06 அக்டோபர் 2015

விடியல் காலையில்


கடலில் ஒரு கப்பல் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர். அதில் ஒருவன் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குள் வந்து சேர்ந்தான்.

அந்த மனிதன். தாவரங்களைச் சாப்பிடான். தட்டுத் தடுமாறி ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டான்.

சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினான். சமையல் செய்தான்.

கடவுளுக்குத் தன் மேல் கொஞ்சமாவது கருணை இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ஒருநாள் காய் கனிகள் பறிக்கச் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய குடிசை பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

கடவுளே! உனக்கு கருணையே இல்லையா... அல்லது நீயே இல்லையா என்று கதறினான்.

சிறிது நேரத்தில் அவனைத் தேடி ஒரு கப்பல் வந்தது. அவனுக்கு ஆச்சரியம்!

நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான்.

தீவில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்து யாரோ அவசர அபய அழைப்பு அனுப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டோம் என்றார் கப்பலின் தலைவர்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை என்ன தெரியுமா...

சோதனைகள் என்பது பெரும்பாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே வருகின்றன.

அப்படி நினைக்க வேண்டும். அப்படி நினைத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று விடியல் காலையில் தூக்கம் வராமல் ஒரு சிலர் அலைமோதி இருக்கலாம்.

அவர்களுக்கும் இந்தக் கதை போய்ச் சேர்கின்றது. அந்த அவர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புத்த காயா



புத்த காயா என்பது புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்து உள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் தலை நகரமான பாட்னாவில் இருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இந்த இடத்தை போதி மண்டா என்று குறிப்பிடுகின்றன.

2002 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது.

கி.மு 530 ஆம் ஆண்டில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த புத்தர், இந்தியாவில் உள்ள காயா என்னும் நகருக்கு அருகில் உள்ள பல்கு ஆற்றங் கரைக்கு வந்தார்.

அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர், சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்றார்.

இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காக மகாபோதி கோயில் (புத்த காயா) அமைக்கப் பட்டது.

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவி மடத்தையும் அமைத்தார்.

குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், செங்கற்களால் கட்டப்பட்டது. மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடமும் நிறுவப் பட்டது.

இந்தியாவுக்குச் சென்றால் இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்று வாருங்கள். மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும்.

2006ஆம் ஆண்டு அடியேன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்து இருக்கிறேன்.

19 செப்டம்பர் 2015

இசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2

மலேசியா தினக்குரல் 16.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

[பாகம்: 2]


இசைப்பிரியா எனும் ஒரு மௌனராகத்தின் கதை தொடர்கிறது. நேற்றைய கட்டுரையில் உள்ள தகவல்களைச் சற்றே மீள்பார்வை செய்வோம். இசைப்பிரியாவிற்குச் சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். 

ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் கூடுதலான ஆர்வம். வயதுக்கு மீறிய தயாள குணம். துன்பப் படுபவர்களைக் கண்டால் ஓடிச் சென்று உதவிகள் செய்யும் இரக்கச் சிந்தனை. 




இசைப்பிரியா 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். குடும்பத்தில் நான்காவது மகள். சோபனா என்று பெயர். ஐந்து ஆண்டுகள் மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் தொடக்கக் கல்வி. பின்னர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்பு.

ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகள்

அவருடைய இதயத்தில் லேசான சின்ன தூவரம். ஆனால், பெரிய பிரச்சினை வராது என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றனர். போர்ச் சூழ்நிலை காரணமாக, 1996-இல் இடம் பெயர்ந்து மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். கல்லூரிப் படிப்பிற்கு பாதிலேயே முற்றுப்புள்ளி. 

1995-ஆம் ஆண்டு மூன்றாம் கட்டப் போர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் வன்னியை நோக்கி ஓடினார்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. 



வன்னி என்பது இலங்கையின் வட பகுதியில் இருக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு. தமிழர்களின் பாரம்பரிய தாயக மண். அதன் பரப்பளவு 7,650 சதுரக் கிலோ மீட்டர். மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஆறு நாடாளுமன்ற இடங்கள் உள்ளன.
 

ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, அவர்களுக்காகப் போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதல், இசைப்பிரியாவிற்கும் ஏற்பட்டது. அந்தத் தாக்கத்தில் 1998-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார்.




பலவீனமான இதயம் இருந்ததால் அவரைப் புலிகளின் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் இணைத்துக் கொண்டனர். ஈழப் போராட்டத்தில் தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாக்கிக் கொண்டார்.

ஈழத்துப் பெண்மையில் ஒட்டிக் கொண்ட நளினம்

ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் பெண்மையும் ஒட்டிக் கொண்டு நளினம் பேசின. மென்மையும் இரக்கமும் குளிர்ந்த பார்வையும் மேலும் அழகு சேர்த்தன. தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசித்து வந்தார். நல்ல அழுத்தமான குரல். 




தமிழீழ விடுதலை அமைப்பின் ஊடகத் துறையை நிதர்சனப் பிரிவு என்று அழைப்பார்கள். அதில் ஒன்று ஒளிவீச்சு தொகுப்பு. மலேசியத் தொலைக்காட்சியில் வசந்தம் நிகழ்ச்சி ஒளியேறுகிறதே, அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி தான். ஆனால், நாட்டுச் சூழ்நிலைகளில் வேறுபட்டது. அந்த நிகழ்ச்சியை இசைப்பிரியாதான் தமிழீழத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இசைப்பிரியா என்கிற பெயரைச் சொன்னதும் ‘துயிலறைக் காவியம்’ எனும் நிகழ்ச்சி நினைவிற்கும் வருகிறது. இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. மிக இயல்பான எதார்த்தமான நிகழ்ச்சி. மாவீரர்களைப் பற்றியது. ஈழக் கனவுக்காகப் போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பதிவாகவும் இடம் பெற்று வந்தது.

வீரச்சாவு அடைந்த ஒருவரைப் பற்றி அவருடைய பெற்றோர், நண்பர்கள், சக போராளிகள், தளபதிகள், தலைவர் என அனைவரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வார்கள். 



ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித் தன்மையுடன் ஒலிக்கும். இசைப்பிரியாற்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி என்றுகூட சொல்லலாம்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல அரிய சேவைகளைச் செய்து இருக்கிறார். வெறும் குரல் கொடுப்பது மட்டும் இல்லை. அதையும் தாண்டிய நிலையில், காட்சிகளைத் தேடிப் பெறுவது, கேமராக்களை கையாள்வது என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து இருக்கிறார். அவருடைய வேலைகள் அறிவுபூர்வமாகவும் துல்லிதமாகவும் சுத்தமாகவும் இருந்தன.

‘சாலை வழியே’ நேர்காணல் நிகழ்ச்சி

இவரிடம் நல்ல நடனத் திறமையும் இருந்து இருக்கிறது. கலைஞர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து இருக்கிறார். அவர் ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தையும் தயாரித்து ஈழத்து மக்களுக்கு வழங்கி இருக்கிறார். 





இசைப்பிரியா, பெரும்பாலான ஈழத்துப் பெண்களின் முகபாவத்தைக் கொண்டவர். ஆகவே, அவருடைய நடிப்புக்களிலும் அந்த ஈழத்துத் தன்மைகள் நன்றாகவே தெரிந்தன. அந்த வகையில் இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

ஈரத்தி படத்தில் இசைப்பிரியா முழுக்க முழுக்க ஓர் ஈழத்துச் சாமான்ய பெண்ணாகவே வலம் வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற இயல்பான குணங்களை மிக எதார்த்தமாகப் பிரதிபலிப்புச் செய்கிறார். அந்தப் படத்தில் ஒரு பெண் போராளி இவருடைய சகோதரியாக வருகிறார். அவருடன் நடைபெறும் உரையாடல்கள் என்றென்றும் மனதை விட்டு நீங்காதவை. 





அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்புச் செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அதோடு இசைப்பிரியா போன்றவர்களின் நடிப்பும் அந்தப் படத்திற்கு வலிமை சேர்த்தன. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இருந்தாலும், அந்தப் படத்தைத் தயாரித்த, அந்தப் பெண் போராளிகள் இப்போது உயிருடன் இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும், அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பது மனதுக்குள் தடுமாறும் ஒரு பெரிய வேண்டுதல்.





இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம் ஆகும். அந்தப் படத்தில் லட்சுமி என்கிற பாத்திரம் வருகிறது. அந்தப் பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

லட்சுமியாக இசைப்பிரியா நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். இருபது நிமிட நேர குறும்படம். சின்ன வயது இசைப்பிரியா சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=cQoUygI49qo

எனும் முகவரியில் நீங்களும் போய்ப் பார்க்கலாம். அல்லது யூடியூப்பில் ’வேலி இசைப்பிரியா’ என்று தட்டச்சு செய்யுங்கள். படத்தைப் பார்த்த பிறகு, இப்படி ஒரு நல்ல சிறந்த நடிகையை இழந்து விட்டோமே என்று என் மனம் நீண்ட நேரம் கனத்துப் போனது.

தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும்

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில், இசைப்பிரியா சரண் அடைந்த நிகழ்ச்சி இருக்கிறதே, அதைப் பார்ப்பவர்களின் மனங்கள் நிச்சயமாகப் பதைபதைக்கும். நானும் பார்த்தேன். http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் இருக்கிறது. அவர் அசிங்கப் படுத்தப் படுவதைப் படத்தில் காட்டவில்லை. ஆனால், அவருடைய நிர்வாண கோலம் ஒரு கட்டத்தில் காட்டப் படுகிறது. 





அந்த வீடியோ படங்கள் கிடைத்த போது, தமிழகத் தொலைக்காட்சிகள், கொச்சையாகத் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி இருக்கின்றன. பூவினும் மென்மையான ஒரு பெண்மையின் காட்சிகளைக் கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சிகளாக ஆக்குவது பெரிய பாவம் இல்லையா. அவளை நேசிக்கின்ற எந்த ஒரு தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும் விரும்பவே விரும்பாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் அல்ல. உயிருடன் சிறப்பாக நன்றாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்துக்காக உயிர் நீத்த ஒரு தமிழ்ப் பெண். நம் குடும்பத்தில் வாழ்ந்த ஒருத்தியாக மறைந்து போனாள்.





ஆடை இல்லாத பெண்களுடைய படங்களை அல்லது காட்சிகளை அப்படியே செய்திப் படமாகப் போடுவதை எல்லா ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். இசைப்பிரியாவை மட்டும் நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்கும் சேர்த்துச் சொல்றேன்.

கொடுமையிலும் கொடுமையான வன்முறைக் கொடுமைகள்

இருந்தாலும், இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறதே என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுதல். நம்முடைய இலக்கு. அதனால்தான் அந்தப் படக் காட்சிகள் எங்கே இருக்கின்றன எனும் இடங்களைச் சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் மனநிலையைப் பொருத்தது. 





அவரைக் கைது செய்து கொண்டு போகும் போது நன்றாகத் தான் கொண்டு போய் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் மனித நேயத்துடன் நடந்து கொண்டதாகக் காட்டப் படுகிறது. ஆனால், அதன் பிறகு அவருடைய உயிரற்ற உடல் காட்டப் படுகிறது. அவரை இராணுவம் மிகவும் கொடுமையாகச் சித்திரவதை செய்து இருக்கிறது. அவரை மட்டும் அல்ல. கூட இருந்த மற்ற பெண்கள் மீதும் வன்முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமையான பாலியல் கொடுமைகள்.

ஒரு தாயாக அவர் கருவுற்று இருந்த நேரம். ஒரு குழந்தையைச் சுமந்து நின்ற நேரம். அந்தச் சமயத்தில்தான் அவர் இப்படி வன்முறையால் சிதைத்து அநியாயமாகக் கொல்லப் பட்டு இருக்கிறார். இசைப்பிரியாவுடன் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையையும் சேர்த்து அந்தப் பாவிகள் கொன்று இருக்கிறார்கள்.

இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படம்

2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, சிங்கள இராணுவத்திடம் இசைப்பிரியா சரண் அடைந்தார். அப்போதைய புகைப்படங்களைப் பாருங்கள். அந்தப் படங்கள் இணையத்தில் கிடைக்கும். அதன் முகவரி: http://www.tamilkingdom.org/2014/05/blog-post_73.html. இசைப்பிரியாவின் மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு படம் உள்ளது.  இன்னொரு படத்தில், மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடம். நீண்ட நேரம் உடுப்பு இல்லாமல் நிர்வாணமாக உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.





பல்லாயிரம் ஈழத்துப் பெண்களுக்கு நடந்த கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்து இருக்கிறது.

அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மறுபடியும் வரவேண்டி இருக்கிறது. அவரின் மற்றொரு நிகழ்ச்சி ‘துயிலறைக் காவியம்’. போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவாக இடம் பெற்று வந்தது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித்துவமாக ஒலித்தது. அவருக்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது.

 
‘இராஜகுமாரியின் கனவு’

சாலைகளில் நடந்து போகும் ஆண்கள், சந்திச் சதுக்கங்களில் கூடி நிற்கும் பெண்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள். இவர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து வந்தார். கணி தொழில்நுட்பத்தில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்ற இவர், ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தைச் சொந்தமாகவே தயாரித்து இருக்கிறார். அதில் கணினி வரைகலை நவீனங்கள் சேர்க்கப் பட்டன. தவிர, ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படத்திலும் ‘வேலி’ என்ற ஒரு குறும் படத்திலும் நடித்து இருக்கிறார். 




இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம். லட்சுமி என்கிற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை கண்முன் காட்டுகின்றன. ஈழ மக்களின் செல்வாக்கு, புகழ்ப் பெறுமதிகளைப் பெற்ற ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இசைப்பிரியா பவனி வந்தவர்.

இசைப்பிரியா இறப்பின் பின்னணியில் இருந்தவர்கள்

அதற்கு காரணம் இருக்கிறது. இசைப்பிரியாவின் முகம், குரல், நடிப்பு போன்றவை தனித்து நின்றன. ஆக, அவரை உலகத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்து இருந்தார்கள். இருந்தாலும் இசைப்பிரியாவைக் கைது செய்த போது சிங்கள ராணுவத்தில் பலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இசைப்பிரியா நல்ல ஓர் இலட்சணமான அழகான பெண் என்று மட்டும் அந்த வெறியர்களுக்கு அப்போது தெரிந்து இருக்கிறது. அதற்கு வேறு காரணமும் இருந்தது.

அடுத்து, இசைப்பிரியாவைச் சுட்டுக் கொல்வதற்குப் பின்னணியாக இருந்தவர்கள் யார் தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நம் தமிழர்கள்தான். அவர்கள் தான் கருணாவின் ஆட்கள். இதைப் பற்றிய தகவல்களை நாளைய கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)  





ஈழத் தொலைக்காட்சியிலே – உன்
இனிமுகம் பார்த்து வந்தோம்..!

தேன் சிந்ததும் நின் குரலால் – நீ
தேவதையும் ஆகி நின்றாய்..!

தாய் மண்ணின் துயர் துடைக்க – நீ
துப்பாக்கியினை ஏந்தி வந்தாய்..!

தாய் நாடே போற்றுகின்ற – நீ
தவத் தாயும் ஆகி விட்டாய்..!







இக்கட்டுரையின் இதர பகுதிகள்

இசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1




18 செப்டம்பர் 2015

இசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1

மலேசியா புதிய பார்வை 15.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

[பாகம்: 1]


சத்தியம் செத்துச் செதுக்கிய சமாதியில், ஒரு பெண்மை மௌனராகம் பாடுகின்றது. அங்கே அழகின் ஆராதனைகள் சமைந்து போய் சிலிர்க்கின்றன. அந்தச் சிலிர்ப்புகளில், கிழிந்து போன மனித உணர்வுகளின் முகாரி ராகங்களும் சன்னமாய்க் கேட்கின்றன.

அதையும் தாண்டிய நிலையில், அங்கே ஆழ்கடலைக் கடந்து போகும் மரண ஓலங்கள். எண்திசைகளைத் தாண்டிச் சிதறும் கண்ணீர்க் கதறல்கள். யாழிய காடுகளை நடுங்க வைக்கும் வன்முறை ஓலங்கள்.


ராகம் தாளம் சுருதி சந்தம் எதுவுமே தேவை இல்லாமல், நச்சென்று பதிந்து போகும் அவலங்களின் ஆர்ப்பரிப்புகள். அதைப் பார்த்து நெஞ்சம் வலிக்கின்றது. உடலும் கொதிக்கின்றது.

அந்த அலங்கோலத்தில், இசைப்பிரியா என்கிற ஒரு ஜீவனை நினைத்துப் பார்க்கின்றேன். அந்த நினைப்பில், மனதில் தேங்கி நிற்பதை எல்லாம் கொட்டித் தீர்க்கின்றேன். சிங்களச் சகடைகளால் நாசம் செய்யப் பட்ட ஒரு பெண்மையின் சரிதை வருகிறது. படியுங்கள்.

அவளுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவளுடன் பயணித்த ஆயிரம் ஆயிரம் ஆன்மாக்களும் ஒன்று சேரட்டும். வேண்டிக் கொள்வோம்.

எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கடையினமாகிப் போனவள்

உலகத் தமிழர்கள் பறிகொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் இசைப்பிரியா. அழுது புரண்டாலும் இனி அவள் திரும்பி வர மாட்டாள். சொர்க்கத்தின் வரப்பு வாசல்களைத் தாண்டி மீளவும் மாட்டாள். அவளைப் பற்றிய சின்னச் சுருக்கம்.


இசைப்பிரியா என்கிற அந்தப் பெண்ண், விடுதலைப் புலிகளின் வியூகங்களை, தொலைக்காட்சியில் செய்திகளாய் வாசித்துக் காட்டியவர். ஈழத் தமிழர்களின் உரிமைகளை, கவிதைகளாய் வார்த்துக் காட்டியவர். புலம்பெயர் மக்களின் போர்க் கொடுமைகளை வரைந்து காட்டியவர்.

தமிழர்களின் துயரங்களைத் துகில் உரித்துக் காட்டிய அந்தச் சின்னப் பெண்ணை, ஒரு காவடிச் சிந்து என்றுகூட சொல்லலாம். என்ன செய்வது. எதிர்காலச் சொப்பனங்களைச் சுமந்து கொண்டே கடையினமாகிப் போனது அந்த ஊடகச் சிந்து.

நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானம்

தமிழீழ இனவழிப்புக்கு ஓர் ஆதாரமாக இசைப்பிரியாவின் காணொளி இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி, இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை ஒளிபரப்பு செய்து உள்ளது. மனதைக் கனக்கச் செய்யும் காட்சிகள். அந்தக் காணொளியை யூடியூப்பில் உள்ளது.
https://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் போய்ப் பார்க்கலாம்.


சேறு நிரம்பிய ஒரு வயல் வெளி. அதில் வீழ்ந்து கிடக்கிறார் இசைப்பிரியா. அவரைப் பத்துப் பன்னிரண்டு சிங்கள இராணுவத்தினர் வளைத்துப் பிடிக்கின்றனர். அவரைப் பிரபாகரனின் மகள் என்றுதான் முதலில் அந்த வெறியர்கள் நினைத்தார்கள்.

போர்த்திக் கொள்ள ஒரு வெள்ளைத் துண்டைக் கொடுக்கிறார்கள். குடிக்கக் கொஞ்சம் தண்ணீரையும் கொடுக்கிறார்கள். மனித நேயத்துடன் ஆசுவாசப் படுத்துகிறார்கள். இசைப்பிரியா தப்பிக்க முயற்சி செய்யவில்லை. செய்தாலும் நடக்காது.

இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம்

''பிரபாகரனின் மகள்'' என்று ஓர் இராணுவ வீரன் சொல்கிறான். ''அது நான் இல்லை'' என்கிறார் இசைப்பிரியா. வெறும் மூன்றே மூன்று வார்த்தைகள்தான். அதைச் சொல்லும் போது இசைப்பிரியாவின் குரலில் சொல்ல முடியாத சோகம். பார்ப்பவரின் மனதை கவ்விக் கொள்கின்றன.


ஒரு மாபெரும் வீரப் போராட்டம் சரிந்து போவதையும்... எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க வேண்டிய அவமானத்தையும்... கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக் கொண்ட ஓர் அச்சத்தையும்... துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்... அந்தக் குரலில் உணர முடிகின்றது. அங்கே இசைப்பிரியாவின் குரல் மட்டும் கேட்கவில்லை. பின்னணியில் குண்டுச் சத்தங்களும் இடைவிடாமல் கேட்கின்றன.

அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்த அழகு ஜீவன்

கால்களை மடக்கிச் சகதிக்குள் அவள் உட்கார்ந்து இருக்கும் அந்த அனாதையக் கோலம்; மேலாடை இல்லாத அவளைத் தொட்டு, சிங்களச் சாக்கடைகள் தூக்கும் அந்த அதீதக் கோலம்; அச்சத்தாலும் வெட்கத்தாலும் அவள் துவண்டு துடிக்கும் அந்தப் பாவமான கோலம்; அவளை இழுத்துச் செல்லும் போது, அவளுடைய கால்கள் பின்னிப் பின்னித் தடுமாறும் கோலம்; அதையும் தாண்டி, ”ஐயோ..அது நானில்லை..!” எனும் உயிரைப் பிழியும் அந்த அவல ஓலம்… வேண்டாங்க. மனசு ரொம்பவும் வலிக்கிறது.


தான் ஓர் ஊடகவியலாளர் என்று இசைப்பிரியா சொல்லிப் பார்த்தார். எடுபடவில்லை. அப்புறம் நடந்தது வேறு கதை. முதலை வாயில் தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்ட கதையாகிப் போனது. கடைசியில் காமக் கிறுக்கன்களின் அசிங்கமான ஈரத்தில் நனைந்து மறைந்தும் போனார்.

அவர் பிரபாகரனின் மகள் அல்ல என்று தெரிந்த பின்னர், சிதைத்துச் சீரழிக்கப் பட்டார். யாழ் மண்ணில் ஒரு வரலாற்றுக் கொடுமை அங்கே அரங்கேற்றம் கண்டது. மண்ணுடன் மண்ணாகிப் போன ஓர் அழகு ஜீவனின் கதையும் தொடர்கிறது. மனித நேயம் வற்றிப் போன ஒரு கதை. படியுங்கள்.

 இசைப்பிரியாவின் மரணத்தில் வலியின் உக்கிரம்

தமிழீழ விடுதலையில், ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் குழந்தைகளும் ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள். அந்த இழப்புகளினால் இதயம் வலிக்கிறது. துடிக்கிறது. ஆனால், இந்த இசைப்பிரியாவின் மரணத்தில், வலியின் உக்கிரம் தாங்க முடியவில்லை. இதயம் வெடித்தே போய் விடும் போல இருக்கிறது.


அவளின் இறப்பு ஒன்றும் புதிதாக நடந்த நிகழ்ச்சி அல்ல. ஆண்டுகள் பல கழிந்து விட்டன. இருந்தாலும், அரைகுறையாகப் போர்த்தப்பட்ட வெள்ளைத் துணியுடன், அரை நிர்வாண கோலத்தில் அவளைப் பார்க்கும் போது மனம் நொறுங்கிப் போகிறது. ஒரு மகளாகத் தான் அவளைப் பார்க்கிறேன்.

அவளுடைய இறப்பை அன்று பார்த்த போது, கண்களில் இருந்த எல்லாக் கண்ணீரும் வற்றிப் போனது. ஆனால், இப்போது மறுபடியும் பார்க்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சமும் அருவியாய் வழிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது.

 இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா

புலிகளின் தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு, மாலை ஏழு முதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே நீடிக்கும். இதில் இசைப்பிரியா ஒவ்வொரு நாளும்  செய்திகளை வாசித்தார். நல்ல கணீர் குரல். மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு. தெளிவான வழங்குமுறை.


இசைப்பிரியாவின் (Isai Priya) இயற்பெயர் சோபனா. 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் தர்மராஜா. தாயாரின் பெயர் வேதரஞ்சினி.

குடும்பத்தில் நான்காவது மகளாகப் பிறந்தவர். சிறு வயதில் இவரது இதயத்தில் ஒரு துளை உண்டு என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. இருந்தாலும் இவருக்கு உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். ஐந்தாம் வகுப்பு வரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றார்.

சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம்

சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். ஆனால் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் அதிக ஆர்வம். வயதுக்கும் மீறிய இரக்க குணம். யாராவது துன்பப் படுவதைப் பார்த்தால் ஓடோடிப் போய், உதவிகளைச் செய்து விட்டு வருவார்.

1995-ஆம் ஆண்டு. மூன்றாம் கட்டப் போர். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காலக் கட்டம். உயிரைக் காக்க ஊர்களையும் உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டு, கையில் கிடைத்ததோடு விழுந்து எழுந்து வன்னியை நோக்கி மக்கள் ஓடினார்கள்.

அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. ஒருவழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னியில் தஞ்சம் அடைந்தனர். வன்னிய மண்ணும் இவர்களை அழகாய் ஏற்றுக் கொண்டது.

இசைப்பிரியாவின் தோழி கீதைப்பிரியா

வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்குச் சென்றார். 1996-இல் இடம் மாறி மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டி வந்தது. அப்படியே ஈழப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் நன்றாகவே ஒட்டிக் கொண்டது.

மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியமும் கொண்டவர். இந்தக் கட்டத்தில் ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதலும் இவருக்கு ஏற்பட்டது.

புலிகளின் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தொலைக் காட்சியிலும் செய்திகளைத் தொகுத்து வாசித்தார். இவருக்கு கீதைப்பிரியா என்று ஒரு தோழி இருந்தார். செய்திகளைத் தொகுப்பதற்கு இவரும் உதவிகள் செய்து இருக்கிறார்.

கீதைப்பிரியா என்பவர் ஒரு அகதியின் டைரி எனும் புதினத்தை எழுதியவர். இன மொழி பற்றாளர். தெளிவான மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டவர். அமைதியாகப் பயணிக்கின்றார். வெளிச்சத்தை விரும்பாத பெண்ணியவாதி.

இசைப்பிரியாவிற்கு பயந்த சுபாவம்

இசைப்பிரியாவைப் பற்றி அவர் சொல்கிறார். ’இசைப்பிரியா கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர். அவருக்கு மென்மையான இதயம். லேசான நெஞ்சுவலியும் இருந்தது. அதனால் அவரைப் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் சேர்த்துக் கொண்டனர்.

ஊடகவியலாளர்கள் என்கிற முறையில் இருவருக்கும் இசைப்பிரியாவிற்கும் 2006-ஆம் ஆண்டில் முதல் சந்திப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அந்தத் தோழமை நீடித்து இருக்கிறது.

ஈழப் போரின் கடைசி வாரத்தில் தான் இசைப்பிரியாவைச் சந்தித்து இருக்கிறார். அதன் பிறகு அவர்கள் சந்திக்கவில்லை. அவருடைய இறப்புச் செய்திதான் கடைசியாகக் காற்றோடு கலந்து வந்தது.

இசைப்பிரியாவிற்காக ஒவ்வொரு நாளும் அழுகிறேன். நினைத்தாலே ஆழ்மனத்தில் அதீத வேதனைகள் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிச் சொல்லும் கீதைப்பிரியாவின் குரலும் தழுதழுக்கிறது.

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா

எல்லாச் சாமான்யப் பெண்களுக்கும் வருகின்ற ஆதங்கம் தான். அதிலும் சில காலம் ஒன்றாய்ப் பழகிவிட்ட நெஞ்சத்தின் நெருடல்கள் அவரிடம் உரசிச் செல்கின்றன. இசைப்பிரியா ஓர் ஊடகவியலாளர் என்பதை மட்டும் நாம் இங்கே மறுபடியும் நினைவு படுத்திக் கொள்வோம்.

நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவில், இசைப்பிரியா இலங்கை ராணுவத்தினரிடம் சரண் அடைய வேண்டிய நிலை. பின்னர் 2010-ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின. தமிழகத்தின் தொலைக்காட்சி நிறுவனங்களைச் சும்மா சொல்லக் கூடாது.

 போர்க் களத்தில் ஒரு பூ

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா என்கிற பழமொழி தெரியும் தானே. தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்படியே திருப்பித் திருப்பி போட்டு ஒளிபரப்பு செய்தன. ஒரு தமிழ்ப் பெண்ணை ரொம்பவுமே அசிங்கப் படுத்தி விட்டன. அப்படித் தான் எனக்குப் படுகிறது.

இசைப்பிரியாவின் வாழ்க்கை என்பது நெஞ்சை உருக்கும் கதை. ‘போர்க் களத்தில் ஒரு பூ’ எனும் பெயரில் ஒரு தமிழ்த் திரைப் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது..  ‘யுத்த பூமியல்லி ஒந்து ஹுவு’ என்று தெலுங்கு மொழியிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.  தவிர கன்னட மொழியிலும் தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

அவருடைய ஊடகச் சேவைக்கு மறுபடியும் வருவோம். 1998-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார்.

அவர் ஓர் இளம் அறிவிப்பாளர். வீடியோ சித்திரங்கள், போர்க்களச் செய்திகள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் போன்றவை அவருக்கு அன்றைய காலத்து ஒளிவீச்சுகளாக அமைந்தன. இசைப்பிரியாவின் பணி அதோடு மட்டும் நின்று விடவில்லை. அவர் ஊர் ஊராகச் சென்றார். அந்த ஊர்களில் போடப்படும் தெருக் கூத்துகளிலும் மேடை நாடகங்களிலும் அவருடைய பதிவுகளைத் தடம் பதித்தார்.

விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாகப் பரிணமித்தது. அந்தக் கட்டத்தில் தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராகவும் இசைப்பிரியா பணியாற்றினார். ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர், தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். ஆனால், ஆயுதங்களை மட்டும் பிடிக்கவில்லை.

இசைப்பிரியா ஒலியாகி ஒளியாகி இசையாகி காற்றாகிப் போனாய்
கனலும் நெருப்பைக் கட்டிக் கொண்ட அழகுச் சீதனமாய்
பறந்தும் போனாய்

இசைப்பிரியா என்கிற ஓர் அழகான வீணை நொறுங்கி விட்டது. இனிமேல் உலகமே ஒன்று சேர்ந்தாலும், அதன் தாளச் சுருதித் தந்திகளை ஒட்டிப் பார்க்க முடியாது. ஆறாத காயங்களின் அழியாத வடுக்களாக அவர் சிணுங்குகிறார். தமிழர்களின் நெஞ்சங்கள் அழுகின்றன. அவரைப் பற்றிய மேல் விவரங்களை அடுத்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். (தொடரும்)

06 ஆகஸ்ட் 2015

எம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள்

மலேசியா தினக்குரல் 05.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

 
கணவனை இழந்து கதறும் மலேசியச் சீனப் பெண்
உலக விண்வழி வாசலில் பலவிதமான மர்மங்கள். பலவிதமான மாயங்கள். மனித மனங்களைத் திகைக்க வைக்கும் மாயஜாலங்கள். அந்த வான்வெளியில் இதுவரை ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. சில நாட்கள் காணாமல் போனவை இருக்கின்றன.

சில மாதங்கள் காணாமல் போனவை இருக்கின்றன. சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட விமானங்கள் இருக்கின்றன. கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனவையும் இருக்கின்றன. அத்தனையும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியவை. மனித மனங்களில் அதிசய ராகங்களைப் பாடச் செய்தவை.



MH 370 Phillipines Children
பிலிப்பைன்ஸ் குழந்தைகள் பிரார்த்தனை

அவற்றுள் மாஸ் எம்.எச்.370 விமானம் மாயமாய் மறைந்து போனதுதான் விண்வழி மர்மங்களின் தலைவாசல். உலகத்தையே திகைக்க வைக்கும் ஒரு பயங்கரமான மர்ம நிகழ்ச்சி. இன்னும் நீடிக்கின்றது. இதுவரையிலும் இந்த மாதிரியாக, இப்படி ஒரு விமானம் மாயமாய் மறைந்து போனதும் கிடையாது. மாயஜாலம் காட்டியதும் கிடையாது. உலக மக்களைத் திணற வைத்ததும் கிடையாது.

ரியூனியன் தீவில் கரை ஒதுங்கிய சிதை பாகம்


இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ரியூனியன் தீவில் கரை ஒதுங்கி இருக்கும் ஒரு விமானத்தின் சிதைப் பாகம், காணாமல் போன எம்.எச். 370 விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அந்தச் சிதைப் பாகங்கள் எம்.எச். 370 விமானத்திற்கு உரியதா எனும் ஆய்வு பிரான்ஸ் தோலோஸ் நகரத்தில் மேற்கொள்ளப் படவிருக்கிறது.


MH 370 Malaysian Women Pray
மலேசியப் பெண்களின் பிரார்த்தனை

இருப்பினும் கண்டெடுக்கப்பட்ட உடைந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தின் உடைந்த பாகம் தான் என்பது உறுதியாகத் தெரிய வந்துள்ளது. எம்.எச். 370 விமானமும் அதே போயிங் 777 ரக விமானத்தைச் சேர்ந்ததாகும்.

கண்டு எடுக்கப்பட்ட போயிங் 777 ரக விமானச் சிதை பாகம், விமானத்தின் இறக்கைப் பகுதியில் உள்ளதாகும். அதை விமான தொங்குமடிப்பு (Flaperon) என்று அழைக்கிறார்கள். எம்.எச். 370 விமானம் காணாமல் போய் ஏறக்குறைய ஐநூறு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன.



கோலாலம்பூர் மாரியம்மன் ஆலயத்தில் பிரார்த்தனை

இந்த எம்.எச். 370 விமானத்தைத் தேடும் பணிகளில், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், கத்தார் போன்ற நாடுகள் ஈடுபட்டன. மொத்தம் 13 நாடுகள். நவீனமான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப் பட்டன. அதிநுட்பமான வான்கோளங்களைப் பயன்படுத்தி ஒவ்வோர் அடி அங்குலத்தையும் அளந்து பார்த்தார்கள்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா

கடைசியாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் களம் இறங்கியது. இந்த ஆய்வு நிறுவனம் அப்போலோ, ஜெமினி வான்கோலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்தது. மனிதனைச் சந்திர மண்டலத்தில் நடக்க வைத்தது. அந்த நிறுவனமும் தன்னுடைய துணைக்கோளங்களைப் பயன்படுத்தியது. பூமிக்கு 200 மைல்கள் உயரத்தில் இருந்து இந்தியப் பெருங்கடலைப் படம் பிடித்துப் பார்த்தது. 


கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் புத்த ஆலயத்தில் பிரார்த்தனை

63 கப்பல்கள் 58 விமானங்களைக் கொண்டு கடல் காடுகளை அலசிப் பார்த்து விட்டார்கள். ஆனால், காணாமல் போன அந்த மாஸ் எம்.எச்.370 விமானம் மட்டும் இன்னும் கண்ணில் தென்படுவதாக இல்லை. இப்போது அதன் இறக்கைப் பாகம் கிடைத்து இருப்பதாகச் சொல்லப் படுகிறது. ஆய்வு முடிவு என்னவாக இருக்கும். பொறுமையாக இருப்போம்.

இந்தியாவின் பெரும் பங்களிப்புகள்

இந்தியப் பெருங்கடலில் எங்கோ ஒரு தீவுக் கூட்டத்தில், எம்.எச்.370 விமானத்தைத் தரை இறக்கி இருக்கலாம் என்று அமெரிக்க புலனாய்வாளர் ஒருவர் சொன்னார். ஆனால், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தரை இறங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்தியா சொல்கிறது. போயிங் 777 போன்ற ஓர் இராட்சச விமானத்தை, அந்தமான் தீவில் இருக்கும் போர்ட் பிளேயர் விமானத் திடலில் தரை இறக்க முடியாது என்று இந்தியக் கடற் படை சொல்லி வருகிறது. 



இந்தியா பூனாவைச் சேர்ந்த கிராந்தி சிர்சாத்
Kranti Shirsath from Pune, four other Indians — Chandrika Sharma (51), Vinod Kolekar (59), Chetna Kolekar (55) and Swanand Kolekar (23) — were aboard the flight, in addition to 154 Chinese, 38 Malaysians, seven Indonesians, six Australians, four Americans and two Canadians.

இந்தியா இதுவரை எட்டு போர்க் கப்பல்கள், ஐந்து கடுங் கண்காணிப்பு விமானங்களைக் களம் இறக்கி இருக்கிறது. அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் இருந்து சென்னை வரையில், 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குத் தேடல் பணிகள் நடைபெற்றன.

பி-81 ரக நீர்மூழ்கிக் கப்பல் விமானங்கள், சி-130ஜே சிறப்பு ஜெட் விமானங்கள், ருக்மணி விமானம் தாங்கிக் கப்பல் போன்றவை களத்தில் இறங்கி இருக்கின்றன. இந்தியாவின் ஜிஎஸ்ஜேடி-7 கடற்படை துணைக்கோளங்களும் பயன்படுத்தப் பட்டன.

ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின்

உலக மக்கள் இனம், மொழி, சமய உறவுகளைத் தாண்டி வழிபாடுகளை நட்த்தி வருகின்றனர். தவிர, ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் என்பவர் வேறு, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரார்த்தனைகள் செய்தார். பலிக்கட்டும் என்று வேண்டினோம். ஆனால், பலிக்கவில்லை. 



MH 370 Bomoh
கோலாலம்பூர் விமான நிலையத்தில்
ராஜா போமோ இப்ராஹிம் மாட் சின் பிரார்த்தனை

கோடிக் கோடியாகப் பணம் செலவு செய்து விட்டார்கள். இருந்தாலும் காணாமல் போன விமானம் காணாமல் போய் 500 நாட்கள் ஆகிவிட்டன. இன்னமும் கண்ணாமூச்சி காட்டுகின்றது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி பின்னிரவு 1.31-க்கு ராடார் திரையில் இருந்து மாஸ் எம்.எச்.370 விமானம் காணாமல் போனது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 40 நிமிடங்கள். அப்புறம் எந்த ஒரு தகவலும் இல்லை. என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவே இல்லை.

ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, அந்த விமானம் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. ராடார் தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர், நான்கு மணி நேரம் பறந்து கொண்டே இருந்து இருக்கிறது.

டி கார்சியா தீவுக் கூட்டம்

புலனாய்வாளர்களின் கணக்குப் படி, அந்த விமானம் பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியா வரை போய் இருக்கலாம். இந்தியப் பெருங்கடலின் மேல் போய் இருந்தால் 2000 மைல்கள் கடந்து போய் இருக்க வேண்டும். விமானத்தில் இருந்த எரிபொருள் நான்கு மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். அதுவரை அந்த விமானம் பறந்து கொண்டே இருக்கலாம்.

MH370 Puspanathan Banting
மலேசியா கிள்ளானைச் சேர்ந்த புஸ்பநாதன், மறைந்தவர்களில் ஒருவர்

தேடும் முயற்சிகள் இந்தியப் பெருங்கடல் பக்கம் திசை திருப்பப் பட்டன. இந்தியப் பெருங்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டங்களுக்கு கீழே, டி கார்சியா எனும் தீவுக் கூட்டம் இருக்கிறது. அங்கே அமெரிக்காவின் கப்பற்படை தளம் ஒன்று இருக்கிறது. அங்கே இருக்கும் கப்பல்களும் விமானங்களும் தேடல் பணிகளில் ஈடுபட்டன.  சரி. அது அப்படியே இருக்கட்டும்.

உலக விண்வழி வரலாற்றில் ஒன்பது விமானங்கள் மாயமாய் மறைந்து போய் இருக்கின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். அவற்றுக்கு எல்லாம் தலைமை வகிப்பது நம்முடைய மாஸ் எம்.எச்.370 விமானம்தான். கொஞ்ச நேரத்திற்கு அதைத் தவிர்த்து விடுவோம். மற்ற மற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

2009 - ஏர் பிரான்ஸ் 447

இந்த நிகழ்ச்சி 2009 மே மாதம் 31-ஆம் தேதி நடைபெற்றது. அது ஓர் ஏர்பஸ் ஏ-330 ரக விமானம். ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 228 பயணிகள். தென் அமெரிக்கா ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸ் நகரத்திற்கு விடியல் காலை 1.33-க்கு பயணத்தை மேற்கொண்டது. ஜூன் 1-ஆம் தேதி அட்லாண்டிக் கடலில் பறந்து கொண்டு இருக்கும் போது காணாமல் போய் விட்டது. பிரேசில் அட்லாண்டிக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் கடைசியாகத் தொடர்பு கொண்டு இருக்கிறது.



அதன் பிறகு அதற்கு என்ன ஆனது, எங்கே இருக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அட்லாண்டிக் கடலில் எங்கோ ஓர் இடத்தில் விழுந்து இருக்கிறது. அந்த அனுமானத்தில் விமானத்தைத் தேட ஆரம்பித்தார்கள்.

அட்லாண்டிக் மாக்கடலில்

இந்தப் பக்கம் தென் அமெரிக்காவின் பிரேசில். அந்தப் பக்கம் ஆப்பிரிக்காவின் செனாகால் நாடு. நடுவில் அட்லாண்டிக் மாக்கடல். அதன் அகலம் 3,450 மைல்கள். பரப்பளவு 41 மில்லியன் சதுர மைல்கள். சராசரி ஆழம் 3.2 கிலோமீட்டர்கள். எவ்வளவு ஆழம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் அந்த விமானத்தை எங்கே போய் தேடுவது. இருந்தாலும் தேடும் முயற்சிகள் கைவிடப் படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப் பட்டது. பிரேசில் நாட்டு வடப் பகுதியின் கடற்கரையில் இருந்து 600 மைகள் தள்ளி அந்த விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. பயணம் செய்த 228 பேரும் இறந்து விட்டார்கள். கறுப்புப் பெட்டி, மற்ற ஒலிப்பதிவு கருவிகளை மீட்டு எடுத்தார்கள்.



விமான விபத்தைப் பற்றிய முழு அறிக்கை, 2012-ஆம் ஆண்டு வெளியிடப் பட்டது. ஒவ்வொரு விமானத்திலும் தானியங்கு விமானி ஓட்டி என்று ஒரு சாதனம் இருக்கும். அதை ஆங்கிலத்தில் (autopilot) என்று சொல்வார்கள். ஒரு விமானம் 30,000 அடிகளுக்கும் மேலே போனதும், இந்தத் தானியங்கு விமானி ஓட்டியை முடுக்கி விடுவார்கள்.

அதன் பின்னர் விமானம் சொந்தமாகவே பறக்க ஆரம்பித்து விடும். அதாவது விமானியின் கட்டுப்பாடு இல்லாமல் விமானம் தானாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்தச் சமயத்தில் விமானிகள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள்.

நிலைகுத்திப் போன விமானம்

ஆனால், அன்றைய தினம், இந்த ஏர்பஸ் ஏ330 ரக விமானத்தின் வெளித் தொடர்புக் கருவிகளை பனித் திட்டுகள் மூடி விட்டன. அதனால் தானியங்கு விமானி ஓட்டியின் செயல்பாடுகளில் தடுமாற்றம். விமானத்தை இயல்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு விமானிகளும் அவசரம் அவசரமாக சில முயற்சிகளைச் செய்து இருக்கின்றார்கள். அத்தனையும் வீண். 



விமானத்தின் மூக்குப் பகுதி கீழே வருவதற்குப் பதிலாக மேல் நோக்கிப் போய் இருக்கின்றது. அதனால் விமானம் நிலைகுத்திப் போய், அப்படியே கடலில் விழுந்து இருக்கிறது. கடலில் கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன ஆகும்.

அந்த மாதிரி 10 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விமானம் கீழே கடலில் விழுந்து இருக்கிறது. விமானத்தின் மூக்குப் பகுதியைக் கீழ்ப் பக்கமாகத் தாழ்த்தி இருந்தால், விபத்தைத் தவர்த்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

2003 போயிங் 727

இந்த நிகழ்ச்சி 2003 மே மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. ஆப்பிரிக்காவில் இருக்கும் அங்கோலா நாட்டின் தலைநகரமான லுவாண்டாவிற்கு அருகில் அந்த விமானம் காணாமல் போனது. புர்க்கினா பாசோ நகரை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது ராடார் திரையில் இருந்து விமானம் காணாமல் போனது. 




விமானத்தில் 12 பேர் இருந்தனர். இந்த விமானம் என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. பெரிய மர்மமாகவே இருக்கிறது. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அது ஒரு பெரிய செய்தியாகத் தெரியவில்லை. உலக மக்களும் மறந்து விட்டார்கள்.  

1999 எகிப்திய விமானம் 990


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1999 அக்டோபர் மாதம் நடந்தது. இது ஒரு போயிங் 767 ரக விமானம். நியூயார்க் நகரத்தில் இருந்து கெய்ரோ நகரத்திற்குப் பயணம். அட்லாண்டிக் பெருங் கடலில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது, திடீரென்று தலைக் குப்புற விழுந்தது. 14,000 அடி உயரத்தை 36 விநாடி நேரத்தில் கீழ் நோக்கி இறங்கி குப்புற விழுந்து இருக்கிறது. 



பயணம் செய்த 217 பேரும் இறந்து போனார்கள். விமானத்தின் சிதைபாடுகள் பின்னர் கண்டு எடுக்கப்பட்டன. விமானி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டது. விமானிக்கும் துணை விமானிக்கும் இடையே போராட்டங்கள் நடந்து இருக்கின்றன.

கறுப்புப் பெட்டியின் உரையாடல்கள் மூலம் கண்டு அறியப் பட்டது. இருந்தாலும், இயந்திரக் கோளாற்றினால் விமானம் விழுந்து விட்டது என்று எகிப்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. போயிங் விமானம் இல்லை என்று இன்று வரையிலும் மறுத்து வருகிறது. 

1996 டி.டபுள்யூ.ஏ. 800

டிரான்ஸ் ஓர்ல்ட் ஏர்லைன்ஸ் (Trans World Airlines) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 747-100 ரக விமானம். 1996 ஜூலை 17-ஆம் தேதி நியூயார்க் ஜான் கென்னடி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ரோம் நகரை நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம் 12-வது நிமிடத்தில், வானத்தில் வெடித்து அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. பயணம் செய்த 230 பேரும் இறந்து போனார்கள்.

அமெரிக்க விண்வழி வரலாற்றில் மூன்றாவது மிக மோசமான விமான விபத்து என்று சொல்லப் படுகின்றது. பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்து இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், எரிபொருள் சேமிப்புக் களனில் ஏற்பட்ட குறுஞ்சுற்று (short circuit) கோளாற்றினால் வெடிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று புலனாய்வுகள் சொல்கின்றன.

இருந்தாலும், அது ஒரு சதிநாச வேலை என்று பல ஆய்வாளர்கள் இன்றும் சொல்கின்றனர். ஓர் உயிர் இல்லை. இரண்டு உயிர் இல்லை. 230 உயிர்கள். ஆக, அந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு யார் காரணம் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். 

1947 ஸ்டார்டஸ்ட்

67 ஆண்டுகளுக்கு முன்னால் 1947 ஆகஸ்டு மாதம் 2-ஆம் தேதி நடந்த விபத்து. விமானத்தின் பெயர் ஸ்டார்டஸ்ட். தென் அமெரிக்கா போனஸ் ஏர்ஸ் நகரில் இருந்து சிலி நாட்டிற்குப் போன விமானம். திடீரென்று காணாமல் போய் விட்டது. அந்த விமானத்திற்கு ஏன்ன ஆனது ஏது ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. பயணம் செய்த 11 பேரும் இறந்து போனார்கள்.

சதிநாச வேலையாக இருக்கலாம். வேறு கிரகவாசிகள் வந்து பழி வாங்கி இருக்கலாம் என்றும் பேசிக் கொண்டார்கள். இருந்தாலும் 2000-ஆம் ஆண்டில் அந்த விமானத்தின் சிதைபாடுகள் கிடைத்தன. ஆழமான ஒரு பனிக்கட்டி ஆற்றில் மூழ்கிக் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பயணிகளின் உடல்கள் அழுகிப் போகாமல் அப்படியே அசலாக இருந்தன. 67 ஆண்டுகள் ஆகிப் போனதால் அந்த உடல்களுக்குச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை. இப்படியும் சில உயிர்கள் சொந்தம் இல்லாமல் மறைந்து போகின்றன. நம்ப உயிர் எப்படியோ தெரியவில்லை.

1937 ஏமேலியா இயர்ஹார்ட்

உலக விண்வழி வரலாற்றில், இந்த ஏமேலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) மறைவுதான் மிக மிகச் சோகமான நிகழ்ச்சியாகும். மக்கள் மனதைக் கவர்ந்த ஒரு பெண்மணி. சின்ன வயதிலேயே சிறகொடிந்து போனார். அவர் இறந்து போனது இன்னும் தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே நீடிக்கின்றது. உலகத்தை விமானத்தின் மூலம் முதன்முதலாகச் சுற்றி வந்த பெண்மணி என்று சாதனை படைக்க ஆசைப் பட்டவர்தான் இந்த ஏமேலியா இயர்ஹார்ட். 



இவர் நிறைய சாதனைகளைச் செய்தவர். நிறைய நூல்களை எழுதி இருக்கிறார். உலகலேயே பெண்களுக்காக முதன்முதலில் பெண் விமானிகள் சங்கத்தை உருவாக்கியவர். இவரைப் பற்றி ஒரு தனிக் கட்டுரையையே எழுத வேண்டும். இவரைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஒரு விஷயம். 
 
அமெரிக்க கற்றுப்பினப் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். உலகப் பெண்கள் எல்லோருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று போராடியவர். பெண்களால் எதையும் செய்ய முடியும் என்று சாதித்தும் காட்டியவர். ஒரு பெண்ணால், தன்னந் தனியாக உலகைச் சுற்றி வர முடியும் என்று செய்து காட்டியவர். ஆனால், விதி விளையாடி விட்டது. இது நடந்தது 1937-ஆம் ஆண்டு.

சாதனைப் பெண்மணி

விமானம் என்ற ஒரு பொருள் வானத்தில் பறந்து ஒரு இருபது வருடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போதே சாதனை படைக்கக் கிளம்பி விட்டார் இந்தப் பெண்மணி. அப்போது அவருக்கு வயது 39. அவர் பயன்படுத்தியது சாதாரண ஒரு காற்றாடி விமானம்தான். அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு முக்கால்வாசி உலகத்தைச் சுற்றி வந்து விட்டார். இன்னும் 7000 மைல்கள்தான் இருந்தன.

விமானத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் அவசரமாகத் தரை இறங்க வேண்டிய கட்டம். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஹாவ்லாண்ட் தீவில் தரை இறங்க முயற்சி செய்து இருக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவருடைய விமானம் மாயமாய் மறைந்து விட்டது. இது நடந்தது 1937 ஜூலை மாதம் 2-ஆம் தேதி. அவர் கடைசியாக பேசிய வார்த்தைகள். `வடக்கேயும் தெற்கேயும் பறந்து கொண்டு இருக்கிறேன்`. அதோடு சரி. அந்த மனுஷி உலக வரலாற்றில் இருந்து மறைந்து போய் விட்டார்.

பிரார்த்தனை செய்வோம்

அவரைத் தேடுவதற்கு அமெரிக்கா ஒரு கப்பல் படையையே அனுப்பி வைத்தது. ஒரு சுவடும் கிடைக்கவில்லை. 250,000 சதுர மைல்கள் தேடி விட்டார்கள். இதுவரையில் ஒரு விவரமும் கிடைக்கவில்லை. 2002-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரையில் 14 மில்லியன் டாலர்கள் செலவு செய்து விட்டார்கள். 2007-ஆம் ஆண்டு தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. 


MH 370 Chinese Pray

இருந்தாலும் அந்தப் பெண்மணியின் எலும்புக் கூடுகள், பசிபிக் பெருங்கடலில் எங்கோ ஓர் ஆழ்ப்பகுதியில் இன்னும் வீர வசனங்கள் பேசிக் கொண்டு இருக்கின்றன. நம்முடைய மாஸ் விமான பயணிகளுக்காகவும் இந்த அரிய வீரப் பெண்மணிக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.

MH 370 Multi Religion
மலேசிய அனைத்துலக விமான நிலையத்தில் பிரார்த்தனை

கட்டுரையை எழுதி முடிக்கும் போது மனசு லேசாக வலிக்கின்றது. காணாமல் போன மாஸ் எம்.எச்.370 விமானத்தின் எல்லா உயிர்களுக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.