02 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3

நீல உத்தமனின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா திரிபுவனா (Sri Maharaja Parameswara Tribuwana). கி.பி.1299-ஆம் ஆண்டில் இருந்து 1347-ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய அரசின் அரசராக நீல உத்தமன் பலேம்பாங்கை ஆட்சி செய்து வந்தார். 


இவருக்கு முன்னர் பலேம்பாங்கை நீல உத்தமனின் தந்தையார் ஆட்சி செய்து வந்தார். அவருடைய பெயர் ஸ்ரீ பிரபு தர்மா சேனா திரிபுவனா (Sri Prabhu Dharma Sena Tribuwana). இவரின் மற்றொரு பெயர் ஸ்ரீ திருமூர்த்தி திரிபுவனா (Sri Trimurti Tribuwana).  நீல உத்தமனின் தாயார் பெயர் ஸ்ரீ திருமூர்த்தி சுந்தரி (Sri Trimurti Sandari).

(சான்று: http://www.royalark.net/Malaysia/malacca2.htm)

பலேம்பாங் தோற்கடிக்கப் பின்னர் நீல உத்தமனின் ஸ்ரீ விஜய அரசக் குடும்பத்தினர் பிந்தாங் தீவில் அடைக்கலம் அடைந்தனர். இந்தப் பிந்தாங் தீவு சிங்கப்பூருக்கு அருகில் இருக்கிறது.
 

அத்துடன் ஸ்ரீ விஜய அரச குடும்பத்தினருடன் பலேம்பாங்கில் இருந்த பல ஆயிரம் மக்களும் பிந்தாங் தீவில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தக் கட்டமாக நீல உத்தமன், பிந்தாங் தீவில் தற்காலிகமாக ஓர் அரசாட்சியை உருவாக்கிக் கொண்டார். அதற்கு அவரே அரசர் ஆனார்.

(சான்று: Paul Wheatley (1961). The Golden Khersonese: Studies in the Historical Geography of the Malay Peninsula before A.D. 1500. Kuala Lumpur: University of Malaya Press. pp. 82–83.)

இந்தக் காலக் கட்டத்தில் சிங்கப்பூரைத் தெமாகி எனும் ஒரு சிற்றரசர் ஆட்சி செய்து வந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் (Temasek). தெமாகி சிற்றரசரைச் சயாம் நாட்டு அரசு ஒரு சிற்றரசராக ஏற்கனவே நியமனம் செய்து வைத்து இருந்தது. அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1324-இல் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் தெமாகி சிற்றரசர் கொல்லப் பட்டார். அதனால் நீல உத்தமன் சயாம் அரசின் கோபத்திற்கும் உள்ளானார். இருந்தாலும் நீல உத்தமன் கவலைப் படவில்லை. சிங்கப்பூர் எனும் ஓர் ஊரை உருவாக்கினார்.

சிங்கப்பூருக்குச் சிங்கப்பூர் என்று பெயர் வைத்தது நீல உத்தமன் தான். சிங்கப்பூர் ஓர் ஊர் தான். சின்ன ஒரு மீன்பிடி கிராமம். அப்போது அது ஒரு நகரம் அல்ல. மறுபடியும் சொல்கிறேன். சிங்கப்பூரை உருவாக்கியவர் நீல உத்தமன்.

அடுத்து வந்த 48 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூர் நீல உத்தமனின் கட்டுப்பாட்டிலும் அவருடைய வாரிசுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. வளர்ச்சியும் பெற்றது.

1366-இல் சீனாவில் இருந்து ஒரு சீனத் தூதர் சிங்கப்பூருக்கு வந்தார். அவர் சீன அரசரின் பிரதிநிதியாகும். அவர் நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டார். அது சயாம் நாட்டிற்கு எதிரான ஒரு செயலாகும்.

நீல உத்தமனைச் சிங்கப்பூரின் அதிகாரப் பூர்வமான ஆட்சியாளராக ஏற்றுக் கொண்டது மட்டும் அல்ல, அவருக்கு ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரி புவனா (Sri Maharaja Sang Utama Parameswara Batara Sri Tri Buana) எனும் சிறப்புப் பெயரையும் அந்தச் சீனத் தூதர் வழங்கினார். 


(சான்று: John N. Miksic (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. p. 154)

சிங்கப்பூரின் புதிய நிர்வாகத்திற்குச் சீனாவின் பக்கபலம் இருப்பதைப் பார்த்த சயாம் கலக்கம் அடைந்தது. அதனால் நீல உத்தமன் மீது தாக்குதல் நடத்த சயாம் அச்சப் பட்டது.

நீல உத்தமனுக்குப் பிறகு அவருடைய மகன் ஸ்ரீ விக்கிரம வீர ராஜா (Seri Wikrama Wira) என்பவர் சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவர் 1347 லிருந்து 1362 வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தார்.

அந்தச் சமயத்தில் சிங்கப்பூரின் உள் ஆட்சியில் சில திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. குடும்பச் சச்சரவுகள் தான் மூல காரணம். அதனால் நீல உத்தமனின் பேரனாகிய ஸ்ரீ ராணா வீரா கர்மா (Sri Rana Wira Karma) என்பவர் சிங்கப்பூரின் ஆட்சிப் பதவியை ஏற்க வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது.

இவர் 1362 லிருந்து 1375 வரை சிங்கப்பூரை 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

அதன் பின்னர் சிங்கப்பூரின் அரசராக ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் பதவிக்கு வந்தார். இவர் 1375 லிருந்து 1389 வரை சிங்கப்பூரை ஆட்ி செய்தார். இவர் சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும்.

அடுத்து வந்தவர் பரமேஸ்வரா (Parameswara). இவர் சிங்கப்பூரை 1389 லிருந்து 1398 வரை ஆட்சி செய்தார். இவர் தான் மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேஸ்வரா.

*செஜாரா மலாயு* எனும் மலாய் வரலாற்றுக் காலக் களஞ்சியம், சிங்கப்பூரை உருவாக்கிய நீல உத்தமனை வேறு கோணத்தில் சித்தரிக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வரலாற்று அறிஞர்கள் கருத்து கூறுகின்றனர். (The accuracy and historicity of the Malay Annals is in doubt according to historians).
(தொடரும்)

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இந்தச் சர்ச்சை ஒரு மெகா சீரியலாக இன்னும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. 


பரமேஸ்வரன் எனும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தருவிக்கப் பட்ட ஒரு தமிழ்ச் சொல். பரமா எனும் சொல்லும் ஈசுவரன் எனும் சொல்லும் இணைந்து பெற்றதே பரமேசுவரன் எனும் சொல் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈசுவரன்.

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

* 1344 - ஸ்ரீ ராணா வீரா கர்மா என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தவர். அவருக்குப் பரமேஸ்வரா மகனாகப் பிறந்தார்.

* 1399 - தந்தையின் இறப்பிற்குப் பின் ஸ்ரீ மகாராஜா பரமேசுவரா எனும் பெயரில் துமாசிக்கில் அரியணை ஏறினார். துமாசிக் என்பது சிங்கப்பூரின் பழைய பெயர்.

* 1401 - துமாசிக்கில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

* 1401 - மலாக்காவைத் தோற்றுவித்தார்.

* 1405 - சீனாவிற்குச் சென்று மிங் அரசரின் ஆதரவைப் பெற்றார்.

* 1409 - சுமத்திராவின் ஒரு பகுதியாக இருந்த பாசாய் சிற்றரசின் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார்.

* 1411 - சீனாவிற்கு மறுபடியும் சென்று மிங் அரசரிடம் பாதுகாப்பை நாடினார்.

* 1414 - பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70 ஆவது வயதில் காலமானார்.

ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாவாவை ஸ்ரீ விஜயா எனும் பேரரசு ஆண்டு வந்தது. 13-ஆம் நூற்றாண்டில் அந்தப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

அதே சமயத்தில் மலாய்த் தீவுக் கூட்டங்களில் (Malay Archipelago) இருந்த சிற்றரசர்களின் அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன.

ஸ்ரீ விஜய பேரரசு ஜாவாத் தீவின் வரலாற்றில் மங்காதப் புகழைப் பெற்ற ஒரு மாபெரும் பேரரசு. சுற்று வட்டார தென்கிழக்காசிய அரசுகள் அனைத்தும் ஸ்ரீ விஜய பேரரசிடம் திறை செலுத்தி வந்தன.

ஸ்ரீ விஜய பேரரசின் புகழ் கி.பி. 1290 ஆம் ஆண்டில் ஜாவாவில் மங்கத் தொடங்கியது. கி.பி. 1025 ஆம் ஆண்டில் இந்த ஸ்ரீ விஜய பேரரசு தமிழகத்தின் ராஜேந்திர சோழனால் தாக்கப்பட்டது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அதன் பின்னர் ஜாவாவில் சிங்கசாரி எனும் ஒரு புதிய அரசு உருவானது.  அடுத்து ஸ்ரீ விஜய பேரரசின் செல்வாக்கும் சன்னம் சன்னமாய் மேலும் குறையத் தொடங்கியது. தொடர்ந்து சிங்கசாரி அரசு வலிமை வாய்ந்த ஒரு பெரிய அரசாகவும் உருமாற்றம் கண்டது.

சிங்கசாரி அரசு என்பது மஜாபாகிட் பேரரசின் வழித் தோன்றல் ஆகும். இந்தக் காலக் கட்டத்தில் பலேம்பாங் எனும் இடத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனை இருந்தது.

ஸ்ரீ விஜய பேரரசின் அரண்மனையைப் புதிதாகத் தோன்றிய சிங்கசாரி அரசு பல முறை தாக்கிச் சேதங்களை ஏறபடுத்தியது. அதனால் ஸ்ரீ விஜய பேரரசு தன்னுடைய தலைநகரத்தையும் அரண்மனையையும் பலேம்பாங்கில் இருந்து ஜாம்பிக்கு மாற்றியது.

ஜாம்பி எனும் இடத்தின் பழைய பெயர் மலாயு. புதிய தலைநகரம் உருவாக்கப் பட்டாலும் பலேம்பாங் முக்கியமான அரச நகரமாகவே விளங்கி வந்தது.

14-ஆம் நூற்றாண்டில் பலேம்பாங் அரச நகரமும் மஜாபாகித் பேரரசின் கரங்களில் வீழ்ந்தது. அத்துடன் மாபெரும் ஸ்ரீ விஜய பேரரசின் 1000 ஆண்டுகள் ஆளுமைக்கு ஒரு முற்றுப் புள்ளியும் வைக்கப் பட்டது. ஒரு சகாப்தம் வீழ்ந்தது. (தொடரும்)

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1

ஏழு சுவரங்களில் சம்பூர்ண ராகம். ஆறு சுவரங்களில் சாடவ ராகம். ஐந்து சுவரங்களில் ஔடவ ராகம். நான்கு சுவரங்களில் வக்ர ராகம். அரகோண சுவரங்களில் தலையான ராகம் சம்பூர்ண ராகம். அதுவே அப்போதும் எப்போதும் ஓர் அழகிய அற்புதமான பரமேஸ்வரா ராகம். 


பரமேஸ்வரா என்பது ஒரு ராகம். மலேசிய வரலாற்றில் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம். இருந்தாலும் இப்போதைக்கு வேதனையின் விளிம்பில் விசும்பிக் கொண்டு இருக்கும் ஒரு விசும்பல் ராகம்.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்துப் பள்ளிப் பாட நூல்களில் இருந்து கனவுகளாய்க் கரைந்து கசிந்து போகின்ற காம்போதி ராகம்.

எந்த ஒரு மனிதனும் காணாமல் போகலாம். அவனைத் தேடிக் கண்டிப்பிடிக்கலாம். உருக்குலைந்து போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்த்து விடலாம். ஆனால் பெயரே காணாமல் போனால் எப்படிங்க. அதுதான் இங்கே நடக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. எழுதுவதற்கு வெட்கமாகவும் இருக்கிறது.

கடல் தாண்டிய கரையில் அத்திம் மேடு என்பது ஒரு பௌர்ணமிக் கோளாறு என்றால் அதுவே இங்கே ஒரு பட்டப் பகல் கொள்ளை. ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருண்ட இருட்டில் எருமை மாடு எப்படிங்க தெரியப் போகிறது.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று எத்தனை நாளைக்குத் தான் படம் காட்டிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுக் கத்துக் குட்டிகள் அப்படித் தான் படம் காட்டிக் கொண்டு இருக்கின்றன. திரை கிழிய படம் காட்டிவிட்டுப் போகட்டும். யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் என்றைக்கும் உண்மை மறையக் கூடாது. அந்த உண்மை மறைக்கப் படவும் கூடாது. அவை தான் மனத்தை நெருடும் ஆதங்க ஆர்ப்பரிப்புகள்.

உண்மையை மறைத்து எவ்வளவு காலத்திற்குத் தான் பேர் போட முடியும். சொல்லுங்கள். உலக மக்களிடம் எத்தனை காலத்திற்குத் தான் பில்டப் செய்ய முடியும். சொல்லுங்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெத்த அப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவனின் பெயரைப் போட்டால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா? பரமேஸ்வரா எனும் பெயர் இந்த மண்ணில் நிலைக்க வேண்டும்.

பரமேஸ்வரா எனும் ஒரு மகா புருசர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் சத்தியமான உண்மை நிலைக்க வேண்டும். இப்போது வாழும் நாம் மரித்துப் போனாலும் நம்முடைய வாரிசுகள் அந்த உண்மையைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று உண்மை நிலைத்து நீடிக்க அவர்கள் போராட வேண்டும். (தொடரும்)

30 ஆகஸ்ட் 2017

தெள்ளுப்பூச்சி

தெள்ளு பூச்சி (Corrodopsylla curvata - Shrew Flea).  Shrew என்றால் மூஞ்சுறு எலி. Flea என்றால் தெள்ளு வகையைச் சேர்ந்த உண்ணி. இதன் அசல் பெயர் மூஞ்சூறு தெள்ளுப் பூச்சி. 




Body plan of the cat flea.
Encyclopædia Britannica, Inc.

எலி, சுண்டெலி, மூஞ்சுறு எலி, அணில், பூனை, நாய் போன்ற பாலூட்டிகளை ஒட்டி அவற்றின் இரத்ததை உறிஞ்சிக் குடித்து குஞ்சுகள் பொரிக்கும். இந்தச் சிறு வகை உயிரினங்கள் இல்லாத போது தான் மனிதர்களை நாடிச் செல்லும். இது வெளிப்பக்க ஒட்டுண்ணியாகும் (ectoparasitic).

தெள்ளுப் பூச்சிகளுக்கு இறக்கைகள் இல்லை. இதன் நீளம் 0.1 லிருந்து 1 cm (0.039 லிருந்து 0.39 அங்குலம்). இதுவரை 2000 வகையான தெள்ளுப் பூச்சிகளை அடையாம் கண்டு இருக்கிறார்கள்.

 


Flea (Ctenocephalides)

10-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை பிளேக் நோய் (bubonic plague) தாக்கியதால் மொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் இறந்து போனார்கள். இந்தப் பிளேக் நோய்க்கு எலிகள் மட்டும் காரணம் அல்ல. அந்த எலிகளை ஒட்டி வாழ்ந்த இந்தத் தெள்ளு பூச்சிகளும் ஒரு காரணம்.

ஆடு மாடுகளையும் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை Ctenocephalides felis என்று அழைக்கிறார்கள். மனிதர்களைத் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை (human flea - Pulex irritans) என்று அழைக்கிறார்கள். நாய்த் தெள்ளுகளுக்கு Ctenocephalides canis என்று பெயர். 



Spilopsyllus cuniculi – rabbit flea

கோழித் தெள்ளுகளுக்கு Ceratophyllus gallinae என்று பெயர். ஆப்பிரிக்க மனிதர்களைத் தாக்கும் தெள்ளுகளுக்கு Ceratophyllus niger என்று பெயர். தென்கிழக்காசிய நாடுகளில் Xenopsylla cheopis எனும் தெள்ளுண்ணி எலிகள் மூலமாகப் பரவுகின்றன.

மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் போது அவர்கள் மீது இந்த ஒட்டுண்ணிகள் மிகையான தாக்கங்களை உண்டாக்கும்.


மனிதர்களின் தலைமுடி, அக்குள் பகுதி, மறைப் பகுதிகளில் உள்ள மயிர்களுக்கு இடையில் தஞ்சம் அடைந்து இரத்தம் உறிஞ்சி குஞ்சுகள் பொரிக்கும். 3 லிருந்து 4 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிக்கும். தெள்ளுண்ணி அல்லது தெள்ளு பூச்சியைப் பார்க்கிறது கஷ்டம். எப்பவும் குதித்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஒட்டுண்ணி அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தைத் தாண்டும். அதாவது ஒரு மனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம். எப்போதும் துள்ளிக் கொண்டே இருக்கும். நெட்டை வாக்கில் 7 அங்குலம் குதிக்கும். நேர் வாக்கில் 11 அங்குலம் வரை துள்ளிப் பாயும்.

மூஞ்சுறு எலி

இதை ஒழிப்பதோடு மட்டும் சரியாகி விடும் விசயம் இல்லை. தொடர்ந்து கவனிக்கப்பட‌ வேண்டிய‌ விசயம். திரும்பத் திரும்ப‌த் தெள்ளு வரலாம். சுத்தம் செய்ய செய்ய வந்து கொண்டே இருக்கும்.

துணிகளை வெயிலில் காய‌ போட்டாலும் பிரயோசனம் இல்லை. இவற்றுக்கு வெயிலோ, வெப்பமோ எதுவும் செய்வது இல்லை. ஒரு தடவை துணிகளில் அல்லது பலகை இடுக்குகளில் முட்டையிட்டால் அது பொரிக்கும். 

 

பின்னர் திரும்ப‌ கடிக்க ஆரம்பிக்கும். மனித இரத்தம் மற்ற உயிரினங்களைக் கடித்து இரத்தம் குடித்து முட்டைகள் போடும்.

ஒரு தெள்ளுண்ணி 30 லிருந்து 35 முட்டைகள் போடும். இவற்றின் வாழ்நாள் 7 லிருந்து 8 மாதங்கள். இந்தக் காலத்தில் உணவு இல்லை என்றாலும் பட்டினியாகவே இருக்கும். சந்தர்ப்பம் வரும் வரை அமைதியாகக் காத்து இருக்கும்.



Human flea - Pulex irritans

ரச‌ கற்ப்பூரம் பொடி செய்து துணிகளில் தூவினால் இந்தப் பூச்சி சாகும் என்று சொல்ல முடியாது. தெள்ளு ஒரே இடத்தில் இராமல் துள்ளிக் கொண்டே இருக்கும். வாசனை பொறுக்க‌ முடியாமல் கட்டிலிருந்து விலகி இருக்கலாம். 


கற்பூர‌ வாசனை தீர்ந்ததும் மீண்டும் வரும். எலுமிச்சை சாறுக்கு விலகி இருக்கும். வாடை மறைந்ததும் மீண்டும் வரும். தாய்ப் பூச்சி செத்தாலும் அதன் முட்டைகள் இருக்கும். 



தற்காலிகமாக‌ insect repellent பயன்படுத்தலாம். தெள்ளுக்கும் சேர்த்த‌ மருந்து தானா என்பதைக் கவனித்து வாங்குங்கள். இந்த மருந்தும் 6 மணி நேரத்தில் வீரியம் இழந்துவிடும்.

தெள்ளு கட்டிலில் மட்டும் இருப்பது இல்லை. கட்டிலின் அடியில், கதவு இடுக்குகளில் கூட‌ ஒளிந்திருக்கும். முழு வீட்டிற்கும் சிகிச்சை செய்தாக‌ வேண்டும். ஒரு தட‌வை வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத‌ பொருட்களை அப்புறப் படுத்துங்கள். படுக்கை மெத்தைகளை எரித்து விடுங்கள்.

நீர்த் தொட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வையுங்கள். முடிந்தால் தொட்டிகளைக் ஒட்டுக் கால்களின் மேல் வைக்கலாம். இதற்கு என‌ உள்ள‌ மருந்து தெளிப்பாளர்களைப் பிடித்தால் வீட்டைச் சுற்றி உள்ள‌ பகுதிகளுக்கும் மருந்து தெளித்து விடுவார்கள்.

(Because fleas are able to leap horizontal or vertical distances 200 times their body length and to develop an acceleration of 200 gravities, they have been described as insects that fly with their legs.)

(சான்று: https://www.britannica.com/animal/flea#ref256631)

28 ஆகஸ்ட் 2017

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கியைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று கேட்டால் பலரும் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும்... அதுதான் தொட்டால் சிணுங்கி என்று சொல்வது உண்டு. 


உலகத்தில் முதன் முதலில் இந்தத் தொட்டால் சிணுங்கி தாவரம் South America and Central America நாடுகளில் பிறந்து தான் சிணுங்கத் தொடங்கியதாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்தத் தாவரமும் ஒரு மிகப் பெரிய இடத்தைப் பிடித்து இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப உபயோகித்தால் தீராத பிணிகள் நீங்கி விடுகின்றன. தாவரங்களில் மிக விநோதமாக உள்ள ‘தொட்டாச் சிணுங்கி’ என்ற ஒரு வகைச் செடியைத் தாவரவியலாளர் _மிமோஸாபொடிக்கா_ (Mimosa pudica) எனும் பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

நாம் தொட்டவுடனே சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் வந்தது. காலப் போக்கில் இந்தப் பெயர் தொட்டால் சிணுங்கி என்று மருவியதாம்.

இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும் போது காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.

தொட்டால் சிணுங்கி ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில் இரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப் படுகிறது. 

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.