09 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் 2

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதரின் பிறப்பு உரிமை அவரின் தாய்மொழி. அதே போல உலகில் வாழும் ஒவ்வொரு தமிழரின் உயிர் உரிமை அவரின் தமிழ்மொழி. அந்த வகையில் தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அதுவே அவர்களின் தனிச் சிறப்பு உரிமை. 



அந்த உரிமைக்கு உயிர் கொடுக்க இன்று வரை தமிழர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கேயும் எங்கேயும் அந்த உரிமைப் போராட்டம் தொடர்கிறது.

ஒரு மொழி அழிந்தால் அந்த மொழி சார்ந்த இனம் அழிந்து விடும். தெரிந்த விசயம். ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழித்தால் போதும். அந்த இனம் சன்னம் சன்னமாய் அழிந்துவிடும்.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இந்த உலகில் எத்தனையோ மொழிகள் அழிந்து விட்டன. அந்த மொழியைச் சார்ந்த இனங்களும் அழிந்து விட்டன. மற்ற பிரதான மொழிகளின் ஆதிக்க வலிமையினால் பல ஆயிரம் சிறுபான்மை இனத்தவர்களின் மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன.




2019-ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த உலகில் 195 நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளில் 2000-ஆம் ஆண்டு வரையில் 7000 மொழிகள் இருந்தன. 2018-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் 6500 மொழிகள் மட்டுமே இருக்கின்றன.

ஆனால் இந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 6485 மொழிகளாகக் குறைந்து விட்டது.

அதாவது ஒரே வருடத்தில் பதினைந்து மொழிகள் காணாமல் போய் விட்டன. 2050-ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 6000 மொழிகள் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.



கிரேக்க மொழியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகிலேயே மிகப் பழைமையான மொழி. ஆனால் அந்த மொழியைப் பேச ஓர் இனம் இல்லாது போனதால் தான் அந்த மொழி இப்போது இருந்தும் இல்லாமல் மறைந்து போய் கிடக்கிறது.

அதே போலத் தான்  சமஸ்கிருத மொழியும் ஓர் இறந்த மொழியாக மாறிப் போய் இருக்கிறது. ஆக ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அதற்கு ஓர் இனம் தேவை.

உலகில் 6485 மொழிகள் இருந்தும் பெரும்பான்மை மொழிகள் சிறுபான்மை இனத்தவரின் மொழிகள்.

வட தென் அமெரிக்கா கண்டங்களில் ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் ஆயிரக் கணக்கான மொழிகள் பேசப்பட்டன. ஐரோப்பியர்கள் வந்தார்கள். சிறுபான்மை இனத்தவரின் நூற்றுக் கணக்கான மொழிகள் அழிந்து போயின.

2010-ஆம் ஆண்டில் அந்தமான் தீவில் மட்டும் மூன்று மொழிகள் அழிந்து போயின. அக்கா போ (Aka-Bo); அக்கா கோரா (Aka-Kora); ஆ பூசிக்கார் (A-Pucikwar) மொழிகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.




அசுர வேகத்தில் மொழிகள் அழிந்து கொண்டு போகின்றன. ஒரு மொழியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் போது அந்த மொழியின் உயிர்த் தன்மைக்குச் சாவுமணி அடிக்கப் படுகிறது. அதை நினைவில் கொள்வோம். சரி. மலாயா தமிழர்களின் கதைக்கு வருவோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, கிள்ளான், மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள். 




கி.பி.454-ஆம் ஆண்டு சுமத்திராவை ஈஸ்வர நரேந்திரன் என்பவர் ஆட்சி செய்தார். அவர் காலத்தில் இருந்து தமிழர்களின் தென்கிழக்காசியப் புலம்பெயர்வுகள் தொடர்கின்றன.

1025-ஆம் ஆண்டில் இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது அங்கு வாழ்ந்த தமிழர்களைக் கணக்கில் சேர்க்கவில்லை.

ஆங்கில நூலாசிரியர் ரோலன் பிராடல் என்பவர் ஒரு வாசகம் சொல்லிவிட்டுச் சென்றார். அதை நினைவு படுத்துகிறேன். மலாயா எனும் பச்சை மண்ணுக்கு முதல் நாகரிகத்தைக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள். அவர்களின் மொழியால் தான் அந்த மண் ஏற்றம் பெற்றது.

15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா ஒரு பெரிய வாணிக மையமாக விளங்கியது. தமிழ்நாட்டில் இருந்து துணிமணிகள், யானைத் தந்தங்கள் மலாக்காவிற்கு கொண்டு வந்த தமிழர்கள் மிளகு, வாசனைத் திரவியங்கள், பீங்கான் மங்குகளை வாங்கிச் சென்று இருக்கிறார்கள்.




இந்தக் கட்டத்தில் முன்ஷி அப்துல்லா எனும் இலக்கியவாதியை மறந்துவிட முடியாது. இவர் 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர்.

1843-ஆம் ஆண்டு அவர் தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா. தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் தமிழ்மொழியை மணலில் எழுதிப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். 




முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் தேயிலை, கரும்புத் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் உருவாகின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. அதுவே இந்த நாட்டில் முதல் தமிழ்ப்பள்ளி ஆகும்.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.




அதன் பின்னர் 1834-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. அதன் பெயர் சிங்கப்பூர் பிரீ ஸ்கூல். அதற்கும் ஆதரவு கிடைக்காததால் 1839-ஆம் ஆண்டு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கு; மலாக்கா; சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1859-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலபார் பள்ளி தொடங்கப் பட்டது. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின.

அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது.

1900-ஆம் ஆண்டில் பேராக் பகான் செராய் நகரில் ஆங்கிலேய அரசாங்கம் முதல் தமிழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது. 




1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்கலாம் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன். ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்கலாம் என்கிற ஒரு சட்டம்.

அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள். 




பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள்.

படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே. என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்களை வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள். 



கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருந்து இருக்கும். ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது. 




வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

தமிழர்கள் படித்து இருந்தால் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் அதுவே பெரிய விசயம். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.

ஆக தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.

வெளியே போனால் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும். அப்புறம் பின்நாட்களில் தங்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.




ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். அவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை அறிவு போதும். அதற்கு மேல் படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் எசமானர்களுக்கு ஆபத்து.

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசை நாற்பது காசாகப் பார்க்க வேண்டும். கல்லா கட்ட வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும்.

அதுதான் வெள்ளைக்காரர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.

(தொடரும்)

08 ஜூலை 2019

சுந்தர் பிச்சை

உலக மக்கள் கூகளில் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உலக மக்களில் ஒருவரை அந்தக் கூகள் நிறுவனம் தேடி இருக்கிறது. தேடித் தேடிக் கடைசியில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவரைக் கண்டுபிடித்து இருக்கிறது. 



அவர் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அதுவும் தன் நிறுவனத்திலேயே வேலை செய்கிறார் என்பது தெரிந்ததும் அதற்கும் வேலை கொஞ்சம் சுலபமாக முடிந்து விட்டது.

அவரையே இப்போது தலைவராக்கி அழகு பார்க்கின்றது. அந்த நிறுவனத்தின் பெயர் கூகள். தலைவரின் பெயர் சுந்தர் பிச்சை. வயது 46.

நமக்கு ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் என்ன செய்கிறோம். போய் கூகளில் தேடிப் பார்க்கிறோம். இல்லையா. ஒரு சின்னச் சந்தேகமாக இருந்தாலும் கூகளில் தேடுவது இப்போது எல்லாம் ரொம்பவும் வாடிக்கை. அந்த வகையில் கூகளைத் தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். சந்தேகம் வேண்டாம்.




கூகள் இல்லாமல் இணைய வாழ்க்கையே இல்லை என்கிற மாதிரி ஒரு நிலைமை உருவாகி விட்டது. கிண்டர்கார்டன் போகும் மழலையில் இருந்து குண்டர் கும்பல் விசுவாசிகள் வரை எல்லாருமே கூகளில் ஐக்கியமாகிப் போகிற காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

கூகள் தேடல் இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 700 - 1000 கோடி தேடல்கள் நடைபெறுகின்றன. அது தெரியுமா உங்களுக்கு. ஒவ்வொரு விநாடியும் 63,000 தேடல்கள். நம் பூமியில் இருப்பவர்கள் 7 புள்ளி 771 பில்லியன் மக்கள். இவர்களில் பாதி பேர் ஒவ்வொரு நாளும் கூகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். 




இன்னும் ஒரு கொசுறுச் செய்தி. ஒவ்வொரு நாளைக்கும் இந்த உலகில்

360,000 குழந்தைகள் பிறக்கின்றார்கள்

151,600 பேர் இறக்கின்றார்கள்


இப்போதைய உலக மக்கள் தொகை 7,771,576,923 (2018 புள்ளி விவரங்கள்). இதுவும் கூகளில் இருந்து சுடப் பட்டது.

(சான்று: http://worldpopulationreview.com/continents/world-population/)




சுந்தர் பிச்சையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூகள் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இந்த உலகில் பல கணினித் தொழிநுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் இருக்கின்றன. 

அவற்றில் தலையாய நிறுவனத்தின் பெயர் கூகள் (Google). தமிழில் கூகள், கூகல், கூகில், கூகிள் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். 




கூகள் என்பதே சரியான சொல். விக்கிப்பீடியாவும் அதையே பயன்படுத்தி வருகிறது. ஆகவே மலேசியாவில் உள்ள ஊடகங்கள், கூகள் எனும் சொல்லையே பயன்படுத்த வேண்டும். நம்முடைய கருத்து. சரி. உலகின் தலையாய 10 தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியல் வருகிறது. அவற்றின் வருமானம் அமெரிக்க டாலர்களில் (கோடி) உள்ளன. இவை ஆகக் கடைசியாகக் கிடைத்த 2018 டிசம்பர் மாதப் புள்ளி விவரங்கள்.


சரி. கட்டுரைக்கு வருவோம். இந்தப் பட்டியலில் கூகள் நிறுவனம் மட்டும் தான் எந்தப் பொருளையும் விற்காமல் சம்பாதிக்கும் நிறுவனமாகும்.

மற்றவை தங்களின் பொருட்களை விற்பனை செய்து காசு பார்க்கின்றன. அதனால் மூலதனம் போடாமல் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு சம்பாதிக்கிற ஒரே நிறுவனம் என்றால் அது இந்தக் கூகள் நிறுவனம் தான்.

உலகம் முழுமைக்கும் இந்த நிறுவனத்தில் இப்போதைக்கு 98,771 பேர் வேலை செய்கின்றனர்.


கூகள் நிறுவனம், அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்த நிறுவனம் சக்கை போடு போடுகிறது. கூகள் தேடுபொறி இயக்கமே இதன் முதன்மையான சேவை.

1998-ஆம் ஆண்டில் லாரி பேஜ்; சேர்ஜி பிரின் எனும் இரு நண்பர்களால் விளையாட்டுத் தனமாக தொடங்கப் பட்ட நிறுவனம் தான் இந்தக் கூகள். 1996-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது டாக்டர் பட்டத்திற்காக உருவாக்கிய ஆய்வேடு தான் இந்தக் கூகள். இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. 

1998-ஆம் ஆண்டு சூசன் வோசிசிக்கி எனும் சக மாணவியின் வீட்டில், கார் நிறுத்தும் ஒரு கொட்டகைக்குள் கூகள் தொடங்கப் பட்டது. இந்தச் சூசன் வோசிசிக்கி தான் இப்போது யூ டியூப்பின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார். இவருக்கு வயது 47.


உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 700 கோடி அமெரிக்க டாலர். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு இரண்டு மலேசிய பெட்ரோனாஸ் கோபுரங்களைக் கட்டி முடிக்கலாம்.

இவ்வளவு பணம் இருந்தாலும் தன் பெரிய மகளுக்கு வெறும் 200 டாலர் மடிக்கணினியை வாங்கிக் கொடுத்தாராம். ஒரு கோடீஸ்வரின் மகள் என்கிற நினைப்பு தன் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்று சொல்கிறார்.   

சரி. கூகிள் விசயத்திற்கு வருவோம். உலகின் தகவல்களை ஒருங்கு இணைப்பதே அதன் தலைமைச் செயல்பாடாகும். முதன்முதலில் அதை உருவாக்கிய போது அதற்கு பேஜ் ரேங்க் என்று பெயர் வைத்தார்கள். பேக்ரப் எனும் மற்றொரு பெயரும் உண்டு. பின்னர் கூகூல் (Googool) என்று பெயர் மாறியது. இப்போது கூகள் என்று ஊர் உலக மக்களுக்குத் தெரிந்த பெயராகி விட்டது.
 

கூகள் இணையத் தேடல், கூகள் மெயில் (GMail), கூகள் டாக்குமெண்டுகள் (Google Documents), கூகள் பிளஸ் (Google Plus), கூகள் டாக் (Google Talk), கூகள் மேப்ஸ் (Google Maps), கூகள் நியூஸ் (Google News), பிளாக்கர் (Blogger), யூ டியூப் (YouTube) போன்ற பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற யூ டியூப் சேவையும் இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இன்னும் ஒரு விசயம். பிளாக் (Blog), பிளாக்கர் (Blogger), பிளாக்ஸ்பாட் (Blogspot) என்று சொல்கிறார்களே அந்த இலவச வலைப்பதிவுச் சேவைகளையும் இந்தக் கூகள்தான் இலவசமாக வழங்கி வருகிறது. பிளாக்கர் என்பதை வலைப்பதிவு என்று அழைக்கிறோம்.

சரி. சுந்தர் பிச்சையைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் இந்தியர்களின் பங்கு மலைப்பையும் வியப்பையும் தருகிறது.
 

அமெரிக்காவின் பெரிய பெரிய நிறுவனங்கள், இந்தியர்களைத் தான் அவற்றின் தலைமை பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றன.

காரணம் என்ன என்று கேட்டால் கணினித் துறையில் இந்தியர்கள் தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறார்கள்; ரொம்பவும் விசுவாசமானவர்கள்; ரொம்பவும் நம்பிக்கையானவர்கள் என்றும் புகழாரம் பாடுகின்றன.

இந்தப் பக்கம் கொஞ்சம் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை வேலைக்கு வைக்கலாம். (பெயர் வேண்டாம்). பதவிக்கு வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வேலை செய்யும் கம்பெனியைப் போல இன்னொரு சொந்தக் கம்பெனியைத் திறந்து விடுவார்கள்.

கம்பெனியின் ரகசியங்களைக் கடத்திக் கொண்டு போவார்கள். அதனால் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டி இருக்கிறது என்று சொல்கிறார்கள். விடுங்கள். அது நம்ப பிரச்சினை இல்லை.
 

கூகள் நிறுவனம் தன்னுடைய சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டமாக அதன் செயல்பிரிவில் இருந்த இந்தியர் சுந்தர் பிச்சையைத் தலைமைச் செயல் அதிகாரியாக அறிவித்தது. உலகமே வியந்து போனது.

ஏற்கனவே அந்தப் பதவியில் கூகளின் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் தான் இருந்தார்கள்.

சுந்தர் பிச்சை தான் கூகள் நிறுவனத்தில் அண்ட்ராய்ட், கூகள் குரோம் ஆகிய பிரிவுகளுக்குத் தலைவர்.

2004-ஆம் ஆண்டு கூகள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் ஏதாவது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கெட்டிக்காரர். இண்டர்நெட் எக்ஸ்புரோர், பயர் பாக்ஸ், ஒப்பேரா போன்ற உலவிகள் இருக்கும் போது கூகள் குரோமை அறிமுகப்படுத்தி உலகத்தையே வியக்க வைத்தவர்.
 

இப்போது உலகின் வேகமான, எளிமையான, பாதுகாப்பான உலவி எனும் பெயரில் கூகள் குரோம் முதல் இடத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

உலகில் கோடிக் கோடியான திறன்பேசிகள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் மூன்றில் ஒரு பங்கு திறன்பேசிகளில் அண்ட்ராய்ட் செயலாக்கம் இடம் பிடித்து இருக்கிறது. அவற்றுக்குள் கூகள் குரோமை இழுத்துச் சென்றவர் சுந்தர் பிச்சை என்கிற அழகிய தமிழர்தான்.

டுவிட்டர், மைக்ரோசாப்ட், டெலிகிராம், மைசாட் போன்ற நிறுவனங்கள் சுந்தரைக் கொத்திக் கொண்டு போக பல முறை முயற்சிகள் செய்தன. திறமைசாலிகளை இழுத்துப் போடுவதில் கெட்டிக்கார நிறுவனங்கள். அவை ஒவ்வொரு முறை முயற்சி செய்த போதும்  மிகை ஊதியமாகச் சில பல கோடி டாலர்களைக் கொடுத்து சுந்தரைக் கூகள் நிறுவனம் தக்கவைத்துக் கொண்டது.

சுந்தர் பிச்சை 1972-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். உத்தர பிரதேசம் கரக்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர். ஸ்டான்ட்பர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு. பின்னர் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

2004-ஆம் ஆண்டு கூகளில் சேர்ந்தார். புதுமைகளை அறிமுகப்படுத்தும் பிரிவின் தலைவராக நியமிக்கப் பட்டார். கூகள் குரோம், கூகள் டிரைவ் ஆகியவற்றைத் தயாரித்த பெருமை இவரையே சாரும்.

அடுத்ததாக அண்ட்ராய்ட் செயல்பாட்டு நிரலிகளின் மேம்பாட்டுத் துறைக்குத் தலைமை தாங்கினார். அப்படியே ஜி-மெயில் மின்னஞ்சல் திட்டத்தையும் உருவாக்கித் தந்தார். அந்த வகையில் இவருடைய சேவைகள் உச்சத்திற்குச் சென்றன.

அதன் பின்னர் அண்ட்ராய்ட் செல்போன்களை உருவாக்கும் பொறுப்பை கூகள் இவரிடம் வழங்கியது. நன்றாகவே செய்து முடித்தார்.

இன்னும் ஒரு விசயம். இந்த உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட்; கூகள். இந்த இரண்டிலுமே தலைமைப் பதவிகளை வகிப்பது இந்தியர்கள் தான்.

உலகின் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களுடைய பங்கு மிகப் பெரிய அளவில் உள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகள் வியந்து பாராட்டுகின்றன.

பொதுவாகவே இந்திய நிர்வாகிகள் அனைவரும் எதிர்காலத்தைச் சார்ந்து கற்பனைக் கடலில் பயணிகின்றார்கள். உண்மையிலேயே அவர்களிடம் தீவிரமான தொழில் வளர்ச்சி சிந்தனைகள் மலிந்து பயணிக்கின்றன. இவர்கள் தான் அசாத்தியமான இலக்கை நோக்கிப் பீடு நடை போடுகின்றார்கள்.

எல்லைகள் விரிந்த அதி நவீனமான கணினி நிறுவனங்களையும் உருவாக்கித் தருகின்றார்கள் என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் புகழாரம் பாடுகின்றது. அதைக் கேட்கும் போது இந்தியர்களாகிய நமக்கும் பெருமையாக இருக்கிறது.

உலகமே கூகளில் தேட, கூகள் தேடிய பொற்கலசமாகத் திகழ்கிறார் சுந்தர் பிச்சை. தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்த சகோதரர் சுந்தர் பிச்சைக்கு நன்றிகள். வாழ்த்துகள்.

06 ஜூலை 2019

மாப்பசான்

உலகம் பார்த்த மாபெரும் சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் (Guy de Maupassant). 19-ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். நவீனச் சிறுகதை இலக்கிய முன்னோடிகளின் தலைமகனாகக் கருதப் படுபவர். இன்று அவரின் நினைவு நாள்.



ஓர் அரிய மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதில் சில நிமிட நேரம் ஒதுக்குங்கள்.

சிறுகதை உலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து மறைந்து விட்ட ஆளுமை இவரிடம் இன்றும் உள்ளது. இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். சின்ன வயதிலேயே மனநலம் பாதிக்கப்பட்டு இறந்து போனார்.

உலகச் சிறுகதை இலக்கியத்துடன் அதிகமாகத் தொடர்புப் படுத்தப்பட்ட பெயர் மாப்பசான். இவரின் முழுப்பெயர் Henri Rene Albert Guy de Maupassant.

1850 ஆகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி பிரான்ஸ் நார்மெண்டியில் பிறந்தவர். அப்பாவை 11 வயதிலேயே இழந்து அம்மாவின் அன்பில் மட்டுமே வளர்ந்தவர். இழக்கவில்லை. அப்பா விவாகரத்து செய்துவிட்டு போய் விட்டார்.




1876-ஆம் ஆண்டில் குஸ்தாவ் பிலாபெர் (Gustave Flauber) எனும் பிரெஞ்சு எழுத்தாளரின் நட்பு கிடைத்தது. அதுவே மாப்பசானின் எழுத்துலகப் பயணத்திற்குத் தூண்டுகோலாகவும் அமைந்தது.

1870-1871-ஆம் ஆண்டுளில் பிரான்ஸ் - புருசியா போர் (Franco-Prussian War). அதனால் மாப்பசான் படிப்பு தடைப்பட்டது. இவரும் அந்தப் போரில் ஒரு தன்னார்வலராக ஈடுபட்டார்.

பிரான்ஸ் நாட்டை நிலைகுலையச் செய்த அந்தப் போரைத் தன் கண்களால் கண்டவர். அதுவே அவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. எழுதுவதற்கு ஊக்குவிப்பு செய்தது.

போருக்குப் பின்னர் பிரெஞ்சு கடற்படையில் ஓர் எழுத்தராகப் பணியில் அமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில் எழுதத் தொடங்கினார். அதுதான் அவரின் எழுத்துலகத் தொடக்கம்.

இந்தக் கட்டத்தில் எமிலி ஷோலா (Emile Zola); ஈவான் துர்கனிவ் (Ivan Turgenev) போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நட்பு கிடைத்தது.

போரில் கிடைத்த அனுபவம்; பின்னர் தன்னார்வப் பணியாளராகச் சேவை செய்த போது கிடைத்த அனுபவம்; இவற்றின் அடிப்படையில் கவிதைகள் எழுதினார்.

அந்தக் கவிதைகளில் சிருங்கார ரசத்தை ஏராளமாக அள்ளிக் கொட்டினார். அவரின் சிருங்காரமும் சிங்காரமும் பிரெஞ்சு இளம் சமுதாயத்தினரை வெகுவாகக் கவர்ந்தன.

அதன் பின்னர் சிறுகதை, நாவல், நாடகம் என பிரெஞ்சு இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவரின் படைப்புகள் பெரும்பாலும் ஆண் - பெண் பாலுறவு நெளிவு சுழிவுகள் சம்பந்தப் பட்டவையாக இருந்தன. அதனால் அவரின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கு பிரான்ஸ் நாட்டில் தடை விதிக்கப் பட்டது.

இருந்தாலும் ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அவரைப் போற்றிப் பாராட்டினார்.

1880-ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட குண்டுப் பெண் என்கிற கதையின் மூலம் பிரெஞ்சு நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். கதையின் சுருக்கம் வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் குண்டான விலை மாது ஒருத்தி இரயில் வண்டியில் பயணம் போகிறாள். அப்பொழுது எதிரி நாட்டு (புருசியா) இராணுவத் தளபதி அவளைத் தன்னுடைய ஆசைக்கு இணங்கச் சொல்கிறான். கதை இரயிலில் நடக்கிறது.

அதற்கு அவள் தன் தேசபக்தியோடு ஒப்பிட்டு மறுக்கிறாள். நீ எதிரி நாட்டுத் தளபதி. முடியாது என மறுக்கிறாள். இராணுவத் தளபதி இரயில் வண்டியைப் போக விடாமல் தடுக்கிறான்.

சக பிரயாணிகள் சத்தம் போடுகிறார்கள். இரயில் நகர வேண்டும். அதனால் அவளைச் சம்மதிக்கச் சொல்கிறார்கள். பயணிகளின் நன்மைக்கு குண்டுப் பெண் ஒப்புக் கொள்கிறாள்.

அவனின் ஆசை தீர்ந்து இவள் வெளியே வருகிறாள். பயணிகள் பலரும் அவளைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். வெறுப்புடன் விலகிச் செல்கிறார்கள். மற்றவர்களுக்காக ஓர் அர்ப்பணிப்பு செய்தும் அதைக் கேவலப் படுத்தி விட்டார்களே என்று அழுகிறாள்.

அந்தக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. படியுங்கள். உங்களுக்கும் அழுகை வரும். அப்பேர்ப்பட்ட எதார்த்தமான நடை.

ஏறக்குறைய ஒரு பத்தாண்டுகளில் 300 சிறுகதைகள்; நவீனங்களை எழுதினார். இன்னும் ஒரு விசயம்.

1960-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் பல தமிழ் எழுத்தாளர்க்ளுக்கு இவருடைய தாக்கம் இங்கேயும் இருந்தது. மாப்பசான் பற்றி அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறும். இவருடைய கதைகளை நானும் படித்து இருக்கிறேன். அந்தத் தாக்கம் இன்றும் எனக்குள் உள்ளது.

இவருடைய The Necklace (La Parure) எனும் சிறுகதை பிரசித்தி பெற்றது.

”அவள் ஓர் அழகிய, வசீகரமான ஆனால் விதியின் பிழையாலோ என்னவோ நடுத்தரக் குடும்பத்திலே பிறந்த பெண். கையில் காசு இல்லை. வசதி நிறைந்த உறவினர்க்கு அவள் வாரிசும் அல்ல; எனவே நல்ல பணக்கார இளைஞன் ஒருவனுக்கு அறிமுகம் ஆகி அவனால் காதலிக்கப்பட்டு அவனை மணந்து கொள்ள வழியே இல்லை; ஆகையால் கல்வித் துறை அலுவலகத்தின் சாதாரண எழுத்தர் ஒருவரைக் கைப்பிடித்துத் தொலைத்தாள்.”

இந்தக் கதையைக் கீழே உள்ள இணையத் தளத்தில் படிக்கலாம். சொ.ஞானசம்பந்தன் என்பவர் பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23830.html

மிக தீவிரமான கதையைக் கூட மிக மிகச் சுவாரசியமாக; மிக எளிமையாகக் சொல்லக்கூடிய ஆற்றல். மாப்பசான் கதைகள் தமிழிலும் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளன.

Maupassant is considered a father of the modern short story. He delighted in clever plotting, and served as a model for Somerset Maugham and O. Henry in this respect. One of his famous short stories, "The Necklace", was imitated with a twist by both Maugham ("Mr Know-All", "A String of Beads") and Henry James ("Paste").

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது மாப்பசான் காலத்தில், ஆபாசக் கதைகள் பிரபலம். அந்த மாதிரி கதைகளை எழுதியவர்கள் விற்பனை நோக்கத்தில் மாப்பசான் பெயரைப் போட்டு விட்டார்கள்.

அதனால் பல மோசமான கதைகளில் மாப்பசான் பெயரும் நிலைத்துப் போனது. அந்த அவப் பெயரைக் கடைசி வரை அவரால் அழிக்கவே முடியவில்லை. சரி.

பாரிசில் ஈபில் கோபுரம் கட்டப்பட்ட நேரம். அப்போது பல பாரீஸ் மக்கள் அதை விரும்பவில்லை. வீணானச் செலவு என்று சபித்தார்கள். மாப்பசானும் அவர்களில் ஒருவர். ஆனாலும் அவர் அடிக்கடி அந்தக் கோபுரத்தில் இருந்த உணவகத்திற்குப் போவது வழக்கம். சாப்பிடுவதும் வழக்கம்.

”ஈபில் கோபுரம் தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் ஏன் அங்கே போய் சாப்பிடுகிறீர்கள்” என்று கேட்பார்கள். அதற்கு அவர் ”அங்கே உட்கார்ந்தால் தான் அந்தக் கோபுரம் கண்ணில் படாமல் இருக்கிறது” என்பாராம். இது எப்படி இருக்கு. மாப்பசான் நல்ல ஒரு கில்லாடி.

தன் 25-வது வயதிலேயே சிபிலிஸ் என்கிற பாலியல் நோயால் பாதிக்கப் பட்டார். இவருடைய தம்பிக்கும் அந்த நோய் இருந்ததால் அது ஒரு மரபு நோயாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

அந்த நோயின் தாக்கம் அவரின் எழுத்துகளிலும் வெளிப்பட்டன. நோய் சிகிச்சைக்கு மறுத்து விட்டார். அவருடைய தம்பியும் அதே நோயினால் தான் சின்ன வயதிலேயே இறந்து போனார்.

1880-இல் ஜோசப்பின் லிட்சல்மான் (Josephine Litzelmann) எனும் பெண்ணுடனும் பழகினார். கடைசியில் அவரையே மணந்தார். மாப்பாசானுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகன். இரு மகள் கள்.

1886-இல் கிசெல் எஸ்தோக் (Gisele Estoc) எனும் பெண்ணுடன் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகினார்.

இவருடைய கதைகளைப் பத்திரிகைகள் போட்டிப் போட்டு பிரசுரித்தன. நல்ல வருமானம். ஆப்பிரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்றார். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக்.

மாப்பசான் தன்னுடைய முப்பது வயதுகளில் தனித்து வாழ்ந்தார். வாழ்க்கையில் வெறுப்பு. கடைசியாக அவர் விரும்பிய பெண்ணும் போய் விட்டாள். அந்த ஆதங்கம் வேறு. அடிக்கடி மனம் உடைந்து போனார். கண் பார்வை குன்றிப் போனது. அடிக்கடி தலைவலி.

02.01.1892-ஆம் தேதி தன் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இருந்தாலும் காப்பாற்றப்பட்டு ஒரு மனநோய் காப்பகத்தில் அடைக்கப் பட்டார்.

தன் 42-ஆம் வயதில் உடல்; மனநலம் கெட்டு இறந்து போனார். உலகப் புகழ்பெற்ற ஒரு சகாப்தம் சின்ன வயதிலேயே சரிந்து போனது. இருந்தாலும் அவர் விட்டுச் சென்ற எழுத்துப் பொக்கிஷங்கள் இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சான்றுகள்:
1. https://www.britannica.com/biography/Guy-de-Maupassant
2. https://en.wikipedia.org/wiki/Guy_de_Maupassant#Biography
3. https://www.gutenberg.org/ebooks/author/306



........................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Mageswary Muthiah எனக்கும் சிறு வயதில் இருந்தே வாசிப்பில் மிகுந்த ஆர்வம், அப்புறம் இடையில் ஒரு 15 வருடங்கள் தடை பட்ட பிறகு இப்பொழுது மீண்டும் துவங்கியுள்ளது, நீங்கள் எழுதுவதை மிக ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.
 
 
Muthukrishnan Ipoh படிக்கும் பழக்கம் நம் அறிவை வளர்க்கிறது... நிறைய படியுங்கள்...வாழ்த்துகள்...
 
 
 
Manickam Nadeson >>> Muthukrishnan Ipoh அப்போ நீங்க நிறைய எழுதுங்க ஐயா சார்.
 


கம்சாயினி குணரத்தினம்

அந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நல்ல நல்ல மருமகள்களாகப் பேர் போட்டு வாழ்ந்தார்கள். இந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நாட்டு மக்களுக்கே நல்ல நல்ல தலைவர்களாகப் பேர் போட்டு வாழ்கின்றார்கள். பெரிய இடைவெளி.



அது மட்டும் அல்ல. ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவாலே சமாளி என்று சாதனை படைத்தும் வருகின்றார்கள். நாடும் ஏடும் போற்றும் நயன்மிகுச் சேவைகளைச் செய்தும் வருகின்றார்கள்.

அடுப்பாங்கரையில் இருப்புச் சட்டிகளை உருட்டிய காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்றைய காலத்தில் குளிர்ச்சாதன அறைக்குள் கோட் சூட் போட்டு மிடுக்காய் அதிகாரம் செய்கின்றார்கள். என்னே ஓர் உருமாற்றம்.

இமயத்தில் சிகரம் பார்க்கும் அந்தப் பெண்களை இதயத்தில் ஏற்றி வைத்துப் பெருமை கொள்வோம்.


நார்வே  நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ. அந்த நகரின் உதவி மேயராக ஒரு பெண். அதுவும் ஒரு தமிழ்ப் பெண். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த பெண்மணி. பெயர் கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam). வயது 31. ஏழு இலட்சம் நார்வே நாட்டு நகரவாசிகளுக்கு தலைவராக இருக்கிறார். என்னே ஒரு சாதனை.

இன்னும் ஒரு விசயம். அந்த நகரின் மேயராக இருப்பவரும் ஒரு பெண்மணி தான். ஒரு நார்வே நாட்டுக்காரர். அவரின் பெயர் மாரியான் போர்கேன் (Marianne Borgen). இரண்டு பெண்களும் சேர்ந்து ஓர் அல்லி தர்பார் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சும்மா ஒரு ஜோக் தான். தப்பாக நினைக்க வேண்டாம்.




அப்புறம் என்ன. கம்சாயினி எனும் அந்தத் தமிழ்ப் பெண்ணைப் பார்த்து போகிற வருகிற வெள்ளைக்கார ஆண்கள் எல்லாம் சலாம் போட்டுக் கொண்டு போகிறார்கள். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று சும்மாவா சொன்னார்கள். என்ன ஏது என்று பார்ப்போம்.

கம்சா எனும் பெயர் இந்து இதிகாசத்தில் வரும் அழகிய பெயர். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தப் பெயரில் தான் கம்சாயினி எனும் பெயரும் வந்து போகிறது.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1988 மார்ச் 27-ஆம் தேதி பிறந்தவர் கம்சாயினி. மூன்று வயதில் நார்வேக்குப் புலம் பெயர்ந்தவர். 




நார்வே நாட்டு தேசிய மொழி நார்வியம். அந்த மொழியில் தொடக்க நிலைக் கல்வி. அதன் பின்னர் இடைநிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என எல்லாமே நார்வீய மொழியில் தான் பயின்றார்.

ஆனால் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ் வகுப்பிற்குக் கண்டிப்பாகப் போக வேண்டும். இது தந்தையாரின் கட்டளை. இல்லை தாயாரின் வற்புறுத்தல். அதனால் கம்சாயினி தன் பாரிய வாழ்க்கையில், தமிழ் மொழியையும் இணைத்துக் கொண்டார்.

நாடு விட்டு நாடு போனாலும்; சொந்த பந்தங்களை விட்டு நகர்ந்து போனாலும்; சுற்றுச் சூழலை விட்டு விலகிப் போனாலும் தாய்மொழியான தமிழை மட்டும் இவர் துறந்து போகவே இல்லை. 




தமிழ் எங்கள் தாய்மொழி என பெருமைப் படும் இவர் எங்கே? ஒரு வார்த்தைக்கு ஒன்பது ஆங்கிலச் சொற்களைக் கலக்கும் இன்றைய சில நயனா வாசிகள் எங்கே?

அவர் பேசும் தமிழைக் கேளுங்கள். யூடியூப்பில் இருக்கிறது. அசந்து போவீர்கள். தமிழ் என்றும் எங்கள் தாய்மொழி என்று பெருமைப் படும் இவரை வாழ்த்துவோம்.

நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தை ஸ்டோர்ட்டிங் (Storting) என்று அழைப்பார்கள். அந்த ஸ்டோர்ட்டிங் நாடாளுமன்றத்தில் கம்சாயினி 2013 லிருந்து 2017 வரை ஓர் உறுப்பினராகப் பதவி வகித்து உள்ளார். 




2016-ஆம் ஆண்டு துணை மேயர் பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டார். தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர்.

பதினெட்டு வருடங்களுக்குப் பின் நார்வே நாட்டின் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் கம்சாயினி துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போது சரித்திரம் படைக்கிறார்.

அரசியலைத் தனது முழுநேரப் பணியாகக் கொண்ட கம்சாயினி இளம் வயதிலேயே உதவி மேயராகத் தேர்வாகி உள்ளார். அதுதான் பெரிய ஆச்சரியமான தகவல்.




இவர் ஏற்கனவே தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர் தான். தவிர நார்வே நாட்டின் தலைசிறந்த தாளிகை பிரகாசிஸ் (Praksis). அதன் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கம்சாயினியின் தந்தையார் பெயர் குணரத்தினம். இவர் இலங்கையில் பிறந்து நார்வே நாட்டிற்குச் சென்றவர். புலம் பெயர்ந்து போகும் போது கம்சாயினிக்கு வயது 3. இலங்கையில் அவர்களுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்து மக்கள் சிலரும் புலம் பெயர்ந்தார்கள்.

நார்வே நாட்டின் வடக்கே நிறைய மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கே தான் கம்சாயினியின் குடும்பம் முதலில் தங்கி இருந்தது. நார்வே மீன்பிடிக்காரர்களுடன் சேர்ந்து இவர்களும் வேலை செய்தார்கள். வாழ்க்கை ஓடியது.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஓஸ்லோ தலைநகரத்தில் குடியேறினார்கள். ஓஸ்லோவில் தான் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. கம்சாயினியும் அவருடைய அண்ணனும் தமிழ் படிக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் விரும்பினார்கள். ஆக தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஓஸ்லோவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.




ஓஸ்லோவில் ஓர் தமிழர் இயக்கம். அதன் பெயர் ஓஸ்லோ தமிழ் இளைஞர் இயக்கம். அந்த இயக்கத்தில் கம்சாயினி சேர்ந்தார். இயக்கத்தின் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்தார்.

பின்னர் ஓஸ்லோவின் மேயர் ரேய்மண்ட் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் கம்சாயினியை அரசியலில் சேரச் சொல்லி ஆர்வம் கொடுத்தார்.

கம்சாயினியும் இளைஞர் அணியில் சேர்ந்து சேவை செய்து வந்தார். அதே காலக் கட்டத்தில் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமூகப் புவியியல் படித்தார். அப்படியே படிப்படியாக அரசியலில் தீவிரமாக களம் இறங்கி இன்றைக்கு ஓஸ்லோ தலைநகரத்தின் துணை மேயராக வலம் வருகிறார். 




நார்வேக்குப் புலம் பெயர்ந்த இலங்கை மக்களுடன் கம்சாயினி நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்டு உள்ளார். அரசியல் ரீதியாக என்ன என்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து வருகிறார்.

இலங்கையில் அவதிப்படும் தமிழர் குழந்தைகளுக்கு உதவி செய்யும் திட்டத்தில் இறங்கினார். இலங்கையின் மீது இவருக்கு ஏற்பட்ட தீவிர அரசியல் தாக்கத்தைப் பார்த்த இலங்கை அரசாங்கம் சற்றே கலக்கம் அடைந்தது. ஆக மிக அண்மையில் அவரை இலங்கைக்கு வரவிடாமல் தடை செய்து விட்டது.

கம்சாயினி அண்மையில் தி கார்டியன் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் சொல்கிறார்.




என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சம உரிமை வழங்க வேண்டும். இரு பாலரிடமும் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கக் கூடாது.

நார்வேயில் எங்கு போனாலும் பல்லின அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்புகளில் பெண்களுக்குச் சம பங்கு வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை.

சென்ற ஆண்டு அவர் இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்தார். அங்கு உள்ள பெண்கள் அமைப்புக்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது:  




நான் இலங்கைக்கு பல தடவை வந்து போய் இருக்கிறேன். என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன். நான் நார்வே நாட்டில் ஒரு பெரிய பதவியில் இருக்கலாம். இருந்தாலும்  என் உடலில் தமிழர் இரத்தம் ஓடுகிறது.

இலங்கை பத்திரிகைக்காரர்கள் விடவில்லை. விடாமல் துரத்திச் சென்று கேள்விகள் கேட்டார்கள்.

கேள்வி: தமீழழ விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான இடத்தை வழங்கவில்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தீர்கள். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

பதில்: என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். 

நார்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட இருபாலாருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றேன். ஏற்றத் தாழ்வுகள் தேவை இல்லை.




இதுவரைக்கும் எங்கும் பெண்களுக்கு 50 க்கு 50 விழுக்காடு சம உரிமை கிடைக்கவில்லை. அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன்.

அதே போல் தான் நார்வே நாடாளுமன்றத்திலும் ஆண்கள் பெண்கள் விகிதாசாரம் 50 க்கு 50 இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். எங்கு போனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவது இல்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்தச் சங்கங்களில் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டும் என்றுதான் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சரியான ஓர் இடத்தை; ஓர் அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதை நீங்கள் சரி என்று நினைக்கின்றீர்களா?




பதில்: நான் அவ்வாறு சொல்லவில்லையே. எல்லா மட்டங்களிலும் பெண்கள் உள்ளனர். ஆனால் வளர்ச்சி அடைந்து செல்லும் போது பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன். குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை. நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டி இருந்தேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான ஓர் இடத்தை வழங்கி இருந்தார்களா இல்லையா?

பதில்: இடம் கொடுத்து உள்ளனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மேலும் கூடுதலாக தலைமைப் பதவிகளைக் கொடுத்து இருக்கலாம். 




ஒரு விசயத்தை ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியாது. அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் கம்ஷாயினி முற்போக்கான எண்ணங்களைக் கொண்டு உள்ளார்.

பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் இவரைப் போன்று மேலும் பல பெண்கள் வர வேண்டும். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. அதே போல ஆண்கள் இல்லாமல் பெண்களும் இல்லை. அதுவே மனித வாழ்வியல் நியதி.

கம்சாயினி போன்று மேலும் நிறைய பெண்கள் வர வேண்டும். சாதனைகள் பல செய்ய வேண்டும். அனைத்துலக அரசியல் அரங்கில் ஆண்களுக்குச் சரிநிகர் சமமாய் அவதானிக்க வேண்டும். 



  ......................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Maana Mackeen அருமை அருமையான பதிவு உங்களுக்கே
உரிய நடையில்...
 

Muthukrishnan Ipoh நன்றிங்க ஐயா... தங்களுடைய படைப்புகளை இலங்கை, தமிழக மற்றும் வெளிநாட்டு மின்இதழ்களில் படித்து இருக்கிறேன்... தங்களுடைய எழுத்து நடையும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்.
 
 
Maana Mackeen உங்களது 'மோதிரக்கை'! ஓரு தகவல் வேண்டுமே! நீங்கள் இப்போது கோலோச்சுகிற. 'தமிழ் மல'ரில் முன்னர் ஆசிரியராக இருந்த திரு சங்கு சண்முகம் பற்றிய இன்றைய நிலை?
 
 
Muthukrishnan Ipoh திரு. சங்கு சண்முகம்.... முடியாமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். மேல் விவரங்கள் கிடைக்கவில்லை....
 
 
Arjunan Arjunankannaya அருமை ஐயா. தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
 
 
Kumar Murugiah Kumar's Iron lady... !!!


Muthukrishnan Ipoh உண்மையாகவே பாராட்ட வேண்டும் சார்... 31 வயதில் 7 இலட்சம் ஐரோப்பிய வெள்ளையர்களைக் கட்டுப் படுத்துகிறாரே...
 
 
M R Tanasegaran Rengasamy குலேபகாவலி பழைய எம்.ஜி.ஆர். படத்தில் "அநியாயம் இந்த நாட்டிலே அநியாயம்" எனும் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் பெண்கள் ஆண்களை அடிமைப் படுத்துவதாக இருக்கும். ஆனால் பெண்ணடிமைக் கொடுமைக்கு ஒட்டு மொத்தமாய் சாவு மணி அடித்துள்ள நார்வே நாட்டுப் உயர் பெண்மணிகள் இருவருக்கும் வாழ்த்துகள்.
 
 
Rajoo Veeramuthu நார்வே நாட்டில் மிளிரும் தங்க தமிழ் தாரகைக்கு இனிய வாழ்த்துகள். கட்டுரைப் படைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி மலர்கள்.
 
 
Manickam Nadeson நல்ல படைப்பு, நன்றி ஐயா சார்
 
 
Murugan Rajoo வரிகள் மிகச் சிறப்பு ஐயா... எழுச்சியின் உச்சம்... நல்வாழ்த்துகள்
 
 
Letchumanan Nadason அருமையான பதிவு. நன்றி ஐயா.
 
 
Barnabas அருமை.பெருமை
 
 

03 ஜூலை 2019

பிஜி தமிழர்கள் - 1

தமிழ் மலர் - 03.08.2018 

தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால் அந்தத் தமிழனுக்குச் சொந்தமாக ஒரு நாடும் இல்லை.

அதுவே தமிழர்களுக்கு வரலாறு எழுதிக் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். தமிழ் நாடு இருக்கிறதே என்று கை நீட்டிக் காட்டலாம். ஏன் காட்ட வேண்டும்? எதற்குக் காட்ட வேண்டும்? 



தமிழ் நாடு என்பது தமிழரின் பெயரைச் சொல்லத் தான் பெயரளவில் இருக்கிறது. அது ஒரு மாநிலம். மற்றபடி தமிழர்கள் ஆட்சி அதிகாரம் செய்யும் ஒரு தேசம் அல்ல. மன்னிக்கவும்.

அப்போது அந்தக் காலத்தில் உலகத்தின் கால்வாசியைத் தமிழர்கள் கட்டி ஆண்டார்கள். உண்மை தான். இல்லை என்று சொல்லவில்லை. அதைப் பற்றி அந்தர்ப்புரங்களில் கதை கதையாகப் பேசினார்கள்.

வந்தாரை வாழ வைக்கும் வம்சம் என்று சொல்லி வாய் வலிக்கப் புகழ்மாலை சூட்டினார்கள். கைகள் கழன்று விழும் அளவிற்கு வண்டி வண்டியாய்க் கவிதைகள் எழுதிக் குவித்தார்கள்.

பாடியவர்களுக்கும் சரி; புகழ்ந்தவர்களுக்கும் சரி; குடம் குடமாய்ப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்தார்கள். அது எல்லாம் அப்போதைய கதைகள். ஆறிப் போன பழைய கஞ்சிக் கதைகள். இப்போது எல்லாம் அப்படிப் பாடினால் சோற்றுக்கு சுண்ணாம்பு கிடைக்காது. 



ஆக தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இந்த உலகில் எங்கேயும் இல்லை. தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆட்சி செய்யும் வரையில் தமிழ் நாடு என்பது தமிழர்களின் நாடு அல்ல. இது வார்த்தை ஜாலம் அல்ல. இது என் மனதில் இறுகிப் போன ஒரு மௌனப் புயல்.

அதே அந்தத் தமிழ் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி நிற்கிறார்கள். பல நாடுகளில் தமிழை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். சில நாடுகளில் தமிழை மறந்து கொண்டு வருகிறார்கள்.

தமிழ் மறக்கப்படும் நாடுகளில் ஒன்றுதான் பிஜி தீவு. பசிபிக் மாக்கடலில் பல்லவி பாடும் ஒரு பச்சைத் தீவு. அந்தத் தீவில் வாழ்ந்த தமிழர்களின் கதை இருக்கிறதே அது காலத்தால் அழிக்க முடியாத ஒரு கண்ணீர்க் கதை.

காலனித்துவ ஆட்சியில் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட தமிழர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். அதையும் தாண்டிய நிலையில் பிஜி நாட்டுத் தமிழர்கள் துவைத்துக் காயப் போடப் பட்டார்கள்.

மலாயா தமிழர்களின் நிலை பரவாயில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஐலசா பாடிக் கொண்டே ரசுலா கப்பலில் ஏறி இந்தியாவிற்கே போக முடிந்தது. 




ஆனால் பிஜி தீவுக்குப் போன தமிழர்களுக்கு அப்படி ஒன்றும் அமையவில்லை. சாகும் வரை திரும்பிப் போகவும் முடியவில்லை. பிஜி தீவிலேயே பலர் மக்கி மண்ணாகிப் போனார்கள்.

அந்த வாயில்லப் பூச்சிகளின் வாரிசுகள் தான் இப்போது அங்கே தங்களின் தாய்மொழிக்கு உயிர்ப் பிச்சை கேட்டுப் போராடிக் கொண்டு வருகிறார்கள்.

அவர்களைப் பற்றிய வரலாறு வருகிறது. படியுங்கள். அவர்களின் சோக வரலாற்றை அசைப் போட்டுப் பாருங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா, நியூ கலிடோனியா, குயானா, சூரினாம் போன்ற நாடுகளுக்கு ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் தமிழர்கள் அங்கே கொண்டு செல்லப் பட்டார்கள்.

அதைப் போலவே பிஜி தீவிற்கும் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாகக்  கொண்டு செல்லப் பட்டார்கள். அவை எல்லாம் தொலைதூர நாடுகள். கண் காணா தேசங்கள்.

அப்படிக் கொண்டு செல்லப் பட்டவர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வர முடியாத ஒரு நிலையும் ஏற்பட்டது. ஏன் என்றால் சில நாடுகளில் கப்பல் பயணங்கள் இல்லை. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஏறிச் செல்லும் கப்பல்களாக இருந்தன. வெள்ளைக் கறுப்புத் தோல்களின் இனவெறி இதிகாசங்கள் கப்பலோடு பயணித்துக் கொண்டு இருந்த காலக் கட்டம்.




மலாயா, சிங்கப்பூர், பர்மா, மொரீஷியஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்துகள் இருந்தன. அங்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் ஒப்பந்த காலம் முடிந்ததும் இந்தியாவிற்குத் திரும்பி வர முடிந்தது. அதற்கான செலவுகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சும்மா ஒன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதாயம் இல்லாமல் ஆங்கிலேயர்கள் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள். அது உலகம் அறிந்த மகா பெரிய ஆங்கிலேயத் தத்துவம்.

கொண்டு போகிற இடத்திற்குக் கொண்டு போனார்கள். அங்கே தமிழர்களின் இரத்தம் பார்த்த வியர்வைத் திவளைகளை நன்றாகவே உறிஞ்சினார்கள். மன்னிக்கவும் சப்பி எடுத்தார்கள் எடுத்தார்கள் என்று சொன்னால் தான் எனக்கு நிம்மதி. ஆக எடுத்து முடிஞ்சதும் வெறும் எலும்புக்கூட்டு உயிர்ச் சக்கைகளை மட்டும் கப்பலில் ஏற்றி ’பை பை’ காட்டி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழகத்திற்குத் திரும்பி வரவே முடியாத நிலை. தொலை தூரத்தில் இருந்ததால் தமிழ் மக்களோடு அறவே தொடர்புகள் இல்லாமல் போயின. பிஜி நாட்டு மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் தமிழில் அதிகம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தவிர தங்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைப் போதிக்க தமிழ் நாட்டில் இருந்து ஆசிரியர்களைப் பிஜி நாட்டிற்கு அழைத்து வரவும் முடியாத நிலை. அதனால் தான் பிஜி தீவு தமிழர்களுக்குத் தமிழை முறையாகப் படிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டது. 




பிஜி தீவுக்கும் சென்னைக்கும் உள்ள தூரம் பதினோராயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்பது கிலோ மீட்டர்கள் (11,249). நம்முடைய உலகத்தை ஒரு முறை சுற்றிவர எவ்வளவு தூரம் தெரியுங்களா 40,075 கி.மீ. அப்படிப் பார்த்தால் பிஜி தீவிற்குப் போவதற்கும் உலகத்தில் கால்வாசி தூரத்தைச் சுற்றி வருவதற்கும் சமமாகி விடுகிறது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குத் திசையில் தென் பசிபிக் பெருங்கடலில் பிஜி தீவு இருக்கிறது. பிஜி தீவு என்று சொல்வதைவிட பிஜி தீவுகள் என்று சொல்வதே சரியாகும். இருந்தாலும் பிஜி தீவு என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. பிஜி தீவைச் சுற்றிலும் 300-க்கும் மேற்பட்ட குட்டிக் குட்டித் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து தான் பிஜி தீவுகள் என்று அழைக்கிறார்கள். எல்லா தீவுகளின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 7055 சதுர மைல்கள். பிஜி தீவின் தலைநகரம் சுவா. 1970-ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்தது. சரி. பழைய வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

1874-ஆம் ஆண்டு பிஜித் தீவு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிஜித் தீவில் நிறைய கரும்புத் தோட்டங்கள். அந்தக் கரும்புத் தோட்டங்களுக்குத் தமிழகத்தில் இருந்து கங்காணி முறையில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள். தொடக்கக் காலத்தில் தமிழர்களின் இறக்குமதி குறைவாகத் தான் இருந்தது.

பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. 1879-ஆம் ஆண்டில் இருந்து 1916-ஆம் ஆண்டுக்கும் இடையில் 65,800 இந்தியத் தொழிலாளர்கள் பிஜி தீவிற்குக் கொண்டு வரப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆகும்.

பிஜியில் தென் இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கத்தை அமைத்தவர் ஸ்ரீ சாது குப்புசாமி. இவர் சென்னையில் இருந்து பிஜி சென்றவர். அவர் எழுதிய நாட்குறிப்புகளில் இருந்து சில அரிய தகவல்கள் கிடைத்தன. அவர் எழுதியதை நீங்களும் படித்துப் பாருங்கள்.

“ஐந்து வருட ஒப்பந்தத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனி வேலைக்கு நான் வந்த போது ஆண்களும் பெண்களுமாய் பல நூறு பேர் வந்து இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சி.எஸ்.ஆர் கம்பெனியில் கொலம்பர்கள் இருந்தார்கள். கொலம்பர்கள் என்றால் அதிகாரிகள். பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொலம்பர்கள் சொல்வதே அப்போதைக்கு சட்டம். மீறிப் பேசக் கூடாது. மீறிப் பேசவும் முடியாது. அவர் சொன்னால் மறுபேச்சு பேசாமல் செய்ய வேண்டும். மறுபேச்சு இல்லை”





கொலம்பர்களுக்குக் கீழ் இருந்து வேலை செய்யும் அதிகாரிகளைச் சர்தார் என்பார்கள். கொலம்பர்கள் வாயால் சொல்லும் வார்த்தைகளைச் சர்தார்கள் கையால் செய்து காட்ட வேண்டும். வேலையாட்கள் ஒவ்வொரு நாளும் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று பற்பல திட்டங்களை வகுத்து வைத்து இருந்தார்கள். கொலம்பர்கள் சர்தார்களுக்கு கட்டளை போடுவார்கள். சர்தார்கள் வேலையாட்களிடம் எருமை மாட்டு வேலைகளை வாங்குவார்கள்.

சொன்ன மாதிரி வேலை செய்து முடிக்காதவர்களுக்கு அவ்வளவுதான். அந்த ஆளைப் பிடித்து கீழே தள்ளுவார்கள். தள்ளிய கையோடு அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; அந்த ஆளின் மார்பு மேல் ஏறி கைகளால் குத்துவார்கள். உதைப்பார்கள். சம்பளக் கூலியைக் குறைப்பார்கள். வாயால் சொல்லத் தகாத அசிங்கமான வார்த்தைகளால் ஆண்களையும் பெண்களையும் திட்டித் தீர்ப்பார்கள்.

அது மட்டும் அல்ல. சில சமயங்களில் ஒழுங்காக வேலை செய்து முடிக்காதவர்களைப் பற்றி மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் போய்ச் சொல்லுவார்கள். உடனே அந்த வேலையாள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று எழுத்துப் பூர்வமான ஒரு சம்மன் வரும். பின்னர் அபராதம் விதிக்கப்படும். பிஜி தமிழர்கள் மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள்.

பிஜி தீவில் இருந்த கரும்புத் தோட்டங்களில் தமிழர்கள் செய்து வந்த வேலைகளின் பட்டியல்:

1. ஏர் உழுதல்
2. கரும்பு நடுதல்
3. புல்வெட்டுதல்
4. குழி வெட்டுதல்
5. கரும்பு வெட்டுதல்
6. கரும்புக்கு உப்பு எரு போடுதல்.

கரும்பு வயல்களில் வேலை செய்யும் போது தமிழர்கள் பெரும் பெரும் கொடுமைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறார்கள். சர்தார்மார்களும் ஆங்கிலேயக் கொலம்பர்களும் தமிழர்களை மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பதிலுக்குத் திருப்பி அடித்த தமிழர்களும் இருந்தார்கள்.

அப்படிப் பட்டவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போய் தண்டனை வாங்கிக் கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். குறைந்த படசம் மூன்று மாதச் சிறைத் தண்டனை. சிறையில் இருந்து வந்த பின்னர் கடுமையான வேலைகளைக் கொடுப்பார்கள். அப்படி சிறைக்குப் போனவர்களில் சிலர் மர்மமான முறையில் இறந்தும் போய் இருக்கிறார்கள்.

இதே கூத்து தான் இங்கே நம்ப இடத்திலும் நடக்கிறது. லாக்காபில் அடைக்கப் பட்டவர்களில் பலர் லாக்காபிலேயே இறந்து போன கதைகள் தான். கேட்டுப் புளித்துப் போன கதைகள். இந்த லாக்காப் ராமாயணத்தை அப்போதே அந்தக் காலத்திலேயெ ஆங்கிலேயர்கள் பசிபிக் பெருங்கடலிலேயே அரங்கேற்றம் செய்து  விட்டார்கள்.

1917-ஆம் கொத்தடிமைக் குத்தகைச் சட்டம் ஒழிக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பிஜி தீவில் குடியேறுவதற்கு வாய்ப்பு வசதிகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் பிஜி தீவு தமிழர்களின் தொழிலாளர்களின் இரண்டாம் கட்டப் போராட்டம் தொடங்கியது.

பிஜித்தீவில் இருந்த அத்தனைக் கரும்புத் தோட்டங்களையும் சி.எஸ்.ஆர் என்கிற ஓர் ஆஸ்திரேலியா கம்பெனி வாங்கிக் கொண்டது. ஒவ்வொரு தமிழர் விவசாயிக்கும் பத்து ஏக்கர் நிலம் பத்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப் பட்டது. அதில் அவர் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட இடத்தில் ஒன்பது ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிர் செய்ய வேண்டும். ஓர் ஏக்கர் நிலத்தில் சொந்தமாகப் பயிர் செய்து கொள்ளலாம். கரும்பு முற்றிய பிறகு அதனை வெட்டி வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும். அந்தக் கரும்புகளைக் கம்பெனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு செல்வார்கள். கம்பெனியார் என்ன விலை சொல்கிறாரோ அந்த விலையில் தான் விவசாயிக்கு ஊதியம் கிடைக்கும்.

வெளி நாடுகளுக்குக் கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்வார்கள். ஒரு டன் சர்க்கரையின் விலையில் 30% விவசாயிக்குச் சேரும். 70 விழுக்காடு சர்க்கரை கம்பெனிக்குச் சேரும்.

அப்போது தமிழர்களிடம் ஒரு பேச்சு வழக்கு இருந்தது. சி.எஸ்.ஆர். கம்பெனி ஆறு மாசம் கரும்பை அரைச்சுப் பிழியுது. ஆண்டு முழுசா தமிழங்கள அரைச்சுப் பிழியுறானுங்க என்பதே அந்தச் சொல் வழக்கு. சரி. நாளைய கட்டுரையில் பிஜி தமிழர்கள் நடத்திய லங்காதகனம் எனும் போராட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

சான்றுகள்:

1. Raghuram, Parvati; Sahoo, Ajaya Kumar; Maharaj, Brij; Sangha, Dave (16 September 2008). "Tracing an Indian Diaspora: Contexts, Memories, Representations". SAGE Publications India.

2. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.

3. Navaneetham Pillay The most famous South African Tamil of our times". DailyMirror. 2013-08-31.