05 ஆகஸ்ட் 2019

சந்திரமலர் ஆனந்தவடிவேல் - 1

 சரித்திரம் படைத்த நீலாம்பரி

பார்த்தால் சுடுவேன் என்று பயம் காட்டிய மோடி மஸ்தான்களை மடக்கிப் போட்டவர். கஞ்சா கடத்தல்காரர்களைக் கழிசடைகள் என்று கசக்கிப் போட்டவர். குண்டர் கும்பல்களின் முகத் திரைகளைக் கிழித்துப் போட்டவர். விபாசாரத் தரகர்களின் அரசியல் செல்வாக்குகளை அறுத்துப் போட்டவர்.

இப்போது வீட்டைச் சுற்றிலும் குண்டு மல்லிகைகளை நட்டு வைத்து அழகு பார்க்கின்றார். பேரப் பிள்ளைகளுடன் ஓடி ஆடிக் கண்ணாம்பூச்சி விளையாடுகின்றார். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளைக் கூட்டி வந்து டியூசன் சொல்லித் தருகின்றார். 




அவர்தான் சந்திரமலர்  ஆனந்தவடிவேல். மலேசியா பார்த்து ரசித்த ஒரு சந்திரதோயம். மன்னிக்கவும் ஓர் அக்கினிக்குஞ்சு.

மலேசியப் போலீஸ் துறை வரலாற்றில் துணை ஆணையர்ப் பதவியை (Assistant Commissioner of Police) வகித்த முதல் மலேசியத் தமிழ்ப் பெண்மணி. மலேசியப் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் (Police College, Kuala Kubu Bharu) முதல் பெண் இயக்குநர். இண்டர்போல் (Interpol) அனைத்துலகப் போலீஸ் படையில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி. ஐ. நா. சபையில் உயர்ப் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய முதல் மலேசியப் பெண்மணி.  

போலீஸ் துறையின் அனைத்துலக மாநாடுகளில் மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் பெண்மணி. பினாங்கு ரகசியக் காவல் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவர் பதவியில் (Anti-Vice Branch, Penang) முதல் பெண்மணி. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




சகோதரி சந்திரமலர் இந்தக் கட்டுரையைப் படிப்பார் என்று தெரியும். முதலில் வாழ்த்துகள்  சொல்லி விடுகிறோம். வாழ்த்துகள் சகோதரி.

சந்திரமலர் ஆனந்தவடிவேல் இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் பிறந்த சில நாட்களிலேயே அவருடைய பெற்றோர் மலாயாவுக்குப் புலம் பெயர்ந்தனர். மலேசியக் குடியுரிமையையும் பெற்றனர். ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் நகரில் சந்திரமலர் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார்.

ஐந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் சந்திரமலர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலர். சின்ன வயதில் சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார்.




அந்தக் காலக் கட்டத்தில் பெண் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும், அதாவது ‘பார்ம் பைவ்’ முடித்ததும் ஆசிரியர்த் தொழிலுக்குள் ஐக்கியமாகிப் போவதற்கு அப்போதைய அப்பா அம்மாக்கள் ரொம்பவும் ஆசைப் பட்டார்கள். சமூகப் பெருமையாகவும் நினைத்தார்கள். சொந்த பந்தங்களைச் சும்மா சொல்லக் கூடாது. சுதி குறையாமல் நன்றாகவே தாளம் வாசித்தார்கள்.

அந்த வரிசையில் தாத்தா பாட்டிகளை மறக்கவே கூடாது. ஆசிரியர் தொழில்தான் நல்லது. புருசனுக்கும் பிள்ளைகளுக்கும் வற்றாமல் வடித்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா. நாலும் தெரிந்த நல்லையன்கள் மாதிரி வக்காளத்து வாங்கினார்கள். தப்பாக நினைக்க வேண்டாம்.

அப்போது காதில் பட்டது. அப்படியே எழுதுகிறேன். ஆக கிழித்தக் கோட்டைத் தாண்ட முடியாமல் பாவம் பெண்பிள்ளைகளும் சுவாமியே சரணம் என்று கறுப்பு வேட்டி கட்டாத குறைதான். இது முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஊர்வலம் போன உண்மைகள். 




ஆசிரியர் தொழில் என்று சொல்லும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்னாலேயே பெண்கள் ஆதிக்கம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இப்போதைக்குச் சொல்லவே வேண்டாம். ஆசிரியர் தொழிலில் பெண்களின் ஆதிக்கம் இமயத்தில் ஏணி வைத்துச் சிகரம் பார்க்கிறது. ஒன்னும் சொல்கிற மாதிரி இல்லை.

எல்லாமே சுடிதார்கள், புடவைகள் மயம். ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் ஆண்களுக்குப் பலம் குறைந்து வருகிறதே என்கிற ஆதங்கம். வயிற்றெரிச்சல் என்று சிலர் சொல்வது காதில் விழுகிறது. ஊர்வம்பு வேண்டாங்க. நம்ப சந்திரமலர் கதைக்கு வருவோமே.

சந்திரமலருக்கு ஆசிரியர் தொழில் சரிபட்டு வரவில்லை. போலீஸ் துறைக்கு எழுதிப் போட்டார். 1960-ஆம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஈப்போவில் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி. குறி சுடுதல், தற்காப்புக் கலைப் பயிற்சிகள், கமாண்டோ பயிற்சிகள் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

இவர் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். ஜூடோ இவருக்குப் பிடித்த தற்காப்புக் கலை. ஆண்களால் எதைச் செய்ய முடியுமோ அதைப் பெண்களாலும் செய்ய முடியும் என்பது சந்திரமலர் அடிக்கடி சொல்லும் தத்துவ வாசகங்கள்.




பின்னர் பினாங்கு மாநில போலீஸ் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அதனால் அவருக்குப் போலீஸ் துறையில் சீருடை அணியாத உளவுத் துறையில் பதவி. பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை.

ஒரு முறை பினாங்கில் நடந்த நிகழ்ச்சி. போதைப் பொருள் கடத்தல்காரன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் எட்டு கிலோ மீட்டர் வரை விரட்டிச் சென்றார். சந்து பொந்துகளில் எல்லாம் கடத்தல்காரன் வேக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றான். கடைசியாக ஒரு சாலையின் சந்திப்பில் வசமாக மாட்டிக் கொண்டான்.

அவனோடு மல்லுக்கட்டும் போது தலைக் கவசத் தொப்பியால் சந்திரமலர் தாக்கப் பட்டு காயம் அடைந்தார். அதற்குள் மற்ற போலீஸ்கார்களும் வந்து விட்டார்கள். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் விட்டார்.




இருந்தாலும் பாருங்கள். அவருடைய உயிருக்கே ஆபத்து வந்தும் கூட அவனைத் துப்பாக்கியால் சுடாமல் நிராயுதபாணியாகப் பிடித்து இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் அப்போதே அவனைச் சுட்டுக் கொன்று இருக்கலாம். அதுவும் ஓர் அதிகாரியை அடித்து இருக்கிறான் என்றால் சும்மாவா... அம்புட்டுதான்.

’மவனே’ என்று மற்ற அதிகாரிகளும் பிச்சு பேன் பார்த்து இருப்பார்கள். ஆனால் சந்திரமலர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்க வேண்டாம் என்று சொன்ன அவரின் மனித உணர்வுகளை நினைத்துப் பாருங்கள்.
 

னாவசியமாக ஓர் உயிர் பலியாகக் கூடாது. அது மனித உயிராக இருக்கலாம். இல்லை ஒரு நாலுகால் ஜீவனின் உயிராகவும் இருக்கலாம் என்பதில் சந்திரமலர் உறுதியாக இருந்தார். இன்னமும் இருக்கின்றார். அந்த மாதிரி  பல கேடிகளை அவர் சுடாமலேயே பிடித்து இருக்கிறார். காவல் துறை ஆவணங்கள் சொல்கின்றன.



ஓர் ஆண்டிற்குப் பின்னர் அவர் பினாங்கு ரகசிய போலீஸ் துறையில் விபாசார ஒழிப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். அனுதினமும் ரகசியக் கும்பல்களுடன் மோதிக் கொள்வது. அவர்களுடன் துப்பாக்கிச் சண்டைப் போடுவது. இவை எல்லாம் வாடிக்கைச் சமாசாரங்கள்.

அவருடைய குழுவில் 13 பேர் இருந்தனர். எட்டு ஆண்கள். ஐந்து பெண்கள். ஒரு நாளைக்கு பத்துப் பதினைந்து விபசார விடுதிகள் அல்லது சூதாட்டக் கூடங்களில் அதிரடி நடவடிக்கைகள். எல்லாருமே ஹோண்டா மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவார்கள். சும்மா சொல்லக் கூடாது. மாதத்திற்கு எப்படியும் 200 அதிரடி வேட்டைகள் நடக்குமாம்.

சில சமயங்களில் அவர் ஒரு விலைமாதைப் போல உடை அணிந்து, மற்ற ’அந்த’ப் பெண்களைப் போல இயல்பாகவே நடித்து துப்பு துலக்கியதும் உண்டு.

சூதாடிகளுடன் ஒன்றுக்குள் ஒன்றாகிப் போவார். சரோசா தேவி மாதிரி சிரித்து சிணுங்கி ரகளைப் பண்ணிக் கொண்டு இருப்பாராம். அவருடைய அதிகாரிகள் சொல்கின்றார்கள். 




ஒரு கட்டத்தில் தங்களுடன் சூதாடிக் கொண்டு இருப்பவர் ஒரு போலீஸ் அதிகாரி என மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். அவ்வளவுதான். மேசைகள் குப்புறக் கவிழும். நாற்காலிகள் ஆகாசத்தில் பறக்கும். கலர் கலராய்ப் பணம் காற்றில் பறக்கும். சீட்டுக் கட்டுகள் சிதறிப் போகும். விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் எல்லோருக்கும் நாலே விநாடிகளில் நாலுகால் பாய்ச்சல் வந்துவிடும்.

அப்புறம் என்ன. அந்தச் சுனாமியில் மூக்குகள் உடையும். முட்டிகள் உடையும். உருப்படியாகப் பார்த்தால் எலும்பும் தோலும்தான் மிச்சமாக இருக்கும். தப்பித்துப் போவது என்பது எல்லாம் சும்மா பேச்சு. வெளியே சீருடை போடாமல் இருக்கும் மற்ற அதிகாரிகள் ’வாங்க மச்சான் வாங்க’ என்று சொல்லி கையில் வளையத்தோடு மரியாதை செய்வார்கள்.

சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து 'Kelinga cha bor lai leow!' என்று சீன மொழியில் உரக்கக் கத்திக் கொண்டு ஓடுவார்களாம். 'இந்தியப் பெண் வந்து விட்டாள்’ என்று பொருள். பிடிபட்ட பின்னர் சிலர் தங்களை விட்டுவிடச் சொல்லிக் காசை நீட்டுவார்களாம். 




ஆனால் அன்பளிப்பு எனும் சொல்லுக்கே அங்கே அர்த்தம் இல்லை. அது சந்திரமலருக்குப் பிடிக்காத விஷயம். அரசாங்கத்திற்கு வேலை செய்கிறேன். அரசாங்கம் எனக்கு சம்பளம் கொடுக்கிறது. அது எனக்குப் போதும். காசை நீட்டினால் இன்னும் இரண்டு அறை கூடுதலாகக் கிடைக்கும் என்று சொல்கிறார் சந்திரமலர்.

ஒரு பெண்ணால் தண்டிக்கப் படுவதை எந்த ஓர் ஆணும் விரும்புவது இல்லை. ஆனால் ஓர் அதிகாரி ஊழல் இல்லாத சுத்தமான மனிதர் என்று தெரிந்ததும் குற்றவாளிகள் அவருக்கு மதிப்பையையும் மரியாதையையும் கொடுத்து புன்னகை செய்வார்கள் என்று சொல்கிறார் சந்திரமலர்.

போதைப் பொருளும் விபசாரமும் எப்போதுமே ஒன்றுவிட்ட சகலைபாடிகள். ஒன்றுக்குள் ஒன்று. ஒன்றை விட்டு ஒன்று பிரியாது. அதனால் விபாசார ஒழிப்பு நடவடிக்கைகளின் போது போதைப் பொருள் ஒழிப்பு அதிகாரிகளையும் சந்திரமலர் தன்னுடன் அழைத்துச் செல்வார்.

இளம்பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் தங்கி இருக்கும் இடங்களில் போலீஸ் துறையினர் நுழைய முடியாது. ஆனால் போதைப் பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் உள்ளே நுழையலாம். சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

அவ்வாறான நடவடிக்கைச் சமயங்களில் பெரும் அளவில் பணம் பறிமுதல் செய்யப் படும். பறிமுதல் செய்யப் படும் பணம் நேர்மையாகக் கையாளப் பட வேண்டும் என்றும் உறுதியாய் இருப்பார் சந்திரமலர். தன் அதிகாரிகளுக்கு அடிக்கடி எச்சரிக்கைகளையும் செய்து வருவார்.

(தொடரும்)

சான்றுகள்:

1. https://www.thestar.com.my/lifestyle/features/2010/03/07/a-legend-in-her-time/

2.https://tamizharmedia.com/2018/04/06/woman-of-steel-puan-chandramalar-a-remarkable-malaysia-tamil-lady-story/

3. https://www.worldofbuzz.com/4-amazing-women-malaysian-history-shouldnt-forgotten/


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
  
Mangala Gowri இவரைக் கண்டால் 'அந்த கெல்லிங் பெண் வந்து விட்டாள்' என்று சீன ரவுடிகள் ஓடுவார்களாம். சில வருடங்களுக்கு முன்பு சண்டே டைம்ஸில் இவரின் பேட்டியில் படித்த விஷயம்...
 
Muthukrishnan Ipoh உண்மைதாங்க... பினாங்கில் சீனர் குண்டர்களை விரட்டி விரட்டி... துவைத்து எடுத்து இருக்கிறார்... எஃகுப் பெண்மணி என்று பெயர் எடுத்தவர்...
 
Mangala Gowri Muthukrishnan Ipoh நமக்கெல்லாம் பெருமைதான் சார்

Mu Ta Neelavaanan Muthuvelu Mangala Gowri கெல்லிங் பெண் என்று சொல்லி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்! "கெல்லிங் கூய்" என்று சொல்லி இருப்பார்கள் !
 
 
Muthukrishnan Ipoh 1994 as Assistant Director of Research and Planning in the Criminal Investigation Department of Bukit Aman with the rank of Assistant Commissioner of Police – the first non-Malay woman ever to attain this honour.
 
Vel Paandiyan Mangala Gowri உண்மை தான். பினாங்கில் சீனர் கும்பல்களின் ஆர்ப்பாட்டம். யாரும் எங்களைப் பிடிக்க முடியாது என்ற திமிர். ஒரு நாள் சீனர்க் கடையில் போதை மருந்து அளவுக்கு மீறி விற்பனையாகி கொண்டிருந்தது. சீனர்கள் எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்... எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று...

செய்தி எட்டியது தகவல் நிலையத்துக்கு...

வந்தது வீரம் நம்ம இரும்பு பெண்மணிக்கு...

உடனே சாரியை எடுத்து தன் உடம்புக்கு மேலே சுற்றிக் கொண்டு போனார்கள்.. சாரியோட போனதும் சீனர்களுக்கு வர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. உடனே அந்தக் கும்பலில் இருந்து ஒருவன்.. LU sapa என்று கேட்டதும், உடனே சாரியைக் கழற்றி வீசி எறிந்து.. saya la. என்று சொல்லி... அத்தனைப் பேரும் கொஞ்ச நேரத்தில் பிடிபட்டனர். 
அப்பொழுது தான் சீனர் குண்டர் கும்பல்கள் அடங்கிப் போனார்கள். சாரியோட வந்த பெண்மணி சாதாரண பெண்மணி கிடையாது. அவர் ஒரு வீரப் பெண்மணி. பினாங்கில் அது Breaking News. இந்தப் பெண்மணியைக் கண்டால் அவன் அவன் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானுங்க. தமிழச்சிக்கு ஒரு சபாஷ்... SALUTE
 
Muthukrishnan Ipoh சில சூதாடிகள் ஜன்னல் வழியாக எகிறிக் குதித்து 'Kelinga cha bor lai leow!' என்று சீன மொழியில் உரக்கக் கத்திக் கொண்டு ஓடுவார்களாம்...
 
Sri Kaali Karuppar Ubaasagar அண்ணா நீங்கள் இந்த அம்மாவைப் பற்றி சொன்னது உண்மை. இவருக்கு இன்னொரு பெயர் சந்திர மாலா என்று உண்டு தானே அண்ணா?
 
Muthukrishnan Ipoh உண்மை... சந்திர மாலா என பின்னர் நாட்களில் அழைத்து இருக்கிறார்கள்...
 
Sri Kaali Karuppar Ubaasagar Muthukrishnan Ipoh  மிக்க நன்றி அண்ணா🙏 அருவி போல் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.      
  
Muthukrishnan Ipoh சில சமயங்களில் உணவகங்களுக்குக் குடும்பத்துடன் சந்திரமலர் போவார். அவர்கள் சாப்பிட்ட கட்டணத்தை யாராவது கட்டி விட்டுப் போய் இருப்பார்கள். யார் என்று கடை முதலாளியிடம் கேட்டால் அவரும் சொல்வது இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அவருடைய வாழ்க்கையில் நிறைய நடந்து வருகின்றன.
 
Don Samsa சிறப்பு தலைவரே.. அப்படியே முன்னால் ஈப்போ மாவட்ட காவல்துறை தலைவர் திரு,நடராஜன் அவர்களை பற்றி எழுதலாமே நீங்கள். நன்றி

Karunaharan Karuna நம் பெண்களின் சாதனை தொடரட்டும். வாழ்த்துக்கள் மா

 










27 ஜூலை 2019

சாம்ரி வினோத் காளிமுத்து

ஜாகிர் நாயக் என்பவர் அனைத்துலகப் போலீசாரின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டவர்; இந்தியாவால் பற்பல கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேடப் படுகிறவர்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய மதபோதகராகக் கருதப் படுகிறார்.. இவர் தற்போது மலேசியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்.



இவருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னர் இருந்த பாரிசான் அரசாங்கம் வழங்கிய தகுதி.

இந்தியாவில் 115 மில்லியன் ரிங்கிட் கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் ஜாகிர் நாயக் குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார்.

2019 ஜூன் 19-ஆம் தேதி, இரு நாட்களுக்கு முன்னர் மும்பை நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இண்டர்போல் அனைத்துலகக் காவல்துறை ஜாகிர் நாயக் மீது சிவப்பு அடையாளக் குறியீட்டைப் பிறப்பித்து உள்ளது. இதன் அடிப்படையில் மலேசியா அவரைக் கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சரி.

https://www.freemalaysiatoday.com/…/zakir-naik-must-presen…/

இப்போது ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக சாம்ரி வினோத் காளிமுத்து (34) என்பவர் குரல் எழுப்பி இருக்கிறார்.

ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டால், தன்னுடைய மலேசிய அடையாள அட்டையை ரத்து செய்து, அந்த அட்டையைத் திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடமே ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் கூறுகிறார்.

Nama: Muhammad Zamri Vinoth Bin Kalimuthu

Lahir: Rahang Negeri Sembilan

Tempat Tinggal: Seremban Negeri Sembilan

Tarikh Lahir: 23 Ogos 1984

”மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கைத் திருப்பி அனுப்பினால் நான் என் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க விரும்புகிறேன். அதன் பின்னர் நான் மலேசியாவில் தொடர்ந்து வாழ விரும்பவில்லை” என சாம்ரி வினோத் கூறி இருக்கிறார்.

”மதத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். காரணம் நம் அனைவரின் போராட்டமும் ஒன்றுதான்” என்றும் சாம்ரி வினோத் கூறி இருக்கிறார்.



முதல் கேள்வி. ஒருவர் ஒரு நாட்டின் அடையாள அட்டையைத் திரும்ப ஒப்படைக்க விரும்புகிறேன் என்று சொன்ன அந்தக் கணமே அவர் அந்த நாட்டின் குடியுரிமையை இழக்கிறார்.

ஒருவர் ஒரு நாட்டின் குடியுரிமையை இழந்தால் அதன் பின்னர் அவர் வாழும் அந்த நாட்டிலேயே, நாடு அற்றவராகக் கருதப் படுவார். அதனால் அவர் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் போக முடியாது. ஆக இந்தக் கட்டத்தில் சாம்ரி வினோத் காளிமுத்துவின் நிலைப்பாடு என்ன?

ஒரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் புறக்கணிக்க முன்வருகிறார் என்றால் அவர் அந்த நாட்டின் மீது விசுவாசம் அற்றவர் என பொருள் படுகிறது. அப்படிச் சொன்னாலே அவர் அந்த நாட்டிற்குத் துரோகம் செய்வது போலாகும்.

ஒரு நாட்டிற்கான விசுவாசத் தன்மையைக் கேலிகூத்தாகும் ஒருவர் மீது சம்பந்தப் பட்டவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். இது இரண்டாவது கேள்வி.

சாம்ரி வினோத் காளிமுத்துவின் மீது ஏற்கனவே இரு குற்றச்சாட்டுகள் உள்ளன.

(Section 298A of the Penal Code and Section 233 of the Communications and Multimedia Act 1998)

(AKTA 588 KOMUNIKASI DAN MULTIMEDIA 1998, SEKSYEN 233, SEKSYEN 211, SEKSYEN 298A, SEKSYEN 505 (C) ; KANUN KESEKSAAN DAN AKTA HASUTAN 1948.)

ஒரு சமயத்தை இழிவு படுத்தியதாக செக்சன் 298A -இன் கீழ் முதல் குற்றச்சாட்டு.

பொதுநலத்திற்குப் புறம்பான தகவல்களை ஊடகங்களின் வழியாகப் பரப்பியதாக செக்சன் 233-இன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டு.



Section 298A of the Penal Code for causing disharmony, disunity, or feelings of enmity, hatred or ill will, or prejudicing the maintenance of harmony or unity, on grounds of religion’

Section 233 of the Communications and Multimedia Act 1998 for improper use of network facilities or network service.

இரண்டுமே மலேசியச் சட்டத் துறையின் பார்வையில் உள்ளன. இதுவரையில் சாம்ரி வினோத் காளிமுத்துவின் மீது நாடளாவிய நிலையில் 867 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு உள்ளன.

https://www.nst.com.my/…/igp-867-reports-lodged-against-mus…

அனைத்துலகப் போலீசாரால் தேடப்படும் ஒருவருக்கான பரிந்துரையின் பேரில் தேசத் துரோகம் செய்ய முனையும் ஒருவருக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும்? இதுவே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

கௌசல்யா தேவி - காக்கும் கரங்கள்

மாறி வரும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது. மாறி வரும் அந்த நவீன மாற்றத்தில் மன வலிமை கொண்ட பெண்கள் அழகு அழகாய் மலர்ந்து வருகின்றார்கள். சிறப்பு மிக்கச் சேவைகளைச் செய்து வருகின்றார்கள். ஆணாதிக்கம் மலைத்துப் போகும் அளவிற்கு அதிரடிச் சாதனைகளையும் செய்து வருகின்றார்கள். 


உண்மையைச் சொல்வதில் தப்பு இல்லை. சொல்லப் போகும் உண்மையும் தப்பாகத் தெரியவில்லை. அந்தக் காலத்துப் பெண்கள் தட்டு முட்டுச் சரக்குகளோடு சமையல் சமையல் கட்டிலேயே சமைந்து போய் சாய்ந்து கிடந்தார்கள். 

இந்தக் காலத்துப் பெண்கள் அப்படி இல்லீங்க. ஆண்களுக்கு நிகராய் கோட்டு சூட்டுகள் போடுகிறார்கள். மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் ஊர்க்கோலம் போகின்றார்கள்.

அந்த மாதிரி வெற்றிக் கனிகளை எட்டிப் பிடித்த பெண்கள் பலர் உள்ளனர். அவர்களின் மத்தியில் ஒருவர் வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவர்தான் மலேசியச் சிறை இலாகாவின் துணை இயக்குநர் கௌசல்யா தேவி.

ஒரே வார்த்தையில் சொன்னால் பார் புகழ் பெண்மணி. மலேசியப் பெண்கள் மட்டும் அல்ல. உலகப் பெண்கள் அனைவருக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழும் அழகிய பெண்மணி. இப்படி ஒரு துணிச்சல்மிக்க பெண்மணி இங்கே இந்த மலேசியாவில் பவனி வருகிறாரே என்பதில் மலேசியர்களாகிய நாம் பெருமை கொள்வோம். மகிழ்ச்சி அடைவோம்.  


பொதுவாகச் சொன்னால் இந்தக் காலத்துப் பெண்கள் தோல்விகளைக் கண்டு மிரண்டு போவது இல்லை. சரிவுகளைக் கண்டு துவண்டு போவது இல்லை. சறுக்கல்களைக் கண்டு சரிந்து போவது இல்லை. எதிலும் துணிந்து நிற்கிறார்கள். எதிலும் எதிர்த்து நிற்கிறார்கள். எதிர்த்துப் போராடுகிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள். அதுதான் அந்த உண்மை. ஆணாதிக்க உலகம் அதை ஏற்பதில் தயக்கம் காட்டலாம். கண்களைக் கசக்க வேண்டாமே.

சகோதரி கௌசல்யா தேவி மலேசிய சிறை இலாகாவின் கைதிகள் நிர்வாகப் பிரிவின் துணை ஆணையர். அவரின் முழுப்பெயர் கௌசல்யா தேவி சாது. 

(DCP Kausalya Devi Sathoo, Deputy Commissioner of Prisons, Head of Parole & Community Services, Prisons Department of Malaysia.)

இப்படி ஓர் உயர்ப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணியும் இவர்தான். பெருமையாக இருக்கிறது. 


கடந்த 27 ஆண்டுகளாக மலேசியச் சிறைச்சாலைகளின் முக்கியப் பதவிகளில் பொறுப்பு வகித்து வருகிறார். கௌசல்யா தேவியின் சிறைச் சேவையை அசை போட்டுப் பார்க்கும் போது உண்மையிலேயே மலைப்பு கலந்த திகைப்பு  ஏற்படுகிறது. இடையில் ஒரு செருகல்.

பெண்களின் நிர்வாகம் என்றால் மதுரை மீனாட்சி என்றும்; ஆண்களின் நிர்வாகம் என்றால் சிதம்பரம் நடராஜர் என்றும் முன்பு சொல்லி வந்தார்கள். அது என்னவோ அப்போதைக்குச் சரியாக இருந்தது. இப்போதைக்குச் சரிபட்டு வராதுங்க. மன்னிக்கவும். தில்லை அம்பலத்து நாட்டியத்திலும் பெண்கள் திரை கட்டிப் புகழ் சேர்க்கிறார்களே. அதைத் தான் சொல்ல வருகிறேன். சரி.

சிறைச்சாலை என்றால் எப்படி இருக்கும். நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மூர்க்கத் தனத்தில் மூச்சுவிடும் முரட்டுக் கைதிகள் நிறைந்த இடம். வன்முறைகளில் சிகரம் பார்த்த கைதிகள் வாழ்கின்ற இடம். தூக்குத் தண்டனை கைதிகள் தொலைந்து போன நாட்களை எண்ணி எண்ணி வருந்துகின்ற இடம். இப்படி பலதரப் பட்ட மனோபாவங்களுடன் பல்லாயிரம் பேர் அங்கே அடைக்கலம்.


அவர்களின் மத்தியில் கௌசல்யா தேவி தோள் உயர்த்தி மிடுக்காய் வலம் வருகிறார். துணிச்சலின் வடிவமாய் நடந்து போகின்றார். அவர்களின் துக்கத்திலும் துயரத்திலும் ஒரு சகோதரியாய்ப் பயணிக்கின்றார். சாதாரண விசயம் அல்ல.

மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும் என்ற பாரதியார் வாக்கை அழுத்தம் திருத்தமாக வழிமொழிகிறவர் கௌசல்யா தேவி. சிறைச்சாலைக் கைதிகளிடம் ஒரு தாயாக, ஒரு சகோதரியாகப் பயணித்துக் கொண்டே இருக்கிறார்.

எப்படி அவரால் முடிகிறது. எப்படி ஒரு பெண்மணியால் இப்படி ஒரு சவால் மிக்கச் சேவையைச் செய்ய முடிகிறது. இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான். இருந்தாலும் அதற்கு அவரின் ஒரே பதில் என்ன தெரியுங்களா. பொறுமை.

சிறைக் கைதிகளிடம் பொறுமையுடன் பழக வேண்டும். நாம் பார்க்கும் பார்வையில் கண்டிப்பாக முரட்டுத்தனம் இருக்க வேண்டும். பார்வையில் தான்  முரட்டுத்தனம். மற்றபடி மனதிற்குள் இரக்கக் குணம் எப்போதும் இருக்க வேண்டும். இதுதான் அந்த பார்முலா.

அவர்களுடன் ரொம்பவும் புன்னகை பூத்த மலராகப் பழகினால் பிரச்சினை தான். இடத்திற்குத் தகுந்த மாதிரி கண்டிப்பு இருக்க வேண்டும். அதே சமயத்தில் கருணையும் இருக்க வேண்டும் என்கிறார்.

சிறைக் கைதிகள் என்பவர்கள் அறிந்தோ அறியாமலோ; தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்தவர்கள். செய்த தவறுகளுக்காகத் தண்டனையை அனுபவிக்கும் சாமான்ய மனிதர்கள். இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாகத் தவறுகள் செய்து இருக்கலாம். செய்த தவறுகளுக்கு ஏற்றவாறு தண்டனை பெற்றவர்கள். ஆனாலும் அவர்களும் மனிதர்கள் தானே.

திருந்தி வாழ்வதற்கு ஒரு புகலிடமாகத் தான் சிறைச்சாலைக்கு வருகிறார்கள். அவர்களைத் திருத்தி அனுப்புவதே சிறைச்சாலைகளின் தலையாயக் கடமை. அந்த வகையில் தண்டனை பெற்றவர்களைக் கண்டிக்கும் இடமாகத் தான் சிறைச்சாலை இருக்க வேண்டும். தண்டனைக்கு மேல் தண்டனைகள் கொடுக்கும் நரகச் சாலையாக இருக்கக் கூடாது.

சகோதரி கௌசல்யா தேவி 1964-ஆம் ஆண்டு பகாங், ரவுப் நகரில் பிறந்தவர். சின்ன வயதில் பள்ளியில் படிக்கும் போதே சீருடை அணிந்து சேவை செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். நன்றாகப் படித்தார். பள்ளியின் சீருடை இயக்கங்களில் சேர்ந்து பள்ளியின் வெளிப்புற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.

1981-ஆம் ஆண்டு மனித மேம்பாட்டுத் துறையில் பட்டயம் (டிப்ளோமா) படிப்பு படித்து முடித்தார். பின்னர் 1988-ஆம் ஆண்டு மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் மனித மேம்பாட்டுத் துறையில் (Human Development) இளங்கலை பட்டம் பெற்றார். கொஞ்ச காலம் ஆய்வுத் துறை உதவியாளராகப் பணி புரிந்தார். 


1993-ஆம் ஆண்டு மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மனித சூழலியல் துறையில் வள மேலாண்மைப் பிரிவில் (Resource Management in the Faculty of Human Ecology) மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றார். கொஞ்ச கால இடைவெளிக்குப் பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் மனித வளத் துறையில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

மாஸ்டர்ஸ் பட்டம் கிடைத்ததும் அவருக்கு இரு நேர்காணல்கள் வந்தன. ஒன்று நல அலுவலர் பணி. மற்றொன்று சிறைச்சாலைப் பணி. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நல அலுவலர் வேலைக்குத் தான் அவருக்கு முதலிடம் கிடைத்தது. ஆனாலும் எழுதிச் செல்லும் விதியின் கைகள் வேறு மாதிரியாக எழுதிச் சென்றன. சிறைச்சாலை அதிகாரி வேலையில் அமர்ந்தார்.

1992 ஜூலை முதல் தேதி சிறைச்சாலை கல்லூரியில் ஏழு மாதங்களுக்கு அடிப்படை பயிற்சிகள். பின்னர் சிறைச்சாலை தலைமையகத்தில் ஆய்வுத் துறை பகுதியில் பணிகள்.

1995-ஆம் ஆண்டில் இருந்து 2001-ஆம் ஆண்டு வரை சிறைச்சாலை கல்லூரியில் விரிவுரையாளர் பணி. அதற்கு அடுத்து தலைமையகத்தில் பொது உறவு அதிகாரியாக நியமிக்கப் பட்டார். பின்னர் பெண்களுக்கான சிறைச்சாலையில் இயக்குநராக நியமனம். இங்கே தான் கௌசல்யா தேவியின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்.


குடும்பத்தைப் பிரிந்த பெண்கள் சிறைச்சாலையில் எப்படி எல்லாம் வேதனைப் படுகிறார்கள் என்பதை உணர்ந்தார். அதற்காகச் சிறைச்சாலையிலேயே மகளிர் தினத்திற்கு ஏற்பாடு செய்தார். 2005-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த நிகழ்ச்சி தொடர்கிறது.

இவரின் மேல் கல்விக்காகவும் மேல் பயிற்சிகளுக்காகவும் மூன்று முறை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப் பட்டார். 2010-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சிறைச்சாலைகளின் நன்னடத்தைச் சட்ட அமைப்பில் (paroles and related issues) திருத்தங்கள் செய்த சட்டக் குழுவில் இவரும் பங்கு வகித்தார்.

தமக்கு 60 வயதாகும் வரை தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிறைச்சாலை கல்லூரியில் விரிவுரையாளராகச் சேவை செய்வதில் மனநிறைவு பெறலாம் என்கிறார்.

சிறைச்சாலையில் கௌசல்யா வேலை செய்வதை உற்றார் உறவினர்கள் விரும்பவில்லை. இருந்தாலும் இவர் கவலைப் படவில்லை. தான் தேர்ந்து எடுத்த அந்தத் துறையில் முழு ஈடுபாடு காட்டினார். 


இவருடைய தாயாரும் கணவரும் இவருக்கு முழு ஆதரவு தந்து உற்சாகம் கொடுத்தார்கள். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே இந்தச் சகோதரி கௌசல்யாவின் முன்னேற்றத்திற்குப் பின்னால் வேறொரு பின்னணி. அவருடைய கணவரும் அவருடைய தாயாரும் அணிவகுத்து ஆதரவு வழங்கி இருக்கின்றனர். கௌசல்யாவிற்கு மூன்று பிள்ளைகள்.

தக்கன பிழைத்து வாழ்தல் என்பதைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆங்கிலத்தில் Survival of the fittest என்று சொல்வார்கள். சூழலுக்கு ஏற்றால் போல தங்களை வலிமையாக மாற்றிக் கொண்டு தப்பிப் பிழைக்கிற ஒரு முறைமையைத் தான் தக்கன பிழைத்து வாழ்தல் என்று சொல்வார்கள். இந்த மாதிரியான குணம் பெண்களிடம் அதிகம் உண்டு என்பதற்கு கௌசல்யா ஒரு தக்க சான்று.

ஒரு வேலையில் ஈடுபட்டு விட்டால் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பது ஆண்களின் திறன். ஆனால் அவர்களுக்கு அந்த வேலையில் ஏதாவது பிரச்னை என்றால் வேலையில் கவனம் இருக்காது. 


பெண்கள் அப்படி இல்லை. வேலையையும் தனிப்பட்ட பிரச்னைகளையும் குழப்பிக் கொள்வது இல்லை. அலுவலகத்திற்குச் சரியான நேரத்திற்கு வருவதில் பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள். அடிக்கடி டீ சாப்பிடுவது; புகைப் பிடிப்பது; வெளியில் செல்வது போன்ற பழக்கம் ஆண்களிடம் இருக்கும் பெரிய ஒரு மைனஸ் பாயிண்ட்.

பெண்களிடம் இது போன்ற குறைபாடுகள் ரொம்பவும் குறைவு. இப்படி நான் சொல்லவில்லை. தமிழகப் பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். ஆண்களைப் பற்றி எங்கேயோ இடித்தது. அதான் சுட்டிக் காட்டினேன்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியச் சிறைச்சாலைகளில் பெண் அதிகாரிகள் எண்மர் உயர்ப் பதவிகளில் நியமிக்கப் பட்டார்கள். அவர்களில் நிர்வாகப் பிரிவின் துணை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி கௌசல்யா தேவி. 2007-ஆம் ஆண்டில் இருந்து அந்தப் பதவியில் இருக்கிறார்.

தவிர மலேசிய வரலாற்றில் இதுவரையில் இரு பெண்கள் மட்டுமே மலேசிய சிறை இலாகாவின் துணை இயக்குநர் பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கௌசல்யா தேவி.


பொதுவாகவே பெண்கள் இந்த மாதிரி கடினமான, சவால் மிக்கப் பணிகளில் ஈடுபடத் தயங்குவார்கள். ஆனால் கௌசல்யா தேவி சற்றும் தயங்கவில்லை.

சிறைக் கைதிகள் என்றாலே முரட்டு ஆசாமிகளின் மூர்க்கத் தனங்கள் தான் முதல் அடையாளமாகத் தெரிய வரும். அவர்களைக் கையாள்வதில் துணிச்சல் வேண்டும். அதிலும் ஒரு பெண்மணி முரட்டு ஆன்களைக் கையாள்வது என்பது சாதாரண விசயம் அல்ல. அதில் வெற்றி கண்டவர் சகோதரி கௌசல்யா தேவி.

பெண் என்பவர் ஒரு தாயாக, ஒரு மனைவியாக, ஒரு தங்கையாக, ஒரு மகளாக, ஒரு பேத்தியாக ஓர் ஆணின் வாழ்க்கையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார். மனித உறவுகளின் அனைத்துத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதற்கு ஏற்றால் போல சிறைச்சாலை அதிகாரி என்றால் உடலைச் சரியாக; கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சகோதரி கௌசல்யா நெடுந்தூர ஓட்டத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். 


மாறும் என்பதைத் தவிர மற்ற எல்லாமே மாறிக் கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மனம் கசக்கிற வேளைகளில் ‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்று சிலர் வருத்தப் படுவது உண்டு. அந்தப் புலம்பல் மட்டும் இன்னும் மாறவில்லை. அப்படி ஒரு வருத்தம் வந்தால் சகோதரி கௌசல்யாவை நினைத்துக் கொள்ளுங்கள். மாற்றம் வரும். மனிதில் தெபு வரும்.

என்னைக் கேட்டால்... ஆண்களைவிட பெண்கள் பல விதத்திலும் பல விசயங்களிலும் ’பெஸ்ட்’. அவர்களுக்கு நம்பர் ஓன் விருது கொடுக்கலாம். ஆண்களே பொறுத்தருளவும்.

சவால் மிக்க சேவையில் ஈடுபட்டு வரும் சகோதரி கௌசல்யாவிற்கு மலேசியத் தமிழர்களின் சார்பில் என்னுடைய வாழ்த்துகள். நலமாய் பயணிக்க வேண்டுகிறேன்.


copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

சான்றுகள்:


1. https://www.utusan.com.my/mega/rona/kausalya-seronok-di-penjara-1.201501

2.http://www.prison.gov.my/portal/page/portal/mobile/beritaterkini?fac_next_page=htdocs/beritaTerkini/ViewBerita.jsp?id=3211

3. https://www.facebook.com/jabatanpenjaramalaysia/videos/1571529049523808/?v=1571529049523808




        


26 ஜூலை 2019

மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு

மின்னல் எப்.எம். (Minnal FM) என்று சொல்லும் போது மின்மினியாய் இனிமைக் கீர்த்தனங்கள். அழகு அழகான குரல்கள். அழகு அழகான நிகழ்ச்சிகள். அழகு அழகான சிந்து பைரவிகள். எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். தப்பில்லை. 


அந்த வகையில் மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு வரலாறு என்பது நீண்ட நெடிய சுவடுகளைக் கொண்டது. நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பு வானொலி 6 என்றும் மலேசிய வானொலி அலைவரிசை 6 என்றும் அழைக்கப்பட்டது. அதில் இருந்து வந்த புதிய பரிமாணம்தான் மின்னல் எப்.எம். மலேசிய இந்தியர்களின் தகவல் பொழுதுபோக்கு ஊடகம். மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது. மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது.

மலேசிய வானொலியின் வரலாறு 1921-ஆம் ஆண்டு தொடங்குகிறது. 1920-ஆம் ஆண்டுகளில் ஜொகூர் மாநில அரசாங்கத்தில் ஏ. எல். பெர்ச் என்பவர் ஒரு மின்பொறியியலாளர். இவர்தான் மலாயாவிற்குள் முதன்முதலாக ஒரு வானொலிப் பெட்டியை இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்தார். 



அதே ஆண்டு ஜொகூர் கம்பியில்லாத் தொடர்புக் கழகத்தை (Johore Wireless Association) உருவாக்கினார். 300 மீட்டர் ஒலி அலையில் ஒரு சின்ன கம்பியில்லாத் தொடர்பு முறை. அவ்வளவுதான்.

1922-ஆம் ஆண்டு பினாங்கில் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர், மலாக்காவில் கம்பியில்லாத் தொடர்புக் கழகங்கள் உருவாகின.

1930-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தைச் சேர்ந்த சர் ஏர்ல் (Sir Earl) என்பவர், மாதத்தில் இரண்டு நாட்களுக்குச் சிற்றலை ஒலிபரப்பைத் தொடங்கினார். 



பின்னர் காலத்தில் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் பகுதிக்கு மாற்றம் கண்டது. அங்கு இருந்து ஒரு புதிய ஒலிபரப்புச் சேவைத் தொடங்கினார்கள். மலாயா கம்பியில்லாக் கழகம் (Malaya Wireless Association) என பெயரையும் வைத்தார்கள்.

அடுத்து சர் செண்டோன் தாமஸ் (Sir Shenton Thomas) என்பவர் வருகிறார். இவரைத் தான் மலாயா வானொலியின் தந்தை என்று பெருமையுடன் அழைக்கிறார்கள். மலாயாவின் ஒலிபரப்புத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவர்.

1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி சிங்கப்பூரில் இருக்கும் கால்டிகாட் குன்றில் (Caldecott Hill) ஓர் ஒலிபரப்பு அறையை உருவாக்கினார். அதற்கு மலாயா பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corporation of Malaya) என பெயரையும் சூட்டினார். பின்னர் மலாயா ஒலிபரப்புக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.


Sir_Thomas_Shenton

இந்த மலாயா ஒலிபரப்புக் கழகத்தில் மலாய், ஆங்கிலம், மாண்டரின் சீனம், தமிழ் என நான்கு மொழிகள் இருந்தன.

மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு 1938-ஆம் ஆண்டு தொடக்கப் பட்டதாகச் சிலர் சொல்கின்றனர். அது தவறு. 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்பது தான் மிகச் சரியான தகவல்.

அந்த நாளில் சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தமிழ் மொழியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. கோலாலம்பூர் நிலையத்தில் தஞ்சை தாமஸ் என்பவர் தமிழ்ப் பகுதியின் தலைவராக இருந்தார். இவர்தான் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி.

1942-இல் இரண்டாம் உலகப் போர். மலாயாவிலும் சிங்கப்பூரிலும் ஜப்பானியரின் ஆட்சி. அப்போது மலாயா தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் ஜே.எம்.பி.கே வானொலி.


அப்போதுதான் மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையில் ‘அவசரகாலம்’ எனும் ஒரு சிறப்புப் பகுதியும் சேர்க்கப் பட்டது. எந்த எந்த இடங்களில் எத்தனை மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்பதை வானொலி மூலமாக மக்கள் தெரிந்து கொண்டனர்.

1950-களில் மலாயா வானொலியின் (Radio Malaya) தமிழ்ச் செய்திகள், சிங்கப்பூரில் இருந்து ஒலிபரப்பு செய்யப் பட்டன. 1951-இல் புடு சாலையில் உள்ள தாங் லிங் மருத்துவமனையில் (Hospital Tang Ling) ஓர் அறையில் இருந்து தமிழ் ஒலிபரப்புகள்.



1956-ஆம் ஆண்டு கூட்டரசு மாளிகையில் (Federal House) இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி அங்கு இருந்த போது, மலேசிய தமிழ் உலகிற்கு நிறைய எழுத்தாளர்களை உருவாக்கிக் கொடுத்தது.

1963-ஆம் ஆண்டு மலேசியா உருவானது. மலாயா வானொலி என்பது மலேசிய வானொலி ஆனது. அதாவது ரேடியோ மலாயா என்பது ரேடியோ மலேசியா ஆனது.

1963 செப்டம்பர் 16-ஆம் தேதி, இனிலா ரேடியோ மலேசியா (INILAH RADIO MALAYSIA) எனும் அறிமுக வாசகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 1969 அக்டோபர் 6-ஆம் தேதி, அங்காசாபுரி வளாகத்திற்கு மலேசிய வானொலி மாற்றம் கண்டது. 



1970-ஆம் ஆண்டு ரங்காயான் மேரா என பெயர் மாற்றம். அதுவே 2005 ஏப்ரல் மாதம் முதல் தேதி மின்னல் எப்.எம். என பெயர் மாற்றம் கண்டது.

மொழிக்கு கலை ஒரு கலைவாசல். கலைக்கு இசை ஓர் இசைவாசல். இசைக்கு மொழி ஒரு விழிவாசல். அந்த மொழிக்கு ஒலி ஒரு தலைவாசல். அதுதான் மின்னல் எப்.எம். என்கிற ஓர் ஒலிவாசல். ஆனந்தத் தேன்காற்றில் ஓர் ஆனந்த பைரவி. வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/

மின்னல் எப்.எம். பற்றி விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதி இருக்கிறேன். அதன் முகவரி:

https://ta.wikipedia.org/s/559

சிங்காசாரி பேரரசு - 1

இந்தோனேசிய வரலாற்றில் இந்தியர்களின் ஆளுமைகள் மிகையான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன. இதுவரையிலும் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள், சிற்பச் சிலைகள், கோட்டை மதில்கள், சமயச் சின்னங்கள், அகழாய்வுகள், மண்பாண்டங்கள், உலோகப் பொருட்கள் போன்றவை தான் வரலாற்று ஆய்வுப் பணிகளுக்குப் பெரிதும் உதவிகள் செய்து வருகின்றன.


ஜாவா, சுமத்திரா தீவுகளில் இந்தியர்களின் ஊடுருவல்கள் மிக மிக அழுத்தமாக இருந்து இருக்கின்றன. இப்போதைய இந்தோனேசிய கலாசாரமும்; ஏன் அவர்களின் இந்தோனேசிய மொழியும்கூட சமஸ்கிருத மொழியின் பலத்த தாக்கங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அதை இந்தோனேசியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். பெருமைக்காகச் சொல்லவில்லை.

கீழே ஓர் இணையத் தளத்தின் பெயரைக் கொடுத்து இருக்கிறேன். போய்ப் பாருங்கள். உண்மை தெரியும்.

(சான்று: http://www.gimonca.com/sejarah/sejarah01.shtml)

இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளில் ஒன்றுதான் சிங்காசாரி பேரரசு (Singhasari). அதைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.



சிங்காசாரி எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். சிங்கம் + சாரம் = சிங்கசாரம் என்று பிரிந்து வரும். சாரம் என்றால் தூங்குதல். ஆக தூங்கும் சிங்கம் என்று பொருள் படும். இன்னும் ஒரு விசயம்.

ஜாவாவிலும் சரி; சுமத்திராவிலும் சரி; சிங்கம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி சிங்கத்தின் பெயர் வந்து இருக்கலாம் என்று நீங்களும் கேட்கலாம். சரி.

சிங்கப்பூரில் கூட சிங்கம் இல்லை தான். அப்படி இருக்கும் போது சிங்கப்பூருக்கு மட்டும் சிங்க ஊர் என்று எப்படி பெயர் வந்தது. கேட்கலாமா இல்லையா.

சிங்கப்பூரைக் கண்டுபிடித்தவர் நீல உத்தமன். ஒருநாள் சிங்கப்பூர் காட்டில் சிங்கத்தைப் போன்ற ஓர் உருவத்தைப் பார்த்து அந்த இடத்திற்கு சிங்க ஊர் என்று பெயர் வைத்தார். அதுவே சிங்கப்பூரம் என்று மாறி, கடைசியில் இப்போது சிங்கப்பூர் என்று அழைக்கப் படுகிறது.



விலங்குகளின் ராஜா சிங்கம். அதனால் சிங்கத்தின் பெயரை ஒரு பெருமைக்காகச் சிங்காசாரி பேரரசிற்கு வைத்து இருக்கலாம். சரி. விசயத்திற்கு வருவோம்.

அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியல் வருகிறது. பாருங்கள். எந்த ஆண்டில் எங்கே தோற்றுவிக்கப் பட்டது என்பதையும் கவனியுங்கள்.

இந்தோனேசியாவை மொத்தம் 16 இந்தியப் பேரரசுகள் ஆட்சி செய்து இருக்கின்றன. 



அந்தப் பேரரசுகளின் பட்டியல்:

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya Kingdom) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–1292

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

இவற்றில் முதன்முதலாகத் தோன்றியது ஜலநகரப் பேரரசு. பெயரை நன்றாகக் கவனியுங்கள். ஜலநகரப் பேரரரசு. ஆகக் கடைசியாக வருவது மஜபாகித் பேரரசு. அதற்கு முன்னர் வருவது தான் சிங்காசாரி பேரரசு.



சிங்காசாரி பேரரசு என்பது ஜாவாவில் இருந்த ஒரு சைவம் – பௌத்த சமய அரசு. கி.பி 1222 முதல் கி.பி. 1292 வரை எழுபது ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்த அரசு.

கி.பி. 1293 ஆம் ஆண்டு வாக்கில் மஜபாகித் பேரரசு எழுச்சி பெறும் வரையில் இந்தச் சிங்காசாரி அரசு நீடித்து இருந்தது.

சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதல் கடவுளாக வணங்கும் சமயமாகும். இந்துச் சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக விளங்குகிறது. இன்றைய உலகில் சுமார் 25 கோடி 22 இலட்சம் இந்துக்கள் சைவ சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் முன்பு காலத்தில் ஆட்சி செய்த இந்திய அரசர்கள் பெரும்பாலோர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். சரி. நம்ப சிங்காசாரி கதைக்கு வருவோம். 



சிங்காசாரி அரசு என்பது கென் அரோக் (Ken Arok) என்பவரால் மத்திய ஜாவாவில் உருவாக்கப் பட்டது. இவரை கென் அங்கோரம் (Ken Angrok) என்றும் அழைப்பது உண்டு.

இந்தக் கென் அரோக் அரசர் கி.பி. 1182 முதல் கி.பி 1227 வரை சிங்காசாரி அரசை ஆட்சி செய்தவர். ஓர் ஏழ்மையான உழவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவருடைய வாழ்க்கை வரலாறு ஜாவாவின் நாட்டுப்புறக் கதைகளில் மிகுந்த களிநயத்துடன் இன்றும் வருணிக்கப் படுகின்றது. குறிப்பாக பரராத்தன் எனும் நூலில் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

உலகப் புகழ் மஜபாகித் பேரரசு தெரியும் தானே. அந்தப் பேரரசும் சிங்காசாரி பேரரசில் இருந்து தான் உருவானது. இந்தோனேசியாவைப் பற்பல இந்திய அரச பரம்பரையினர் ஆட்சி செய்து உள்ளனர். தெரிந்த விசயம்.



அந்தப் பரம்பரையினரில் ஒன்று தான் ராஜசா பரம்பரை (Rajasa dynasty). அந்தப் பரம்பரையைத் தோற்றுவித்தவரும் இதே இந்தக் கென் அரோக் தான்.

கென் அரோக்கின் தாயாரின் பெயர் கென் எண்டோக் (Ken Endok). இவருடைய தந்தையாரின் பெயர் கஜபுரன் (Gajahpura).

இவருடைய குடும்பம் ஓர் ஏழ்மையான உழவர் குடும்பம் என்று சொல்லி இருக்கிறேன். கிழக்கு ஜாவாவில் பிரந்தாஸ் (Brantas) ஆற்றுக் கரை கிராமத்தில் வாழ்ந்த குடும்பம். ஏழ்மையின் எல்லைக்கே போன குடும்பம்.

கென் அரோக் கைக்குழந்தையாக இருக்கும் போது ஒரு நாள் அவனுடைய தந்தையார் அவனைக் கொண்டு போய் ஓர் இடுகாட்டில் விட்டுவிட்டு வந்து விட்டார். யாராவது வசதி படைத்தவர்கள் அவனைக் கொண்டு போய் வளர்க்கட்டுமே எனும் நல்ல எண்ணம் தான். 



ஆனால் என்ன ஆனது தெரியுமா. கென் அரோக்கை ஒரு பக்கா திருடன் தூக்கிக் கொண்டு போய் வளர்க்கத் தொடங்கினான். அப்படியே அவனுக்கு எல்லாவிதமான தீய பழக்கங்களையும் கற்றுக் கொடுத்தான்.

கொள்ளை அடிப்பதில் இருந்து கொலை செய்வது வரை அனைத்தும் சின்ன வயதிலேயே கென் அரோக்கிற்கு அத்துப்படி.

நாளடைவில் அவன் வாழ்ந்த கெடிரி (Kediri) பகுதியிலேயே மிக தந்திரமான; மிக வஞ்சகமான கொள்ளைக்காரன் எனும் பெயரையும் எடுத்தான். அவனைப் பிடிப்பதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

இப்படி இருக்கும் போது மாப்பு லோகவன் (Mpu Lohgawe) எனும் ஒரு ரிஷியைக் கென் அரோக் சந்தித்தான். இந்த லோகவ ரிஷிதான் அவனுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தவர். 



அந்தக் காலக் கட்டத்தில் மத்திய ஜாவாவில் துமாபெல் (Tumapel) எனும் ஒரு குட்டி அரசு இருந்தது. அந்த அரசைத் துங்குல் அமேதுங்கன் (Tungul Ametung) என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

அந்த அரசரிடம் லோகவ ரிஷி இந்தக் கென் அரோக்கைக் கொண்டு போய்ச் சேர்த்தார். அப்படியே ஒரு சாதாரணப் பணியாளனாக வேலையிலும் சேர்த்து விட்டார்.

படிப்படியாக முன்னேறிய கென் அரோக், கெடிரி சிற்றரசின் அரசரானான். அது மட்டும் அல்ல. ஒரு கட்டத்தில் ஜாவாவின் அசைக்க முடியாத அரசராகவும் பெயர் பெற்று விளங்கினான்.

படிப்படியாக முன்னேறினான் என்று சொல்லக் கூடாது. தப்பு. தனக்கு வேலை கொடுத்து, படி அளந்த அரசர் துங்குல் அமேதுங்கனையே கொலை செய்துவிட்டுத் தான் கென் அரோக் அரசப் பதவிக்கு வந்தான். 



இந்தக் கொலையிலும் ஒரு பச்சைத் துரோகம் இருக்கிறது. மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்று சொல்வார்களே. அதில் வருவது நடு ஆசையான பெண்ணாசை. அந்த ஆசையும் கென் அரோக்கிற்கு வந்து தொலைத்து விட்டது.

எந்த நேரத்தில் யாருக்கு என்ன ஆசை வந்து தொலையும் என்று யாருக்குத் தெரியும். சொல்லுங்கள். அந்தப் பதஞ்சலி ரகசியத்தை முன்கூட்டியே தெரிந்து வைத்து இருந்தால் இவனும் அந்தப் பக்கம் பாய் விரித்துப் படுத்து இருக்க மாட்டான்.

அந்த மாதிரி பாவம் கென் அரோக்கிற்கும் அரசர் துங்குல் அமேதுங்கனின் மனைவி மீது ஆசை வந்துவிட்டது. அப்புறம் தான் பெரிய பெரிய வில்லங்கமே நடந்தது.



அரசர் துங்குல் அமேதுங்கனின் மனைவியின் பெயர் கென் தேடிஸ் (Ken Dedes). ஓர் அழகிய ஓவியம். அவள் மீது ஆசை மட்டும் அல்ல கண்களை மறைக்கின்ற மோகம். இந்தக் கதையை இழுத்து அடிக்காமல் கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

அப்புறம் என்ன. கென் அரோக் அழகாய் ஒரு சதித் திட்டம் தீட்டி அரசர் துங்குல் அமேதுங்கனை கொலை செய்து விடுகிறான். அவருடைய மனைவியைத் தன் உடைமையாக வரித்துக் கொண்டான். அதன் பின்னர் பழம் நழுவிப் பாலில் விழுந்தது. துமாபெல் அரசின் ஆளுநராகத் தன்னை நியமித்துக் கொண்டான். 

அடுத்ததாக கி.பி.1222-இல் பக்கத்து நாடான கெடிரி அரசின் மீது போர் தொடுத்தான். அதன் அரசர் கர்த்த ஜெயாவையும் (Kertajaya) தோற்கடித்தான். அடுத்து கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து சிங்காசாரி எனும் ஓர் அரசை உருவாக்கினான். ஆக அந்த வகையில் துமாபெல் சிற்றரசும் கெடிரி சிற்றரசும் ஒன்றிணைக்கப் பட்டன. இப்படித்தான் சிங்காசாரி அரசு உருவானது.

 


தன் பெயரை ஸ்ரீ ரங்கா ராஜசா பத்திரை அபூர்வபூமி (Sri Ranggah Rajasa Bhatara Amurwabhumi) என்று மாற்றிக் கொண்டான். அந்த வகையில் ராஜசா எனும் அரச பரம்பரையும் உருவானது.

அது மட்டும் அல்ல. தன்னைச் சிவபெருமானின் மகன் என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டான். நாட்டு மக்கள் தன்னைக் கடவுளாகப் பார்க்க வேண்டும் என்றும் கட்டளை போட்டான்.

கென் அரோக்கின் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. துமாபெல் அரசின் துங்குல் அமேதுங்கன் என்பவர் அரசராக இருந்த போது கொலை செய்யப் பட்டார். சொல்லி இருக்கிறேன்.

இந்தக் கொலையில் துங்குல் அமேதுங்கனின் மகன் அனுசபதிக்கு (Anusapati) நீண்ட நாட்களாக சந்தேகம். தன் தந்தையைக் கென் அரோக் தான் கொலை செய்து இருக்க வேண்டும் எனும் சந்தேகம். 



ஒருநாள் உண்மை தெரிய வர கென் அரோக்கை அனுசபதி கொன்று விடுகிறேன். எந்தக் கத்தியால் துங்குல் அமேதுங்கனைக் கொன்றானோ அதே கத்தியால் தான் கென் அரோக்கும் குத்தப்பட்டுச் சாகடிக்கப் பட்டான். இப்படித்தான் ரோமாபுரியில் ஜுலியஸ் சீசரின் சகாப்தம் ஒரு முடிவிற்கு வந்தது. சரி.

அங்கே இந்தோனேசியாவில் இந்தியர்களின் வரலாற்றை வரலாறாக மதித்து கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் அப்படியா நடக்கிறது. இந்தியர்கள் சார்ந்த அடையாளங்களை அடித்துத் துவைத்து மிதித்து அரிச்சுவடி இல்லாமல் சிதைத்துக் கொண்டு  வருகிறார்கள்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் எதைக் கடிக்கக் கூடாதோ அதையும் கடித்து வருகிறார்கள்.

மனிதர்களில் முன்பு பரமேஸ்வரா காணாமல் போனார். அப்புறம் முன்ஷி அப்துல்லா காணாமல் போனார். அப்புறம் ஹங்துவா காணாமல் போனார். அப்புறம் கோத்தா கெலாங்கி காணாமல் போனது. இப்போது பூஜாங் சமவெளியும் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. 



எது எப்படியோ பத்துமலை, ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர்மலைக் கோயில்களை எங்கள் தாத்தா பாட்டிகள் தான் கட்டிக் கொடுத்தார்கள் என்று யாரும் சொல்லாமல் இருந்தால் சரி. அதுவே நாம் செய்த பெரும் பாக்கியம்; பெரிய புண்ணியம்.

(தொடரும்)

சான்றுகள்:

1.https://en.wikipedia.org/wiki/List_of_monarchs_of_Java)

2.http://www.gimonca.com/sejarah/sejarah01.shtml - Early civilization in Java and Sumatra was heavily influenced by India. Today's cultures in Indonesia, and even the language, still show influences from the Sanskrit language and literature)

3.Ooi, Keat Gin, ed. (2004). Southeast Asia: a historical encyclopedia, from Angkor Wat to East Timor (3 vols)

4.http://www.eastjava.com/books/majapahit/html/dynasty.html - Abandoned in a cemetery shortly after his birth, the infant was subsequently adopted by a thief named Lembong)

5.Saidihardjo, Dr. M. Pd., A.M, Sardiman, Drs., Sejarah untuk SMP, Tiga Serangkai, Solo, 1987, 4th reprint edition in 1990

6.https://id.wikipedia.org/wiki/Kertajaya - Sri Maharaja Kertajaya adalah raja terakhir Kadiri yang memerintah sekitar tahun 1194-1222

7.https://en.wikipedia.org/wiki/Anusapati)

All Rights Reserved. No part of this publication may be reproduced, stored in a retrieval system or transmitted in any form by any means/ electronic/ mechanic/ photocopying/ recording or otherwise without written permission from the author KSMuthukrishnan.

copyright © https://ksmuthukrishnan.blogspot.com/