28 ஜூலை 2016

சாதிகள் இல்லையடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி,கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்

 
சாதிகள் இல்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்... என்று பாடும் போது ஏற்படும் உணர்ச்சியும் அதை ஒட்டி எழும் சமுதாயக் கோபமும் குறைந்த பட்சம் அவர் அவர் வாழ்க்கையில் கூட நடைமுறையாக உருமாறுவது இல்லை. 
 

 அதைவிட பாரதி தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தான் அதை எழுதி இருக்கிறார் என்பதைப் போலத் தான் சிலரின் நினைப்பும் இருக்கிறது.

எனக்கு தெரிந்த நாடறிந்த மூத்தக் கல்வியாளர் ஒருவர். முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று இருந்த ஒரு சாதிச் சங்கச் சந்திப்பில் அங்கலாய்த்து இருக்கிறார். இது அண்மையில் நடந்த நிகழ்ச்சி. 

எழுத்தில் ஒன்றும் நடத்தையில் ஒன்றுமாய் வேசம் போடும் அந்த மாதிரி ஆட்களுக்குத் துணை போவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. 


வெளிப்படையாக இல்லை. ஆனால் காதோடு காது வைத்த மாதிரி இந்த சாதிப் பிரச்சினை மிகவும் அணுக்கமாக மறைமுகமாக உலாவிக் கொண்டு இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய போராட்டம்.

நம் நாட்டில் தலைதூக்கி விரித்தாடும் சாதி அமைப்புகளையும் சாதிச் சங்கங்களையும் இளைய தலைமுறையினர் நிராகரிக்க வேண்டும். 

என் காலத்தில் சாதி இல்லாமல் போகும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. அதன் தாக்கமே பலரைப் பகைத்துக் கொள்ளச் செய்கிறது.

17 ஜூலை 2016

தமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும்

சோதிடத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற சோதிட வல்லுநர்கள் பலர் உள்ளனர். அவர்களைச் செந்தூரப் பூக்களாய் உயர்த்திப் பார்க்கிறோம். அதே சமயத்தில்... தமிழில் சரியாக எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் சிலரும் பஞ்சாங்கப் பைகளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் போகிறார்கள்.



இவர்களால் தான் சோதிடத்திற்குச் சோதனை மேல் சோதனைகள். அவர்களை மந்தாரப் பூக்களாய்த் தான் தாழ்த்திப் பார்க்கிறோம்.

அந்த மாதிரியான சில பல கற்றுக் குட்டிகளினால் பாவம்... நம்மில் பலர் சோதிடத்தில் ரொம்பவுமே நம்பிக்கை இழந்து போகின்றோம். அதனால் சோதிடத் துறையை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்திலும் தள்ளப் படுகின்றோம்.

சோதிடம் உண்மையா... பொய்யா... நம்பலாமா... வேண்டாமா... என்று பலரும் பல கோணங்களில் அலசிப் பார்த்து அவதிப் படுகின்றனர். ஆனால் யாராலும் எவராலும் எந்த ஒரு தெளிவான முடிவையும்... இதுவரையிலும் எடுக்க முடியவில்லை.

இன்னும் சிலர் சோதிடத்தில் பாதி உண்மை... பாதி பொய் என்றும் சொல்கின்றனர். இதில் எந்தப் பாதி உண்மை... எந்தப் பாதி பொய்... தலை சுற்றிக் கிறுகிறுத்தும் போகிறது.

ஜோசியம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். ஜீயோடிஸ் (Jyótis) எனும் சொல்லில் இருந்து பிறந்தது. இந்தியச் சோதிடத்தில் இரு பிரிவுகள் உள்ளன. முதலாவது இந்து சோதிடம்.

அடுத்தது வேத சோதிடம். ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக் கிரகங்கள் எந்த நிலைகளில் எந்த அமைப்புகளில் அமைந்து இருந்தன என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது தான் ஜாதகம். அந்த வகையில் தான் ஒரு குழந்தையின் ராசி, நட்சத்திரம், இலக்கணம் போன்றவை குறிக்கப் படுகின்றன.

காலக் கணிப்பு முறையினால் உருவானது பஞ்சாங்கம். ஆக பஞ்சாங்கம் என்பது ஒரு கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து பிரிவுகளைக் கொண்டது. சரி.

அடுத்து... சோதிடம் என்பது அறிவியல் கோணத்தில் உறுதிப் படுத்த முடியாத ஒரு துறை ஆகும். இதை நாம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.

அதாவது சோதிடத் துறைக்கு அறிவியல் அடிப்படைச் சான்றுகள் எதுவும் இல்லாமல் போனது தான். Hypothethical என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அது ஒரு வகையான மூடநம்பிக்கை என்பது இன்னும் ஒரு சாராரின் கருத்து. சோதிடத்தை நம்புவதும் நம்பாததும் அவரவரின் தனிப்பட்ட உரிமை. அந்த நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை. ஆனால் நம்முடைய (அறிவியல்) கருத்துகளைச் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. சரிங்களா...

சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Sir Venkatraman Ramakrishnan) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். 2009-ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரைபோசோம் (Ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது பற்றி ஆய்வுகளைச் செய்தார். நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சொல்கிறார்.

‘ஒருவர் பிறந்த நேரத்திற்கும்... கோள்களின் இயக்கத்திற்கும்... அவர் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் அது போன்ற ஒரு நம்பிக்கை ஒருவரிடம் வேர் ஊன்றிப் போய் விட்டால் அதை மாற்றுவது என்பது கடினம்’ என்கிறார்.

சண்டிகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓர் அறிவியல் கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார். (சான்று: https://ta.wikipedia.org/s/bnh). இது ஓர் அறிவியலாளரின் கருத்து. சரிங்களா.  

சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே அதன் பொருள். விண்மீன்கள் என்றால் நட்சத்திரங்கள். சரி. Astrology எனும் சொல்லைப் பிரித்துப் பாருங்கள். Astro என்றால் Star. அடுத்து Logy என்றால் நம்பிக்கை அல்லது படிப்பு.

ஆக சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது தான். அதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை. ஆக ஆதிகால மனிதனின் வாழ்க்கையில் பூமியில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வானில் தெரியும் பொருட்கள் நகர்வதே காரணம் என அவன் ஒரு கற்பனையை உருவாக்கி வைத்துக் கொண்டான். [Hansson, Sven Ove; Zalta, Edward N. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.]

வானவியல் (Astronomy), சோதிடம் (Astrology) இந்த இரண்டும் வேறு வேறு துறைகள் தான். இருந்தாலும் இந்த இரண்டுமே வான் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. இரண்டிற்குமே சில பல பொதுவான அம்சங்கள் உள்ளன.

சூரியக் குடும்பத்தில் சூரியன் (Sun), பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி (Venus), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune), புளுட்டோ (Pluto) ஆகிய கிரகங்கள் உள்ளன. தெரிந்த விசயம்.

ஆனால் சோதிடத் துறை சூரியனையும் சூரியனைச் சுற்றி வரும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றது. சூரியக் குடும்பத்தின் மற்ற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடவே இல்லை.

அது மட்டும் அல்ல. சோதிடக் கட்டத்தில் நம் சூரியக் குடும்பத்தின் தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். [Bok, Bart J.; Lawrence E. Jerome; Paul Kurtz (1982). "Objections to Astrology: A Statement by 186 Leading Scientists.] சூரியன் ஒரு கோள் அல்ல. அது ஒரு நட்சத்திரம்.

அடுத்து பூமியின் துணைக் கோளம் சந்திரன். இதற்கும் சோதிடத்தில் மற்ற கோள்களைப் போல ஒரு பதவி தரப் படுகிறது. அது தவறு என்று அறிவியலாளர்கள் சொல்கின்றனர். சந்திரன் ஒரு கோள் அல்ல. அது பூமியின் துணைக்கோள் ஆகும்.

ஆக, ஒரு துணைக்கோள் எப்படி கோள் ஆக முடியும். பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுவது வானியல் கோட்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

மறுபடியும்... சோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களைப் பற்றி குறிப்பிடப் படவே இல்லை. ராகு, கேது ஆகியவை கோள்கள் என்று சோதிடத்தில் குறிப்பிடப் படுகின்றன. நல்லது.

உண்மையில் இந்த ராகு, கேது இரு கோள்களுமே சூரியக் குடும்பத்தில் இல்லவே இல்லை. உருவமும் அருவமும் இல்லாத கோள்கள். அசல் கற்பனையான கோள்கள் ஆகும். கற்பனையான கோள்களை வைத்துக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப் படுகிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து. [Subbarayappa, B. V. (14 September 1989). "Indian astronomy: An historical perspective".]

பாம்பு என்ற ஒரு ஜீவனைக் கொண்டு வந்து... அதன் தலையைத் தனியாக்கி... தலைக்கும் பாம்புக்கும் தனித் தனியாக ராகு கேது என்று பெயரைச் சூட்டி இருக்கிறார்கள்... இதை மறுபடியும் சொல்ல வேண்டி வருகிறது.

ராகு, கேது எனும் கோள்கள் வானவியலில் (Astronomy) கிடையவே கிடையாது. இவை ஆதிகால மனிதனின் கற்பனைக் கோள்கள் ஆகும்.

காலம் காலமாக மனிதன் தனக்குத் தெரிந்த விசயங்களையும் தெரியாத விசயங்களையும் வானத்தை அண்ணாந்து பார்த்துத் தெரிந்து கொண்டு வந்து இருக்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் நடந்து இருக்கின்றன.

அந்தக் காலக் கட்டத்தில் அப்போது வாழ்ந்த சில அறிவு ஜீவிகள் அந்த இரண்டையும் தொடர்பு படுத்தி பாமர மக்களிடம் பாராட்டுகளைப் பெற்று இருக்கின்றனர்.

ஆக மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு... வானில் வலம் வரும் சூரியன் சந்திரனில் ஏற்படும் நிகழ்வுகளும் நகர்வுகளுமே காரணம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.

Astrology thus lost its academic and theoretical standing and common belief in it has largely declined. Astrology is now recognized to be pseudoscience.

சூரியனும் சந்திரனும் ஒளிவிடும் பொருட்கள். அவற்றின் இயற்பியல் காரணங்களைப் பற்றி அந்தக் கால மனிதர்களுக்கு எதுவுமே தெரியாமல் இருந்து இருக்கிறது. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நான் சொல்லவில்லை. இதுவும் ஓர் அறிவியலாளரின் கருத்து. [Zarka, Philippe (2011). "Astronomy and astrology". Proceedings of the International Astronomical Union 5 (S260): 420–425]

நீங்கள் வசிக்கும் இடத்தில் யாராவது புதிதாக வந்து நடமாடிக் கொண்டு இருந்தால்... அவரைப் பற்றி நமக்குத் தெரிந்தது தெரியாதைப் பற்றி எல்லாம்... சும்மா எடுத்து விடுகிறோம். இல்லையா... அந்த மாதிரி தான் இதுவும். அள்ளி விடுவதிலும் நல்ல சுகம் கிடைக்கலாம். அப்போது இல்லை இப்போது.

ஆக, வானில் தெரிந்த சூரியன், சந்திரன் மற்றும் சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்பு படுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றைக் கணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பின்னர் காலத்தில் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் வரலாற்றுக் கதை.

சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் போன்றவை இந்த இந்த இடத்தில் இருந்த போது... இந்த இந்த நிகழ்வுகள் நடந்தன என்ற ஒரு தற்செயல் நிகழ்ச்சியால் உருவானதுதான் சோதிடம். அதனால் தான் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாரும் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்துள்ளனர்.

சோதிடம் என்பது முன்பு காலத்தில் மன்னர்களின் காரண காரியங்களுக்குக் குறிசொல்லும் பழக்கமாக இருந்து வந்துள்ளது. அப்படித் தொடங்கிய சோதிடம் தான் சன்னம் சன்னமாய்ப் பாமர மக்களிடம் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படியே பீடு நடையும் போட்டது.

இன்றைக்கு வீடு கட்டுதல், புதுமனை புகுதல், பெயர் சூட்டுவது போன்றவற்றில் தொடங்கி சகுனம் பார்ப்பது வரை வந்து நிற்கிறது. அடுத்து வாஸ்து பார்ப்பதிலும் போய் முடிகிறது. தயவு செய்து நம்மைத் தவறாக எடை போட்டு விட வேண்டாம். நம்முடைய கருத்துகளைச் சொல்கிறோம். மாற்றுக் கருத்துகள் இருந்தால் சொல்லலாம்.

சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளன. ஆகவே அதனை நகல் அறிவியல் என்றும் அழைக்கிறார்கள்.

சோதிட நம்பிக்கை பழங்கால வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தே வளர்ந்து வந்துள்ளது. நம் பிரச்சனைகளுக்கு யாராவது வழி காட்ட மாட்டார்களா... உதவிக் கரம் நீட்ட மாட்டார்களா... நம்முடைய வெற்றித் தோல்விகள் நம் கையில் இல்லை... வேறு யாரோ ஒருவர் தான் காரணம்... இந்த மாதிரியான தன்னம்பிக்கை குறைவினாலும் சோதிடம் செழித்து வளர்ந்தது.

உலகின் பல்வேறு நாகரிகங்களிலும் அந்தந்த நாகரிகங்களின் கணிப்புப் படியே சோதிடமும் அப்போது உருவாக்கப்பட்டது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ், ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப் படுகிறது. ஆனால் அவற்றின் கணிப்புகள் வேறு மாதிரியானவை. ஒன்றை ஒன்று சார்ந்தவை அல்ல. தனித் தனியாக உருவானவை. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இந்திய வானின் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரித்து உள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டு உள்ளது.

தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் அனைத்துலக வானியல் கழகத்தினர் வானில் தெரியும் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாகப் பிரித்து உள்ளனர். இவற்றில் முக்கியமானவை வடதுருவப் பெருங்கரடிக் கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச் சிலுவை ஆகியவை ஆகும். இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தைச் சுற்றி வருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப் படுகின்றன.

இன்னும் ஒரு விசயம். யுரேனஸ் (Uranus) கிரகம் 1781ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. வில்லியம் ஹெர்சல் (Sir William Herschel) என்பவர் கண்டுபிடித்தார். நெப்டியூன் (Neptune) கிரகம் 1846ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புளுட்டோ (Pluto) கிரகம் 1930ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் ஒரு கிரகம் இருக்கிறது. அதன் பெயர் செரிஸ் (Ceres). இது ஒரு குறுங்கோள் (dwarf planet) ஆகும். இந்தக் கிரகம் 1801ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சரி.

சோதிடம் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. 2500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. சரி. அண்மையில் சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நான்கு கிரகங்களையும் எதில் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்களாம்.

ஒன்பது கிரகங்களைக் கொண்டு பஞ்சாங்கம் எழுதப்பட்டது.  இப்போது பத்து கிரகங்கள் உள்ளன. அப்படி என்றால் உலகத்தில் உள்ள எல்லா பஞ்சாங்கங்களையும் மாற்ற வேண்டி வருமே. என்ன செய்யப் போகிறார்களாம். எந்த ஒரு தனிப்பட்ட பஞ்சாங்கத்தையும் சுட்டிக் காட்டவில்லை.

இன்று இரவு அடிவானில் தோன்றும் விண்மீன் (நட்சத்திரம்) ஒன்றின் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நட்சத்திரம். பெயர் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்படிப் பார்த்தாலும் அந்த நட்சத்திரம் 4 நிமிடம் தாமதமாகத் தான் வானில் தெரியும். ஏன் தெரியுமா. நம் பூமியின் சூழற்சி தான் அதற்குக் காரணம்.

இதைத் தவிர நட்சத்திரங்களும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆக என்றோ எப்போதோ வானில் பார்த்த நட்சத்திரங்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு சோதிடம் கணிக்கப் படுகின்றது என்று நான் சொல்லவில்லை. நோபல் பரிசு பெற்ற சர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சொல்கிறார். 

வானில் தெரியும் அத்தனை நட்சத்திரங்களும் தங்களின் பழைய இடத்தில் இருந்து என்றோ எப்போதோ இடம் பெயர்ந்து ‘பை பை’ சொல்லி ஆயிரம் ஆயிரம் மாமாங்கங்கள் ஆகிவிட்டன. இப்போது கணித்துச் சொல்லப்படும் நட்சத்திரங்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவிற்கு நகர்ந்து போய் விட்டன.

எடுத்துக் காட்டாக திருவாதிரை நட்சத்திரம். 640 ஒளியாண்டுகள் தூரத்திற்கு நகர்ந்து போய் விட்டது. நடப்பது வேறு கணிப்பது வேறு.

அறிவியல் என்றால் அறிவு + இயல். மனித அறிவு சார்ந்த ஒரு துறை. மிகச் சரியான சான்றுகளுடன் உறுதிபடுத்தும் துறை. ஆக, சோதிடத்தின் மீது அவரவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறேன். இந்தக் கட்டுரையின் மூலமாக சிலருக்கு வருத்தங்கள் ஏற்படலாம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சான்றுகள்:

1. Sven Ove Hansson; Edward N. Zalta. "Science and Pseudo-Science". Stanford Encyclopedia of Philosophy.
2. Vishveshwara, edited by S.K. Biswas, D.C.V. Mallik, C.V. (1989). Cosmic Perspectives: Essays Dedicated to the Memory of M.K.V. Bappu (1. publ. ed.).
3. Astronomical Pseudo-Science: A Skeptic's Resource List". Astronomical Society of the Pacific.
4. Thagard, Paul R. (1978). "Why Astrology is a Pseudoscience" (PDF).
5.www.helsinki.fi/teoreettinenfilosofia/oppimateriaali/Sintonen/Paul_R._Thagard_-_Why_Astrology_Is_A_Pseudoscience.pdf

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2

தினத்தந்தி (மலேசியா) – 19.03.2016

பெங்களூரைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள கர்நாடகத்தினர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அபாரம் அற்புதம். மிகவும் புத்திசாலித் தனமாகக் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். 


உண்மையிலேயே பெங்களூரு நகரம் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். திருப்பதியும் தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய இடம். அது தெரியுமா உங்களுக்கு...

ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. அப்போது தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதிகள் கட்டி இருக்கிற கோவணத்தையும் வேட்டியையும் அவிழ்த்துக் கொடு என்று கேட்டு இருந்தால்... வெட்கம் சூடு சொரணை இல்லாமல் கழற்றிக் கொடுத்தாலும் கொடுத்து இருப்பார்கள். அப்பேர்ப்பட்ட தர்மகர்த்தாக்கள்.

அந்த அரசியல்வாதிகள் எல்லோரும் மேலே இருந்த மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தானே. பந்த பாசம் கொஞ்சமாவது இருக்கத் தானே செய்யும். தப்பாக நினைக்க வேண்டாம். வாழ்ந்த வீட்டிற்காக வாழப் போகிற வீட்டை இடித்து உடைத்துப் பார்க்கலாமா. இது தான் என்னுடைய ஒன் மில்லியன் டாலர் கேள்வி.


1956-இல், இந்தியாவின் மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப் பட்டன. ஒரு மாநிலத்துடன் வேறொரு மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு இருக்க வேண்டும். அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும். அதுதான் நடுவண் அரசு முதலில் சொன்ன விதி முறை.

சரி. தமிழகத்துக்குச் சொந்தமான பெங்களூரு எப்படி கன்னடத்திற்குத் தாரை வார்க்கப் பட்டது. என்னென்ன ஏமாற்று வேலைகள் நடந்தன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

பெங்களூரு (Bangaloore) பிரச்சினை ஓசூரில் ஆரம்பிக்கிறது. ஓசூர் என்பது இப்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பகுதி. வடக்கே தமிழக - கன்னட எல்லையில், பெங்களூருக்கு மிக அருகில் இருக்கிறது. இந்த ஓசூரில் 1950-களில் தெலுங்கு பேசுவோர் 45 சதவிகிதம் இருந்தனர். அடுத்து, கன்னடம் பேசுவோர் 40 சதவிகிதம் இருந்தனர். தமிழ்மொழி பேசுபவர்கள் 10 சதவிகிதம் மட்டுமே இருந்தனர். எஞ்சியவர்கள் வடநாட்டுக்காரர்கள். சரிங்களா. நன்றாகக் கவனியுங்கள்.

ஓசூர் வேண்டாம் பெங்களூரு வேண்டும்

ஓசூரில் தெலுங்கு பேசும் மக்களே அதிகமாக இருந்தனர். அந்தத் தெலுங்கு பேசும் மக்கள் பல நூறு ஆண்டுகளாக ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லாமல் இருந்தனர். மறுபடியும் சொல்கிறேன். பல நூறு ஆண்டுகள். இருந்தாலும் மொழி வாரியாக நிலப் பகுதிகள் பிரிக்கப்படும் போது ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி ஆந்திரா கையெடுத்துக் கும்பிட்டது.




இதில் ஒரு சூசகமான ரகசியம் என்ன தெரியுமா. ஓசூர் என்பது ஒரு வறண்ட பூமி. நிறைய பொட்டல் காடுகள். மொழுக்கையான குன்றுகள். வழுக்கலான மலைகள். மொட்டையான தாவரங்கள். இயற்கையான முறையில் பச்சைகள் வளர்வது ரொம்பவும் கடினம். மாட்டுச் சந்தையில் பொறுக்கி எடுத்த புண்ணாக்கு மாதிரி.

அதனால் அங்கே விவசாயமும் குறைவு. விளைச்சலும் குறைவு. இதுதான் வெளியே சொல்லப்படாத காரணம். வெளியே சொல்லப்படாத ரகசியம். ஓசூர் ரகசியம். அதுதான் உண்மையிலும் உண்மை. ஒரு சின்னச் செருகல். இந்த ஓசூருக்கு மூன்று முறை போய் இருக்கிறேன். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்குப் போகிற வழியில் இருக்கிறது.

2006ஆம் ஆண்டு. ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்திராலயா இராகவேந்திரா ஆலயத்திற்குப் போய் இருந்தேன். திரும்பி இரவு பத்து மணிக்கு ஓசூர் இரயில் நிலையத்தில் இறங்கினேன். அப்போது ஒரு பெரிய ஆச்சரியம். நம்புவீர்களோ இல்லையோ ஓசூரில் பனி கொட்டியது. இரவு நேரத்தில் ஓசூர் மிகவும் குளிராக இருக்கும் என்று பின்னர் கேள்வி பட்டேன். அப்புறம் இரவோடு இரவாக ஒரு டாக்சி பிடித்து விடியல் காலையில் கிருஷ்ணகிரி வந்து சேர்ந்தேன். சரி. நம்ப கதைக்கு வருவோம்.

ஆந்திராவோடு நிலத் தொடர்பு இல்லை என்பதால் ஓசூர் எங்களுக்கு வேண்டாம் என்று ஆந்திரா மறுத்து விட்டது. சொல்லி இருக்கிறேன். அடுத்து எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அப்படிப் பார்த்தால் கன்னடர்கள் வருகிறார்கள். 40 விழுக்காட்டு மக்கள் கன்னடர்கள். ஆக அடுத்த நிலையில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால் அதைக் கர்நாடகா மாநிலத்துடன் தானே இணைத்து இருக்க வேண்டும். அதுதானே நியாயமும்கூட. 




கர்நாடகாவும் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தது. தமிழகத்திற்கு மனமுவந்து கொடுக்கிறோம் என்று சொல்லி ஓசூரை விட்டுக் கொடுத்தது. ஆனால் கன்னடம் அங்கேதான் தன் சாணக்கியச் சதுரங்கக் காய்களை நல்லபடியாக நகர்த்தி இருக்கிறது. அப்போது பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமாக இருந்தது. மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரு தமிழகத்திற்குச் சொந்தம். தொடர்ந்து படியுங்கள்.

பெங்களூரு கர்நாடகாவிற்குப் போன கதை

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பெங்களூரு விவகாரம் தலைதூக்கியது. அதாவது பெங்களூருவை யாருக்கு கொடுப்பது என்கிற விவகாரம். அப்போது தான் கன்னடம் தன் துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது.

கன்னடம் என்ன சொன்னது தெரியுமா. நாங்கள் ஓசூரைப் கொடுத்து விட்டோம். ஓசூரில் கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெருந் தன்மையுடன் ஓசூரைத் தமிழகத்துக்குக் கொடுத்து இருக்கிறோம். அந்த மாதிரி… அதே மாதிரி பெங்களூருவில் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் பெங்களூருவைத் தமிழகம் எங்களுக்குத் தர வேண்டும் என்றது. நல்ல ஒரு கொடுக்குப் பிடி.




மறுபடியும் சொல்கிறேன். பெங்களூரில் கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்களே அதிகம். கன்னட மக்கள் அதிகம் உள்ள ஓசூரை நாங்கள் கொடுக்கும் போது தமிழர்கள் அதிகம் உள்ள பெங்களூரை ஏன் எங்களுக்குக் கொடுக்கக் கூடாது. பிடி எங்கே விழுந்தது பார்த்தீர்களா.

உண்மையிலேயே சொன்னால் பெங்களூரு நிலப்பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது. வேறுவழி இல்லாமல் பெங்களூருவைத் தமிழகம் கன்னடத்திற்குத் தானம் செய்தது. பெண்பிள்ளையைக் கட்டியவனோடு அனுப்பி வைக்கும் போகும் போது அப்பா அம்மா அழுவது இல்லையா. அந்த மாதிரிதான் தமிழர்கள் அழுது கொண்டே பெங்களூருவை வழி அனுப்பி வைத்தார்கள். இப்படித்தான் பெங்களூரும் சீரும் சிறப்புமாய்த் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவிற்குத் தாரை வார்க்கப் பட்டது.

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன

தமிழகம் அதற்குச் சொந்தமான பல நிலப் பகுதிகளை இழந்ததற்கு முக்கியக் காரணம் வேறு யாரும் இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த வாய்ச்சவடால் அரசியல்வாதிகள் தான். அவர்களிடம் மண் சார்ந்த உணர்வு கொஞ்சம்கூட இல்லாமல் போனதுதான் வேதனையிலும் வேதனை.

இப்போது அழுது புலம்பி என்ன பயன். கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்தாடும் காவிரிப் பிரச்சினையும் வந்து இருக்காது. முல்லைப் பெரியாறு பிரச்சினையும் வந்து இருக்காது. சொல்லும் போது மனசிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

அதன் பின்னர் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப் பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப் பட்டன. இதனால் தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன.




தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப் பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப் பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இறங்கினர்.

அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப் பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்

ஆந்திராவில் இப்போது தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். அடுத்து இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஆந்திர சட்டச் சபைக்குத் தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது.

ஆந்திர மாநிலம் பிரிக்கப் படுவதற்கு முன்பு வரை இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் என்ன என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். இது ஓர் இந்திய வரலாற்றுத் தகவல். 




அதை இங்கே மலேசியாவில் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஏன் என்றால் இங்கே தமிழர், தெலுங்கர், மலையாளிகள் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். அந்தக் குடும்பத்தின் கூரைகளைப் பிய்த்துப் பார்ப்பது என்பது ரொம்பவும் தவறுங்க.

தமிழக நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். பற்பலப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் அந்த முயற்சியினால் தான் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் அப்படியே பறந்து போய் இருக்கும். கதையும் வேறு மாதிரியாகத் தெரித்துப் போய் இருக்கும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை மட்டும் இன்றைக்கு இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக மாறி இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.

தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். நான் இந்தக் கட்சி, நீ அந்தக் கட்சி என்று பேதம் பார்க்காமல் கைகோர்த்து அந்த இழப்புகளுக்குத் துணை போனார்கள். இது தமிழக வரலாறு சொல்லும் கக்கல் கழிசலான உண்மைகள்.

விடுதலைப் போராட்ட தியாகி சங்கர்ராவ் தேவ்

ஒரு சின்ன மீள்பார்வை. இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான்.

என்ன யோசிக்கிறீர்கள். அதுதான் உண்மையுங்கூட. குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாகக் களம் இறங்கினார்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனியாக மராட்டிய மாநிலம் வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராட்டங்களைத் தொடங்கினார்.

அதன் பிறகு எல்லாவற்றையும்விட பெரிய அளவில் தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி ஒரு போராட்டம் மட்டும் தலைகாட்டவே இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் தான் முக்கியக் காரணங்கள்.

வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது சென்னை ராஜதானி எனும் பெயரில் சென்னைப் பெருநிலம் பெருமையாக விளங்கியது. அந்தக் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால் சென்னை மாநிலமும் சென்னையைச் சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.

தமிழகத்திற்குச் சேர வேண்டிய திருவனந்தபுரம் எப்படி கேரளாவுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம். (தொடரும்)

15 ஜூலை 2016

தமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1

தினத்தந்தி - மலேசியா – 18.03.2016

வெள்ளைக்காரர்கள் என்றைக்கு தமிழ்நாட்டில் காலடிகள் எடுத்து வைத்தார்களோ அன்றைக்குப் பிடித்தது தமிழர்களுக்கு ஏழரை நாட்டுக் கஷ்ட காலம்.  தமிழ் நாட்டிலும் சரி... மலேசியாவிலும் சரி... இலங்கையிலும் சரி... சகட்டு மேனிக்குச் சனி பகவானின் அஷ்டமக் கோலங்கள். ஏழு தலைமுறைகளுக்கும் அட்டகாசமான சனீஸ்வர மந்திரங்கள். 


அந்த மந்திரங்களில் தமிழ்மொழியும் பேஷாராகிப் போனது. போயி பாருங்க அண்ணாத்தே… இன்னாம சைட்டு கட்டி உடுரானுங்கோ.... தோடா ராசா கணக்கா இங்கிலீஸ்ல எழுதுறானுங்கோ… பேட் வேர்ட்ஸ் கூட உட்டுக்கிறானுங்கோ...  பேஜாருங்க… எனக்கும் மெர்சலா ஆச்சுங்கோ…

புரியுதுங்களா... புரியாவிட்டால் பரவாயில்லை. சென்னையில் இரண்டு வாரம் தங்கிவிட்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும். சரி. தமிழர்களின் கதைக்கு வருவோம்.


தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. இடையில் வெள்ளைக்கார நாரதர்கள் வந்தார்கள். நேருவிற்கு ரோஜாப்பூ குத்தி நன்றாகவே அழகு பார்த்தார்கள். 



அழகு அழகாய் ஆடிப் பாடினார்கள். அட்டகாசமாய் அமர்க்களம் செய்தார்கள். ஆனால் பாவம் தமிழ்நாட்டுத் தமிழர்கள். பாவப்பட்ட ஜென்மங்களாகிப் போனார்கள். இப்போது பரிதவிக்கிறார்கள்.

இருந்ததும் சரி இல்லை. இருப்பதும் சரி இல்லை. என்னை ஏசினாலும் பரவாயில்லை. சரி. நம்ப கதைக்கு வருவோம்.

சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனி

1639-ஆம் ஆண்டில் சென்னையில் கிழக்கிந்தியக் கம்பெனியை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அதன் பிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் பற்பல மாற்றங்கள். பற்பல திருப்பங்கள். அந்த மாற்றங்களில் புதிய ஒரு சகாப்தம். அந்தத் திருப்பங்களில் புதிய ஒரு பரிமாணம்.

ஆங்கிலேயர்கள் வலதுகாலை எடுத்து வைக்கவும் இல்லை. இடது காலை எடுத்து வைக்கவும் இல்லை. இரண்டு காலையும் சேர்த்து வைத்து தமிழ்மண்ணில் குதித்து இருக்கிறார்கள். அப்படித்தான் தமிழ் நாட்டில் இப்போதும்கூட நையாண்டியாகப் பேசிக் கொள்வார்கள்.

ஆங்கிலேயர்கள் கால் பதிக்கும் போது தமிழ் நாட்டில் மூலைக்கு மூலை சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள், நவாப்புகள், மேட்டுக்குடி பஞ்சாயத்துகள். இவர்களுக்குள் எக்கச் சக்கமான கருத்து வேறுபாடுகள். சண்டைச் சச்சரவுகள். ஆக அவர்களின் பலகீனங்களை ஆங்கிலேயர்கள் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் எனும் பழமொழியை மனப்பாடம் செய்து கொண்டு வந்து இருக்கிறார்கள்.

எங்கே அடித்தால் எப்படி வலிக்கும்


ஆங்கிலேயர்களிடம் எப்போதுமே ஒரு தாரக மந்திரம் இருந்தது. அதன் பெயர் என்ன தெரியுமா. பிரித்துவிடு வரித்துவிடு (Divide and Rule). உலகம் முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட நல்ல ஒரு வாசகம். எங்கே அடித்தால் எப்படி வலிக்கும் என்பதற்கு இலக்கணம் எழுதியவர்களே சாட்சாத்… ஆங்கிலேயர்கள் தான். 




அர்த்த சாத்திரத்தை எழுதிய சாணக்கியர் இருக்கிறாரே அவரே தோற்றுப் போவார்... போங்கள். ஒருக்கால் அந்தச் சாத்திரத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகவே படித்துக் கரைத்துக் குடித்து இருக்கலாம். சொல்ல முடியாது.

நவீன காலத்துச் சாணக்கியவாதி மாக்கியவெல்லி. அவரின் கருத்துகளில் நையாண்டி, கேலி, பரிகாசம், கிண்டல், ஏளனம் என்று எல்லாமே இருக்கும். சாகசமான மாக்கியவெல்லிசம் என்று சொல்லலாம். அதைச் சார்க்கஸம் (Sarcasm) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அந்தச் சாகசத்தின் மொத்தச் சாகுபடியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இருக்கிறதை எல்லாம் அடித்துப் பிடித்தார்கள். பிழிந்து எடுத்தார்கள். இப்போது இருக்கும் தலைவர்களில் சிலர் மிச்சம் மீதியை உறிஞ்சி உறிஞ்சி எடுத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பெயர்கள் வேண்டாமே!

அந்தக் காலத்து தமிழ்ச் சிற்றரசர்கள் தொட்டதற்கு எல்லாம் சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று சொன்னேன். உண்மைதான். அந்த வகையில் தமிழர்களின் பலகீனத்தை ஆங்கிலேயர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு காய்களை நன்றாகவே நகர்த்தினார்கள். தமிழர்களின் எதார்த்த வெள்ளந்தித் தனத்தின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். 




முதலில் தமிழ்நாடு விழுந்தது. அடுத்து தென் இந்திய மாநிலங்கள் விழுந்தன. அப்புறம் ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டமே சரிந்து விழுந்து அதோகதியானது. அப்புறம் என்ன அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்கள் பலரின் முகவரிகளும் தொலைந்து போயின.

மெட்ராஸ் நிலப்பகுதி மெட்ராஸ் மாநிலம் ஆனது

அனந்த பத்மநாபன் நாடார், புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது பாண்டியர், வாண்டாயத் தேவன், மாவீரன் அழகு முத்துக்கோன், மருதநாயகம், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, ஒண்டி வீரன், வெண்ணி காலாடி, பெரிய காலாடி, தீரன் சின்னமலை, கட்டன கருப்பணன் போன்றவர்களைத் தெரியுமா. இவர்கள் தான் வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டனர். இருந்தாலும் இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டனர். தப்பு. தூக்கிலிடப் பட்டனர்.

இவர்களில் மருது பாண்டியரின் மகன் துரைசாமி என்பவர் நம் பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அந்திம காலத்தில் அனாதையாக அரிச்சுவடி இல்லாமல் மறைந்தும்  போனார்.

சரி. விஷயத்திற்கு வருவோம். 1947-ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. மெட்ராஸ் நிலப்பகுதி (The Madras Province) என்பது மெட்ராஸ் மாநிலம் ஆனது. இருந்தாலும் 1948-ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் தான் இந்தியாவுடன் இணைந்த கடைசி சமஸ்தானம் ஆகும்.




தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை முன்பு மெட்ராஸ் மாநிலத்தில் இருந்தன.

மொழிவாரியாக மாநிலங்கள்

இருந்தாலும், 1953-இல் மெட்ராஸ் மாநிலத்தின் வட பகுதிகள் தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திர மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கப் பட்டது. தமிழ் பேசும் தென் பகுதிகள் மெட்ராஸ் மாநிலத்தில் சேர்க்கப் பட்டது.

1956-இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த வகையில் மெட்ராஸ் மாநிலமும் பிரிக்கப்பட்டது. மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இங்கு இருந்துதான் பிரச்சினைகள் தொடங்கின. அவை என்ன என்று பார்ப்போம். அதுதான் நம்முடைய இந்தக் கட்டுரையின் நோக்கமும் ஆகும். சரி.

நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல

1956-ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டன. அப்படிப் பிரிக்கப்படும் போது பெரிதும் பாதிக்கப் பட்டது தமிழ்நாடு தான். இதை யாராலும் மறுக்க முடியாது. மறுத்துப் பேசவும் முடியாது. மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலங்கள் யாருக்கு அதிகம் உரிமையாக உள்ளன. அதை வைத்துத்தான் சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்தார்கள்.




அதன்படி கேரள எல்லையை ஒட்டி இருக்கும் தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப் பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவைப் பிரிக்கும் போது நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சமயத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் கணிசமான எண்ணிகையில் இருந்தனர்.

ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்தனர். இருந்தாலும், சட்ட விதிகள் கால நேரத்திற்கு ஏற்றவாறு தலைகீழாய் மாறிப் போயின. அந்தப் பகுதிகள் ஆந்திராவுக்குக் கொடுக்கப் பட்டன.

இந்தச் சமயத்தில் படாஸ்கர் கமிஷன் எனும் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம்’ என்று சொல்லி எல்லாப் பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது. முதலில் சொன்னது என்ன. நிலங்கள் யாரிடம் அதிகமாக உள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். அது நடுவண் அரசு போட்ட கட்டளை.

ஆனால், பிரிக்கும் போது கதையே வேறு மாதிரியாகப் போனது. வாழும் மக்களின் மொழிதான் முக்கியம் என்று சொல்லி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நிலத்தை எல்லாம் அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார்கள்.

தமிழகத்துக்கு திருத்தணி வள்ளிமலை திருவாலங்காடு

மங்கலங்கிழார், ம.பொ. சிவஞானம் போன்றோர் மட்டுமே படாஸ்கர் கமிஷனின் முடிவை எதிர்த்துத் தீவிரமாகப் போராடினார்கள். ராஜாஜியும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும் தமிழத்தின் அப்போதைய திராவிடக் கழக அரசியல்வாதிகள் இந்த முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.

இதில் அண்ணாதுரை, கருணாநிதி இருவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் உண்மையிலும் உண்மை. தமிழகத்துக்குத் திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே கிடைத்தன.




1960-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி... புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி தமிழ்நாட்டுக்குச் சொந்தமான 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது. எல்லையில் இருந்து எங்கேயோ இருக்கிற சேலம், செங்கல்பட்டு மாவட்டங்கள். அந்த மாவட்டங்களில் இருந்தும் 525 சதுர கிலோமீட்டர் பகுதி ஆந்திராவுக்கு வழங்கப் பட்டது. இதில் ஆரணியாறு அணைக்கட்டும் ஆந்திராவுக்குப் போய்ச் சேர்ந்தது.

ஆக, அப்படி நடந்த கொடுக்கல் வாங்கலில் திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி பறிபோனது. நந்தி மலையும் பறிபோனது. நந்தி மலை மட்டும் தமிழ்நாட்டுடன் இருந்து இருந்தால் இப்போது தலைவிரித்து ஆடுகிறதே பாலாற்றுப் பிரச்சினை. அந்தப் பிரச்சினை வந்து இருக்கவே இருக்காது.

சென்னை நகரமும் தங்களுக்கு வேண்டும் என்று முதலில் ஆந்திரா கேட்டது. முடியாது என்று தமிழர்கள் மறுத்து விட்டார்கள். அதன் காரணமாகப் பல நிலப் பகுதிகளைத் தமிழர்கள் இழக்க வேண்டி வந்தது.

திருப்பதியைக் கொடுக்கிறோம்… அதற்குப் பதிலாக எங்களுக்குச் சென்னையைக் கொடுங்கள் என்று ஆந்திரா பிடிவாதம் பிடித்தது. தமிழர்கள் முடியவே முடியாது என்று மறுத்து விட்டனர்.

திருப்பதியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையை நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று சென்னை நகரத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள். இல்லை என்றால் சென்னை நகரமும் கனவு நகரமாக மாறிப் போய் இருக்கும். அப்போதைய தலைவர்கள் உருப்படியாகச் செய்த ஒரு காரியம். நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள்

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று இங்கே எவரையும் நாம் பிரித்துப் பேசவில்லை. எல்லோருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அண்ணன் தம்பி உறவுகள். எவரையும் உயர்வு தாழ்வுடன் நாம் பார்க்கவும் இல்லை. 




மலாயாவுக்கு இங்கே வந்தவர்கள் கூட ஒரே கப்பலில் வந்தவர்கள் தான். ஒரே படுக்கையில் படுத்துப் புரண்டவர்கள் தானே. மாமன் மச்சான் என்று சொல்லி ரஜுலா கப்பலில் துருப்புச் சீட்டு விளையாடியவர்கள் தானே. 

ஆக, தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தான் வரலாற்று ரீதியில் பார்க்கிறோம். மற்றபடி தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்று நான் பிரித்துப் பார்க்கவில்லை.  பிரித்துப் பேசவும் இல்லை. சரிங்களா.

தமிழ்நாட்டைப் பிரிக்கும் போது ஆளாளுக்குப் பெரிய பெரிய தொடைச் சப்பைகளாக வேண்டும் என்று அடித்துப் பிடித்துக் கொண்டார்கள். பிய்த்துக் கொண்டும் போனார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.

மற்றபடி இது ஒரு வரலாற்று ஆவணம். இந்திய வரலாற்றைப் படிப்பதற்கு மட்டும் பத்து ஆண்டுகள் பிடித்தன என்பதைச் சொல்லிக் கொண்டு கட்டுரையைத் தொடர்கிறேன்.

சென்னை விவகாரத்தில் தமிழ்நாட்டு கட்சிகள் சில பல அரசியல் போராட்டங்களை நடத்தின. பரவாயில்லை. ஆனால் கர்நாடகா விஷயத்தில் உஹூம்... தூங்கி விட்டார்கள். செம தூக்கம் போங்கள். திருடு போனதுகூட தெரியாமல் தூங்கி இருக்கிறார்கள். அப்பேர்ப் பட்ட தூக்கம். 

வயிறு எல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று நான் சொல்லவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். என்ன சொல்லி எங்கே அடித்து என்ன பயன். சொல்லுங்கள்.

தமிழர்களுக்கும் கூர்க் மக்களுக்கும்

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்பது தெரியுமா. குடகு மலையில் உற்பத்தியாகிறது. குடகு மலை எங்கே இருக்கிறது தெரியுமா. முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது கர்நாடகாவில் இருக்கிறது. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. வயிற்றுப் பிள்ளையைத் தத்து கொடுத்துவிட்டு அது நடந்து போகிற அழகைப் பார்த்து ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது. கட்டுரை தொடரும்.

02 ஜூலை 2016

கேமரன் மலை தெரியாத ரகசியங்கள்

மலேசிய நாட்டில் இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீதனமாகச் சீர் சிறப்புகளை வாரி இறைத்துவிட்டுப் போய் இருக்கிறாள். 



கேமரன் மலை, பிரேசர் மலை, பினாங்கு கொடி மலை, ஈப்போ கல்லுமலை, மலாக்கா செட்டித் தெரு, தைப்பிங் தாமரைத் தடாகம், பங்கோர் தீவு, புலாவ் தியோமான், கோலா கங்சாரில் இருக்கும் மலேசியாவின் முதல் ரப்பர் மரம்;

பத்து காஜாவில் இருக்கும் மலேசியாவின் கடைசி ஈயக் கப்பல்; 1940-களில், மலாயாவை ஒருநாள் ஆட்சி செய்த பத்து ஆராங் இந்தியர்கள்; ஈப்போ கோனாலி சாலையில் இருக்கும் வீரப் பெண்மணி சிபில் கார்த்திகேசுவின் கல்லறை. இப்படி நிறைய இருக்கின்றன. அடுக்கிக் கொண்டே போகலாம்.





இவை எல்லாம் நம் நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் இல்லை; சீதனங்கள். அந்த அழகுகளைப் பார்த்து ரசிக்க நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. மற்ற நாடுகளுக்குப் போவது என்றால் வரிசை பிடித்து நிற்பார்கள். தவறாகச் சொல்லவில்லை. வேதனைப்பட வேண்டாம்.

வெளிநாடுகளுக்குப் போங்கள். போய்ப் பாருங்கள். கட்டிச் சோறு புளிச் சாதம் கட்டிக் கொண்டு போங்கள். வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால்,  அதே சமயத்தில் உங்கள் நாட்டின் அழகையும் பார்த்து ரசியுங்கள். 





இது உங்கள் நாடு. இது நீங்கள் பிறந்த பூமி. உங்களுக்குச் சொந்தமான மண்ணின் அழகை முதலில் ஆராதனை செய்யுங்கள். மனதிற்குள் சின்ன ஆதங்கம். கொட்டி விடுகிறேன். ஏசினால் ஏசிவிட்டுப் போங்கள்.

ஒரு செருகல். பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை, நன்றாகப் பாடுகிறாள். அற்புதமாகப் பரத நாட்டியம் ஆடுகிறாள். நிறைய பரிசுகளை வாங்கி இருக்கிறாள். அவளைப் போய்ப் பார்க்கலாம் என்றால் சிலருக்கு நேரம் இருக்காது. இன்னும் சிலருக்கு, இரண்டு வார்த்தைகள் பாராட்டிச் சொல்லக்கூட மனசும் இருக்காது. மனசும் வராது.

மிஸ்டர் மைனர் மோகம்

ஆனால், பக்கத்து நாட்டில் இருந்து சில மினுக்கிகள் வந்து இருக்கிறார்கள். தளுக்கு மேனியைக் குலுக்கிக் காட்டுகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம். சிலருக்கு நடுஜாமத்திலேயே மிஸ்டர் மைனர் மோகம் வந்துவிடும். 




அப்புறம் இரவுகள் இம்சையாகிப் போகும். விடிய விடிய காற்றின் காலுக்கு கொலுசு கட்டுவார்கள். எஸ். எம். எஸ் அனுப்பி அனுப்பியே ரொம்பவும் சந்தோஷப் படுவார்கள்.

இவை எல்லாம் பார்த்துப் பழகிப் போன சில பழைய சமாசாரங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்ளுங்கள்.

1885-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது மலாயாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுக்கு தித்திவாங்சா மத்தியமலைத் தொடரை நிலஆய்வு செய்ய வேண்டும். மலையின் எல்லைகளை வரைய வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அதற்காக சர் வில்லியம் கேமரன் என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

அவருக்குத் துணையாக குலோப் ரியாவ் (Kulop Riau) என்பவர். இந்தத் தித்திவாங்சா மத்தியமலைத் தொடர்தான் மலாயாத் தீபகற்பத்தை இரண்டாகப் பிரிக்கிறது.  மத்திய மலைப் பகுதியின் பெரும்பாலான பகுதிகள் 1200 - 1800 மீட்டர் உயரத்தில் உள்ளன. ஆக சர் வில்லியம் கேமரனின் ஆய்வுக்கு தடபுடலான ஏற்பாடுகள்.

பதினைந்து யானைகள். இருபது குதிரைகள். சுமைகளைத் தூக்கிச் செல்ல முப்பது நாற்பது கூலியாட்கள். வழிகாட்டிகளாக இருபதுக்கும் மேற்பட்ட பூர்வீகக் குடிமக்கள். இப்படி ஒரு பெரிய பட்டாளமே நில ஆய்வுக் களத்தில் இறங்கியது. 





அவர்கள் தஞ்சோங் ரம்புத்தான் சிறுநகர் வழியாகத்தான் மலையில் ஏறி இருக்கிறார்கள். தஞ்சோங் ரம்புத்தான் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்ற ஓர் இடமாக இப்போது இருக்கின்றது.

தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை

கேமரன் மலையில் ஏறுவதற்கு ஏன் தஞ்சோங் ரம்புத்தான் வழியாகப் போக வேண்டும். சிலர் கேட்கலாம். நீங்கள் நினைக்கிற மாதிரி அப்போது தாப்பா பாதையும் இல்லை. சிம்பாங் பூலாய் பாதையும் இல்லை. ஒரே ஒரு காட்டுப் பாதை மட்டுமே இருந்தது. அதுவும் ஒற்றையடிப் பாதை.

அதுதான் தஞ்சோங் ரம்புத்தான் காட்டுப் பாதை. வேறு எந்தப் பாதையும் இல்லை. 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

பல மாதங்களுக்குப் பிறகு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய பச்சை பிருந்தாவனம் படர்ந்து விரிந்து கிடப்பதைப் பார்த்து எல்லோரும் அசந்து போனார்கள். ‘இங்கேதான் உலகின் எட்டாவது அதிசயம் மறைந்து கிடக்கிறது’ என்று வில்லியம் கேமரன் சொன்னாராம்.

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இயற்கை அன்னை நடனம் ஆடிச் சென்ற பசும் புல்வெளி. பின்னே இருக்காதா... அதைப் பார்த்து மெய்மறந்து போய் இருக்கிறார்கள்.




அவர்களின் இரு முக்கிய ஆய்வுப் பணிகள். முதலாவது கிந்தா ஆறு எங்கே உற்பத்தி ஆகிறது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டாவது… பேராக் - பகாங் மாநிலங்களின் எல்லைகளைப் பிரிக்க வேண்டும். இந்த இரண்டும்தான் அவர்களின் முக்கியப் பணிகள். கடைசியில் கிந்தா ஆற்றின் நதிமூலத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். சர் வில்லியம் கேமரன்

குனோங் சாபாங் எனும் மலையில்தான் கிந்தா ஆற்றின் ஊற்றுக் கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் குளிக்கப் பயன்படுத்துவோமே நீர்த்தொட்டி. அவ்வளவு பெரியதுதான் அந்த ஊற்றுக் கிணறு. அங்கு இருந்துதான் கிந்தா ஆறு உற்பத்தியாகி ஈப்போ வழியாக வந்து பிறகு பேராக் ஆற்றுடன் கலக்கின்றது.

நில ஆய்வுக் குறிப்புகளை எழுதும் போது 1800 மீட்டர் உயரத்தில் சுழிப்பு முனைகளைக் கொண்ட மலைகள் இருக்கின்றன. பல பகுதிகளில் மென்மையான மலைச் சரிவுகள் உள்ளன என்றும் சர் வில்லியம் கேமரன் எழுதி இருக்கிறார். ஆனால் அவர்கள் பார்த்தது ‘புளு வேலி’ பகுதி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது நடந்தது 1885-ஆம் ஆண்டு.

இந்தக் கட்டத்தில் அதிக நாட்கள் மலைகளின் உச்சியிலேயே இருந்ததால் சர் வில்லியம் கேமரனுக்கு ஒரு வகையான மறதி நோய் ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கும் வயது ஆகிவிட்டது. இருந்தாலும் பூர்வீகக் குடிமக்கள் வழங்கிய ’தொங்காட் அலி’ வேர்களை அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறார்.

தொங்காட் அலி என்பது ஒரு வகையான வலி நிவாரணி. ஆண்மையைப் பெருக்கும். உடலுக்கு அதிகமாகச் சுறுசுறுப்பைக் கொடுக்கும். 2005-ஆம் ஆண்டு குனோங் தகான் மலையில் ஏறி இருக்கிறேன். ஏறி இறங்க ஒன்பது நாட்கள் பிடிக்கும். எங்களுடன் வந்த வழிகாட்டி, தொங்காட் அலியைப் பிடுங்கிச் சாப்பிடச் சொல்லி இருக்கிறார்.

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் உடல் சூடாகிப் போகும். மூட்டு வலிகள் பறந்து போகும். இருந்தாலும் அளவுக்கு மிஞ்சி போகக் கூடாது. கல்லீரலைப் பாதிக்கும்.

அழகிய பச்சைப் பிருந்தாவனம்

ஆக தொங்காட் அலியைச் சாப்பிட்டு அதனால் பிரச்னைகள் ஏற்பட சர் வில்லியம் கேமரனுக்கு மலை உச்சியிலேயே நினைவு இழந்து போனது. கீழே இறங்கி வந்த சில நாட்களிலேயே இறந்தும் போனார்.

ஆனால் அவர் கண்டுபிடித்த பிருந்தாவனத் தகவல்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வந்து கிடைக்கவே இல்லை. இன்னும் ஒரு விஷயம். அவர் கண்டுபிடித்த அந்தப் பச்சைப் பள்ளத்தாக்கைப் பற்றி வரைபடத்தில் அவரும் சரியாகக் குறித்து வைக்கவும் தவறிவிட்டார்.

ஆனால் ஓர் அழகிய பச்சைப் பிருந்தாவனம் இருக்கிறது என்று உலகத்திற்கு முதன் முதலில் சொன்னவர் சர் வில்லியம் கேமரன் தான். அதனால் அவரை மலேசியர்கள் மறக்கவில்லை. அவருடைய பெயரையே அந்த மலைக்கு வைத்து இன்று வரை அழகு பார்க்கிறார்கள். சரி. விஷயத்திற்கு வருவோம்.

அதோடு கேமரன் மலையை ஆங்கிலேயர்கள் மறந்துவிட்டார்கள். பாவம் அவர்கள். உள்நாட்டில் மலாயா மாநிலங்களை வளைத்துப் போட வேண்டும். கிடைத்ததைச் சுரண்டிக் கப்பல் ஏற்ற வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.

அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. அப்புறம் எப்படி அவர்களுக்கு கேமரன் மலை நினைவுக்கு வந்து இருக்கும். சொல்லுங்கள்…

சர் பிரான்சிஸ் லைட்


ஆங்கிலேயர்கள் குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். கோடை காலங்களில் ஓய்வு எடுத்துப் பழக்கப் பட்டவர்கள். ஆக வெப்ப மண்டலத்தில் இருந்த மலாயாவில் அவர்கள் ஓய்வு எடுக்க குளிரான மலைப் பகுதிகளில் தேவைப் பட்டன.

அந்த வகையில் 1788-இல் பினாங்கு மலையில் ஒர் இடம் கிடைத்தது. சர் பிரான்சிஸ் லைட் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே. அவர்தான் பினாங்கு மலையில் ஒரு குழுவுடன் முதன்முதலாக ஏறியவர். உச்சியில் ஒரு கொடிக் கம்பத்தை நட்டுவிட்டு வந்தவர். அப்புறம் வந்த ஆங்கிலேயர்கள் உச்சி மலைக்கு ஒரு கம்பிச் சடக்கைப் போட்டார்கள். உச்சியில் போய் குடிசைகளைப் போட்டுக் குளிர் காய்ந்தார்கள்.

அதன் பின்னர் தைப்பிங் மாக்ஸ்வல் ஓய்வுத்தளம் 1884-இல் உருவாக்கப் பட்டது.  அடுத்து பிரேசர் மலை. மலாயா ரப்பரின் தந்தை என்று பெருமையாக அழைக்கப்படும் எச். என். ரிட்லி அவர்களால் பிரேசர் மலையில் 1897-இல் ஓய்வுத் தளம் அமைக்கப் பட்டது.

இங்கே ஒரு சின்னச் செருகல். கண்டிப்பாகச் சொல்லியாக வேண்டும். பிரேசர் மலையைக் கண்டுபிடித்தது என்னவோ லூயி ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) என்பவர்தான். அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டும் இருக்கிறது. இருந்தாலும் எச்.என். ரிட்லிதான் அந்த மலைக்குப் பெருமை சேர்த்தவர். அதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிரேசர் மலை வரலாறு

அவர் மட்டும் இந்த நாட்டிற்கு வராமல் இருந்து இருந்தால் தமிழர்களும் இந்த நாட்டிற்கு வந்து இருக்க முடியாது. தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வர பிள்ளையார் சுழி போட்டவரும் அதே அந்த எச்.என். ரிட்லி தான்.  மலேசியத் தமிழர்கள் போற்ற வேண்டிய மனிதர். எச்.என்.ரிட்லி ரப்பரின் மூலமாக மலேசியாவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.


பிரேசர் மலையில் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடக்கிறது. இப்போதைக்கு ஒரு சின்னத் தகவல். 1951 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி மலாயாவில் அவசரகாலம் நடைமுறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சி. அப்போது மலாயாவின் உயர் ஆணையராக இருந்த சர் ஹென்றி கர்னி, பிரேசர் மலைக்குப் பயணம் செய்து கொண்டு இருக்கும் போது மலாயாக் கம்யூனிஸ்டுகளால் சுடப் பட்டார்.

மலாயாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களில் மிக மிக மரியாதைக்கு உரியவர் யார் என்றால் அவர்தான் இந்த சர் ஹென்றி கர்னி. அவருடைய பெயரில் மலேசியாவில் பல சாலைகள் பல இடங்கள் உள்ளன.

அவருடைய கல்லறைகூட கோலாலம்பூர், ஜாலான் செராஸ் கிறிஸ்துவ மயானத்தில் இருக்கிறது. ஓய்வு கிடைத்தால் போய்ப் பார்த்து மரியாதை செய்து விட்டு வாருங்கள். கேமரன் மலையின் தெரியாத ரகசியங்கள் என்று எழுதப் போய் எங்கு எங்கோ போய்விட்டேன்.

பினாங்கு கொடிமலை

ஆக இந்தப் பினாங்கு கொடிமலை, பிரேசர் மலை, மேக்ஸ்வல் மலை போன்ற ஓய்வுத் தளங்களில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. அதனால் இடப் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் பிரேசர் மலைக்குப் பதிலாக வேறு ஒரு மலைப் பிரதேசத்தை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டு இருந்தனர்.

பிரதான ஓய்வுத் தளமாக இருந்த பிரேசர் மலையில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதே அதற்கு மூல காரணம் ஆகும். தவிர மனித மனங்களைப் பெரிதாக ஈர்க்கும் வகையில் பிரேசர் மலையில் சிறப்பாக எதுவும் அமையவில்லை.

நாற்பது ஆண்டுகள் கழித்து சர் ஜார்ஜ் மேக்ஸ்வல் என்பவர் கேமரன் மலைப் பகுதிக்குச் சென்றார். இந்த ஜார்ஜ் மேக்ஸ்வல்தான் தைப்பிங் நகரில் மேக்ஸ்வல் மலையைக் கண்டுபிடித்தவர் ஆகும்.

கேமரன் மலையில் அவர் கண்ட இயற்கையின் அழகைப் பற்றி ஆங்கிலேய அரசு நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அந்தக் காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக சர் ஹியூ லோ என்பவர் இருந்தார். கேமரன் மலையைப் பற்றி கேள்விப்பட்ட அவர் அதை விரிவுபடுத்த ஆசைப் பட்டார்.

1926-ஆம் ஆண்டில் தாப்பாவில் இருந்து கேமரன் மலைக்கு ஒரு சாலையை அமைக்க திட்டம் வகுத்தார்கள். அதற்கு அப்போதே பத்து மில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப் பட்டது. இப்போதைய கணக்குப்படி முன்னூறு மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும். நான் சொல்வது 1920-ஆம் ஆண்டுகளில் நடந்த கதை.

இந்திய மன்மத ராசாக்கள்

போக்டென் பிரிஸ்பர்ன் கம்பெனி (Messrs. Fogden, Brisbane and Company) எனும் நிறுவனத்திற்கு 250,000 டாலர்கள் முன்பணம் வழங்கப் பட்டது. 1928 ஜனவரி முதல் தேதி சாலை அமைப்புப் பணிகள் தொடங்கின.

அது ஒரு சவால்மிக்க நிர்மாணிப்புப் பணி ஆகும். குதிரை அல்லது மாட்டு வண்டிகளில், தளவாடப் பொருட்கள் கேமரன் மலைக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் நீராவி இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.

ஒவ்வொரு நாளும் 500 லிருந்து 3000 பேர் வேலை செய்தனர். ஏறக்குறைய 375 பேர் மலேரியா காய்ச்சலினால் இறந்து போனார்கள். ஒரு சிலர் பூர்வீகப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு காட்டுக்குள் காணாமல் போயினர். முக்கால்வாசி பேர் நம்முடைய இந்திய மன்மத ராசாக்கள்.

எது எப்படியோ காட்டுக்குள் போன நம் ராசாக்கள் அங்கே ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி இருக்கிறார்கள். அதுவரை பாராட்டுவோம். அவர்களின் வாரிசுகள் சிலரை ரிங்லெட் நகரில் இன்றும் பார்க்கலாம். முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இந்திய லாவண்யம் ’பளிச்’ சென்று தெரியும்.

அதற்கு அப்புறம் மூன்று ஆண்டுகளில் கேமரன் மலைக்குச் சாலை அமைக்கப்பட்டது. அடுத்து ரிங்லெட்டில் இருந்து தானா ராத்தாவிற்கு சாலை அமைத்தார்கள். அடுத்து வந்த மூன்று ஆண்டுகளில் பிரிஞ்சாங் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் சீனர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கேமரன் மலையில் வீடுகள் பங்களாக்களைக் கட்டிக் கொண்டார்கள்.

1929-இல் போ தேயிலைத் தோட்டம் உருவானது. அப்புறம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 2006-இல் சிம்பாங் பூலாய் பகுதியில் இருந்து கம்போங் ராஜாவிற்குப் போக ஒரு நவீன விரைவு சாலையையும் அமைத்து விட்டார்கள்.

கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்

உலகின் எட்டாவது அதிசயமாக இருந்த கேமரன் மலையை இப்போது எந்த இடத்தில் வைப்பது என்றுதான் தெரியவில்லை. விவசாயம் என்கிற பேரில் காடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டார்கள்.

அழகு அழகான பறவைகளை எல்லாம் விரட்டித் துரத்தி விட்டார்கள். துள்ளி விளையாடிய புள்ளிமான்கள், சருகுமான்களை எல்லாம் ‘அட்ரஸ்’ இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆடு மாடுகளைப் போல சுற்றித் திரிந்த புலிகளை எல்லாம் வறுத்து எடுத்து ட்டார்கள். அடுத்து மனிதர்கள்தான் பாக்கி.

கேமரன் மலை இந்தியர்கள் ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாகச் செய்தும் வருகிறார்கள். பாராட்டுவோம்.

பகாங் மாநில அரசும் இயற்கைப் பாதுகாப்புகளுக்காக நிறைய மான்யங்களை ஒதுக்கி இருக்கிறது. வெள்ளம் வந்து வீட்டு வாசல் கதவைத் தட்டிய பிறகு இனிமேல் காடுகளை அழிக்கக் கூடாது என்று தடாலடியான சட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறது. பாராட்டுகள்!

இயற்கையைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர் என்று ’கேமரன் மலையைக் காப்பாற்றுவோம்’ இயக்கத்தின் முன்னோடியான சிம்மாதிரி கூறுகிறார்.

கேமரன்மலையைப் பாதுகாக்கச் சொல்லி இவரும் பத்திரிகைகளுக்கு நிறைய செய்திகளை அனுப்பி வருகின்றார். விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சிம்மாதிரி, வேலு போன்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.

அடுத்து… நினைவு திரும்பாமல் இறந்து போன சர் வில்லியம் கேமரனின் நினைவாக அவர் கண்டுபிடித்த அந்த மலைக்கு கேமரன் மலை என்று அவருடைய பெயரையே வைப்பார்கள் என்று அவரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

கேமரன் மலையில் வெள்ளம்

அதே சமயத்தில் தான் கண்டுபிடித்தக் காடுகள் இந்த மாதிரி அழிக்கப்படும். அந்தக் காடுகளில் திடீர் வெள்ளம் வரும். சிம்மாதிரி என்கிற ஒரு தமிழர் வருவார். பக்கம் பக்கமாய் எழுதுவார் என்று சர் வில்லியம் கேமரனும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். பாவம் சர் வில்லியம் கேமரன். அதே சமயத்தில் அவர் நினைவாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிம்மாதிரிக்கு மறுபடியும் நன்றிகள்.

யானை மீது ஏறிப் போய் கஷ்டப்பட்டு கேமரன் மலையைக் கண்டுபிடித்த அவரை நினைத்துப் பார்க்கையில் ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. கடைசியாக ஒன்று. மனதில் படுகிறது. சொல்கிறேன்.

நம்ப நாட்டு அழகை நாம்தான் முதலில் ரசிக்க வேண்டும். அப்புறம் தானே மற்றவர்களும் வருவார்கள் பார்ப்பார்கள் ரசிப்பார்கள். கேமரன் மலையில் வெள்ளம் வந்தது உண்மைதான்.

எங்கே தான் பிரச்சினை இல்லை. சொல்லுங்கள். அதற்காக கேமரன்மலையை ஒதுக்கி வைத்துவிட முடியுமா. அரிசி வேகவில்லை என்பதற்காக சோற்றுப் பானையைத் தூக்கி வீசிவிட முடியுமா. சொல்லுங்கள்.

மறுபடியும் சொல்கிறேன். போர்னியோ காடுகளில் எலியை பிடிக்கப் போகிறீர்களோ இல்லை பாப்புவா நியூகினி காடுகளில் புலியை பிடிக்கப் போகிறீர்களோ. பிரச்சினை இல்லை. வீட்டில் அழகான கிளியை வைத்துக் கொண்டு வெளியே மரத்திற்கு மரம் தாவும் ஜீவன்களைத் தேடிப் போவது எல்லாம் நன்றாக இல்லை!

நம்ப வீட்டுக் கிளியை முதலில் ரசிப்போம். முதலில் அதைத் தூக்கி வைத்து துதி பாடுவோம்! அப்புறம் மாற்றான் வீட்டு மல்லிகைக்கு மணம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வோம்.