபாகரன் பெயரும் இடம் பெற்று இருந்தது.
அதில் பெரும்பாலானோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் சிலர் அவர்களாகவே முன் வந்து சரண் அடைந்தார்கள். இருந்தாலும் மிக முக்கியமான விடுதலைப் புலிகள் அகப்படவில்லை.
இது இப்படி ஒரு புறம் இருக்க அடுத்து ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பிரபாகரன் முடிவு செய்கிறார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரத்தை முன் வைத்து அரசாங்கத்தை கதி கலங்கச் செய்ய வேண்டும் என்கிற முடிவு. என்ன செய்யலாம். யோசிக்கிறார் பிரபாகரன்.
ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் காரியமாக இருக்க வேண்டும். ஆனால் பொது மக்களுக்கு எந்த வித சேதமும் இருக்கக் கூடாது. அந்த வகையில் இலங்கை விமானம் ஒன்றை வெடிக்கச் செய்வது என முடிவு செய்கிறார்கள்.
அதன் படி 1978 செப்டம்பர் 7-ஆம் தேதி பலாலி (Palaly) விமான நிலையத்தில் இருந்து ரத்மலானா (Ratmalana Airport) விமான நிலையத்திற்குச் செல்லும் விமானம் தேர்ந்து எடுக்கப் படுகிறது. காரியத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார்கள்.
Sri Lanka Air Force Avro 748 CR835 was shot down on 28 April 1995 by a SA-7 missile fired by the LTTE. The plane, an Avro 748-334 Srs. 2A airliner, was en route to Ratmalana Airport and was shot down soon after take-off from SLAF Palaly. All 51 crew and passengers were killed.
இலங்கை அரசு அதை எதிர்பார்க்கவே இல்லை. உலகமே திகைத்துப் போனது. யார் செய்தார்கள் என்பதை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதலைச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் கடிதம் வெளியாகிறது.
தங்களுக்கு எதிராக ஒரு பெரிய அமைப்பு உருவாகி விட்டதை இலங்கை அரசு முழுமையாக பரிபூரணமாக உணர்ந்தது. இனிமேலும் இதை இப்படியே விட்டு வைத்தால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கே ஆபத்து என்பதையும் உணர்கிறது. அதன் விளைவாக இலங்கை முழுக்கச் சல்லடை போட்டுத் தேடி தமிழீழ இளைஞர்களை கைது செய்கிறது.
(தொடரும்)
மனிதர்கள் அனைவரையும் வரலாறு படைக்கின்றது. ஆனால் அந்த வரலாற்றில் ஒரு சிலர் தான் வரலாறு படைக்கின்றார்கள். படைத்துச் சாதனையும் செய்கின்றார்கள். அப்படிப் பட்ட அபூர்வமான மனிதப் பிறவிகளில் ஒருவர் தான் பிரபாகரன் வேலுப்பிள்ளை.
அந்தப் பாவனையில் பிரபாகரன் யுகம் எனும் ஒரு புது யுகம் விரைவில் தோன்றும். வாய்ப்புகள் உள்ளன.
யுகம் என்பது இந்துக்களின் காலக் கணிப்பு முறை. காலத்தை அளக்கும் அலகுகளில் கிருத யுகம்; திரேதா யுகம்; துவாபர யுகம்; கலியுகம் என நான்கு யுகங்கள். அந்த யுகங்களில் பிரபாகர யுகத்தைச் சேர்க்கவில்லை. அந்த யுகங்கள் வேறு. இந்த யுகம் வேறு. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாமே. யுகங்கள் தோன்றும். மறையும். அவை காலக் கணிப்பு முறைகள்.
பிரபாகரன் யுகம் என்பது தனி ஒரு காலச்சுவடு. அப்படி ஒரு தனி யுகம் தோன்றலாம். இது ஒரு கணிப்பு.

இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்குத் தமிழினத்தை அந்தப் பிரபாகர யுகம் தூக்கிச் சென்று நிறுத்தி வைத்துச் சிகரம் பார்க்கலாம். அதை அப்போதுதான் அப்போதைய தமிழினம் உணர்ந்து பார்க்கலாம்.
இன்றைய நிலையில் பார்த்தால் தமிழன் யார் என்பதை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரபாகரன். வேறு யாரும் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு நாட்டின் வரலாற்றை மட்டும் அல்ல. உலகின் பல பகுதிகளின் வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது ஈழப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் நாயகன் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
உலகத் தமிழினத்தின் எண்ணம்; அந்த இனத்தின் சொல்; அந்த இனத்தின் செயல் அனைத்தும் மாற்றம் அடைவதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் பிரபாகரன்.

உலகத் தமிழர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டியவர். சோம்பிச் சுருங்கிக் கிடந்த ஓர் இனத்தைத் தட்டி எழுப்பியவர். அதோடு அதை நிறுத்திவிட முடியாது.
புலம் பெயர்ந்து சென்ற இடங்களில் மறைந்து மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து பேச வைத்தவர் இதே இந்தப் பிரபாகரன் தான். இவரை மறக்க முடியுமா. சொல்லுங்கள்.
பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பிரபாகரன் பெற்றார் என்று சென்ற கட்டுரையில் சொல்லி இருந்தேன்.

சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இலட்சக் கணக்கான தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
உலகின் இதர போராளிக் குழுக்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இருந்தன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அல் காயிடா போன்ற இதர கும்பல்களுடனும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இல்லவே இல்லை.
பர்மா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைமறைவு இயக்கங்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளின் இரகசியப் பரிமாற்றங்கள் இருந்தன. உண்மை. ஆனால் அதைத் தப்பு தப்பாகச் சொல்லி அமெரிக்காவும் அதன் பிஸ்தா பிஸ்கட்டுகளும் பட்டயம் கட்டின. உலகப் பயங்கரவாதப் பட்டியலில் புலிகளைச் சேர்த்தும் வைத்தன.

இந்தியாவும் பாகிஸ்தானும் அதே நீலாம்பரி ராகத்தைத் தான் வாசித்தன. அவர்கள் பாடினால் ஆனந்த பைரவிகள். புலிகள் பாடினால் காம்போதிகள். என்னங்க இது. அர்த்தம் இல்லாத ராக மாளிகைகள்.
ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்கா. அது தெரியுமா உங்களுக்கு. ஆளை விடுங்கோ சாமி என்று ரஷ்யா ஓடியதும் ஆப்கானிஸ்தானில் மஞ்சள் குளிக்கலாம் என்று ஆசைப் பட்டது அமெரிக்கா. இந்தப் பக்கம் பாகிஸ்தானை உசுப்பி விட்டதும் அமெரிக்கா தான்.
ஏன் என்றால் ரஷ்யாவும் இந்தியாவும் காலா காலத்துக் கூட்டாளிகள். அது அமெரிக்காவுக்குக் காலா காலத்துக்கும் பிடிக்காது. வேட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதில் அமெரிக்கா ஓர் அசத்தல் மன்மதக் குஞ்சு.
பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது என்பது ஆயக் கலையில் அமெரிக்கா உருவாக்கிய அறுபத்து நான்காவது ஆயம்மா கலை. விடுங்க. வயிற்றெரிச்சலை இப்படியாவது கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை நல்லபடியாக நடத்தி இருந்தால் தமிழர்கள் ஏங்க துப்பாக்கியைத் தூக்க வேண்டும். சிங்களங்கள் ஏங்க சட்டையைக் காணோம் சிலுவாரைக் காணோம் என்று ஓட வேண்டும். புனிதமான புத்தரைக் கும்பிடுபவர்களுக்குப் புத்தி சரியாக இருந்து இருக்க வேண்டுமே. மன்னிக்கவும்.
இப்ப மட்டும் என்னவாம். சகோதர முஸ்லீம்கள் அங்கே பழி வாங்கப்பட வில்லையா. என்ன செய்வது. சிங்களப் புத்தி சிங்களாத் தான் போகுமாம்.
1970-ஆம் ஆண்டுகளில் தென் லெபனான் நாட்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இணைந்து தமிழீழப் புலிகள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அதைக் காரணம் காட்டி தமிழீழப் புலிகளைச் சிவப்புப் பட்டியலில் சேர்த்தார்கள். அதில் இருந்து புலிகளுக்கு ஆயுதப் பரிமாற்றத்தில் இடைஞ்சல்கள் ஏற்பட்டன. சரி.

வவுனியா காடுகளில் விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சி முகாம் அமைக்கப் பட்டது என்று சொன்னேன். அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்.
புதிதாக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பின்வரும் செயல்கள் தடைசெய்யப் பட்டன
1. மது அருந்தல்
2. புகைப்பிடித்தல்
3. பெண்களுடன் தொடர்பு
4. இயக்க இரகசியங்களை வெளிவிடுதல்.
இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட குற்றங்கள்.
அமைப்பில் சேரும் ஒருவர் சேர்ந்ததும் அவருடைய குடும்பத்துடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியமானது. அமைப்பை விட்டு வெளியேறுபவர் புதிய இயக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடாது.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் வரையறை செய்தார்கள். அதாவது
1. காட்டிக் கொடுக்கும் தமிழர்களை அகற்றுதல்
2. மத்திய அரசின் நிர்வாகத்தை முடக்குதல்
3. இலங்கைத் தமிழர்ப் பகுதிகளில் உள்ள இராணுவத்தை அகற்றுதல்
மறைந்து இருந்து தாக்கிவிட்டு ஓடி மறையும் கொரில்லா தாக்குதல் படையாக இருந்து படிப்படியாக ஓர் இராணுவமாக உருவாக வேண்டும். அதற்கு திட்டமிடல்கள் அவசியம் என முடிவு செய்தார்கள்.
இதற்கிடையில் தியாகி சிவக்குமரனைக் காட்டிக் கொடுத்தது நடராஜன் எனும் தமிழர்தான் எனத் தெரிய வருகிறது.
காட்டிக் கொடுப்பது குற்றம். அதுவும் தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுப்பது மிகப் பெரியக் குற்றம். துரோகிகள் வாழத் தகுதியற்றவர்கள். அதுவே அவர்களின் தலையாய வெறுப்பு.

பிரபாகரனின் கட்டளைக்கு இணங்க நடராஜன் அவரின் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போதுதான் சிங்கள அரசு உச்சக் கட்டப் பயத்தை உணர்கின்றது. ஆழமான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் ஓர் அமைப்பு தங்களுக்கு எதிராக உருவாகி விட்டதை உணரத் தொடங்கியது.
இந்தச் சமயத்தில் உருவான ஈரோஸ் இயக்கம் எனும் தமிழர் இயக்கம் சற்று பிரபலம் அடைந்து வந்தது. அதன் தலைவர் இரத்தினசபாபதி. அப்போது அவர் லண்டனில் இருந்தார்.
அந்த ஈரோஸ் இயக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே வவுனியா காடுகளில் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த இயக்கமும் சற்று பிரபலமாகி வந்தது. அதற்குக் காரணம் அதன் தோற்றுநரான இரத்தினசபாபதி. இவருக்குப் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.
அப்போதைய பாலஸ்தீனத்தின் லண்டன் தூதுவராக சைய்ட் முகம்மது என்பவர் இருந்தார். இவர் இரத்தினசபாபதியின் நெருங்கிய நண்பர்.

அந்த வகையில் ஈரோஸ் அமைப்பில் இருந்த சிலர் லெபனானுக்கு ஈரோஸ் அமைப்பின் மூலமாக நவீன போர்ப் பயிற்சிகளைப் பெற்றார்கள்.
அவர்களின் ஒருவர் அருளர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா பயிற்சி முகாமுக்குச் சென்று மாறுபட்ட பயிற்சிகளை வழங்கினார். அதோடு விடுதலைப்புலிகளில் சிலரை லெபனான் நாட்டுக்கும் அழைத்துச் சென்றார். பயிற்சி வழங்கினார்.
இந்தக் கட்டத்தில் உமா மகேஷ்வரன் என்னும் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.
பிரபாகரனை விட உமா மகேஷ்வரன் பத்து வயது மூத்தவர். நன்றாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகள் பேசத் தெரிந்தவர், அதனால் அவருக்குச் சற்று உயர்வான இடத்தைப் பிரபாகரன் வழங்கினார்.
இந்தச் சமயத்தில் யாழ்ப்பாணத்தின் குரலாக ஒலித்த அண்டன் பாலசிங்கத்தின் தொடர்பும் புலிகளுக்கு கிடைக்கிறது. அண்டன் பாலசிங்கம் ஒரு பத்திரிக்கையாளர். விடுதலைப் போரில் இறுதி வரை பணியாற்றியவர்,
யாழ்ப்பாணத்து மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட காலக் கட்டத்திற்கு வருகிறோம். அல்பிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர் பிரபாகரனைப் போலீசார் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு நாள் யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரி பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. மன்னார் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும் அந்த குழுவில் பிரபாகரனும் மற்றும் அவருடைய நண்பர்கள் உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகியோர் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது.

இந்தப் பாஸ்தியம் பிள்ளை தான் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகள் செய்து வந்தவர்.
இந்தச் சமயத்தில் கனகரத்தினம் எனும் அரசியல்வாதியும் சிங்களர் பக்கம் சாய்ந்து விட்டார். இவரை எப்படியோ அவர்கள் விலைக்கு வாங்கி விட்டார்கள். இவர் யாழ்ப்பாணத்தில் பொத்து எனும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழர்கள் தான் ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்கள்.
இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றாலும் சிங்களவர்களின் ஆசை வார்த்தைகளால் தடம் மாறிப் போனார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.
இவருக்கு துரோகி எனும் முத்திரை குத்தப் பட்டது. இவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். திட்டம் தீட்டப் படுகிறது.
உமா மகேஸ்வரன் கொழும்புக்குச் செல்கிறார். அங்கே கனகரத்தினத்தின் நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குக் கவனிக்கிறார்.
உமா மகேஸ்வரன் முழுமையாகத் தகவல்களைத் திரட்டியம் பிரபாகரனுக்கு அறிவிக்கிறார். பிரபாகரனும் கொழும்புக்குப் போகிறார்.
1978 ஜனவரி 26-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இரயில் ஏறி மறுநாள் கொழும்புக் கோட்டையை வந்து அடைகிறார். இரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரன் பிரபாகரனுக்காகக் காத்து நிற்கிறார். பின்னர் கொழும்பு நகரில் உள்ள கொள்ளுப்பிட்டியா எனும் இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள். அங்கே தான் கனகரத்தினத்தின் வீடு இருந்தது.
காலை 9 மணிக்கு கனகரத்தினம் வெளியே வருவார் என்பது அவர்களின் கணிப்பு.. அதே போல கனகரத்தினமும் வெளியே வந்து காரை நோக்கி நடக்கிறார். அவருக்காக காத்திருந்த பிரபாகரன் சட்டென கனகரத்தினத்தை நோக்கி ஓடி சுடுகிறார்.
மூன்று குண்டுகள் கனகரத்தினத்தின் உடலைத் துளைக்கின்றன. கனகரத்தினம் தரையோடு சாய்கிறார். பிரபாகரன் ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். உமாமகேஸ்வரன் வேறு ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். அவர்களால் தப்பிக்க முடிந்ததா. நாளைய கட்டுரையில் பார்ப்போம்.
(தொடரும்)
இலங்கை என்பது இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த ஒரு சீதனம். மனித குலம் நிறைந்து நிம்மதியாக வாழ வேண்டிய ஓர் அற்புதமான பச்சை மண். ஆனால் இன்று அப்படி இல்லைங்க. இனவாதம் என்பது பேரினவாதமாக மாறி அந்தச் சொர்க்க பூமியைச் சுடுகாட்டுப் பூமியாக மாற்றிப் போட்டு விட்டது.
அந்தப் பூமியில் இன்றையக் காலக் கட்டத்தில் கண்ணுக்குத் தென்படுவது எல்லாமே புலிகள் தான். தொட்டாலும் புலிகள். விட்டாலும் புலிகள். அட எட்டிப் போனாலும் புலிகள்.
அரசாங்கத்தை எதிர்ப்பவர் ஒரு தமிழராக இருந்தால் அவர் ஒரு தமிழ்ப் புலி. அவரே ஒரு சிங்களராக இருந்தால் அவர் ஒரு சிங்களப்புலி. வெள்ளைக்காரராக இருந்தால் அவர் ஒரு வெள்ளைப்புலி. ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவராக இருந்தால் அவர் ஒரு நீக்ரோ புலி. அரசாங்கத்திற்குப் பிடித்த புலி மஞ்சள் புலி. கோடிக் கோடியாய் காசு கொடுக்கும் டிரகன் புலி.
அந்த மாதிரியான பாசிசக் கொள்கைகள்தான் அங்கே தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றை எதிர்த்த சிங்களர்களும் பலர் உள்ளனர். அதன் பாதிப்புகளினால் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று வாழும் சிங்களப் பத்திரிகையாளர்களும் உள்ளனர்.

அவர்களில் பாஷ்னா அபிவர்தனே; பிரட்ரிகா ஜான்ஸ்; தாராக்கி சிவராம்; நமால் பிரேரா; பிரகீத் எக்னலிகொடா; லசாந்தா விக்ரமதுங்கா
Bashna Abivartne;
Fredrica Jones;
Taraki Sivaram;
Namal Perera;
Prageeth Ekneligoda;
Lasantha Wickrematunge
போன்றவர்களைச் சொல்லலாம். இவர்கள் சிங்களப் புலிகளின் எடுத்துக் காட்டுகள். அதனால் தான் அந்த நாட்டு அரசாங்கம் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகப் பார்க்கிறது. சுற்றுப் பயணிகளைக்கூட ஒரு மாதிரியாகப் பார்த்து பயப்படுகிறது. தமிழ்ப்புலிகள் மீது இருந்த பயம் இன்னும் விட்டுப் போகவில்லை.
ஒரு மனிதன் அவனுடைய அன்பு, அறிவு, பண்பு எனும் மனிதப் பிறப்புக்கு உரிய தன்மைகளுடன் இலங்கையில் வாழ இயலவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் எழுதி இருந்தார். அது தமிழர்களுக்கு மட்டும் சொல்லப்பட்ட நீதி நியதி அல்ல; சிங்களர்களுக்கும் சேர்த்து தான். அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

இலங்கை இப்போது மெல்ல மெல்ல சீனாவின் முதலைப் பிடியில் சிக்கி வருகிறது. இன்னும் கொஞ்சம் நாட்களில் இலங்கை எனும் நாடு சீனாவிற்குச் சொந்தமான கைப்பாவை நாடாக மாறிப் போகலாம்.
இலங்கையின் அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் முதலாளிகள்; சீனர்கள் தான் தொழிலாளர்கள். இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை உருவெடுக்கும். அதற்கான அடித் தளத்தை சீனா இப்போதே சீரும் சிறப்புமாய் அமைத்து விட்டது.
தமிழ்ப்புலிகளின் போர் 2009-ஆம் ஆண்டு முடிந்து விட்டது. இருந்தாலும் தமிழர்கள் அவர்களின் உரிமைகளை இழந்து அனாதைகளாக ஆக்கப்பட்டது பற்றி இலங்கை அரசுக்கு கொஞ்சமும் கவலையும் இல்லை.
ஒன்று மட்டும் உண்மை. அடுத்த சில ஆண்டுகளுக்குள் அங்கே ஒரு பெரிய மௌனமான போர் நடக்கும். அதாவது பொருளாதாரப் போர். அதில் மனித உயிர் இழப்புகள் இருக்கா. ஆனால் இலங்கை எனும் நாடு சிங்களர்கள் கையில் இருந்து கைநழுவிப் போகும்.

ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று கொண்டு இலங்கையைக் கபளீகரம் செய்யப் பார்க்கின்றன.
அம்பாந்தோட்டை (Hambantota) விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், நுரைசோலை அனல் மின் நிலையம் (Norocholai Power Station), கொழும்பு துறைமுக விரிவாக்கம், இரயில் பாதை புனரமைப்பு வேலைகள் என எல்லா வேலைகளையும் சீனா செய்து முடித்து விட்டது.
இதிலும் ஒரு பெரிய வேடிக்கை. அம்பாந்தோட்டை துறைமுகம் 450 கோடி ரிங்கிட் செலவில்; சீனா கொடுத்த கடனில் கட்டப் பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுங்களா.
இலங்கைக் கடல் வழியாக ஒரு நாளைக்கு 165 கப்பல்கள் போகின்றன வருகின்றன. ஆனால் ஒரே ஒரு கப்பல் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குப் போகிறது. 2017-ஆம் ஆண்டில் 48 கப்பல்கள் தான் போய் இருக்கின்றன.

ஆக வட்டிக் கடனைக் கட்ட முடியாமல் இலங்கை விழி பிதுங்கி நின்றது. அப்புறம் வேறு வழி இல்லாமல் அந்தத் துறைமுகத்தைச் சீனாவிடமே 99 ஆண்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடடது.
சீனாவைக் காட்டி இந்தியாவிடமும்; இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லி பணத்தை இலங்கை அரசு சுரண்டி வருகிறது.
புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு மார் தட்டிக் கொண்டாலும் அடுத்து அது எதிர்கொள்ளப் போகும் பெரும் பெரும் ஆபத்துகளை இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்தத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்ட கையூட்டுகள் மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்லப் படுகிறது. வரப் போகும் ஆபத்தை உணராமல் தலையை ஆட்டியவாறு இருக்கிறதை எல்லாம் தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதைப் பற்றி கேள்வி கேட்டால் கேட்டவர்கள் அரசாங்கத்தின் எதிரிகள். இதில் தமிழர், சிங்களர் என்கிற வித்தியாசம் இல்லை.
1990-ஆம் ஆண்டுகளில் முன்னாள் அதிபர் பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில்தான் இனவாத அடக்குமுறைகள் தலைதெறிக்க கட்டவிழ்த்து விடப் பட்டன. இப்போதைய அதிபர் ராஜபக்சாவின் காலத்தில் நிலைமை மிக மிக மோசமாகி விட்டது.
சுருக்கமாகச் சொன்னால், நெருக்குதல் கொடுப்பவர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்.
அந்த நாட்டில் உள்ள அனைத்தும் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சாவிற்குக் கட்டுப்பட்டது. அதுதான் அங்கே இன்றைய மக்களாட்சிக் கொள்கை. ஈழத் தமிழர்களின் வீர வரலாற்றில் இன்றைய இலங்கையின் அரசியலும் ஒரு பகுதியே. நினைவில் கொள்வோம். சரி. பிராபகரன் வரலாற்றிற்கு வருவோம்.

வவுனியா காடுகளில் தமிழ்ப்புலிகளின் பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. நிதிப் பற்றாக்குறையே மூல காரணம். பிரபாகரனின் கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்து விட்டது. அதே சமயத்தில் போராளிகள் கொண்டு வந்த பணமும் முடிந்து விட்டது.
இனிமேல் போய் எங்கேயும் உழைத்துச் சம்பாதிக்க முடியாது. அதற்கு எல்லாம் நேரமும் இல்லை. காலமும் இல்லை. வெளியே போய் சம்பாதிக்க இடமும் இல்லை. ஆனால் போராட்டம் தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாகப் பணம் தேவை. என்ன செய்வது.
போராளிகளில் ஒருவர் சொல்கிறார். சிவக்குமரன் அண்ணா செஞ்சது மாதிரி ஒரு சிங்கள வங்கிக்குப் போய் கொள்ளை அடிக்கலாம்.
அந்தக் கருத்திற்கு முதலில் எதிர்ப்பு. பிரபாகரன்கூட மறுப்புத் தெரிவித்தார். இருந்தாலும் அந்த நேரத்தில் வடக்கு இலங்கைத் தமிழ் மக்களின் வரிப் பணம் எல்லாம் கீழே தெற்குப் பகுதியில் இருக்கும் சிங்களருக்குச் செலவு செய்யப் பட்டு வருகிறது எனும் ஓர் அதிருப்தி பரவலாக இருந்தது.
அதனால் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு சிங்கள வங்கியைக் கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அரசாங்கத்திற்குத் தான் நட்டம். மக்களுக்கு இல்லை என முடிவு எடுத்தார்கள். பிரபாகரனும் சரி என்று சொன்னார்.

அதன் பின்னர் பல வங்கிகள் தேர்ந்து எடுக்கப் பட்டன. கண்காணிக்கப் பட்டன. கடைசியில் யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஒரு வங்கி தேர்வு செய்யப் பட்டது.
1976 மார்ச் 5-ஆம் தேதி வங்கிக்குள் நுழைந்தார்கள். 5 இலட்சம் ரொக்கப் பணம்; 2 இலட்சம் மதிப்பு நகைகள் கைவசம்.
பணம் பத்திரமாகப் பதுக்கி வைக்கப் படுகிறது. ஆனாலும் பிரபாகரனுக்கு அந்த நிகழ்ச்சி மனதை ரொம்பவுமே உறுத்தி விட்டது. என்னதான் அரசாங்கப் பணம்; அடுத்தவன் பணம் என்றாலும் கொள்ளை அடித்தது தப்பு இல்லையா. வேதனைப் பட்டார். அவரை மற்றவர்கள் சமாதானம் செய்தனர்.
எடுத்த பணத்தில் ஒரு பகுதியை முத்துமாரி அம்மன் கோயிலின் அன்ன தானத்துக்குக் கொடுத்து விடலாம் என முடிவு செய்தார்கள். அதே போல ஒரு பகுதி நிதியைக் கோயிலுக்கு வழங்கினார்கள். எஞ்சிய பணம் உடை உணவு ஆயுதங்களுக்குச் செலவு செய்யப் பட்டது.
வங்கி கொள்ளைக்குப் பின்னர் சிங்கள அரசு உஷாரானது. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. சிங்களத்திற்கு எதிராக ஒரு பெரிய புரட்சிப்படை உருவாகி வருகிறது என்பதையும் அந்தச் சிங்களம் நன்றாகவே உணரத் தொடங்கியது.

அது அப்படியே இருக்கட்டும். இந்தப் பக்கம் வவுனியா காடுகளில் பிரபாகரனின் பயிற்சி தொடர்கிறது. போராளிகளும் புதிது புதிதாதக் கற்றுக் கொள்கிறார்கள்.
இந்தக் கட்டத்தில் பிரபாகரன் வேறு ஒரு திட்டத்தையும் கொண்டு வந்தார். இப்படியே பயிற்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு இருந்தால் பேர் போட முடியாது. நமக்கு என தனியாக ஓர் இராணுவம் வேண்டும். அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என பிரபாகரன் முடிவு செய்தார்.
அந்த முடிவின்படி 1976 மே 5-ஆம் தேதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப் பட்டது. ஈழப்புலிகள் என பெயர் வைக்கலாம் என்று தான் முதலில் நினைத்தார்கள். ஆனால் பிரபாகரனுக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை.
அதற்கும் காரணம் இருந்தது. ஈழம் என்றால் இலங்கையைக் குறிக்கும் சொல். ஆக ஈழப்புலிகள் என்றால் இலங்கை நாட்டின் புலிகள் என பொருள்படும். ஈழப்புலிகள் வேண்டாம். தமிழருக்காக ஒரு நாடு வேண்டும். அதன் பெயர் தமிழீழ நாடு.

தமிழீழ நாட்டின் விடுதலைக்காகப் போராடுவதால் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் என பெயர் வைப்போம் என்கிறார் பிரபாகரன். அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படித்தான் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கம் தோன்றியது.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான சின்னத்தையும் கொடியையும் வடிவமைக்க பிரபாகரன் தமிழகம் வந்தார். ராஜபாளயத்தைச் சேர்ந்த ஓவியர் ஒருவரைச் சந்தித்தார்.
பிரபாகரனின் எண்ணத்திற்கு ஏற்றவாறு வடிவம் கொடுத்து சின்னத்தையும் கொடியையும் அந்த ஓவியர் அமைத்துக் கொடுதார். அந்த ஓவியர் முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுற்குப் பின்னர் மரணம் அடைந்தார் என்பதும் மற்றொரு கால்ச்சுவடு.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாகி விட்டது. அது ஒன்றும் சும்மா பெயருக்காகவும் புகழுக்காகவும் உருவாகி விடவில்லை. அந்த இயக்கத்தில் பற்பல கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பாக மதுப் பழக்கம். அடுத்து மாதுப் பழக்கம்.
1971-ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள இனத்தவரிடையே கிளர்ச்சி. சொல்லி இருக்கிறேன். அந்தக் கிளர்ச்சிக்கு முன்னணி வகித்தது ஜே.வி.பி. கட்சி. அந்தக் கட்சியில் மது மாது பழக்கத்திற்கு அடிமையாகிப் போன பலர் இருந்தார்கள். செக்ஸ் விசயத்தில் ரொம்பவே பலகீனங்கள் இருந்தன. அவைதான் கிளர்ச்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் பற்றியும் பிரபாகரன் தெரிந்து வைத்து இருந்தார்.
ஆகவே அப்படிப்பட்ட இழிநிலைகள் இங்கே தமிழர் படையில் ஏற்படுவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. அதைப் பற்றி விவாதிக்க ஓர் அரசியல் ஆய்வுக் குழு உருவாக்கப் பட்டது. அந்தக் குழுவில் 1. செல்லக்கிளி; 2. ஐயர்; 3. நாகராஜன்; 4. விக்னேஸ்வரன்; 5. பிரபாகரன் என ஐந்து பேர் இருந்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிரந்தர இராணுவத் தளபதி; நிரந்தரத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏகமனதான முடிவு செய்யப் பட்டது. இப்படித் தான் பிரபாகரன் தமிழீழ மக்களின் தலைவரானார். உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பெற்றார்.
சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இத்தனை இலட்சம் தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள். காற்று வெளியில் கலந்து போன அந்த வீரத் திலகங்களுக்கு வீர வணக்கங்கள்.
(தொடரும்)
சான்றுகள்1.http://www.srilankaguardian.org/2014/02/ramblings-in-search-of-tigers-foot.html
2.https://www.straitstimes.com/asia/south-asia/inside-chinas-us1-billion-port-in-sri-lanka-where-ships-dont-want-to-stop
3.https://en.wikipedia.org/wiki/Affiliates_to_the_Liberation_Tigers_of_Tamil_Eelam#State_affiliations
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடங்கி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சிங்கள அரசியல்வாதிகளால் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு ஏராளமான துன்பங்கள் துயரங்கள். ஏராளமான வேதனைகள் சோதனைகள். ஏராளமான கெடுமைகள் கொடுமைகள்.
ஈழத் தமிழ்த் தலைவர்கள் தொடக்கக் காலத்தில் காந்திய அகிம்சைப் போராட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி வந்தனர். அதுவே பின்னர் காலத்தில் ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்டது. என்னைக் கேட்டால் சுதந்திரத் தாகம் என்பது ஒரு சின்ன விதை மட்டுமே. ஓர் ஆலம் விதையாகக்கூட பார்க்கலாம்.
இன உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெற வேண்டிய நேரத்தில் அடித்துப் பெற வேண்டும்.
காந்தியின் அகிம்சா அமைதி வழியை எதிர்பார்த்தால் *இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையாகவே வாழ வேண்டும்*. அந்தத் தாரக மந்திரத்திற்குத் தனிப் பாதை அமைத்துக் கொடுத்தவர் பிரபாகரன்.
கொழும்புவில் பிரபாகரனின் அத்தை மாமா வாழ்ந்த போது அவர்கள் அனுபவித்த வேதனைகளைச் சின்ன வயதில் கேட்டு கொதித்துப் போனவர் பிரபாகரன்.
அதனால் அவருக்குள் சில உறுதிப்பாடுகள் வேரூன்றிப் போயின. அவையே பின்னாட்களில் ஆலம் விருச்சங்களாய் உச்சம் பார்த்து இமயம் தொட்டன.
1980 - 2000-ஆம் ஆண்டுகளில், விடுதலைப் புலிகள் இயக்கம் என்கிற பெயரும் சரி; வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற பெயரும் சரி; இலங்கை ஆட்சியாளர்களை நடுங்க வைத்த சிம்ம சொப்பனங்களாகும்.
சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசித் தோல்வியை அவ்வளவு எளிதாகத் திணித்துவிட முடியாது. ஈழத் தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றிக் காட்டலாம். ஆனால் அவர்களை நிரந்தரமான அடிமைகளாக மட்டும் மாற்றவே முடியாது. இது சத்தியம். சரி.

இலங்கையில் ஏழு பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பழைய பெயர் பரமேசுவரா கல்லூரி. 1921-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. அதே கல்லூரி 1974-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றது.
அந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்க ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வருகிறார். இருப்பினும் அந்த நிகழ்ச்சியைப் புறக்கணிக்கச் சொல்லி இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளைப் பிரபாகரன் கேட்டுக் கொள்கிறார்.
நல்ல ஒரு நிகழ்ச்சி தானே. அதை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கலாம். ஒரு செருகல்.
மஞ்சள் பூசி, சந்தனம் பூசி, குங்குமம் தடவி, மலர்மாலை போட்டு கழுத்து அறுக்கப்படும் ஆட்டுக் கிடாய் கதையும் சரி; மஞ்சளும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று அதே ஆட்டுக் கிடாய் வெட்ட வருபவரை முட்டி மோதித் தள்ளுவதும் சரி. அங்கேதான் பிரபாகரன் நிற்கிறார். சரி.

தமிழ்ப்புலிகள் என்பது யாழ்ப்பாணத்தில் அப்போது புதிதாகத் தோன்றிய ஓரு போராட்ட அமைப்பு. அந்த அமைப்பின் வேண்டுகோளைப் பெரும்பான்மையான தமிழர் அரசியல் கட்சிகளும் ஏற்று கொள்கின்றன. பெரிய அதிசயம்.
ஆனால் அதன் பின்னணியில் சுயநல அரசியல் நோக்கங்கள் இருந்தன என்பது அப்போது பிரபாகரனுக்குத் தெரியவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடுவது இல்லை.
அதையும் தாண்டிய நிலையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைப் பயமுறுத்த வேண்டும் என பிரபாகரன் முடிவு எடுக்கிறார். அடுத்தக் கட்டமாக ஆறு கைக் குண்டுகளைத் தயாரிக்கிறார். வெடிக்கவும் வைக்கிறார்.

ஒரு குண்டு காங்கேசன் போலீஸ் வளாகத்தில் வெடிக்கிறது. இன்னொரு குண்டு காங்கேசன் பஸ் நிலையத்தில் வெடிக்கிறது. இன்னொன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிங்கள உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவரின் வீட்டின் வளாகத்தில் வெடிக்கிறது.
மற்ற குண்டுகள் மற்ற முக்கியமான இடங்களில் வெடிக்கின்றன. பண்டாரநாயக்காவிற்கு பெரும் அதிர்ச்சி.
இவற்றுக்கு எல்லாம் தமிழகத்தில் இருந்து வந்த செட்டி எனும் நண்பன் பிரபாகரனுக்கு உதவி செய்தார். அந்தக் குண்டு வெடிப்புகளில் உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. ஆனாலும் சிங்கள அரசிற்கு லேசான குளிர்க் காய்ச்சல்.
ஸ்ரீமாவோவின் திறப்புவிழா எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கவில்லை. பொது மக்கள் அதிகமாக வரவில்லை. பயம்தான் காரணம்.

ஆயிரக் கணக்கில் மக்களைச் சேர்த்து விழாவைச் சிறப்பாக நடத்தி விடலாம். பண்டாரநாயக்காவிடம் நல்ல பெயர் வாங்கி விடலாம் என நினைத்த அல்பிரட் துரையப்பாவிற்குப் பெருத்த ஏமாற்றம். பலமான அடி.
1974-ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி. கைக்குண்டுகளைத் தயாரிக்க பிரபாகரனுக்கு உதவியாக இருந்தவர் அவருடைய நண்பர் செட்டி.
அவர் போலீஸாரால் கைது செய்யப் படுகிறார். சித்திரவதை செய்யப் படுகிறார். முடிவில் பிரபாகரனைப் பற்றிய எல்லா இரகசியங்களையும் போலீஸாரிடம் சொல்லி விடுகிறார். பிரபாகரனுக்கு ஒரு துரோகியாகவும் மாறிப் போகிறார்.
காலம் செய்த கோலமா அல்லது சித்திரவதைகள் செய்த அலங்கோலமா. தெரியவில்லை.

அதனால் பிரபாகரனால் ஏற்கனவே மறைந்து வாழ்ந்த பழைய இடங்களில் மேலும் பேர் போட முடியவில்லை. அடிக்கடி இடங்களை மாற்ற வேண்டிய நிலைமை.
அப்போது காடு மலை மேடுகளில் சுதந்திரமாய்க் காற்றோடு நடந்தவர். இப்போது செடி கொடிகள், புற்கள் புதர்கள், குகை குன்றுகள் என மறைந்து மறைந்து வாழ்கிறார்.
கையில் பணமும் இல்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்குதல்; இலைகள் பழங்கள் வேர்கள் கிழங்குகள் என அவரின் அன்றாட வாழ்க்கை ஓடுகிறது. ஓரிரு முறை வல்வெட்டுத் துறையில் நண்பர்களிடம் கடன் வாங்கிக் காலத்தை ஓட்டுகிறார்.
சிவக்குமரனின் தற்கொலை பிரபாகரனின் நெஞ்சத்தில் ஆழமாய்ப் பதிந்து போகிறது.

அல்பிரட் துரையப்பா என்கிற ஒரு தமிழர் துரோகி இனி உலகத் தமிழர்களுக்குத் தேவை இல்லை என பிரபாகரனின் தமிழ்ப்புலிகள் அமைப்பு முடிவு செய்கிறது. அதற்குத் திட்டம் போடுகிறார் தலைவர் பிரபாகரன்.
அந்தத் திட்டத்திற்குத் துணையாகக் கிருபாகரன், பற்குணராஜா, கலாவதி என்கிற மூன்று இளைஞர்களைச் சேர்த்துக் கொள்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார்கள்.
அந்த வகையில் அல்பிரட் துரையப்பாவைப் பழி வாங்க அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில் பிரதான நுழைவாசல்.

புராதன வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டு விளங்கும் ஆலயம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயமாகும். யாழ்ப்பாணத்தில் பழமையும் பெருமையும் கொண்ட ஆலயம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்து உள்ள ஓர் அமைதியான இடம்.
வெள்ளிக் கிழமைகளில் அல்பிரட் துரையப்பா அங்கு வருவது வழக்கம். அதன்படி 1975 ஜுலை 27-ஆம் தேதி காலை ஆறு மணிக்கு எல்லாம் பிரபாகரன் கோயிலுக்குப் புறப்படுகிறார். கோயிலின் வாசலில் நண்பர்களுடன் காத்து நிற்கிறார்.
சொன்னபடி துரையப்பாவின் கார் வருகிறது. கோயிலின் மரநிழலில் நிற்கிறது. பிரபாகரனுக்குத் துரையப்பாவின் முகம் தெரியாது. கிருபாகரனுக்குத் தெரியும். கண் சாடை மூலம் அவர் தான் இவர் என அடையாளம் காட்டிக் கொடுக்கிறார் கிருபாகரன்.

அடுத்த நிமிடமே காரை நோக்கிப் பிரபாகரனும் கலாவதியும் போகிறார்கள். அல்பிரட் துரையப்பா காரை விட்டு இறங்கியதும் ’வணக்கம் ஐயா’ என வணக்கம் சொல்கிறார் பிரபாகரன்.
பதிலுக்கு துரையப்பா வணக்கம் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் ஒரு துப்பாக்கிக் குண்டு துரையப்பாவின் நெஞ்சைத் துளைக்கிறது. அடுத்தடுத்து நான்கு குண்டுகள்.
அல்பிரட் துரையப்பா அங்கேயே சரிந்து விழுகிறார். கோயிலில் இருந்த மக்களுக்குள் அதிர்ச்சி. கூட்டமாக ஓடி வருகிறார்கள். அதைக் கண்டதும் துரையப்பாவின் காரை எடுத்துக் கொண்டு பிரபாகரன் குழுவினர் தப்பிச் செல்கின்றனர்.
சில கிலோ மீட்டர்கள் தள்ளி நீர்வேலி என்னும் இடம். அங்கே அந்தக் காரைப் போட்டு விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பயணிக்கிறார்கள். துரையப்பாவின் இறப்புச் செய்தியைக் கேட்டு இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ஆனால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உச்சக் கட்டத்தில் கோபம் அடைந்தது தான் மிச்சம். அல்பிரட் துரையப்பாவின் இறுதி ஊர்வலம் நடப்பதற்கு முன்பாகவே கொலையாளிகள் பிடிபட வேண்டும் என கட்டளை போடுகிறார்.
தமிழர் மாணவர் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால் உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு மாதத்திற்குப் பின்னர் பற்குணராஜாவும் கலாவதியும் கைது செய்யப் படுகிறார்கள். சித்திரவதை தாங்க முடியாமல் பிரபாகரனின் பெயரையும்; புதிய தமிழ்ப்புலிகள் பெயரையும் சொல்லி விடுகிறார்கள்.
அதன் பின்னர் தான் அப்படி ஓர் அமைப்பு இருப்பதைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கே தெரிய வருகிறது. அப்புறம் என்ன. எலி வேட்டை புலி வேட்டையில் புதிய பரிமாணங்கள்.

அல்பிரட் துரையப்பாவின் கொலைக்குப் பின்னர் புதிய தமிழ்ப்புலிகள் அமைப்பைப் பற்றி பரவலாகப் பேசப் பட்டது. அதன் தலைவர் பிரபாகரன் என்பதும் ஈழம் முழுவதும் தெரிய வந்தது.
அல்பிரட் துரையப்பாவின் வழக்கில் பிரபாகரனை இலங்கை அரசு வலை போட்டுத் தேடியது. ஆனால் பிரபாகரனின் உருவப் படம் மட்டும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. பிரபாகரன் வீட்டை விட்டுக் காட்டுக்குப் புறப்படும் போது அவரின் எல்லாப் புகைப் படங்களையும் எரித்து விட்டுத் தான் புறப்பட்டுச் சென்றார்.
போலீஸார் பிரபாகரனின் வீட்டைச் சல்லடை போட்டு தேடினார்கள். பிரபாகரனின் படம் கிடைக்கவே இல்லை. அவருடைய அக்காவின் திருமணப் படம் மட்டுமே கிடைத்தது.
அந்தப் படத்தில் பிரபாகரன் பால்மனம் மாறா பச்சைப் பிள்ளை. அந்த வைத்துக் கொண்டு பிரபாகரனை அப்படி ஒன்றும் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியாது. சரி.
அல்பிரட் துரையப்பாவின் கொலையால் ஈழத் தமிழர்களின் வாழ்வியலில் ஒரு புது பரிமாணம் ஏற்பட்டது என்று சொல்லலாம். அதனால் இளைஞர்கள் பலர் பிரபாகரனின் அணியில் வந்து சேர்ந்தார்கள்.
ஈழத் தமிழர்களின் உரிமைகள் காலா காலத்திற்கும் காக்கப்பட வேண்டும் எனும் தன்மான உணர்வுடன் பல இளைஞர்கள் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

சரி. அப்படிச் சேர்ந்தவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிகளையும் இருக்கிற குண்டுகளையும் வைத்துக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும். எங்கே கொண்டு போய் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது. அதற்கு பிரபாகரன் தேர்ந்தெடுத்த இடம் எது தெரியுங்களா. வவுனியா அடர்ந்த காடுகள்.
வவுனியா என்பது இலங்கையின் வட மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். காடுகள் நிறைந்த இடம். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.
ஈழப் போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் இந்த வவுனியா மாவட்டத்திலேயே உள்ளனர்.
பிரபாகரனின் தந்தையார் ஓர் அரசு அதிகாரியாக இருந்த போது அந்த காடுகள் எல்லாம் பிரபாகரனுக்குத் தெளிவான அத்துப்படி. அடர்ந்த காட்டுப் பகுதிகள். ஆள் நடமாட்டமே இல்லாத இடம். அமைதியான சூழல்கள். யாருமே கண்டு கொள்ளாத தனிமையின் நிழல்கள்.
அப்படி ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்த பிரபாகரன் அதற்குப் பூந்தோட்டம் என பெயர் சூட்டினார். ஓர் அடர்ந்த காட்டிற்கு என்னே ஓர் அழகான பெயர். பிரபாகரன் என்பவர் தமிழருக்கும் வல்லவர். தமிழ் மொழிக்கும் வல்லவர்.
பிராபகரன் தேர்ந்து எடுத்த இடம் ஏறக்குறைய 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் அந்த இடத்தைச் சுத்தம் செய்தார்கள். அடர்ந்த காடுகள். அதை நினைவில் கொள்வோம்.
ஏற்கனவே அங்கு பல காய்கறிச் செடிகள்; பச்சைக் கொடிகள் இருந்தன. காட்டில் இயற்கையாக வளர்ந்தவை. அவற்றைக் கொண்டு சமைத்தார்கள். தங்களின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக பல கீரைப் பயிர்களையும் பயிரிட்டார்கள்.
எல்லாம் சரி. இடம் கிடைத்து விட்டது. பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டுமே. எப்படி. அந்த நேரத்தில் பிரபாகரனிடம் மிகக் குறைந்த அளவிலான ஆயுதங்கள்; தோட்டாக்கள்; தளவாடங்கள் மட்டுமே இருந்தன.
ஆக அவற்றைக் கொண்டு சமாளிக்க வேண்டுமே. தன் அமைப்பில் இருந்த அனைவரையும் பிரபாகரன் மன அளவில் வலுப்படுத்தினார். அச்சம் தவிர் ஆளுமை கொள் என்பதே அவர் அடிக்கடி சொன்ன வாசகம்.
காட்டுக் கம்புகளைச் சுற்றுதல், சிலம்பு கைவரிசை விளையாட்டுகள், மரம் ஏறுதல், நீச்சல் அடித்தல், வெட்டிய காட்டு மரங்களைத் தூக்குதல், மல்யுத்தம் செய்தல் என உடல் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதே சமயத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிகளையும் வழங்கினார். சரி.
ஒரு பக்கம் பார்த்தால் போலீஸார் யாழ்ப்பாணத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். பிரபாகரனையும் மற்ற மற்ற போராளிகளையும் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் பார்த்தால் பிரபாகரன் அண்ட் கோ வேறொரு காட்டுப் பகுதியில் தீவிரமான பயிற்சிகளில் சீறிக் கொண்டு இருக்கிறார்கள்.
நான் யார் தெரியும்ல... எனக்கேவா என்று பிரபாகரன் ஓர் அசால்ட் அதிகாரி போல அசத்தலாக உறுமிக் கொண்டு இருக்கிறார்.
(தொடரும்)
சான்றுகள்
1. ஈழ மலர் - ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள். உங்களுக்கும் வலிகள் புரியும்.
2. பிரபாகரன் – ஒரு வாழ்க்கை - செல்லமுத்து குப்புசாமி
3. https://ta.wikipedia.org/s/4rc - ஈழப் போருக்கான காரணங்களும் அதன் வளர்ச்சியும்