22 மே 2016

அந்தமான் - தமிழர் வாழும் நாடுகள்

பர்மாவில் அராகன் மலை. அங்கிருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவு வரை நீண்ட நெடிய மலைத் தொடர். அதன் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள். சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள். 


அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர் (Port Blair). கோலாலம்பூரில் இருந்து 1,365 கி.மீ. சென்னையில் இருந்து 1191 கி.மீ. தொலைவு.

அந்தமான் தீவில் ஆப்பிரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர்கள், பழக்க வழக்கங்கள், மொழியின் வேர்ச் சொற்கள் போன்றவை தமிழோடு இணைந்து போகின்றன.




இவர்களைப் போலவே நிக்கோபார் தீவுகளில் மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிக்கோபாரிகள் வாழ்கின்றனர். இவர்கள் மங்கோலியக் கலப்பு இனத்தவர். குடுமி வளர்த்தல், தமிழரோடு இணைந்து போன குடும்ப வாழ்க்கையும் பழக்க வழக்கங்களும் நிறைந்துள்ளன.

பெரிய நிக்கோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதி இருக்கிறார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாது" என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந் தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்து இருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

அந்தமான் என்ற பெயரே தமிழர் கொடுத்தது தானே. மான்கள் நிறைந்து இருந்த காரணத்தால் அந்தப் பெயில் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. 

சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இதற்கான ஆதாரத்தைத் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் இன்றும் காணலாம். 

நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா. நக்கவரம். அந்தக் காலத்தில் அந்தத் தீவில் வாழ்ந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் அந்தப் பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

நிக்கோபாரில் இரு தீவுகள் உள்ளன. சின்ன நிகோபார் தீவை கார்தீவிபா என்றும் பெரிய நிக்கோபாரை நாகதீவிபா என்றும் சோழர் காலச் சமஸ்கிருத கல்வெட்டுகள் கூறுகின்றன. மார்கோ போலோ எனும் உலகப்புகழ் சுற்றுலா மனிதர் இங்கு வந்தார். அவர் வந்த பின்னர் இந்தத் தீவின் பெயரும் நெக்குவரம் என்று மாறி விட்டது. 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சாதுவன் என்ற வணிகன் பெயர் வரும். அவர் இந்தத் தீவில் தான் சிக்கிக் கொண்டான். நக்க சாரணர் நாகர் வாழ்மலை என்று மணிமேகலையில் குறிப்பிடப் படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு வாழ்நாள் தண்டணை வழங்கி இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்டுவதற்குச் சென்னையில் இருந்து தமிழர்கள் குடியேறினர். அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர். அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தில் போராடிய 1400 மலையாக்களும் குடியேறினார்கள்.

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம். தமிழர்கள் இரண்டாம் இடம். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் மிகுதி. தமிழர்களின் இட்லி, தோசை, வடை, சாம்பாருக்கு அதிக வரவேற்பு.


அந்தமான் தீவுக் கூட்டத்தில் 567 தீவுகள் உள்ளன. இதுவரை மக்கள் குடியேறிய தீவுகள் 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகள். 1943-இல் ஜப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றினர். 1945 வரை மூன்றாண்டுகள் வைத்து இருந்தனர். 

பின்னர் இந்தத் தீவை நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் கொடுத்தனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கேதான் முதன்முதலில் ஏற்றப் பட்டது. முதல் ஆளுனராக நேதாஜியால் நியமிக்கப்பட்டவர் டாக்டர். கர்னல் லோகநாதன் னும் ஒரு தமிழர். 

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்ளின் செல்வாக்கே அதிகமாக இருந்தது. அவர்களின் தலைமையிடமாக ராஸ் எனும் சின்னஞ் சிறியத் தீவு. அங்கே ஒரே ஒரு கோயில். தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்.

தலைநகர் போர்ட் பிளையரில் இருக்கும் வெற்றிமலை முருகன் கோயிலை அங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள். இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயில். அந்தமான் தீவு எங்கும் முருகன், விநாயகர், மாரியம்மன் ஆலயங்கள். தமிழர்கள் தங்களின் பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். காதணிவிழா, திருமணம் போன்றவை கோயில்களில் நடப்பது உண்டு.

பெண்கள் தலையில் பூச்சூடுவது, நெற்றியில் திருநீறு, குங்குமம் இடுவதிலிருந்து தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணி தெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டு விட்டனர். தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப் பெயரிட்டுள்ளனர்.




'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன. பிறமொழிகளில் இந்த அளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை. தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள்.

அந்தமானில் உள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கு ஒருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாட்கள் விமானத்தின் மூலமும் வருகின்றன. 




தமிழகத்தில் இருந்து வெளிவரும் இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். மலேசியாவின் ‘மயில்’ சஞ்சிகைக்கு இங்கே அதிக ஆதரவு.

இங்கே வங்ளாதேசியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது. அந்தமான் தமிழர் பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.


தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள். இருந்தாலும் தமிழ்க் கல்வியைத் தருவதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி கொடுக்காமல் இந்தி பேசும் இந்தியர்களாக ாற்ற வேண்டும் என்பதே அப்போதைய வியூகம். 

அந்தமான் தலைமைக் கமிஷனராக அப்போது இருந்த ஹர்மந்தர் சிங், "இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன. வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள்.

பிறகு அதுவும் போதனா மொழியாக்கப் பட்டது. இப்போது தமிழ்மொழி போதனாமொழியாக வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இது ஓர் இருவழிப் பிரச்சினை. 


இந்தப் பிரச்சினையைத் தூண்டுபவர்கள் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்தி மொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்குப் போக வருபவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்பி வருகிறார்கள்” என்றார்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள். அந்தமானில் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக் கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ இல்லை.




இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இங்குள்ள 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார். போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர்கள் மூவர்.

இதைத் தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி என்பவர் இருந்துள்ளார். இவரின் தந்தை கன்னியப்ப முதலியார். 1920-இல் மத்திய அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கே.ஆர். கணேஷ் என்பவர் அந்தமான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். கந்தசாமி இன்று மக்கள் கட்சித் தலைவராகவும், பிரதேசக் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார். பெரும் வணிகராக லிங்கவேல் என்பவர் இருக்கிறார்.


பத்திரிக்கை ஆசிரியராகத் தமிழர். ஆளும் கட்சிக்காரராகத் தமிழர். பெரிய பெரிய வணிகராக, தொழிலதிபராகத் தமிழர். ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உள்ளன. 

அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான். முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று உயிர்களைத் தியாகம் செய்தவனும் தமிழன் தான். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் முதன் முதலாக சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதியும் தமிழன் தான் என்கிறார். 

தீவில் முன்பு குடியேறியத் தமிழர்கள் அரசு ஊழியம் செய்தவர்கள். இப்போது எல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது. 

1970க்கு முன் தீவின் முக்கியப் பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, டாக்டர்கள் என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர். இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். 

இருந்த போதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டுத் வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

அந்தமான் அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம், இரங்கத்


அந்தமான் தமிழர் சங்கம், தமிழ் இலக்கிய மன்றம் போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இதே போல இரங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இன ரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாசாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் தீவிரப் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும். பாரதி பாரதிதாசன் விழா, தமிழ்ப் புத்தாண்டு, முத்தமிழ் விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை நடத்தியுள்ளது. இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்சீவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
 

தமிழரின் எண்ணிக்கையைச் சிதடிப்பதற்குப் பெரும் முயற்சி நடந்து வருகின்றன. கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்ளாதேசியர் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வங்ளாதேசியர் மறுக்கின்றனர்.

567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல மெல்ல வங்ளாதேசியர் தொகை மட்டும் கூடிக் கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும் விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர். சூறாவளிப் புயல் மழையில் தமிழர்களின் குடியிருப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது

அவர் சொன்ன பதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப் படுகிறது. ஆளுனரின் நிலையே இதுவென்றால் மற்ற வங்ளாதேசியர் எப்படி இருப்பார்கள்?

ஆனால் இங்கே மலேசியர்கள் வங்காளதேசிகளைச் சகோதரர்கள் மாதிரி பார்க்கிறார்கள். அங்கே அந்தமானில் தமிழர்களை வங்காளதேசிகள் துச்சமாக நினைக்கிறார்கள். தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறார்கள். வங்காளதேசிகளை மனித நேயத்துடன் பார்க்கும் வழக்கத்தை மாற்ற வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.


கட்டுரைக்கான சான்றுகள் :

1. அந்தமான் தீவில் தமிழர் நிலை - முகவை. முத்து.
2. உலகத் தமிழர் - பாகம் 2. இர.ந. வீரப்பன்.
3. பாரெல்லாம் பரந்த தமிழர் - சுப. சுப்பிரமணியம்.
4. இந்தியாவின் ஹவாய் - ஆனந்தவிகடன் 1974.
5. ப. திருநாவுக்கரசு

21 மே 2016

கருஞ்சுற்றுலா- Dark Tourism


தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்தியப் பிரமிடுகள், அங்கோர் வாட், ரோமாபுரி கொலிசியம், பிரம்பனான் சிவன் ஆலயம், பொரபுடுர் புத்த ஆலயம் போன்றவை உலகம் பார்க்கும் அதிசயங்கள். உலக மக்கள் தேடிப் போகும் அதிசயங்கள். கேட்ட காசைக் கொடுக்கின்றனர். பார்த்த பின்னர் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். 
 



ஒரு முறை அங்கோர் வாட்டைப் பார்த்தவர்கள் மறுபடியும் பார்க்க ஆசைப் படுகிறார்கள். இரண்டு முறை தாஜ்மகாலைப் பார்த்தவர்கள் மூன்றாவது முறையும் பார்க்கத் துடித்து நிற்கின்றார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. காலம் மாறி வருகிறது. அண்மைய காலங்களில் உலகச் சுற்றுலாத் தளங்கள், கருஞ்சுற்றுலா பக்கமாய்ப் பாதை மாறிப் போகின்றன. 


கருஞ்சுற்றுலா எனும் சொல் புதிதாக இருக்கிறதே. அது என்ன கருஞ்சுற்றுலா என்று கேட்பது காதில் விழுகிறது. கருஞ்சுற்றுலா என்பதை ஆங்கிலத்தில் Dark Tourism என்று அழைக்கிறார்கள். இது ஒரு புதிய வகையான சுற்றுலாத் துறையாகும். ஏறக்குறைய ஒரு பத்து ஆண்டுகளாக இந்தத் துறை உலக அளவில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.
 



இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மாவீரன் ஜூலியஸ் சீசரைக் கொலை செய்தார்களே அந்த இடம் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. கென்னடியைச் சுட்டுக் கொன்றார்களே டாலாஸ் என்கிற இடம், அதுவும் இப்போது ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. அதே போல, ரஷ்யா நாட்டில் ரஸ்புட்டின் பைத்தியக்கார சாமியாரைக் குத்திக் கொலை செய்தார்களே அந்த இடமும் இப்போது ஒரு பிரசித்தி பெற்ற கருஞ்சுற்றுலாத் தளமாக மாறி வருகிறது. அதற்கு முன் ஸ்ரீ லங்காவைப் பற்றி ஒரு சின்னத் தகவல்.



முள்ளிவாய்க்கால் கொலைக் களம்



அண்மைய காலங்களில் ஸ்ரீ லங்காவிற்கு நிதி நெருக்கடி. கிடைக்கிற வருமானத்தில் பெரும்பகுதி இராணுவத்திற்குச் செலவு செய்வதிலேயே தீர்ந்து போகிறது. மிச்சம் மீதி இருந்தால் அதிலே அரசியல் மூக்கை நுழைத்துக்  கொள்கிறது. கடைசியாக ஏழைப் பாமரர்களுக்கு இரண்டு மூன்று அல்வாத் துண்டுகள். என்றைக்கு அப்பாவித் தமிழர்களைக் கொன்று போட்டார்களோ அன்றைக்கே ஏழரை நாட்டுத் தலைவன் சங்கு ஊதி விட்டான்.
 



முள்ளிவாய்க்கால் கொலைக் களத்திற்கு ஜால்ரா போட்டது புகழ்பெற்ற ஓர் அரசியல் குடும்பம். எழுதிச் செல்லும் விதியின் கைகள் சும்மா விடுமா. அந்தக் குடும்பத்திற்கும் ஏழரை நாட்டுத் தலைவன் தம்பட்டம் அடித்து வருகிறான். கடைசி கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்னால் சரியான அடி.



இறந்து போன பல இலட்சம் தமிழர்களின் பாவமும் சாபமும் சும்மா விடுமா. அந்தக் குடும்பத் தலைவன் நினைத்து இருந்தால் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். ஒரு பக்கம் சாய வேண்டாம். நியாயத்தைப் பாருங்கள். சரி. இதை ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. 
 



வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பல இடங்களைக் கருஞ்சுற்றுலா இடங்களாக மாற்றி வருகிறார்கள். வியட்நாம் போரில், வியட்கோங்குகள் தோண்டிய சுரங்கப் பாதைகள், தாட் மாவ் தான் தாக்குதல் (Tat Mau Than Offensive), மை லாய் படுகொலை (My Lai Massacre)  போன்ற இடங்கள் இப்போது பிரசித்தி பெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் போய்ப் பார்த்துவிட்டு வருகிறார்கள்.



அனுதாபம் பெறும் புனர்வாழ்வு மையங்கள்



அதே போல கம்போடியாவில், போல் போட் (Pol Pot) என்கிற கொடுங்கோலன் ஆட்சி செய்த போது இருபது இலட்சம் கம்போடியர்கள் கொலை செய்யப் பட்டனர். அங்கே நிறைய கொலைக் களங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக துவோல் சிலேங் (Tuol Sleng) சிறைச்சாலையைச் சொல்லலாம். அந்தச் சிறைச்சாலையில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர். பெரும்பாலோர் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள். இதே போல பலப் பல இடங்கள் இருக்கின்றன.  அவற்றைச் சுற்றுலா மையங்களாக மாற்றி வருகின்றனர். 
 



கன்னிவெடிகளில் சிக்கி கை கால் இழந்தவர்களுக்காக அங்கே புனர்வாழ்வு மையங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த மையங்களும் இப்போது மனித நேய அனுதாபங்களைப் பெற்று வருகின்றன. அங்கோர் வாட்டைப் பார்க்கிறார்களோ இல்லையோ கை கால் இல்லாதவர்களைப் போய்ப் பார்க்கிறார்கள். அவர்கள் செய்த கைவினைப் பொருட்களை வாங்கி வருகிறார்கள். ஆதரவு தெரிவிக்கிறார்கள். அங்கே மனிதநேய வசந்தம் வீசுகின்றது.



ஆக அதே போல முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தையும் ஒரு கருஞ்சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும். அதை இப்போதே மைத்திரி செய்தால் நாட்டுக்கும் நல்லது. அந்த மனுசனுக்கும் நல்லது. அந்த மனுசனுடைய வீட்டுக் கஜானா நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். சீனா பாகிஸ்தான் லொட்டு லொசுக்குகளை வாங்கிப் போட்ட மாதிரியாகவும் இருக்கும். வீடு நிறைந்த மாதிரியாகவும் இருக்கும். விலைவாசி ஏறிப் போன மாதிரியாகவும் இருக்கும். நம்ப விஷயத்திற்கு வருவோம்.



நீயுமா புருட்டஸ் – ஜூலியஸ் சீசர்



ஜூலியஸ் சீசர் மறக்க முடியாத வரலாற்று நாயகர். கிளியோபாட்ரா எனும் பச்சைக் கிளியை எகிப்திய சிம்மாசனத்தில் உட்கார வைத்து ஆசை ஆசையாய்ப் பார்த்தவர். கி.மு. 44-இல் அதாவது 2058 ஆண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரியில் கொலை செய்யப் பட்டார். அது ஒரு கொடூரமான கொலை. ஜூலியஸ் சீசர் சர்வாதிகார ஆட்சி செய்வதாக ரோமாபுரியின் செனட்டர்கள் சந்தேகப் பட்டனர். மக்களாட்சியில் இருந்து ஜூலியஸ் சீசர் விலகிச் செல்வதாகவும் நினைத்தனர். அவரைத் தீர்த்துக் கட்டினால்தான் நல்ல முடிவு ஏற்படும் என்று கருதினர். அந்தச் செனட்டர்களுக்குப் பதவிகள் கொடுத்து, பணம் புகழைக் கொடுத்ததே ஜூலியஸ் சீசர்தான். என்ன செய்வது. 
 



ஒரு நாள், 60 செனட்டர்களும் ஒன்றுகூடி, ஜூலியஸ் சீசரை முடித்து விடுவது என்று ரகசியமாகத் திட்டம் போட்டனர். அதே மாதிரி செய்தும் காட்டினர். அதை மையமாக வைத்து, ஷேக்ஸ்பியர் ஒரு நாடகம் எழுதி இருந்தார். அதன் பெயர் ’ஜூலியஸ் சீசர்’. சீனியர் கேம்பிரிட்ஷ் தேர்வில், எனக்கு ஆங்கில இலக்கியப் பாட நூல். அதில் ஒரு வாசகம் வரும். உலகப் புகழ் பெற்றது. நாற்பது ஐம்பது ஆண்டுகளாகியும், அந்த வாசகத்தை இதுவரையிலும் என்னால் மறக்க முடியவில்லை.



‘நீயுமா புருட்டஸ்’. ('…and you too, Brutus?'). உயிருக்கு உயிராய் நம்பிய மார்க்கஸ் புருட்டஸ் என்கிற ஆத்ம நண்பனே, ஜூலியஸ் சீசரைக் கத்தியால் குத்தினான். கடைசிக் கத்திக் குத்து. அதோடு ஜூலியஸ் சீசரின் கதையும் முடிந்தது.



பதினைந்து வயதில் ஓர் ஆண்மகன், தகப்பனாக முடியுமா



கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், புருட்டஸ் என்பவன் ஜூலியஸ் சீசருக்கு மகன் முறையில் வருகிறான். அல்லது ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஏன் என்றால், புருட்டஸின் அம்மா செர்வீலியா (Servilia Caepionis) என்பவர், ஜூலியஸ் சீசரின் வைப்பாட்டியாகும். புருட்டஸ் பிறக்கும் போது, ஜூலியஸ் சீசருக்கு வயது வெறும் பதினைந்து. 
 



ஆக, அந்த 15 வயதில் ஓர் ஆண்மகன், ஒரு பிள்ளைக்குத் தகப்பனாக முடியுமா. முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதைப் பற்றி இத்தாலியர்கள் இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை அப்படியே விட்டு விடுவோம்.



இன்னும் ஒரு செய்தி. ரஷ்யாவில் ஒரு பதின்மூன்று வயது பையன். அவனுடைய மனைவிக்கு பன்னிரண்டு வயது. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இருக்கிறாள். என்ன சொல்லப் போகிறீர்கள். ரஷ்யக் கிராமப்புறங்களில் இந்தியாவைப் போல பால்ய விவாகங்கள் நடைபெற்று வருகின்றன. அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.



ஜூலியஸ் சீசருக்கு மொத்தம் 23 கத்திக் குத்துகள். அவற்றில் புருட்டஸின் குத்துதான் நெஞ்சைப் பிளந்து கொண்டு போனது. ஜூலியஸ் சீசர் இறந்து, 17 ஆண்டுகளுக்குப் பின், ரோமாபுரி மன்னராட்சிக்குத் திரும்பியது. ஒக்தோவியா என்பவன் மாமன்னராக முடி சூட்டிக் கொண்டான். ஜூலியஸ் சீசர் இறந்த இடம் பூமிக்கு அடியில் பல அடிகள் ஆழத்தில் இருக்கிறது.



ஜான் கென்னடி அரும் காட்சியகத்திற்கு 350,000 பேர் வருகை



ஜுலியஸ் சீசர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கும் மேலே, ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பி இருக்கிறார்கள். இப்போது அந்த இடம் ஒரு கருஞ்சுற்றுலா இடமாக மாறி வருகிறது. நிறைய பேர் வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். மாவீரன் அலெக்ஸாண்டருக்குப் பின் நம் மனங்களில் பதியும் ஒரே மாவீரன் இந்த ஜூலியஸ் சீசர்தான். ஜூலியஸ் சீசரின் பெயரைச் சொல்லி, இத்தாலியும் காசு பார்க்கிறது.



நவீன கால வரலாற்றில் மறக்க முடியாத இன்னொரு மனிதர் நெப்போலியன். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவரைச் சிறை வைத்தார்கள். இருந்தாலும் தப்பித்து வந்தார். சிறையில் இருக்கும் போது, விஷம் வைத்துக் கொல்லப் பட்டது அண்மையில்தான் தெரிய வந்தது. 
 



அடுத்து அதிபர் கென்னடி வருகிறார். ’உனக்கு நாடு என்ன செய்தது என்று கேட்க வேண்டாம். உன்னால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும் என்று கேள்’. (Ask not what your country can do for you, ask what you can do for your country.) உலகம் கேட்ட ஓர் அருமையான தத்துவப் பொன் மொழி. சொன்னவர் ஜான் கென்னடி. 1963 நவம்பர் மாதம் 22-ஆம் தேதி, டெக்சஸ் டாலாஸ் நகரில், லீ ஹார்வே ஓஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப் பட்டார்.



உலக மக்களைக் கவர்ந்த கென்னடியின் அசாத்தியமான துணிச்சல்



அப்போது அவருக்கு வயது 46. மிகச் சின்ன வயதிலேயே போய்விட்டார். மூன்று ஆண்டுகள்தான் பதவியில் இருந்தார். அமெரிக்க அதிபர்களில் ஆப்ரகாம் லிங்கனுக்குப் பின், மக்கள் மனங்களில் இன்றுவரை நீங்காத இடம் வகிப்பவர் ஜான் கென்னடி ஆகும். இவருடைய அசாத்தியமான துணிச்சல் உலக மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.



ஒரு முறை ரஷ்யா தன்னுடைய ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்தி வைத்து இருந்தது. அப்போது ரஷ்யா உலகப் பெரும் வல்லரசு. இருபத்து மணி நேரத்தில், ஏவுகணைகளை அப்புறப் படுத்தாவிட்டால், அமெரிக்கா போர் தொடுக்கும் என்று கென்னடி எச்சரிக்கை செய்தார். மூன்றாவது உலகப் போர் வரக் கூடிய வாய்ப்பு இருந்தது. அந்தச் சமயத்தில், ரஷ்யாவின் அதிபராகக் குருஷேவ் இருந்தார். ரஷ்யா ஆடிப் போய்விட்டது. சொன்னதைச் செய்வார் கென்னடி எனும் பயத்தில் ரஷ்யா பின் வாங்கியது.



அடுத்து, சந்திரனில் மனிதனை இறக்கும் அப்போலோ விண்வெளித் திட்டத்தைக் கொண்டு வந்தவர் இதே கென்னடிதான். அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதன் சந்திரனில் காலடி எடுத்து வைத்தான். பாவம் அவர். அதைப் பார்க்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவருக்காக ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 350,000 பேர் வருகை தருகிறார்கள். அதுவும் ஒரு கருஞ்சுற்றுலாத் தளமாகும்.



இப்படி உலகக் கருஞ்சுற்றுலாத் தளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். கடைசியாக, ராஸ்புட்டினைப் பற்றி சொல்லி விடுகிறேன். ரஸ்புட்டின் எனும் பெயர், உலக வரலாற்றுச் சுவடுகளில் மறைக்க முடியாத கறைகளை விட்டுச் சென்ற பெயர். ஆனால், எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர். அது ஒரு மந்திரச் சொல். வரலாற்றில் ரஸ்புட்டின் எனும் சொல் இல்லாமல் இருந்தால், அது ஒரு வரலாறாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெயர் புகழ்பெற்றது.



ரஷ்யாவின் ஆட்சி பீடத்தை ஆட்டிப் படைத்த ரஸ்புட்டின்



ரஸ்புட்டின் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பள்ளிக்கூட வாசல் பக்கமே போகாதவன். ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு திரிந்தவன். கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஊர் சுற்றித் திரிந்த ஒரு சாமான்யச் சிறுவன். ஆனால், ரஷ்யாவின் ஆட்சி பீடத்தையே தன் பிடிக்குள் இறுக்கிப் பிடித்தான் என்றால், அது ஒரு பெரிய விசயம் இல்லையா.



காடுமேடுகளில் அலைந்த அந்தச் சிறுவன்தான், ரஷ்ய நாட்டு மகாராணியையே தன் மாயவலைக்குள் சிக்க வைத்தான். அந்த மகாராணியின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு ரஷ்யாவின் தலைவிதியையே மாற்றி அமைத்தான். உண்மையிலேயே அவன் ஒரு பைத்தியக்காரச் சித்தன்.


அந்த மகாராணி அவனுக்கு மனைவியாகவே வாழ்ந்தவள். அவனைக் கொல்வதற்கு என்ன என்னவோ செய்து பார்த்தார்கள். மனுஷனை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசியில் ஒரு வழியாகக் கதையை முடித்து விட்டார்கள். எப்படி? அது ஒரு வரலாற்று ஆவணம்.

19 மே 2016

ஸ்ரீ விஜய பேரரசு - 1

இந்தோனேசியா உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காவது இடம். 26 கோடி மக்கள். அந்த நாட்டைச் சுற்றிலும் 13,466 தீவுகள். அது ஓர் அழகிய அதிசயமான பூமி.


இந்தோனேசியா எனும் சொல்லில் பற்பல பழைமைகள் பற்பல புதுமைகள். அவற்றில் பற்பல மர்மங்கள். அந்தச் சொல்லுக்குள் நீண்ட நெடிய ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் 1000 ஆண்டுகள் இந்தியர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்ததும் ஒரு வரலாறு. மலைக்கவும் வேண்டாம். திகைக்கவும் வேண்டாம். உருப்படியான ஓர் உண்மையை மறைக்கவும் வேண்டாம்.

இந்தோனேசியாவைப் பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சி செய்து உள்ளன. முதலில் ஒரு பட்டியல் வருகிறது. பாருங்கள். அந்தப் பேரரசுகளைத் தோற்றுவித்தவர்கள்; எந்த ஆண்டில் எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்கள்:
 

1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377

7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045

13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500


இந்தப் பேரரசுகள் எல்லாம் காலத்தால் கதைகள் சொல்லும் பேரரசுகள். இவற்றுள் மிக வலிமை வாய்ந்ததாக மஜபாகித் பேரரசு கருதப் படுகிறது. அந்தப் பேரரசின் கீழ், ஒரு கட்டத்தில் அதாவது கி.பி. 1350 லிருந்து 1389 வரையில் 98 சிற்றரசுகள்  இயங்கி இருக்கின்றன.

சுமத்திரா, நியூகினி, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, சூலு தீவுக் கூட்டங்கள், பிலிப்பைஸ், கிழக்கு தீமோர் நாடுகள் என ஒட்டு மொத்த தென்கிழக்காசியாவே மஜபாகித் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.

(சான்று: http://www.indonesianhistory.info/map/majapahit.html - Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History).

இந்தியப் பேரரசுகள் இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. இந்தப் பேரரசுகளைத் தவிர மேலும் பற்பல சிற்றரசுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்து உள்ளன. இன்னும் ஒரு விசயம்.

பாலித் தீவில் முதன்முதலில் ஒரு சிற்றரசை  உருவாக்கியது ஓர் இந்திய மன்னர். அவருடைய பெயர் ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesarivarma). பல்லவ மன்னர்களின் வழித்தோன்றல். அந்தச் சிற்றரசு கி.பி.914ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது. அங்கே சைவமும் புத்தமும் ஒரே சமயத்தில் பின்பற்றப் பட்டன.

சஞ்சாயா பேரரசை ஆட்சி செய்த ஸ்ரீ இசயானா விக்ரமதாமதுங்கா (Sri Isyana Vikramadhammatunggadeva) எனும் அரசரின் ஆட்சி காலத்தில் பெராப்பி எரிமலை வெடித்தது. சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இவருக்குப் பின்னர் அவருடைய மகள் இசானாதுங்க விஜயா (Isanatungavijaya) ஆட்சிக்கு வந்தார்.

பெராப்பி எரிமலை வெடிப்பினால் சஞ்சாயா பேரரசு  தன் நிர்வாகத் தலைநரைக் கிழக்கு ஜாவாவிற்கு மாற்றியது. அந்த மாற்றத்தில் சஞ்சாயா எனும் மற்றொரு சிற்றரசும் உருவாக்கப்பட்டது. ஓர் இடைச் செருகல். சஞ்சாயா எனும் பெயரில் இரு அரசுகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒன்று சஞ்சாயா சிற்றரசு. மற்றொன்று சஞ்சாயா பேரரசு.

கிழக்கு ஜாவாவிற்கு மாறிய சஞ்சாயா பேரரசு அப்படியே தன் அதிகார வலிமையை பாலித் தீவிலும் களம் இறக்கியது. அந்த வகையில் தான் பாலித் தீவில் முதன்முதலாக ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவானது. இந்து சமயம் நிலைத்துப் போனது. அதனால் இப்போது பாலித் தீவில் வாழ்பவர்களில் 83 புள்ளி 5 விழுக்காட்டினர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். இதுதாங்க வரலாறு. இதுதாங்க வரலாற்று உண்மை.

இந்தத் தகவல்கள் எல்லாம் எப்படி கிடைத்தன என்று கேட்கலாம். நல்ல கேள்வி. இந்தோனேசியாவில் ஜாகர்த்தா, மேடான், சுராபாயா, பாண்டுங், செமாராங் எனும் நகரங்களில் பழஞ்சுவடிக் காப்பகங்கள் உள்ளன. அங்கே இந்த வரலாற்று உண்மைகளை அச்சு அசலாக எழுதி வைத்து இருக்கிறார்கள்.

அகழாய்வு செய்யப்பட்ட கல்வெட்டுகள், பழஞ்சுவடிகள், மண்சுவடுகள் போன்றவற்றைப் பத்திரப்படுத்திக் காட்சிப் படுத்துகிறார்கள். அங்கே வரலாற்றை வரலாற்றுப் பூர்வமாகப் பார்க்கிறார்கள். அதனால் வரலாறு படைக்கிறார்கள்.

பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் பாட்டனும் பாட்டியும் பட்டம் விட்டார்கள் என்று எழுதும் காமா சோமாக்கள் அங்கே இல்லை. சட்டைகளைக் கழற்றி மட்டைகளைக் கட்டி அழகு பார்க்கும் வரலாற்று வித்தைகளும் அங்கே இல்லை. அந்த வகையில் வரலாறுகளைச் சிதைத்து வடிவேலு கணக்கில் யாரையும் சிரிக்க வைப்பதும் இல்லை. சரி. விசயத்திற்கு வருவோம்.

இந்தோனேசியா. இதன் மூலச் சொல் சிந்து நதி (Indus River). அடுத்து ‘இண்டஸ்’ (Indus)  ‘நேசஸ்’ (nèsos). இந்த இரு சொற்களில் இருந்து இந்தோனேசியா (Indonesia) எனும் சொல் உருவானது. இண்டஸ் - நேசஸ் எனும் இரண்டு சொற்களுமே கிரேக்கச் சொற்களாகும். இந்தோ நேசஸ் (Indo nèsos) எனும் கூட்டுச் சொற்கள் மருவி இந்தோனேசியா (Indonesia) என்று மாற்றம் கண்டன. இண்டஸ் என்றால் சிந்து. நேசஸ் என்றால் தீவு.

இந்த இண்டஸ் எனும் சொல்லில் இருந்து தான் இந்தியா எனும் சொல்லே உருவானது. அந்த வகையில் இந்தியா எனும் சொல் ஒரு கிரேக்கச் சொல் ஆகும். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சரி.

இந்தோனேசியா எனும் சொல்லை 1850இல் ஜேம்ஸ் ரிச்சர்ட்சன் லோகான் (James Richardson Logan) எனும் பிரித்தானிய கல்வியாளர் தான் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னர் டச்சுக்காரர்கள் பயன்படுத்தினார்கள். இருப்பினும் பரவலாகப் பயன்படுத்தப் படவில்லை.

பொதுவாக இந்தோனேசியா எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை. கிழக்கு இந்தியத் தீவுகள் என்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். டச்சுக்காரர்களுக்குப் பின்னர் வந்த பிரித்தானியர்களும் கிழக்கு இந்தியத் தீவுகள் என்றே அழைத்தனர்.

இந்த இந்தோனேசியாவைப் பற்பல அரசுகள் ஆட்சி செய்துள்ளன. அவற்றுள் வரலாற்றில் பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அரசு ஒன்று இருந்தது என்றால் அதுதான் ஸ்ரீ விஜய அரசு. இந்தோனேசியாவை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மாபெரும் ஓர் அரசு. இந்த அரசைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஸ்ரீ விஜய என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஸ்ரீ என்றால் நற்பேறு, மகிழ்ச்சி. விஜய என்றால் வெற்றி அல்லது மிகச்சிறந்த என்று பொருள். ஸ்ரீ விஜய பேரரசு இந்தோனேசியாவின் சுமத்திரா தீவை மையம் கொண்ட ஒரு பேரரசு.

அந்தப் பேரரசு 8ஆம் - 12ஆம் நூற்றாண்டுகளில் புத்த மதத்திற்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கியது. 7ஆம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான இந்திய வணிகர்கள் சுமத்திராவிற்கு வந்தனர். வணிகம் பெருகியது. இந்து மதமும் புத்த மதமும் செழித்தோங்கியது.

10ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜய பேரரசின் வழித்தோன்றல்களாகச் சைலேந்திரா, மத்தாராம் அரசுகள் உருவாகின. சைலேந்திரா அரசு போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது.  மத்தாராம் (Mataram) அரசு பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம்.

இந்தக் கோயிலை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்தக் கோயிலை காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஆங்கிலேயர் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். அது தவறு. அதைக் கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர்.

13ஆம் நூற்றாண்டில் மஜாபாகித் அரசு உருவானது. காஜா மாடா (Gajah Mada) எனும் அரசரின் கீழ் உச்சத்தைத் தொட்டது.

ஸ்ரீ விஜய பேரரசின் வணிகத்துறை சீனா, இந்தியா, வங்காளம், மத்திய கிழக்கு நாடுகள் வரை பெருகி இருந்தது. சீனாவின் தாங் வம்சாவளியில் இருந்து சோங் வம்சாவளி வரை நீடித்தது. 13ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசு உலக வரலாற்றில் இருந்து மறைந்து போனது. சிங்காசாரி, மஜாபாகித் அரசுகளின் விரிவாக்கத்தினால் அந்த மறைவு ஏற்பட்டு இருக்கலாம்.

அதன் பின்னர் ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. அந்தப் பேரரசைப் பற்றி உலக வரலாறு சுத்தமாக மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் இந்தோனேசியாவில் வாழ்ந்த இந்தோனேசியர்களுக்கே தெரியாமல் தான் இருந்தது.

1918ஆம் ஆண்டு ஜார்ஜ் கோடெஸ் (George Coedès) எனும் பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னார். அப்படி ஒரு மாபெரும் அரசு இந்தோனேசியாவில் இருந்ததாகச் சொல்லும் போது உலகமே வியந்து போனது. முதலில் அதிர்ச்சி அடைந்தது சுமத்திரா மக்கள் தான். ஏன் என்றால் அவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள்.

1984ஆம் ஆண்டு விமானங்கள் மூலமாக பலேம்பாங் பகுதியைப் படம் பிடித்தார்கள். மனிதர்கள் உருவாக்கிய கால்வாய்கள், அகழிகள், குளங்கள், செயற்கைத் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தவிர கை வேலைப் பாட்டுப் பொருட்கள், புத்தச் சிலைகள், உருண்மணிக் காப்புகள், மண்பாண்டங்கள், சீனாவின் பீங்கான் சாமான்களும் கிடைத்தன.

ஸ்ரீ விஜய நகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. நிறைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்தன. இப்போது அதே அந்த இடத்தில் ஸ்ரீ விஜய தொல்லியல் பூங்காவை (Sriwijaya Kingdom Archaeological Park) உருவாக்கி அழகு பார்க்கிறார்கள்.

தென் சுமாத்திராவின் பலேம்பாங் நகரில் மூசி எனும் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையோரங்களில் ஸ்ரீ விஜய பேரரசு மையம் கொண்டு இருந்தது எனும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டது. அந்த முடிச்சை அவிழ்த்தவர் ஒரு பிரெஞ்சுக்காரர். அவருடைய பெயர் பியரி ஈவஸ் மாங்குயின் (Pierre-Yves Manguin).

2013ஆம் ஆண்டு இந்தோனேசியப் பலகல்கலைக்கழகம் தீவிர ஆய்வுப் பணியில் இறங்கியது. அதன் பயனாக பாத்தாங் ஹாரி ஆற்றுப் பகுதியில் ஜாம்பி எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசு இயங்கி வந்ததாக உறுதிபடுத்தப்பட்டது.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த பல இந்திய மர்மங்களைப் பிரெஞ்சுக்காரர்கள் தான் அதிகமாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

அங்கோர் வாட்டில் ஓர் அதிசயம் இருப்பதாகச் சொன்னவர் ஒரு பிரெஞ்சுக்காரர். இந்தோனேசியா பெரம்பானான் திருமூர்த்தி கோயிலைக் கண்டுபிடித்து அறிமுகம் செய்ததும் ஒரு பிரெஞ்சுக்காரர். போராபுடோர் புத்த ஆலயங்களைப் பற்றிச் சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர். ஸ்ரீ விஜய பேரரசைப் பற்றி சொன்னதும் ஒரு பிரெஞ்சுக்காரர் தான். இன்னும் இருக்கிறது. ஆக ஒரு வகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கு இந்தியர்கள் உலகம் நன்றி சொல்ல வேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். இன்னும் ஒரு விசயம்.


இந்தோனேசியா முழுமையும் இந்தியர்கள் 1000 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தோனேசியர்களின் உடலிலும் இந்திய இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதை எந்தக் கொம்பனாலும் மறுக்க முடியாது. ஆக, அங்கிருந்து பக்கத்து நாட்டிற்கு குடியேறியவர்களுக்கு என்ன இரத்தம் ஓடலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.