20 நவம்பர் 2020

மலாயா தமிழர்கள்: புக்கிட் லிந்தாங் ஆயர் மோலேக் மலாக்கா 1895

1895-ஆம் ஆண்டில் மலாக்கா, புக்கிட் லிந்தாங் தோட்டம் உருவாக்கப்பட்டது. மலாக்காவில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ள தோட்டம். உருவாக்கியவர் சான் கூன் செங் (Chan Koon Cheng). சீன வர்த்தகர்.

மலாயா ஆங்கிலேயர்களின் தோட்டங்களுக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள் புக்கிட் லிந்தாங் தோட்டத்திற்கும் கொண்டு வரப் பட்டார்கள். தமிழர்களைக் கொண்டு வருவதற்கு மலாயா ஆங்கிலேய அரசாங்கம் உதவி செய்து இருக்கிறது.

அந்தக் காலக் கட்டத்தில் மலாக்காவில் புகழ்பெற்று விளங்கிய மற்றொரு சீனர் டான் சாய் யான் (Tan Chay Yan). இவரின் துணையுடன் புக்கிட் லிந்தாங் தோட்டம் உருவானது.

1895-ஆம் ஆண்டு 60 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது. பின்னர் 1897-ஆம் ஆண்டு அருகாமையில் இருந்த புக்கிட் டூயோங் தோட்டத்தில் 40 ஏக்கர் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மெட்ராஸ் நகரில் இருந்து தமிழர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டார்கள்.

1899; 1900; 1901-ஆம் ஆண்டுகளில் ஜாசின் கெமண்டோர் (Kemendor); புக்கிட் சிங்கி (Bukit Senggeh); சிலாண்டார் (Selanda); கீசாங் (Kesang); ரீம் (Rim) ஆகிய பகுதிகளில் மரவள்ளித் தோட்டங்களும் ரப்பர் தோட்டங்களும் உருவாக்கப் பட்டன. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழர்கள் சென்னையில் இருந்து அழைத்துவரப் பட்டார்கள்.

இந்த நாட்டை வளப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. வரலாறு பொய் சொல்லாது. ஏன் என்றால் வரலாற்றுக்கு மனசாட்சி உள்ளது.

அதே சமயத்தில் ஆளை ஆட்டிக் கொண்டு சோம்பேறியாய் தெனாவெட்டியாய் வாழ்பவர்கள் சிலர் அவர்களைப் பார்த்து வெட்கம் இல்லாமல் வந்தேறிகள் என்று வாய் கூசாமல் சொல்கிறார்கள். அவர்கள் உழைத்துப் போட்டதைத் தின்றுவிட்டு அவர்களையே நா கூசாமல் கொச்சைப் படுத்துகிறார்கள். வெட்கமாகத் தெரியவில்லையா. எனக்கு வெட்கம் வேதனை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.11.2020

Malaya Indians Bukit Lintang Estate Ayer Molek Malacca 1895

Source:

1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.

2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908. Page: 843

Notes:

In 1895 Mr. Chan Koon Cheng started as a rubber planter in partnership with Mr. Tan Chay Yan at Bukit Lintang (Kandang and Ayer Molek). In 1895 he planted 60 acres, and in 1897 planted 40 acres on his own property, Bukit Duyong. He brought coolies from Madras. From 1895 to 1900 he was also manager of Messrs. Guan Hup & Co., general storekeepers, &c., Malacca.

In 1901 he commenced planting 3,000 acres at Kemendor, Bukit Senggeh, Selandar, Kesang, and Rim, known as Kesang - Rim rubber and tapioca estate, and by the year 1906 he had the whole estate set with tapioca and interplanted with rubber.

Mr. Chan Koon Cheng, J. P is one of the oldest Chinese families in Malacca is that of which the present-day representative is Mr. Chan Koon Cheng, tapioca and rubber planter.

He can trace his descent in a direct line for in Singapore. Mr. Chan Koon Cheng, J. P.—One of the oldest Chinese families in Malacca is that of which the present-day representative is Mr. Chan Koon Cheng, tapioca and rubber planter.

He can trace his descent in a direct line for eight generations. His ancestor who first came from China and settled with his family in Malacca was Mr. Chan Plan Long, who was a Chin Su. He arrived in 1671. Mr, Chan Koon Cheng's grandfather, Mr. Chan Hong Luan, was once a lessee of the Government spirit and opium farms in Malacca.


18 நவம்பர் 2020

மொரீஷியஸ் பணத்தாள்களில் தமிழ் மொழிக்கு மூன்றாம் நிலை?

தமிழ் மலர் - 17.11.2020

மொரீஷியஸ் தீவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். மொரீஷியஸ் பணத்தாள்களில் இரண்டாம் நிலையைக் கொடுத்தார்கள். தமிழர்களுக்கு அழகாய்ச் சிறப்பு செய்துவிட்டுப் போனார்கள். ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழி அடுத்த நிலையில் இருந்தது. இரண்டாவது இடத்தில் மரியாதை செய்யப் பட்டது.

1968-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. அப்போது தமிழர்களின் மக்கள் தொகை 56,747. அடுத்து தெலுங்கர் மக்கள் 24,233. அடுத்து சீனர்கள் 20,608. அதற்கும் அடுத்து மராட்டியர்கள் 16,553. இவர்களில் ஒட்டு மொத்த வட இந்தியர்கள் 71.668. ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழர்கள் மட்டும் தனித்து அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அதனால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் 2004 அக்டோபர் 30-ஆம் தேதி மொரீஷியஸ் மத்திய வங்கி வெளியிட்ட புதிய பணத்தாள்களில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப் பட்டது.

தமிழர்கள் கொதித்துப் போனார்கள். அரசாங்கத்திற்கு நேரடியாக எச்சரிக்கை செய்தார்கள். சட்டம் மூலமாகப் போராட்டம் செய்வோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இங்கே இந்தப் பக்கம் நாம் எப்படிப் போராடுகிறோம். அதே போலத்தான் அங்கேயும் மொரீஷியஸ் தமிழர்கள் போராடி இருக்கிறார்கள்.

2004 நவம்பர் 5-ஆம் தேதி தமிழ்த் தலைவர்கள் பத்து பேர் மொரீஷியஸ் குடியரசு தலைவரைச் சந்தித்தார்கள். துணைக் குடியரசு தலைவரையும் போய்ப் பார்த்து முறையிட்டார்கள். அப்போது பிரதமராக நவீன் ராம்குலாம் பதவியில் இருந்தார். இந்த மனிதர் ஒரு மிதவாதி. உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.

பணத்தாள்களை மறுபடியும் அச்சடிக்குமாறு வங்கி ஆளுநருக்குக் கட்டளை போட்டார். அதாவது தமிழை இரண்டாவது இடத்தில் வைத்து புதிய பணத்தாள்களை அச்சடிக்கச் சொல்லிக் கட்டளை.

இறுதியில் அப்படி இப்படி என்று மொரீஷியஸ் தமிழர்களின் தமிழ்ப் போராட்டம் வெற்றி பெற்றது. மறுபடியும் வெளியிடப்பட்ட பணத்தாள்களில் தமிழ் இரண்டாம் நிலையில் இடம் பெற்றது. மொரீஷியஸ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தாய்மொழி தமிழைத் தற்காக்க மொரீஷியஸ் தமிழர்கள் செய்த போராட்டம் உலகத் தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு காலச் சுவடு. போற்றப்பட வேண்டிய உணர்வுச் சுவடி.

ஆனால் ஒன்று. தமிழர்கள் உலகின் பல நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களின் உரிமைகளைப் போராடித் தான் இதுவரையிலும் பெற்று வருகிறார்கள். அதனால்தானோ என்னவோ தெரியவில்லை தமிழர்களுக்குப் போராட்டக் குணம் மிகுந்து வருகிறது.

உலகத் தமிழர்களுக்கு அப்படி ஒரு நிலைமை. வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். அதற்கு மொரீஷியஸ் தமிழர்கள் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

மொரீஷியஸ் தீவில் ‘மொரிசியத் தமிழ் பேசுவோர் ஒன்றியம்’ (The Mauritius Tamil Speaking Union) எனும் ஒரு சங்கம் உள்ளது. இதன் தலைவர் டாக்டர் ரகுநாதன்.

மொரீஷியஸ் தமிழர்களைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் தயாரித்து வருகிறேன். அங்கு புழக்கத்தில் உள்ள பணத் தாள்களின் படங்களை அனுப்பி வையுங்கள் என்று கேட்டு இருந்தேன். அனுப்பி வைத்தார். அத்துடன் அங்கு நிகழ்ந்த பணத்தாள்கள் போராட்டம் பற்றிய செய்தியையும் அனுப்பி வைத்தார்.

தவிர மொரீஷியத் தமிழ் பேசுவோர் ஒன்றியத்தின் விருந்தினராக வருகை தரும்படி அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். மொரீஷியஸ் தமிழர்களைப் பற்றி ஒரு வரலாற்று நூல் தயாரிக்கும்படி அன்பான வேண்டுகோள். நன்றி சொல்லிக் கொள்கிறேன். விரைவில் மொரீஷியஸ் செல்வேன். சரி. மொரீஷியஸ் தமிழர்கள் வரலாற்றுக்கு வருவோம்.

1810-ஆம் ஆண்டு மொரீஷியஸ் தீவில் ஆங்கிலோ பிரெஞ்சுப் போர். அந்தப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்கள் வெற்றி பெற்றதில் தமிழர்களுக்கும் பெரிய பங்கு உண்டு. தமிழர்களின் ஆதரவு இல்லாமல் ஆங்கிலேயர்கள் அதிகாரத்திற்கு வந்து இருக்க முடியாது. அதன் பின்னர் மொரீஷியஸ் தீவில் ஆங்கிலேயர்களின் 158 ஆண்டுகள் ஆட்சி.

ஆங்கிலேய ஆட்சியின் போது 1829-ஆம் ஆண்டு தொடங்கி 1830-ஆம் ஆண்டு வரை ஆயிரக் கணக்கான தமிழர்கள் சென்னையில் இருந்து மொரீஷியஸ் தீவிற்குக் குடியேற்றப் பட்டார்கள். 1830-ஆம் ஆண்டு வரையில் முதல் கட்டக் குடியேற்றம் என்று சொல்வார்கள். இந்தியாவின் பீகார், பஞ்சாப் மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் குடியேறி இருக்கிறார்கள்.

மொரீஷியஸ் தீவின் தலைநகரம் போர்ட் லூயி. அங்கே ஒரு மத்தியச் சந்தை. அந்தச் சந்தையின் கட்டுமானத்தை உருவாக்குவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் கொண்டு போகப் பட்டார்கள். அந்தச் சந்தையைக் கட்டி முடிக்க சில ஆண்டுகள் பிடித்தன. 1845-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள்.

ஏராளமான தமிழ் வணிகர்கள் வாணிகம் செய்ய வந்தார்கள். அவர்கள் பயணம் செய்த கப்பலகள்:

1853-ஆம் ஆண்டு காப்ரீசி
1855-ஆம் ஆண்டு ஆர்லிகென்

அது மட்டும் அல்ல. 1862-ஆம் ஆண்டில் இருந்து 1866-ஆம் ஆண்டு வரை 749 தமிழ் வணிகர்கள் மொரீஷியஸ் தீவிற்கு வணிகம் செய்யப் போய் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பெயர்கள் சென்னைப் பழம்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்க முடிந்தது.
 
எம். கைலாசம் பிள்ளை;
நல்லசாமி மருதை படையாச்சி;
ஏ. சிவராமன்;
பரிமணம்;
ஜி.பொன்னுசாமி;
டி. வேலாயுதம் பிள்ளை

இன்னும் ஒரு கூடுதலான செய்தி. 1860-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் இருந்து இந்தியத் தொழிலாளர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கும் குடிபெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுடன் தமிழ் வணிகர்கள் பலரும் குடிபெயர்ந்து உள்ளனர்.

வணிக நிறுவனங்கள்:

ஏ.எஸ்.அய்யாசாமி,

ஏ.ஆர். நல்லதம்பி அண்ட் கோ;

எம். பொன்னுசாமி அண்ட் கோ;

ஆறுமுகம் செட்டி அண்ட் கோ;

வையாபுரி செட்டி கம்பெனி;

ஐ.வேலாயுதன் அண்ட் கோ;

இருளப் பிள்ளை அண்ட் கோ

இவர்களில் சிலர் ரீயூனியன் தீவுகள், மடகாஸ்கர் போன்ற இடங்களுக்கும் சென்று உள்ளனர். அவர்களைப் பற்றி பின்னர் தெரிந்து கொள்வோம்.

மொரீஷியஸ் தமிழர்கள் தங்களின் தாய் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து விட்டனர். உண்மையை ஏற்றுக் கொள்வோம். இருப்பினும் தங்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் மட்டும் என்றும் மறப்பது இல்லை.

மொரீஷியஸ் முழுவதும் ஏறக்குறைய 128 ஆலயங்கள் இருக்கின்றன. முருகன், சிவன், விநாயகர், மாரியம்மன், கிருஷ்ணன், துர்க்கை அம்மன், இராமன், வீரமாகாளி அம்மன், முனீஸ்வரர், மதுரை வீரன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றனர். கடல் கடந்து போன தமிழர்கள் ஆலயப் பண்பாடுகளையும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

தலைநகர் போர்ட் லூயி. அங்கே மீனாட்சி அம்மன் ஆலயம். அது தான் அங்கே பெரிய ஆலயம். தைப்பூசம் மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. தைப்பூச நாள் பொது விடுமுறை நாளாகும். பொதுவாகவே பெண்கள் மஞ்சள் ஆடை அணிகின்றார்கள். ஆண்களும் மஞ்சள் நிற ஆடைகள் அணிகின்றார்கள். மஞ்சள் நிறத்தைத் தமிழ் மக்களின் பாரம்பரிய நிறமாகக் கருதுகிறார்கள்.

1865-ஆம் ஆண்டில் மொரீஷியஸ் தீவில் 26 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளுக்குத் தமிழ் நூல்கள் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப் பட்டன. மொரீஷியஸ் சுதந்திரம் பெற்ற பின்னர் தேசியக் கல்வித் திட்டத்தில் தமிழ் இடம் பெற்றது.

தமிழைப் படிக்க விரும்பிய பிள்ளைகளுக்கு தமிழாசிரியர்கள் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். மொரீஷியஸ் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தமிழ்ப் பாடநூல்களும் எழுதப் பட்டன.

இருந்தாலும் பெரிய ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. 1865-ஆம் ஆண்டில் 26 தமிழ்ப் பள்ளிகளில் 1400 மாணவர்களுக்கு மேல் தமிழ் படித்தார்கள். ஆனால் பாருங்கள். 1910-இல் அந்த எண்ணிக்கை 1120-ஆக குறைந்து விட்டது.

பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துவதற்குப் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தினார்கள். அது ஓர் அவசியமாகவும் இருந்தது. பிரெஞ்சு மொழியும் ஆப்பிரிக்க மொழியும் கலந்த கிரியோல் மொழி தமிழர்களிடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி தான் ஆட்சி மொழி. அதனால் ஆங்கில மொழியுடன் தமிழ் மொழி போட்டி போட வேண்டி வந்தது. தவிர தமிழர்கள் அதிக அளவில் தோட்டத் தொழிலாளிகளாக இருந்தார்கள். அதனால் கல்வி கற்கும் சூழலும் சிறப்பாக அமையவில்லை.

1865-ஆம் ஆண்டில் தமிழ் தெரிந்தவர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப் பட்டன. பின்னர் தமிழாசிரியர்கள் தமிழ் நாட்டில் இருந்து வரவழைக்கப் பட்டனர். சொல்லி இருக்கிறேன்.

சில புள்ளிவிவரங்கள்:

1966-ஆம் ஆண்டு முறையான தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப் பட்டன.

1967-ஆண்டில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை 60. மாணவர்கள் 5,000.

1968-ஆம் ஆண்டு மார்சு 12 ஆம் தேதி மொரீஷியஸ் நாடு சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர் தமிழ் மொழியின் போதான முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.

2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மொரீஷியஸ் தீவில் 13,000 மாணவர்கள் தமிழ் மொழி கற்று வருகிறார்கள். அங்கே 200 தொடக்கநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி சொல்லித் தரப்படுகிறது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் மட்டும் அல்ல. மாலை நேரங்களிலும் சில இடங்களில் தமிழ் வகுப்புகள் நடத்தப் படுகின்றன. மகாத்மா காந்தி நிறுவனம் எனும் ஒரு தன்னார்வ நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் நாற்பது மாணவர்கள் தமிழ்க் கல்விச் சான்றிதழ் பெற்று வருகின்ரார்கள்.

மொரீஷியஸ் கல்விக் கழகம்; மொரீசியஸ் வானொலி தொலைக்காட்சி நிறுவனம்; இந்த இரு அமைப்புகளும் தமிழ்மொழிப் பாடங்களை நடத்தி வருகின்றன. தமிழ் மொழியைத் தற்காக்க எப்படி எப்படி எல்லாம் போராட வேண்டி இருக்கிறது. அங்கே மொரீஷியஸ் தமிழர்கள் போராடுகிறார்கள். இங்கே மலாயா தமிழர்கள் போராடுகிறார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.11.2020


சான்றுகள்:

Moree, Perry J. (1998). A Concise History of Dutch Mauritius, 1598–1710: A Fruitful and Healthy Land. Routledge.

Vink, Markus (2003). "'The World's Oldest Trade': Dutch Slavery and Slave Trade in the Indian Ocean in the Seventeenth Century". Journal of World History. 14 (2): 131–177.

Bahadur, Gaiutra (2014). Coolie Woman: The Odyssey of Indenture. The University of Chicago. ISBN 978-0-226-21138-1.

Macdonald, Fiona; et al. "Mauritius". Peoples of Africa. pp. 340–341.


 

கோலாலம்பூரில் ஊரடங்கு

தமிழ் மலர் - 17.11.2020

கோவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால் கோலாலம்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப் படலாம் என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இருப்பினும் சுகாதார அமைச்சு இது தொடர்பான பரிந்துரையை இன்னும் தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பிக்கவில்லை என நேற்று இங்கு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் ஊரடங்கு விதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஆனால் சுகாதார அமைச்சுதான் இது குறித்து முடிவு செய்யும் என்றார் அவர். கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளைச் சுகாதார அமைச்சு மதிப்பீடு செய்து வருகிறது.

விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் சொன்னார். தற்போது கோலாலம்பூரில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்து வருகிறது.

 

17 நவம்பர் 2020

மலாக்கா காடிங் தோட்டத்து தீபாவளி குலேபகாவலி

தமிழ் மலர் - 16.11.2020

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளில் தீபாவளி என்றால் சொல்லவே வேண்டாம். இரண்டாவது முறையாக உலகம் உருண்டையானது போல களை கட்டி நிற்கும். ஒரு பத்துப் பதினைந்து குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலக் கட்டம்.

தீபாவளிக்கு முதல் நாள். சாயங்கால நேரத்தில் சின்னச் சின்னத் துக்கடான்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கொள்வோம். ஒரு மீட்டிங் போடுவோம். எந்த ஆற்றில் குளிப்பது. சின்ன ஆற்றில் குளிக்கலாமா. பெரிய ஆற்றில் குளிக்கலாமா. வாக்குவாதம் நடக்கும்.

மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டம்.
ரப்பர்த் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்து

இதே தோட்டத்தில் கிராணியாராகவும் பணி புரிந்தேன்.

பாலாறு என்று ஓர் ஆறு இருந்தது. பால் ஓடுகிற ஆறு அல்ல. ரப்பர்க் கழிவுகள் கலக்கும் ஒரு பழைய ஆறு. சும்மா சொல்லக் கூடாது. மனுசன் குளிக்க மாட்டான். புரிந்து கொள்ளுங்கள். அதற்கு நாங்கள் வைத்த பெயர் பாலாறு. ஒன் மினிட் பிளீஸ்.

தீபம் என்றால் ஒளி. ஆவளி என்றால் வரிசை. ஒளி விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி வைத்துக் கொண்டாடும் திருநாள். 21 விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்பது ஓர் ஐதீகம். இப்போது எல்லாம் இந்த மாதிரி வரிசை வரிசையாக 21 விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறார்களா? தெரியவில்லை. பெரிய வயசு பெரிசுகளைக் கேட்டால் தெரியும்.

முன்பு 50 வருடங்களுக்கு முன்னர் தோட்டங்களில் தான் தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கோலாகலமாகப் பார்க்க முடிந்தது. அடுத்து நகர்ப் புறங்களில் பார்க்க முடிந்தது. கடைத் தெருக்களில் பார்க்க முடிந்தது. காட்டுக் கோயில்களில் பார்க்க முடிந்தது. ஏன் ஈய லம்பங்களில் கூட பார்க்க முடிந்தது.

தோட்டப்புற வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் போட்டிப் போட்டுக் கொண்டு தீப விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். நான் பிறந்து வளர்ந்த மலாக்கா, டுரியான் துங்கல், காடிங் தோட்டத்தில் தீபாவளி என்றால் அப்படித்தான் இருக்கும்.

சில வீடுகளில் வாழை மரங்களை வெட்டி வந்து நிறுத்தி வைத்து இருப்பார்கள். சில வீடுகளில் தோரணங்கள் தொங்கும். சில வீடுகளில் மாயிலைத் தோப்புகளே தொங்கும்.


அந்தக் காலத்துத் தோட்டத்துப் புறப் பாலாறு. மாதிரிப் படம்.

காடிங் தோட்டத்துக் கதைக்கு வருகிறேன். எந்த ஆற்றில் குளிப்பது என்று விவாதம் நடக்கும். ஒன்றும் சரிபட்டு வரவில்லை என்றால் கைவசம் எப்போதுமே ஒரு துருப்புச் சீட்டு இருக்கும். தோட்டத்துக் கழிசல்களின் ஒட்டு மொத்த வங்கி என்கிற பேரில் ஒரு பழைய ஆறு. பக்கத்திலேயே ஓடும். பாலாற்றின் பங்காளி ஆறு.

நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டால் போங்கள். அதுதான் அப்போதைக்கு எங்களின் வேதாரண்யம். ஏழைச் சிறுசுகளின் ஒன்றுவிட்ட சரணாலயம்.

காய்ந்த மாடுகள் கம்புக் கொல்லையில் பாய்ந்த கதை தெரியும் தானே. அந்த மாதிரி கொஞ்ச நேரத்தில் எல்லா பையன்களும் சட்டை சிலுவார்களைக் கழற்றிப் போடுவார்கள்.

1960-ஆம் ஆண்டுகளில் நான் வாழ்ந்த தோட்டத்து  மேல் லயன் வீடு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அச்சம், கூச்சம், அசிங்கம், அருவருப்பு என்று ஒன்றுமே இருக்காது. வெட்கம் என்றால் என்ன. கட்டி என்ன விலை. அது எங்கே விற்கிறது என்று கேட்பார்கள். அந்த மாதிரி நிர்வாண ராகத்தில் ஆனந்த பைரவிகளின் ஆலாபனைகள்.

அப்புறம் என்ன. ஆற்றுக்குள் அடுக்கடுக்காய்ப் பாய்ச்சல்கள். ஓகோ ஐலசா. ஓகோ ஐலசா. ஒரே கும்மாளம். வயசு என்ன. பத்து பன்னிரண்டு இருக்கும்.

நாங்கள் நடத்துகின்ற இந்தக் கூத்துகளைப் பார்த்து பத்து வயது சிறுமிகள் எல்லாம் ஓடிப் போய் ஒதுங்கிக் கொள்வார்கள். பத்துமலை, ராசாத்தி, ராசம்மா, பார்வதி, கல்யாணி, பத்துமா. இப்படி சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

தோட்டத்து மேல் லயன் வீடுகளில் முதல் வீடு. சின்ன வயதில் வாழ்ந்த வீடு.
1959-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை. இதை அவர்கள் படிக்க வேண்டும் என்பதே என்னுடைய தீபாவளி ஆசையும்கூட. ஆக அந்த ஆற்றுப் பக்கம் பெண் என்கிற பேரில் ஒரு கோழிக் குஞ்சுகூட வந்து எட்டிப் பார்க்காது. அப்படி ஒரு கூத்து நடக்கும்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆறு ’கோப்பி ஓ’ மாதிரி ஜென்மாந்திர கலருக்கு மாறிப் போய் இருக்கும். இருக்கிற மீன்கள் எல்லாம் கைலாசத்திற்கு பயணச் சீட்டுகளை வேறு வாங்கி இருக்கும். அதோடு விட்டால் தானே.

அதில் எவனோ ஒருவன் ஒரு சின்ன ஆள்காட்டி விரல் அளவுக்கு ஒரு மீனைப் பிடித்து விட்டான். பெயர் சுப்பன் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். அவனுக்கு அன்றைக்கு முழுவதும் மகா ராஜமரியாதை. அவனைத் தூக்கி வைத்து பெரிய ஓர் ஆட்டம்.

காடிங் தோட்டத்துப் பாலய நண்பன் சுப்பன்.  அருகில் சொந்தமாக வீடு கட்டி வாழ்கிறார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு.
2016 டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்

அது ஓர் அழகான காலம். அர்த்தம் தெரியாத ஆன்மீகங்கள். அற்புதமான பிஞ்சு மனங்களின் லௌகீகங்கள். அம்மணம் தெரியாமல் கலைந்து போகும் நனவுகள்.

மறுபடியும் கிடைக்குமா. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது. ரொம்ப நாளைக்கு முன்னால் தோட்டத்து அரிச்சுவடிகளில் இருந்து அவை எல்லாம் களவு போய்விட்டன.

அந்தக் காலக் கட்டத்தில் காடிங் தோட்டத்தில் குலேபகாவலி பூக்கள் இருந்தன. ஆங்கிலத்தில் எபிபில்லம் பைலாந்தஸ் (Epiphyllum phyllanthus) என்று பெயர். ரொம்ப நாளைக்குப் பிறகு ஆராய்ச்சி பண்ணி தெரிந்து கொண்டேன்.

காடிங் தோட்டத்து மேனேஜர் கூ பெக் வான் வாழ்ந்த பங்களா வீடு

இரவு 12 மணிக்கு மேல் இந்தப் பூ மலரும் போது நறுமணம் மூக்கைத் துளைக்கும். அதற்கு இலைகள் இல்லை. அந்தப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் பக்கத்தில் இருந்த மாரியம்மன் கோயில் வைத்து சாமி கும்பிடுவோம்.

இந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான், ராமன் என்கிற பையன் ஒரு செம்புத்துப் பறவையின் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்தான். அந்தக் காலத்தில், செம்புத்துப் பறவைகள் இருட்டுகின்ற நேரத்தில் பூச்சிகளைப் பிடிக்க பறந்து திரியும். சிகப்பு நிறத்தில் சற்றுப் பருமனாக இருக்கும்.

மரத்திற்கு கீழே இருக்கும் அலுவலகத்தில் தான் வேலை செய்தேன். அருகில் இருப்பது ரப்பர் பால் காய வைக்கும் கிடங்கு. ஆகப் பின்னால் இருப்பது பால் நிறுக்கும் இடம்.

இப்போது அவற்றைப் பார்க்க முடிவதில்லை. இங்கே காடுகள் அழிக்கப் படுவதால் அவை சோமாலியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்து விட்டதாக அரசல் புரசலாகக் கேள்வி.

ஆக அந்தச் செம்புத்துக் குஞ்சைச் சகல மரியாதையுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம். என் கண்ணையே ஒப்படைக்கிறேன் என்று சொல்லி அதை என்னிடமே கொடுத்து விட்டார்கள்.

விடிந்தால் தீபாவளி. ராத்திரி நேரத்தில் பக்கத்து வீட்டு ராமையா தாத்தா வந்தார். செம்புத்துக் குஞ்சைப் பார்த்து அசந்து போனார். மூனு நம்பர் அடிக்கிற மாதிரி செம்புத்துக் குஞ்சு லேசில் கிடைக்காது என்றார். அப்போது மூனு நம்பர்தான் பிரபலம். நான்கு நம்பர் கூடா இல்லாத காலம்.

நான் படித்த டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி. முன்பு அத்தாப்புக் குடிசையாக இருந்தது. இந்தப் பள்ளியின் முதல் தலைமையாசிரியர் மதிப்புமிகு வி.பி. பழனியாண்டி
அவர்கள் அன்பளிப்பு செய்த நிலத்தில் தான் இப்போது இந்தப் பள்ளியின் புதிய கட்டிடம்

எங்கே கிடைத்தது, எப்படி கிடைத்தது என்று விலாவாரியாக விசாரித்தார். விடிந்தால் தீபாவளி. இருந்தாலும் விடவில்லை. எங்களை களம் இறக்கி விட்டார். ஆற்றுப் பக்கத்தில் இருந்த லாலான் காடே தூள் தூளானது. லாலான் வேர்களைப் பிடுங்காத குறைதான்.

தூள் படத்தில் நடித்த விக்ரம் எங்கள் காடிங் தோட்டத்துக் கதையைப் பயன்படுத்தி இருக்கலாம். சொல்ல முடியாது. காடிங் தோட்டத்து மக்கள் பெரிய மனசுக்காரர்கள். பெரிதுபடுத்தவில்லை. சரி.

மதம் பிடித்த யானை செய்யும் துவம்சம் இருக்கிறதே அதையும் மிஞ்சிய சஞ்சீவிச் சதிராட்டங்கள் அங்கே நடந்து விட்டன. செடி கொடி எல்லாமே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டன.

காஜா பேராங் உயர்நிலைப்பள்ளி.
ஐந்தாம் படிவம் (
முன்பு சீனியர் கேம்பிரிட்ஜ்) வரை படித்த பள்ளி.

கூண்டு மட்டும் கிடைக்கட்டும். உங்களுக்கு ஆளாளாக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறேன்டா. இது உங்க ஆத்தா மேல சத்தியம்டா என்று ஆசை அபிசேகங்கள் வேறு. சஞ்சீவி வேரைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.

‘செம்புத்துக் கூண்டுக்குள் சஞ்சீவி வேர் இருக்குமாம். அந்த வேரை நம்ப உடம்புக்குள் வச்சு தச்சிட்டா; துப்பாக்கியால சுட்டாலும் சாக மாட்டோமாம். சுங்கை சிப்புட்டுல காட்டுப் பெருமாளுனு ஒருத்தர் இருந்தாராம். அவர்கிட்ட இந்த சஞ்சீவி வேர் இருந்துச்சாம். அதை வச்சுகிட்டு அவரு வெள்ளைக்காரங்க கிட்ட என்ன மாதிரி கண்ணாமூச்சி காட்டினார்ரு என்றார்.

ஆனால் என்ன. செம்புத்துப் பறவையின் கூடும் கிடைக்கவில்லை. செம்புத்துக் குஞ்சின் தாயையும் பார்க்க முடியவில்லை. லாலான் காடு ஒலிம்பிக் திடலாக மாறியதுதான் மிச்சம். சரி. சஞ்சீவி வேர் விசயத்திற்கு வருகிறேன்.

காடிங் தோட்டம். 1970-களில் கட்டப்பட்ட வீடு

சஞ்சீவி வேர் இறந்த ஒருவரையே மறுபடியும் உயிர்பிக்கும் சக்தி பெற்றது என்று நாம் அனைவரும் கேட்டு அறிந்தது. ஆனால் பாருங்கள், இந்த வேரை வாங்கியவர்கள் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை.

கடல் கடந்து வந்து இங்கே சஞ்சீவி வேர் என்று சொல்லி சிலர் விற்கிறார்கள். விற்றுவிட்டுப் போகட்டும். ஒரு வேர் பத்தாயிரம் ரிங்கிட் வரை விலை போய் இருக்கிறது.

ரொம்ப வேண்டாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஐயாயிரம் கொடுத்து வாங்கி இருக்கிறார். உண்மையிலேயே அது சஞ்சீவி வேர் தானா என்று அவருக்கே தெரியாது.

டுரியான் துங்கல் நீர்த்தேக்கம் பற்றிய செய்தியறிக்கை

ஆனால் காசு பணம் பார்க்காமல் பொதுமக்கள் அதை வாங்குகிறார்கள். தாயத்து என்று இடைவாரில், தொடைவாரில் கட்டிப் போட்டுக் கொள்கிறார்கள். குறை சொல்லவில்லை. அதனால் நன்மை வந்ததா என்பதே என்னுடைய கேள்வி.

இஞ்சித் தின்றவரிடம் போய் இனிக்குதா புளிக்குதா என்று கேட்டால் என்ன சொல்வார். நல்ல மாதிரியாகக் கேட்டாலும் சரிபட்டு வராது. உண்மை தானே. விடுங்கள்.

சஞ்சீவி வேர் இருந்த மலை சஞ்சீவி மலை என்று சுக்கிராசாரியார் சொல்கிறார். இராமாயணக் காவியத்தைப் படித்து இருப்பீர்கள். ஒரு கட்டத்தில் இலட்சுமணன் மற்றும் போர் வீரர்கள் எல்லாம் இறந்து விடுகிறார்கள். அவர்களைப் பிழைக்க வைப்பதற்காக சஞ்சீவி வேர் தேவைப் படுகிறது. பறந்து வந்த அனுமானுக்குச் சஞ்சீவி வேர் எது என்று தெரியாத நிலை.

காடிங் தோட்டத்துக்கு அருகில் இருக்கும் டுரியான் துங்கல் நீர்த்தேக்கம்

சஞ்சீவி மலையை அப்படியே தூக்கி வந்து விடுகிறான். சஞ்சீவி வேரின் மருத்துவ மகிமையால் இராமனின் படையினர் உயிர் பெறுகிறார்கள் என்று இராமாயணம் கூறுகிறது.

சஞ்சீவி மலை இப்போதைக்கு ராமர் பாலத்தின் அடியில் இருப்பதாகக் கேள்வி. தேடிப் பார்த்தால் கிடைக்கும். இப்போது ஒரு குழுவினர் ராமர் பாலம் தங்களின் பூர்வீகச் சொத்து என்று கலாய்க்கிறார்கள். ராமர் பாலத்திற்கும் ஆபத்து வந்துவிட்டது.

இனிமேல் யாராவது சஞ்சீவி வேர் என்று சொன்னால் உங்கள் தொடையைக் தட்டிக் காட்டி அங்கே புதைத்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லுங்கள். எப்படி கிடைத்தது என்று கேட்டால் பறவைகள் பேசுவதை அறிந்து கொள்ளும் நயன மொழி தெரியும். அதனால் கிடைத்தது என்றும் சொல்லுங்கள்.  

கேள்வி கேட்டவர் கொஞ்சம் யோசிப்பார். அந்த மொழியை அவரும் கற்றுக் கொள்ள ஆசைப் படலாம். அப்படி ஆசைப்பட்டால் இருக்கவே இருக்கிறார் நம்ப சிக்ஸ் பேக் நடிகை நயன்தாரா. நயன மொழிகளின் நவரச அவதாரம். அவருக்கு எல்லாம் அத்துப்படி. ஆக அவரிடம் போய்க் கேளுங்கள் என்று சொல்லி ‘எஸ்க்கேப்’ ஆகிவிடுங்கள்!

இப்போது பெரிய ஒரு கேள்விக்குறி. வீடுகளில் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றுகிறார்களா? எங்கோ சில வீடுகளில் அந்த மாதிரி விளக்கு ஏற்றல்கள் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை.

நவீனத் தொழிநுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் வாட்ஸ் அப்; இன்ஸ்டாகிராம்; பேஸ்புக்; சூம் ஊடகங்கள் மூலமாகத் தீபாவளியைக் கொண்டாடி விட்டுப் போகிறார்கள். காலம் செய்த கோலம்.

இப்போது கோரோனாவின் கோரத் தாண்டவம். அந்தத் தாண்டவத்தில் அரசியல்வாதிகள் சிலரின் சுயநலச் சூப்பர் ருத்ர ஆர்ப்பாட்டங்கள். அப்பேர்ப்பட்ட நடராசருக்கே நடனம் சொல்லிக் கொடுப்பார்கள் போலும். எக்கச்சக்கமாய்த் தீபாவளி சிக்கிக் கொண்டது. பாவம் தீபாவளி.

இனவாதம் மதவாதத்தால் கொஞ்ச காலம் அழுதது. இந்த வருடம் ரொம்பவுமே கண்ணீர் வடிக்கிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா, உலகம் முழுமைக்கும் பரவி கோடிக் கோடி மக்களின் வாழ்வதாரத்தைச் சீர் குலைத்துவிட்டது.

விடிந்தால் தீபாவளி. எல்லாச் சுவைகள் இருந்தாலும் அதில் கொஞ்சம் நகைச்சுவை கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை மறந்துவிட வேண்டாம். அனைவருக்கும் கலந்த தீபாவளி வாழ்த்துகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.11.2020



 

அன்வார்: மக்களை அச்சுறுத்த வேண்டாம்

தமிழ் மலர் - 17.11.2020

2021-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் மக்களவையில் தோல்வி அடைந்தால், அரசு ஊழியர்கள் சம்பளத்தைப் பெற முடியாது எனும் நிதியமைச்சரின் பூச்சாண்டித்தனம் எடுபடாது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.


எதிர்க் கட்சிகளின் நெருக்குதலுக்கு இணங்க இந்தப் பட்ஜெட்டில் திருத்தங்கள் செய்யப் பட்டாலும், அரசு ஊழியர்களின் சம்பளம், கோவிட்-19 முன்னிலைப் பணியாளர்களின் ஊக்குவிப்பு நிதி, மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்களுக்கான செலவுகள் யாவும் பாதிப்படையா என்றும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையின் அங்கீகாரத்தைப் பெறத் தவறினால், அரசு ஊழியர்களின் சம்பளம், முன்னிலைப் பணியாளர்களின் ஊக்குவிப்பு நிதி, கோவிட் 19-ஐ துடைத்தொழிக்கும் செலவினம் போன்றவற்றுக்கு நிதி கிடைக்காது என்று நிதியமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் கூறி இருப்பது அபத்தம் என்றும் அன்வார் விமர்சித்து உள்ளார்.

அவரின் கூற்று ஆதாரமற்றது. எதிர்க் கட்சிகளின் அறைகூவலை உதாசீனப் படுத்தும் வகையில் விடுக்கப்படும் மலிவான எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கும் மக்களின் துயரைத் தீர்க்க, நல்லதொரு பட்ஜெட்டை வழங்க, அரசு பட்ஜெட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அன்வார் வலியுறுத்தினார்.