20 ஜூன் 2014

உள்ளக வலைப்பின்னல்

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

பூர்ணம் விஸ்வநாதன், செபாராங் பெராய், பினாங்கு

கே:  LAN என்றால் என்ன?

ப: 
Local Area Network என்பதே அதன் சுருக்கம். பல கணினிகளை ஒரே ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கும் அமைப்பே இந்த ‘லான்’ முறை. இதைத் தமிழில் ‘உள்ளக வலைப்பின்னல்’ என்று அழைக்கலாம்.


ஒரு கணினி வலைப்பின்னலில் பல கணினிகள் இணைக்கப் பட்டு இருக்கும். இவ்வாறு இணைக்கப் பட்டு இருக்கும் கணினிகளை மேற்பார்வை செய்யும் தலைக் கணினியை Network server என்று அழைப்பார்கள். தமிழில் பிணையச் சேவைக் கணினி என்று அழைக்கலாம். ஒரு நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றவாறு, பல கணினிகள் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டு இருக்கும். 

இந்தச் சேவைக் கணினிகளை server என்று அழைப்பார்கள். அவற்றின் வகைகள்.  

o   மின்னஞ்சல் சேவைக் கணினி - Email sever
o   இணையச் சேவைக் கணினி - Internet server (proxy)
o   கோப்புச் சேவைக் கணினி - File sever
o   அச்சு சேவைக் கணினி -  (Print sever) printer
o   தரவுத் தள சேவைக் கணினி -  (Data base server) DB

கணினிக்கு மரியாதை செய்யுங்கள்

 (மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

அய்யாவு காசிப்பிள்ளை, ஸ்கூடாய், ஜொகூர்

கே: கணினி தொடங்குவதற்கு முன் Booting நடைபெறுகிறது. அப்போது எந்த எந்தக் கோப்புகள் அல்லது நிரலிகள் இயக்கப் படுகின்றன?

ப:
முதன் முதலாகக் கணினியைத் திறந்ததும் (On செய்ததும்) BIOS தன் வேலையைத் தொடங்கும்.  BIOS   என்றால் Basic Input Output System. தமிழில் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று சொல்லலாம்.


கணினியின் தாய்ப்பலகையில் அனைத்துச் சாதனங்களும் ஓர் ஆரம்ப நிலைக்கு கொண்டு வரும் முறைக்குத் தான் ‘அடிப்படை உள்ளீடு வெளியீட்டு முறைமை’ என்று பெயர்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேனே. கணினி இன்னும் அதன் விண்டோஸ் இயங்குதளத்தின் உள்ளே நுழையவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு முன் தான் இந்த BIOS வேலைகள் நடக்கும். 
 
பையோஸ் அறிவிப்புகள்

கணினித் திரையில் ஆக முதன்முதலாக வெள்ளை எழுத்துகள் தெரியும். அவை தான் ’பையோஸ்’ அறிவிப்புகள். இந்த ’பையோஸ்’  முதலில் தாய்ப்பலகையைச் சோதனை செய்யும்.

தாய்ப்பலகையின் இயக்க முறை சரியாக இருந்தால் அடுத்து RAM எனும் தற்காலிக நினைவகத்தைப் பரிசோதிக்கும். அடுத்து Hard Disk எனும் வன் தட்டைச் சோதிக்கும்.

அடுத்து Graphic Card எனும் வரைகலை அட்டையைச் சோதிக்கும. இந்தக் கட்டத்தில் தாய்ப்பலகையில் பொருத்தப் பட்டு இருக்கும் சாதனங்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.

ஏதாவது பிரச்னை என்றால் Error Messege என்று ஓர் எச்சரிக்கை திரையில் தெரியும். அப்புறம் அதோடு அதன் வேலையையும் நிறுத்திக் கொள்ளும். ஓர் அடி மேலே போகாது.

Master Boot Record

இவை அனைத்தும் சோதனை செய்யப் படுவதை POST  அல்லது Power On Self Test என்று சொல்வார்கள். சரி. எல்லாம் ஓ.கே. என்றால் ’பையோஸ்’ நெகிழ்தட்டின் (Floppy Disk) பக்கம் தன் கடைக்கண் பார்வையைத் திருப்பும்.

நெகிழ்தட்டில் DBR எனும் Dos Boot Record இருக்கிறதா என்று பார்க்கும். ’டிபிஆர்’ எனும் இயக்கப் பதிவுகள் நெகிழ்தட்டில் இல்லை என்றால் வன் தட்டிற்குப் போய் MBR எனும் Master Boot Record இருக்கிறதா என்று பார்க்கும்.

Master Boot Record என்றால் தலைமை இயக்கப் பதிவு. கணினியை இப்படித் தான் இயக்க வேண்டும் என்கிற பதிவு. அடுத்து இந்த MBR உடனே DBR ஐத் தேடும். DBR இல்லை என்றால் வேலைகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப் படும்.

DBR இருந்தால் உடனே IO.SYS எனும் தகவல் கோப்பு தற்காலிக நினைவகத்தில் ஏற்றம் செய்யப் படும்.

அடுத்ததாக இந்த IO.SYS கோப்பு,  CONFIG .SYS எனும் மற்றொரு கோப்பைப் பரிசீலிக்கிறது. எல்லாம் சரி என்றால், இந்த ‘கன்பிக்.சிஸ்’ கோப்பு MSDOS.SYS எனும் கோப்பை ஏற்றம் செய்கிறது. கடைசியாக மிக மிக முக்கியமான COMMAND. COM எனும் கோப்பு ஏற்றம் காண்கிறது.

AUTOEXEC.BAT 

 அதைத் தொடர்ந்து இறுதியாக AUTOEXEC.BAT எனும் கோப்பு கணினிக்குத் தேவையான இயக்கிகளை எல்லாம் பதிவு செய்து விண்டோஸ் இயங்குதளத்திற்குள் ஏற்றம் செய்கிறது. இயக்கி என்றால் Driver.

அப்புறம் தான் விண்டோஸ் இயங்குதளம் தன் வேலையை ஆரம்பிக்கும். விண்டோஸ் சின்னம் கணினித் திரையில் தெரியும்.

இத்தனை ‘பையோஸ்’ வேலைகளும் பத்து விநாடிகளில் செய்து முடிக்கப் படுகின்றன. என்ன அதிசயம் பாருங்கள்.

இனிமேல் கணினியைத் தட்டி விட்டதும் கணினியின் உள்ளே ‘பையோஸ்’ என்ன செய்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் லீலா விநோதங்களுக்கு மதிப்பு கொடுங்கள்.

கணினிக்கு மரியாதை செய்யுங்கள். கணினி எனும் சரஸ்வதி தேவியை ஆண்டவன் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தெய்வமாக நினைத்து கையெடுத்துக் கும்பிடுவோம்.

19 ஜூன் 2014

திருச்சி கணினிக் கதை

(மலேசிய நண்பன் 27.03.2011 ஞாயிறு பதிப்பில் வெளியிடப் பட்டது)

சரவணன் குமார், சுங்கை பூலோ, சிலாங்கூர்


கே: ஐயா, நான் தமிழ்நாடு திருச்சியில் இருந்து இங்கு வந்து கடந்த ஆறு ஆண்டுகளாக வேலை செய்கிறேன். அண்மையில் என் நண்பர் அவர் வேலை  செய்யும் இடத்தில் இருந்து ஒரு பழைய கணினியை என்னிடம் வந்து கொடுத்தார். அது சரியாக வேலை செய்யவில்லை. இருந்தாலும் நான் செலவு செய்து பழுது பார்த்தேன். நன்றாக வேலை செய்வதைப் பார்த்த அந்த நண்பர் இப்போது அந்தக் கணினியை வேண்டும் என்கிறார். கொடுக்க முடியாது என்றேன். மிரட்டிப் பார்க்கிறார். மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது ஐயா. என்ன செய்யலாம்?


ப: நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அந்த மாதிரியான மனிதர்களை நண்பர் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். மனித நேயங்களை மறந்து வாழும் மானிடப் பிண்டங்கள் எல்லாம் எப்படி ஐயா நண்பர்களாக முடியும். சொல்லுங்கள். அற்ப சகவாசம் பிராண சங்கடம் எனும் பழமொழி இருக்கிறதே அது உங்களுக்குத் தெரியாதா.

பழுது பார்க்க நீங்கள் செலவு செய்த காசை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணினியைத் திருப்பிக் கொடுக்கலாம். கவலைப் பட வேண்டாம். என்னிடம் பழைய கணினிகள் இரண்டு இருக்கின்றன. அவற்றில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். ஈப்போ வரும்போது பெற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலவு செய்த பணத்தைக் கேளுங்கள். அவர் கொடுக்க முடியாது என்றால் எனக்குத் தெரிவியுங்கள். சுங்கை பூலோவில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புக்கிட் அமான் மலேசியப் போலீஸ் தலைமையகத்தில் ஓர் ஆணையர். அவரிடம் சொல்லி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்வோம். கவலைப் பட வேண்டாம்.


நீங்கள் ஒரு தமிழர். நானும் ஒரு தமிழர். நீங்கள் ஒரு நம்பிக்கையுடன் அங்கே இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள். இங்குள்ள  தமிழர்கள் தான் உங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அதை விடுத்து உங்களை ஏமாற்றி பிழைப்பது என்பது ஈனத் தனமான செயல். அப்படிப் பட்ட மனிதர்கள் எல்லாம் வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எது உங்களை விட்டுப் போனாலும் கவலைப் படாதீர்கள். தன்னம்பிக்கை மட்டும் விட்டுப் போகாமல் பார்த்துக் கொளுங்கள். ஏன் என்றால் தன்னம்பிக்கை என்பதுதான் வாழ்க்கை. அதுதான் ஆண்டவரின் அடுத்த அவதாரம். 

18 ஜூன் 2014

சங்கேதச் சொல் மீட்பு

 மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

சுகுமாறன் sugu_1305@yahoo.com

கே: என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கான Password ஐ மறந்து விட்டேன். எப்படி மீட்பது?  உதவி செய்யுங்கள்.



ப: உதவி செய்வது இருக்கட்டும். Password என்பது வெறும் எட்டு எழுத்துகளைக் கொண்ட ஒரு சின்ன பொடிச் சொல். அதை எங்கேயாவது ஓர் இடத்தில் எழுதி வைத்திருக்க வேண்டியதுதானே. அதை மறந்து விடும் அளவிற்கு அப்படி என்ன ஐயா பெரிய வேலை. அப்படி என்ன ஐயா பெரிய மறதி.

இந்தக் காலத்தில் எதற்கு எடுத்தாலும் மறதி மறதி என்று சொல்லிச் சொல்லியே ரொம்ப பேர் மனைவி மக்களை மறந்து விட்டு அலைகிறார்கள். அந்த மாதிரியான மறதி யாருக்கும் வரக் கூடாது. இனிமேல் கவனமாக எங்கேயாவது எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சரியா.

 http://www.snapfiles.com/get/mpw.html எனும் இடத்தில் Mail Password Recovery எனும் நிரலி இருக்கிறது. அதைப் பயன் படுத்தி உங்களுடைய சங்கேதச் சொல்லை மீட்டுக் கொள்ளுங்கள். அது ஒரு சின்ன நிரலி. இன்னும் ஒரு விஷயம்.

உங்கள் கணினியில் இருந்து உங்கள் மின்னஞ்சல் சங்கேதச் சொல்லை மட்டும்தான் அந்த நிரலி எடுத்துக் கொடுக்கும். மற்றவர் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கலாம். என்று மட்டும் தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம்.

அதைத் தவிர http://www.download3k.com/Install-Mail-PassView.html எனும் இடத்திலும் ஒரு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். இந்த நிரலிகளைப் பயன் படுத்தி, அடுத்தவருடைய மின்னஞ்சல்களைப் படிக்க முயற்சி செய்ய வேண்டாம். அது ரொம்பவும் தப்பு.