20 மே 2018

குலசேகரன் மலேசிய மனிதவள அமைச்சர்

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் சுடர்மணியாய் ஜொலிப்பவர். மலேசியத் தமிழர்களின் சமூக நலன்களில் சுடர்விளக்காய்த் திகழ்பவர். மலேசியத் தமிழர்களின் மதமாற்றச் சர்ச்சையில் சுடரொளியாய் மிளிர்கின்றவர்.   
 

மலேசிய வரலாற்றுச் சுவடுகளில் மகிமை பேசுகின்ற மண்ணின் மைந்தர். அவர்தான் மாண்புமிகு எம். குலசேகரன். ஒரே வார்த்தையில் சொன்னால் மலேசிய இந்தியர்கள் கண்டெடுத்த மதிப்புமிகு மந்திரப் புன்னகை.

இப்போது ஓர் அமைச்சர். மலேசிய மனித வளத்தை வழிநடத்திச் செல்லப் போகும் தெளிந்த மனிதர். மாற்றம் ஒன்றே மாறாதது என்று மாறி வந்த மலேசிய இந்தியர்களின் கனவுகளுக்கு நனவுச் சீமானாகக் காலடி பதிக்கின்றார். வாழ்த்துகின்றோம்.

மதமாற்ற உரசல்களிலும் சரி; நீதிமன்ற நெரிசல்களிலும் சரி; சமர் மேடை விவாதங்களிலும் சரி; தனி மனிதப் பிடிமானங்களிலும் சரி; தனித்து நிற்பவர் விழித்தும் நிற்பவர் குலசேகரன். 
 

மலேசிய இந்தியர்களின் சமயப் பிரச்சினைகளை உலகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தவரும் இதே இந்த மனிதர் தான். அதை யாராலும் மறுக்க முடியாது. அதுவரையிலும் அவர் நல்ல ஓர் அழகிய மகனாகவே நமக்குத் தெரிகின்றார்.

மலேசியப் பிரதமரிடம் தன் கருத்துகளை அழுத்தமாய் ஆழமாய் ஆணித்தரமாய் வெளிப்படுத்திய வைர நெஞ்சம் படைத்த ஒரு பெருமகன். விவேகமானத் துணிவுடன் செயல் படுபகின்றார்.

(http://ipohbaratvoice.blogspot.my/2016/02/kula-let-refugees-already-in-msia-do.html)

ஒரே வார்த்தையில் சொல்லலாம். இன்றையக் காலக் கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டத் தலைவர்களில் தனித்துப் பிரகாசிக்கின்றார். இது ஓர் ஆலாபனை இல்லை. ஓர் ஆராதனை. 
 

இவரைப் போல இன்னும் பலர் இருந்தனர். இருக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

எஸ்.ஏ. கணபதி, வீரசேனன், காட்டுப் பெருமாள், சிபில் கார்த்திகேசு, ஜானகி ஆதி நாகப்பன், ஜான் திவி, ராசம்மா பூபாலன், டி.ஆர்.சீனிவாசகம், அம்பிகா சீனிவாசன், சிசில் ராஜேந்திரா, சார்ல்ஸ் ஹெக்டர், கெங்காதரன் நாயர், கர்ப்பால் சிங், பி. பட்டு, வி. டேவிட், தேவன் நாயர், ஐரீன் பெர்னாண்டஸ், பி. உதயக்குமார் போன்ற மனித உரிமைப் போராட்டவாதிகளின் பட்டியல் நீள்கிறது.

அந்த வகையில் குலசேகரன் அவர்கள் மீது பலருக்கும் தனி ஒரு மரியாதை. எனக்கும் தனி ஒரு மதிப்பு.

ஆக மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும். 
 

ஓர் இடைச் செருகல். சில சமயங்களில் குலசேகரனுடன் வெளியே போவது உண்டு. தேநீர் அருந்துவதற்கு ஒரு கடையில் நுழைந்தால் அங்கு உள்ளவர்கள் சிலர் எழுந்து வந்து குலசேகரனுடன் கைக் குலுக்குவார்கள். என்னையும் அறிமுகம் செய்து வைப்பார். இனிமையான நினைவுகள்.

சில சமயங்களில் முக்கிய விசயமாக இருந்தால் அவரை அழைப்பேன். நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். இன்றைக்கு இப்போதைக்கு இந்த விவாதம் நடக்கிறது. வருவதாக இருந்தால் சொல்லுங்கள். அனுமதி பெற்றுத் தருகிறேன் என்று அவசரம் இல்லாமல் நிதானமாகப் பேசுவார். பழக மிக இனிமையான மனிதர்.

எம். குலசேகரன் (Kulasegaran Murugeson) மலேசிய அரசியல்வாதி. மலேசிய இந்திய, சீன, பூர்வீகப் பழங்குடியினரின் உரிமைகள் போராட்டவாதி. ரப்பர் தோட்டத் தொழிலாளரின் மகனாகப் பிறந்தவர். அயராத உழைப்பு தளராத நம்பிக்கை. அந்த இரண்டும் தான் அவரை அரசியலின் சிகரத்திற்கு ஈர்த்துச் சென்று உள்ளன. 
 

2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தைச் சேர்ந்த டத்தோ ஹோ சியோங் சிங்  (DATUK IR HO CHEONG SING) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். 68,394 வாக்காளர்கள். அதில் குலாவிற்கு 22,935 வாக்குகள். டத்தோ ஹோவிற்கு 22,337 வாக்குகள். 598 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2008-ஆம் ஆண்டு தேர்தலில் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம.சீ.ச.வைச் சேர்ந்த இக் பூய் ஹோங் (YIK PHOOI HONG) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 32,576 வாக்குகள். இக் பூய் ஹோங்கிற்கு 17,042 வாக்குகள். 15,534 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.

2013-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே ஈப்போ பாராட் தொகுதியில் ம,சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவரை (CHENG WEI YEE) என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் குலாவிற்கு 45,420 வாக்குகள். செங் வேய் ஈ அவர்களுக்கு 16,382 வாக்குகள். 29,038 வாக்குப் பெரும்பான்மையில் குலா வெற்றி பெற்றார்.
 
Image result for kulasegaran m

அண்மையில் நடந்து முடிந்த 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் அதே  ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதி. குலசேகரனுக்கும் ம.சீ.ச.வைச் சேர்ந்த செங் வேய் ஈ என்பவருக்கும் நேரடி மோதல். அதில் குலசேகரனுக்கு 55,613 வாக்குகள். எதிர்த்துப் போட்டியிட்ட ம.சீ.ச. செங்கிற்கு 9,889 வாக்குகள். பெரும்பான்மை 45,324 வாக்குகளில் குலசேகரன் வெற்றி பெற்றார். ஒரு மிகையான பெரும்பான்மை என்று சொல்லலாம். இந்த முறை மலாய்க்காரர்களின் வாக்குகளும் கணிசமாக வந்து சேர்ந்தன. அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியில் 84,874 வாக்காளர்கள் உள்ளனர். சீனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஈப்போ மாநகரில் ஒரு தமிழர் வெற்றி பெற்றது மலேசிய அரசியலில் ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். அதுவும் மிகையான பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றது மாபெரும் சாதனை என்பது வெள்ளிடைமலை.

இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 12%; சீனர்கள் 63%; இந்தியர்கள் 24%; மற்றவர்கள் 1%.

எம். குலசேகரன் மலேசியாவில் பிரபலமான ஒரு வழக்குரைஞர். 1980-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ’-லிங்கன்ஸ் இன்’- (lincoln's Inn) எனும் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
Image result for kulasegaran m

1983 ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி மலேசிய வழக்குரைஞர் மன்றத்தில் பதிவு செய்யப் பட்டார். ஈப்போவில் சட்ட நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

(http://www.kulaassociates.com/2015/08/malaysian-lawyer-mkulasegaranmalaysias.html - Malaysian lawyer M.Kulasegaran,Malaysia's International Criminal Court (ICC) stance a losing gambit)

மலேசிய இந்தியர்கள் தாங்கள் பிறந்த இந்த மண்ணில் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படுவதைக் கண்டு மனம் கலங்கியவர் எம். குலசேகரன். அந்த மக்களுக்கு எப்படியாவது உதவிகள் செய்ய வேண்டும் என்பது அவரின் தூரநோக்குப் பார்வை.

மலேசியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக செயல் கட்சியுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டார். 1995-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பேராக் மாநில சட்டமன்றத்திற்கு ஈப்போ, தாமான் கேனிங் தொகுதியில் முதன்முதலாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தோல்வி. இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

1997 மே மாதம் 17-ஆம் தேதி தெலுக் இந்தான் தொகுதியின் நாடாளுமன்ற இடைத் தேர்தல். பாரிசான் நேசனல் வேட்பாளர் சீ சி சோக் (Chee See Choke) என்பவருடன் போட்டி. 
Image result for kulasegaran m

அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 15,007 வாக்குகள். பாரிசான் நேசனல் சீ சி சோக்கிற்கு 12,091 வாக்குகள். ஆக 2,916 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தொகுதியின் மக்களுக்கு பல அரிய சேவைகளையும் செய்தார்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு நிறைய உதவிகளை வழங்கினார். தெலுக் இந்தான் பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருந்தார்கள்.

அதனால் பலர் அடையாள அட்டைகள், குடியுரிமைகள் இல்லாமல் இருந்தனர். தன்னுடைய அரசியல் பலத்தைப் பயன்படுத்தி நூற்றுக் கணக்கான இந்தியர்களுக்கு அடையாள அட்டைகள், குடியுரிமைகள் பெற்றுத் தந்தார்.

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல். ஈப்போ பாராட் தொகுதியில் மலேசிய சீனர் சங்கத்தின் ஹொ சியோங் சிங் (Ho Cheong Sing)  என்பவருடன் போட்டி. அந்தத் தேர்தலில் குலசேகரனுக்கு 21,477 வாக்குகள். பாரிசான் நேசனல் வேட்பாளருக்கு 25,155 வாக்குகள். அந்தத் தேர்தலில் குலசேகரனுக்குத் தோல்வி.  
 
Related image

2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஒருமுறை அவருடைய அலுவலகம் உடைக்கப்பட்டு சில முக்கியமான சட்டப் பத்திரங்களும் பணமும் களவாடப் பட்டன. அரசியலுக்கும் தன்னுடைய அலுவலகம் உடைக்கப் பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று எம்.குலசேகரன் உறுதிப் படுத்தினார்.

இந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் குலசேகரன் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொல்வதைக் காட்டிலும் மாற்றத்தை விரும்பிய மலேசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

(https://www.revolvy.com/main/index.php?s=M.%20Kulasegaran - 2013  M. Kulasegaran (DAP) - 45,420 - 73% - Cheng Wei Yee (MCA) - 16,382 - 26%)

இந்திராகாந்தி என்பவர் ஒரு பள்ளி ஆசிரியை. இவருடைய கணவர் இந்து சமயத்தில் இருந்து இஸ்லாமிய சமயத்திற்கு மதம் மாறினார். தன் பெயரை முகமட் ரிசுவான் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார். பின்னர் இந்திரா காந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து தன் இரு பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெயர்களையும் மாற்றினார்.
Image result for kulasegaran m

கடைசியாக தன் மூன்றாவது மகளையும் கடத்திச் சென்று மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார். அதனால் ஷரியா சட்டப்படி பிள்ளைகள் அனைவரும் தகப்பனாரின் பராமரிப்பின் கீழ் வருவார்கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அநதத் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

(http://hakam.org.my/wp/index.php/tag/m-indira-gandhi/ - Indira Gandhi’s marriage started falling apart around the time she gave birth to her third child, Prasana, in 2008)

தன்னுடைய குழந்தைகளை தன் அனுமதி இல்லாமல் மதமாற்றம் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று வழக்கு தொடரப் பட்டது. இந்திராகாந்தியின் சார்பில் வழக்குரைஞர் எம். குலசேகரன் வாதாடினார்.

இந்த வழக்கு மலேசிய மக்களின் கவனத்தையும், அரசியல், நீதித்துறைகளைச் சார்ந்தவர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. இறுதியில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாயாரைச் சேரும் என்று ஈப்போ நீதிமன்றம் முடிவு செய்தது.
 
Image result for kulasegaran m

மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைக்கப் படுவதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் குலசேகரன் கலந்து கொண்டு தன்னுடைய ஆதரவுகளை வழங்கி வந்துள்ளார்.

(http://www.csmonitor.com/World/Asia-Pacific/2008/0207/p04s01-woap.html - Temple demolitions anger Malaysia Indians)

2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. மலேசிய இந்தியர்களுக்கு பொருளாதார வகைகளில் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சமய, மொழி, கலாசார உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தலையாய கோரிக்கை.

அந்தப் பேரணியில் எம்.குலசேகரன் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினார். அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கேட்ட போது அவருடைய மனு முற்றாக மறுக்கப் பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் நாடாளுமன்றத்தில் அடிக்கடி குரல் எழுப்பி வருகிறார்.

மலேசிய மக்களவையில் இந்தியர்களின் பிரச்னைகளைப் பற்றி பேசும் போது பல முறை ஆளும் கட்சியினரால் இவர் கேலி செய்யப்பட்டு உள்ளார். கீழ்த்தரமான சொற்களினால் வேதனைப்படுத்தப் பட்டுள்ளார்.
Image result for kulasegaran m

ஒருமுறை அவர் நாடாளுமன்றத்தில் ‘வேசைக்குப் பிறந்தவனே’ என்றும் திட்டப்பட்டும் இருக்கிறார். ’ஏசுபவர்கள் ஏசிவிட்டுப் போகட்டும். நான் என் கடமையைச் செய்து கொண்டே இருப்பேன்’ என்று சொன்னார் குலசேகரன்.

("Tajuddin uses 'b*****d' on Kulasegaran". Asia One. 6 November 2008)

2007 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் துணை சபாநாயகரின் கட்டளையை மீறி சபாநாயகர், துணை சபாநாயகர்களின் சம்பள உயர்வைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததார்.

அதனால் குலசேகரன் நாடாளுமன்றத்தில் இருந்தே வெளியேற்றம் செய்யப் பட்டார். நான்கு நாட்கள் அவர் நாடாளுமன்றத்தின் முகப்பு அறையிலேயே உட்கார்ந்து தன் பணிகளைச் செய்தார். இதுவும் ஒரு வரலாற்றுச் சுவடு.

ஜனநாயகக் கட்சி ஒரு மாதாந்திர இதழை வெளியிட்டு வருகிறது. அதன் பெயர் ராக்கெட். இந்த இதழின் தமிழ்ப் பகுதி ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தான் குலசேகரன் என் நெருங்கிய நண்பர் ஆனார். 

 Image result for kulasegaran m

நடந்து முடிந்த 2018 தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் குலசேகரனைச் சந்தித்துப் பேசினேன். புந்தோங் பகுதியில் தன் குழுவினரோடு பிரசாரத்திற்கு வந்து இருந்தார். மற்றவர்களைப் பிரசாரத்திற்கு அனுப்பிவிட்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். பிரசார அலுப்பு. ஓய்வு எடுக்க வந்தார்.

நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அதன் பின்னர் சந்திக்க முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றதும் வாழ்த்துச் சொல்ல அழைத்தேன். புத்ராஜெயாவில் இருப்பதாகச் சொன்னார்.

அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது ஓர் அமைச்சர். அழைத்தேன். கிடைக்கவில்லை. நிச்சயம் ரொம்பவும் பிசியாக இருப்பார். மலேசியாவின் புதிய மனிதவள அமைச்சர் அல்லவா.

இன்னும் ஒரு விசயம். எதிர்க்கட்சிகளை விமர்சித்துப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதன் தாக்கத்தில் சென்ற 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாக்கப் பட்டேன். தெரிந்த விசயம். அப்போது எனக்கு ஆதரவாக குலசேகரன் களம் இறங்கினார். நண்பர் என்ற முறையில் உதவிகள் செய்தார். மறக்க முடியாது. 
Image result for kulasegaran m


இப்போது அவர் ஓர் அமைச்சர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழர்ப் பிரதிநிதியாக வந்து இருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை.

பரந்து விரிந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளில் வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் வாழ்கின்றார்கள். மங்காப் புகழுடன் உயிர்ப்பு பெற்ற ஆன்ம ஜீவ நாடிகளாக வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அவர்களில் சிலர் வரலாற்றுச் சப்த சுவரங்களின் சொர்ண சகாப்தங்களாக மாறுகின்றார்கள். அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனையும் செய்கின்றார்கள். 

மாண்புமிகு எம். குலசேகரன் உண்மையிலேயே மலேசிய மண்ணின் மைந்தன். மலேசிய வரலாற்றில் ஓர் அவதாரப் புருஷன். மலேசியச் சுவடிகளில் இருந்து மறைக்க முடியாத மனிதக் களஞ்சியமாக வலம் வருகின்றார். அமைச்சர் குலசேகரன் அவர்களை வாழ்த்துகிறோம்.

ஞானசேகரன் மாணிக்கம் இவரின் மக்களின் நலனுக்காக துணிவாக போராடும் குணத்திறகு வழங்கப்படும் பதவி இது. இறைவன் அருளால் நீண்டகால ஆயுளுடன் சேவையாற்றுவாராக.

Ta Peru குலாவின் போராட்டம் தொடரவேண்டும்.
என்இனமானவர்களுக்கு அவரது சமூகச்சேவை அயராமல் அவர்களை சென்றடையவேண்டுகிறேன். அமைச்சராக தேர்வு பெற்றமைக்கு வாழ்த்துகள்
 


Selbong Ratnasamy Thevar Congrats YAB Gunasegaran. We are indeed happy to see you representing the Indians in the cabinet however time and circumstances has to prove your mettle.

Maru Krishnan அரசியலில் பல ரகம் உண்டு அவைகளில் பெரும்பாலும் சுயநலம் நிறைய இருக்கும் அதுவும் மலேசியாவில் சொல்லவேண்டாம் இந்தியரில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகிவிட்டாலே தலையில் கொம்பு முளைத்து விடும் ஆனால் நமது குலா செல்லமாக அழைப்பது 4 தடவை ஒரே இடத்தில் அதுவும் சீனர்கள் 70% உள்ள இடத்தில் வெற்றிப்பெற்று தமிழர்களின் உயர்வுக்காக போராடும் போராட்டவாதியான நம் குலா மறைந்த பட்டு,டேவிட்டுக்கு பிறகு ஒரு உண்மையான தொண்டனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Ganabaskaran Nadason அருமையான கருத்து பரிமாற்றம் ஒரு அற்புதமான மனிதரைப்பற்றிமல்லாது, உயர்ந்த சிந்தனையும் சமுதயாய பற்றும் கொண்ட ஒரு இனிய நண்பர், மனிதர்

Image may contain: 1 person, standing 

Image may contain: 5 people, people smiling 

Pushpalata Ramasamy வளமான உழைக்கும் கரங்களை உருவாக்குங்கள் ஐயா மாண்புமிகு அவர்களே


 

18 மே 2018

மலேசிய இந்தியர்கள் சிந்திய இரத்தம்

மலேசிய இந்திய இனம் மலேசிய மண்ணில் சிந்தியது வியர்வை அல்ல. அது அந்த இனத்தின் இரத்தம்.
 



கித்தா தோப்புகளில் வடிந்தது பால் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



தார் சடக்கில் வடிந்தது மழைநீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.
 



கம்பிச் சடக்கில் வடிந்தது கண்ணீர் அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.



சயாம் பாதையில் வடிந்தது அழுகை அல்ல. அது மலேசிய இந்திய இனத்தின் இரத்தம்.


வன்மங்களின் தாக்குதலில் ஆற்றாமையின் காயங்கள் நனைந்து போகின்றன. நினைத்துப் பார்க்கின்றேன். வெம்புகின்றேன்.
 

மலேசிய இந்தியர்கள் ஒரு சொர்க்க பூமியில் நரகச் சுமையைச் சுமந்து கொண்டு வாழ்ந்தார்கள். கடந்த அறுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த சன்மானங்களின் பட்டியல்;

நம்பிக்கைத் துரோகங்கள்;

ஏமாற்றங்கள்;

நயவஞ்சகங்கள்;

பசப்பு வார்த்தைகள்;

பச்சோந்தித் தனங்கள்;

சதித் திட்டங்கள்;

மோசடிகள்:

அநியாயங்கள்;

அக்கிரமங்கள்:

அந்த அவலங்களின் தலைவாசலாகக் கழுத்தை அறுக்கும் பொருளாதாரச் சுமைகள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கழுத்தை நெறிக்கும் வரிச் சுமைகள்.
 

இந்தியர்களின் நிலையோ அதையும் தாண்டிப் போனது. நிரந்தப் போராட்டக் களமாய்த் தொடர்ந்தது. தெருச் சண்டைகளில் போய் முடிந்தது. அத்தனையும் நெஞ்சைக் கீறிக் செந்நீர் கொட்டும் கொடூரமான அவலங்கள்.

கள்ளக் குடியேறிகளுக்கும் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளுக்கும் நீலநிற அடையாள அட்டைகள். கைநாட்டுப் போடத் தெரியாத கழிசடைகளுக்கு எல்லாம் நாட்டுரிமைப் பத்திரங்கள்.

காட்டை வெட்டி மேட்டை வெட்டி; கல்லை உடைத்து கற்பாறைகளைக் கரைத்து; மலையைப் பிளந்து குகைகளைக் குடைந்து; இந்த நாட்டை பசும்பொன் பூமியாக மாற்றியது என் இந்திய இனம். 
 

அந்த இனத்திற்கு கிடைத்த வாழ்நாள்ச் சாதனை என்ன தெரியுங்களா. ஒரு சிவப்பு அட்டை. என்னே சதிராட்டங்கள். என்னே அறிவிலிச் சூத்திரங்கள்.

செந்நீரையும் வியர்வை முத்துகளையும் இந்த மலேசிய மண்ணுக்கு அப்படியே உரமாக்கிச் சென்றவர்கள் என் இந்திய இனத்தவர்கள்.

இன்னும் எத்தனையோ தியாகங்களை என் இனத்தவர் வடித்துக் கொட்டிச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அப்போதைய அரசு அவர்களை நோக்கிக் கக்கியது எல்லாம் நஞ்சு கலந்த பசப்பு மொழிகள். அதிலே கிண்டல், நக்கல், நையாண்டி, இனத் துவேசம், மதத் துவேசம். அடிவருடி அரசியல்வாதிகள் சிலரும் பலரும் கண்டு கொள்ளவே இல்லை.
 

சுத்தமான விசுவாசத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத என் இனப் பாமர மக்களின் இதயங்களைக் கூறு போட்டது அந்தக் கடந்த கால அரசு தானே.

இன மதப் பாகுபாட்டின் சர்வாதிகாரத்தில் அதிநவீனமாக என் இனத்தை ஒதுக்கி வைத்தது அந்தக் கடந்த கால அரசு தானே.

புதிய ஆட்சி வந்தால் இந்த நாடு மோசமாகிப் போகும் என்று சொன்னது அந்தக் கடந்த கால அரசு தானே. அந்த அம்புலிமாமா கதை எல்லாம் இனி வேண்டாங்க.

இனி நாம் தரப் போகின்ற மாற்றம் தான் நம் எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் அழியாச் சீதனம். அதுவே மலேசிய இந்தியர்களின் வரலாற்றுப் பொக்கிஷம்.


தெளிந்த நீரோடை போல ஓட்டுச் சாவடிக்குச் சென்றோம். நம் எதிர்கால நல்வாழ்விற்கு வேண்டினோம். நாளை நமதே என்று வாக்களித்தோம்.

நம் தலையில் நாமே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்ட அவலத்தை அன்றோடு அப்படியே தலைமுழுகி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

வசதிகள் மாறுகிறது
வாய்ப்புகள் மாறுகிறது
பதவிகள் மாறுகிறது
ஆட்சிகள் மாறுகிறது

மாற்றம் ஒன்றே மாறாதது

பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை; உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை; சிலருக்குப் புரிவதும் இல்லை; சொன்னாலும் உரைப்பதும் இல்லை. பலருக்குப் புரிவதும் இல்லை;

மலேசிய இந்தியர்களின் உடனடித் தேவை பணம் காசு இல்லைங்க. பட்டம் பதவி இல்லைங்க. மாட மாளிகை இல்லைங்க. ஆடம்பர அலங்காரங்களும் இல்லைங்க. சமுதாயத்தின் ஒற்றுமை தாங்க இப்போதைய அவசியத் தேவை.

மலேசிய இந்தியச் சமுதாயத்தின் தலைவர்களே, வேற்றுமைகளை மறந்து ஒன்று படுங்கள். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நேர்மையாகச் சேவை செய்யுங்கள். புண்ணியத்தைச் சேருங்கள். இதுவே ஒரு சமுதாயத்தின் பொதுநல அறிவிப்பு.
 

மலேசிய இந்தியர்களே, மாலை மரியாதைப் போட்டு ஆயிரம் டத்தோ ஆயிரம் டான்ஸ்ரீ போட்டு அப்படியே கூழைப் கும்பிடு போட்டு எவரையும் ரொம்பவும் தூக்கி வைத்து ஆட வேண்டாமே. அரசியல்வாதிகள் பொதுமக்களின் சேவகர்கள். அதை நினவில் கொள்வோம். போதும்.

ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் ஓர் அரசியல்வாதியிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பாருங்கள். கவனியுங்கள். அவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக அரசியல்வாதியைக் கன்னத்தில் அறைகின்ற கலாசாரம் வேண்டாமே. ஏற்கனவே ஒரு கன்னம் வீங்கி விட்டது. அதைத் தடவித் தடவி ஒத்தடம் கொடுத்து மண்ணையும் கவ்வியாச்சு.

62 ஆண்டுகள் அடிமைப்பட்டு வாழ்ந்து நொந்து போனது போதுங்க. இனி வரும் காலங்களில் இந்த பக்காத்தான் ஆட்சிக்காக மலேசியத் தமிழர்கள் ஒன்றுப்பட வேண்டும். நம் இந்தியச் சமுதாய எதிர்கால நலனுக்காக நம் வேற்றுமைகளை மறக்க வேண்டும்.

நமக்கு என ஒரு பிரதிநிதித்தை உருவாக்க வேண்டும். போட்டியும் பொறாமையும் இல்லாமல் நம் உரிமைகளுக்காகப் போராட வேண்டும். நல்ல அரசியல் சேவர்களை உருவாக்க வேண்டும்.
 

ஒவ்வோர் ஆட்சிக் காலத்திலும் நாம் எத்தனை எத்தனையோ இழந்தது விட்டோம். கணக்கில் அடங்கா. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாய் மீட்டு எடுப்போம். நம் பிள்ளைகளுக்கு வயிறார சோறு போடுவோம். மடி நிறைய கல்வியைக் கொடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பட்டதாரியை உருவாக்குவோம். அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைப்போம். இதை ஒரு சத்திய வாக்காக ஏற்றுக் கொள்வோம்.

இன்னும் ஒரு விசயம். இது யாரையும் எவரையும் பழி வாங்கும் நோக்கத்தில் நடந்த தேர்தல் அல்ல. சட்டமும், நீதியும், ஒழுங்கும், மரியாதையும் தவறிப் போய் சாக்காட்டில் தத்தளித்து மூழ்கிக் கொண்டு இருந்த போது, அவற்றைக் காப்பாற்றவே வந்த தேர்தல். அப்படிச் சொல்கிறார் துன் மகாதீர்.

இன்று தோல்வி கண்ட அதே அந்தப் பாரிசான் கட்சித் தலைமையில் 22 ஆண்டுகள் மலேசியாவை ஆட்சி செய்த அதே பிரதமர் சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் ஓர் உண்மைச் சத்தியம் தொக்கி நிற்கிறது.

அண்மைய காலங்களில் அவருக்கு காலம் தாழ்ந்த சில கனவுகள். எதிர்காலத்தில் மலேசியா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனும் கனவுகள். அந்தக் கனவுகள் தன் வாழ்நாளிலேயே நனவுகளாக மாற வேண்டும் என நினைத்தார். கங்கணம் கட்டினார். அந்தக் கனவுகளின் நனவுகள் தான் இன்றைய மாபெரும் வெற்றி.

இந்த முறை மற்றும் ஒரு மிக முக்கியமான திருப்பம். இளம் சமூகத்தினர் 11% ஓட்டுப் போட வந்ததைத் தான் சொல்கிறேன். மொத்த வாக்குப் பதிவுகளில் பதினொரு விழுக்காடு 26 வயதிற்கும் குறைந்தவர்களின் வாக்கு.

ஒட்டு மொத்தமாக மலேசியர் எவருக்கும் பட்டவர்த்தனமான ஊழல் அரசை பிடிக்கவில்லை. அது தான் உண்மை. நாட்டிலே தலை விரித்தாடும் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள். அப்படி இருக்கும் போது மக்கள் வியர்வை சிந்திச் சம்பாதித்த பணத்தை நாடோடிக் கொள்ளையர்கள் சூதாடுவதை இளைஞர்கள் விரும்பவில்லை. எதிர்த்தார்கள்.

அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிக் கொண்டு போவதை நன்றாகவே உணர்ந்து விட்டார்கள். அதை மாற்ற வேண்டும் என்று  நினைத்தார்கள். மாற்றியும் காட்டினார்கள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது. தெரியும் தானே. இங்கே சாது என்றால் பொதுமக்கள். காடு என்றால் ஊழல் பெருச்சாளிகள். ஒரு செருகல்.

இந்த உலகில் எந்த ஓர் அரசியல்வாதியும் ஒரு காமராசராக ஆக முடியாது. ஒரு கக்கனாகவும் ஆக முடியாது. கருவாட்டிற்கும் பூனைக்கும் கலப்புத் திருமணம் செய்து வைத்தாலும் அரசியல்வாதிக்கும் அகிம்சைக்கும் திருட்டுத் திருமணம் கூட செய்து வைக்க முடியாது. நோ சான்ஸ்.

அப்பேர்ப்பட்ட ஆபிரகாம் லிங்கனே தன் கடைசி நாட்களில் லஞ்சம் கொடுத்ததாக அரசல் புரசல். விடுங்கள். நம்ப கதைக்கு வருவோம்.

இந்த முறை மக்கள் விழித்துக் கொண்டார்கள். வெகுண்டு எழுந்தார்கள். மாற்றம் செய்தார்கள். ஆக அந்த வகையில் இந்தத் தேர்தல் வெற்றி என்பது மலேசிய மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

மலேசியத் தமிழர்கள் தங்கள் எதிர்ப்புகளை ஏற்கனவே பல வழிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சூசகமாகக் காட்டி வந்தார்கள். அசைக்க முடியாத தலைமைத்துவம் கண்டுகொள்ளவில்லை. அதனால் என்ன ஆனது.

தங்களின் இந்தியத் தலைவரையே தோல்வி அடையச் செய்தார்கள். இது உண்மை அல்ல என்று சொல்ல முடியாது. நான் சொல்லவில்லை. அது மக்களின் வெளிப்பாடு. தப்பு என்றால் மாண்புமிகு குலசேகரனைப் போய்க் கேளுங்கள். நன்றாகவே பதில் கிடைக்கும்.

மலேசியத் தமிழர்களுக்கு அவர்களின் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்று சொல்லி இண்ட்ராப் இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள். அப்படியே இந்த நாட்டையும் ஒரு கலக்கு கலக்கினார்கள். இத்தனை நடந்தும் மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி தன் சுயநலப் போக்கைக் கொஞ்சம்கூட மாற்றி அமைக்கவில்லை. 2013-தேர்தலில் சற்றே ஒரு லேசான மாற்றத்தை மக்கள்  ஏற்படுத்திக் காட்டினார்கள். அதில் சீனர்களின் பங்கு பெரும் பங்கு.

இருந்தாலும் 2013 தேர்தலில் பற்பல தில்லுமுல்லுகள். இந்தத் தேர்தலில் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் படையாகத் திரண்டனர். சத்தியமாகச் சொல்கிறேன். மலேசிய இந்திய இளைஞர்களைக் குண்டல் கும்பல்களின் வாரிசுகள் என்று அரசியல்வாதிகள் சிலர் புகழாரம் செய்தது உண்டு.

ஆனால் என்ன நடந்தது என்ன தெரியுமா. குண்டர்கள் கும்பல்கள் தாத்தாக்கள் அடியாட்கள் என்று எதுவுமே இல்லாமல் போனது தான் பெரிய விசயம். எல்லா இளைஞர்களும் ஒரே அணியில் ஒரே எண்ணத்தில் ஒரே நோக்கத்தில் ஒரே கொள்கையில் ஐக்கியமாகிப் போனார்கள். பக்காத்தான் வேட்பாளர்களைக் காப்பாற்றினார்கள்.

நாளைப் பொழுது உன்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்.
கொள்கை வெல்வதே நான் கொண்ட இலட்சியம்.
இமய மலை ஆகாமல் எனது உயிர் போகாது.

15 மே 2018

வான் அசிசா வான் இஸ்மாயில்

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்த ஒருவர் நாலு சுவர்களுக்குள் அடைத்து வைக்கப்பட்ட போது நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பார்க்கிற பட்டி தொட்டி எல்லாம் அவரைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. 
 

காய்கறி விற்கிற இடத்திலும் பேச்சு. நோய் நொடிக்கு மருந்து வாங்கப் போகிற இடத்திலும் பேச்சு. கோயிலுக்குப் போனால் அங்கேயும் பேச்சு. அட சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனாலும் அங்கேயும் சூப்பரன பேச்சுகள்.

இருந்தாலும் பாருங்கள். என் புருசனுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று சொல்லி மார்தட்டி வீர முழக்கம் செய்தார் ஒரு பெண். அந்தப் பெண் தான் வான் அசிசா வான் இஸ்மாயில்.

இப்போது இந்த நாட்டின் துணைப் பிரதமர். அதாவது ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி அதே நாட்டின் துணைப் பிரதமர். ஓர் அதிசயம் ஆனால் உண்மை. 
 

இந்த உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு மலேசிய மக்கள் இந்த நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்து விட்டார்கள். புது வரலாறு. புது யுகம். புதுத் தெம்புடன் மலேசிய மக்கள் பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்போது கணவனுக்காகப் போராடிய கண்ணகியின் கால் சிலம்புகள். இப்போது மலேசியர்களுக்காகப் போராடும் உரிமைகளின் வெள்ளிக் கொலுசுகள். சிதறிய சிலம்புகளையும் கொட்டிய கொலுசுகளையும்  வாரி அணைக்கும் ஒரு வனிதையின் சீற்றங்கள் வருகின்றன.
 

அசிசா எனும் பெயரில் அர்த்தமுள்ள உரிமையின் வடுக்கள் தெரிகின்றன. பெர்சே விழிப்புணர்வுகளின் ஈரம் காயாத சுவடுகள் தெரிகின்றன. வீர வசனங்களைப் பேசும் வரலாற்றுச் சான்றுகளும் தெரிகின்றன.

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது கலாசாரப் பின்னணி. அது வாழையடி வாழையாக வளர்ந்துவிட்ட ஒரு வழிமுறை.

அவளை ஒரு காட்சிப் பொருளாகக் காட்டுவதும் அப்புறம் அதே அந்தக் காட்சிப் பொருளை உடல் பசிக்குத் தீனியாக மாற்றிக் கொள்வதும் மூத்த வர்க்கத்தின் முன்னணிச் சாகசங்களாக இருக்கலாம். இருந்தும் வரலாம். 
 

ஒன்று மட்டும் சொல்வேன். ஒரு பெண்ணை அவள் விருப்பப்படியே வாழ விடுவதே சிறப்பு. ஓர் ஆண் தன் அதிகாரத்தை ஒரு பெண்ணின் மீது திணிக்கலாம். அதே போல ஒரு பெண் தன் கணவனின் மீது தன் ஆதிக்க வலிமையைக் காட்டலாம்.

இந்த மாதிரியான கட்டத்தில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதே சிறப்பு. விடுங்கள். எல்லார் வீட்டிலும் வாசல்படிகள் இருக்கின்றன. கதவுகளும் இருக்கின்றன. தாழ்ப்பாள்களும் இருக்கின்றன.

நவீனப் பெண்ணிய சிந்தனைக்குச் சம்பளம் கொடுக்க வேண்டாம். சிவப்புக் கலரில் கம்பளமும் விரிக்க வேண்டாம். மெலிதாக ஒரு வாழ்த்துச் சொன்னாலே போதும்.

அப்படி நான் சொல்லவில்லை. மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நல்ல ஓர் அரசியல்வாதி சொல்கிறார். அந்த இடத்தில் நம்முடைய காவியத் தலைவி கண்ணகியும் இவரைத் தாண்டி வருகிறார் என்று நினைக்கிறேன். சொன்னால் தப்பு இல்லையே.

இவரை ஒரு முறை டத்தோ அம்பிகாவின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். ஒரு சில நிமிடங்களில் அவருடைய போராட்ட உணர்வுகள் வெளிப்படையாகத் தெரிய வந்தன. ஒரு நிமிடத்தையும் ஒரு யுகமாகப் பார்க்கின்றவர்.
 

ஒரு நாட்டின் துணைப் பிரதமராக இருந்தவரின் மனைவி என்கின்ற பிகு இல்லை. மலேசியாவில் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவர் எனும் பந்தா கொஞ்சம்கூட இல்லை. மிக நேர்த்தியான அணுகுமுறை.

நான் இவரிடம் ரசித்தது அவருடைய மிக எளிமையான நடைமுறை வாழ்க்கை முறையாகும். அனைவரையும் அனுசரித்து அணைத்துப் போகும் அழகான தாய்மை முறை. அவரிடம் எதேச்சையாகக் காணப்படும் பக்குவமான பரிந்துரைகள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

அதையும் தாண்டி அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது. கொஞ்ச நேரப் பேச்சில் மனதை மட்டும் கவரவில்லை. மனித உரிமைகளையும் கிள்ளிவிட்டு சென்று விட்டார் வான் அசீசா. அவருடைய நல்ல எண்ணஙகள் போதும். வாழ்த்துவோம்.

டத்தோ ஸ்ரீ, டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் 1952 டிசம்பர் 3-ஆம் தேதி, சிங்கப்பூர் கண்டாங் கெர்பாவ் மருத்துவமனையில் பிறந்தவர். அப்போது மலேசியாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இருந்தது. தந்தையாரின் பெயர் வான் இஸ்மாயில் வான் மொகமட். தாயாரின் பெயர் மரியா காமிஸ்.

வான் அசிசா இப்போதைக்கு மலேசியாவில் ஒரு பிரபலமான அரசியல்வாதி. 1990-களில் மலேசியாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் துணைவியார். இப்போது மலேசியாவின் துணைப் பிரதமர்.

மலேசியாவில் மக்கள் நீதிக் கட்சி எனும் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி அதன் தலைவராகப் பதவி வகித்தவர் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிய இரண்டாவது பெண்மணி. முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணியாகும். யார் என்று நினைக்கிறீர்கள். விடையைப் பிறகு சொல்கிறேன்.

மலேசிய நாடாளுமன்ற மக்களவையில், மார்ச் 2008 லிருந்து 31 ஜூலை 2008 வரை எதிர்க்கட்சிகளின் தலைவராகச் சேவையாற்றியவர். தன்னுடைய கணவரின் அரசியல் வாழ்க்கையைச் சரி செய்வதற்காகத் தன் பகுதிநேர  மருத்துவத் தொழிலையும் தள்ளி வைத்தார்.
 

26 ஆகஸ்ட் 2008-இல் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி பெற்றார்.

வான் அசிசா வான் இஸ்மாயில், கெடா, அலோர் ஸ்டார் நகரில் இருக்கும் செயிண்ட் நிக்கலஸ் கான்வெண்ட் பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர், நெகிரி செம்பிலான், சிரம்பான் நகரில் இருக்கும் துங்கு குருசியா கல்லூரியில் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.

அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு அயர்லாந்து, டப்ளின் நகரில் இருக்கும் அரச அறுவை மருத்துவக் கல்லூரியில் (Royal College of Surgeons) மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மகப்பேறியல், பெண் நோயியல் துறைகளில் கல்வியைத் தொடர்ந்தார்.

அதே துறைகளில் சிறப்புத் தேர்வு பெற்றதால், கல்லூரியின் மெக்நாத்தன் ஜான்ஸ் (MacNoughton-Jones) தங்கப் பதக்கத்தையும் வென்றார். இருப்பினும் இவர் கண் மருத்துவத் துறையில்தான் நிபுணத்துவப் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய வான் அசிசா, கோலாலம்பூர் பொது மருத்துவமனை, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 14 ஆண்டுகள் மருத்துவராகச் சேவைகள் செய்தார். 1993-இல் இவருடைய கணவர் மலேசியாவின் துணைப் பிரதமர் ஆனதும் வான் அசிசா தன் மருத்துவத் தொழிலை ராஜிநாமா செய்தார்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் பணி புரியும் போது அன்வார் இப்ராஹிமின் நட்பு கிடைத்தது. 1979-ஆம் ஆண்டு முதன்முறையாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அந்தச் சந்திப்பே அவர்களைக் குடும்ப வாழ்க்கையிலும் இணைத்தது. 28 பிப்ரவரி 1980-இல் அவர்களுடைய திருமணம் நடந்தது.

அப்போது அன்வார் இப்ராஹிம், அபிம் என்று அழைக்கப்படும் மலேசிய இஸ்லாமிய இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்தை முதலில் ஏற்கவில்லை. இருப்பினும் முதல் குழந்தை பிறந்த பின்னர் பெற்றோர்களின் குடும்ப உறவுகள் சுமுக நிலைக்குத் திரும்பியது.

வான் அசிசா வான் இஸ்மாயிலின் மூதாதையர்கள் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப் படுகிறது. அதை வான் அசிசா வான் இஸ்மாயிலும் மறுக்கவில்லை. இவருடைய தந்தையார் டத்தோ வான் இஸ்மாயில் வான் மொகமட், சீன வம்சாவளியைச் சேர்ந்த டத்தின் மரியா காமிஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

வான் இஸ்மாயில் வான் மொகமட் தேசிய பாதுகாப்பு மன்றத்தில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர். இவர் பினாங்கு, செபராங் பிறை, சுங்கை பாக்காப் பகுதியைச் சேர்ந்தவர். இருந்தாலும் இவருடைய பூர்வீகம் கிளாந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் பகுதியைச் சார்ந்ததாகும்.

ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் வான் அசிசா வான் இஸ்மாயில் இரண்டாவது பிள்ளை. இவருடைய தம்பி பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணிபுரிகிறார். இவருடைய தங்கை பெர்னாமா செய்தி நிறுவனத்தில் தலைமைச் செய்தியாளராகப் பணிபுரிகின்றார். இன்னொரு தங்கை வழக்குரைஞராகப் பணியாற்றுகின்றார்.

அன்வார் இப்ராஹிம் 20 செப்டம்பர் 1998-இல் துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டதும், வான் அசிசா அரசியல் களத்தில் இறங்கினார். அதுவரை அவர் நல்ல ஒரு குடும்பப் பெண்ணாக, நல்ல ஒரு மருத்துவராகவே வாழ்ந்து வந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு. தன் குடும்பம் உண்டு என்று மற்ற எல்லாப் பெண்களையும் போலவே ஓர் எளிமையான சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

பொதுவாகவே, அவர் எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொண்டவர். பெரும் புள்ளியின் துணைவியார் என்று என்றைக்குமே அடையாளப் படுத்திக் கொண்டது இல்லை.

கணவர் கைது செய்யப்பட்டதும் (Reformasi movement) எனும் சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்தார். பெரும்பாலான மலேசியர்கள் அவருக்கு ஆதரவு அளித்ததற்கு அவருடைய எளிமைத்தனமும் ஒரு காரணமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மாற்றுவோம் மாற்றிக் காட்டுவோம் என்பதே அந்த இயக்கத்தின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

பின்னர், 4 ஏப்ரல் 1999-இல் மக்கள் நீதிக் கட்சியைத் (Parti Keadilan Rakyat) தோற்றுவித்தார். அந்தக் கட்சிக்குத் தலைவரும் ஆனார். 3 ஆகஸ்ட் 2003-இல், மலேசியாவின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய மக்கள் கட்சியை, தன்னுடைய மக்கள் நீதிக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

இந்தக் காலக் கட்டத்தில் அவருடைய கணவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

1999 மலேசியப் பொதுத் தேர்தலில் வான் அசிசா, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 9077 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அத்தொகுதியில் வான் அசிசாவை பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ இப்ராஹிம் சாட் என்பவர் எதிர்த்துப் போட்டியிட்டார்.

2004 பொதுத் தேர்தலிலும் அத்தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றார். மூன்றாவது முறையாக 2008 பொதுத் தேர்தலிலும், அதே தொகுதியில் வான் அசிசா வெற்றி வாகை சூடினார்.

31 ஜூலை 2008-இல் தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்து தன் கணவரின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவிட்டார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

பின்னர் அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கூட்டணியின் சார்பில் நின்று வெற்றி அடைந்தார் என்பது வரலாறு.

சரி. மலேசியாவில் முதன் முதலாக அரசியல் கட்சியை உருவாக்கிய  பெண்மணி ஓர் இந்தியப் பெண்மணி. அவர் யார் என்று  ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்.

அதற்கான பதில். அவர்தான் மலேசிய இந்தியர்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன். தன்னலமற்றச் சேவைகளை இனம் காணாமல் வழங்கி வருபவர். மலேசிய மனங்களில் சிறந்த பெண்மணியாக அடையாளம் காண்பவர். அவரைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் எழுதுகிறேன்.

”பெண்ணை  ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து அடிமைத்தனம் செய்வதைத் தயவுசெய்து நிறுத்துங்கள்.”

இப்படிச் சொல்பவர் வான் அசிசா. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி என்று புன்னகையும் செய்கிறார்.

அங்கே துணிச்சல்மிக்க பெண்மையின் நவரசங்கள் தெரிகின்றன. உதிரத்தையும் உடலையும் உரமாகத் தானம் செய்யும் உணர்வுகளும் தெரிகின்றன. தொடாதே, தொட்டால் விடாதே என்று உள்ளதைச் சொல்லும் உரிமைக் குரல்களும் கேட்கின்றன.

அதையும் தாண்டி உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறது ஒரு மருத்துவ ஓவியம். அதுவே அந்த ஓவியத்தின் தாரக மந்திரம்.

வான் அசிசா வான் இஸ்மாயில். என்னைக் கவர்ந்த ஜீவனே… மறக்க முடியாத ஓர் இதிகாசம்!!