20 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 2

தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை இந்து இந்திய சாம்ராஜ்யங்களுக்கும் கெடாவின் வரலாறு தான் முன்னோடியாக இருந்து இருக்கிறது. இருந்தும் வருகிறது. ஆங்கிலத்தில் forerunner என்று சொல்வார்கள். 



பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாகவே கெடாவில் லங்காசுகம் (Langkasuka) தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அல்லது இரண்டுமே சமகாலத்தில் தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம்.

(சான்று: Guy, John (2014). Lost Kingdoms: Hindu-Buddhist Sculpture of Early Southeast Asia. Yale University Press. pp. 28–29.)

ஒன்றை இங்கே மறந்துவிட வேண்டாம். மாறன் மகாவம்சன் கெடாவில் கால் பதித்த காலத்தில் லங்காசுகம் இருந்ததற்கான சான்றுகள் நமக்கு கிடைக்கவில்லை. 




ஆனால் லங்காசுகம் தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னதாக பூஜாங் சமவெளியில் இந்தியர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது. அது மட்டும் உண்மை. இந்த வரலாற்று நிகழ்வுகள் எல்லாமே கொஞ்சம் முன்னும் பின்னும் இருந்து இருக்க வேண்டும். மிகச் சரியான காலக் கட்டத்தை யாராலும் மிகச் சரியாக வரையறுத்துச் சொல்ல முடியாது.

இதைப் பற்றி நிறைய பேர் ஆய்வு செய்து இருக்கிறார்கள். செய்தும் வருகிறார்கள்.

கடாரம் வென்ற சோழன் எனும் ஆவண நூலை எழுதிய டத்தோ நடராஜாவும் ஆழமான ஆய்வுகள் செய்து இருக்கிறார். அவருக்குத் துணையாக நானும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளேன். 




இன்னும் சில வாரங்களில் நாங்கள் இருவரும் தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு இடங்களுக்கும் சென்று ஆய்வுகள் செய்கிறோம்.

இருப்பினும் கோத்தா கெலாங்கி வரலாறு தான் என்னுடைய தலையாய ஆய்வுக் களமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கோத்தா திங்கி காடுகளில் குடிசை போட்டுத் தங்கி ஆய்வுகள் செய்தோம். எனக்கு உதவியாக ஜொகூர் இந்தியர் வரலாற்று மீட்புக் குழுவின் தலைவர் கணேசன் இருந்தார். தன்னலம் பாராமல் அல்லும் பகலும் உழைத்து வருகிறார். மலேசியத் தமிழர்கள் என்றைக்கும் இவரை மறந்துவிடக் கூடாது.

கோத்தா கெலாங்கியில் அனுபவித்த வேதனைகளை நினைத்துப் பார்க்கிறோம். சில உண்மைகளைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. தப்பாக நினைக்க வேண்டாம். இது தனிப்பட்ட பதிவு. ஒரு வரலாற்றுப் பின்னூட்டம்.




காட்டுக்குள் சரியான சாப்பாடு இல்லை. சரியான தூக்கம் கிடைக்காது. இதில் அட்டைக்கடி; தேள்கடி; பூரான் கடி வேறு. கைகால்களில் ரோத்தான் முட்கள் குத்திய காயங்கள். கற்பாறைகளில் விழுந்து எழுந்து உடம்பில் உள்ள ஒரு சில எலும்புகளும் நகர்ந்தும் போயின.

எந்த நேரத்தில் புலி வந்து கடிக்குமோ இல்லை யானை வந்து மிதிக்குமோ இல்லை கரடி வந்து சுரண்டி விட்டுப் போகுமோ என்கிற பயம் வேறு. ஏன் என்றால் கோத்தா திங்கி காடுகள் மிக அடர்த்தியான மழைக் காடுகள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் எங்களின் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

தவிர இது எங்களின் தனிப்பட்ட ஆய்வுப் பணிகள். அரசாங்கத்தையோ அரசு சாரா இயக்கங்களின் உதவிகளோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். 




ஏன் என்றால் இந்த ஆய்வுப் பணி மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்கும் பணி. அதனால் சிலருக்குச் சாதகங்கள். பலருக்குப் பாதகங்கள். எங்களின் சொந்தப் பணத்தைப் போட்டுத் தான் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறோம்.

நம் மலேசிய இந்தியர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும். புதைந்து கிடக்கும் மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்டு எடுக்க வேண்டும். மலேசியத் தமிழர்களுக்கும் இந்த மண்ணில் உரிமை இருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததியினர் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். அதுவே எங்களின் இலட்சியம்.

இந்த நல்ல காரியத்தை விரவிலேயே செய்து முடிக்க வேண்டும். ஆனால் மிகச் சரியான சான்றுகளுடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்குத் தான் ஆபத்து. புரியும் என்று நினைக்கிறேன். சரி.




ஒரு தப்பான கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்தக் கருத்து ஒரு மாயைக் கருத்தாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது. அந்தக் கருத்து அப்படியே நிலைத்துப் போவதும் உண்டு. அதை நாம் மறந்துவிடக் கூடாது.

எடுத்துக் காட்டாக நம் தமிழ்ப் பழமொழிகளைச் சொல்லலாம். ஒரு சில பழமொழிகள் தவறாக விமர்சனம் செய்யப் படுகின்றன. அப்படி இருந்தும் அவற்றுக்கு நியாயம் கற்பிக்கிறோம். அப்படித் தவறாகக் கற்பிக்கப்படும் நியாயங்கள் காலப் போக்கில் உண்மையான நியாயங்களாக மாறிப் போகின்றன.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது ஒரு பழமொழி. இது தவறான பழமொழி. அடிமேல் அடிவைத்தால் அம்மி நகராது. தகரும். அதாவது உடையும். ஆக அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும் என்பதே சரியான பழமொழி. நகரும் நகரும் என்று சொல்லிச் சொல்லியே தகரும் எனும் உண்மையானச் சொல் அடிபட்டுப் போய் விட்டது.

இன்னொரு பழமொழி. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன். இந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம் சொல்கிறார்கள் தெரியுமா. ஒரு புருசன்காரன் கல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். புல் மாதிரி இருந்தாலும் சரி. அவன் தான் புருசன். இது என்னங்க புருசனைப் போய் கல்லுக்கும் புல்லுக்கும் உவமானம் செய்வது.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. நன்றாகக் கேளுங்கள். கல்லான் ஆனாலும் கணவன்; புல்லான் ஆனாலும் புருஷன். 




கல்வி அறிவு இல்லாத ஒருவன் (கல்லான்) கணவனாக இருந்தால் அவன் கணவனே. அதே சமயத்தில் அன்பு இல்லாதவனாக (புல்லான்) இருந்தாலும் அவன் கணவனே என்பது தான் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள்.

ஆக இப்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்களே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் எனும் பழமொழி ஒரு தவறான பழமொழி. நினைவில் கொள்ளுங்கள்.

இன்னும் ஒரு பழமொழி. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை. அப்படினு ஒரு பழமொழி. அதாவது ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள் என்கிற அந்தப் பழமொழி. ஏங்க நான் தெரியாமல் தான் கேட்கிறேன் தப்பாக நினைக்க வேண்டாம்.

ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கிறீர்கள். என்ன செய்து வைக்கிறீர்கள். செய்து வச்சிட்டீங்க. சரி. அப்புறம் உண்மை தெரிந்த பிறகு என்னவாகும். 




கல்யாணம் பண்ணிய இரண்டு பேரும் தலைமயிரை இறுக்கிப் பிடித்து இழுத்துக் கொண்டு நடுரோட்டுக்கு வரமாட்டார்களா. சிரிப்பாய்ச் சிரிக்க மாட்டார்களா. சொல்லுங்கள்.

உண்மையான பழமொழி என்ன தெரியுங்களா. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள். இதுதான் அசல் பழமொழி. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி என்பது ஆயிரம் பொய்யைச் சொல்லி என்று மாறிப் போனது.

இந்த மாதிரி ஆயிரம் பொய்யைச் சொல்லி எத்தனைக் குடும்பங்கள் பொய்க்காரக் குடும்பங்கள் ஆனதோ. யாம் அறியேன் பராபரமே.

இப்படித்தாங்க வரலாற்றையும் அவரவர் இஷ்டத்திற்கு அங்கட்டு இங்கட்டு வெட்டிப் போட்டு ஒட்டி வைத்து பட்டம் விட்டுப் படகோட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாவம் பால் மனம் மாறா பச்சை சிசுக்களும் படித்து மனப்பாடம் செய்து கடுதாசிக் கப்பல் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சரிங்க. நமக்கு ஏன் ஊர் பொல்லாப்பு. நம்ப மகாவம்சன் கதைக்கு வருவோம்.

கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). 




அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் கெடாவின் வரலாறே மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.

கி.பி. 1821-ஆம் ஆண்டில் தான் நீராவிக் கப்பல்கள் புழக்கத்திற்கு வந்தன. அதற்கு முன்னர் அனைத்துக் கடல் பயணங்களும் பாய்மரக் கப்பல்களின் வழியாகத் தான் நடந்து இருக்கிறது. ஆழ்கடல்களில் உயிர்களைப் பணயம் வைத்து வணிகம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் ஈரானில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல. 




பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் இதே இந்த மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

(சான்று: http://www.freemalaysiatoday.com/category/nation/2011/09/10/kedah-not-malacca-the-oldest-kingdom/ - B Nantha Kumar (10 September 2011). "Kedah, not Malacca, the oldest kingdom")

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது. வம்சம் என்றால் ஒரே குடும்பத்தின் தொடர்ச்சியான பல தலைமுறைகள். அல்லது பாரம்பரியம் என்றும் சொல்லலாம்.

ஆக மாறன் மகாவம்சன் எனும் சொல் ஒரு தமிழர்ச் சொல். அல்லது இந்தியச் சொல். அது ரோமாபுரிச் சொல்லும் அல்ல. மாசிடோனியாச் சொல்லும் அல்ல.

தமிழ்நாட்டின் நாகப்பட்டனத்தில் இருந்து மாறன் மகாவம்சன் கெடாவிற்கு வந்து இருக்கிறார். சொல்லி இருக்கிறேன். அப்படியே கெடாவில் ஒரு மன்னர் ஆட்சியையும் உருவாக்கி இருக்கிறார். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.




அந்த வகையில் மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய தலைமகன். அவர் கெடாவிற்கு வந்ததற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. இருந்தாலும் வியாபார நோக்கம் தான் முக்கியமாகக் கருதப் படுகிறது.

ஒரு காலக் கட்டத்தில் இந்தியக் கண்டத்தின் ஒரு துணை நிலமாகக் கெடா விளங்கி இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் அப்போது பர்மா, தாய்லாந்து, மலாயா, ஜாவா, சுமத்திரா, வியட்நாம், கம்போடியா நாடுகள் உள்ளடக்கி இருந்து உள்ளன.

(சான்று: Arokiaswamy, Celine W.M. (2000). Tamil Influences in Malaysia, Indonesia, and the Philippines. Manila s.n. p. 41.)

சேர சோழ பாண்டியர்களைத் தமிழகத்தின் மூவேந்தர்கள் என்று சொல்வார்கள். இவர்கள் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு தமிழ்கப் பகுதிகளை ஆட்சி செய்து இருக்கிறார்கள். 

அந்த வகையில் தமிழகத்தின் பல பகுதிகளைப் பாண்டியர்களும் ஆட்சி செய்து வந்து இருக்கிறார்கள்.

தொடக்கக் காலங்களில் பாண்டியர்களின் தலைநகரமாகக் கொற்கை விளங்கி இருக்கிறது. கி.மு. 600-ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி தலைநகரமாக விளங்கி இருக்கிறது. பின்னர் பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் இந்தத் தலைநகரம் மதுரைக்கு மாற்றிச் செல்லப் பட்டது.

பழம்பெரும் வரலாற்று ஆசிரியர்களான பிலினி (Pliny the Elder), ஸ்டிராபோ (Strabo), தோலமி (Ptolemy), பெரிபலஸ் (Periplus) போன்றவர்கள் பாண்டிய மன்னர்களைப் பற்றி நிறையவே ஆய்வுகள் செய்து இருக்கிறார்கள். பதிவுகளை விட்டுச் சென்று இருக்கிறார்கள். அதே போல இந்திய வரலாற்று ஆசிரியர் சீனிவாச ஐயங்கார் அவர்களும் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறார்.

(சான்று: Iyengar, Srinivasa P.T. (2001). History Of The Tamils: From the Earliest Times to 600 AD. Asian Educational Services.)

தவிர சீன வரலாற்று ஆசிரியர் யூ ஹுவான் (Yu Huan) என்பவரும் பாண்டியர்களைப் பற்றி சொல்லி இருக்கிறார். அவர் வேய்லூ (Weilüe) எனும் நூலை எழுதி இருக்கிறார். பாண்டியர்களை அவர் பான்யூ (Panyue) என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

(சான்று: http://depts.washington.edu/silkroad/texts/weilue/weilue.html - A Third Century Chinese Account Composed between 239 and 265 CE.)

(தொடரும்)



கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3





19 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 1

மலாக்காவைப் பரமேஸ்வரா தோற்றுவித்தார். அது உண்மை. அவருடைய காலத்தில் இருந்து தான் மலாக்காவின் வரலாறு தொடங்குகிறது. அதுவும் உண்மை. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் இருந்து தான் மலாயாவின் வரலாறு தொடங்குகிறது என்பது எல்லாம் ஒரு தவறான வரலாற்றுப் பதிவு.
 

கற்பனையான பிம்பங்களின் நகர்வுகளைச் சார்ந்து வரலாறுகள் அமைந்து விடக் கூடாது. சத்தியமான விழுமிய நுகர்வுகளைச் சார்ந்து தான் சாத்வீகமான வரலாறுகள் இயங்க வேண்டும். அசத்தலான சாணக்கியங்களைப் பேச வேண்டும்.

உண்மையைச் சொல்கிறேன். மலையூரின் வரலாறு என்பது மலாக்காவில் தொடங்கவில்லை. கெடாவில் தொடங்குகிறது.  


மலாக்காவை விட கெடாவின் வரலாறு தான் மிக மிகப் பழமையானது.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். மலையூர் எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து தான் மலாயா எனும் பெயரே வந்தது. இந்த விசயமும் எத்தனைப் பேருக்குத் தெரியும். சொல்லுங்கள். ஆயிரம் கோடி வருடங்கள் ஆனாலும் சரிங்க. இந்த உண்மைகளை எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது. மறைத்து வேசம் போடவும் முடியாது.




ராகங்கள் பதினாறு உருவான வரலாறு தெரியாமல் கல்யாணி ராகத்துடன் காம்போதி ராகத்தை இணைப்பதால் கல்யாணி தாழ்ந்து போகாது. கல்யாணி என்றைக்கும் கல்யாணி தான். கௌரி மனோகரி என்றைக்கும் கௌரி மனோகரி தான்.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சி. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தினரின் (USM’s Centre for Global Archaeological Research) ஒரு கண்டுபிடிப்பு.

கெடா பூஜாங் சமவெளியில் சுங்கை பத்து எனும் இடத்தில் 1890 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கலைப் படைப்புகள் (ancient artifacts) கண்டுபிடிப்பு. மலாயா வரலாற்றில் அது ஒரு புதிய பரிமாணம்.
(சான்று: http://www.freemalaysiatoday.com/category/nation/2011/09/10/kedah-not-malacca-the-oldest-kingdom/)



அதே அந்தப் பூஜாங் சுங்கை பத்து (Sungai Batu) எனும் இடத்தில் அதே 1890 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இரும்பு உருக்கிகளையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர்கள் கண்டுபிடித்தது கி.பி.110-ஆம் ஆண்டுகளில்  பயன்படுத்தப்பட்ட மிக மிகப் பழமையான உலோகப் பொருட்கள். 

(சான்று: COLLINGS, H.D. 1936 Report of an archaeological excavation in Kedah Malay Peninsula, Bulletin Raffles Museum Ser. B 1: 5 - 16.)

இந்தக் கண்டுபிடிப்புகள் மலாக்கா வரலாற்றைச் சுத்தமாகப் புரட்டிப் போட்டுப் பின்னுக்குத் தள்ளி விட்டன. ஏன் என்றால் மலாக்காவின் வரலாறு கி.பி.1400-ஆம் ஆண்டு தொடங்குகிறது. அதே சமயத்தில் கெடாவின் வரலாறு கி.பி.110-ஆம் ஆண்டு தொடங்குகிறது. 




இந்த இரு வரலாற்றுச் சுவடுகளின் கால இடைவெளியைக் கவனியுங்கள். 1300 ஆண்டுகள். ஆக அந்த வகையில் கெடா வரலாற்றைத் தான் உலக வரலாற்று ஆசிரியர்கள் முன்னிலைப் படுத்துகிறார்கள்.

இதை உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். மறுப்பதினாலும் மறைப்பதினாலும் ஒன்றும் ஆகிவிடப் போவது இல்லை.

வரலாறு என்பது ஒரு சமூகத்தின் தாக்குதல் அல்லது ஒரு சமயத்தின் தாக்கத்தினால் சிதைவு நிலையை அடைந்து விடக்கூடாது. அதனால் ஒரு வரலாற்று மாயை உருவாக்கப் படவும் கூடாது.

மறுபடியும் சொல்கிறேன். ஒட்டுமொத்த மலாயா வரலாற்றின் தொடக்கம் கெடாவின் வரலாற்றில் இருந்து தான் தொடங்குகிறது. முதலில் தொடங்குவது மலாக்கா வரலாறு அல்ல. இதை மலேசிய வரலாற்றுப் பாட நூல் ஆசிரியர்கள் மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே போதுமான சான்றுகளுடன் கெடாவின் வரலாற்றை முன் வைக்கிறேன்.




காலம் காலமாகக் கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. சரி.

ஆனால் அந்த மாறன் மகாவம்சன் என்பவர் மாசிடோனியாவில் இருந்து வந்தவர் என்று உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அடம் பிடிக்கிறார்கள். அது சரியன்று. தப்பு.

மாறன் மகாவம்சன் என்பவர் மகா அலெக்ஸாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவரா? இது எப்படி என்று பார்ப்போம்.
(சான்று: LAMB, A. 1960 Report on the Excavation and Reconstruction of Chandi Bukit Batu Pahat, Central Kedah, Federation Museums Journal N.S.5.)

உண்மையில் மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். மாசிடோனியா எனும் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. எப்படி என்று கதையைக் கேளுங்கள்.

கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.



King Porus
மகா அலெக்ஸாண்டர் (Alexander the Great) கி.மு. 326-இல் இந்தியாவின் மீது படை எடுத்தார். பலருக்கும் தெரிந்த விசயம். அதற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரசீகத்தின் மீது ஒரு படையெடுத்தார்.

பாரசீகம் என்றால் ஈரான் நாட்டைக் குறிக்கும். ஆரியன் (Land of the Aryans) எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் என்று அந்த நாட்டிற்குப் பெயரும் வந்தது. முன்பு காலத்தில் ஈரானைப் பாரசீகம் என்று அழைத்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆரியன் எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் எனும் சொல்லே உருவானது.

ஈரான் நாட்டின் தென் பகுதியில் பெர்சிஸ் (Persis) எனும் சமவெளி உள்ளது. ஈரான் மீது படை எடுத்து வந்த கிரேக்கர்கள் ஈரானைப் பெர்சிஸ் என்று அழைத்தார்கள். காலப் போக்கில் ஈரான் நாடு பெர்சியா (Persia) ஆனது. தமிழர்கள் பார்சீகம் என்று அழைத்தார்கள். 1935-ஆம் ஆண்டு பெர்சியா என்பது ஈரான் ஆனது.
(சான்று: https://www.britannica.com/place/Persia - The term Persia was used for centuries and originated from a region of southern Iran formerly known as Persis.)




கி.மு. 330-களில் பாரசீகத்தின் மேற்குப் பகுதியை டாரியஸ் III (King Darius III) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். காவுகமேலா எனும் இடத்தில் (Battle of Gaugamela - 1st October 331 BCE) மகா அலெக்ஸாண்டர் படையுடன் ஒரு பயங்கரமான போர்.

இந்தப் போருக்கு அரபேலா போர் (Battle of Arbela) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் போரில் அரசர் டாரியஸ் தோற்றுப் போனார். மகா அலெக்ஸாண்டருக்கு வெற்றி.

இந்தப் போர் முடிந்ததும் மகா அலெக்ஸாண்டர், ஈரான் நாட்டின் கிழக்குப் பக்கமாய் வந்தார். அப்போது அந்தப் பகுதியை ராஜா கீதா (Raja Kida Hindi of Hindostan) எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசர் ஆட்சி செய்து வந்தார். 




இந்த ராஜா கீதாவிற்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தார். அவருடைய பெயர் இளவரசி ஷார் பெரியா (Shaher Ul Beriah). இந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் தான் பிரதான மதம். வேறு எந்த மதமும் தோன்றவில்லை.

ஆக ஷார் பெரியா எனும் இளவரசியை மகா அலெக்ஸாண்டர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தையார் ராஜா கீதாவிற்கு 300,000 தங்க தினார் நாணயங்களை மகா அலெக்ஸாண்டர் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் (King Porus) மன்னரை எதிர்த்துப் போரிட்டார். போரஸ் மன்னனின் துணிச்சலைக் கண்டு அவருக்கே அவருடைய நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அது ஒரு தனி வரலாறு.
(https://en.wikipedia.org/wiki/Battle_of_the_Hydaspes - The Battle of the Hydaspes was fought in 326 BC between Alexander the Great and King Porus of the Paurava kingdom on the banks of the river Jhelum)

இன்னும் ஒரு விசயம். அலெக்ஸாண்டர் - போரஸ் போர் நடக்கும் போது ஈரான் இளவரசி ஷார் பெரியாவும் அலெக்ஸாண்டருடன் இருந்து இருக்கிறார். 




போர் முடிந்து அலெக்ஸாண்டர் திரும்பிப் போகும் போது இளவரசி ஷார் பெரியாவைப் பாரசீகத்திலேயே விட்டுச் சென்று இருக்கிறார். பின்னர் அவர் ரோமாபுரிக்கு போகிற வழியில் மர்மமாய் இறந்து போனார். அதுவும் தனி ஒரு கதை. 

இந்த மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியா திருமணத்தின் 11-ஆவது தலைமுறை நாயகர் தான் மாறன் மகாவம்சன். புரியுதுங்களா.

மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியாவிற்கும் பிறந்த குழந்தைகளின் வழிவழி வந்தவர்களில் 11-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் தான் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan).

ஆக மாறன் மகாவம்சன் என்பவர் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. மாசிடோனியாவில் இருந்தும் வரவில்லை. அவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். 



King Porus
பாரசீகத்தின் அப்போதைய பிரதான மதம் மஸ்தியாசனம் அல்லது மத்தியாசனா (Mazdayasna) எனும் மதமாகும்.
(சான்று: Boyd, James W.; et al. (1979), "Is Zoroastrianism Dualistic or Monotheistic?", Journal of the American Academy of Religion, Vol. XLVII, No. 4, pp. 557–588)

மத்தியாசனா மதம் என்பது சோரோஸ்டிரியம் (Zoroastrianism) எனும் வழிப்பாட்டில் இருந்து தோன்றியது. இந்த மத்தியாசனா மதமும் இந்து மதமும் சம காலத்தில் இருந்த மதங்கள்.

இந்து மதம் சிந்து வெளியில் துரிதமாகப் பரவி வரும் காலத்தில் மத்தியாசனா மதம் பாரசீகத்தில் படர்ந்து பரவி நின்றது.

கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி வருகிறேன்.

மத்தியாசனா மதம் இந்து மதத்திற்குப் பின்னர் தோன்றி இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. சோரோஸ்டிரியம் என்பது ஒரு கிரேக்கச் சொல். 




நாம் இங்கே மதங்களைப் பற்றி விவாதிக்கவில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை. மாறன் மகாவம்சன் என்பவர் எங்கே இருந்து வந்தார். எப்படி கெடாவிற்கு வந்தார் என்பதைப் பற்றித் தான் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். சரிங்களா.
(சான்று: https://prezi.com/h5nqop0pj6h5/hinduism-and-zoroastrianism/)
(சான்று: Gerardo Eastburn. The Esoteric Codex: Zoroastrianism. Books.google.com. p. 1)

இன்னும் ஒரு விசயம். ஒரு தாழ்மையான தனிப்பட்ட பதிவு.. இந்தக் கட்டுரை மிகச் சரியான வரலாற்றுச் சான்றுகளுடன் முன் வைக்கப் படுகிறது. இருந்தாலும் விமர்சன விவாதங்கள் வரலாம். அப்படி ஒரு சூழ்நிலையில் எந்தக் கல்வி மேடையிலும் இந்தக் கட்டுரையின் சான்றுகளை உறுதிபடுத்தத் தயாராக இருக்கின்றோம்.

மாறன் மகாவம்சன். இந்தப் பெயரைச் சற்று உற்றுக் கவனியுங்கள். மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர் தான். இல்லை என்று சொல்லவில்லை.

இருந்தாலும் அந்தப் பெயர் ஓர் இந்து மதப் பெயராகத் தெரியவில்லையா. மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும் சொல்லாகும்.

மாரன் என்பது ஒரு வடச் சொல். மாறன் என்பது தமிழ்ச் சொல்.

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற

எனும் சொற்கள் புறநானூற்றில் சொல்லப் படுகிறது.
(சான்று: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=55&file=l1280d10.htm).

புறநானூறு எனும் காப்பியம் இடைச் சங்கக் காலத்தில் தோன்றியது. இந்தக் காலப் பகுதி கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்தது.

மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் சங்கம் அமைத்தனர். தமிழ் வளர்த்தனர். அதனால் சங்க காலம் என  பெயர் சூட்டப்பட்டது. சரி. இந்தச் சங்கக் காலத்தில் மாறன் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தது. தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் தாக்கத்தினால் அப்போது பிறந்த குழந்தைகளுக்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்த வகையில் தான் மாறன் மகாவம்சனுக்குப் பெயர் வந்தது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.
(சான்று: R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35.)

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது. 

முன்பு காலத்தில் பாய்மரக் கப்பல்களில் கடல் கடந்து போய் வணிகம் செய்து வந்தார்கள். அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து இருக்கிறார். 

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல.

பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் அதே மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

பள்ளிப்பாட நூல்களிலும் சரி; உயர்க் கல்விக் கூடங்களிலும் சரி; அறிவியல் அகழாய்வுச் சாலைகளிலும் சரி; உண்மையான வரலாற்றை நேர்மையான முறையில் பதிவு செய்ய வேண்டும். அதுவே தார்மீகப் பொறுப்புகளின் தாரக மந்திரங்கள்.

ஏழு ஸ்வரங்களில் சிந்து பைரவி இனிக்கும். 

சாருகேசி இசைக்கும். 
கௌரி மனோகரி மணக்கும். 
நவநீதம் நளினத்தில் தனித்துப் போகும். 
ராகங்கள் மாறுவது இல்லை. 
அதே போல வரலாறும் மாறுவது இல்லை.

கெடாவின் வரலாறும் கெடா சுல்தானகத்தின் வரலாறும் மறைக்கப்படக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு மறைநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

என்ன தான் வரலாற்றை மாற்றிப் போட்டாலும்; எப்படித் தான் திரித்துப் போட்டாலும்; எப்படித் தான் திருத்திப் போட்டாலும் அவற்றின் உள்ளே உறைந்து கிடக்கும் உண்மை உயிர்ப்புகளை மாற்றவே முடியாதுங்க.

வரலாற்று நெருடலில் சன்னமாய் நெஞ்செரிச்சல். வேகமாய் வந்தும் போகிறது. விடுங்கள். மாறன் மகாவம்சனின் வரலாற்றுப் பதிவுகள் நாளை தொடரும்.

(தொடரும்)


கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3




10 அக்டோபர் 2017

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதித் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. 1901-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்று உள்ளார்கள்.


1902 - ரொனால்டு ரோஸ் - மருந்தியல் - இந்தியாவில் பிறந்தவர்
1907 - ரிட்யார்ட் கிப்ளிங் - இலக்கியம்     இந்தியாவில் பிறந்தவர்
1913 - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம் - இந்தியர்
1930 - சர் சி. வி. இராமன் - இயற்பியல் - இந்தியர்
1968 - கோவிந்த் கொரானா - மருந்தியல் - இந்தியர்
1979 - அன்னை தெரேசா - அமைதி - இந்தியர்
1983 - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - இந்தியர்
1989 - டாலாய் லாமா - அமைதி - இந்தியர்
1998 - அமர்த்தியா சென் - பொருளியல் - இந்தியர்
2001 - வி.எஸ். நைப்பால் - இலக்கியம் - இந்தியர்
2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - இந்தியாலில் பிறந்த அமெரிக்கர்
2014 - கைலாஷ் சத்யார்த்தி - அமைதி - இந்தியர்

ரபீந்தரநாத் தாகூர்

நோபல் பரிசை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்று உள்ளனர். அந்தப் பெருமைக்கு உரியவர்கள் சரி சி.வி. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009).

நோபல் பரிசு வழங்கப் படும் முறையில் பல்வேறு நையாண்டிகளின் கிண்டல் சுவைகள் தொக்கி நிற்கின்றன. இந்த நோபல் பரிசின் இலட்சணம்தான் என்ன. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அல்ல. 1937 முதல் 1948 வரை  ஐந்து முறைகள் பரிந்துரைக்கப் பட்டன. 

சரி சி.வி.ராமன்

இருந்தாலும் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக் கொண்டது. ஆனால் என்ன. நோபல் பரிசுக் கமிட்டியின் பாரப்ட்சம் தொடர்கிறது.

என்றாலும் 1948-ஆம் ஆண்டில் காந்திஜி மறைந்தார். ஆனால் நோபல் பரிசு கமிட்டி ஓர் அறிவிப்பு செய்தது. உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெற முடியாது என்ற அறிவிப்பு. அதனால் அமைதித் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை என்றது.

ஆனால், டாக் ஹெம்மர்ஸால்ட் (Dag Hammarskjöld) எனும் ஸ்காண்டிநேவியர் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் 1961-ஆம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. அதற்காக ஒரு சப்பைக் கட்டுக் காரணம். பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடி இருந்தார் எனும் காரணம்.

இப்போது எல்லாம் விருது வழங்குவதில் ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. அதற்குப் பேசாமல் ஓர் அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைவராக ஆகி விடலாம். அப்படியே ஒரு கோப்பிக் கடையில் பத்து பேரைக் கூப்பிட்டு தனக்குத் தானே ஊசிமணி, ஊசிப் போகாத மணி, பாசிமணி, பாசி பிடித்த மணி எனும் விருதுகளைத் தாராளமாகக் கொடுத்துக் கொள்ளலாம். எப்படி வசதி.

என்ன பேசி என்ன பண்றது. இங்க மட்டும் என்ன வாழ்கிறதாம். விருது கொடுப்பது எல்லாம் இப்போது கச்சான் பூத்தே கம்பத்தில் கடலை பக்கோடா வாங்கிற மாதிரி காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

இனிமேல் இந்த மாதிரி விருது வழங்கும் விசயங்களை எல்லாம் ஆதித்யா சேனலில் தான் காண்பிக்க வேண்டும். கைதட்டிச் சிரிக்க வேண்டும். அம்புட்டுத் தான்.

09 அக்டோபர் 2017

தொப்பை குறைய வேண்டுமா

நீர்ச் சத்து
அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். நீர்ச் சத்தைத் தக்க வைக்கலாம். நீர்ச் சத்து பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். நாம் உண்ணும் உணவைத் தண்ணீர் நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதும் இல்லை. அதனால் தொப்பை விழுவதும் இல்லை.


தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி
தொப்பை இருக்கிறது என்பதற்காகப் பட்டினி கிடப்பது ஆபத்தானது. அதனால் உடல் பருமன் தான் அதிகரிக்கும். உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். சரியான நேரத்திற்குச் சரியான சத்துள்ள உணவுகள் போதும். எப்பொழுது பார்த்தாலும் அரைத்துக் கொண்டு இருப்பதும் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.


உற்சாகமான நடை
தொப்பை வயிறு குறைய தினசரி ஓர் அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும். இது இதயத்திற்கும் இதமானது. இந்தப் பயிற்சி தொப்பையை மட்டும் கரைக்கவில்லை. அன்றைய நாளை நன்றாக உற்சாகத்துடன் நடத்தியும் செல்லும்.

பழங்கள், காய்கறிகள்
அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியம் தர வேண்டும். அவற்றின் நார்ச்சத்து உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது. பழங்களில் தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. அவை உடலின் இயக்கத்தைச் சரியாக இயங்கச் செய்கின்றன.


செயற்கை குளிர்பானங்கள்
தொப்பை போடுவதற்குச் செயற்கைக் குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணம் ஆகும். ஜூஸ், சோடா, கொக்கோ கோலா, பெப்சி கோலா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரைன் சர்க்கரை உபயோகப் படுத்தப் படுகிறது. அதனால் வயிற்றில் தொப்பை சேருகிறது. என் அனுபவத்தில் அதிகமாக கொக்கோ கோலா சாப்பிட்டு ஒரு கட்டத்தில் வயிறு பெருத்துப் போனது உண்டு. கரைத்து விட்டேன்.

இலை போல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத் தீனி, குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நீங்களும் செய்து பாருங்கள். இரண்டே இரண்டு வாரங்களில் மாற்றங்கள் தெரியும். உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். நானும் சொல்கிறேன். செய்து பார்த்து பலன் அடைந்து இருக்கிறேன்.

அதற்காக ஒரு சிலரைப் போல மதியம் சாப்பிடாமல் பட்டினி கிடந்து இரவில் சோற்றுக்கும் தோசைக்கும் அலைய வேண்டாம். வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டி வயிறு வீங்கி அலையவும் வேண்டாம்.

05 அக்டோபர் 2017

மன்னிப்போம் மறப்போம்

நமக்கு ஒருவர் தீங்கு செய்து விட்டால் அதை நினைத்துக் கொண்டே இருந்தால் அதுவே ஒரு பெரும் பாவச் சுமை. அந்தச் சுமையை இறக்கி வைத்துவிட வேண்டும். மற்றவர்கள் செய்த தீங்குகளையும் பாவங்களையும் நமக்குள் போட்டு பூட்டி வைப்பதும் இன்னொரு பாவம். 


அதே நிலையில் யாரையும் பழி வாங்கும் எண்ணமும் இருக்கக் கூடாது. பழி வாங்க வேண்டும் என்று நினைப்பதே பெரிய பாவம். நமக்கு தீங்கு செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தப்பு. அதனால் நம்முடைய கர்மவீனைகள் தீரா.

நம்முடைய கர்மவினைகளைச் சீர் செய்ய வேண்டும் என்றால் மற்றவர்கள் நமக்கு செய்த பாவங்களை மறக்க வேண்டும். அப்போது தான் நாம் நல்ல ஒரு மனிதனாக வாழ்ந்து காட்ட முடியும்.

நாம் என்றைக்கும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பதும் பாவம். அவர்கள் பாவம் நினைத்தால் அது அவர்களுக்கே போய்ச் சேரட்டும். நாம் மட்டும் யாருக்கும் பாவம் செய்யக் கூடாது. நினைக்கவும் கூடாது. 


எது எது நடக்குமோ அது அது நடந்தே ஆகும். நடப்பது எல்லாம் நன்மைக்கே எனும் எண்ணம் எப்போது நமக்குள் துளிர்க்கின்றதோ அப்போதே நம்முடைய பாவங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகத் தொடங்குகின்றன. நல்லதை நினைப்போம். நல்லதைச் செய்வோம்.

மற்றவர்கள் நமக்கு இழைத்த தீங்குகளையும் பாவங்களையும் மறப்போம். மன்னிப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)