05 ஜூன் 2017

பரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இது ஒரு மெகா சீரியல்.


மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம்

•    பரமேஸ்வரா  1400–1414
•    ஸ்ரீ ராம விக்ரமா 1414–1424 (மத மற்றம்)
•    சுல்தான் முகமது ஷா 1424–1444
•    சுல்தான் அபு ஷாகித் 1444–1446
•    சுல்தான் முஷபர் ஷா 1446–1459
•    சுல்தான் மன்சூர் ஷா 1459–1477
•    சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
•    சுல்தான் முகமது ஷா 1488–1528

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகனின் பெயர் ஸ்ரீ ராம விக்ரமா. 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரை பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.

சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781

பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன். 




மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் போதுகூட பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார். 


அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார்.

எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும். ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து காணாமல் போய் விடும்.

தமிழ் மலர் 05.06.2017


 *தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில்*

2004 சுனாமிக்குப் பிறகு தமிழகத்தின் கல்பாக்கத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குப் பலவிதமான புதுப் புது நோய்கள். 

புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு மீனவக் குப்பங்களில் புற்றுநோய், பிறவி ஊனம், கருக்கலைதல் அதிகமாயின. புதுச்சேரி மாநில அரசும் வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டு இருக்கிறது. கதிர்வீச்சு காரணமா என்று கண்டு அறியப்பட வேண்டும் என்றும் சொல்கிறது.

’மல்டிபில் மயலோமா’ (Multiple Myeloma) என்பது ஒரு வகையான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் ஆகும். இந்த நோய் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களிடம் அதிகமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் இன்று வரை அதைப் பற்றி பொது மக்களுக்கு சரியான முறையில் விளக்கங்கள் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை. சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கொதிப்பு அடைந்து போய் இருக்கின்றனர்.

https://www.saddahaq.com/the-harmful-effects-of-nuclear-power-plant-in-kalpakkam - The Harmful effects of Nuclear power plant in Kalpakkam
 


உலகில் உள்ள எல்லா நாடுகளுமே ஜப்பான் புகுஷிமாவில் நடந்த விபத்தை நல்ல ஒரு பாடமாக எடுத்துக் கொள்கின்றன. பல நாடுகள் புதிய அணு ஆலைத் திட்டங்களை ஒத்தி வைக்கின்றன.

இப்போது இருக்கும் அணு உலைகளின் பாதுகாப்புகளைப் பற்றி தீவிரமான ஆய்வு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அணு உலைகளைப் பற்றி மறுபரிசீலனைகள் செய்கின்றன.

ஆனால் இந்தியா மட்டும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால்கள் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

தமிழகக் கூடாங்குள அணுமின் நிலையம் வேண்டாம் என்று தமிழக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் செய்கின்றனர். உண்ணாவிரதம் இருந்தனர் இருக்கின்றனர். ஆபத்து வரும் என்று தலையால் அடித்துக் கொள்கின்றனர்.

ஆனால் முன்பு டில்லியில் இருந்த மோகன்ஜி அரசாங்கம் கொஞ்சம்கூட கண்டு கொள்ளவில்லை. செத்தால் தமிழன் தானே சாகிறான் என்ற நினைப்பில் ஏனோ தானோ போக்கில் வாழ்ந்தார்கள்.

அதற்கு ஒத்து ஊதியது ஒரு பதிவிரதா இட்லி சாம்பார் அண்ட் கம்பெனி. கடைசியில் மோடி என்கிற கப்பல் மோதி அந்தக் கம்பெனியைக் ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து விட்டது. நல்லது. புரியும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் இன்னும் ஒரு விசயம். அப்படியே கூடாங்குள அணுமின் நிலையத்தில் பிரச்னைகள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சும்மா ஒரு பேச்சுக்குத் தான். அப்படி ஒரு நிலை வரக்கூடாது.

அப்படியே வந்தால் முதலில் ‘ஏர்கண்டிஷன்’ போட்டு உண்ணாவிரதம் இருக்கப் போவது நாடறிந்த நல்ல ஒரு பெருமகனாகத் தான் இருப்பார். நான் சொல்லவில்லை. சொல்வேனா. அப்படித்தான் தமிழகத்தின் கூடாங்குள ஏழை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு விமோசனம் இல்லை. அது ஒரு சாபக்கேடு.

04 ஜூன் 2017

மயில் கண்ணீர்

ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் பெண் மயில் கர்ப்பம் ஆகிறதா

மயில் தன் தோகையை விரித்தால் அழகு... ஆடினால் பேரழகு. ஆண் மயிலுக்குத் தான் தோகை. பெண் மயிலுக்குத் தோகை இல்லை.

 

சரி. ஆண் மயில் உறவு கொள்ளாது. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் தான் பெண் மயில் கர்ப்பம் ஆகிறது. ஆண் மயிலின் இந்தப் புனிதத் தன்மையால் தான் அது இந்தியாவின் தேசிய பறவையாக உள்ளது. இப்படி ஒருவர் பதிவு செய்தார். இன்னொருவர் சரி என்றும் சொல்லி இருக்கிறார்.

ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் தான் பெண் மயில் கர்ப்பம் ஆகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறிவியல் ரீதியாகச் சான்றுகளும் இல்லை. அப்படிச் சொல்கிறவர்கள் தக்கச் சான்றுகளை வழங்க வேண்டும்.

நிலாவில் பாட்டி வடை சுடுகிறாள் என்று அம்மா சொன்னார். நிலாவைப் பார்த்துக் கொண்டே சோறு சாப்பிட்டோம். ஆனால் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் நிலாவில் காலடி வைத்து போது சிலர் அதை ஓர் அப்ரஸ் கப்சா என்றார்கள்.
 

உண்மையில் பார்த்தால் அங்கே நிலாவில் பாட்டியும் இல்லை. வடையும் இல்லை. இன்னும் சிலர் நிலாவில் பாட்டி இருக்கிறாள் என்று சொல்லிச் சொல்லியே போய்க் கொண்டு இருக்கிறார்கள். தப்பாகச் சொல்லவில்லை. நவீன அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் தான் பெண் மயில் கர்ப்பம் ஆகிறது என்பது உண்மை என்றால் சரியான சான்றுகளைக் காட்ட வேண்டும். அப்போது நம்பலாம். உங்கள் பதிவுகளுக்கும் வலிமை இருக்கும். நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

உலகத்தில் உள்ள எந்த ஒரு பெண் உயிரும் ஆணின் இனப்பெருக்க அணுக்கள் இல்லாமல் கரு தரிக்க முடியாது. அது தான் இயற்கையின் இனப் பெருக்க விதி. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் பெண் மயிலுக்குக் கரு தரிக்காது.


யாரோ சொன்னதை நாம் அப்படியே நம்பிவிடக் கூடாது. அவ்வாறு கருத்துச் சொன்னவர்களைத் தப்பாகச் சொல்லவில்லை. அது அவர்களின் கருத்துகள். இருந்தாலும் சான்றுகளை முன் வையுங்கள். ஏற்றுக் கொள்கிறோம்.

ஆண் மயிலுக்குப் பளபளக்கும் விசிறி போன்ற அழகிய தோகை. அதை விரித்தாடும் போது அழகிய அற்புதக் காட்சிகள். இந்தப் பகட்டான காட்சிகள் எதற்காக? பெண் மயிலைச் சுண்டி இழுக்கத் தான் என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்!

ஆண் மயிலுடன் இணைவதற்கு பெண் மயில் சற்று ‘பிகு’ பண்ணும். ஆனால் ஆண் மயிலின் கண்கவர் காட்சிகளைக் கண்டு பெண் மயில் சுத்தமாகக் கிரங்கி மயங்கிப் போய் விடும். ஆண் மயிலின் பரந்து விரிந்த தோகையின் வண்ண நிறக் கலவைகளைப் பார்த்து... பெண் மயில் அப்படியே சொக்கியும் போகும்.


உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சி அளிக்கும் அந்த ஆண் மயிலையே பெண் மயில் தன் ஆசைத் துணையாகவும் ஏற்றுக் கொள்ளும்.

ஓர் ஆண் மயில் ஐந்து பெண் மயில்கள் வரை தேர்ந்து எடுக்கும். ஒரு வருடத்தில் 25 மயில் குஞ்சுகளுக்குத் தகப்பனாகி விடும். (All species of peafowl are believed to be polygamous.) ஓர் ஆண் மயில் பல பெண் மயில்களுடன் இன உறவு வைத்துக் கொள்ளும். ஓர் ஆண் மயில் பலதாரத் திருமணத்திற்கு அரிச்சுவடி எழுதிய ஓர் உயிரினம். (சான்று: https://en.wikipedia.org/wiki/Peafowl#Behaviour)

ஓர் ஆண் மயில் ஒரு பெண் மயிலுடன் இணைவதற்கு முன்னரும் இணைந்த பின்னரும் இசைக் குரல் எழுப்பும். (சான்று: Singing in peacocks usually occurs just before, just after, or sometimes during copulation. - Yorzinski, Jessica L.; K. R. Annop (5 November 2012). "Peacock Copulation Calls Attract Distant Females". Ebscohost. Brill.)


ஆக மயில்கள் மற்ற உயிரினங்களைப் போலவே இனப் பெருக்கம் செய்கின்றன. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதால் பெண் மயில் கர்ப்பம் ஆவது இல்லை. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே மாதிரியான இனப்பெருக்க அணுகு முறை தான். மயிலுக்கு மட்டும் தனியாக எதுவும் இல்லை. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இது ஓர் அறிவியல் உண்மை.

அப்படியே ஆண் மயில்களின் கண்ணீரைப் பெண் மயில்கள் குடித்துக் குடித்துக் கர்ப்பம் ஆகி இருந்தால்... அதுவே உண்மையாக இருக்குமானால்... உலகத்தில் உள்ள எல்லா ஆண் மயில்களும் இப்போது குருட்டு ஆண் மயில்களாக அழுது அழுது அனாதை ஆசிரமங்களைத் தேடிப் போய் இருக்கும்.

ஏன் என்றால் பெண் மயில்களுக்கு கூரிய அலகு. அதாவது மூக்கு. அந்த அலகினால் ’அத்தான் உங்க கண்ணீரைக் குடிக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லி... அப்படியே ஆண் மயில்களின் கண்களைக் கூரிய மூக்கினால் குத்திக் குத்தி... அப்புறம் கடைசியில் என்ன... உலகில் உள்ள எல்லா ஆண் மயில்களுமே குருடாகிப் போய் இருக்கும்.


அடுத்த பிறப்பில் ஓர் ஆண் மயிலும் இருக்காது. அப்புறம் நீங்க தான் ஓர் ஆண் மயிலாகப் பிறக்க வேண்டும். எப்படி உங்க வசதி.

இனப்பெருக்க காலத்திற்குப் பின் இறகுகளை உதிர்க்கும் காலம் உதயமாகும். ஒரு பெரிய ஆண் மயிலின் தோகையில் 200-⁠க்கும் அதிக இறகுகள் அடுக்கப்பட்டு இருக்கும்.

இந்தியக் கிராமவாசிகள் அவற்றைச் சேகரித்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால் இந்த இனங்களைப் பாதுகாப்பதற்காக இப்படி ஏற்றுமதி செய்வது அண்மைய காலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இருந்தாலும் இன்னும் அவை விசிறிகளாகவும் வேறு சில அலங்கார பொருட்களாகவும் வலம் வரவே செய்கின்றன.


மாலை நேரத்தில் தூங்குவதற்கு தகுந்த இடம் தேடி மயில்கள் உயரமான மரங்களில் மெதுவாக ஏறுகின்றன. சூரியன் உதித்ததும் அவை மெதுவாக கீழே இறங்குகின்றன.

இந்த அப்பாவி ஜீவராசிகள் உங்களுடைய கண்களுக்கு விருந்தளிக்கலாம், ஆனால் அவற்றின் கீதமும் இதே போல உங்களுடைய செவிகளுக்கு விருந்தளிக்கலாம் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள். இரை தேடி கண்டுபிடிக்கும் வரை அவற்றின் ஓலம் மாலைப் பொழுதின் அமைதியை குலைத்துவிடும்.

மயில்கள் மரக்கறிகளையும் உண்ணும். புலாலையும் உண்ணும். சொல்லப் போனால் கண்டதை எல்லாம் தின்னும். விதைகள், தானியங்கள், பருப்புகள், பயிர்களின் இளந்தளிர் வேர்கள் ஆகியவற்றோடு பூச்சிகள், பல்லிகள் போன்றவற்றைச் சாப்பிடும். சில சமயங்களில் சிறு சிறு பாம்புகளையும் விட்டு வைப்பதில்லை.


மயில் கர்வம் பிடித்த பறவையாக தோன்றினாலும் அது மிகவும் பத்திரமாக உஷாராக இருக்கும். எடுத்துக்காட்டாக பதுங்கி வரும் பூனையைச் சட்டென்று கண்டு கொண்டு உரத்த சத்தம் போட்டுக் கொண்டே காட்டுக்குள் ஓடிவிடும்.

மற்ற மற்ற ஆண் மயில்களும் இந்த ஓட்டத்தில் சேர்ந்து கொள்ளும். ஆனால் என்ன தான் பெரிய ஆபத்துகள் வந்தாலும் பெண் மயில்கள் அவற்றின் குஞ்சுகளை அம்போ என்று விட்டு விட்டு ஓடுவது இல்லை.

நீண்ட தோகை அவற்றின் வேகத்திற்கு அணை போடுவதாக தோன்றலாம். இருந்தாலும் பறக்கத் தொடங்கும் போது அதன் நீண்ட தோகை சற்று இடைஞ்சலாக இருப்பது போல தோன்றும். ஆனால் மேலே கிளம்ப ஆரம்பித்து விட்டால் இறக்கைகளைப் படபடவென்று அடித்துக் கொண்டு மிக வேகமாய் பறக்க ஆரம்பித்துவிடும்.

குஞ்சுகளுக்கு எட்டு மாதம் ஆகும் போது தாய் தந்தைக்கு டாட்டா சொல்லிவிட்டு தங்களையே கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கின்றன. இவை வீட்டை விட்டு கிளம்பிய பிறகு தாய் பறவை அடுத்த சந்ததியை உருவாக்கத் தயாராகி விடுகிறது.


சுமார் எட்டு மாதங்களில் ஆண் குஞ்சுகளுக்கு அவற்றுக்கே உரிய தனிச் சிறப்புமிக்க தோகை முளைக்க ஆரம்பிக்கிறது, ஆனால் முழுமையாக வளர நான்கு ஆண்டுகள் பிடிக்கும். பின்பு அவை சொந்தமாகவே ஒரு குடும்பத்தை உருவாக்கத் தயாராகி விடுகின்றன. சரி.

மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். மயிலை எங்கே பார்த்தாலும் சரி. இடத்தை விட்டு நகர மாட்டோம்.  நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த அளவுக்கு மயில் அழகோ அழகு.

இந்தியாவின் தேசியப் பறவை என மயிலுக்கு மணிமகுடம். நிச்சயமாகவே மயிலுக்கு ராஜ மிடுக்கு இருக்கிறது. அதனால் தானோ என்னவோ அகந்தை கொண்ட மனிதரை மயிலைப் போல கர்வம் பிடித்தவன் என்று சொல்வார்கள்.

மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள். மழை வருமா வராதா தெரியாது. ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தைப் பார்த்து பெண் மயில்கள் சொக்கி ஏமாந்து போகும்.

அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும். ஆனால் மயில்கள் மிக சாந்தமானவை. தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.

ஆண் மயில் தன் தோகையை விரிக்கிறது. விரித்து உலகத்தில் உள்ள மக்களுக்கு அழகு காட்டுகிறது. அதன் மூலம் என்ன சொல்ல வருகிறது தெரியுமா.


எல்லா ஆண்களும் அழகானவர்கள் என்று சொல்லாமல் சொல்ல வருகிறது. அதற்காகப் பெண்கள் கோபப்பட வேண்டாம். உண்மை தானே.

ஆண்கள் எப்போதும் அழகு தான். அந்த ரகசியம் எல்லா ஆண்களுக்குத் தெரியும். என்ன ஆண்கள் தங்களின் அழகைப் பெரிதாக் காட்டிக் கொள்வது இல்லை. ஓர் அடக்கம். அவ்வளவு தான்.

ஒரு செருகல். இங்கே ஆண்களின் உடல் அழகையோ அல்லது அவர்களின் தொப்பை அழகையோ சொல்லவில்லை. அவர்கள் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் அழகைத் தான் சொல்ல வருகிறேன். புரியுதுங்களா.

மற்றபடி அழகு என்று சொன்னால் பெண்கள் தான் அழகு. அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

இல்லை என்றால் எத்தனையோ அழகு சாதன நிலையங்களின் கதவுகளை எப்போதோ இழுத்து மூடிவிட்டுப் போய் இருப்பார்கள்.

03 ஜூன் 2017

DLP இருமொழித் திட்டம் - 1

DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அண்மையில் புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் அமைதிப் பேரணி ஒன்றும் நடந்து இருக்கிறது.


2016-ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை அமலாக்கம் பெறுகிறது என கல்வியமைச்சு அறிவித்தது. 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.

அப்படி ஓர் அமலாக்கத்திற்குச் சில வரையறைகளும் உள்ளன. DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 

அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியில் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். இந்தப் பரிச்சார்த்த முயற்சிக்கு 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.


இந்தத் திட்டம் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப் பட்டது. ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் அதன் தாக்கங்கள் துரிதமாகப் பரவத் தொடங்கி விட்டன.

இந்தத் திட்டத்தைச் சீனப் பள்ளிகள் முற்றாகப் புறக்கணித்து விட்டன. அரசாங்கம் இதை நன்றாகவே எதிர்பார்த்தது. அதன் காரணமாக தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்திற்கு முதலில் உட்படுத்தியது. இருந்தாலும் மலாய் சமூகத்திலும் பல்வேறு வகையில் எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைப் போதிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். 


அப்படி இல்லாமல் மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்தனர்.

தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவை என்ன கருத்துகள் என்பதை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

சிவராசா எல்லை மீறிவிட்டார்

சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

(நன்றி: செல்லியல்)
சான்று: http://www.selliyal.com/archives/150388

ஷா ஆலாம் – இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல் ஒன்றில் அரசியல் உரை நிகழ்த்தியதற்காகச் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது நேரடியாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருக்கிறார்.

சிவராசா ‘தனது செயலால் எல்லை மீறிவிட்டார்’ எனப் பகிரங்கமாகக் கூறி இருக்கிறார்.

முஸ்லீம்களாக இருந்தாலும் சரி முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி யாரும் பள்ளி வாசலை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என நான் உத்தரவிட்டு இருக்கிறேன். சிவராசா எனது உத்தரவை மீறிவிட்டார். எல்லை மீறிவிட்டார் என சிவராசாவின் பெயர் குறிப்பிட்டு சிலாங்கூர் சுல்தான் உரையாற்றினார்.

இதற்கிடையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பப் போவதாகக் கூறி இருக்கும் சிவராசா, தான் இன்னும் அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

“பள்ளிவாசல்கள் தொழுகைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மதத்தைப் பற்றி மேலும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் மையங்களாகத் திகழ வேண்டும், முஸ்லீம்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர மாறாக பிளவுபடுத்தக் கூடாது.

பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் பள்ளிவாசல்களில் அரசியலை அனுமதிக்கக் கூடாது என்ற தனது உத்தரவை மதிக்க வேண்டும்” என்றும் சிலாங்கூர் சுல்தான் தனதுரையில் வலியுறுத்தினார்.