28 ஜூன் 2017

அம்பிகா சீனிவாசன் 1

பாகம்: 1

மலேசிய மக்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு மந்திரச் சொல். வான விதானத்தில் ஒளி விளக்காய்ச் சஞ்சரிக்கும் ஒரு மாயச் சொல். மகிமை வாய்ந்த அந்தச் சொல்லில் விவேகமான சிந்தனைகள். விநோதமான ஆளுமைகள். வித்தியாசமான அணுகுமுறைகள்.


சில சமயங்களில் அந்த விவேகமான சிந்தனைகளும் விநோதமான ஆளுமைகளும் வித்தியாசமான அணுகுமுறைகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கின்றன. ஆல விருச்சகங்களைப் போல ஆழமாய் விழுதுகள் விட்டு படர்ந்தும் போகின்றன.

அங்கே உலகப் பெண்களின் உரிமைப் போராட்ட உணர்வுகள் ஆழிப் பேரலைகளாய் ஆர்ப்பரிக்கின்றன. அப்படிப்பட்ட அந்த உணர்வுகளுக்குச் சொந்தக்காரார் தான் அம்பிகா சீனிவாசன். மலேசியா கண்டெடுத்த ஒரு மந்திரப் புன்னகை.

அண்மைய காலங்களில் அம்பிகா என்கிற சொல் சாமான்ய மக்களின் ஜீவ நாடிகளையும் உரசிப் பார்க்கின்றது. இனம் பார்க்காத சமயச் சகிப்புத் தன்மைகளை அலசியும் பார்க்கின்றது. அரசாசனம் பார்க்கும் அரசியல் புள்ளிகளுக்கும் சிம்மச் சொப்பனமாய் விளங்குகின்றது.

இதை எல்லாம் தாண்டிய நிலையில் அம்பிகா சீனிவாசன் மக்கள் மனங்களில் ஒரு மந்திரக் கண்ணாடியாக ஒளிர்கின்றார். மாயஜாலங்களைக் காட்டும் ஒரு தந்திரக் கண்ணாடியாக மிளிர்கின்றார். அங்கே பல்வேறான வியப்புகள். பல்வேறான பிரமிப்புகள்.

உலக நாடுகளில் சிறந்து விளங்கும் துணிச்சல்
மிக்க பெண்மணிகளுக்கான அமெரிக்க விருது.
அருகில் ஹில்லரி கிளிண்டன், மிச்சல் ஒபாமா
தமிழர்கள் மட்டும் அல்ல. அனைவரும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

அவரைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் இரு கோணங்களில் அவரைப் பார்க்க வேண்டி இருக்கிறது. முதலாவது அம்பிகா என்ன நினைக்கிறார். ஏன் அப்படி நினைக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு பார்வை. அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறார். அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார். இப்படி இரு கூறுகள். இரு பார்வைகள்.

இந்தக் கட்டுரையை நீங்களும் நானும் மட்டும் படிக்கப் போவது இல்லை. டத்தோ அம்பிகாவும் படிக்கப் போகிறார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும். ஏன் என்றால் ’ஆனந்த விகடன்’ தாளிகையின் நிறுவனர் அமரர் ஸ்ரீநிவாசனின் பேத்தி தான் இந்த டத்தோ அம்பிகா. 




இவர் ஈழத்து வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அது தவறு. அவருடைய தாத்தா, பாட்டி, அம்மா அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தந்தையார் டாக்டர் ஜி.ஸ்ரீநிவாசன். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்.  1974-ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையை (Dr.G.Sreenevasan, founder Hospital Kuala Lumpur - Urology and Nephrology Dept) நிறுவியவர். அதன் தலைவராகவும் பதவி வகித்தவர்.

சரி. விசயத்திற்கு வருகிறேன். அம்பிகாவைப் பற்றி சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். 


பிரான்ஸ் நாட்டின் செவிலியர் விருது
நல்லது கெட்டது தெரிந்த நல்ல ஓர் அறிவாளி. அப்பழுக்கற்ற வெள்ளந்தித் தனம். வயது தாண்டுகிறது என்றாலும் முகத்தில் ஒரு ஜீவகரமான ஒளி. மொத்தத்தில் இலட்சுமி கடாட்சம் நன்றாகவே தெரிகின்றது.

ஓர் அற்புதமான பெண்மணி. ரொம்பவும் புகழ்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதைச் சொல்கிறேன். அவருக்கு வயது 61.


அவரிடம் பழகிப் பார்த்தால் உண்மை தெரியும். அவரை ஓர் எதார்த்தமான அறிவு ஜீவி என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால் அதற்குச் சரியான சான்றுகள் இருக்கவே செய்யும்.

அந்தச் சான்றுகளுக்குச் சரியான சாட்சிகளும் இருக்கும். சில சிக்கலான கருத்துகளுக்கு அரசு நீதிச் சட்டங்களை அடுக்கடுக்காய் அள்ளிப் போடுவார். சும்மா சொல்லக் கூடாது. மலேசியாவில் ஏறக்குறைய 30 ஆயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்தவர். சட்டக் கலையை நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார். (President of the Malaysian Bar Council from 2007 to 2009)

சில ஆண்டுகளுக்கு முன்பு கெடாவில் அவர் பேசியதை நினைவு கூர்கிறேன். 




“நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. எந்த ஓர் அரசியல் கட்சிக்காகவும் போராடவில்லை. மக்களுக்காகப் போராடுகிறோம். மக்களின் வாக்குகள் அர்த்தம் கொண்டதாக இருக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். மக்களின் வாக்குகளின் மதிப்பை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.

யார் அதிகாரத்திற்கு வந்தாலும் சரி. வந்தவர்கள் நன்றாக இயங்கா விட்டால் ஐந்து ஆண்டுகளில் அவர்களை அகற்றும் ஓர் ஆற்றல் நமக்குத் தேவை. கிட்டத்தட்ட 57 ஆண்டுகள் முடிந்து விட்டன. உலகில் மிகவும் நீண்ட கால ஆட்சி இதுவாகும். நம் அரசியல்வாதிகள் நல்லபடியாகப் பொறுப்பேற்றுச் சேவைகள் செய்ய வேண்டிய ஒரு காலக் கட்டம் வந்து விட்டது.”

ஆக அம்பிகா என்ன சொல்ல வருகிறார் என்பது நன்றாகவே தெரிய வருகிறது. சுத்தமான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை. அதற்கானச் செயல்பாடுகளிலும் களம் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறார். அவருடைய கோரிக்கைகளில் அதுதான் முத்தாய்ப்பும் கூட. 




அதனால் அவரைத் தொடரும் அச்சுறுத்தல்களைக் கண்டு அவர் மனம் கலங்கவில்லை. கண்களைக் கசக்கவில்லை. ஒரு நாட்டிற்கு ஒரு தூய்மையான ஆளுமை தேவை என்று சொல்லி வருகின்றார்.

அம்பிகா பல முறை கைது செய்யப் பட்டு இருக்கிறார். காவலில் வைக்கப் பட்டு இருக்கிறார். சமயங்களில் அவருடைய உயிருக்கே விலையும் பேசப் பட்டு இருக்கிறது.

அவருடைய வீட்டிற்குள் எண்ணெய்க் குண்டுகள் வீசப் பட்டன. அவருக்குக் கொலை மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அசிங்கமான மின்னஞ்சல்களும் வருகின்றன. (சான்று: http://www.themalaymailonline.com/malaysia/article/ambiga-death-threats-act-of-terrorism-sreenevasan - Datuk Ambiga Sreenevasan today described the death threats against her and other activists as "an act of terrorism")




வேறு ஓர் பெண்ணாக இருந்தால் ’ஆளை விடுங்கடா சாமி’ என்று மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வீடு பக்கம் போய்ச் சேர்ந்து இருப்பார். பழைய ஆளாய் மாறிப் போய் இருப்பார். சரி. அடுத்து ஒரு முக்கியமான விசயம்.

இந்தக் கட்டுரை எந்த ஓர் அரசியல் நோக்கப் பின்னணியிலும் எழுதப்படவில்லை. ஒரு சாமான்யச் சமூகப் போராட்டவாதி நடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கிறோம். அந்தக் கோணத்தில் தான் எழுதப் படுகிறது.

ஆக அந்த வகையில் அந்தப் போராட்டவாதியின் உண்மையான காலச்சுவடுகளில் பல்வேறு சமூக அரசியல் நெளிவு சுழிவுகளும் இருக்கவே செய்யும். அவற்றை நாம் வரலாற்றுப் பதிவுகளாகப் பார்ப்போம். மற்ற எந்தக் கோணத்திலும் பார்க்க வேண்டாமே.




பெர்சே தன்னுடைய முதல் அரங்கேற்றத்தை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 நவம்பர் 23-ஆம் திகதி நடத்தியது. அதில் டாக்டர் வான் அஸிஷா, சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ்.அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாக இருந்தார்கள்.

அடுத்து 2007 நவம்பர் 10-ஆம் திகதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பெர்சே 2.0 பேரணி. இதற்கு டத்தோ அம்பிகா தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா.ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

அந்தப் பேரணியில் வெண் தாடியுடன் வலம் வந்த மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட் அவர்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. 
(சான்று: http://www.thestar.com.my/news/nation/2013/09/17/a-samad-said/ - Samad Said has written 72 books Salina, Cinta Fansuri and Hujan Pagi are among his more notable novels.)



மலாய் இலக்கியவாதி சமாட் சாயிட்

அடுத்து பெர்சே 3.0 பேரணி. கடந்த 2012 ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனும் பிரதான நோக்கத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
(சான்று: https://www.youtube.com/watch?v=fV7GpnDiq74)

பெர்சே 2.0 பேரணியில் பல்லாயிரம் மக்களில் ஒருவராக அம்பிகா களம் இறக்கினார். அந்தக் களத்தில் இனம், சமயம், மொழி எதுவும் இல்லை. அப்போது இருந்து யார் இந்த அம்பிகா சீனிவாசன் என்று எல்லோரும் கேட்கத் தொடங்கினார்கள்.

அம்பிகா சீனிவாசன் எனும் சொல் அப்போது மலேசியா முழுவதும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது முற்றிலும் உண்மை. 




ஒரு சாதாரண குடும்ப மாது அரசியல் மறுமலர்ச்சி சன்னிதானங்களில் எப்படி இந்த அளவுக்கு துடிப்புமிக்கத் துடுப்பு கோலாக மாறினார் என்று அனைவரும் வியந்து பார்த்தனர். இணையத்தின் ‘யூ டியூப்’ வழியாக 32 இலட்சம் பேர் அந்தப் பேரணியைப் பார்த்தனர்.
(சான்று: https://www.youtube.com/watch?v=vCetbFLceFI)

சும்மா ஒன்றும் இல்லை. 24 மணி நேரத்தில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அதை யார் இணையத்தில் பதிவேற்றம் செய்தார் என்பது இன்று வரை ஒரு பரம இரகசியமாகவே இருந்து வருகிறது.

உலகத்தின் எங்கோ ஒரு பகுதியில் என்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் உலக மக்கள் அப்போது உணர்ந்து கொண்டனர். அவ்வளவுதான்.

அந்தக் கட்டத்தில் எகிப்திலும், லிபியாவிலும் தலைக்கு மேல் வெள்ளம். சிரியாவிலும் பிரச்சினைகள் தொடங்கி விட்டன. ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். ஆக அப்போதைக்கு பெர்சே 2.0 பேரணி என்பது தயிர் சாதத்தில் ஒரு சின்ன ஊசி மிளகாய்தான். 




சரி. அந்த நிகழ்வுகளை நாம் ஒரு பொது நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கம் பார்த்தால் நாட்டை நிர்வாகம் செய்யும் ஓர் அரசாங்கம். இந்தப் பக்கம் பார்த்தால் அந்த அரசாங்கத்தின் ஒரு சில பலகீனங்களைத் தூசு தட்டச் சொல்லும் பொதுமக்களின் பேரணி.

இவற்றில் எது வேண்டும். பொதுமக்களில் பலர் எதைத் தேர்வு செய்வது என்கிற ஓர் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப் பட்டனர். இருக்கலாமா இருக்க முடியுமா எனும் இரண்டும் கெட்டான் நிலை. ஒரு திரிசங்கு நிலை.

அரசாங்கம் நல்லா தானே போய்க் கொண்டு இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் கேள்விகளை எழுப்பினார்கள். அது இல்லை. அங்கே சில பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரி செய்யத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் என்று ஒரு சாரார் குரல் கொடுத்தார்கள்.

பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே. ஆர்ப்பாட்டம் செய்துதான் ஆக வேண்டுமா. தேவை இல்லையே. இதற்கும் வேறு ஒரு பதில் வருகிறது. பெற்ற பிள்ளை நம்முடைய தொடையில் அசுத்தம் செய்து விட்டால் அதற்காக அந்தத்  தொடையை வெட்டி வீசிவிட முடியுமா. 




முடியாது. தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும். புரியும் என்று நினைக்கிறேன்.

பொதுவாகச் சொல்வது என்றால் கடந்து வந்த ஐம்பது ஆண்டு காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் போகும் எந்த ஓர் அமைப்பையும் நாம் ஏற்றுக் கொண்டது இல்லை. அது குடிமக்களின் தலையாய விசுவாச முறையாகவும் இருந்து வந்துள்ளது.

ஆயிரம் இருந்தாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் எந்த ஒரு கொள்கைப் பாட்டிலும் நமக்கு உடன்பாடு இருந்தது இல்லை. அப்படிப்பட்ட ஓர் எதிர்க் கொள்கைப்பாடு இதுவரையிலும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளது.

நல்ல ஓர் ஆளுமையைச் சிதைக்கப் பார்க்கும் எந்த ஓர் ஒழுங்கற்ற நடவடிக்கைக்கும் பொது மக்கள் உடன்பட்டுத் துணை போனதும் இல்லை. குறிப்பாக இந்திய வம்சாவளியினர் அரச நிந்தனைகளையும், அரசு சார் நிந்தனைகளையும் பெரும் பாவங்களாக நினைத்துப் பார்க்கின்றவர்கள்.

ஆக அப்படிப்பட்ட ஒரு நடைமுறையில் ஏன் ஒரு சவால்  நிலை ஏற்பட வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. இதை நாம் நேர்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஓர் அரசாங்கத்தின் தேய்மானங்களையும் அந்த அரசாங்கத்தின் ஆளுமைப் பலகீனங்களையும் சரி பார்க்கச் சொல்லும் நேர்த்தியான சம்பிரதாயங்களை நாம் என்றுமே நிராகரிக்க முடியாது. ஆக அந்தக் கொள்கைபாட்டில் தான் அம்பிகா வந்து நிற்கின்றார்.

கடந்த சில ஆண்டுகளில் ‘பெர்சே’ போன்ற பேரணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று பொது ஊடகங்களின் வழியாக பொது மக்களுக்கு எச்சரிக்கைகள், விளம்பரங்கள் செய்யப் பட்டன. அறிவிப்புகளும் தொடர்ந்து வந்தன. இந்தக் கட்டத்தில் பொதுமக்களில் ஒரு பகுதியினர் அம்பிகாவின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.




அதுதான் அம்பிகா எனும் சொல்லின் பின்னால் வந்து நிற்கின்ற ஓர் உயிரோட்டம் என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றார்கள். இதில் ஒன்றும் ஒரு பெரிய மாய மந்திரம் இல்லை. பெரிய மர்ம ஜாலம் எதுவும் இல்லை.

இந்த இடத்தில் இனம், மொழி, சமயம் எல்லாமே கடந்து போய் விடுகின்றன. அங்கே ஒரு பெரிய தேசியமே உருவாகி விடுகின்றது.

அதன் பின்னர் டத்தோ அம்பிகாவின் வாழ்க்கையில் பற்பல அசம்பாவிதங்கள். பற்பல சில்லறை இடையூறுகள்: எதிர்பாரா நிகழ்வுகள். அம்பிகாவைச் சிறுமைப்படுத்தி சில பல குறுந் தகவல்கள்.
(சான்று: http://www.abc.net.au/news/2015-05-02/rights-activists-opposition-politicians-arrested-in-malaysia/6440154)

அவருக்கு எதிராக பற்பல பிரசாரங்கள். ஒரு கட்டத்தில் 'அம்பிகா ஒரு பயங்கரவாதி எனும் போர்வையில் ஓர் இந்துப் பெண்' என்றும் வகைப் படுத்தப்பட்டது.
(சான்று: https://www.amnestyusa.org/sites/default/files/uaa24016.pdf - Amnesty International)


இந்தப் பகுதியின் இரண்டாம் பகுதி நாள தொடரும் >>> 

27 ஜூன் 2017

உங்கள் திறமை

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. 





அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில்.

அதற்கு குரங்கோ, "மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. 


அழகாக பாடி மனிதர்களைச் சந்தோசப் படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலைக் கேட்டு மகிழ்கின்றனர். 

அவர்களைச் சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்தக் குயிலே இறைவனின் அற்புதப் படைப்பு" என்றது.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்று கத்தத் தொடங்கியது. அதன் கர்ண கொடூரச் சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்துத் தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் பாலசுப்பிரமணியம் போல பாட முடியாது. பாலசுப்பிரமணியத்தால் பிரபுதேவா போல ஆட முடியாது.  

உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையே இல்லை.

ஐயோ பாவம்

வயதான ஒரு தாத்தாவின் மீது ஒரு சுவர் சரிந்து விழுந்தது. அவர் இறந்து விட்டார். சுவரைக் கட்டிய கொத்தனார் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’என் மீது தவறு இல்லை. மண்ணையும் சிமெண்டையும் குழைத்தவன் தான் சரியாகக் குழைக்கவில்லை’


மண்ணைக் குழைத்தவன் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’நான் தவறு செய்யவில்லை. தண்ணீர் ஊற்றும் பானை வாய் அகலம். அதனால் தவறு நடந்து விட்டது’ என்றான்.

பானைக்காரன் மீது வழக்கு போடப் பட்டது. அதற்குப் பானைக்காரன்  சொன்னான் ‘நான் பானையை ஒழுங்காகத் தான் செய்தேன். அப்போது ஒரு நாட்டியகாரி அந்த வழியாகப் போனாள். அதனால் தான் பானை இப்படி ஆகிவிட்டது’ என்றான்.

நாட்டியக்காரி மீது வழக்கு போடப் பட்டது. அதற்கு அவள் ‘நான் ஒரு வண்ணானிடம் துணி துவைக்க கொடுத்து இருந்தேன். அதை வாங்கத் தான் அந்த வழியாகப் போனேன்’ என்றாள். 


வண்ணான் மீது வழக்கு போடப் பட்டது. வண்ணான் சொன்னான் ’நான் சலவை போடும் கல்லின் மீது ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் தான் காரணம்’ என்றான்.

முனிவரிடம் போய் கேட்டார்கள். பாவம் அவர். அமைதியாகத் தியானத்தில் இருந்தார். ’இந்த ஆள்தான் காரணம்’ என்று சொல்லி அவரைக் கொன்று விட்டார்கள்.

யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிக்கும் காலம் இது. அதற்குப் பெயர் தான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

26 ஜூன் 2017

இருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா

1950களில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். 
 

இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஓர் இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டம் தான். இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குப் பார்வையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கம்.

அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை.

இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம் 1950ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச்  சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஓர் உறுதியற்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம். 

 

பதற்றத்தின் தடுமாற்றங்களையும் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். இது என் கருத்து. 

அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் குன்றி ஒரு தொய்வு நிலையைக் கண்டு இருக்கலாம்.

50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை.




நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைய பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாதுங்க. 

சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுதான். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஓர் அவலத்தை எடுத்துச் சொல்லவும் உரிமை இருக்கிறது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும்.


அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. 

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லச் சாகும்.

என் தமிழ்ச் சமுதாயமே தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாம். 

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். 

மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

25 ஜூன் 2017

வேலுநாச்சியார்

ஆயிரம் ஆயிரம் சாதனை மங்கைகளை தமிழரின் வரலாறு பார்த்து பிரமிப்பு அடைந்து இருக்கிறது. ஆனால் வேலு நாச்சியார் போல ஒரவீர மங்கையைப் ார்த்ு இல்ல. வீரம் என்றால் சாான்ய வீரம் அல்ல. மாபெரும் ண் பார்த் வீழ்த்திய வீரம்.



இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்த ஊர். வேலுநாச்சியாரின் தந்தையார் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ார்கள். இ இந்தக் காலத்திும் சி அந்தக் காலத்ிலும் சி மிகச் சியான பழமொழி. சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.




வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவை அனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டி தான்.

அவருக்குப் பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறு கொண்டும் வேல் கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

1746-ஆம் ஆண்டு. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியாரை மணமுடித்தார். வேலுநாச்சியார் சிவகங்கைக்குக் குடிபுகுந்தார்.




சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கை தான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டது இல்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்து விடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க் கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாகப் போர்ப் படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.




நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீன ரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கித் தன் கட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.

வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப் பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.




திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்தில் இருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப் படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டும் என்பது தான் அவரது ஒரே இலக்காக இருந்தது. ஆனால் தளபதிகளாய் இருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபைப் பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.




அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்து விட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். 

காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.



பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையில் இருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டும் அல்ல விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளில் இருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க தன் தலைப் பாகையை கழற்றினான் ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.

வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால் தான் சிவகங்கையை மீட்க முடியும்.




வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும் இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப் பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்குச் சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகநாதன்