06 அக்டோபர் 2015

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறந்த நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் எனும் காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் காவியம். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். அனைவருக்கும் தெரியும். இந்தத் திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
  • திருக்குறளில் ‘தமிழ்‘ எனும் சொல் பயன்படுத்தப் படவில்லை
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
  • திருக்குறள் அறத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 380
  • திருக்குறள் பொருட் பாலில் உள்ள குறட் பாக்கள் - 700
  • திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட் பாக்கள் - 1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் -  14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
  • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,ங
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளை உரை ஆசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்று உள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்று உள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் ஆளப்பட்டு உள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
  • நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

பெண் கொசுக்கள்

பெண்  கொசுக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை
***********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் ஒரே மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.  இரத்தம் குடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தைத் தான் குடிக்கும்
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...

விடியல் காலையில்


கடலில் ஒரு கப்பல் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர். அதில் ஒருவன் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குள் வந்து சேர்ந்தான்.

அந்த மனிதன். தாவரங்களைச் சாப்பிடான். தட்டுத் தடுமாறி ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டான்.

சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினான். சமையல் செய்தான்.

கடவுளுக்குத் தன் மேல் கொஞ்சமாவது கருணை இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ஒருநாள் காய் கனிகள் பறிக்கச் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய குடிசை பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

கடவுளே! உனக்கு கருணையே இல்லையா... அல்லது நீயே இல்லையா என்று கதறினான்.

சிறிது நேரத்தில் அவனைத் தேடி ஒரு கப்பல் வந்தது. அவனுக்கு ஆச்சரியம்!

நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான்.

தீவில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்து யாரோ அவசர அபய அழைப்பு அனுப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டோம் என்றார் கப்பலின் தலைவர்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை என்ன தெரியுமா...

சோதனைகள் என்பது பெரும்பாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே வருகின்றன.

அப்படி நினைக்க வேண்டும். அப்படி நினைத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று விடியல் காலையில் தூக்கம் வராமல் ஒரு சிலர் அலைமோதி இருக்கலாம்.

அவர்களுக்கும் இந்தக் கதை போய்ச் சேர்கின்றது. அந்த அவர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புத்த காயா



புத்த காயா என்பது புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்து உள்ள ஒரு புத்த கோயில் ஆகும்.

இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் தலை நகரமான பாட்னாவில் இருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்து உள்ளது.

கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இந்த இடத்தை போதி மண்டா என்று குறிப்பிடுகின்றன.

2002 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ இந்தக் கோயிலை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது.

கி.மு 530 ஆம் ஆண்டில், ஒரு துறவியாக அலைந்து திரிந்த புத்தர், இந்தியாவில் உள்ள காயா என்னும் நகருக்கு அருகில் உள்ள பல்கு ஆற்றங் கரைக்கு வந்தார்.

அங்கே அவர் அரச மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார். மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் கழிந்த பின்னர், சித்தார்த்தர் (கௌதம புத்தர்) ஞானம் பெற்றார்.

இவ்வாறு சித்தார்த்தர் ஞானம் பெற்ற இடத்தைக் குறிப்பதற்காக மகாபோதி கோயில் (புத்த காயா) அமைக்கப் பட்டது.

புத்தர் ஞானம் பெற்ற 250 ஆண்டுகளுக்குப் பின்னர், கி.மு 250 ஆம் ஆண்டில், பேரரசர் அசோகன் புத்த காயாவுக்குச் சென்றார். அங்கே ஒரு துறவி மடத்தையும் அமைத்தார்.

குப்தர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், செங்கற்களால் கட்டப்பட்டது. மிகப் பழமையான இந்தியக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

16 ஆம் நூற்றாண்டில் புத்த காயாவுக்கு அருகில், சைவ சமயத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் மடமும் நிறுவப் பட்டது.

இந்தியாவுக்குச் சென்றால் இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்று வாருங்கள். மனம் அமைதி பெறும். கவலைகள் தீரும்.

2006ஆம் ஆண்டு அடியேன் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்து இருக்கிறேன்.

19 செப்டம்பர் 2015

இசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2

மலேசியா தினக்குரல் 16.08.2015 நாளிதழில் எழுதப்பட்டது

[பாகம்: 2]


இசைப்பிரியா எனும் ஒரு மௌனராகத்தின் கதை தொடர்கிறது. நேற்றைய கட்டுரையில் உள்ள தகவல்களைச் சற்றே மீள்பார்வை செய்வோம். இசைப்பிரியாவிற்குச் சிறுவயதில் இருந்தே அமைதியான குணம். 

ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆடல் பாடல்களில் கூடுதலான ஆர்வம். வயதுக்கு மீறிய தயாள குணம். துன்பப் படுபவர்களைக் கண்டால் ஓடிச் சென்று உதவிகள் செய்யும் இரக்கச் சிந்தனை. 




இசைப்பிரியா 1981 மே மாதம் 2-ஆம் திகதி யாழ்ப்பாணம் நெடுந்தீவு மானிப்பாயில் பிறந்தவர். குடும்பத்தில் நான்காவது மகள். சோபனா என்று பெயர். ஐந்து ஆண்டுகள் மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் தொடக்கக் கல்வி. பின்னர் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேல்படிப்பு.

ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகள்

அவருடைய இதயத்தில் லேசான சின்ன தூவரம். ஆனால், பெரிய பிரச்சினை வராது என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கின்றனர். போர்ச் சூழ்நிலை காரணமாக, 1996-இல் இடம் பெயர்ந்து மல்லாவி மத்தியக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். கல்லூரிப் படிப்பிற்கு பாதிலேயே முற்றுப்புள்ளி. 

1995-ஆம் ஆண்டு மூன்றாம் கட்டப் போர். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மக்கள் வன்னியை நோக்கி ஓடினார்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. 



வன்னி என்பது இலங்கையின் வட பகுதியில் இருக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு. தமிழர்களின் பாரம்பரிய தாயக மண். அதன் பரப்பளவு 7,650 சதுரக் கிலோ மீட்டர். மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஆறு நாடாளுமன்ற இடங்கள் உள்ளன.
 

ஈழத்து மக்களுக்கு நடந்து வரும் அநீதிகளைக் கண்டு, அவர்களுக்காகப் போராட வேண்டும் என்கிற ஓர் உந்துதல், இசைப்பிரியாவிற்கும் ஏற்பட்டது. அந்தத் தாக்கத்தில் 1998-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார்.




பலவீனமான இதயம் இருந்ததால் அவரைப் புலிகளின் போர்ப் படையில் சேர்க்கவில்லை. ஊடகத் துறையில் இணைத்துக் கொண்டனர். ஈழப் போராட்டத்தில் தன்னை ஓர் உன்னதமான ஊடகப் போராளியாக்கிக் கொண்டார்.

ஈழத்துப் பெண்மையில் ஒட்டிக் கொண்ட நளினம்

ஈழத்து அழகி என்று சொல்கிற வகையில் ஈழத்துப் பெண்களின் அழகும் பெண்மையும் ஒட்டிக் கொண்டு நளினம் பேசின. மென்மையும் இரக்கமும் குளிர்ந்த பார்வையும் மேலும் அழகு சேர்த்தன. தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் செய்திகளை வாசித்து வந்தார். நல்ல அழுத்தமான குரல். 




தமிழீழ விடுதலை அமைப்பின் ஊடகத் துறையை நிதர்சனப் பிரிவு என்று அழைப்பார்கள். அதில் ஒன்று ஒளிவீச்சு தொகுப்பு. மலேசியத் தொலைக்காட்சியில் வசந்தம் நிகழ்ச்சி ஒளியேறுகிறதே, அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி தான். ஆனால், நாட்டுச் சூழ்நிலைகளில் வேறுபட்டது. அந்த நிகழ்ச்சியை இசைப்பிரியாதான் தமிழீழத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

இசைப்பிரியா என்கிற பெயரைச் சொன்னதும் ‘துயிலறைக் காவியம்’ எனும் நிகழ்ச்சி நினைவிற்கும் வருகிறது. இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. மிக இயல்பான எதார்த்தமான நிகழ்ச்சி. மாவீரர்களைப் பற்றியது. ஈழக் கனவுக்காகப் போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பதிவாகவும் இடம் பெற்று வந்தது.

வீரச்சாவு அடைந்த ஒருவரைப் பற்றி அவருடைய பெற்றோர், நண்பர்கள், சக போராளிகள், தளபதிகள், தலைவர் என அனைவரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வார்கள். 



ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித் தன்மையுடன் ஒலிக்கும். இசைப்பிரியாற்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்த நிகழ்ச்சி என்றுகூட சொல்லலாம்.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல அரிய சேவைகளைச் செய்து இருக்கிறார். வெறும் குரல் கொடுப்பது மட்டும் இல்லை. அதையும் தாண்டிய நிலையில், காட்சிகளைத் தேடிப் பெறுவது, கேமராக்களை கையாள்வது என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து இருக்கிறார். அவருடைய வேலைகள் அறிவுபூர்வமாகவும் துல்லிதமாகவும் சுத்தமாகவும் இருந்தன.

‘சாலை வழியே’ நேர்காணல் நிகழ்ச்சி

இவரிடம் நல்ல நடனத் திறமையும் இருந்து இருக்கிறது. கலைஞர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து இருக்கிறார். அவர் ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தையும் தயாரித்து ஈழத்து மக்களுக்கு வழங்கி இருக்கிறார். 





இசைப்பிரியா, பெரும்பாலான ஈழத்துப் பெண்களின் முகபாவத்தைக் கொண்டவர். ஆகவே, அவருடைய நடிப்புக்களிலும் அந்த ஈழத்துத் தன்மைகள் நன்றாகவே தெரிந்தன. அந்த வகையில் இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் மிகவும் புகழ் பெற்றவையாகும்.

ஈரத்தி படத்தில் இசைப்பிரியா முழுக்க முழுக்க ஓர் ஈழத்துச் சாமான்ய பெண்ணாகவே வலம் வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற இயல்பான குணங்களை மிக எதார்த்தமாகப் பிரதிபலிப்புச் செய்கிறார். அந்தப் படத்தில் ஒரு பெண் போராளி இவருடைய சகோதரியாக வருகிறார். அவருடன் நடைபெறும் உரையாடல்கள் என்றென்றும் மனதை விட்டு நீங்காதவை. 





அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்புச் செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அதோடு இசைப்பிரியா போன்றவர்களின் நடிப்பும் அந்தப் படத்திற்கு வலிமை சேர்த்தன. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இருந்தாலும், அந்தப் படத்தைத் தயாரித்த, அந்தப் பெண் போராளிகள் இப்போது உயிருடன் இருப்பார்களா என்பது தெரியவில்லை. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இருந்தாலும், அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பது மனதுக்குள் தடுமாறும் ஒரு பெரிய வேண்டுதல்.





இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம் ஆகும். அந்தப் படத்தில் லட்சுமி என்கிற பாத்திரம் வருகிறது. அந்தப் பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

லட்சுமியாக இசைப்பிரியா நடித்து இருந்தார். அந்தப் படத்தை நானும் பார்த்து இருக்கிறேன். இருபது நிமிட நேர குறும்படம். சின்ன வயது இசைப்பிரியா சிறப்பாகவே நடித்து இருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=cQoUygI49qo

எனும் முகவரியில் நீங்களும் போய்ப் பார்க்கலாம். அல்லது யூடியூப்பில் ’வேலி இசைப்பிரியா’ என்று தட்டச்சு செய்யுங்கள். படத்தைப் பார்த்த பிறகு, இப்படி ஒரு நல்ல சிறந்த நடிகையை இழந்து விட்டோமே என்று என் மனம் நீண்ட நேரம் கனத்துப் போனது.

தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும்

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில், இசைப்பிரியா சரண் அடைந்த நிகழ்ச்சி இருக்கிறதே, அதைப் பார்ப்பவர்களின் மனங்கள் நிச்சயமாகப் பதைபதைக்கும். நானும் பார்த்தேன். http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g எனும் இணைய முகவரியில் இருக்கிறது. அவர் அசிங்கப் படுத்தப் படுவதைப் படத்தில் காட்டவில்லை. ஆனால், அவருடைய நிர்வாண கோலம் ஒரு கட்டத்தில் காட்டப் படுகிறது. 





அந்த வீடியோ படங்கள் கிடைத்த போது, தமிழகத் தொலைக்காட்சிகள், கொச்சையாகத் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி இருக்கின்றன. பூவினும் மென்மையான ஒரு பெண்மையின் காட்சிகளைக் கண்களுக்கு விருந்து அளிக்கும் காட்சிகளாக ஆக்குவது பெரிய பாவம் இல்லையா. அவளை நேசிக்கின்ற எந்த ஒரு தாய்மடி உறவும் தகப்பன்வழி பாசமும் விரும்பவே விரும்பாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் அல்ல. உயிருடன் சிறப்பாக நன்றாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்துக்காக உயிர் நீத்த ஒரு தமிழ்ப் பெண். நம் குடும்பத்தில் வாழ்ந்த ஒருத்தியாக மறைந்து போனாள்.





ஆடை இல்லாத பெண்களுடைய படங்களை அல்லது காட்சிகளை அப்படியே செய்திப் படமாகப் போடுவதை எல்லா ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். இசைப்பிரியாவை மட்டும் நான் சொல்லவில்லை. ஒட்டுமொத்த பெண்களுக்கும் சேர்த்துச் சொல்றேன்.

கொடுமையிலும் கொடுமையான வன்முறைக் கொடுமைகள்

இருந்தாலும், இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடந்து இருக்கிறதே என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய வேண்டுதல். நம்முடைய இலக்கு. அதனால்தான் அந்தப் படக் காட்சிகள் எங்கே இருக்கின்றன எனும் இடங்களைச் சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் மனநிலையைப் பொருத்தது. 





அவரைக் கைது செய்து கொண்டு போகும் போது நன்றாகத் தான் கொண்டு போய் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் மனித நேயத்துடன் நடந்து கொண்டதாகக் காட்டப் படுகிறது. ஆனால், அதன் பிறகு அவருடைய உயிரற்ற உடல் காட்டப் படுகிறது. அவரை இராணுவம் மிகவும் கொடுமையாகச் சித்திரவதை செய்து இருக்கிறது. அவரை மட்டும் அல்ல. கூட இருந்த மற்ற பெண்கள் மீதும் வன்முறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமையான பாலியல் கொடுமைகள்.

ஒரு தாயாக அவர் கருவுற்று இருந்த நேரம். ஒரு குழந்தையைச் சுமந்து நின்ற நேரம். அந்தச் சமயத்தில்தான் அவர் இப்படி வன்முறையால் சிதைத்து அநியாயமாகக் கொல்லப் பட்டு இருக்கிறார். இசைப்பிரியாவுடன் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தையையும் சேர்த்து அந்தப் பாவிகள் கொன்று இருக்கிறார்கள்.

இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படம்

2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி, சிங்கள இராணுவத்திடம் இசைப்பிரியா சரண் அடைந்தார். அப்போதைய புகைப்படங்களைப் பாருங்கள். அந்தப் படங்கள் இணையத்தில் கிடைக்கும். அதன் முகவரி: http://www.tamilkingdom.org/2014/05/blog-post_73.html. இசைப்பிரியாவின் மேலாடைகள் களையப்பட்ட நிலையில், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒரு படம் உள்ளது.  இன்னொரு படத்தில், மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடம். நீண்ட நேரம் உடுப்பு இல்லாமல் நிர்வாணமாக உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்.





பல்லாயிரம் ஈழத்துப் பெண்களுக்கு நடந்த கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்து இருக்கிறது.

அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மறுபடியும் வரவேண்டி இருக்கிறது. அவரின் மற்றொரு நிகழ்ச்சி ‘துயிலறைக் காவியம்’. போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவாக இடம் பெற்று வந்தது. அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் தனித்துவமாக ஒலித்தது. அவருக்குப் பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது.

 
‘இராஜகுமாரியின் கனவு’

சாலைகளில் நடந்து போகும் ஆண்கள், சந்திச் சதுக்கங்களில் கூடி நிற்கும் பெண்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள். இவர்களைச் சந்தித்து ‘சாலை வழியே’ என்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியையும் படைத்து வந்தார். கணி தொழில்நுட்பத்தில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்ற இவர், ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற ஒரு குறும்படத்தைச் சொந்தமாகவே தயாரித்து இருக்கிறார். அதில் கணினி வரைகலை நவீனங்கள் சேர்க்கப் பட்டன. தவிர, ‘ஈரத்தி’ என்ற முழுநீளப் படத்திலும் ‘வேலி’ என்ற ஒரு குறும் படத்திலும் நடித்து இருக்கிறார். 




இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே ஈழத்து மக்களை அதிகமாகப் பாதித்த படம். லட்சுமி என்கிற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை கண்முன் காட்டுகின்றன. ஈழ மக்களின் செல்வாக்கு, புகழ்ப் பெறுமதிகளைப் பெற்ற ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இசைப்பிரியா பவனி வந்தவர்.

இசைப்பிரியா இறப்பின் பின்னணியில் இருந்தவர்கள்

அதற்கு காரணம் இருக்கிறது. இசைப்பிரியாவின் முகம், குரல், நடிப்பு போன்றவை தனித்து நின்றன. ஆக, அவரை உலகத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்து இருந்தார்கள். இருந்தாலும் இசைப்பிரியாவைக் கைது செய்த போது சிங்கள ராணுவத்தில் பலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 



ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இசைப்பிரியா நல்ல ஓர் இலட்சணமான அழகான பெண் என்று மட்டும் அந்த வெறியர்களுக்கு அப்போது தெரிந்து இருக்கிறது. அதற்கு வேறு காரணமும் இருந்தது.

அடுத்து, இசைப்பிரியாவைச் சுட்டுக் கொல்வதற்குப் பின்னணியாக இருந்தவர்கள் யார் தெரியுமா. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நம் தமிழர்கள்தான். அவர்கள் தான் கருணாவின் ஆட்கள். இதைப் பற்றிய தகவல்களை நாளைய கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)  





ஈழத் தொலைக்காட்சியிலே – உன்
இனிமுகம் பார்த்து வந்தோம்..!

தேன் சிந்ததும் நின் குரலால் – நீ
தேவதையும் ஆகி நின்றாய்..!

தாய் மண்ணின் துயர் துடைக்க – நீ
துப்பாக்கியினை ஏந்தி வந்தாய்..!

தாய் நாடே போற்றுகின்ற – நீ
தவத் தாயும் ஆகி விட்டாய்..!







இக்கட்டுரையின் இதர பகுதிகள்

இசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1