07 செப்டம்பர் 2023

ஜெங்கிஸ்கான் - 1

தமிழ் மலர் - 07.09.2023

உலக வரலாற்றில் அதிகமாக நினைத்துப் பார்க்கப்படும் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் மகா அலெக்சாண்டர். இன்னும் ஒருவர் ஜெங்கிஸ்கான் (Genghis Khan). இவர்களுக்கு இடையில் அசோகர் வரலாம். சந்திரகுப்தர் வரலாம். ஜூலியஸ் சீசர் வரலாம். பாபர் வரலாம். நெப்போலியன் எனும் மாவீரனின் பெயரும் வரலாம். இன்னும் பலர் இருக்கின்றார்கள். பட்டியல் நீளும்.

ஆனால் இங்கே ஒரே ஒரு விசயம். அலெக்சாண்டரை நினைத்துப் பார்ப்பதைப் போல ஜெங்கிஸ்கானை வரலாறு நினைப்பது இல்லை. பெரிதாகப் போற்றுவதும் இல்லை. அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்கிறது.


அலெக்சாண்டரை மாபெரும் பேரரசர் என்று வரலாறு போற்றுகிறது. அதே சமயத்தில் ஜெங்கிஸ்கானை மாபெரும் கொலைகாரத் தலைவன் என்று சொல்கிறது. ஆமாம். ஜெங்கிஸ்கானின் கொலைவெறி ஆட்டத்தில் ஏறக்குறைய முப்பது நாற்பது மில்லியன் பேர் படுகொலை செய்யப் பட்டனர். இலட்சம் இல்லீங்க. மில்லியன்கள். உலக மக்கள் தொகை 11 விழுக்காடு குறைக்கப் பட்டதாகப் புள்ளி விவரங்கள் வேறு சொல்கின்றன. 

http://www.history.com/news/history-lists/10-things-you-may-not-know-about-genghis-khan

ஜெங்கிஸ்கானைக் குறை சொல்ல மனசு வரவில்லை. வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட ஓர் அஞ்சா நெஞ்சனாகவே எனக்குப் படுகிறது. ஆனால் பற்பல இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்று போட்டது தான் மனசைப் பெரிசாக வருடிச் செல்கிறது. ரொம்பவுமே வருத்துகிறது. மற்றபடி அவரை ஒதுக்கி வைக்க முடியவில்லை.


கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அப்புறம் நீங்களே ஒரு முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் துணையாசிரியர் மதன் இப்படி சொல்கிறார். நெப்போலியனின் அகராதியில் 'முடியாதது' என்கிற வார்த்தையே கிடையாது என்பார்கள். ஆனால் ஜெங்கிஸ்கானின் அகராதியில் 'இரக்கம்' என்கிற வார்த்தை கிடையவே கிடையாது என்று சொல்கிறார்.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் என்கிற இந்திய மன்னனை வெற்றி கொண்டார். அவரை அலெக்சாண்டர் நடத்திய விதம் இருக்கிறதே அதை இன்று வரை வரலாறு புகழ்ந்து பேசுகிறது. 

அலெக்சாண்டர் அவரைப் பெருந்தன்மையோடு நடத்தினார். இது நமக்கு தெரிந்த விசயம். சிறைப் பிடித்த பிறகும் போரஸ் மன்னன் ஒரு மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தப் பட்டார்.


போரில் தோற்ற போரஸ் மன்னன் தன்னை ஒரு மன்னனுக்கு உரிய தகுதியுடன் நடத்த வேண்டும் என்று அலெக்சாண்டரிடம் கூறிய போது அலெக்சாண்டர் அவனுடைய வீரத்தைப் பாராட்டி அவனைத் தன் நண்பனாகவே இணைத்துக் கொண்டார்.

அந்த மாதிரி மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கானின் கையில் போரஸ் சிக்கி இருந்தால் என்னவாகி இருக்கும் சொல்லுங்கள். கதை வேறு மாதிரியாக மாறிப் போய் இருக்கும். வறுத்து எடுக்கப் பட்டு இருப்பார். 

ஆகவேதான் வரலாறு அலெக்சாண்டரை மாபெரும் வீரனாகப் புகழ்கின்றது. செங்கிஸ்கானைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கின்றது. அது ஒரு வகையில் உண்மையாகவும் தெரிகின்றது.

ஒரு காலக் கட்டத்தில் ஜெங்கிஸ்கானின் பெயரைக் கேட்டாலே இந்த உலகமே குலை நடுங்கிப் போனது. ஜெங்கிஸ்கான் பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தவன். உலகத்தின் 16 விழுக்காட்டு நிலப் பரப்பைக் கட்டி ஆண்ட ஒரு ஜெங்கிஸ்கானை அவன் இவன் என்று சொன்னதற்காக மன்னித்து விடுங்கள். 


இந்த உலகில் பற்பல மாபெரும் சாம்ராஜ்யங்கள் மனுக்குல வரலாற்றையே மாற்றிப் போட்டு இருக்கின்றன. அந்த வரலாற்றுக்கு நினைவு தெரிந்த வரையில் உலகின் முதல் மாபெரும் பேரரசு எகிப்திய பேரரசாகும். கி.மு. 1850-களில் தொடங்கியது. கடைசியாக வந்தது பிரிட்டிஷ் பேரரசு. இவை எல்லாமே வரலாற்றையே திருப்பிப் போட்ட பேரரசுகள்.

இந்தப் பேரரசுகளில் பெரிதும் மறக்கப்பட்ட பேரரசு ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் மங்கோலியப் பேரரசு (Mongol Empire). ஆனால் ஒன்று. இதுவரை அமைந்த பேரரசுகளில் பிரிட்டிஷ் பேரரசிற்கு அடுத்து இந்த உலகில் மிக அதிக நிலப்பரப்பைக் கொண்ட பேரரசுவும் இந்த மங்கோலியப் பேரரசு தான். 

மங்கோலியப் பேரரசின் உச்சக் கட்டத்தில் அது 24,000,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆண்டது. அதாவது இந்த உலகின் நிலப்பரப்பில் 16 விழுக்காடு ஆகும். நம்ப மலேசியாவைப் போல 200 மலேசியா நிலத்தை மங்கோலியர்கள் ஆண்டு இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரமிப்பாக இருக்கிறது இல்லையா. 


இந்தப் பக்கம் பார்த்தால் பிரிட்டிஷார் ஆட்சி செய்தது 33,000,000 சதுர கிலோ மீட்டர். அதாவது உலக நிலப்பரப்பில் 22 விழுக்காடு. இங்கே ஒரு முக்கியமான தகவல். 

ஜெங்கிஸ்கான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தலைவர். துப்பாக்கி பீரங்கிகள் இல்லாமலேயே நாடுகளைப் பிடித்தவர். வெறும் கத்தி, ஈட்டி, வீச்சு அரிவாள்களை மட்டுமே பயன்படுத்தினார். துணைக்கு வந்தவை மங்கோலியக் குதிரைகள். 

நவீன ஆயுதங்களைக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் பிரிட்டிஷார். இவர்கள் ஆட்சி செய்த உலகம் புதிய உலகம். மங்கோலியர்கள் ஆட்சி செய்த உலகம் பழைய உலகம். ஆயிரம் ஆண்டு கால வேறுபாடு.

1219-ஆம் ஆண்டு பாரசீகத்தின் குவாரேஸ்மிட் (Khwarazmian Empire) நாட்டின் மீது ஜெங்கிஸ்கான் படை எடுத்தார். பாரசீகம் என்றால் இன்றைய ஈரான் நாடு. 


ஜெங்கிஸ்கானின் 50,000 வீரர்கள் ஒட்டு மொத்தமாகக் கொன்ற மக்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா. 12 இலட்சம் பேர். அதாவது ஈரான் சமவெளியில் வாழ்ந்த மக்களில் முக்கால் பங்கு. 

இப்படி எங்கு படை எடுத்தாலும் பேரழிவுகள். மங்கோலியர்கள் ஆட்சி செய்த காலம் 270 ஆண்டுகள். அவ்வளவு காலத்தில் அவர்கள் கொன்று குவித்த மக்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 6 கோடி. எண்ணிக்கையைப் பாருங்கள். 6 கோடி. 

இவை எல்லாம் ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. அதை முதலில் நினைவில் வைத்துக் கொள்வோம்.


ஜெங்கிஸ்கான் அப்படி ஒரு வெறி கொண்ட காட்டுமிராண்டித் தலைவனாகவே பார்க்கப் பட்டார். ஒரு செருகல். ஜெங்கிஸ்கானின் வழி வந்த மொகலாயர்களே தங்களைச் ஜெங்கிஸ்கானின் வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லையே. ஏன். 

தங்களைத் துருக்கியத் தலைவனான தைமூரின் (Timur; Tamerlane) வழித் தோன்றல்கள் என்று தானே கூறிக் கொண்டார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். பாபர், அக்பர், ஷாஜகான், அவுரங்கசிப் எல்லாம் இந்த ஜெங்கிஸ்கானின் வழி வந்தவர்கள் தானே. அதை யாராவது மறுக்க முடியுமா. 

ஜெங்கிஸ்கான் மங்கோலியாவை ஆட்சி செய்த காலக் கட்டம் முழுவதுமே வன்முறைத் தீயின் சுவாலைகள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. அதுதான் வரலாற்று உண்மை. ஆனந்த விகடன் மதன் அவர்களும் அப்படித் தான் சொல்கிறார்.


ஜெங்கிஸ்கான் அந்த மாதிரி கொடூரமாகிப் போனதற்கு சிறுவயதில் அவர் வளர்க்கப்பட்ட முறைதான் காரணம். வேறு ஒன்றும் இல்லை. 

உலக மகா அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில். அந்த மகா அறிஞரிடம் படித்தவர்தான் மகா அலெக்ஸாண்டர். ஆக அவரிடம் படித்த மனிதர் எப்படி வாழ்ந்தார். மனம் கல்லாகிப் போன ஜெங்கிஸ்கான் எப்படி வாழ்ந்தார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதை முதலில் நினைவு படுத்துகிறேன். சரிங்களா. ஜெங்கிஸ்கானின் கதைக்கு வருவோம்.

கி.பி 1162-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெங்கிஸ்கான். அவர் பிறந்த காலக் கட்டத்தில் மங்கோலியர்கள் ஒற்றுமை இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் மங்கோலிய வீரர்கள் போர் முறைகளில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் ஒன்றுபட்டால் அப்புறம் அவர்களை அசைக்கவே முடியாது. 

இதை எல்லாம் அறிந்த ஜெங்கிஸ்கானின் தந்தையார் தனது சொந்த பந்தங்களை எல்லாம் ஒன்றாக இணைக்க முயற்சி செய்தார். ஜெங்கிஸ்கானின் தந்தையார் பெயர் ஏசுகி (Yesugei). தாயாரின் பெயர் கோலூன் (Hoelun). ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கானுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. 


அப்போது ஜெங்கிஸ்கானுக்கு வயது ஒன்பது. ஜெங்கிஸ்கானின் உண்மையான பெயர் தெமுஜின் (Temujin). பொதுவாகவே மங்கோலியர்கள் சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இருந்தாலும் பன்னிரண்டு வயது வரை மாமனார் வீட்டில் தங்கி சேவகம் செய்ய வேண்டும். 

பன்னிரண்டு வயது ஆன பிறகுதான் திருமணம் நடக்கும். ஆக அவரைக் கொண்டு போய் மாமனார் வீட்டில் விட்டு விட்டு திரும்பி வருகிறார் ஜெங்கிஸ்கானின் தந்தையார். 


வரும் வழியில் ஒரு தார்த்தார் நாடோடி கும்பலைச் சந்திக்கின்றார். தார்த்தார்கள் எப்போதுமே மங்கோலியர்களின் பரம எதிரிகள். இருந்தாலும் அவருடன் சமரசம் பேச அழைத்தனர். அவர்களை நம்பிப் போன ஜெங்கிஸ்கானின் தந்தையார் ஏசுகிக்கு அன்பின் அடையாளமாக உணவு கொடுக்கப் பட்டது. 

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் இறந்து போனார். உணவில் விசம் கலந்து இருந்ததே அதற்குக் காரணம். இதை அறிந்த ஜெங்கிஸ்கான் அவசரம் அவசரமாக வீடு திரும்பினார். தன் தந்தையாரின் நாடோடிக் குழுத் தலைவர் பதவியைத் தனக்குக் தரும்படி செங்கிஸ்கான் கேட்டார். 

ஒன்பது வயதில் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள். அதோடு அவருடைய குடும்பத்தாரையும் புறக்கணித்து விட்டனர். அப்புறம் ஜெங்கிஸ்கானின் குடும்பமே அங்கு இருந்து விரட்டி அடிக்கப் பட்டது.


ஜெங்கிஸ்கான் பருவம் அடைந்ததும் அவர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா. தன் பெயரை மாற்றிக் கொண்டதுதான். தெமுஜின் எனும் பெயரை ஜெங்கிஸ்கான் (Genghis Khan) என்று மாற்றிக் கொண்டார். 

'ஜெங்கிஸ்கான்' என்றால், மங்கோலிய மொழியில் 'முழுமையான போர்வீரன்' என்று பொருள். தன்னுடைய 16-ஆவது வயதில் தன் தந்தையார்; முன்பு ஏற்பாடு செய்த அதே பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் பெயர் போர்த்தே (Borte).

அதன் பின்னர் சிறுவன் ஜெங்கிஸ்கான் எதிரிகளிடம் சிக்கிச் சித்ரவதை செய்யப் பட்டான். அதே சிறுவன் வாலிப வயதை அடைகிறான். ஒரு கட்டத்தில், படைகளைத் திரட்டிக் கொண்டு தன் தந்தையின் எதிரிகளோடு மோதுகிறான். அவனுக்கு மிகவும் விசுவாசமான எழுபது வீரர்கள் சிறை பிடிக்கப் படுகின்றனர். 


இனிமேல்தான் ஜெங்கிஸ்கானின் சீற்றங்கள் கொப்பளிக்கப் போகின்றன. நாளைய கட்டுரையில் மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்:

1. Atwood, Christopher P. (2004). Encyclopedia of Mongolia and the Mongol Empire. New York: Facts on File. ISBN 978-0-8160-4671-3.

2. May, Timothy (2012). The Mongol Conquests in World History. London: Reaktion Books. ISBN 978-1-86189-971-2.

3. Barthold, Vasily (1992) [1900]. Bosworth, Clifford E. (ed.). Turkestan Down To The Mongol Invasion (Third ed.). Munshiram Manoharlal. ISBN 978-81-215-0544-4.

4. Porter, Jonathan (2016). Imperial China, 1350–1900. Lanham: Rowman & Littlefield. ISBN 978-1-4422-2293-9.

5. Ratchnevsky, Paul (1991). Genghis Khan: His Life and Legacy. Translated by Thomas Haining. Oxford: Blackwell Publishing. ISBN 978-06-31-16785-3.

6. Biran, Michal (2012). Genghis Khan. Makers of the Muslim World. London: Oneworld Publications. ISBN 978-1-78074-204-5. 

30 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 2

கார்த்திகேசுவின் அசல் பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். கொலைக் குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர். மரணதண்டனை விதிக்கப்பட்டவர். கிட்டத்தட்ட தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். இருப்பினும் அந்தத் தூக்குக் கயிறே அவரை மறுத்து விட்டது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் கதைதான் சின்னக்கிளி ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையிலும் வந்து போகிறது.


1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய் இருக்கிறார்கள். அங்கே நிரந்தமாகத் தங்குவதற்கு ஒரு வீட்டையும் பார்த்து இருக்கிறார்கள். அதன் பிறகு கிள்ளானில் இருக்கும் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக கோலாலம்பூர் அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 


சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து கார்த்திகேசு இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பா இறந்துவிட்டார். 

அதற்கு முன்னர் நடந்தவை. ஏறக்குறைய இரவு மணி 11.30 இருக்கும். அப்போது மலேசிய விமானச் சேவையைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் வேலை முடிந்து அந்த வழியாகப் போய் இருக்கிறார்கள். தன்னந்தனியாக இருட்டில் ஒரு கார் நிறுத்தி வைக்கப் பட்டு இருப்பதைக் கண்டனர். 

காருக்குப் பின்னால் ஒருவர் தலைக் குப்புறக் கீழே கிடந்தார். ஏதோ அசம்பாவிதம் நடந்து இருக்கிறது என்பதை உணர்ந்த அவர்கள் போலீசாருக்குத் தெரியப் படுத்தினார்கள்.


ஓர் அரை மணி நேரம் கழித்து போலீசார் வந்தனர். கீழே மயக்கமாகக் கிடப்பது கார்த்திகேசு என்று கண்டுபிடிக்கப் பட்டது. காருக்குள் ஜீன் சின்னப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை.

ஜீன் சின்னப்பாவின் தோள் பட்டையில் வழக்கமான கார் பாதுகாப்பு வார்ப்பட்டை. அவர் அணிந்து இருந்த நகைகள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. அவரின் கைப்பையும் அங்கேதான் இருந்தது. பணம், மற்ற சில்லறை அழகுச் சாமான்கள் எல்லாம் கைப்பையின் உள்ளே அப்படியே பத்திரமாகத்தான் இருந்தன. எதுவும் திருடு போகவில்லை.

கார்த்திகேசு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அவருக்கு நினைவு திரும்பியதும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். தான் சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது, தலைக்குப் பின்னால் பலமான அடி விழுந்தது. மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டதாகச் சொன்னார். மயக்கம் அடைவதற்கு முன்னால், மூன்று பேரைப் பார்த்ததாகவும் சொன்னார்.

ஜீன் சின்னப்பாவின் சவப் பரிசோதனையில் அவருடைய தொண்டை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் ஆறு ஆழமான கத்திக் குத்துக் காயங்கள்; கைகளில் நான்கு கத்திக் குத்துக் காயங்கள். மொத்தம் பதினாறு கத்திக் குத்துகள். அதை ஒரு கொலை என்று போலீசார் அறிவித்தனர். 


தீவிர விசாரணை நடைபெற்றது. குற்றவாளியைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ; அந்தக் கொலையாளி யார் எவர் என்று தெரிந்து கொள்வதில் தான் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். 

இறந்து போனவர் ஒரு சாதாரண பெண் அல்ல. நெகிரி செம்பிலான் அழகி. சிலாங்கூர் அழகி. மலேசிய அழகி. அத்துடன் மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு பிரபலம்.

ஒரு மாதம் ஆனது. மே 9-ஆம் தேதி. ஜீன் சின்னப்பாவின் மைத்துனர் கார்த்திகேசுவின் வீட்டுக் கதவைப் போலீசார் தட்டினர். ‘புதுசா செய்தி கிடைச்சுதா’ என்று கார்த்திகேசு கேட்டார். அவரிடம் கைவிலங்கைக் காட்டிய போலீசார், அவரைப் பார்த்து புன்னகை செய்தார்கள். கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை. 

அப்போது கார்த்திகேசுவிற்கு 37 வயது. இறந்து போன ஜீன் சின்னப்பாவிற்கு 31 வயது. செய்தி கேட்டு மலேசிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் பூனையா பால் குடித்தது. என்ன செய்வது. பால் குடிக்கிற பூனை கருவாட்டையும் தின்று இருக்கிறது. எப்படி தின்றது என்பதில் ஆளாளுக்கு ஒரு வியூகம். 


கொலை நடந்து ஓர் ஆண்டு முடிந்தது. 1980 ஜூன் 16-ஆம் தேதி. வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிமன்றம் நிரம்பி வழிந்தது. குற்றவாளிக் கூண்டில் கார்த்திகேசு நிறுத்தப் பட்டார். 

அந்தக் காலக் கட்டத்தில் எல்லாக் கொலை வழக்குகளும் ஜூரி முறையில் நடைபெற்றன. அந்த வகையில் ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கிலும் ஜூரி முறைதான். கார்த்திகேசுவின் தலைவிதியை நிர்ணயிக்க ஏழு பேர் ஜூரிகளாக நியமிக்கப் பட்டனர். அனைத்து ஜூரிகளும் ஆண்கள். 

இங்கே ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வேண்டும். ஜூரிகள் அனைவரும் ஆண்களாக இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆணாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஓர் ஆண் சாதகத் தன்மை ஏற்படலாம். அப்படி ஒரு கருத்து அப்போது நிலவி வந்தது. 

ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆண். பாதிக்கப் பட்டவர் ஒரு பெண். ஜூரிகளின் தீர்ப்பு ஓர் ஆணுக்குச் சாதகமாக அமையலாம் எனும் ஓர் அச்சமும் நிலவியது. இருந்தாலும், தீர்ப்பு வேறு மாதிரியாக முடிந்து போனது.


அரசு தரப்பு சூழ்நிலைச் சான்றுகள் (Circumstancial Evidences) மூலமாக தன் வாதத்தை முன்வைத்தது. தன் அண்ணி ஜீன் சின்னப்பாவின் மீது கார்த்திகேசுவிற்கு அதீதமான விருப்பம் இருந்து இருக்கிறது. 

அந்த வகையில் ஜீன் சின்னப்பாவைத் தன் சொந்த உடைமைப் பொருளாக நினைத்து இருக்கிறார். பழகி இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஜீன் சின்னப்பாவின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்து எடுக்க சம்மதமும் தெரிவித்து இருக்கிறார். 

இந்தக் கட்டத்தில் ஜீன் சின்னப்பா, வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். இதைக் கார்த்திகேசு கண்டுபிடித்து விட்டார். தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதி; ஆத்திரம் அடைந்து இருக்கிறார். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சரியான நேரத்திற்காகப் பொறுமையைக் கடைபிடித்து இருக்கிறார். 

ஆக, பொறாமையின் காரணமாகதான் ஜீன் சின்னப்பாவை; கார்த்திகேசு கொலை செய்து இருக்கிறார் என்று அரசு தரப்பு வழக்கு வாதங்களை முன் வைத்தது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றுகள்; ஜீன் சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிட்டவர் டாக்டர் நரதா வர்ணசூரியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு சிங்களவர். திருமணமானவர். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையார். 


ஜீன் சின்னப்பாவின் கணவர் சின்னப்பா உயிருடன் இருக்கும் போதே, 1978-ஆம் ஆண்டில், அவர்களின் இரகசியமான உறவுகள் தொடங்கி விட்டன என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. 

டாக்டர் நரதா வர்ணசூரியா, ஜீன் சின்னப்பாவிற்கு எழுதிய 19 காதல் கடிதங்கள் சாட்சிப் பொருட்களாக, நீதிமன்றத்தில் காட்சி படுத்தப் பட்டன. அந்தக் கடிதங்களில் காணப்படும் அந்தரங்கமான விசயங்களைத் தவிர்த்து விடுகிறேன். 

அது நமக்குத் தேவை இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் ஆசைப்பட்டு ஏதாவது எழுதி இருப்பார்கள். பேசி இருப்பார்கள். அவற்றை எல்லாம் அம்பலப் படுத்துவது நாகரிகமன்று. 

தவிர, இந்தக் கட்டுரையைச் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படிக்கலாம். அல்லது அந்தப் பிள்ளைகளிடமே போய்ச் சேரலாம். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. தணிந்து போன நெருப்பில் மறந்து போன நிகழ்விற்கு மறுபடியும் சூடம் காட்டுவது ஒரு பெரிய பாவச் செயல் ஆகும். 

ஜீன் சின்னப்பா அணிந்து இருந்த மேலாடையும் நீதிமன்றத்தில் காட்டப் பட்டது. முழுக்க முழுக்க இரத்தக் கறை படிந்த மஞ்சள் நிற ஆடை. ஆனால், கொலை செய்யப்படுவதற்குப் பயன்படுத்தப் பட்ட எந்த ஓர் ஆயுதமும் சாட்சியத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு 50-க்கு 50 எனும் நிலையில் இருந்தது. 

அந்தச் சமயத்தில்தான் அரசு தரப்பு, திடீரென்று ஒரு துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. ஜீன் சின்னப்பாவின் உறவினர் ஜெயதிலகா என்பவர்தான் அந்தத் துருப்புச் சீட்டு. 

கொலை நடந்த பத்தாவது நாள் அந்த உறவினர் கார்த்திகேசுவைப் போய்ப் பார்த்து இருக்கிறார். அப்போது கார்த்திகேசு அவரிடம் ‘நிலைமை மோசம் அடைந்தால், உள்ளே போகத் தயாராக இருக்கிறேன். உயிரோடு இருக்க அந்தப் பெட்டைக் கழுதைக்கு தகுதி இல்லை’ என்று சொல்லி இருக்கிறார். 

இந்தச் சொற்கள்தான் கார்த்திகேசுவின் தலையெழுத்தையே மாற்றிப் போட்டன. எதிர்தரப்பு எவ்வளவோ போராடிப் பார்த்தது. கார்த்திகேசு ஒரு நல்ல மனிதர். நாணயமானவர். மனோவியல் கல்வி கற்றவர் என்று சொல்லி பல சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒன்றும் நடக்கவில்லை.

வழக்கு 38 நாட்கள் நடைபெற்றது. 58 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். ஜூரிகள் ஒன்றுகூடி ஐந்து மணி நேரம் விவாதம் செய்தனர். கடைசியில் 5-க்கு 2 எனும் வாக்குப் பெரும்பான்மையில், கார்த்திகேசு குற்றவாளி என்று தீர்ப்பானது. சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

கார்த்திகேசுவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தார். பொதுவாகவே, மலேசிய ஜூரிகள் அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் தூக்குத் தண்டனையை வழங்க மாட்டார்கள். மலேசிய நீதிமன்ற வரலாறு சொல்கிறது. ஆனால், நடந்து விட்டது.

கார்த்திகேசு காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சிறை வாழ்க்கை. தூக்குத் தண்டனைக்கு காத்து இருந்தார். கார்த்திகேசுவிற்கு ஆயுள் கெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு வழக்கில் ஒரு பெரிய திருப்பம். 

அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்ன ஜெயதிலகா (Bandhulanda Jayathilake), தான் பொய்யாகச் சாட்சியம் சொன்னதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 

மலேசியாவே கிடுகிடுத்துப் போனது. அது ஒரு பயங்கரமான திருப்பம். யாரும் எதிர்பார்க்காத திருப்பம். தவறுதலாகத் தெரியாமல் சொல்லி விட்டதாக ஜெயதிலகா சத்தியப் பிரமாணம் செய்தார். 

அப்புறம் என்ன. பொய்ச் சாட்சியம் சொன்னதற்காக, ஜெயதிலகாவிற்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை (Prison for Perjury). 1981 மே மாதம் 20-ஆம் தேதி, ஜெயதிலகா குற்றவாளியாக உள்ளே போனார். சுதந்திர மனிதனாகக் கார்த்திகேசு வெளியே வந்தார். ஜெயதிலகா சிறைக்குப் போய் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவரும் இறந்து போனார்.

வெளியே வந்த கார்த்திகேசு திருமணம் செய்து கொண்டார். ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினார். கிள்ளானில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கோலா சிலாங்கூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்துகேசு, ஜீன் சின்னப்பாவின் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் இப்போது நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். மூத்த மகள் வழக்கறிஞராகச் சேவை செய்கிறார். அவர் ஒரு மருத்துவர் என தவறுதலாக நேற்று பதிவு செய்து விட்டேன். ஜீன் சின்னப்பாவின் மூத்த மகளுக்கு இப்போது வயது 50-ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்த கார்த்திகேசு தன்னுடைய 81-ஆவது வயதில், 27.08.2023-ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.  

ஜீன் சின்னப்பாவைப் பற்றி, ஆஸ்ட்ரோ ஒரு தொடர் ஆவணப் படத்தை 2008 டிசம்பர் 21-இல், ஒளிபரப்பு செய்தது. ஜீன் சின்னப்பாவின் சகோதரர் பிரியான் பிரேராவையும்; ஜீன் சின்னப்பாவின் மகளையும் பேட்டி எடுக்க ஆஸ்ட்ரோ, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. அவர்கள் இருவரும் மறுத்து விட்டனர். அலெக்ஸ் ஜோசி என்பவர் ‘தி மெர்டர் ஆப் எ பியூட்டி குயின்’ (The Murder Of A Beauty Queen) எனும் ஒரு நூலையும் எழுதி இருக்கிறார். 

ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்தது யார் என்று இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்தவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை அவரும் ஜீன் சின்னப்பா மாதிரி போய்ச் சேர்ந்து விட்டாரா. தெரியவில்லை.

இந்தக் கட்டுரையை ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்ப்போம். மறைந்து போன ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையைக் கிண்டி, சீண்டிப் பார்ப்பதாக நினைக்க வேண்டாம். ஜீன் சின்னப்பா இறக்கும் போது அவருக்கு வயது 31. நமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண்மகளைக் கெடுத்துக் கலைத்துவிடும் என்று ஏற்கனவே சொன்னேன். அதை விதி என்று சொல்வதா இல்லை கர்மவினை என்று சொல்வதா. 

அது எந்த அளவுக்கு உண்மை. கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஜீன் சின்னப்பா; கார்த்திகேசு இருவரின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டிக் கொள்வோம்.

29 ஆகஸ்ட் 2023

ஜீன் சின்னப்பா - 1

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஓர் ஆண்மகனைத் தொலைத்துவிடும் என்பார்கள். அதே போலத்தான் ஒரு பெண்ணுக்கும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் அவளைக் கெடுத்துக் கலைத்துவிடும். இவை உலகம் பார்த்த உண்மைகள். 

இருந்தாலும் மலேசியர்கள் பார்த்த ஒரு பயங்கரமான சம்பவம் வருகிறது. சாமான்ய மனிதர்களை உலுக்கிப் போட்ட ஓர் உண்மையான நிகழ்ச்சி. 



அந்த நிகழ்ச்சிதான், இன்றைய சின்னக் கிளி ஜீன் சின்னப்பா கொலை வழக்கு. படியுங்கள். பணம் புகழ் வந்து சேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். 

அதையும் தாண்டிய நிலையில், அதை விதி என்று சொல்வதா இல்லை இல்லை கர்மவினை என்று சொல்வதா. அதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மலேசியா எப்போதும் அதன் அழகிய கடற்கரைகள், அழகிய தீவுகள், அழகிய பாரம்பரியத் தளங்கள், அற்புதமான உணவுகள் மற்றும் ஒற்றுமை உணர்வுகளுக்காக நன்கு அறியப்பட்டது. ஆனாலும் மற்ற நாடுகளையும் மற்ற நகரங்களையும் போலவே, மலேசியாவும் அதன் சொந்த இருண்ட கதைகளைக் கொண்டது. சரி.


ஜீன் சின்னப்பா கொலை வழக்கில் முக்கியமான கதாபாத்திரமாகத் திகழ்ந்தவர் கார்த்திகேசு. ஆசிரியர்ப் பயிர்சி கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் கொழுந்தனார். 

கார்த்திகேசு இரு நாள்களுக்கு (27.08.2023) முன்னால் கிள்ளான் தெலுக் பூலோய் புறநகர்ப் பகுதியில் காலமானார். அவருக்கு வயது 81. அதன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை... 

1970-களில் ஜீன் பிரேரா சின்னப்பா சிரம்பானில் ஓர் ஆசிரியை. ஆங்கிலமொழி கற்றுக் கொடுத்தார். பின்னர், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் பெண்கள் பள்ளி, பெட்டாலிங் ஜெயா சுல்தான் அப்துல் அசீஸ் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். 


இவருடைய முழுப் பெயர் பிலோமினா ஜீன் பிரேரா. தகப்பனாரின் பெயர் வி. பிரேரா. 1972-இல் திருமணம் ஆனதும், சின்னப்பா எனும் தன்னுடைய கணவரின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார். 

ஜீன் சின்னப்பா கொலை செய்யப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் அவருடைய கணவர் சின்னப்பாவும், ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

ஜீன் சின்னப்பாவும் அவருடைய கணவரும் பயணம் செய்த கார் ஒரு மரத்தில் மோதியது. விபத்து நடந்த இடத்திலேயே கணவர் இறந்து போனார். ஜீன் சின்னப்பா, காரில் இருந்து வெளியே தூக்கி எறியப் பட்டார். 


இருந்தாலும் சொற்ப காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். ஜீன் சின்னப்பா விசயத்தில் விதி கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டது. 1978 வருடப் பிறப்பு தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்தவன் தனேந்திரன். வயது ஏழு. இரண்டாவது மகள் ரோகினி. வயது ஐந்து. மூன்றாவது மீலினி. வயது மூன்று. அவர்கள் சவப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, அங்கே என்னதான் நடக்கிறது என்று விவரம் தெரியாத வெள்ளந்தி பருவம். 

அம்மாவின் உயிரற்ற உடலைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்து நின்றார்கள். ஆனால், இப்போது அந்தப் பெண் பிள்ளைகளில் ஒருவர் மலேசியாவில் ஒரு பிரபலமான வழக்குரைஞர். யார் எவர் என்று கேட்க வேண்டாம். நானும் சொல்லப் போவது இல்லை.

1971-ஆம் ஆண்டு. ஜீன் சின்னப்பா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். மாநிலத்தின் நம்பர் ஒன் அழகியானார். பின்னர் சிலாங்கூர் மாநில அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். அதிலும் நம்பர் ஒன் அழகி; சிலாங்கூர் அழகியாக வாகை சூடினார். 


அதற்கு அப்புறம் மலேசியாவின் அழகிப் பட்டம். ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில், முதலாவது இடம் தவறிப் போனது. இரண்டாவது இடம் கிடைத்தது.

இருந்தாலும் அவர் எப்போதுமே ஊரார் மெச்சிய பைங்கிளியாகவே வாழ்ந்தார். புகழ் வானில் கொடி கட்டிப் பறந்தார். பார்த்தால் பற்றிக் கொள்ளும் காந்தர்வப் பார்வை. தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சாமுத்திரிகா இலட்சணம். 

அந்தக் காலத்தில் அவரைப் பார்த்துக் கிரக்கம் அடையாத மண்ணின் மைந்தர்கள் இருந்து இருப்பார்களா என்று தெரியவில்லை. அவருடைய திருமணத்திற்கு முன்னால் நடந்ததைத்தான் சொல்கிறேன்.

என்ன செய்வது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. ஒரு நல்ல நாள் பார்த்து, அழகு, ஆடம்பரம், புகழ் என்கிற இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் போட்டன. ஜீன் சின்னப்பாவின் வாழ்க்கையில் கூட்டாஞ் சோறு ஆக்கிப் போட்டு நன்றாகவே படையல் செய்து விட்டன. 

44 வருடங்களுக்கு முன்னால், ஒரு நாள் நடுநிசி நேரம். அவர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். அந்த நிகழ்ச்சி மலேசியாவையே உலுக்கிப் போட்டது. அது மறக்க முடியாத ஒரு மயிர்க் கூச்செறியும் நிகழ்ச்சி. பார்க்கிறவர்கள் எல்லாரும் அந்த நிகழ்ச்சியைப் பற்றிதான் பேசிக் கொள்வார்கள்.


கணினி கைப்பேசிகள், பேஸ்புக், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர்; எதுவுமே இல்லாத காலம். அதனால், பட்டித் தொட்டிகள், சந்து பொந்துகளில் எல்லாம் சாறு பிழியாத கசமுச பேச்சுகள். அப்போதைக்கு அது சூடான பட்டி அரங்கம் என்றுகூட சொல்லலாம். 

ஜீன் சின்னப்பா என்கிற அந்த அழகி, 1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் சுபாங் விமான நிலையத்திற்குப் போகிற பாதையில் பில்மோர் தோட்டத்திற்குப் பக்கத்தில் கொலை செய்யப்பட்டார். 

இந்த இடம் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அப்போது சுபாங் விமான நிலையம் மட்டுமே இருந்தது. பெரிய பெரிய சாலைகள் எதுவுமே இல்லை. பெட்டாலிங் ஜெயா கிள்ளான் நெடுஞ்சாலை தான் பெரிய விரைவுச்சாலை. பத்து தீகாவில் இருந்து சுபாங் டாமன்சாரா ஆர்.ஆர்.ஐ. போன்ற இடங்களுக்குச் செல்வது வழக்கம். நினைவில் உள்ளது. சரி. 

அப்போது ஜீன் சின்னப்பாவுக்கு வயது 31. அவருடைய பிறந்த தேதி 26.10.1947. கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு விரிவுரையாளர். பெயர் கார்த்திகேசு சிவபாக்கியம். 



இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இந்தக் கார்த்திகேசு இருக்கிறாரே, இவர்தான் கொலை செய்யப்பட்ட ஜீன் சின்னப்பாவின் மைத்துனர்; கணவர்வழி மைத்துனர். அதாவது ஜீன் சின்னப்பா கணவரின் கூடப் பிறந்த தம்பி. 

1980-ஆம் ஆண்டு, அழகி ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. டாக்டர் நரதா வர்ணசூர்யா என்பவருக்கு ஜீன் சின்னப்பா எழுதிய காதல் கடிதங்கள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன. 

தொடர்ந்து பல நாட்கள் அந்தக் கடிதங்களைப் பற்றிய விவாதங்கள். நீதிமன்ற வழக்கைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அன்றாடம் ஒரு பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதும். பலருக்கு இடம் கிடைக்காமல் போகும். வெளியே நின்று வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம். 

இந்தக் கொலை வழக்கை, மற்ற மற்ற வழக்குகளைப் போல ஒரு சாதாரண வழக்கு என்று எடுத்துக் கொள்ள முடியாது. சம்பந்தப் பட்டவர்கள் நன்கு பிரபலமானவர்கள். இறந்து போனவர் ஒரு மலேசிய அழகி. கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டவர் ஒரு பிரபல விரிவுரையாளர். அதுவும் மனோதத்துவ நிபுணர். அடுத்து சொந்த அண்ணியையே கொலை செய்தார் என்கிற குற்றச்சாட்டு. 

இந்த இரண்டு மூன்று முக்கியமான காரணங்களினால் அந்த வழக்கு மலேசிய அளவில் மிகப் பிரபலம் அடைந்தது. இதைவிட படு மோசமான கொலைகள் எல்லாம் மலேசியா பார்த்து இருக்கிறது. சொல்லப் போனால் ஜீன் சின்னப்பா கொலை வழக்கு அப்படி ஒன்றும் ஒரு பெரிய பயங்கரமான கொலை என்று சொல்லிவிடவும் முடியாது.

  • 1974-இல் மலேசியாவின் தலைமை போலீஸ் ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ரகுமான் ஆசிம் கொலை; 
  • 1992-இல் அரிபின் அகாசு  (Ariffin Agas) கொலை வழக்கு (ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட மிக மோசமான நிகழ்வு)
  • 1993-இல் பகாங், பத்து தாலாம் சட்டமன்ற உறுப்பினர் மசுலான் இட்ரிஸ் கொலை (மோனா பெண்டி கொலை வழக்கு); 
  • 2003-இல் கோலாலம்பூர் பங்சாரில் கென்னி ஓங் கொலை; 
  • 2003-இல் கோலாலம்பூர் ஸ்ரீ அர்த்தாமாஸ் நோரித்தா சம்சுடின் கொலை; 
  • 2004-இல் சபா மாநிலத் துணையமைச்சர் டத்தோ நோர்ஜான் கான் கொலை; 
  • 2006-இல் அல்தான்தூயா கொலை; 
  • 2007-இல் கோலாலம்பூர், வங்சா மாஜு நூருல் சாஸ்லின் ஜாசிமின் எனும் எட்டு வயதுச் சிறுமி கொலை; 
  • 2010-இல் பந்திங் டத்தோ சுசிலாவதி  கொலை; 
  • 2013-இல் அராப் மலேசிய வங்கி நிறுவனர் உசேன் அகமாட் நஜாடி கொலை. 
இன்னும் இருக்கின்றன. அவை அனைத்தும் மறக்க முடியாத துர்நிகழ்ச்சிகள். இதில் ஜொகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ கிருஷ்ணசாமியின் கொலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆனால், அதற்கு முன்னரே ஜீன் சின்னப்பாவின் கொலை மிகப் பிரபலமாகிப் போனது. சரி. என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1979-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. ஜீன் சின்னப்பாவும் கார்த்திகேசுவும் கோலாலம்பூருக்குப் போய்விட்டு, கிள்ளானில் இருக்கும் தங்கள் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோலாலம்பூரில் குடியேறுவதாக ஒரு திட்டம். 

அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார். 

சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார். 

சிறுநீர் கழிக்கப் போவதாகக் காரில் இருந்து இறங்கி இருக்கிறார். அப்போது நேரம், நள்ளிரவை நெருங்கிக் கொண்டு இருந்தது. வாகனப் போக்குவரத்தும் குறைவு. மிக மிகத் தனிமையான இடம். அப்போதுதான் ஜீன் சின்னப்பா கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பாவின் கதை முடிந்து விட்டது. இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.

22 மார்ச் 2023

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1

 தமிழ் மலர் - 22.03.2023 - பாகம்: 1

மலேசியாவில் ஆட்சிகள் மாறின. அரசாங்க நிர்வாகங்கள் மாறின. அரசியல்வாதிகளும் மாறினார்கள். அமைச்சர்களும் மாறினார்கள். ஆனால் அந்த மாற்றங்களினால் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுமா? அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா? அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா? நடைமுறைப் பண்புகள் மாறுமா? பழைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித் திட்டக் கொள்கைகள் மாறுமா?

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.

மொகைதீன், இஸ்மாயில் சப்ரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விட்டார்கள், அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

இதில் ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி. பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான் பிரச்சினை.

புதிய அரசாங்கத்தின் இப்போதைய புதிய அணுகுமுறையினால் நம்முடைய மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்ட முன்னெடுப்பு தொடருமா. அல்லது கைவிடப்படுமா. அதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.

பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. பழைய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நின்றார்கள்.

வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை. இதில் சாதனையாவது சோதனையாவது. 2018 பாக்காத்தான் அரசாங்கத்திற்கு தலைக்குடைச்சல் தான் மிஞ்சிப் போனது. நல்லவேளை. இருபது காசு பெனடோல் மாத்திரைகள் உதவி செய்தன. ஒரு செருகல்.

2018-இல் பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களுக்குப் போய் கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் கணக்கில் காசு சுரண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓர் அமைச்சு இல்லை. பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கின்றன.

எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் 100 நாட்கள் முடிந்து விட்டன. அப்புறம் எப்படிங்க அவர்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். இப்போதைய அன்வார் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.


புதிதாக வரும் அரசாங்கம் பெரும்பாலும் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; மாற்றங்கள் செய்ய மாட்டார்கள். அதற்குப் பதிலாகச் சின்னச் சின்னத் திருத்தங்களைச் செய்வார்கள்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருமொழித் திட்டம் என்றால் டி.எல்.பி. (DLP) (Dual Language Programme). மலேசிய மொழியில் Program Dwi Bahasa. தமிழில் இருமொழிப் பாடத் திட்டம்.

இரு மொழித் திட்டம் (DLP) என்பது 'பகாசா மலேசியாவை மேம்படுத்துதல் மற்றும் ஆங்கிலத்தை வலுப்படுத்துதல்' எனும் கொள்கைக்கான அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ் ஒரு திட்டமாகும்.

(The Dual Language Programme (DLP) is a programme under the government's initiative to 'Empower Bahasa Malaysia and Strengthen English' policy)

மலேசியாவில் இரு மொழித் திட்டம் 2016-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடக்க நிலைப் பள்ளிகளிலும் மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது.

முக்கிய நோக்கம்: அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information Technology and Communication), மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் (Design and Technology) ஆகிய பாடங்களில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்துவதால் ஆங்கிலப் புலமையை அதிகரிக்கலாம்; அத்துடன் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை மேம்படுத்தலாம். இதுதான் அந்த தலையாய நோக்கம்.

அடுத்து, கணிதமும் அறிவியலும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப்படுத்தப்படும்.

1950-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த அந்த இருமொழித் திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டமாகத் தெரிந்தது. இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குச் சிந்தனையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கமாக இருந்தது.

அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் அதைப் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை. இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம், 1950-ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளம் தேய்ந்து போய் இருக்கலாம். நம்புங்கள்.

மலைநாட்டு தமிழினப் பதற்றத்தின் தடுமாற்றங்களைப் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். 50 ஆண்டுகால இடைவெளியில் கண்டிப்பாக அது நடந்து இருக்கலாம். அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் தேய்ந்து ஒரு தொய்வு நிலையை அடைந்து இருக்கலாம்.

50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை. ஆக நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைக்குப் பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல; நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாது. சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஒரு தொய்வு நிலையை எடுத்துச் சொல்லவும் உரிமை உள்ளது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.

அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்ல மரிக்கும். தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மொழிப் பள்ளிகள் பாதிக்கப்படலாம். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். விளக்கம் தருகிறேன். அதற்கு முன் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம், அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு மறைமுகமான நகர்வைப் பற்றி பலரும் கண்டு கொள்வதே இல்லை.

இப்போது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை இரு மொழித் திட்டத்தில் பெரும்பாலோர் சேர்ப்பதே இல்லை.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால்… மன்னிக்கவும். ஏற்கனவே சில தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தி விட்டார்கள். இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் பொருளியல், தொழில் நுட்பம் ஆகிய இரு பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தலாம் அல்லது மலாய் மொழியில் நடத்தலாம். தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பள்ளியின் தலைமையாசிரியரைப் பொருத்த விசயம்.

அடுத்த விசயம்: மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தப் பாடங்களை அந்த அந்த மொழிகளில் தான் போதிக்க வேண்டும். சரிங்களா. அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிப்பார்கள். போதிக்க வேண்டும்.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம்,  ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக அந்த வகையில் மொத்தம் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் படும். அந்த ஆறு பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப் படாது.

இப்போது இருக்கிற 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் பட்டால் எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் போதிக்கப்படும்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த இரு மொழித் திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருப்பார்கள். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்மொழி தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. மற்ற இனத்தவர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம்.

2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மற்ற மொழியில் படித்துக் கொடுத்தார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாக மொழிப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யலாம்.

இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கலாம் என்பது தெரியாமலா இருக்கும். மொழி இருந்தால் என்ன போனால் என்ன. நானும் என் குடும்பமும் நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பது சரியன்று.

2021-ஆம் ஆண்டில் மலேசியாவில் 1,302 சீனப்பள்ளிகள் இருந்தன. 495,386 மாணவர்கள் பயின்றார்கள். ஆனால் எந்த ஒரு சீனப் பள்ளியும் அந்த இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏன்? நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள்.

ஒரு மொழியின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்டலாம் அல்லது சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த முறைமைகளைத் தவிர்த்துவிட்டு மற்ற பாடங்களை ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கலாம்; இது மலாய்க் கல்விமான்களின் மாற்றுக் கருத்துகள்.

(தொடரும்)

25 டிசம்பர் 2022

மேரி சாந்தி தைரியம்

(தமிழ் மலர் - 24.12.2022)

மலேசிய மனித உரிமை போராட்டவாதி. மலேசியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர். அனைத்துலகப் பெண்ணுரிமைப் போராளி. ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமை தலைமை அதிகாரி. அழகிய அறிவார்ந்த பெண்மணி. மலேசியத் தமிழ்ப் பெண்ணியவாதி. மேரி சாந்தி தைரியம். கைகூப்புகிறோம்.

மலேசியாவின் மகளிர் உதவி அமைப்பு (Women’s Aid Organisation (WAO) தோன்றுவதற்கும் முன்னோடியாக இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழுவில் இருந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழுவிலும் (Committee on the Elimination of All Forms of Discrimination against Women) பணியாற்றியவர்.

மேரி சாந்தி தைரியம் (Mary Shanthi Dairiam). ஓர் அற்புதமான மலேசியச் சமூகச் சேவகி. மலேசியாவில் பலருக்கும் இவரைத் தெரியாது. வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டியது நம் கடமையாகும்.

இப்படி உலகப் பெண்களுக்காகப் போராடிய பெண்கள்; போராடும் பெண்களை எல்லாம் மேலாதிக்கப் பெரும் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இனவாதத்தில் மனவாதம் கலந்தால் மனிதவாதம் மறைந்து போகலாம். அந்த வகையில் இந்தப் பெண்மணியும் மறக்கப்பட்டு இருக்கலாம். ஒரு செருகல்.

தயிர் ரசம், மிளகு ரசம், பருப்பு சாம்பார் காணொலிகள் செய்து புகழ் பெறும் சோடா புட்டிகளுக்குத் தான் இன்றைய காலத்தில் மவுசு அதிகம். விளம்பரங்களும் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்குத் தான் அதிகம் வெளிச்சமும் கிடைக்கிறது. அசலுக்கு மவுசு குறைவு.

மேரி சாந்தி தைரியம். குடும்ப வன்முறைகளுக்கு எதிராக 1980-ஆம் ஆண்டுகளில் மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பரப்புரைகள்; கண்டனக் குரல்கள் எழுப்பியவர். குடும்ப வன்முறை மசோதாவைச் சட்டமாக்குவதற்கு (Domestic Violence Act) போராட்டம் செய்து வெற்றியும் கண்டவர்.

அவரின் தொடர் பரப்புரைகளினால் தான் 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act 1994) மலேசிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. 2012-ஆம் ஆண்டில் அந்தச் சட்டம் மறுதிருத்தம் செய்யப் பட்டது. பின்னர் 2017-ஆம் ஆண்டு (Domestic Violence (Amendment) Act 2017) என்று மறுபடியும் திருத்தம் செய்யப்பட்டது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரைச் சும்மா கையை நீட்டி ஓர் அடி அடித்தாலே போதும். கையில் விலங்குடன் அந்தச் சட்டம் ஓடி வந்து எட்டிப் பார்க்கும். மேரி சாந்தி கொண்டு வந்த சட்டம்.

இது பெண்களுக்கு மட்டும் உதவும் சட்டம் அல்ல. ஆண்களுக்கும் உதவுகிறது. ஆண்களே நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். கோபத்தில் மனைவி ஒரு கரண்டியை எடுத்து புருசன்காரன் மீது ஒரு வீசு வீசி... அது படாத இடத்தில் பட்டு...  ஒரு சின்ன சிராய்ப்புக் காயம் பட்டு... ரெண்டு சொட்டு இரத்தம் வந்து... அது போதுங்க.

‘வாராயோ தோழி வாராயோ’ என்று குடும்ப வன்முறைச் சட்டம் கதவைத் தட்டும். அப்புறம் அந்த ராணி லலிதாங்கி கம்பி எண்ண வேண்டி வரலாம். ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மீது அல்லது ஓர் ஆணின் மீது வார்த்தைகளால் வன்முறை நிகழ்ந்தாலும் இந்தச் சட்டம் பாயும். சரிங்களா. சந்தோஷம் தானே.

குடும்ப வன்முறை என்றால் என்ன. ஒரு குடும்ப உறுப்பினர் இன்னும் ஒரு குடும்ப உறுப்பினர் மீது பயன்படுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறைக்குத்தான் குடும்ப வன்முறை என்று பெயர். இது கணவன், மனைவி மீது அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாகச் சுட்டுகின்றது.

அது யாராக இருந்தாலும் சரி; தன்னுடைய துணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் அது வெளிப்படலாம்.

கணவன் மனைவி என்று இல்லை. குடும்ப அமைப்பில் உள்ள ஆண் பெண் எவராக இருந்தாலும் இந்தக் குடும்ப வன்முறைச் சட்டம் மூலமாக நீதி கேட்கலாம்.

’நான் தாலி கட்டியவன். நான் சொன்னால் நீ கேட்கணும்டி’ என்று வறுபுறுத்துவது எல்லாம் தப்பு. மனைவியின் சம்மதம் இல்லாமல் ஒரு கணவன் தன் மனைவியைத் தொட்டாலே அது ஒரு வகையான வன்முறைதான். அது சட்டப்படி குற்றம். அதற்காக இதை வைத்துக் கொண்டு கணவனை ரொம்பவும் மிரட்ட வேண்டாம் பெண்களே.

புருசன்காரன் தானே என்று பெண்கள் பெரும்பாலும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். பெண்களுக்கே உள்ள இயல்பான குணம். கணவனுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் குணம். இருந்தாலும் வற்புறுத்தலின் பேரில் விட்டுக் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். இந்த இடத்தில் வற்புறுத்தல் வந்து நிற்கிறது. வற்புறுத்தல் என்பது ஒரு வகையில் பயமுறுத்துவது போலாகும்.

’நான் சொல்லி நீ கேட்கவில்லை. உனக்கு இனிமேல் ஒரு காசு தர மாட்டேன் போடி’ என்று சொல்வது குற்றம் அல்ல. ஆனால் அதைச் சொல்லி வறுபுறுத்தி அவளை இணங்க வைப்பது குற்றமாகும். புரியும் என்று நினைக்கிறேன்.

ஆக இந்தச் சண்டைச் சச்சரவுகளைத் தவிர்க்கச் சமாதானமாகப் பேசி விட்டுப் போகலாமே. ’இகோ’ தன்மையைத் தவிர்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது. ஆண்களுக்கு ஒரு ஐடியா… ஒரு பெண்ணைப் புகழ்ந்தால் போதுங்க. அம்புட்டுத்தான்…

’உலகத்திலேயே நீ தாண்டி அழகி. உன்னைத் தவிர வேறு எவளும் இல்லடி கண்ணே மணியே’ என்று இரண்டு வார்த்தை ஆசையாகப் பேசினால் போதுங்க. கதை முடிஞ்சது. மறுபேச்சு இல்லை. காலடியில் வந்து விழுந்து விடுவாள். அப்புறம் எதற்கு சண்டை; சச்சரவு; பசார் மாலாம் மீட்டிங் எல்லாம். மனைவியைப் புகழ்வதற்கு காசா பணமா? அன்பே, அமுதே, அழகே என்று அள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருங்கள்.

அல்வா இனிப்பான பொருள். அதை ஒரேயடியாக ’லபக்’ என்று முழுங்குவதைக் காட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். சுவையே வேறு. சமயங்களில் என்னுடைய கட்டுரைகளிலும் இடை இடையே ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். அல்வா மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

மனைவியைப் புகழ்ந்து பேசி காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஆண்கள் பலருக்கும் உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் புருசன்காரன் அமைதியாக அன்பாக இருக்கிறானே என்று புருசன்காரனை ஏறி மிதிப்பதும் உண்டு. நடக்கிற காரியம் தான். சான்றுகள் உள்ளன. சீரியல்கள் ஒன்றே போதும்.

எல்லாக் குடும்பங்களிலும் அல்ல. சில குடும்பங்களில் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட மனைவியை இரண்டு நாள்களுக்குக் கண்டு கொள்ள வேண்டாம். அவள் சமைத்ததைச் சாப்பிட வேண்டாம். மூன்றாவது நாள் அவளே இறங்கி வந்து விடுவாள்.

ஆக இப்படிப்பட்ட ஒரு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வரப் படுவதற்கு அல்லும் பகலும் உழைத்த மேரி சாந்தி தைரியம் அம்மாவுக்குத் தாராளமாக ஒரு கைதட்டல் கொடுக்கலாமே. அதில் ஓரவஞ்சனை வேண்டாமே.

மேரி சாந்தி தைரியம், 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர் (முன்பு University of Madras). 1991-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Sussex) மாஸ்டர்ஸ் பட்டம் செய்தவர். ஆங்கில மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இன்றும் அதே இளமைத் துடிப்புடன் மனித உரிமைப் போராட்டவாதியாகப் பயணித்துக் கொண்டு வருகிறார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் அறிவுரைஞராகவும் சேவை செய்து இருக்கிறார். அவருடைய மனித உரிமைச் சேவைகள் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துவோம்.

ஐ. நா. சபையின் பாலினத்திற்கான சம உரிமைக் குழு (UN's Gender Equality Task Force); பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கும் குழு போன்றவற்றில் பணியாற்றியவர்.

2010-ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டு காசா போரைப் பற்றிய ஆய்வறிக்கையைத் தயாரிக்க ஐக்கிய நாட்டுச் சபை மூன்று பேரை அங்கு அனுப்பி வைத்தது. அந்த மூவரில் மேரி சாந்தி தைரியம் அவர்களும் ஒருவர். இப்படி ஒரு பெரிய அமைதித் தூதுவராகப் பணியாற்றியவர்.

பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் நீக்க ஒரு காப்பகம் தோற்றுவிக்கப்பட்டது. அது அனைத்துலகப் பெண்ணுரிமை காப்பகம். அந்தக் காப்பகத்தின் ஆசியப் பிரிவின் நிறுவனர்; தற்போதைய இயக்குனரும் இவரே. (International Women's Rights Action Watch - Asia Pacific)

இவர் பல பசிபிக் நாடுகளுக்கு பெண்ணுரிமை அறிவுரைஞராகவும் திகழ்கிறார். இவர் எழுதிய ’ஒரு பெண்ணின் சமத்துவ உரிமை: சிடாவின் வாக்குறுதி’ (A Woman’s Right To Equality: The Promise Of Cedaw) எனும் நூல் தாய்லாந்து பாங்காக் நகரில் பெண்ணுரிமை மாநாட்டில் (Beijing +20 conference) வெளியிடப் பட்டது.

இப்படிப்பட பெண்களை உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும். பெண்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பெண்ணியத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். ரசம் அதிரசம் காணொலிகள் தயாரிக்கும் போலி விளம்பரப் பிரியர்களுக்கு அல்ல; சிறுபான்மை இனத்தைச் சிறுமைப் படுத்தும் சின்னக் கொசுறுகளுக்கு அல்ல.

உண்மையாக இந்த நாட்டை உருமாற்றியவர்களின் உயரத்தை ஏற்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு பெண்டத்தாங், பெனும்பாங் என்று பிதற்றி, உளறிக் கொட்டும் அரை வேக்காடுகளுக்கு அல்ல. அதிரசம் பாரம்பரியச் சொத்து; ரசம் எங்க பாட்டி செஞ்ச பருப்பு சாம்பார் என்று சொல்லும் சோடா புட்டிகளைக் கண்டும் காணாமல் போய்விட வேண்டும்.

கங்கையில் குப்பையை எரிந்தால் கங்கையின் மவுசு குறைந்து விடாது. குப்பைக்குத்தான் மவுசு. அப்படித்தான் நாமும் இங்கே...

மேரி சாந்தி தைரியம் போன்ற இந்தியப் பெண்கள் நிறைய பேர் இங்கேயும் எங்கேயும் ஜொலிக்கின்றார்கள். இருந்தாலும் மேலாண்மையின் அதிகார ஆதிக்க அழுத்தங்களின் காரணமாகப் பலர் இன்னமும் இலை மறை காய்களாகவே மறைந்து போய் நிற்கின்றார்கள். இதையே காலத்தின் கொடுமை என்று பலரும் சொல்கின்றார்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
24.12.2022


சான்றுகள்:

1. Mary Shanthi Dairiam (Malaysia) (pdf). Office of the United Nations High Commissioner for Human Rights.

2. Mary Shanthi Dairiam - https://en.wikipedia.org/wiki/Mary_Shanthi_Dairiam

3. Malaysian human rights and women's rights advocate - http://www.dtp.unsw.edu.au/mdm-mary-shanthi-dairiam

4. A Woman’s Right To Equality: The Promise Of Cedaw - https://www.star2.com/people/2015/01/01/fighting-for-equality/

5. International Expert Leads High Level Anti-Discrimination Forum for Royal Government of Cambodia". UNIFEM.