09 பிப்ரவரி 2015

இணையம் மலேசியத் தமிழர் உருவாக்கிய சொல்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

குமாரி. விலாசினி, ஈப்போ ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி
கே: இணையம் எனும் அழகான தமிழ்ப் பெயரை, மலேசியத் தமிழர் ஒருவர் உருவாக்கியதாக என் ஆசிரியர் சொல்கிறார். உண்மையா?


ப: உண்மை. உங்கள் ஆசிரியர் மிகச் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. நம் நாட்டைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன். 


அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் திரு. ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

விண்டோஸ் 10


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

செலாயாங் சூரியா, கோலாலம்பூர்

கே: மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 9-ஐ அறிமுகம் செய்யாமல் ஏன் விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்கிறது. அதாவது, விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறதாம். எப்போது வருகிறது. என்ன விஷேசங்கள்? ஏன் இந்தக் குளறுபடி?


ப: பரவாயில்லையே. கணினி சம்பந்தமாக ‘லேட்டஸ்டாக’ ரொம்பவும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். அதற்கு முன், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான செய்தி. விண்டோஸ் 7-ஐப் போல விண்டோஸ் 8 வெற்றி பெறவில்லை என்பதே அந்தச் செய்தி.  


விண்டோஸ் 7-இன் புதிய பயன்பாட்டுச் செயலிகள் (Applications), விண்டோஸ் முறைமையின் புதிய இயக்கம் (Windows System); பயன்பாட்டுச்செயலியின் மென்பொருட்களின் (Application Software) ஒத்திசைவு போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால், மக்கள் விண்டோஸ் 8-க்கு மாறிக் கொள்ளவதில், சற்று தயக்கம் காட்டி வந்தனர்.

ஓர் ஆள் இரண்டு ஆள் இல்லீங்க. பல மில்லியன் கணக்கான மக்கள், விண்டோஸ் 8-க்குப் புலம் பெயரவில்லை. என்னையும் சேர்த்து. ஆக, ஒரு கட்டத்தில், விண்டோஸ் எக்ஸ்.பி.-யை விட்டு வெளியேற நினைத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 முறைமைக்கே தங்களை மாற்றிக் கொண்டு வந்தனர். விண்டோஸ் 8-க்குப் போகவே இல்லை.




ஆரம்பத்தில் விண்டோஸ் 8-இல் சில பல பிரச்சினைகள். அவற்றை நிவர்த்தி செய்வதற்காக, அவசரம் அவசரமாக விண்டோஸ் 8.1 வெளியாக்கினார்கள். அதில் எளிமையான பல புதிய புதிய வசதிகள். இந்த நிலையில் விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 8.2-ஐ எப்படியாவது சரிகட்ட வேண்டும் என்று, விண்டோஸ் 9-ஐ உருவாக்கினார்கள். விண்டோஸ் 9-ஐ உருவாக்கத் தொடங்கியதும், அதைப் பற்றி பத்திரிக்கைகளில் பலப்பல செய்திகள். பலப்பல வதந்திகளும் ஒட்டி வந்தன.

பொதுமக்களும் நிறுவனங்களும் பார்த்தார்கள். அதுதான் விண்டோஸ் 9 வருகிறதே. அப்புறம் ஏன் விண்டோஸ் 8-ஐ வாங்க வேண்டும் என்று, விண்டோஸ் 8-ஐ வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திப் போட்டார்கள். தவிர, விண்டோஸ் 7-க்கு, 2020 ஆம் ஆண்டு வரை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு (சப்போர்ட்) வேறு கிடைக்கிறது. அப்புறம் என்ன அவசரம். ஒரு நல்ல நாள் பார்த்து, விண்டோஸ் 9-க்கு புதுமனை புகுவிழா போகலாம் எனப் பல நிறுவனங்கள் முடிவெடுத்தன. 




அதற்கும் காரணங்கள் உள்ளன. கணினியின் பிரதான இயக்க முறைமைகளை (Operating System) அடிக்கடி மாற்றிக் கொண்டு இருந்தால், ஆயிரக் கணக்கில் ஊழியர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வந்தது.

ஆகவே தான், அந்த நிறுவனங்கள் பொறுமையாக அமைதியாக இருந்தன. விண்டோஸ் 8-க்குப் போகாமல், விண்டோஸ் 9-க்குப் போகத் தயாராக இருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் விண்டோஸ் 9 வராது. விண்டோஸ் 10 தான் வரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனமே அறிவித்தது.

சரி. விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 ஏன் வருகிறது என்கிற உங்கள் கேள்விக்கு வருகிறேன். 



9 என்கிற எண் இருக்கிறதே, அது ஜப்பானியர்களுக்குப் பிடிக்காத ஓர் எண். ஏன் என்று என்னைக் கேட்க வேண்டாம். இருந்தாலும் பாருங்கள், இலக்கமுறையில் (Digital) இவர்கள்தான் ஒரு புரட்சியை உருவாக்கியவர்கள்.

கணினித் தொழில்நுட்பத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர்கள். அவர்களிடமும் சில ஐதீகங்கள், சில அலர்ஜிகள் இருந்தன. இந்தப் பக்கம் பார்த்தால் நம்ப தமிழர்கள் மட்டும் என்னவாம். சாதி, சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் என்று ஒரு பெரிய ’லிஸ்ட்’டையே போட்டு வைத்துவில்லையா. அந்த மாதிரிதான் அங்கேயும்.

ஜப்பானில் 99 புள்ளி 182 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் மனசை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத்தான், விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறது. இந்த விளக்கம் போதுங்களா.

25 ஜனவரி 2015

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.

பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்.

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகந்நாதன்