09 பிப்ரவரி 2015

கணினியை யார் பயன்படுத்தினார்கள்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

சரவணன் குமார், தானா ராத்தா, கேமரன் மலை

கே: சார், நான் புதிதாக ஒரு ’டெல்’ மேசை கணினியை வாங்கி இருக்கிறேன். நான் வீட்டில் இல்லாத போது, யாரோ என் கணினியைப் பயன்படுத்துகிறார்கள் என தெரிகிறது. நான் இல்லாத போது, என் கணினியைப் பயன்படுத்தி இருக்கிறார்களா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?


ப: மிகவும் சுலபம். PC Usage Viewer எனும் ஒரு நிரலி இருக்கிறது. இந்த நிரலி, மிகத் துல்லிதமாக, நம் கணினி பயன்படுத்தப்பட்ட நேரத்தை விலாவாரியாகப் பிரித்து தொகுத்துக் கொடுக்கிறது. இது ஓர் இலவச நிரலி. நான் சோதனை செய்து பார்த்து விட்டேன். பிரச்சினை இல்லை.

http://www.pointstone.com/products/pcusageviewer எனும் இணைய தளத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்து பாருங்கள். பிரச்சினை என்றால் என்னுடைய +6 012-9767462 எண்களுக்கு அழையுங்கள்.


இணையம் மலேசியத் தமிழர் உருவாக்கிய சொல்


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

குமாரி. விலாசினி, ஈப்போ ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரி
கே: இணையம் எனும் அழகான தமிழ்ப் பெயரை, மலேசியத் தமிழர் ஒருவர் உருவாக்கியதாக என் ஆசிரியர் சொல்கிறார். உண்மையா?


ப: உண்மை. உங்கள் ஆசிரியர் மிகச் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். இணையம் எனும் சொல் இலக்கியத்தில் இருந்து கிடைத்த சொல் என்றும் சிலர் சொல்வது உண்டு. அது தப்பு. இந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்; பயன்படுத்தியவர் யார் தெரியுமா. நம் நாட்டைச் சேர்ந்த ஆதி. இராஜக்குமாரன். 


அவர்தான் அந்தச் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர். தன்னுடைய வார இதழில் பயன்படுத்தியவர். பின்னர் காலத்தில், இந்தச் சொல் தமிழ் டாட் நெட் எனும் இணையத் தளத்தில் பயன்படுத்தப் பட்டது. அதன் மூலமாக உலகப் பிரபலமானது.

இப்போது உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் இணையம் எனும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் உலகில் திரு. ஆதி. இராஜக்குமாரன், கணினிக் கலைச் சொற்களின் முன்னோடி. அவருக்கு நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

விண்டோஸ் 10


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

செலாயாங் சூரியா, கோலாலம்பூர்

கே: மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 9-ஐ அறிமுகம் செய்யாமல் ஏன் விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்கிறது. அதாவது, விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறதாம். எப்போது வருகிறது. என்ன விஷேசங்கள்? ஏன் இந்தக் குளறுபடி?


ப: பரவாயில்லையே. கணினி சம்பந்தமாக ‘லேட்டஸ்டாக’ ரொம்பவும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். அதற்கு முன், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான செய்தி. விண்டோஸ் 7-ஐப் போல விண்டோஸ் 8 வெற்றி பெறவில்லை என்பதே அந்தச் செய்தி.  


விண்டோஸ் 7-இன் புதிய பயன்பாட்டுச் செயலிகள் (Applications), விண்டோஸ் முறைமையின் புதிய இயக்கம் (Windows System); பயன்பாட்டுச்செயலியின் மென்பொருட்களின் (Application Software) ஒத்திசைவு போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால், மக்கள் விண்டோஸ் 8-க்கு மாறிக் கொள்ளவதில், சற்று தயக்கம் காட்டி வந்தனர்.

ஓர் ஆள் இரண்டு ஆள் இல்லீங்க. பல மில்லியன் கணக்கான மக்கள், விண்டோஸ் 8-க்குப் புலம் பெயரவில்லை. என்னையும் சேர்த்து. ஆக, ஒரு கட்டத்தில், விண்டோஸ் எக்ஸ்.பி.-யை விட்டு வெளியேற நினைத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 முறைமைக்கே தங்களை மாற்றிக் கொண்டு வந்தனர். விண்டோஸ் 8-க்குப் போகவே இல்லை.




ஆரம்பத்தில் விண்டோஸ் 8-இல் சில பல பிரச்சினைகள். அவற்றை நிவர்த்தி செய்வதற்காக, அவசரம் அவசரமாக விண்டோஸ் 8.1 வெளியாக்கினார்கள். அதில் எளிமையான பல புதிய புதிய வசதிகள். இந்த நிலையில் விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 8.2-ஐ எப்படியாவது சரிகட்ட வேண்டும் என்று, விண்டோஸ் 9-ஐ உருவாக்கினார்கள். விண்டோஸ் 9-ஐ உருவாக்கத் தொடங்கியதும், அதைப் பற்றி பத்திரிக்கைகளில் பலப்பல செய்திகள். பலப்பல வதந்திகளும் ஒட்டி வந்தன.

பொதுமக்களும் நிறுவனங்களும் பார்த்தார்கள். அதுதான் விண்டோஸ் 9 வருகிறதே. அப்புறம் ஏன் விண்டோஸ் 8-ஐ வாங்க வேண்டும் என்று, விண்டோஸ் 8-ஐ வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திப் போட்டார்கள். தவிர, விண்டோஸ் 7-க்கு, 2020 ஆம் ஆண்டு வரை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு (சப்போர்ட்) வேறு கிடைக்கிறது. அப்புறம் என்ன அவசரம். ஒரு நல்ல நாள் பார்த்து, விண்டோஸ் 9-க்கு புதுமனை புகுவிழா போகலாம் எனப் பல நிறுவனங்கள் முடிவெடுத்தன. 




அதற்கும் காரணங்கள் உள்ளன. கணினியின் பிரதான இயக்க முறைமைகளை (Operating System) அடிக்கடி மாற்றிக் கொண்டு இருந்தால், ஆயிரக் கணக்கில் ஊழியர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வந்தது.

ஆகவே தான், அந்த நிறுவனங்கள் பொறுமையாக அமைதியாக இருந்தன. விண்டோஸ் 8-க்குப் போகாமல், விண்டோஸ் 9-க்குப் போகத் தயாராக இருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் விண்டோஸ் 9 வராது. விண்டோஸ் 10 தான் வரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனமே அறிவித்தது.

சரி. விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 ஏன் வருகிறது என்கிற உங்கள் கேள்விக்கு வருகிறேன். 



9 என்கிற எண் இருக்கிறதே, அது ஜப்பானியர்களுக்குப் பிடிக்காத ஓர் எண். ஏன் என்று என்னைக் கேட்க வேண்டாம். இருந்தாலும் பாருங்கள், இலக்கமுறையில் (Digital) இவர்கள்தான் ஒரு புரட்சியை உருவாக்கியவர்கள்.

கணினித் தொழில்நுட்பத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர்கள். அவர்களிடமும் சில ஐதீகங்கள், சில அலர்ஜிகள் இருந்தன. இந்தப் பக்கம் பார்த்தால் நம்ப தமிழர்கள் மட்டும் என்னவாம். சாதி, சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் என்று ஒரு பெரிய ’லிஸ்ட்’டையே போட்டு வைத்துவில்லையா. அந்த மாதிரிதான் அங்கேயும்.

ஜப்பானில் 99 புள்ளி 182 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் மனசை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத்தான், விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறது. இந்த விளக்கம் போதுங்களா.