12 செப்டம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 72

அன்புள்ள நெஞ்சங்களுக்கு,
கடந்த ஒரு மாத காலமாக  இந்தியச் சுற்றுலா. போன இடங்களில் இணைய வசதிகள் மிகவும் குறைவு. அதனால், புதிய தகவல்களைச் சேர்க்க முடியவில்லை. 19.10.2010 அன்றுதான் மலேசியா திரும்பினேன். இன்னும் சில தினங்களில் அனைத்தும் வழக்க நிலைக்குத் திரும்பும். அது வரை பொறுத்து அருளவும்.


(இந்தக் கேள்வி பதில் அங்கம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)




சுப்பிரமணியம் தயா <thayas1978@gmail.com>
கே: குழந்தைகளுக்குக் கணினி அறிவைப் புகட்ட வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி சொல்லித் தரும் போது சிலருக்குக் கணினியின்  விளையாட்டுகளில்  பைத்தியம் பிடித்துப் போகிறது. அதை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். கண்டித்தால் அடம் பிடித்து அழுகிறார்கள். அவர்கள் பள்ளி வேலைகளையும் அவசரம் அவசரமாகச் செய்கிறார்கள். என்ன செய்யலாம்?

ப:
இந்த மாதிரியான பாரதப் போர் பல வீடுகளில் நடக்கின்றது. 'போதும் நிறுத்து' என்றால் அசைய மாட்டார்கள். 'போதும்டா கண்ணா' என்று கெஞ்சினால் நகர மாட்டார்கள். 'கண் கெட்டுப் போகும்' என்று பயமுறுத்தினால் கண்களைத் கசக்குவார்கள். 'ரோத்தான் எடுக்கிறேன்' என்றால் பத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி கத்துவார்கள்.

மொத்தத்தில் மூன்றாம் உலகப் போர் வரப் போகிற மாதிரியான  நிலைமை. இதற்கு என்ன செய்யலாம். ஒரு மௌனமான நாடகம் இருக்கிறது.

நீங்களாகவே போய்க் கணினியைத் திறந்து விடுங்கள். 'உன் இஷ்டம் போல விளையாடு' என்று அன்பாகச் சொல்லுங்கள். அப்புறம் அவர்களிடம் எதையும்  பேச வேண்டாம். முடிந்த வரைக்கும் கண்டு கொள்ளவே வேண்டாம்.

எவ்வளவு நேரம் விளயாட முடியுமோ விளையாடட்டும். அவர்கள் பாட்டிற்கு விட்டு விடுங்கள்.

ஆனால், சாப்பிடுவதற்கு ஏதாவது கேட்டால் எதையும் கொடுக்க வேண்டாம். குடிக்கத் தண்நீர் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். தெரியாதது மாதிரி இருந்து விடுங்கள்.

ஒரு கட்டத்தில் போதும் போதும் என்று அவர்களே கணினியை அடைக்க முயற்சி செய்வார்கள். அதற்கு நீங்கள் கணினியை அடைக்க வேண்டாம்.

கணினியை விட்டு எழுந்திருக்க விடவும் வேண்டாம்.  இன்னும் விளையாட வேண்டும் என்று சொல்லுங்கள்.

இந்த மாதிரி இரண்டு மூன்று தடவை செய்து பாருங்கள். போகப் போக நிலைமை உங்களுக்குச் சாதகமாக அமையும். என் நண்பர் தன் பேரன் பேத்திகளிடம் பயன் படுத்திய ஒரு புதுமையான விளையாட்டு இது. நன்றாகத் தான் வேலை செய்தது.

இருந்தாலும் பாருங்கள். பேரனைத் திருத்துகிறேன் என்று சொல்லிக் கடைசியில் பேரனும் தாத்தாவும் நெருக்கமானக் கூட்டாளி ஆகிப் போனார்கள்.

அப்புறம் விடிய விடிய இரண்டு பேரும் போட்டிப் போட்டு விளையாட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டுக்காரப் பெண்ணுக்கு அப்பாவைத் திருத்துவதா இல்லை மகனைத் திருத்துவதா என்கிற நிலைமை. மூச்சுத் திணறல் வந்து மோசமாகிப் போனதுதான் மிச்சம்.

கன்னியப்பன்  kanniappan@gmail.com
கே: Facebook எத்தனை மொழிகளில் வெளிவருகிறது?

ப:
Facebook என்பதை முகநூல் என்று சொல்கிறார்கள். வதனப் புத்தகம் என்று சொல்கிறார்காள். கடைசியாக வதன நூல் என்றும் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். எது எப்படியோ நாம் பேஸ்புக் என்றே அழைப்போம்.

தமிழில் எதையாவது சொல்லப் போய் அதற்கு யாராவது பல்லவி பாடுவார்கள். செம்மொழி மாநாடு நடத்திய தமிழ்ப் புலவர்கள் ஒரு சொல்லை உருவாக்கித் தரட்டும். சரி.

வீட்டுக்கு வரும் வந்தாளியைச் 'சாப்பிட்டீங்களா' என்று கேட்கும் பழக்கம் இருந்தது. இப்போது 'பேஸ்புக்கி'கில் கணக்கு இருக்கிறதா You Tube பார்த்தீர்களா என்று கேட்கின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கல்யாணம் காட்சியிலிருந்து காது குத்து வரை இளைஞர்களிடையே இந்தப் பேச்சு தான்.

இதில் நம்முடைய பொறுமைகளைச் சோதிக்கும் பெருமைப் பேச்சுகள். பேஸ்புக் எனும் சமூக வலைத் தளம் 70 மொழிகளில் வெளி வருகிறது. 400 மில்லியன் பயனர்கள் உள்ளனர்.

இவ்வளவு பேரும் வேலை வெட்டி இல்லாமல் பேஸ்புக்கில் போய் வெட்டி முறிக்கிறார்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். அப்படிப் பார்த்தால் என்னையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டி வரும்.

பயனர்கள் என்றால் Users. உலகத்திலேயே அதிகமான விசிறிகளைக் கொண்ட பிரபலம் நம்ப இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு 1,546,536 மொத்தம் விசிறிகள்.

சசி <djsasee@gmail.com>
கே: சார், என்னுடைய Internet Explorer எனும் இணைய உலவி சில சம்யங்களில் நிலைக் குத்திப் போகிறது. வேலை செய்ய மறுக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஏதாவது எளிய முறை இருக்கிறதா?

ப:
ஓர் எளிய முறை இருக்கிறது. இந்த முறை நன்றாகவும் வேலை செய்கிறது. நான் சொல்கிற மாதிரி செய்யுங்கள்.

Control Panel >> Intert Options  >> Advanced  என்பதைச் சொடுக்கி உள்ளே போய்  Reset  >> Reset என்பதைச் சொடுக்கி விடுங்கள். வெளியே வாருங்கள்.

கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறந்து பாருங்கள். பிரச்னை தீர்ந்து இருக்க வேண்டும். இன்னும் பிரச்னை இருக்கிறதா? பிரச்னை இருக்கிறது என்றால் வெளியே தான் பிரச்னை. கணினிக்கு உள்ளே இல்லை.

வேதநாயகம், கூலாய், ஜொகூர்
கே: என் கணினியில் உள்ள Files எனும் கோப்புகளுக்கு கடவுச் சொல் கொடுத்து பாது காக்க வேண்டும். அதற்கு ஏதாவது இலவசமாக நிரலி கிடைக்குமா?

ப:
அண்மையில் இணையத்தில் தேடல் செய்யும் போது ஒரு புதுமையான நிரலி கிடைத்தது. நம்முடைய கோப்புகளைக் கடவு சொல் கொடுத்து பாது காக்க உதவுகிறது.

கீழ்காணும் இடத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://download.cnet.com/SafeHouse-Explorer/3000-2092_4-75219687.html

11 செப்டம்பர் 2010

சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்


(இந்தப் புதினம் 12.09.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)
 

மரத்தில் இருந்து உதிரும் சண்பகப் பூக்கள் மண்ணுக்குச் சொந்தம். மண்ணில் இருந்து உதிரும் சரித்திரப் பூக்கள் மனிதனுக்குச் சொந்தம். சண்பகப் பூக்கள் தொலைந்து போன சண்பக மணங்களைத் தேடுகின்றன. சரித்திரப் பூக்கள் கலைந்து போன சரித்திரங்களைத் தேடுகின்றன. அந்தக் காவியங்களில் ஒன்றுதான் சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள்.பூஜாங் பள்ளத்தாக்கில் புதைந்து கிடக்கும் சொப்பனப் பூக்கள்.


ஒரு காலக் கட்டத்தில் தீபகற்ப மலேசியாவை ஒட்டு மொத்தமாகச் சுவர்ண பூமி என்று சொல்வார்கள். நல்ல ஒரு நெருக்கம். நல்ல ஓர் இறுக்கம்.

அந்தச் சுவர்ண பூமி என்கிறச் சொல் இருக்கிறதே அது தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வட பேராக் மாநிலப் பகுதிகளைக் குறிப்பிடும் ஒரு சரித்திரக் கலைச் சொல்.

தொப்புள் கொடி உறவுகள்

பல நூறு ஆண்டுகள் என்று சொல்லலாம். சுவர்ண பூமிக்கும் தமிழர்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவுகள் இன்னும் கூட அறுந்து போகவில்லை. அவை எல்லாம் மறைக்க முடியாத வரலாற்றுப் புதினங்கள்.

மகாபலிபுரத்தைக் கட்டிக் காத்தவன் பல்லவ ராஜா. அந்த ராஜா காலத்திற்கு முன்பு இருந்தே உறவுகள் தொடங்கி விட்டன. இன்னும் தொடர்ந்தும் வருகின்றன.

சுருங்கச் சொன்னால் விஜயாலய சோழன் என்பவர் தான் சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் போட்டவர். ஆக,  சோழப் பேரரசு தொடங்கிய காலத்தில் இருந்தே உறவுகள் தொடர்கின்றன.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் இருக்கும் பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் பழைமை வாய்ந்தது. பூஜாங் பள்ளத்தாக்கைக் கெடா மாநிலத்தின் புராதன அதிசயம் என்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பூஜாங்  பள்ளத்தாக்கின் நாகரீகம் மேற்கு ஆசிய - இந்திய - சீன நாகரீகங்களுடன் தொடர்பு உடையது.

அது மட்டும் அல்ல. கம்போடியா, அராபியா, எகிப்து போன்ற நாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இருபது நூற்றாண்டுகளாக அந்த நாகரீகம் நீண்டு போகிறது.

அந்தக் காலக் கட்டத்தில் கடல் வழி வாணிபம் சிறந்து விளங்கி உள்ளது. வணிகச் செல்வங்கள்  நிறைந்து வழிந்துள்ளன.

நளினம் காட்டும் மெர்போக் நதி

தென்னிந்தியாவை ஆட்சி செய்த பாண்டிய, பல்லவ, சோழ மன்னர்களுக்கும் கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்களுக்கும் நல்ல சுமுகமான உறவுகள் நெடும் காலம் நீடித்து வந்துள்ளன.

இங்கே குனோங் ஜெராய் எனும் ஓர் உயரமான மலை இருக்கிறது. இதன் உயரம் 1230 மீட்டர். இந்த மலை கடல் கரையில் இருந்து மிகத் தொலைவில் இல்லை. அந்தக் காலங்களில் இந்த மலை கடலோடிகளூக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வந்திருக்கிறது.

அந்த மலையின் அடிவாரத்தில் தான் பூஜாங் பள்ளத்தாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. பூஜாங் பள்ளத்தாக்கின் பரப்பளவு 224 சதுர கிலோமீட்டர்கள்

ஆகும். பள்ளத்தாக்கின் வழியாக மெர்போக் நதியும் நளினம் காட்டுகிறது. பசுமை புரட்சி செய்கிறது.

கி.பி.1025 ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படை எடுத்த போது பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதி கடாரம் என்று அழைக்கப் பட்டது.

இந்தக் கடாரம் எனும் சொல்தான் காலப் போக்கில் கெடா என்று மருவியது.

பூஜாங் பள்ளத்தாக்கு ஒரு வியாபார மையமாகவும், ஆட்சி செய்யும் இடமாகவும் இருந்து இருக்கிறது. இராஜேந்திர சோழனின் ஆட்சி காலம் கி.பி.1012 லிருந்து கி.பி.1044 வரை.

பட்டினப்பாலையில் கடாரம்

இராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தென்னிந்தியாவில் கரிகாற் பெருவளத்தான் சோழன் எனும் ஒரு வீரமிகு சோழ அரசர் இருந்தார்.

இந்தக்  கரிகாற் பெருவளத்தான் சோழன் ஆட்சி காலத்தில் தான் பட்டினப்பாலை எனும் சங்க இலக்கியக் காவியம் எழுதப்பட்டது.

பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் என்றும் இவருக்கு அடைமொழி உண்டு. பட்டினப்பாலை என்பது பத்துப் பாட்டு இலக்கிய நூல்களில் ஒன்று.

இந்தக் காவியத்தைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பூம்புகார் நகரில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலையில் என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அதில் வரும் ஒரு பகுதியின் வரிகளைப் படியுங்கள்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

இதில் 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' எனும் வரிகள் வருகின்றன. கடாரத்தின் பழைய சொல் காழகம். காழகத்தின் ஆக்கம் என்றால் கடார தேசத்தின் பொருட்கள் என்று அர்த்தம்.

அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்

இராஜேந்திர சோழன் தான் அயல் நாடுகளுக்குப் பெரும்படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன். கங்கை கொண்ட சோழன் என்றும் இவரை அழைப்பார்கள்.

கடாரத்தின் மீது சோழ மன்னன் படை எடுத்தான் என்று படித்து இருப்பீர்கள். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கடாரத்தை 'கடாஹ' என்று குறிப்பும் சொல்லப் படுகிறது.

இந்தக் காலக் கட்டத்தில் சுமத்திராவைச் சேர்ந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம்  பூஜாங் பள்ளத்தாக்கையும் ஆட்சி செய்து வந்தது. ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யம் சுமத்திராவின் பலேம்பாங்கில் தலைமையகம் இருந்தது.

அந்த ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்திற்கு சங்கிராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் அரசராக இருந்தார். இராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு நடந்தது 1025 ஆம் ஆண்டு.

இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்ததற்கு காரணம் என்ன. கடாரத்தின் ஆளுமை ஸ்ரீவிஜயா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்ததே.

தமிழ் நாட்டுச் சோழர்களுக்கும் சுமத்திராவின் ஸ்ரீவிஜயா அரசர்களுக்கும் நல்ல நட்பு முறை உறவுகள் இருந்து வந்துள்ளதாகக் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் உள்ளன.

குலோத்துங்கச் சோழன்

அப்புறம் ஏன் இராஜேந்திர சோழன் படை எடுக்க வேண்டும். இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருந்தாலும் சீன அரசுக்கும் சோழ அரசுக்கும் இடையே இருந்த வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திற்கு இருந்திருக்கலாம்.

இந்தப் படையெடுப்பின் மூலமாக ஸ்ரீவிஜயாவின் எந்த நிலப்பகுதியும் சோழ அரசுடன் சேர்க்கப் படவில்லை. விஜயதுங்கவர்மனே மீண்டும் ஸ்ரீவிஜயாவின் அரசனாகச் சோழர்களால் முடி சூட்டப் பட்டான்.

அதன் பின்னர் முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 - கி.பி.1120) காலத்திலும் கடாரத்தின் மீது படையெடுப்பு நடந்துள்ளது. ஒரு சமரசத் தீர்வு காண்பதற்காக இந்த இரண்டாம் படையெடுப்பு நடந்தது என்று சொல்லப் படுகிறது.

பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள கோவில்களின் காலக் கட்டம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி 14 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது. இந்துக் கோவில்களும் உள்ளன. புத்த விகாரங்களும் உள்ளன. இது வரை ஏறக்குறைய 50 கோவில்களைக் கணக்கிட்டு இருக்கிறார்கள்.


சிதைவு அடைந்த சிவலிங்கம்

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப் பட்ட ஆலயங்களில் மிகப் பெரியது புக்கிட் பத்து பகாட் ஆலயம் ஆகும். Dr.Quaritch Wales எனும் ஆராய்ச்சியாளரால் 1936 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. இவருக்கு அடுத்து Alastar Lamp எனும் ஆராய்ச்சியாளர் அகழ் ஆய்வுகளை மேற்கொண்டார்.

சிதலம் அடைந்த ஆலயத்தின் முழுப் பகுதியையும் வெளியுலகத்திற்கு காட்டினார். இந்த ஆலயத்தில் இருந்து பல பகையான  சிலைகள், முத்து மணிகள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்த ஆலயம் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டிருக்கலாம் பூஜாங் நதிக்கு மேற்குப் பகுதியில் மெர்போக் நகரம் இருக்கிறது. இந்த நகரத்தின் அருகில் Kampung Bendang Dalam எனும் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தில் 1960 ஆம் ஆண்டில் அகழ் ஆய்வின் போது ஓர் ஆலயம் கண்டு பிடிக்கப் பட்டது.

இறுகிப் போன பல்லவ இரகசியங்கள்

இந்த ஆலயத்தின் சுற்றுப் பகுதிகளில் சிவலிங்கம், சிதைவு அடைந்த žனக் கல்
பொருட்கள், சிற்பங்கள் கண்டு எடுக்கப் பட்டன.

இந்த ஆலயம் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப் பட்டு இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சண்டி பெண்டியாட், சண்டி பெங்காலான் பூஜாங் என்று பல ஆலயங்கள் இங்கே உள்ளன. பூஜாங் பள்ளத்தாக்கில் இந்து சமயமும் புத்த சமயமும் மாறி மாறி வந்துள்ளன. காலக் கட்டங்களும் மாறி மாறி வருகின்றன.

கடார மண்ணின் இறுகிப் போன பல்லவ இரகசியங்கள் இன்னும் மறைந்து போய் கிடக்கின்றன. கடார மண்ணைப் பற்றி நம் நாட்டில் தமிழ் அறிஞர்கள் மிகப் பெரிய அளவில் ஆய்வுகள் செய்துள்ளனர்.

அந்த ஆய்வுகளை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும். பழம் பெரும் உண்மைகளைச் சொல்ல வேண்டும். உலகத் தமிழர்கள் அந்த அறிஞர்களை ஊழி ஊழி காலத்திற்கும் ஆராதனை செய்ய வேண்டும்.

(அறிஞர் நீலகண்ட சாஸ்திரி அவர்களின் வரலாற்று ஆவணங்களின்  ஆதாரங்களுடன் இந்தக் கட்டுரை எழுதப் பட்டது. இருப்பினும் வரலாற்றுத் துறை அறிஞர்களிடம் என்னுடைய  தாழ்மையான வேண்டுகோள். குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நன்றி.)