19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 2

தமிழ்மலர் - 08.10.2018 - திங்கள் கிழமை

தாய்மொழி என்பது மனிதர்களின் பிறப்பு உரிமை. தமிழ்மொழி என்பது தமிழர்களின் உயிர் உரிமை. மலேசியத் தமிழர்களுக்கு அதுவே சிறப்பு உரிமை. அந்த உரிமைக்கு உயிர்க்காற்று கொடுக்க மலேசியத் தமிழர்கள் சட்டச் சடங்குகள் வழியாகப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.
 
 
மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தின் 152-ஆவது பிரிவில் (Article 152 Federal Constitution) தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. சட்டப் படியான அங்கீகாரம். ஆகவே அந்த மொழியைப் பயன்படுத்த முடியாது அல்லது பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல எவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

மலேசிய அரசியலமைப்புச் சாசனத்தில் மாற்றம் அல்லது திருத்தம் செய்யாமல் தமிழ் மொழியின் உரிமையில் தலையிட முடியாது. அரசியலமைப்புச் சாசனத்தில் தமிழ் மொழிக்கு தனி உரிமை உண்டு. மறுபடியும்... மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் 152-ஆவது பதிவில், தாய்மொழி உரிமை பற்றி நன்றாகவே தெளிவாகவே சொல்லப் பட்டு இருக்கிறது.
 

அந்த உரிமைப் போராட்டம் தான் இப்போது இங்கே வேறு கோணத்தில் பயணிக்கின்றது. தாய்மொழியும் வேண்டும். அந்தத் தாய்மொழிக்குத் துணையாக வேறு ஒரு தனி மொழியும் வேண்டும். அந்தத் தனிமொழி ஆங்கில மொழியாக இருக்கலாம். அல்லது மலாய் மொழியாகவும் இருக்கலாம்.

அந்த மொழிச் சாரல்களின் தூரல்களில் தான் இப்போது இரு மொழித் திட்டம் இரு பரிவட்டங்களுடன் நர்த்தனம் ஆடுகின்றது. ஆனால் இன்னும் ஒரு முழுமையான அரங்கேற்றத்தைப் பார்க்க முடியவில்லை. தொட்ட குறை விட்ட குறையாகத் தடுமாறிக் கொண்டு நிற்கிறது.

டி.எல்.பி. எனும் இரு மொழித் திட்டம் வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. வேண்டாம் என்கிறது இன்னொரு தரப்பு. இதில் எந்தத் தரப்பினரின் வாதம் நிலைக்கப் போகிறது. தெரியவில்லை. உறுதியாகவும் சொல்ல முடியவில்லை. இது ஒரு கயிறு இழுக்கும் போட்டியாகவே தெரிகிறது.

ஒரு மொழி அழிந்தால் ஓர் இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை உரு தெரியாமல் அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் ’ஆட்டோமெட்டிக்காக’ அழிந்துவிடும்.
 

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து போய் விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகளும் அழிக்கப்பட்டு விட்டன.

2016-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 196 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2016-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 7102 மொழிகள் பேசப் பட்டன. ஆனால் இந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 7097 மொழிகளாகக் குறைந்து விட்டது. அதாவது ஒரே வருடத்தில் மட்டும் ஐந்து மொழிகள் காணாமல் போய் விட்டன.

அந்த வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்ள வேண்டும். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

மலேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. இரு மொழித் திட்டம் 2003-ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இடையிடையே தலைதூக்கித் தகை கவிழ்ந்து கடைசியில் மீண்டும் 2016-ஆம் ஆண்டில் வலை பின்னியது.
 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் கற்பிக்கப் படுகின்றன.

2016 டிசம்பர் 27-ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி ஒரே ஒரு சீனப்பள்ளி; 49 தமிழ்ப் பள்ளிகள்; 572 தேசியப் பள்ளிகளில் டி.எல்.பி. அமலாக்கம் செய்யப்பட்டது.

கணிதப் பாடமும் அறிவியல் பாடமும் முதலாம் ஆண்டிலும் நான்காம் ஆண்டிலும் அறிமுகப் படுத்தப்படும். இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவத்தில் அறிமுகம் செய்யப்படும்.

இந்த இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் பலவிதமான எதிர்ப்புகள். 2017 மே மாதம் 20-ஆம் தேதி புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் ஓர் அமைதிப் பேரணி.

இருமொழித் திட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும் என்று பதாகைகள் ஏந்தினார்கள். அமைதியாக அழகாக நெஞ்சக் கிடக்கைகளை அள்ளிக் கொட்டினார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே. ஒரு மொழியை அழித்தால் ஓர் இனத்தை அழிக்கலாம். ஆனால் அந்த இனத்திலேயே வன்முறைகளைத் தூண்டிவிட்டு தெரியாமல் மாதிரி இருந்து விட்டால் என்ன நடக்கும். அந்த இனம் தன்னைத் தானெ அழித்துக் கொள்ளும். இது உலகார்ந்த பார்வை.

புத்ரா ஜெயா அமைதிப் பேரணிக்கு முன்னர் நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டனக் கூட்டங்கள். 2016 டிசம்பர் 31-ஆம் தேதி கிள்ளான் லிட்டல் இந்தியா வளாகத்தில் இருமொழித் திட்டத்திற்கு எதிராக ஆட்சேபப் பேரணி.
 

இருமொழித் திட்டத்தை அமலாக்கம் செய்வதற்குச் சில வரையறைகள் சில வரைமுறைகள் உள்ளன. முதலாவதாக அந்தத் திட்டத்தை அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். சரிங்களா.

அப்புறம் அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும். இந்த இரண்டும் தான் ரொம்ப முக்கியம்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிக்க முடியும். இப்படி ஒரு பரிசோதனை முறைக்கு முதலில் 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.

தேசியப் பள்ளிகளில் மட்டுமே முதலில் அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனாலும் பாருங்கள். தமிழ்ப் பள்ளிகளில் தான் அதன் தாக்கங்கள் வேகமாகப் பரவத் தொடங்கின. ஏன் என்று தெரியவில்லை. உலக மொழியான ஆங்கில மொழியின் மீதுள்ள ஆர்வம் அல்லது நம்பிக்கை. அவை காரணங்களாக இருக்கலாம். சொல்ல முடியாது.

இருமொழித் திட்டத்தைப் பற்றி சீனப் பள்ளிகள் கொஞ்சம்கூட கவலைப் படவில்லை. ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஒரே ஒரு பள்ளிதான் முதலில் தஞ்சாவூர் பொம்மையாக நின்றது. அதுவும் 2017-ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்தில் இருந்து பின் வாங்கியது.
 

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே நன்றாகவே தெரியும். அதன் காரணமாகத் தான் முதலில் தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்தில் இணைப்பதற்கு முயற்சி செய்தார்கள். இருந்தாலும் மலாய் சமூகத்தில் இருந்தும் பல்வேறு வகையிலான பல்வேறு எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில மொழிப் பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.

அப்படி இல்லாமல் மற்ற மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறான மாற்றுக் கருத்துகளை முன்வைத்தார்கள்.

நம்முடைய தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் இன்று வரை தொடர்கின்றன. அவை என்ன கருத்துகள் என்பதைப் பார்ப்போம்.

செல்லியல் செய்தி ஊடகத்தில் தேனீ என்பவர் தன்னுடைய கருத்தை இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார். (சான்று: செல்லியல் 28.12.2016)

தமிழ்ப் பள்ளியில் இருமொழி திட்டம் வேண்டுவோருக்கு தமிழ் மொழி என்பது ஊறுகாய். ஆனால் நமக்கோ தமிழ் மொழி சோறு போன்றது. இதுதான் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. தமிழை ஊறுகாய் போன்று தொட்டுக் கொண்டு ஆங்கிலத்தைச் சோறு போன்று சாப்பிடுவார்கள். தமிழ் பற்று இல்லாத தமிழர் தத்தம் பிள்ளைகளை மற்ற மொழி பள்ளிகளில் சேர்த்துச் செம்மை அடைவதை நாங்கள் தடுக்கவில்லை. தேர்வு உங்களுடையது.
 

#மெல்லத் தமிழ் இனிச் சாகும்# என்று பாரதி சொன்னார். சரிதானே. அதை நாம் நம் கண் முன்னே பார்க்கப் போகிறோம். அதுவும் சரிதானே.

கோவிந்தசாமி அண்ணாமலை என்பவர் தன் கருத்தை இப்படிச் சொல்கிறார். தாய் மொழிக் கல்வியே சிறந்தது என்பது குறித்து கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை. தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் தமிழ் மேல் பற்று வைத்து இருக்கிறார்கள்.

அதே சமயம் இரு மொழி திட்டம் என்று வரும் பொழுது அதனையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் இடை நிலைப் பள்ளிக்குச் செல்லும் போது மற்ற மாணவர்களிடம் ஆங்கில மொழி வளத்தில் தோற்று விடக் கூடாது என்ற காரணத்தினால் தான். (சான்று: செல்லியல் 31.12.2016)

தாய் மொழி பயன்பாட்டுத் திட்டத்தில் நம் மலேசியத் தமிழர்கள் அவசரப் பட்டு கண்மூடித் தனமாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது என்று டி. பழனிச்சாமி என்பவர் கருத்து கூறுகிறார். (சான்று: செல்லியல் 05.01.2017)

இதற்கிடையில் 2017 ஜூலை மாதம் 28-ஆம் தேதி தாய்மொழி வழிக்கல்வி எனும் கலந்துரையாடல் கூடிய கருத்தரங்கம் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் நியூப் மண்டபத்தில் நடைபெற்றது. இது தேசிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி.

தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதை நிலைநிறுத்துவது; இருமொழி பாடத் திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகளில் நடைமுறை படுத்துவதை மறுப்பது; இவையே அந்த நிகழ்ச்சியின் தலையாய அம்சங்களாக இருந்தன.

இருமொழி பாடத்திட்டம் தமிழ் பள்ளிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்; மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்து வந்து உள்ள தமிழ்வழிக் கல்வியை வலுப்படுத்த வேண்டும். தொடர்ந்து நிலைக்கச் செய்ய வேண்டும் எனும் கருத்துகளை வலியுறுத்தும் சிந்தனைக் களமாகவும் அந்த நிகழ்ச்சி அமைந்தது.

இருமொழித் திட்டத்தில் மலேசியத் தமிழர்களிடம் இரு வெவ்வேறான கருத்துகள் நிலவி வருகின்றன.

முதல் கருத்து: இருமொழித் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள். அவற்றையும் பார்க்க வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதை இருமொழித் திட்டத்தின் மூலம் சரி செய்யலாம்; எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இந்த மலேசிய நாட்டில் நிலைத்து நீடிக்க வேண்டும்; அப்படி நீடிக்க வேண்டும் என்றால் இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

மற்ற இன மாணவர்களுடன் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் போட்டியிட வேண்டி இருக்கிறது. போட்டி போட்டால் தான் முன்னேற முடியும். இதுவும் ஒரு முன்னிலை அணுகுமுறை;

அந்த வகையில் மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதனால் அவர்கள் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பதே நல்லது. சிறப்பாக அமையும்.

இன்னும் ஒரு விசயம். தமிழ்ப் பள்ளிகள் பக்கமே தலைவைத்துப் படுக்காத தமிழர்களும் மலேசியாவில் இருக்கவே செய்கிறார்கள். நீங்களே பார்க்கலாம். அவர்களை நாம் குறை சொல்லவில்லை. பொருளாதார வகையிலும் சமூகத் தகுதி வகையிலும் பார்த்தால் அவர்களை மேல் தட்டுத் தமிழர்கள் என்று சொல்லலாம்.

ஆக இந்தத் திட்டத்தின் வழி அவர்களையும் ஒரு கணிசமான அளவுக்குத் தமிழ்ப் பள்ளிகளின் பக்கம் ஈர்க்க முடியும். இந்தத் தரப்புக்கு பேராசிரியர் என் .எஸ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இருமொழித் திட்டத்தில் அந்தத் திட்ட ஆதரவாளர்களின் நகர்வுகளில் அரசியல்வாதிகள் சிலர் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் கேள்வி. விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

மேல்நிலைக் கல்விமான்கள் சிலர் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களை அணுகி உள்ளனர். அந்தக் கல்விமான்கள் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் தங்களின் கருத்துகளைத் தனிப்பட்ட வகையில் முன்நிலைப் படுத்தி வந்தனர்.

அந்தத் தலைமை ஆசிரியர்களிடம் இருமொழித் திட்டத்தில் தங்களின் பள்ளிகளை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சிடம் விண்ணப்பம் செய்யுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். சில கட்டங்களில் நெருக்குதலும் கொடுத்து இருக்கின்றனர்.

பேராக், கெடா, சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர்கள் சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த விமர்சனங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன்.

ஒரு நடுநிலையில் இருந்து இருமொழித் திட்டப் பிரச்சினையைப் பார்க்கிறோம். அவ்வளவு தான். இங்கே நமக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எனும் பாகுபாடு இல்லை.

(தொடரும்)

மேற்கோள்கள்:

1. Malaya Labour Ordinance in 1912 - FMS government introduced the Labor Code of 1923 with new provisions to make it made mandatory for each plantation having ten or more resident children of school-going-age to provide Tamil schools.

2. Tamil schools were nevertheless few until 1912 when the Labor Code Ordinance required an estate with ten children of school age (defined as between 6 and 12 years) to provide schooling facilities. Planters were obliged to open Tamil schools on estates, but most of the schools in the rubber estates were of poor standards.

18 அக்டோபர் 2018

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1


தமிழ் மலர் - 06.10.2018 - சனிக்கிழமை

மலேசியாவில் ஆட்சி மாறியது. அரசாங்கம் மாறியது. அரசியல்வாதிகளும் மாறினார்கள். அமைச்சர்களும் மாறி விட்டார்கள். 



இந்த மாற்றங்களில் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுமா. அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா. அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா. நடைமுறைப் பண்புகள் மாறுமா. பழைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித் திட்டக் கொள்கைகள் மாறுமா.

மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விட்டார்கள், அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.

ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி. பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான்.



புதிய அரசாங்கத்தின் இப்போதைய புதிய அணுகுமுறையினால் நம்முடைய மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்ட முன்னெடுப்பு தொடருமா. அல்லது கைவிடப்படுமா. அதை அலசிப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.

நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன.

புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. 



பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று ஒரு சாதனைப் பட்டியலையே தயாரித்துக் காட்டினார்கள். செய்ய முடிந்ததா. முடியாதுங்க. பழைய அரசாங்கம் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டவே விழி பிதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை.

இதில் சாதனையாவது சோதனையாவது. புதிய அரசாங்கத்திற்கு தலைக்குடைச்சல் தான் மிஞ்சிப் போய் நிற்கிறது. நல்லவேளை. இருபது காசு பெனடோல் மாத்திரைகள் உதவி செய்கின்றன.

புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களுக்குப் போய் கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் கணக்கில் காசு சுரண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓர் அமைச்சு இல்லை. பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கின்றன. 



எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் 100 நாட்கள் முடிந்து விட்டன. அப்புறம் எப்படிங்க அவர்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அவர்களுக்கு மேலும் கால அவகாசம் தேவைப் படுகிறது.

புதிதாக வரும் அரசாங்கம் பெரும்பாலும் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; மாற்றங்கள் செய்ய மாட்டார்கள். அதற்குப் பதிலாகச் சின்னச் சின்னத் திருத்தங்கள் செய்வார்கள். சரி.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருமொழித் திட்டம் என்றால் டி.எல்.பி. ஆங்கிலத்தில் டுவல் லேங்குவிஜ் புரகிரம். மலேசிய மொழியில் புரகிரம் டிவிபகாசா. தமிழில் இருமொழிப் பாடத் திட்டம்.

1950-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த அந்த இருமொழித் திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டமாகத் தெரிந்தது. இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குப் பார்வையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கமாக இருந்தது.



அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் அதைப் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை. இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம்,

1950-ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். நம்புங்கள்.

மலேசியத் தமிழினப் பதற்றத்தின் தடுமாற்றங்களைப் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். 50 ஆண்டுகால இடைவெளியில் கண்டிப்பாக அது நடந்து இருக்கும். அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் தேய்ந்து ஒரு தொய்வு நிலையை அடைந்து இருக்கலாம்.



50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை. ஆக நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைக்குப் பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல; நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாது. சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஓர் அவலத்தை எடுத்துச் சொல்லவும் உரிமை உள்ளது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான் நம் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.

அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். 



இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லச் சாகும். தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாம்.

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் நிச்சயமாக உறுதியாகப் பாதிக்கப்படும். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். விளக்கம் தருகிறேன்.

அதற்கு முன் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம், அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு சூசகமான மறைமுக நகர்வைப் பற்றி பலரும் கண்டு கொள்வதே இல்லை.

இப்போது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை இரு மொழித் திட்டத்தில் பெரும்பாலோர் சேர்ப்பதே இல்லை.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால்… மன்னிக்கவும். ஏற்கனவே இந்த ஆண்டு 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தி விட்டார்கள்.

இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் பொருளியல், தொழில் நுட்பம் ஆகிய இரு பாடங்களையும்) ஆங்கிலத்தில் நடத்தலாம் அல்லது மலாய் மொழியில் நடத்தலாம். தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பள்ளியின் தலைமையாசிரியரைப் பொருத்த விசயம்.

அடுத்து மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தப் பாடங்களை அந்த அந்த மொழிகளில் தான் போதிக்க வேண்டும். சரிங்களா.

அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிப்பார்கள். போதிக்க வேண்டும்.

ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை.

அப்படி என்றால் கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம்,  ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.

மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக அந்த வகையில் மொத்தம் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் படும். அந்த ஆறு பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப் படாது.

இப்போது இருக்கிற 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் பட்டால் எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் போதிக்கப்படும்.

அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த இரு மொழித் திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருப்பார்கள். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருப்பார்கள்.

ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு தமிழராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை.

ஒரு சீனர் அல்லது ஒரு மலாய்க்காரர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம். வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

இந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மற்ற மொழியில் படித்துக் கொடுக்கிறார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாகத் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யும்.

இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். தெரியாமல் தான் கேட்கிறேன். எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கப் போகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

மொழி இருந்தால் என்ன போனால் என்ன. நானும் என் குடும்பமும் நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பது ரொம்பவும் அசிங்கத்தனம்.

மலேசியாவில் 1287 சீனப்பள்ளிகள் உள்ளன. அத்தனைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு சீனப் பள்ளியும் இந்த இருமொழித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. அதை நினைவில் கொள்ளுங்கள். மறக்க வேண்டாம். ஏன் ஆதரிக்கவில்லை.

மறுபடியும் சொல்கிறேன். ஒரு சீனப் பள்ளிகூட இருமொழித் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஏன் ஆதரிக்கவில்லை. அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)

06 அக்டோபர் 2018

தேசிங்கு ராஜா - 2

தேசிங்கு ராஜா கதையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் செஞ்சிக் கோட்டையைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். செஞ்சிக் கோட்டை தமிழ் நாடு மாநிலத்தில் தப்பி இருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும்.



இந்தச் செஞ்சிக் கோட்டை தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை.

செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் என்பவர் நிர்வகித்து வரும் போது டில்லியில் மொகலாயப் பேரரசர் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார். அதாவது ஔவுரங்கசீப்பிற்குப் பின்னர் ஷா ஆலம் என்பவர் மொகலாயப் பேரரசர் ஆனார்.



அப்போது பேரரசர் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து பேரரசர் ஓர் அறிவிப்பு செய்தார். அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்கிக் காட்டுகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார். அதாவது மொகலாயப் பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் தான்.

அறிவிப்பைக் கேட்ட சொரூப் சிங் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அப்போது நிர்வகித்து வந்த செஞ்சிக் கோட்டைக்கு விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் டில்லிக்குப் பயணமானார்.


இங்கே ஒரு முக்கியமான விசயம். சொரூப் சிங் குதிரை சவாரி செய்வதில் மிக மிகக் கெட்டிக்காரர். எப்பேர்ப்பட்ட குதிரையையும் அடக்கிவிடும் சாமர்த்தியசாலி. குதிரைச் சவாரியில் ஔரங்கசீப்பிடம் இருந்தே பாராட்டுகளைப் பெற்றவர். 

இருந்தாலும் அவரால் குதிரையை அடக்க முடியவில்லை. ஒப்பந்தம் செய்து கொண்டபடி தோல்வி அடைந்தால், தோல்வி அடைந்தவர் சிறையில் அடைக்கப் படுவார். அதே போல சொரூப் சிங் தோல்வி அடைந்தார். டில்லி சிறையில் அடைக்கப் பட்டார். இந்தச் செய்தியை ஓர் அமைச்சர் மூலமாக, ராஜா தேசிங்கு அறிந்ததும் டில்லிக்கு விரைந்து சென்றார். சொரூப் சிங்கின் மகன் தான் ராஜா தேசிங்கு.

ராஜா தேசிங்குவின் மாமா பீம் சிங் அப்போது பேரரசர் ஷா ஆலமிடம் ஒரு படைத் தளபதியாக சேவை செய்தார். அவரைச் சந்தித்து அவருடைய அறிவுரைகளை ராஜா தேசிங்கு கேட்டார்.


தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கச் சொல்லி பேரரசரிடம் அனுமதி கேட்டார். வாய்ப்பு வழங்கப் பட்டது. அப்புறம் என்ன. அங்கே கூடி இருந்த அனைவரும் வியக்கும்படி, ராஜா தேசிங்கு அந்தக் குதிரையை அடக்கி சவாரி செய்து காட்டினார். அந்தக் குதிரையின் பெயர் பரிகாரி. 

ராஜா தேசிங்கின் வீரத்தைச் பேரரசர் ஷா ஆலம் வெகுவாகப் பாராட்டினார். பிறகு அந்தக் குதிரையையே ராஜா தேசிங்கிற்குப் பரிசாகவும் கொடுத்து அனுப்பினார். அது மட்டும் அல்ல. செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங்கிற்கே எழுதியும் கொடுத்தார். 

ஒரு சில நாட்கள் கழித்து தளபதி மாமா பீம் சிங், தனது மகளை ராஜா தேசிங்கிற்குத் திருமணம் செய்து வைத்தார். மனைவியின் பெயர் ராணிபாய். அப்போது ராணிபாய்க்கு வயது 16. ராஜா தேசிங்கிற்கு வயது 18. சின்ன வயதிலேயே திருமணம்.

அதன் பிறகு செஞ்சிக் கோட்டையின் தலைவராகச் சொரூப் சிங் (Swaroop Singh) நியமிக்கப் பட்டார். ஆற்காட்டு நவாப்பிடம் ஒரு தொகையைக் கப்பமாகக் கட்ட வேண்டும் என்றும் பணிக்கப் பட்டார். 


இதற்கு முன்னர் 1707-இல் ஒளரங்கசீப் காலத்திலேயே டில்லியில் பிரச்சினை. ஒளரங்கசீப்பிற்குப் பின்னர் அதிகாரத்தில் யார் அமர்வது என்கிற அரசியல் குழப்பம். 

அந்தச் சமயத்தில் அதுவரை ஆற்காட்டு நவாப்பிற்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையைச் சொரூப் சிங் நிறுத்திக் கொண்டார். அங்கேதான் பிரச்சினை ஆரம்பமானது. 

வணிகம் செய்வதாகச் சொல்லி நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்களையும் சொரூப் சிங் பகைத்துக் கொண்டார். அதுவே அவருடைய  ஆட்சிக்கு நெருக்கடிகளை உண்டாக்கியது.

1714-ஆம் ஆண்டு சொரூப் சிங் இறந்து போனார். அதன்பின் அவருடைய மகன் ராஜா தேசிங்கு, செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 22.

Image result for raja desingu

தன் தந்தையாரின் காலத்தில் அவர் வாங்கிய கடனுக்கு ஆற்காட்டு நவாப் அநியாய வட்டி போட்டுக் கேட்டார். மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்றும் ஆள் அனுப்பினார். 

ராஜா தேசிங்கு அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அத்துடன் செலுத்தி வந்த கப்பத் தொகையையும் இனிமேல் கட்ட முடியாது என்றும் மறுத்து விட்டார்.

இதனால் ஆற்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் ஆத்திரம் அடைந்தார். செஞ்சிக் கோட்டையைத் தாக்கத் தன் படையை அனுப்பினார். 1714-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. 

தேசிங்கு ராஜாவின் கை ஓங்கி இருந்த நேரம். சுபாங்கித் துரை என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் தேசிங்கு ராஜாவைச் சுட்டான். அதே இடத்தில் ராஜா தேசிங்கு மரணம் அடைந்தார்.

Related image

தேசிங்கு ராஜா இறந்தவுடன் அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறினார். ராணிபாயை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அவருடைய நினைவாக இராணிப்பேட்டை என்ற ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ராணிபாய்க்கு கோயில்களும் கட்டப் பட்டன. இன்றும் வழிபாடுகள் நடக்கின்றன.

தேசிங்கு ராஜாவின் சமாதியும் அவருடைய படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இன்றும் இருக்கின்றன. தேசிங்கு ராஜா உயிருக்கும் மேலாய் நேசித்து வந்த நீலவேணி எனும் குதிரையின் சமாதியும் அங்கேதான் இருக்கிறது.

தேசிங்கு ராஜா தமிழ்நாட்டில் இன்றும் வீர நாயகனாகப் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தனைக்கும் அவர் பத்தே பத்து மாதங்கள் தான் செஞ்சியை ஆட்சி செய்து இருக்கிறார்.

செஞ்சிக் கோட்டைக்கு அருகில் மூன்று கி.மீ. தொலைவில் சிங்கவரம் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே இருக்கும் அரங்கநாதர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 

செஞ்சி அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இந்தச் சிங்கவரம் கிராமம். பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Related image

அரங்கநாதர் ஆலயம் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும். எல்லோரா பாறையைப் போல ஒரே பாறையைக் குடைந்து செய்யப் பட்டக் கோயில். இந்த அரங்கநாதர் தான் தேசிங்கு ராஜாவின் குலதெய்வம். 

எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும் தேசிங்கு ராஜா இங்கே வந்து அர்ச்சனை செய்து விட்டுத்தான் போவாராம். செஞ்சிக் கோட்டை அரண்மனையில் இருந்து அரங்கநாதர் கோயிலுக்குச் செல்ல அவர் காலத்திலேயே ஒரு சுரங்கப் பாதையையும் அமைத்து இருக்கிறார். 

ஆற்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த அரங்கநாதரிடம் தேசிங்கு ராஜா அனுமதி கேட்ட போது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். 

"எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டதே; முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன். இன்றே செல்ல முடியுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

Related image

வலிமை வாய்ந்தது செஞ்சிக் கோட்டை. பற்பல வரலாற்று நினைவுகளைத் தனக்குள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கம்பீரத் தொனியில் மிடுக்குடன் இன்றும் காட்சி அளிக்கின்றது. 

செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், ஆறுகள், படைவீரர்கள் தங்கும் பகுதிகள், நெற் களஞ்சியங்கள்; எதிரிகள் எளிதில் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப் படுத்துகின்றன.

செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் தேசிங்கு ராஜா. இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கதைகளும் உள்ளன.

பண்டைய கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம். அதே சமயத்தில் கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Image result for raja desingu

அவர்கள் வாழ்ந்த இடங்களை நேரில் போய்த் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்து பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஒரே இடம் செஞ்சிக் கோட்டை தான். 

தேசிங்கு ராஜா வாழ்ந்த இடம்; அவர் போரிட்ட இடம்; அவர் மரணம் தழுவிய இடம்; அவருடைய மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என ஏராளமான வரலாற்று நினைவிடங்களைத் தன்வசம் வைத்து உள்ளது. 

செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனார் என்பவரால் கி.பி. 600-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. பற்பல அரசர்களின் கீழ் இருந்தது. பின்னர் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இந்தக் கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

Image result for raja desingu


வியப்பில் ஆழ்த்தும் கட்டடக் கலைக்கு எடுத்தக்காட்டாகக் கலை நயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தைக் கண்டு வியப்பபு அடையாதவர்களே இருக்க முடியாது. அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்த்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன்.

செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த தேசிங்கு ராஜா போலவே விண்ணை முட்டி கம்பீரமாக நிற்கிறது இந்தச் செஞ்சிக் கோட்டை. கால மாற்றங்களைக் கடந்து வந்தது இந்தச் செஞ்சிக் கோட்டை. பற்பல படையெடுப்புகளையும் தாண்டி நிற்கிறது இந்தச் செஞ்சிக்கோட்டை. அதே சமயத்தில் நம் மனங்களைக் கசியவும் வைக்கிறது.

தமிழ்நாட்டிற்குப் போனால் கிருஷ்ணகிரிக்குப் போங்கள். அங்கு இருந்து கொஞ்ச தொலைவில்தான் செஞ்சிக் கோட்டையும் இருக்கிறது. போய்ப் பாருங்கள். தேசிங்கு ராஜாவை நினைத்துப் பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே அவருக்கு நாம் செய்யும் உள்ளார்ந்த மரியாதையாகும்.

(முற்றும்)

தேசிங்கு ராஜா - 1

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் மலாயா தோட்டங்களில் தேசிங்கு ராஜாவைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்கள். விடிய விடிய கதைப் பேச்சுகள். மங்கிய மண்ணெண்ணெய் விளக்கு தூங்கி வழிந்து கண் மூடும் வரையிலும் கதைகள். சமயங்களில் விடிந்ததுகூட தெரியாமல் கதைகள். 


நான் பிறந்து வளர்ந்த மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தையும் அதில் சேர்க்க வேண்டும். பொழுது சாய்ந்தால் போதும். பாட்டிமார்களைச் சுற்றி ஒரு பெரிய வாண்டுப் பட்டாளமே கூடி நிற்கும். 

பாட்டிமார்கள் என்று சொன்னால் இரண்டு மூன்று பேர் தான். பெரிய வயது என்று சொல்ல முடியாது. அறுபது எழுபது வயதுகளைத் தாண்டிப் போய் இருக்க மாட்டார்கள்.

அப்போது தான் வானொலி, தொலைக்காட்சி, வாட்ஸ் அப், தோப் அப் எதுவுமே இல்லையே. கங்காணி வீட்டிலும் கிராணி வீட்டிலும் மட்டும் தான் ரேடியோ இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும் இங்கிலீஷ் பாட்டுகள். அதனால் பாட்டிமார்களின் ராமாயணக் கதைகளுக்கு ரொம்பவுமே கிராக்கி. 


கதா கலாசேபத்திற்கு முன்னால் மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைக்க ஓர் ஆள். பாட்டிக்கு வெற்றிலைப் பாக்கை இடித்துக் கொடுக்க ஓர் ஆள். காலைப் பிடித்துவிட ஓர் ஆள். விரல்களில் முட்டி முறித்துவிட ஓர் ஆள். முதுகைச் சொறிந்துவிட ஓர் ஆள். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள்.

முத்திப் போன பாட்டிமார்களின் சித்துப் பாடல்கள் நன்றாகவே சுதி சேர்த்துக் களை கட்டி நிற்கும். அப்போதைக்கு அது பாட்டிமார்களின் அல்லி தர்பார் என்றுகூட சொல்லலாம். 

பாவம் தாத்தாமார்கள். பாட்டிமார்களிடம் தாதா வேலைகள் ஒன்றும் எடுபடாது. எங்கேயாவது சுருண்டு போய்க் கிடப்பார்கள். அவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லை. பாட்டிமார்களில் யாராவது ஒருவர் கதையை இப்படி ஆரம்பிப்பார்.

பாலன் பிறந்த மூன்றாம் மாசம் 
பதைச்சு விழுந்தானாம் கொங்கனே
குழந்தை பிறந்த ஏழாம் மாசம் 
குலுங்கி விழுந்தானாம் மாங்கனே

இப்படித்தான் ஒரு சின்னப் பாடலாக ராஜா தேசிங்கு கதை ஆரம்பமாகும். அப்புறம் அந்தக் கதை ஒரு மாதத்திற்கு இழுத்துக் கொண்டு போகும். 


தோட்டத்து மக்களும் அசர மாட்டார்கள். எத்தனையோ நாட்கள் நானும் வாயைப் பிளந்து கொண்டு தூங்கிப் போய் இருக்கிறேன். சமயங்களில் இராத்திரி பத்து மணிக்கு ஒரு பாகம் முடியும். அப்புறம் ’வாடா மாச்சாப்பு’ என்று என்னை இழுத்துக் கொண்டு போவார்கள். அப்போது எனக்கு வயது ஆறு. நினைத்துப் பார்க்கிறேன். 

*மாச்சாப்பு* என்பது என் பேர் தான். மாச்சாப் கோயிலில் வேண்டிக் கொண்டதால் நான் பிறந்தேனாம். அதனால் அந்தப் பெயரையே எனக்கும் வைத்து விட்டார்கள். இப்போதுகூட மலாக்கா பக்கம் போய் மாச்சாப்பு என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். 

அது எல்லாம் வெள்ளந்திகளாய் வாழ்ந்து மறைந்த ஒரு கனாக்காலம். அந்த மாதிரியான காலங்கள் மறுபடியும வருமா? மனசுக்குள் ஒரு நீண்ட பெருமூச்சு. லேசாக அடைக்கிற மாதிரியும் இருக்கிறது. இனிமேல் வராதுங்க. கற்பனை செய்தே காலத்தை ஓட்ட வேண்டியது தான். என்ன செய்வது. சரி. கதைக்கு வருவோம். நான் ரெடி. நீங்க ரெடியா.

யார் இந்த தேசிங்கு ராஜா. ஒரு பத்துப் பதினெட்டு வயதிலேயே பெரிய பெரிய சாதனைகளைச் செய்த பையன் தான் இந்த ராஜா தேசிங்கு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. 


பல இலட்சம் படை வீரர்களையும் பல நூறு பீரங்கிகளையும் கொண்டது மொகலாயப் படை. பாபர், ஜஹாங்கிர், அக்பர், ஷா ஜகான், அவுரங்கசிப் போன்ற மகா மன்னர்கள் ஆட்சி செய்த அரசுதான் மொகலாய அரசு. இந்தியா பார்த்த மாபெரும் அரசு. உலகம் திரும்பிப் பார்த்த மகா பெரிய அரசு.

அவர்களின் படைதான் மொகலாயப் படை. அப்பேர்ப்பட்ட பெரிய படை. அந்தப் படையை வெறும் முன்னூறு வீரர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனிமனிதாக எதிர்த்து நின்று போர் செய்தவன் தான் இன்றைய நம்ப கதாநாயகன் தேசிங்கு ராஜா. 

ஆனாலும் சின்ன வயதிலேயே இறந்து போனான். கடல் போன்ற எதிரிகளின் படைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாத வீரன் தேசிங்கு ராஜா. அவனுடைய அஞ்சாமைக்கு இன்றும் தமிழகம் தலை வணங்குகிறது. தமிழக மக்கள் நெஞ்சை நிமிர்த்தி வீர வசனம் பேச வைக்கின்றது.

தேசிங்கு என்பவர் சீக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர். என்றாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்து போனவர். சீக்கியராகப் பிறந்தாலும் தமிழராக வாழ்ந்தவர். 


எப்படி மாவீரர் சிவாஜி மராத்திய பரம்பரையில் பிறந்து தமிழராகிப் போனாரோ… எப்படி வீர பாண்டிய கட்டபொம்மன் தெலுங்கராய்ப் பிறந்து தமிழராகிப் போனாரோ… அதே போலத் தான் தேசிங்கு ராஜாவும் சீக்கியராகப் பிறந்து தமிழராகிப் போனவர். 

தேசிங்கு ராஜாவைப் பற்றி ஒரு சின்ன சுருக்கம். கி.பி. 1713-இல் நடந்தது. ஆற்காட்டு நவாப்பின் அதிகாரத்தை ஏற்க மறுத்த தேசிங்கு ராஜா அவருக்குக் கப்பம் கட்ட மறுத்தான். அதனால் ஆற்காட்டு நவாப் ஒரு பெரும் படையுடன் தேசிங்கு ராஜாவைத் தாக்கினான். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு பெரிய போர் நடந்தது. 

தேசிங்கு ராஜா அவருடைய "நீலவேணி" எனும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு மஹ்மூத் கான் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் தேசிங்கு ராஜாவுடன் போர் புரிந்தார். 

ஆற்காட்டு நவாப்பிற்கு 85,000 குதிரை வீரர்களைக் கொண்ட பெரிய படை. தேசிங்கு ராஜாவிற்கு 350 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு சின்ன படை. அப்போது தேசிங்கு ராஜாவிற்கு 22 வயது. 


அந்தப் போரில் தேசிங்கு ராஜா கொல்லப் பட்டார்.  அவருடைய குறுகிய கால ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. செஞ்சிக் கோட்டை ஆற்காட்டு நவாப்பிடம் தடம் மாறியது.

தேசிங்கு ராஜாவின் இளம் மனைவி ராணிபாய். கணவன் இறந்ததும் உடன் கட்டை ஏறினார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. ‘இந்த உடல் என் கணவனுக்குச் சொந்தமானது. மற்றவர் பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லித் தீக்குளித்துக் கொண்டார். எதிரியின் மனைவியாக இருந்தாலும் அவளுடைய பத்தினி விரதம் ஆற்காட்டு நவாப்பை நெகிழ வைத்தது. 

அவளுடைய கர்ம வினையைப் போற்றிப் புகழ்ந்த ஆற்காட்டு நவாப்,  இராணிப்பேட்டை என்ற ஓர் ஊரையே தோற்றுவித்தார். 

இராணிப்பேட்டை எனும் ஊர் இன்னும் இருக்கிறது. அங்கே ராணிபாய்க்குப் பல கோயில்களையும் கட்டி இருக்கிறார்கள். இதுதான் இந்தக் கட்டுரையின் சுருக்கம். சரி. இனி கொஞ்சம் முழுசாய்ப் பார்ப்போம்.

முன்பு காலத்தில் மத்திய இந்தியாவில் புந்தேலர் எனும் ஓர் இனமக்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அந்த இனத்தின் தலைவராகச் சொரூப் சிங் என்பவர் இருந்தார். அவருடைய மகன்தான் தேஜ் சிங்.

Image result for desingu raja history

தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி விட்டார்கள். தேசிங்கு என்பவர் சீக்கியப் பரம்பரையைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் தமிழர்களின் வாழ்க்கையோடு ஒன்றித்துப் போனவர். 

சீக்கியராகப் பிறந்தாலும் ஓரளவுக்குத் தமிழராகவே வாழ்ந்து விட்டவர். தேஜ் சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார். அதற்கு புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 

1530-களில் நடந்த நிகழ்ச்சி. புத்தேல்கன்ட் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இருந்த ஒரு நிலப்பகுதி. ஒரு சிற்றரசு. அங்கு வாழ்ந்த ராஜ புத்திரர்களுக்கும், மொகலாயர்களுக்கும் நீண்ட காலமாக நல்ல சுமுகமான உறவு முறைகள். 

மொகலாய மன்னன் ஒளரங்கசீப் பல முறை தென் இந்தியாவின் மீது படை எடுத்து இருக்கிறார். தென் இந்தியாவைப் பிடிக்க வேண்டும் என்பது ஔரங்கசீப்பின் கனவு. அதனால் அடிக்கடி தாக்குதல்கள். அதன் விளைவாக மதுரை ஆட்சி வீழ்ந்தது. தஞ்சை ஆட்சியும் வீழ்ந்தது.

Image result for raja desingu

அந்தச் சமயங்களில் தேசிங்கு ராஜாவின் புத்தேலர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஒளரங்கசீப் படைப் பிரிவுகளில் சேர்ந்து சேவை செய்து வந்தனர். ஒளரங்கசீப்பிற்கு விசுவாசமாகவும் இருந்து வந்தனர். 

இந்தச் சமயத்தில் மாவீரர் சத்ரபதி சிவாஜியின் தலைமையின் கீழ் இருந்த மராட்டியர்கள், ஔரங்கசீப்பிற்கு பல வகைகளில் குடைச்சல் கொடுத்து வந்தனர். 

மராட்டியர்கள் தனி ஒரு மராட்டிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வந்தார்கள். அதனால் மராட்டியர்களை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஔரங்கசீப் கங்கணம் கட்டினார். அவர்கள் போகிற இடங்களுக்கு எல்லாம் ஒளரங்கசீப் தன் படைகளையும் அனுப்பி வந்தார். தாக்குதல் நடத்தி வந்தார்.

இதற்கிடையில் சத்ரபதி சிவாஜி இறந்து போனார். அவருடைய மகன் சத்ரபதி ராஜாராம். இவர் தொடர்ந்து ஒளரங்கசீப் படைகளுடன் போரிட்டு வந்தார். இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரால் சமாளிக்க முடியவில்லை. 

அதனால் தமிழகத்திற்குத் தப்பி ஓடி வந்து செஞ்சிக் கோட்டையில் தஞ்சம் அடைந்தார். சிவாஜியின் மகன் சத்ரபதி ராஜாராமைப் பிடிக்க ஔவுரங்கசீப் ஒரு பெரும் படையை அனுப்பினார்.

Related image

அந்தப் படையில் ஒரு குதிரைப் படையும் இருந்தது. அதற்குத் தலைவராக இருந்தவர்தான் சொரூப் சிங். அதாவது தேசிங்கு ராஜாவின் தந்தையார்.

செஞ்சிக் கோட்டையில் அப்படி இப்படி என்று பதினொரு மாத கால முற்றுகை. கடைசியில் 1698-ஆம் ஆண்டு செஞ்சி கோட்டை வீழ்ந்தது. 

ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டார். அதன் பிறகு சத்ரபதி ராஜாராம் எப்படி இறந்து போனார் என்பது வேறு கதை. 

அந்தப் போரில் வீர தீரத்துடன் செயல் பட்டதால் சொரூப் சிங்கிடமே செஞ்சிக் கோட்டை ஒப்படைக்கப் பட்டது. செஞ்சிக் கோட்டையை சொரூப் சிங்கிடம் வழங்கியது ஔரங்கசீப் என்பதை நாம் இங்கே மறந்துவிடக் கூடாது.  

இப்படித்தான் ராஜா தேசிங்கின் தந்தையார், தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தார். ஆக அந்தச் செஞ்சிக் கோட்டையின் மன்னன் சொரூப் சிங்கிற்கும் மனைவி ரமா பாய்க்கும் பிறந்தவர்தான் தேசிங்கு ராஜா.

செஞ்சிக் கோட்டை எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை. 

2006-ஆம் ஆண்டு இந்தக் கோட்டைக்குச் சென்று இருக்கிறேன். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. யானைகளைக் கட்டிப் போடுவதற்காக லயங்கள் கட்டி இருக்கிறார்கள். எல்லாமே கல் பாறைகள். இன்னும் அப்படியே இருக்கின்றன. படிகளில் ஏறிச் செல்வதுதான் சிரமமாக இருந்தது. சரி. விசயத்திற்கு வருவோம்.

Related image

செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் நிர்வகித்து வரும் போது டில்லியில் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார். 

அப்போது சுல்தான் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதனால் அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்குகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார். 

இந்தக் கதை நாளை தொடரும்.

22 ஆகஸ்ட் 2018

நினைவில் நிற்கும் கனவுகள் - 1

மலாக்கா டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தில் 1960-களில் நான் வாழ்ந்த குடியிருப்பு. என் அப்பா அம்மா தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்த ரப்பர் தோட்டம். என்னுடைய சீனியர் கேம்பிரிட்ஜ் படிப்பிற்குப் பின்னர் இதே தோட்டத்தில் தான் கிராணியாராக வேலையும் செய்தேன்,






2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்தத் தோட்டத்திற்குப் போய் இருந்தேன். பழைய நினைவுகளில் புதிய நனவுகள்.