22 மே 2017

ரஜினி முதல்வரானால்

'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கு' என அதே பல நூற்றாண்டுக் காலத்து டயலாக்கை மீண்டும் சொல்லிப் பரபரப்பாக்கி உள்ளார் ரஜினி. 



தலைவா வா; தலைமை ஏற்க வா, உங்களைத் தான் நம்புது இந்த பூமி; எங்களுக்கு இனி நல்ல வழி காமி' என இவ்வளவு நாள் கை காசு போட்டு போஸ்டர் அடித்து ஆடு, மாடுகளைச் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், இப்போதுதான் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்.
 
எத்தனை நாளைக்கோ...? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் அரசியலில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவார் என கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம்...

*ஒரு பவுன் தங்ககாசு திட்டம்*

அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது நாம் தானே. அதனால், அந்த ஒரு பவுனை மறுபடியும் அவரவர் அக்கவுன்ட்டுக்கே போட்டுவிடும் திட்டத்துக்குப் பெயர் தான் `ஒரு பவுன் தங்கக்காசு திட்டம்'. இது அந்த 15 லட்ச ரூபாய் மாதிரி எப்ப வரும்? எப்படி வரும்?னு பயப்பட தேவையில்லை. வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

*அண்டா சட்டி' அருணாச்சலம் திட்டம்*

'அருணாச்சலம்' படத்தின்  `அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...' பாடலில் அண்டாவை கவிழ்த்தி கறுப்பு பெயின்ட் அடித்திருப்பார்கள் அல்லவா. அது போன்ற ஒரு பல்வகைப் பயன் அண்டா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.

*மீசை வெச்ச குழந்தையப்பா திட்டம்*

பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பொறியியல் படித்து, வேலை கிடைக்காமல் அதே பெற்றோர்களிடம் தண்டச் சோறு என திட்டு வாங்கி கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான திட்டம் இது. அத்தகைய வி.ஐ.பி-க்களின் சோகமான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அரசு அவர்களை மீசை வெச்ச குழந்தைகளாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தச் சமூகத்தில் கைக்குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனைச் சலுகைகளையும் இவர்கள் அனுபவிக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

*அலுவலக அறைத் திட்டம்*

காவல் நிலையம் இல்லாத ஊர்களில் எல்லாம் குட்டிக் குட்டியாக 'ஆபிஸ் அறைகள் அமைக்கப்படும். ஊருக்குள் அடாவடி செய்யும் ரவுடிகள் அந்த அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரி பிரி என பிரித்து அனுப்பப் படுவார்கள். இதற்காக, `பாட்ஷா' படத்தில் வரும் பஞ்சாப் சிங்கைப் போல் பஞ்சாபில் இருந்து பயில்வான்கள் இறக்குமதி செய்யப் படுவார்கள்.

*தனி வழி திட்டம்*

தமிழகத்துக்குள் புதுச்சாலைகள் பல‌ ஏற்படுத்தப்படும். மதுரையில் இருந்து சென்னைச் செல்வதற்குத் திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர்  வழியாகச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்ல ராமநாதபுரம், விருதுநகர் வழியாகச் சாலைகள் அமைக்கப்படும்.

நன்றி: ஆனந்த விகடன்

21 மே 2017

மலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம்


ஈப்போ இருதயப் பராமரிப்பு பூங்காவனத்தின் இனிய சேவைகள்
National Stroke Association of Malaysia
ஊனும் உயிரும் உனக்கு அல்ல. அந்த ஊனில் உயிராய் வாழும் அந்த இருதயமும் உனக்கு அல்ல. அந்த இருதயத்தில் வாழும் இதயமும் உனக்கு அல்ல. அப்பா அம்மா வைத்த பெயர் மட்டுமே உனக்குச் சொந்தம்.


அதே சமயத்தில் உங்களுக்கு வரும் உடல் துன்பங்களும் உங்களுக்குச் சொந்தம் அல்ல. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அந்த வகையில் வந்த நோய்களுக்குத் தீர்வு காண முடியும். அந்தத் தீர்வுகளில் இயற்கையின் சீதனங்களையும் காண முடியும்.

சொந்தத்தின் பரம்பரை நோய்க் குணங்கள் தலைமுறை தலைமுறைகளாக இறங்கி வரும் போது அங்கே ஊனும் அடங்கும். உயிரும் அடங்கும். அதற்கு முன் நீங்களும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கேளுங்கள்.

நம் உடலில் மிக மிக முக்கியமான ஓர் உறுப்பு இருதயம். தசைகளாலும் நாளங்களாலும் பின்னிப் பிணைக்கப் பட்ட ஓர் உறுப்பு. இருதயத்தில் நான்கு அறைகள் (chambers) உள்ளன.


நம் உடலின் இரத்த ஓட்டம் அந்த நான்கு அறைகள் வழியாகச் சென்று நுரையீரலுக்குள் அடைக்கலம் ஆகின்றன. அங்கே கரியமிலக் காற்று அகற்றப்பட்டு உயிர்க் காற்று சேர்க்கப் படுகிறது. அதன் பின்னர் இரத்தம் உடல் முழுமைக்கும் செல்கின்றது.

உடலின் அனைத்துச் செல்களுக்கும் உயிர்க் காற்று வழங்கப்பட்டு கரியமிலக் காற்று அகற்றப் படுகிறது. சரி. நெஞ்சுவலி என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

நெஞ்சில் வலி வந்தால் அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் நெஞ்சு கொஞ்சம் லேசாக வலித்தாலே போதும். அது மாரடைப்பாக இருக்குமோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சாதாரண தசை வலியில் இருந்து இதய நோய் வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளது. பொதுவாகவே நெஞ்சு வலிக்கு இதய நோய் என்பது ஒரு காரணமாக இருக்காது. வேறு காரணங்களும் இருக்கின்றன.

நெஞ்சு வலிக்கு இரு காரணங்கள் மிக மிக முக்கியமானவை. முதலாவது ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. இதற்கு மார்பு நெரிப்பு என்று பெயர்.


மற்றொன்று மாரடைப்பு. இந்த இரண்டையும் சர்வ சாதாரணமாக அலட்சியப் படுத்தி விடக் கூடாது. அப்படி அலட்சியப் படுத்தினால் கடைசியில் அது நம் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.

ஆஞ்சைனா அல்லது மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலி என்பது இருதயத் தசையில் உருவாகி நெஞ்சின் மேல்பரப்பில் உணரப் படும் ஒரு வலியாகும்.

இதயத் திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் (Arteries) கொழுப்புப் படிந்து போவது இயல்பு. அந்தக் கொழுப்புகள் தமனிகளின் விட்டத்தைக் குறுகச் செய்கின்றன. அதாவது இறுக்கம் அடையச் செய்கின்றன அதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

முதுமை காரணமாகவும் தமனிக் குழாய்கள் தடித்துப் போவதும் உண்டு. அப்படித் தடித்துப் போனாலும் வலி ஏற்படும். சரி.

சமயங்களில் அழுத்தமான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் வருவது உண்டு. மரணம் வராமல் பக்கவாதம் வருவதும் உண்டு. இதை ஸ்ட்ரோக் (stroke) என்பார்கள்.
(சான்று: VINAY KUMAR, ABUL K. ABBAS (2010). Robbins and Cotran Pathologic Basis of Disease. Saunders, an imprint of Elsevier Inc)

மாரடைப்பு வந்து அதனால் பக்கவாதம் வந்து அதைப் பராமரிக்கும் வேலை இருக்கிறதே அது ஒரு பெரிய வேலை.


மாரடைப்புக்குப் பின் பெரும்பாலானோர் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார்கள். மருத்துவமனையில் பெற்ற சிகிச்சையோடு மாரடைப்புக்கான சிகிச்சை முற்றுப் பெற்றது என்று நினைப்பது தவறு. இது சிகிச்சையின் தொடக்கமே.

ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டால் அப்புறம் வாழ்நாள் முழுமைக்கும் ஒரு தொடர் சிகிச்சை அவசியம். அந்தத் தொடர் சிகிச்சையின் மூலம் ஓர் இயல்பான வாழ்க்கை நிலையும் கிடைக்கும். அதே சமயத்தில் மறுபடியும் ஒரு மாரடைப்பு வராமல் தவிர்க்கவும் முடியும்.

அந்த மாதிரியான தொடர் சிகிச்சைகளுக்கும் பக்கவாதப் பராமரிப்புகளுக்கும் பல புனர் அமைப்புகள் உள்ளன. மலேசியாவைப் பொருத்த வரையில் மலேசிய பக்கவாத பராமரிப்பு சங்கம் (National Stroke Association of Malaysia) தலையாய பங்கு வகிக்கிறது.


இந்தச் சங்கம் 1996ஆம் ஆண்டு ஜெனட் இயோ (Janet Yeo) என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது. தற்சமயம் ஒன்பது கிளை அமைப்புகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஈப்போ நிலையத்தில் கதிரவன் (Kathiravan) என்பவரும் திருமதி அசியான் (Ms. Azian) என்பவரும் இயன்முறை மருத்துவர்கள் (physiotherapist).

நிர்வாகப் பொறுப்புகளைத் திருமதி ஜெனிபர் (Mdm Jennifer) கவனித்துக் கொள்கிறார். ஈப்போ ஜாலான் பாசீர் பூத்தேயில் இந்த நிலையம் இயங்கி வருகிறது.

மாரடைப்பின் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு இந்த நிலையம் பற்பல வகைகளில் உதவிகள் செய்து வருகிறது. அண்மையில் நாசாம் ஸ்ட்ரோக் விளையாட்டுகளை (Nasam Stroke Games) மிகச் சிறப்பாகச் செய்து காட்டியது. இவர்களின் தன்னலமற்றச் சேவைகளை மனதாரப் பாராட்டுவோம்.

இந்த ஈப்போ பக்கவாத பராமரிப்புக் கழகத்தில் நரேந்திரன் என்பவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குத் துணையாக அவரின் மனவி திருமதி. சுதா அரிய பெரிய சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயற்கை. பெரும்பாலோர் இதில் இருந்து மூன்று மாதங்களில் விடுபட்டு விடுவார்கள். அதன் பின்னர் இயல்பான வாழ்க்கை நிலைக்கு திரும்புவார்கள். மனச்சோர்வில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் சீரான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.


இவர்கள் எப்போதும் மனதைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு அந்தச் சோர்வில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கலாம். ஒரு சிலருக்குத் தாங்கள் அத்தகைய மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்பதைத் தெரிந்த கொள்வதே கடினமாக இருக்கும்.

இவர்களை இந்தப் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும். ஒரு சீரான வாழ்க்கை நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதுவே மருத்துவ உதவியாளர் கதிரவனின் அன்பான வேண்டுகோள்.

சரியான ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான மருந்துகளைப் பெற வேண்டும். அந்த வகையில் 90 விழுக்காட்டினர் குணம் அடைகின்றனர். ஒன்று மட்டும் உண்மை. முறையாகப் பராமரிப்புச் சிகிச்சை பெறாதவர்களின் இருதயம் வெகுவாகப் பாதிக்கப் படலாம் என்பது ஆராய்ச்சிகளின் முடிவு.

தற்போது மாரடைப்பு பக்கவாதப் பராமரிப்புச் சிகிச்சை தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து உள்ளது. இது அசைக்க முடியாத  ஓர் உண்மை. எந்த அளவிற்குப் பை-பாஸ் சிகிச்சை அதாவது மாற்று வழி இணைப்பு அறுவை (bypass surgery) தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்து உள்ளதோ அந்த அளவிற்கு மருந்து மாத்திரை சிகிச்சைகளும் வளர்ந்து உள்ளன.

இருதய இரத்த நாளங்களில் ஏற்படும் அனைத்து அடைப்புகளுக்கும் பை-பாஸ் அறுவை சிகிச்சை தேவை என்பது மிகத் தவறான கருத்து. தற்போது உள்ள மருந்து மாத்திரைகளால் இரத்த நாளங்களில் அடைப்பு கூடாமல் பார்த்து கொள்ள முடியும்.

அத்துடன் இரத்த நாளங்களில் அடைப்பை குறைக்கும் அளவுக்கு  மருந்து மாத்திரைகள் வந்து உள்ளன.

அது மட்டும் அல்ல. இரத்த நாளங்களில் அடைப்பே வராமல் இருக்கவும் மருந்துகள் வந்து விட்டன. இருந்தாலும் பக்கவாதப் பராமரிப்புச் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்று நல்ல ஆரோக்கியமான புனர் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

மலேசிய பக்கவாத பராமரிப்பு சங்கத்தின் ஈப்போ கிளையின் முகவரி: 9 – Lorong Pinji, Off Jallan Pasir Puteh, 31500 Ipoh, Perak. கைப்பேசி எண்கள்: 05 3211089; 05 3224759. மின்னஞ்சல்: nasamperak@nasam.org. இணையத்தளம்: www.nasam.org.

சோனியா காந்திக்கு என்ன ஆச்சு

2017 மே 7-ஆம் தேதி இரவு டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா அனுமதிக்கப் பட்டார். அவருக்கு ‘நச்சுணவு’ (Food Poisoning) என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை. இது முதல்முறை அல்ல... கடந்த 8 மாதத்தில் இது நான்காவது முறை.

சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி அமெரிக்கா சென்று இருந்தார். அங்கு அவருக்கு அமெரிக்க இந்திய மருத்துவர் தத்தாத் ரேயடு நோரி தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

தத்தாத்ரேயடு என்பவர் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவர். சோனியாவுக்கு என்ன நேர்ந்தது என்ன சிகிச்சை அளிக்கப் பட்டது என்பது எல்லாம் ரகசியமாகவே இருந்தன.

ஆனாலும் சோனியாவுக்குக் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருந்ததாகவும் இதற்குச் சிகிச்சை பெறவே அமெரிக்கா சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

அமெரிக்காவில் சோனியாவுக்கு கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சையும் Chemo, Radiation சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் சொல்லப் பட்டது.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதைத் தவிர சோனியா காந்திக்கு ஆஸ்துமா, எலும்பு தொடர்பான பிரச்னைகளும் உள்ளன.

இதனால் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார்.

சோனியா காந்தி மீண்டும் அரசியல் களத்துக்கு வருவாரா. இதற்கான பதிலைச் சோனியாவால்கூட இப்போதைக்குச் சொல்ல முடியாது என்பதே உண்மை!

பல்லாயிரம் ஈழத் தமிழர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்தவர் இந்தப் பதிவிரதா. பாவம் சும்மா விடுமா.

10 மே 2017

தற்புனைவு ஆழ்வு

ஆட்டிசம்

மதியிறுக்கம் (Autism) அல்லது தற்புனைவு ஆழ்வு அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்பது இயல்பிற்கு மாறான மூளை வளர்ச்சியின் வேறுபாடு.


தற்புனைவு ஆழ்வு எனும் சொல் ஓர் உலகச் சொல் ஆகிவிட்டது. இது நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடாகும். இந்தக் குறைபாடு சிறுவயது பிள்ளைகளிடம் காணப் படுகின்றது. இந்தக் குறைபாடு உள்ளவர்களை அதாவது ஆட்டிசம் உள்ளவர்களை தமிழில் தற்சிந்தனையாளர்கள் என்றும் அழைக்கிறார்கள்.


இந்தப் பிள்ளைகள் தோற்றத்தில் சாதாரணப் பிள்ளைகள் போல் இருப்பார்கள். ஆனால் இவர்களின் செயல்பாடு அல்லது பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும்.

இது ஒரு நோய் அல்ல. மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு. ஆங்கிலத்தில் Development disability. மருந்துகளால் குணப்படுத்த முடியாதது. வாழ்நாள் வரையில் நீடிக்கும் குறைபாடு.



மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றி உள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு.

பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் காணப்படும் 'ஆட்டிசம்' என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. 



பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். 



மருத்துவரீதியாக ஒரு Spectral Disorder என அழைக்கப் படுகிறது. தூயத் தமிழில் *தற்புனைவு ஆழ்வு*

 தற்புனைவு ஆழ்வு உள்ள பிள்ளைகளின் சில குணாதிசயங்கள்

கண்ணோடு கண்பார்த்துப் பேச மாட்டார்கள்.

பெயர் சொல்லி அழைக்கும் போது அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

மற்ற பிள்ளைகளுடக் சேர்ந்து விளையாடும் தன்மை குறைவாகக் காணப்படும்.

சிலர் அர்த்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவார்கள்.

சிலர் பேசவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஊமை அல்ல.

சில வேளைகளில் தேவயற்று அழுவார்கள் சிரிப்பார்கள்.

கூடுதலாகத் தனிமையையே விரும்புவார்கள்

அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை மட்டும் திரும்பத் திரும்ப விளையாடுவார்கள்.

உதாரணமாக கைகளை அசைத்தல், உடலை முன்னும் பின்னுமாக அசைத்தல், துள்ளுதல், மேலும் பல அசைவுகள் காணப்படும். ஆனால் ஏதாவது ஓர் உடல் அசைவை எந்த நேரமும் மேற்கொள்வார்கள்.

ஆரம்பத்தில் பேசத் தொடங்கி திடீரென இரண்டு வயதை அடையும் போது பேச்சு இல்லாமல் போய் விடும்.

முக்கியமாக இந்தப் பிள்ளைகள் நேரம் இடம் யார் எவர் என்ற வித்தியாசம் உணர மாட்டார்கள்.


நன்றி: OSILMO Special Education & Research Center for Autistic Children


17 மார்ச் 2017

மஜபாகித் பேரரசு

இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பற்பல இந்தியப் பேரரசுகளும் சிற்றரசுகளும் ஆட்சிகள் செய்து உள்ளன.


மஜபாகித் பேரரசு (ஆங்கிலம்: Majapahit Empire; இந்தோனேசியம்: Karaton Mojopahit) கி.பி.1293 முதல் கி.பி.1500ஆம் ஆண்டுகள் வரை இந்தோனேசியாவை ஆட்சி செய்த மாபெரும் இந்தியப் பேரரசு. அந்தப் பேரரசைச் சங்கராமா விஜயா (Nararya Sangramawijaya) எனும் ராடன் விஜயன் உருவாக்கினார். இவர் 1293 முதல் 1309 வரை ஆட்சி செய்து இருக்கிறார்.

இந்தோனேசியா, சிங்கப்பூர், மலாயா, புருணை, தென் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கிழக்குத் தீமோர் போன்ற நாடுகள் கி.பி. 1350 லிருந்து 1389 வரையில் மஜபாகித் பேரரசிற்குத் தலை வணங்கி தஞ்சம் கேட்ட நாடுகள். 96 சிற்றரசுகள் கைகட்டிச் சேவகம் பார்த்தன.


பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவிப்பதற்கு முன்பு இருந்தே மஜபாகித் பேரரசு மலாயாவின் பல இடங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது.

1365 ஆம் ஆண்டு  நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஒரு நூல் எழுதப் பட்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் தேசவர்ணம் (Desawarñana). அதன் ஆசிரியர் மப்பு பிரபஞ்சா (Mpu Prapanca). அந்த நூலில் மஜபாகித் அரசைப் பற்றி வியக்கத் தக்க செய்திகளை விட்டுச் சென்று உள்ளார்.

ரொம்ப வேண்டாங்க. லக்சா கேள்விப்பட்டு இருப்பீர்கள். மலேசியர்களின் மதிப்பிற்குரிய உணவு. இந்த லக்சா யாருடையது தெரியுங்களா. மஜபாகித் மக்களுடையது. அவர்கள் தான் 13 – 14 நூற்றாண்டில் இந்த லக்சா உணவை மலாயாவுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள்.


இந்த உண்மைகளை மலேசிய வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா. தெரியவில்லை. அது நமக்குப் பிரச்சினையும் இல்லை. நம் தரப்பில் தக்கச் சான்றுகள் உள்ளன. சன்னம் சன்னமாய் அந்த வரலாற்று உண்மைகளை வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்துவோம். அதுவே மலேசியத் தமிழர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-majapahit.htm -  1350-1400Majapahit empire controlled most of Peninsular Malaysia and the Malay Archipelago.)

(சான்று:      http://bernama.com/bernama/v3/bm/news_lite.php?id=457821 - After Majapahit had conquered Palembang, the favourite culinary dish then was laksa. It was the dish of choice throughout the empire of Majapahit.)